search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107604"

    மதுரையில் பள்ளி நண்பர்கள் திட்டியதால் மனமுடைந்த 9-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Madurai
    மதுரை:

    மதுரையில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவர், பள்ளி விடுமுறை என தமது பள்ளி நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி உள்ளான். இதனை நம்பிய மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வராததால், இந்த விவகாரம் தலைமை ஆசிரியர் வசம் சென்றது.

    விசாரணையில், இந்த மாணவர் அனுப்பிய குறுந்தகவலை நம்பியே அனைவரும் பள்ளி வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவனின் பெற்றோர், வகுப்பு ஆசிரியர் ஆகியோரை அழைத்து தலைமை ஆசிரியர் கடுமையாக கண்டித்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் அந்த சிறுவனை பள்ளி மாணவர்களும் திட்டியுள்ளனர். இதனால் அந்த சிறுவன் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதையடுத்து, 14 வயது சிறுவன் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்ட அவனது பெற்றோர் அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தாம் செய்த தவறுக்காக நண்பர்கள் திட்டியதால் மனமுடைந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Madurai
    மதுரையில் இன்று திருமணம் நடந்த மணமக்கள் மாட்டு வண்டியில் வருவதை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
    மதுரை:

    இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது எளிமையாகவும், வித்யாசமாகவும் நடத்தப்பட்டு வருகிறது. நவீன காலத்திற்கு ஏற்ப திருமணங்கள் நடந்து வருவதால் தமிழ் கலாச்சாரப்படி திருமணம் நடப்பது மறைந்து வருகிறது.

    அனைவரும் வியக்கும் வகையில் திருமணம் இருக்க வேண்டும் என்பதற்காக ஹெலிகாப்டரில் திருமணம், பறக்கும் பலூனிலும், அந்தரத்தில் தொங்கியபடியும் என புதுமையாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழ் கலாச்சாரத்தை வலியுறுத்தும் படி மதுரையில் இன்று ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது.

    மதுரையை சேர்ந்த விஜய குமார்-காயத்ரி திருமணம் இன்று நடந்தது. பின்னர் மணமக்கள் ஊர்வலம் நடந்தது. இதில் புதுமையாக மணமகன் மாட்டுவண்டியை ஓட்டிவர, அருகில் மணமகள் அமர்ந்து ஊர்வலம் வந்தனர்.

    ஊர்வலத்தில் உறவினர்களும், நண்பர்களும் திரளாக கலந்து கொண்டனர். மணமக்கள் மாட்டு வண்டியில் வருவதை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
    மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கக்கோரி மதுரையில் அரசு டாக்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மதுரை:

    மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக டாக்டர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் அரசு டாக்டர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை பெரிய ஆஸ்பத்திரியின் நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் பாலாஜி நாதன், தாமோதரன், பேராசிரியர்கள் பிரிவு தலைவர் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    முடிவில் சங்க பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உயர்த்திடு உயர்த்திடு அலவென்ஸ் பணத்தை உயர்த்திடு, வேண்டும் வேண்டும் சம்பளம் வேண்டும், வேலைக்கேற்ற ஊதியம் மருத்துவர்களுக்கு கவுரவம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர்.

    இதுகுறித்து டாக்டர் செந்தில் நிருபர்களிடம் கூறுகையில், மற்ற துறைகளை விட டாக்டர்களுக்கு அதிக பணிசுமை ஏற்படுகிறது. மதுரையை பொறுத்தமட்டில் டாக்டர்களின் பணி முக முக்கியமாதாக இருக்கிறது. எனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் கொடுக்க வேண்டும். இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றுள்ளது.

    போராட்டத்தின் அடுத்தகட்டமாக வருகிற 24-ந்தேதி ஊர்வலமும், 27-ந்தேதி ஒத்துழைமையாக இயக்கம் என்ற பேரில் போராட்டமும் நடக்கிறது. இந்த போராட்டங்களால் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதது.

    போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக அடுத்த மாதம் 21-ந்தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருக்கிறோம். எனவே அரசு எங்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால், வைகை நதிக்கரையோரம் வாழும், மதுரை மற்றும் தேனி மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. #FloodAlert #Madurai #VaigaiDam
    மதுரை:

    கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் அதிகப்படியான கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு அதிக அளவில் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அதே போல், கேரள மாநிலத்தில் உள்ள முல்லை பெரியாறு அணையும் அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டது. இதையடுத்து தற்போது வைகை அணைக்கு 4 ஆயிரத்து 941 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இன்று அதிகாலை நிலவரப்படி, வைகை அணை 66 அடியை எட்டியுள்ளது. அதன் முழு கொள்ளளவு 71 அடியாக இருக்கும்பட்சத்தில், முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தற்போது விடப்பட்டுள்ளது.

    வைகை நதிக்கரையோரம் வாழும் மதுரை மற்றும் தேனி மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை சுத்தம் செய்யவோ வேண்டாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கிடைக்கும் நீரை உரிய முறையில் சேமித்து வைக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #FloodAlert #Madurai #VaigaiDam
    கேரளாவில் கனமழை எதிரொலியாக திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், மதுரை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. #KeralaRain #KeralaFloods
    மதுரை:

    மதுரை ரெயில்வே கோட்ட செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவனந்தபுரம் கோட்டத்தில் குழித்துறை- இரணியல் பிரிவில் நிலச்சரிவையொட்டி, அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி புதுடெல்லியில் இருந்து 14-ந் தேதி புறப்பட்ட கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12626) ஈரோடு, திண்டுக்கல், நெல்லை வழியாக திருப்பி விடப்பட்டு, திருவனந்தபுரம் செல்லும்.

    ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 15-ந்தேதி புறப்பட்ட சபரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 17230) ஈரோடு, திண்டுக்கல், நெல்லை வழியாக திருப்பி விடப்பட்டு, திருவனந்தபுரம் செல்லும்.

    கன்னியாகுமரியில் இருந்து நேற்று (16-ந்தேதி) புறப்பட்ட ஐலண்ட் எக்ஸ் பிரஸ் திண்டுக்கல், மதுரை, நெல்லை வழியாக திருப்பி விடப்பட்டு, பெங்களூரு செல்லும்.

    ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி காத்ரா பகுதியில் இருந்து புறப்பட்ட ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16318) ஈரோடு, திருச்சி, விருதுநகர், மதுரை, வாஞ்சி மணியாச்சி, நெல்லை வழியாக திருப்பி விடப்பட்டு கன்னியாகுமரி செல்லும்.

    செங்கோட்டை- கொல்லம் பிரிவில் தண்டவாளத்தில் மரங்கள் விழுந்து கிடப்பதால், அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி திருவனந்தபுரம்-மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16343) போக்குவரத்தில் சோரனூர்- மதுரை இடையேயான போக்குவரத்து இரு மார்க்கங்களிலும் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    மதுரை-புனலூர் பயணிகள் ரெயில் போக்குவரத்தில் கொல்லம்-புனலூர் இடையேயான சேவை இரு மார்க்கங்களிலும் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    கொச்சுவேலி-திருவனந்தபுரம் இடையே தண்டவாள பராமரிப்பு காரணமாக குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16128) 80 நிமிடங்கள் கால தாமதமாக செல்லும்.

    எழும்பூர் இணைப்பு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16130) தூத்துக்குடியில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்.

    திருவனந்தபுரம்-பாலக்காடு பிரிவில் மண் சரிவு காரணமாக அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி பெங்களூரு-கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16315) ஈரோடு, மதுரை, திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில் வழியாக திருப்பி விடப்பட்டு, திருவனந்தபுரம் செல்லும்.

    மும்பை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16381) ஈரோடு, மதுரை, திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில் வழியாக திருப்பி விடப்படும்.

    இதேபோல புதுடெல்லி-திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் (வண்டிஎண்: 12626), கொர்பா-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22647), திருவனந்தபுரம்-புதுடெல்லி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12625), கன்னியாகுமரி-மும்பை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16381) ஆகியவை ஈரோடு, மதுரை, திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில் வழியாக திருப்பி விடப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. #KeralaRain #KeralaFloods

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, மதுரைக்கு மீண்டும் நேற்று முதல் பஸ்கள் இயக்கப்பட்டன.
    சேலம்:

    சேலம் புதிய பஸ்நிலையத்தில் 2 பிரிவுகளாக கான்கிரீட் தரைதளத்தை புதுப்பிக்க மாநகராட்சி நிர்வாகம் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்தது. இதற்காக மண்பரிசோதனை நடைபெற்றபோது மண் ஈரப்பதம் இருந்ததால், மீண்டும் தார்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் முதற்கட்டமாக புதிய பஸ்நிலையத்தின் முதல் பிரிவில் தரைத்தளம் அமைக்கும் பணி தொடங்கியது.

    இதையடுத்து அங்கிருந்து கடலூர், சென்னை, சிதம்பரம், திருவண்ணாமலை உள்பட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் தற்காலிகமாக பழைய பஸ் நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் இருந்து இயக்கப்பட்டன. அதே நேரத்தில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, மதுரை, நெல்லை போன்ற ஊர்களுக்கு 2-வது பிரிவில் இருந்து பஸ்கள் சென்று வந்தன. இந்தநிலையில் புதிய பஸ் நிலையத்தில் முதல் பிரிவில் பணிகள் முடிந்து மீண்டும் கடலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு மீண்டும் பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 2-வது பிரிவில் தரைத்தளம் அமைக்கும் பணி தொடங்கியது. இதனால் அங்கிருந்து இயக்கப்பட்ட மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் தற்காலிகமாக ஜவகர் மில் திடலில் இருந்து புறப்பட்டு சென்றன. இந்த பணிகள் முடிவு பெற்றதால் நேற்று முதல் 2-வது பிரிவில் இருந்து மீண்டும் பஸ்கள் இயக்கப்பப்பட்டன. அதாவது மதுரை, நெல்லை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு வழக்கம் போல பஸ்கள் புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் மீண்டும் அனைத்து பகுதிகளுக்கும் முன்பு இருந்தது போலவே பஸ்கள் புறப்பட்டு செல்வதால், பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் இன்றி பஸ்களை இயக்க வசதியாக ஒவ்வொரு பஸ்களும் புறப்படும் 20 நிமிடத்துக்கு முன்பு பஸ் நிலையத்துக்கு கொண்டு வர வேண்டும். கார், இருசக்கர வாகனங்களை பஸ் நிலையத்துக்குள் கொண்டு வரக் கூடாது என போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர். 
    சென்னையில் நாளை நடக்கவுள்ள ஆட்டத்தில் திண்டுக்கல் அணியுடன் மதுரை அணி மோதுகிறது. டிஎன்பிஎல் கோப்பையை வெல்ல இரு அணிகளும் ஆவலுடன் உள்ளதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். #TNPL2018
    சென்னை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம், நெல்லை சங்கர் நகர் ஐ.சி.எல். மைதானம், திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம் ஆகிய 3 இடங்களில் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டி நடைபெற்றது.

    கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. 5-ந்தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ், திருச்சி வாரியர்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

    ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் திண்டுக்கல் அணி 75 ரன் வித்தியாசத்தில் மதுரையை வீழ்த்தியது. எலிமினேட்டர் போட்டியில் கோவை கிங்ஸ் 24 ரன் வித்தியாசத்தில் காரைக்குடி காளையை வீழ்த்தி வெளியேற்றியது. நேற்று நடந்த ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் மதுரை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தி வெளியேற்றியது.

    டி.என்.பி.எல். போட்டியின் இறுதி ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ்- ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் இந்தப் போட்டித் தொடரில் 3-வது முறையாக மோதுகின்றன. இதில் திண்டுக்கல் அணியே 2 முறை வென்றுள்ளது. இதனால் அந்த அணி டி.என்.பி.எல். கோப்பையை முதல் முறையாக கைப்பற்றும் நம்பிக்கையுடன் இருக்கிறது.

    திண்டுக்கல் அணியின் பேட்டிங்கில் கேப்டன் ஜெகதீசன் (345 ரன்), விவேக் (249 ரன்), ஹரி நிஷாந்த் (249) ஆகியோரும் பந்துவீச்சில் அபினவ், முகமது (தலா 8 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    திண்டுக்கல் அணி இந்தப் போட்டித் தொடரில் ஒரு ஒரே ஆட்டத்தில் மட்டுமே தோல்வி அடைந்து இருந்தது. தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்சிடம் 4 விக்கெட்டில் தோற்றது.

    மதுரை பாந்தர்ஸ் அணி ஏற்கனவே இரண்டு முறை தோற்றதற்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    அந்த அணியின் தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான அருண் கார்த்திக் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 397 ரன் குவித்து இந்தப் போட்டித் தொடரில் முதல் இடத்தில் உள்ளார். 5 அரை சதம் அடித்துள்ளார். தலைவன் சற்குணம் (191 ரன்), சுஜித் சந்திரன் (175 ரன்) போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் அந்த அணியில் உள்ளனர்.

    பந்து வீச்சில் அபிஷேக் தன்வர் (11 விக்கெட்), கவுசிக் (9 விக்கெட்) ஆகியோர் முத்திரை பதித்து உள்ளனர்.

    இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் நாளைய இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். #TNPL2018 #NammaOoruNammaGethu
    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கவிருக்கும் ஆட்டத்தில் திண்டுக்கல், மதுரை அணிகள் மோதுகின்றனர். #TNPL2018 #NammaOoruNammaGethu
    திண்டுக்கல்:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

    ‘லீக்‘ ஆட்டத்தின் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்தது. ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ், திருச்சி வாரியர்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

    ‘குவாலி பையர்’ ஆட்டம் நெல்லையில் நேற்று முன்தினமும், எலிமினேட்டர் ஆட்டம் திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் நேற்றும் நடைபெற இருந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி இந்த இரண்டு ஆட்டங்களும் தள்ளிவைக்கப்பட்டன. அந்த இரண்டு ஆட்டங்களும் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது.

    மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இரு அணிகளும் லீக் ஆட்டத்தில் 5 போட்டியில் வெற்றி பெற்று இருந்தன. இதனால் இறுதிப்போட்டியில் நுழைய கடுமையாக போராடும். திண்டுக்கல் அணி லீக் ஆட்டத்தில் மதுரையை வீழ்த்தி இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையில் உள்ளது.

    தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும், குவாலிபையர் 2 ஆட்டத்தில் விளையாடும்.

    இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டமான எலிமினேட்டரில் கோவை கிங்ஸ்- காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன.

    வெற்றி பெறும் அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்துக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும். கோவை அணி ‘லீக்‘ ஆட்டத்தில் காரைக்குடி காளையை வீழ்த்தி இருந்தது.

    ‘குவாலிபையர் 2’ ஆட்டம் நாளை நத்தத்திலும் இறுதிப் போட்டி 12-ந்தேதி சென்னையிலும் நடக்கிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், டார்லிங் வருவுக்கு நன்றி என்று கூறியுள்ள விஷால் வரலட்சுமியை பாராட்டியுள்ளார். #Vishal #Sandakozhi2
    `இரும்புத்திரை' படத்தை தொடர்ந்து விஷால் தற்போது `சண்டக்கோழி-2' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், வரலட்சுமி அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து விஷால் தெரிவித்துள்ளதாவது,

    சண்டக்கோழி-2 படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டோம். இன்றுடன் வரலட்சுமி சரத்குமாரின் காட்சிகள் முடிந்துவிட்டது. இது சிறப்பானது. கிளைமேக்ஸ் சண்டைக்காட்சிகள் அதிரவைக்கும்படியாக வந்துள்ளன. டார்லிங்க வருவுக்கு நன்றி. நான் பார்த்த சிறந்த தொழில் தெரிந்த நடிகை. அக்டோபர் 18-க்காக காத்திருப்போம்.

    இவ்வாறு கூறியுள்ளார். 

    விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷாலின் 25-வது படமாக இந்த படம் உருவாகி வருகிறது. படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அக்டோபர் 18-ல் ரிலீசாக இருக்கிறது. 

    காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே செல்லும் பயணிகள் ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று காரைக்குடி பொதுநல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி வள்ளல் அழகப்பர் நடையாளர் சங்கம், அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம், தொழில் வணிக கழகம், அரிமா சங்கம், ரெயில் பயணிகள் பாதுகாப்பு கழகம் ஆகிய பொதுநல சங்கத்தினர் திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையேயான அகல ரெயில் பாதை பணி கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ரூ.700கோடி மதிப்பீட்டில் தொடங்கி நிறைவு பெற்றது. இதையொட்டி சுமார் 73 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த ரெயில் பாதையில் கடந்த மார்ச் மாதம் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது.

    பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, காரைக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த ரெயிலை அதிகஅளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பஸ் கட்டணம் தற்சமயம் அதிகஅளவு உள்ளதால் மேற்கண்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள், மாணவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    குறிப்பாக காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு காரைக்குடியில் இருந்து மதுரைக்கு தினசரி சென்று வருகின்றனர். காரைக்குடியில் இருந்து மதுரைக்கு தினந்தோறும் சுமார் 70 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி ஆகிய பகுதியில் உள்ள மாணவர்கள் காரைக்குடி மற்றும் மதுரைக்கும் கல்லூரி படிப்பிற்கு சென்று வருகின்றனர். தற்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் காரைக்குடியில் இருந்து மதுரைக்கு தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிகஅளவு கட்டணம் உள்ளதால் ஏழை, எளிய மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே காரைக்குடி-பட்டுக்கோட்டை பயணிகள் ரெயிலை தினந்தோறும் சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரை வரை நீட்டித்து இயக்கினால் அதிகஅளவில் இப்பகுதி மக்கள் பயனடைவார்கள். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர். 
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சன்னிதி பகுதியில் உள்ள 51 கடைகளை மட்டும் திறக்க அனுமதி வழங்கி ஐகோர்ட் மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. #Madurai #MeenatchiAmmanTemple
    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்குள்ள கடைகளில் பிப்ரவரி மாதம் 2-ம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. இதனால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாக இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. மேலும், அறைநிலையத்துறை முறையாக செயல்படவில்லை எனவும் குற்றம்சாட்டின.

    இதையடுத்து, கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், முறையாக கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில், கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக ராஜநாகுலு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், மீனாட்சி அம்மன் கோவில் சன்னிதி அருகே உள்ள 51 கடைகளை மட்டும் திறந்து கொள்ள இன்று அனுமதி வழங்கியுள்ளது.

    மேலும், டிசம்பர் 31-ம் தேதி வரை கடைகளை நடத்திக்கொள்கிறோம் என உறுதிமொழி பத்திரம் அளிக்குமாறும், வாடகை பாக்கிகளை முறையாக கோவில் நிர்வாகத்திடம் அளிக்குமாறும் கடை உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Madurai #MeenatchiAmmanTemple 
    மதுரை அருகே தோப்பூரில் ரூ.1,500 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை உடனடியாக தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளன. #MaduraiAIIMS #Hospital #AIIMS
    சென்னை:

    ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார்.



    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.

    அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் தொடங்கப்படும் என்ற தகவலை அறிவித்தார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக தமிழகத்தில் தஞ்சாவூரில் உள்ள செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் உள்ள பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்களை தேர்வு செய்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

    அதன் அடிப்படையில் தமிழக அரசு குறிப்பிட்டு தந்த 5 இடங்களை பார்வையிடுவதற்காக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் தாரித்ரி பாண்டா தலைமையில் உயர்மட்டக்குழுவினர் வந்தனர். அவர்களும் பார்வையிட்டு அது தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கினார்கள்.

    2015-ம் ஆண்டில் தொடங்கிய இந்த பயணத்துக்கு எந்த ஒரு முற்றுப்புள்ளியும் இல்லாமல் நீண்டு கொண்டே சென்றது. பட்ஜெட்டில் தமிழ்நாட்டோடு சேர்ந்து அறிவிக்கப்பட்ட மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், தமிழகம் மட்டும் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இதுதொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல வழக்கை கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்தார். அந்த வழக்கு அவ்வப்போது கோர்ட்டில் விசாரணைக்கு வந்து, நீதிபதிகள் தீர்ப்பு வழங்கிய வண்ணம் இருந்தனர். கடைசியாக ஜூன் மாதம்(2018) இறுதிக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய உள்ளது என்பதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கூறி, ஜூன் மாதம் 20-ந்தேதிக்கு(நேற்று) வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி (திங்கட்கிழமை) டெல்லியில் இதுதொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட இருப்பதாக முடிவு செய்து, அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசுக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ளது. 3 ஆண்டுகளாக நீடித்த தமிழகத்தின் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்து இருக்கிறது.

    இதுதொடர்பான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது சிறந்த மருத்துவ சிகிச்சையை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் மதுரையில் அமைக்கப்படும் என்ற ஆணையை சுகாதாரத்துறை செயலாளருக்கு மத்திய அரசு அனுப்பி இருக்கிறது.

    இந்த மருத்துவமனை மதுரைக்கு அருகில் இருக்கும் தோப்பூர் என்ற இடத்தில் ரூ.1,500 கோடி மதிப்பில் 200 ஏக்கரில் அமைய இருக்கிறது. இதில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை, 100 எம்.பி.பி.எஸ். இடங்கள், 60 செவிலியர்கள் பயிற்சி பெறும் விதமாகவும், படிப்பதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைவதற்கு மத்திய அரசுக்கு, தமிழக அரசு அத்தனை உதவிகளையும் செய்யும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    இந்த பேட்டியின் போது சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

    எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை மத்திய உயர்மட்டக்குழுவினர் தேர்வு செய்து அனுப்பி இருந்தாலும், தமிழக அரசு அடுத்த கட்டமாக 2 நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

    அதாவது, முதலாவதாக அமைச்சரவை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். அடுத்ததாக, அதில் தமிழக அரசு இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து, தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

    அப்படி செய்த பின்னர் தான், மதுரை தோப்பூரில் கட்டுமான பணிகள் தொடங்கும். இந்த பணிகள் ஓராண்டுக்கு மேல் நீடிக்கும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்ததற்காக பிரதமருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி கூறி கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மதுரை மாவட்டம், தோப்பூரில் புதிய அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தை (எய்ம்ஸ்) நிறுவுவதற்காக தமிழக மக்கள் சார்பிலும், எனது தனிப்பட்ட சார்பிலும் உங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

    தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களும், பல்வேறு தரப்பினரும் உயர்ரக மருத்துவ சிகிச்சையை பெறும் வகையிலும், தரமான மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த மாநிலத்தில் எய்ம்ஸ் போன்ற தரமான மருத்துவமனை அமையவேண்டும் என்பதில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கவனமாக இருந்தார் என்பதை இப்போது நினைவுகூர்கிறேன்.

    அந்த வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கு தமிழகத்தில் 5 தகுதி வாய்ந்த இடங்கள் பரிந்துரைக்கப்பட்டன. அந்த பெருமைமிகு எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கும் திட்டத்துக்காக மதுரையில் தோப்பூரை மத்திய அரசு தேர்வு செய்துள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

    தமிழகம் பரிந்துரைத்த 5 இடங்களில் ஒன்றான தோப்பூரை தேர்வு செய்ததன் மூலம் இந்தத் திட்டத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றதற்கு உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன்.

    இந்தத் திட்டப் பணிகள் உடனடியாக தொடங்குவதற்கான அனைத்து தேவையான ஆதரவை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #MaduraiAIIMS #Hospital #AIIMS #Tamilnews 
    ×