search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாஜ்பாய்"

    கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்தபோது, அவரை பதவி நீக்கம் செய்ய அப்போதைய பிரதமர் வாஜ்பாய் விரும்பினார் என்று பாஜக முன்னாள் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம், போபால் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் யஷ்வந்த் சின்கா கூறியதாவது:

    “குஜராத்தில் 2002-ல் மதக்கலவரம் வெடித்த பிறகு, அந்த மாநிலத்தில் முதல் மந்திரியாக பதவி வகித்து வந்த நரேந்திர மோடியை ராஜினாமா செய்ய அறிவுறுத்த வேண்டும் என்று வாஜ்பாய் முடிவு செய்திருந்தார்.

    2002-இல் கோவாவில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றபோது, மோடி ராஜினாமா செய்ய ஒருவேளை மறுத்தால் குஜராத் அரசை கலைக்க வேண்டும் என்று வாஜ்பாய் திட்டமிட்டிருந்தார்.



    கட்சிக்குள் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி, குஜராத் அரசை கலைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன், மோடி அரசு கலைக்கப்பட்டால், நான் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் அவர் வாஜ்பாயிடம் கூறினார். இதனால், தனது முடிவை செயல்படுத்தாமல் வாஜ்பாய் நிறுத்தி வைத்தார்.”

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழு உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். #AtalBihariVajpayee #VajpayeePortrait
    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் உருவப்படத்தை திறக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய ஹாலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படம் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. பிப்ரவரி 12-ம் தேதி படம் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.



    அதன்படி, இன்று காலை பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக, பாராளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாயின் முழு உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு மத்திய மந்திரிகள், தலைவர்கள் பங்கேற்றனர்.

    நாட்டின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்தவர் வாஜ்பாய். 1996ல் 13 நாட்களும், 1998 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் 13 மாதங்களும், 1999 முதல் 2004ம் ஆண்டு வரை என மூன்று முறை பிரதமராக பதவி வகித்தார். இந்தியாவின் மிகவும் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருது பெற்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ம் தேதி காலமானது குறிப்பிடத்தக்கது. #AtalBihariVajpayee #VajpayeePortrait

    உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் உள்ள அம்மாநில அரசின் தலைமை செயலகத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு 25 அடி உயரத்தில் சிலை நிறுவப்படும் என யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார். #Vajpayeestatue #UPsecretariat #YogiAdityanath
    லக்னோ:

    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 94-வது பிறந்தநாள் இன்று உத்தரப்பிரதேசம் மாநில அரசு சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    தலைநகர் லக்னோ நகரில் நடைபெற்ற விழாவில் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், கவர்னர் ராம்நாயக் உள்பட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    இவ்விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அளித்தும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-



    உத்தரப்பிரதேசம் மாநிலத்துடன் வாஜ்பாய் பலமான பிணைப்பை வைத்திருந்தார். இம்மாநிலத்தில் பல்ராம்பூரில் இருந்து தனது பொதுவாழ்வை தொடங்கிய அவர், லக்னோ தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக 5 முறை பொறுப்பு வகித்துள்ளார்.

    தீன்தயாள் உபாத்யாய், ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரிடமிருந்து அரசியல் பாடங்களை கற்ற வாஜ்பாய் நல்லாட்சி என்று சொல்லுக்கு அஸ்திவாரமாக விளங்கினார். அதனால்தான் இந்த மாநில அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் பல திட்டங்களுக்கு அவரது பெயரை சூட்டியுள்ளோம். 

    அவரது நினைவுகளையும் புகழையும் நினைவுகூரும் வகையில் அரசு தலைமை செயலகத்தில் (லோக் பவன்) வாஜ்பாய்க்கு 25 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். #Vajpayeestatue #UPsecretariat #YogiAdityanath
    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர். #Modi #AtalBihariVajpayee
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தலைவர்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிலையில், வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரி நிதின் கட்காரி மற்றும் பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


    நினைவிடம் அருகே சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    இதேபோல் நாடு முழுவதிலும் உள்ள பாஜக அலுவலகங்களிலும் வாஜ்பாய் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படுகிறது. #VajpayeeBirthday #Modi #AtalBihariVajpayee 
    இந்தியாவின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்த அமரர் ‘பாரத ரத்னா’ அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தின் சில சிறப்புகளை அவரது பிறந்தநாளான இன்று நினைவுகூர்வோம். #Vajpayee #Vajpayeebirthday #Vajpayeetribute
    புதுடெல்லி:

    மத்தியப்பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் 25-12-1924 அன்று பிறந்த அடல் பிஹாரி வாஜ்பாய், வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து, இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டதற்காக 1942-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அன்றுமுதல் தீவிரமாக தன்னை பொதுசேவையில் ஈடுபடுத்திக் கொண்ட அவர், 1957-ம் ஆண்டு பல்ராம்பூர் தொகுதியில் இருந்து முதன்முதலாக பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, எம்.பி. ஆனார்.

    அவரது பேச்சாற்றலை கண்டு வியப்படைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, 'என்றாவது ஒரு நாள் வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக வருவார்' என தெரிவித்ததாக கூறப்படுகிறது. 1970-ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை சட்டம் (மிசா) பிரகடனப்படுத்தப்பட்டபோது, அதனை எதிர்த்துப் போராடி, கைதாகி, சிறைச் சென்ற முக்கிய அரசியல் தலைவர்களில் வாஜ்பாயும் ஒருவர் ஆவார்.

    பின்னர், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்த வாஜ்பாயின் பெயர் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசியலோடு ஒன்றிணைந்த பெயராகவே மாறிப்போய் விட்டது. அவரது சேவையை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசு 1992-ம் ஆண்டில் பத்மவிபூஷன் விருதினை வழங்கி சிறப்பித்திருந்தது.

    திருமணமே செய்து கொள்ளாமல் முழுநேர அரசியல்வாதியாக வாழ்ந்த அவர், இந்தியாவின் 10-வது பிரதமராக 16-5-1996 அன்று பதவி ஏற்றார். எனினும், பாராளுமன்றத்தில் போதுமான எம்.பி.க்களின் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் போனதை தொடர்ந்து 13 நாட்களிலேயே அவர் பதவி விலக நேர்ந்தது.

    பின்னர், 1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதையடுத்து, இரண்டாவது முறையும் பிரதமராக அவர் பதவி ஏற்றார். தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் ஏற்பட்ட கருத்து மற்றும் கொள்கை முரண்பாடுகளின் விளைவாக இந்த முறையும் 13 மாதங்கள் மட்டுமே பிரதமராக அவர் பதவி வகிக்க முடிந்தது.

    அதன் பிறகு, அடுத்த ஓராண்டுக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 1999-ல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 303 எம்.பி.க்.களுடன் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது. இதனையொட்டி, 13-10-1999 அன்று மூன்றாவது முறையாக அவர் இந்தியாவின் பிரதமர் ஆனார்.

    இம்முறை, முழுமையாக ஐந்தாண்டுகாலம் தனது பதவியை நிறைவுசெய்த வாஜ்பாய், பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார். இதன் மூலம் இந்தியாவின் ஆற்றலையும், பெருமையையும் உலக நாடுகளுக்கு உணர்த்தினார்.

    தங்க நாற்கர விரைவு நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக இந்தியாவின் உள்கட்டமைப்பையும் அவர் மேம்படுத்தினார்.

    தேர்ந்த அரசியல்வாதி, சிறந்த நிர்வாகி என புகழப்படும் வாஜ்பாய் கவிதைகள் எழுதும் கலையிலும் கைதேர்ந்து விளங்கினார்.



    2004-ம் ஆண்டு தனது ஐந்தாண்டுகால பதவியை நிறைவு செய்த வாஜ்பாய், அரசியலில் இருந்து விலகுவதாக 2005-ல் அறிவித்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பூரண ஓய்வில் இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு 2015-ம் ஆண்டு நாட்டிலேயே மிகவும் உயரியதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது.

    மரபுகளை எல்லாம் கடந்த வகையில் அந்நாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் இல்லம் தேடிச்சென்று சிறப்புக்குரிய இந்த விருதினை அவருக்கு வழங்கினார்.

    அடல் பிஹாரி வாஜ்பாய்(94) கடந்த 16-8-2018 அன்று உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார். முழு அரசு மரியாதையுடன்  நடைபெற்ற இறுதி ஊர்வலத்துக்கு பின்னர் ராஷ்டரிய  ஸ்மிரிதி ஸ்தல் திடலில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    டெல்லியில் எரியூட்டப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி விமானம் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு முக்கிய ஆறுகளில் கரைக்கப்பட்டது.

    அவரது 94-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் வாஜ்பாயின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டு அவரது புகழுக்கு இந்திய அரசின் சார்பில் மணிமகுடம் சூட்டினார்.

    இந்நிலையில், வாஜ்பாயின் பிறந்தநாளான இன்று அமரர் வாஜ்பாய் தொடர்பான நினைவுகளையும் அவரது தனிச்சிறப்புகளையும் குறிப்பிட்டு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சமூக வலைத்தளங்களில் புகழாரம் சூட்டி வருகின்றனர்.  #Vajpayee #Vajpayeebirthday #Vajpayeetribute 
    அதிகாரமும் பதவியும் சிலருக்கு ஆக்சிஜன் போன்றது. அது இல்லாமல் அவர்களால் உயிர்வாழ முடியாது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். #Powerlikeoxygen #cantlivewithoutPower #Modi
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி அவரது நினைவாக 100 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், சிறப்பு நாணயத்தை வெளியிட்டுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘இன்றைய அரசியல் அரங்கில் 2 அல்லது 5 ஆண்டுகள் பதவியில் இல்லாமல் போனாலும் சிலர் நிம்மதியை இழந்து விடுகிறார்கள்’ என்று குறிப்பிட்டார்.

    இவர்களுக்கு அதிகாரமும், பதவியும் ஆக்சிஜன் போன்றது. அவை இல்லாமல் அவர்களால் உயிர்வாழ முடியாது. ஆனால், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தனது அரசியல் வாழ்வின் பெரும்பகுதி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துதான் பணியாற்றி வந்தார்.

    தன்னைவிட தான்சார்ந்திருந்த கட்சியைவிட இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் முன்வைத்தே அவரது அரசியல் பயணம் அமைந்திருந்தது. அனைத்தையும் விட ஜனநாயகம் மிகவும் உயர்ந்தது என அவர் கருதினார். 

    ஜனசங்கம் இயக்கத்தை கட்டமைத்தார். நமது ஜனநாயகத்தை காப்பதற்காக அவர் ஜனதா கட்சியில் இணைந்தார். ஒவ்வொரு கல்லாக கட்டி வாஜ்பாய் எழுப்பிய மாளிகையான பா.ஜ.க. இன்று உலகில் மிகப்பெரிய அரசியல் கட்சிகளின் ஒன்றாக உயர்ந்து நிற்கிறது. 

    சித்தாந்தத்தில் சமரசம் செய்வதா? ஆட்சியில் நீடிப்பதா? என்ற கேள்வி எழுந்தபோது பா.ஜ.க.வை அவர் உருவாக்கினார். தாமரைக்கான விதையை நட்டு அதற்கான பலனையும் அவரது காலத்தில் அறுவடையும் செய்து விட்டார்.

    அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்னர், உடல்நலக்குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் பல ஆண்டுகளாக ஊடகங்களில் பேசப்படும் பொருளாக இல்லாமல் வாஜ்பாய் வாழ்ந்து வந்தார். 

    அவர் மறைந்தபோது மக்கள் அவருக்கு செலுத்திய இரங்கல்களையும் மரியாதையையும் வைத்து மக்களின் மனங்களில் எவ்வளவு பெரிய முத்திரையை வாஜ்பாய் பதித்திருந்தார் என்பதை நம்மால் கண்கூடாக காண முடிந்தது.

    அவர் பேசியபோது இந்த நாடு பேசியது. அவரது குரல் இந்த நாட்டின் குரலாக இருந்தது. வாஜ்பாயின் குரல் பா.ஜ.க.வின் குரலாக மட்டுமில்லாமல் சாதாரண மனிதர்களின் உண்ர்வுகளை பிரதிபலிக்கும் குரலாக அமைந்திருந்தது என்றும் மோடி புகழாரம் சூட்டினார். #Powerlikeoxygen #cantlivewithoutPower #Modi
    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-வது பிறந்த தினம் நாளை கொண்டாடப்பட இருப்பதையொட்டி அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மோடி வெளியிட்டார். #Vajpayee #PMModi
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந்தேதி தனது 93 வயதில் மரணம் அடைந்தார்.

    அவரது நினைவை கவுரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.

    வாஜ்பாயின் 94-வது பிறந்த தினம் நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருப்பதையொட்டி அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா இன்று டெல்லியில் நடந்தது.

    வாஜ்பாய் உருவம் கொண்ட 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். அந்த நாணயம் 35 கிராம் எடை கொண்டது. அதன் ஒரு பக்கத்தில் வாஜ்பாய் உருவமும், அதற்கு கீழ் 1924-2018 என்று பொறிக்கப்பட்டுள்ளது.


    நாணயத்தின் மற்றொரு பக்கத்தில் மூன்று சிங்கங்கள் இருப்பதுபோன்று பொறிக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழ் “சத்யமேவ ஜெயதே” என்று தேவநாகரி மொழியிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது.

    100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டு பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதாவது:-

    வாஜ்பாய் நம்மிடம் இல்லை என்பதை நமது மனம் ஏற்க மறுக்கிறது. நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் அவர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருந்தனர்.

    சிறந்த நிர்வாகியான அவர் மேம்பட்ட பேச்சாளராக திகழ்ந்தார். நமது நாடு தந்த சிறந்த சொற்பொழிவாளர்களில் அவரும் ஒருவர் ஆவார்.

    வாஜ்பாய் உருவாக்கிய பாரதிய ஜனதா கட்சி இன்று நாட்டின் மிகப்பெரிய கட்சியாக திகழ்கிறது. அவரது சேவையை என்றென்றும் நாம் நினைவு கூர்ந்து போற்ற வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    விழாவில் பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி அருண்ஜெட்லி உள்பட பலர் கலந்து கொண்டனர். #Vajpayee #PMModi
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவம்பதித்த 100 ரூபாய் நாணயத்தை விரைவில் வெளியிட மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. #Vajpayee

    புதுடெல்லி:

    மறைந்த பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவிகளுக்கு அவரது பெயரை மத்திய அரசு சூட்டி உள்ளது.

    வாஜ்பாய்க்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட தற்போது மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

    இதற்காக 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது. 35 கிராம் எடை கொண்ட இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பாயின் உருவம் பதிக்கப்பட்டு இருக்கும். அவரது உருவத்துக்கு கீழ் அவரது பெயர் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும்.

    அதன் அருகில் வாஜ்பாய் வாழ்ந்த காலமான 1924-2018 என்றும் பொறிக்கப்பட உள்ளது. இந்த வடிவமைப்புக்கான வேலைகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.

    நாணயத்தின் மற்றொரு பக்கத்தில் அசோக சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும். சிங்கமுகம் கொண்ட அந்த சின்னத்தின் மத்தியில் “சத்தியமேவ ஜெயதே” என்று பொறிக்கப்பட்டு இருக்கும்.

    அதற்கு கீழ் ரூ.100 என்று பொறிக்கப்பட்டு இருக்கும். இந்த புதிய நாணயத்தை விரைவில் வெளியிட மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. #Vajpayee

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட முன்னாள் உறுப்பினர்கள், தற்போதைய எம்பிக்கள் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. #WinterSession #ParliamentSession
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று  காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், தற்போதைய எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு பாராளுமன்ற இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.



    மழைக்கால கூட்டத் தொடருக்கு பிறகு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் மத்திய மந்திரி ஆனந்த் குமார், பீகார் எம்பிக்கள் போலா சிங், மவுலானா அஸ்ரருல் ஹக், கேரள எம்பி எம்.ஐ.ஷாநவாஸ் உள்ளிட்ட சில தலைவர்கள் காலமானார்கள். அவர்கள் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அடுத்த மாதம் 8-ந் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. 20 அமர்வுகளாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் 45 மசோதாக்கள் மற்றும் ஒரு நிதி மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. #WinterSession #ParliamentSession
    முன்னாள் மத்திய மந்திரியும், ஒடிசா மாநில சட்டசபை உறுப்பினருமான திலிப் ரே பா.ஜ.க.வில் இருந்து இன்று திடீரென விலகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DilipRay #DilipRayresigns #RourkelaMLA #quitsBJP
    புவனேஸ்வர்:

    மத்தியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக ஆட்சிக்காலத்தில் நிலக்கரித்துறை இணை மந்திரியாக பதவி வகித்தவர் திலிப் ரே.

    ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்குடன் பல ஆண்டுகளாக மோதல் போக்கை கடைபிடித்துவந்த இவர் ரூர்கேலா தொகுதி சட்டசபை உறுப்பினராக உள்ளார்.

    கோப்புப்படம்

    இந்நிலையில், ரூர்கேலா எம்.எல்.ஏ. என்ற முறையில் தனது தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாததால் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி விட்டதாகவும், இந்த முடிவு தனக்கு வேதனை அளிப்பதாகவும்  திலிப் ரே தெரிவித்துள்ளார்.  #DilipRay #DilipRayresigns #RourkelaMLA #quitsBJP
    பதவிக்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தி.மு.க. என்றும், தி.மு.க.வின் அரசியல் வேட்கையினாலும், பதவி வெறியினாலும் தான் இலங்கை தமிழர்கள் இன்னலுக்குள்ளானார்கள் என்பதை மேலும் வெட்ட வெளிச்சமாக்குவோம் என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #TamilisaiSoundararajan
    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வரலாறு தெரிந்து பேச வேண்டும் என்று தி.மு.க. செய்தித் தொடர்பாளர் கூறியதால் வரலாற்றை திரும்பி பார்த்தேன். அந்த வரலாற்று துளிகளில் சிலவற்றை கூற விரும்புகிறேன். பதவிக்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த தி.மு.க.வின் வரலாறு குறித்து பேசலாமா?. இலங்கையில் பல தமிழர்களைக் கொன்றவர்கள் புலிகள். பிரபாகரன் ஒரு சர்வாதிகார மனப்பான்மை கொண்டவர் என்பதால், புலிகள் என்றாலே புளித்துப்போய்விட்டது என்றும் கருணாநிதி கூறியது உண்மையா இல்லையா?. தமிழீழ தனிநாடு இனி சாத்தியமானது அல்ல. சம உரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு சிங்களவர்களிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் என்று கருணாநிதி சொன்னது உண்மையா இல்லையா?.

    மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைபுலிகளால் ஆபத்து உள்ளது என்றும் அதனால் அவருக்கு மத்திய அரசின் பாதுகாப்பு வேண்டும் என்றும் கருணாநிதி கேட்டது உண்மையா இல்லையா?. அதனடிப்படையில் தான் இன்றைக்கும் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுக்கொண்டிருப்பது உண்மையா இல்லையா?. தற்போது 7 பேரை விடுதலை செய்ய வேண்டி நாடகம் போடும் மு.க.ஸ்டாலினை கேட்கிறேன், அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதை மறந்து விட்டீர்களா? மறைத்து விட்டீர்களா?.


    எல்லாவற்றிற்கும் மேலாக போரை முடித்து வைக்கிறேன் என்று ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தது, பல லட்சக்கணக்கான தமிழர்களை முடித்து வைக்கத் தான் என்று ராஜபக்சே கூறியதை உங்களால் மறைக்கவும் முடியாது. தமிழர்களால் மறக்கவும் முடியாது. கச்சத்தீவை மீட்க நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் அன்றைக்கே போராடியது பா.ஜ.க.வினர் தான் என்பதை உணருங்கள். ஆனால் அன்றைக்கு பதவி சுகத்திற்காக அமைதி காத்த தி.மு.க.வினர் இன்றைக்கு வரலாறு குறித்து பேசுவது வரலாற்று பிழை.

    1980-ம் ஆண்டு மதுரை மாநாட்டில் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கூறியவர் எங்கள் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய். பா.ஜ.க. ஆட்சியில் இலங்கைக்கு ஆயுதம் வழங்கவும் மாட்டோம், விற்கவும் மாட்டோம் என்ற கொள்கை முடிவெடுத்தவர்கள் நாங்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போது விடுதலைப் புலிகளையும், இலங்கை தமிழர்களையும் தூண்டி விட்டு, ஆளும் கட்சியாக இருக்கும் போது பதவியை காப்பாற்றிக் கொள்ள தாண்டி செல்லும் கொடுங்கோலர்கள் தான் தி.மு.க.வினர் என்பதை உலகறியும்.

    நான் கல்லூரியில் படிக்கும் போதே மாணவியாக இலங்கை தமிழர்களுக்காக களத்தில் இறங்கி போராடியவள். போருக்கு பிறகு இலங்கை தமிழர்களுக்காக வீதி வீதியாக சென்று நிவாரண பொருட்களை திரட்டி அனுப்பியவள். இது நாள் வரையில் அவதியுறும் இலங்கை தமிழர்களை கண்டு ஆறுதல் சொல்லக்கூட செல்ல மனமில்லாத, துணிவில்லாத தமிழக அரசியல்வாதிகள், அவர்களின் துயரத்தில் பங்கு கொள்ளாதவர்கள் ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததற்கு இணையானவர்கள். ஆனால், நேரடியாக இலங்கை சென்று அங்கே இருக்கும் தமிழர்களின் நிலையை கண்டறிந்து, அவர்களின் தேவைகளை மத்திய அரசின் பார்வைக்கு எடுத்துச் சென்று தமிழின மக்களின் நல்வாழ்விற்கு பங்காற்றியவள் நான் என்பதை மறந்து விடாதீர்கள்.

    உங்களின் தூண்டுதலாலும், அரசியல் வேட்கையினாலும், பதவி வெறியினாலும் தான் இலங்கை தமிழர்கள் இன்னலுக்குள்ளானார்கள் என்பதை மேலும் வெட்ட வெளிச்சமாக்குவோம். வரலாறு குறித்து எங்களுக்கு பாடம் தேவையில்லை. உண்மையான வரலாறு குறித்த பாடத்தை உங்களுக்கு பா.ஜ.க. புகட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #Karunanidhi #MKStalin #DMK #Katchatheevu
    வாஜ்பாய் அஞ்சலி கூட்டத்தில் சிரித்து பேசிக் கொண்டிருந்த சத்தீஸ்கர் மாநில பா.ஜனதா மந்திரிகள் இருவரை நீக்க வேண்டும் என்று வாஜ்பாயின் மருமகள் கருணா சுக்லா வலியுறுத்தி உள்ளார். #Vajpayee #KarunaShukla #BJP
    ராய்ப்பூர்:

    மறைந்த பிரதமர் வாஜ்பாய்க்கு நினைவு அஞ்சலி செலுத்தும் கூட்டம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சமீபத்தில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜனதா மந்திரிகளான பிரிஜி மோகன் (வேளாண்மை துறை), அஜய் சந்திரசேகர் (சுகாதாரத்துறை) ஆகியேர் ஒருவருக்கொருவர் சிரித்து பேசி கொண்டு இருந்தனர். அருகே இருந்த மற்றொரு மந்திரியும், மாநில பா.ஜனதா தலைவருமான தர்மலால் கவுசிக் அவர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    வாஜ்பாய் நினைவு கூட்டத்தில் 2 மந்திரிகள் சிரித்து பேசிய அந்த வீடியோ வைரலாக பரவியது.

    இந்த நிலையில் வாஜ்பாய் அஞ்சலி கூட்டத்தில் சிரித்து பேசிக் கொண்டிருந்த சத்தீஷ்கர் மாநில பா.ஜனதா மந்திரிகள் இருவரையும் நீக்க வேண்டும் என்று வாஜ்பாயின் மருமகள் கருணா சுக்லா வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நினைவு கூட்டத்தில் சிரித்து பேசிக் கொண்டிருந்தன் மூலம் பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாயை 2 மந்திரிகளும் அவமதித்து விட்டனர். அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் சிரிப்பது மிகவும் அவமான ஒன்றாகும். வாஜ்பாய்க்கு அவமரியாதை ஏற்படுத்திய அந்த 2 மந்திரிகளையும் உடனடியாக டிஸ்மிஸ் வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வாஜ்பாய் அஸ்தியை வைத்து அரசியல் செய்வதாக பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் மீது கருணா சுக்லா ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார்.

    கருணா சுக்லா முதலில் பா.ஜனதாவில் இருந்தார். 2013-ல் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். #Vajpayee #KarunaShukla #BJP
    ×