search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரமலான்"

    தொழுவது, ஜகாத் கொடுப்பது ஆகியவற்றோடு நலிவுற்ற மக்களுக்கு வழங்குவது, வாக்குறுதியை காப்பாற்றுவது, சோதனையின் போது நிலைகுலையாமல் இருப்பது ஆகியவையும் நற்செயல் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
    உலகில் செய்யப்படும் எந்த செயலுக்கும் ஒரு நோக்கம், லட்சியம் உண்டு. மனிதனைப் படைத்த இறைவனே இந்த லட்சியத்தை நிர்ணயித்துவிட்டான். இவ்வுலகில் நற்செயல் புரிவதற்காகவே நான் உன்னைப் படைத்தேன். அது இவ்வுலகில் உனக்கு வைக்கப்பட்ட தேர்வாகும். அதில் வெற்றி பெற்றால் மறுமையில் நிலையான, இவ்வுலகைவிட மேலான சுவனத்தை உனக்கு நான் நல்குவேன் என்று இறைவன் கூறுகின்றான்.

    அவன் மரணத்தையும் வாழ்வையும் ஏற்படுத்தினான். உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு என்பது திருக்குர்ஆன் (67:2) வசனமாகும்.

    இப்போது எது நற்செயல் என்ற கேள்வி எழுகிறது. அதனை முடிவு செய்பவன் யார்? அதனை முடிவு செய்யும் பொறுப்பை மனிதனிடத்தில் கொடுத்தால், மனிதர்களே தங்களுக்குள் வேறுபட்டு நிற்பார்கள். எனவே நன்மை, தீமையை முடிவு செய்யும் பொறுப்பை இறைவனே ஏற்றுக்கொண்டான்.

    ஒரு செயல் நற்செயல் என்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன. 1. இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட செயல்கள். 2. இறை திருப்தியை பெறுவதற்காக செய்யப்படும் செயல்கள். இந்த விதிக்கு உட்பட்டு செய்யப்படும் அனைத்து செயல்களும் நற்செயல்களே.

    தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற செயல்கள் நற்செயல்களின் ஒரு பகுதியாகும். அதன் இன்னொரு பகுதி அவற்றை விட விரிவானது.

    நற்செயல் என்பது உங்களுடைய முகங்களைக் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல. மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் ஒருவன் முழுமையாக நம்புவதும், மேலும் (அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தின் காரணமாகத்) தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை மீட்பதற்கு வழங்குவதும், மேலும் தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தைக் கொடுத்து வருவதுமே நற்செயல்களாகும். மேலும், வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதி களை நிறைவேற்றுபவர்களும், வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும், பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்களுமே புண்ணியவான்கள் ஆவர். இவர்களே உண்மையாளர்கள்; மேலும் இவர்களே இறையச்ச முடையவர்கள். (2:177)

    இவ்வசனத்தில் தொழுவது, ஜகாத் கொடுப்பது ஆகியவற்றோடு நலிவுற்ற மக்களுக்கு வழங்குவது, வாக்குறுதியை காப்பாற்றுவது, சோதனையின் போது நிலைகுலையாமல் இருப்பது ஆகியவையும் நற்செயல் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

    தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவற்றைவிட சிறந்த செயல் ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். கட்டாயம் அறிவியுங்கள் என்றனர் தோழர்கள். மக்களுக்கிடையில் சமாதானம் செய்து வையுங்கள். மக்களுக்கிடையில் உறவுகளை சீர்குலைப்பதே அழிவிற்கு காரணமாகும் என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (நூல்: திர்மிதி)

    இறைக்கட்டளைகளுக்காக வாழ்வதே, வாழ்வின் லட்சியமாகும். ரமலான் நோன்பில் அந்த லட்சியத்தை நிறைவேற்றுவோம்.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    “செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ அதற்குரிய பலன் தான் அவனுக்குக் கிட்டும்” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (புகாரி, முஸ்லிம்)
    நற்செயல் பற்றிய இஸ்லாத்தின் பட்டியல் நீளமானது. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “கதிரவன் எழும் ஒவ்வொரு நாளிலும் உடம்பின் ஒவ்வொரு பாகமும் ஒரு அறத்தைச் செய்ய வேண்டும். இருவருக்கிடையில் நீதியுடன் நடந்து கொள்வதும் அறமே. ஒருவருக்கு வாகனத்தை கொடுத்து உதவுவதும், வாகனத்தில் ஏற உதவுவதும், சரக்குகளை வாகனத்தில் ஏற்ற உதவுவதும் ஓர் அறமே.

    ஒரு நற்சொல் மொழிவதும் அறமே.தொழுகையை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஒவ்வோர் அடியும் அறமே. பாதைகளில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவதும் அறமே. (நூல்:புகாரி, முஸ்லிம்)

    உங்கள் சகோதரனை புன்முறுவலுடன் சந்திப்பதும் ஓர் அறமே. (முஸ்லிம்)

    முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து ஒரு பறவையோ, ஒரு மனிதனோ, ஒரு பிராணியோ உண்டால், அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான கூலி அவருக்குக் கிடைக்கும். (புகாரி)

    இரண்டு கோத்திரத்தாருக்கிடையே தகராறு என்ற செய்தி நபிகளாருக்குத் தெரிவிக்கப்பட்டது. நபியவர்கள் சமாதானம் செய்து வைப்பதற்காகத் தமது தோழர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். சமாதானப் பேச்சு வார்த்தையில் சற்று நேரம் தாமதமாகி விடவே உரிய நேரத்தில் தொழுகையில் கலந்துகொள்ள முடியவில்லை. பின்னர் தாமதமாகத் தொழுகையில் கலந்துகொண்டார்கள். (புகாரி)

    (சமாதானத்தில் ஈடுபடும் வேளைகளில் தொழுகையில் கலந்துகொள்ள தாமதமானாலும் பெருமானார் அதைப் பொருட்படுத்தவில்லை.)நேர்மையான முறையில் வணிகம் புரிவதும், நீதிமிக்க ஆட்சி செலுத்துவதும் இறை அருளுக்குரியவை என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

    எனவே வாழ்வின் அனைத்துத் துறைகளையும் நற்செயல் தழுவி நிற்கின்றது. அது வழிபாடுகளோடு முடிந்துவிடுவதல்ல என்பதையே மேற்கூறிய நபிமொழிகள் நமக்கு உணர்த்துகின்றன.

    நற்செயல் புரிபவர் உளத்தூய்மையோடு செய்தால் மட்டுமே அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும். பகட்டுக்காகவும், விளம்பரத்திற்காகவும், பிறரிடம் நன்றி, கூலி, பாராட்டு, கைம்மாறு ஆகியவற்றை எதிர்பார்த்துச் செய்யப்படும் செயல்களை இறைவன் ஏற்பதில்லை.

    “செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ அதற்குரிய பலன் தான் அவனுக்குக் கிட்டும்” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (புகாரி, முஸ்லிம்)

    “மேலும், அல்லாஹ்வின் மீதுள்ள அன்பினால் வறியவருக்கும், அநாதைக்கும், கைதிக்கும் உணவளிக்கின்றார்கள். (மேலும், அவர்களிடம் கூறுகின்றார்கள்:) நாங்கள் அல்லாஹ்வுக்காகவே உங்களுக்கு உணவளிக்கின்றோம். நாங்கள் உங்களிடமிருந்து எந்தப் பிரதிபலனையும், நன்றியையும் எதிர்பார்க்கவில்லை.”(76:8-9)

    நன்மைகளை விரிவாகச் செய்வோம். நல்ல உள்ளத்துடன் செய்வோம். இறைத் திருப்தியைப் பெறுவது மட்டுமே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    இஸ்லாம் மனித குலத்திற்கு வழங்கியயுள்ள மனித உரிமைகள் குறித்து திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதில் சிலவற்றைப் பார்க்கலாம்.

    இஸ்லாம் மனித குலத்திற்கு வழங்கியயுள்ள மனித உரிமைகள் குறித்து திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதில் சிலவற்றைப் பார்க்கலாம்.

    'வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்'. (குர்ஆன் 6 : 151) சிசுக்கொலை, கருக்கொலை இதன் மூலம் தடைசெய்யப்படுகிறது.

    'அல்லாஹ் கண்ணியத்திற்கு உரியதாக்கிய எவ்வுயிரையும் நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள்'. (6 : 151) கொலை, கலவரங்கள், வன்முறை, பயங்கரவாதம் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்துவது வரம்பு மீறிய செயலாகும்.

    'உங்களில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்; மேலும் பிற மனிதர்களுடைய பொருள்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதியான முறையில் தின்பதற்காக, அது தவறு என நீங்கள் அறிந்திருந்தும், அதற்குரிய வாய்ப்பைப் பெற அதிகாரிகளை அணுகாதீர்கள்'. (2 : 188)

    'உறவினர்களுக்கும் வறியவர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் அவரவர்க்குரிய உரிமையை வழங்கிவிடுங்கள்'. (17 : 26)

    'இறைநம்பிக்கையாளர்களே, எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களாயிருக்கலாம். எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களாயிருக்கலாம். நீங்கள் ஒருவரையருவர் குத்திப் பேசாதீர்கள். ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள். இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட விஷயமாகும். எவர்கள் இந்த நடத்தையைக் கைவிடவில்லையோ அவர்கள்தாம் கொடுமைக்காரர்கள்'. (49 : 11)

    'இறைநம்பிக்கை கொண்டவர்களே! அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில், சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன. மேலும் துப்பறிவதில் ஈடுபடாதீர்கள். இன்னும் உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம்'. (49 : 12)

    'இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய வீடுகளைத் தவிர மற்றவர்களின் வீடுகளில் அந்த வீட்டாரின் இசைவைப் பெறாமலும், அவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறாத வரையிலும் நுழையாதீர்கள்'. (24 : 27)

    ஒருவர் தாம் விரும்பும் மதத்தை, கொள்கைகளை பின்பற்ற உரிமை உடையவர் ஆவார். கொள்கைத் திணிப்பு உரிமை மீறலாகும். தமது கொள்கையை எடுத்துரைக்க மட்டுமே ஒருவருக்கு உரிமை உண்டு.

    'இது (குர்ஆன்) உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியமாகும். இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கை கொள்ளட்டும்; நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்'. (18 : 29)

    உயிர், உடைமை, கண்ணியம், அந்தரங்கம், நம்பிக்கை ஆகியவை மனிதனின் அடிப்படை உரிமைகளாகும். இவற்றைப் பறிக்க எவருக்கும் உரிமை இல்லை. பறிப்பது வரம்பு மீறிய செயலாகும். மறுமையில் இவற்றிற்கும் தண்டனைகள் கிட்டும்.
    இம்மையில் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டு அதேவேளையில் மனிதர்களுக்கு எதிரான செயல்களை செய்திருந்தால் அவனுக்கு மறுமையில் எதுவும் கிட்டாது.
    மனிதர்களுக்கு உதவுவதும் மனிதநேயம், மனிதர்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருத்தலும் மனிதநேயம்.

    இஸ்லாம் மனித உரிமைகள் பற்றி விரிவாக பேசுகிறது. மனித உரிமைகளும் இறைவனால் விதிக்கப்பட்டவையே. வழிபாடுகளை வகுத்த அதே இறைவன்தான் மனித உரிமைகளையும் வகுத்துள்ளான். மனித உரிமைகளை மீறுவது இறைக்கட்டளைகளை மீறுவதற்கு சமமாகும்.

    ஒருவர் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடைமைகளில் தவறிழைத்தால் இறைவனிடத்தில் மட்டும் மன்னிப்பு கோரினால் போதும். மனித உரிமைகளை பறித்தால் இறைவனிடமும் மனிதர்களிடமும் அவர் மன்னிப்பு கோர வேண்டும்.

    லஞ்சம், ஊழல், மோசடி, நாட்டின் வளங்களை சுரண்டுதல், நிலங்களை அபகரித்தால், ஊதியத்திற்கேற்றபடி உழைக்காதிருத்தல், மக்களின் ஒற்றுமையை குலைத்து துவேஷம், வெறுப்பு ஆகியவற்றை உண்டு பண்ணுதல் போன்றவை நாட்டிற்கு சமூகத்திற்கும் எதிரான குற்றங்களாகும். இக்குற்றங்களை நாட்டு மக்கள் மன்னிக்காதவரை அவன் செய்த பாவங்கள் அவனை விட்டு விலகாது.

    ஒருபுறம் தொழுகை நோன்பு போன்ற வழிபாடுகள், இன்னொரு புறம் மனிதர்களுக்கு எதிரான பாவங்கள், இவ்வாறு செய்வோரை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நயவஞ்சகர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

    நயவஞ்சகர்களின் பண்புகள் மூன்று ஆகும். அவை

    1. பேசினால் பொய்யே பேசுவான்.
    2. வாக்குறுதி கொடுத்தால் மீறுவான்.
    3. நம்பி ஒப்படைத்த பொருள்களில் மோசடி செய்வான்.

    அப்படிப்பட்ட மனிதன் நோன்பு நோற்று தொழுது உம்ராவை (புனிதபயணம்) நிறைவேற்றினாலும், இறைவனுக்குரிய கடமைகளை செய்து கொண்டே மனிதர்களுக்கு தீங்கிழைப்பவர்கள் நயவஞ்சகர்களாக கருதப்படுவார்கள்.

    இம்மையில் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டு அதேவேளையில் மனிதர்களுக்கு எதிரான செயல்களை செய்திருந்தால் அவனுக்கு மறுமையில் எதுவும் கிட்டாது. மறுமையில் திவாலாகிப்போன நிலையில் அவன் இருப்பான் என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோழர்களிடம் ஏழை என்பவன் யார்? என்று வினவினார்கள். எவரிடம் பணமோ வேறு எந்தப்பொருளோ இல்லையோ அவரே எங்களில் ஏழை எனத்தோழர்கள் பதிலளித்தனர்.

    நபிகள் (ஸல்) கூறினார்கள்: ஒருவன் மறுமைநாளில் தன் தொழுகை, நோன்பு, ஜகாத் (தானதர்மம்) ஆகியவற்றுடன் இறைவனிடம் வருவான். இவற்றுடன் அவன் உலகில் எவரையேனும் திட்டியிருப்பான். எவர் மீதாவது அவதூறு கூறியிருப்பான் எவரையேனும் கொலை செய்திருப்பான் எவரையேனும் நியாயமின்றி அடித்திருப்பான். எனவே அவனது நன்மைகள் அவனால் அநீதிக்குள்ளாக்கப்பட்டவர்களிடையே பங்கிடப்படும். அவனது நன்மைகள் தீர்ந்து போய் அநீதிக்குள்ளானவர்களின் பாவங்கள் அவன் கணக்கில் எழுதப்படும். பிறகு அவன் நரகத்தில் வீசி எறியப்படுவான். அத்தகையோரே உண்மையான ஏழை ஆவார். ( நூல்: முஸ்லிம்)

    எனவே இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டேன். எனவே எப்படியும் சுவனத்தில் நுழைந்து விடுவேன் என்று கனவு காண வேண்டாம்.

    - டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    ஜகாத்த்தின் நோக்கம் வறுமை ஒழிப்பாகும். எனவே சில்லறை தர்மங்கள் வழங்குவதன் வாயிலாக ஒரு ஏழைக்கு தற்காலிக நிவாரணத்தை அளிக்க முடியுமே தவிர சமூகத்தின் வறுமையை ஒழிக்க முடியாது.
    இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு வழங்குங்கள் என்ற பொதுவான போதனையுடன் முடித்து கொள்ளலாமல் தர்மம் வழங்கும் கடமை யார் மீது? எவ்வளவு கொடுக்க வேண்டும்? எவருக்கு கொடுக்க வேண்டும்? எப்படி கொடுக்க வேண்டும்? என்ற விதிமுறைகளை இஸ்லாம் வகுத்ததுள்ளது.

    ஜகாத்த்தின் நோக்கம் வறுமை ஒழிப்பாகும். எனவே சில்லறை தர்மங்கள் வழங்குவதன் வாயிலாக ஒரு ஏழைக்கு தற்காலிக நிவாரணத்தை அளிக்க முடியுமே தவிர சமூகத்தின் வறுமையை ஒழிக்க முடியாது.

    வெள்ளி, வைரம், ரொக்கப்படும் கால்நடைகள், வர்த்தகப்பொருட்கள், விளைச்சல் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் வைத்திருப்பவர்கள் மீது ஜகாத் கடமையாகும்.

    ஒருவர் தம்மிடமுள்ள ரெர்க்கப்பணம், வங்கியிலுள்ள சேமிப்பு, தங்கம் வெள்ளி, வைரம், மாணிக்க கற்கள், வியாபாரத்திற்கான பொருட்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பீட்டை கணக்கிட வேண்டும். அவை 87.5 கிராம் தங்கத்தின் பெருமதிப்பிற்கு அதிகமாக இருப்பின் அவர் மீது ஜகாத் கடமை ஆகிவிடுகிறது. எனவே இன்றைய தங்க விலை நிலவரப்படி ஒருவரின் செலவுகள் போக அவரிடம் 2 1/2 லட்ச ரூபாய் இருந்தால் அவர் மீது ஜகாத் கடமையாகிறது. அவர் தனது வருமானத்தில் எஞ்சியதில் 2.5 சதவீதத்தை கணக்கிட்டு அத்தொகையை ஜகாத்தாக வழங்கிட வேண்டும்.

    இது போலவே கால்நடைகள், விவசாய பொருட்களுக்கு விதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

    எனவே ஒருவர் இவற்றை முறையாக கணக்கிட்டு ஏழைகள், வறியவர்கள், கடனாளிகள், ஜகாத்தை வசூலிக்கவும் பங்கிடவும் நியமிக்கப்பட்ட ஊழியர்கள், பயணிகள் ஆகியோருக்கு வழங்க வேண்டும். அத்தோடு அடிமைகளை விடுவிப்பதற்கு இறை மார்க்கப் பணிகளுக்காகவும் செலவிடப்பட வேண்டும். (திருக்குர்ஆன் 9:60)

    ஜகாத்தை ஏழைகளுக்கு கணிசமாக வழங்கி வறுமையை அகற்றுவதே ஜகாத்தின் நோக்கமாக உள்ளதால் ஜகாத்தை ஓரிடத்தில் (பைத்துல்மால்) சேகரித்து வழங்கும் முறையை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

    நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலும் பின்னர் வந்த கலீபாக்களின் காலத்திலும் இம்முறை பின்பற்றப்பட்டு வந்தது.

    தனிப்பட்ட முறையில் ஜகாத் கொடுப்பதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் கூட்டு முறையில் மூலமே ஏழைகளுக்கு கணிசமாக வழங்க முடியும்.

    ஜகாத் பெற உண்மையாகவே தகுதி உடையவர்கள் யார் என்பதையும் அப்போது அறிய முடியும். அத்தோடு ஜகாத் வாங்குபவரின் சுயமரியாதையும் பாதுகாக்கப்படுகிறது.

    தொழுகையை சரியான நேரத்தில் அக்கறையோடு இறையச்சத்தோடும் நிறைவேற்றுவதை போல ஜகாத்தையும் முறையாக கணக்கிட்டு ஜகாத் பெற தகுதியானவர்களிடம் சேர்ப்பித்து விட வேண்டும். இறைவனின் பார்வையில் தொழுகையும் ஜகாத்தும் வெவ்வேறு அல்ல.

    - டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மது,
    சென்னை
    தொழுகை, நோன்பு, பாவமன்னிப்பு கோருதல், திருமறை ஓதுதல் ஆகியவற்றை உடல் வழி வணக்கங்களாக இறைவன் நமக்கு அளித்துள்ளான். உடல் வலிமை எனும் அருட்கொடைக்கு உடலின் மூலம் நன்றி செலுத்த வேண்டும். அதே வேளையில் இறைவன் அளித்துள்ள பொருள் வளத்திற்கு பொருளை வழங்கி நன்றி செலுத்த வேண்டும்.

    தொழுகை, நோன்பு, பாவமன்னிப்பு கோருதல், திருமறை ஓதுதல் ஆகியவற்றை உடல் வழி வணக்கங்களாக இறைவன் நமக்கு அளித்துள்ளான். உடல் வலிமை எனும் அருட்கொடைக்கு உடலின் மூலம் நன்றி செலுத்த வேண்டும். அதே வேளையில் இறைவன் அளித்துள்ள பொருள் வளத்திற்கு பொருளை வழங்கி நன்றி செலுத்த வேண்டும். இதற்காகக் கடமையாக்கப்பட்ட கடமைதான் ‘ஜகாத்’, ‘சதகா’ எனும் தானதர்மக் கடமைகள்.

    தானதர்மம் இரண்டு வகைப்படும். ஒன்று ‘ஜகாத்’ எனப்படுவது. இது, கட்டாயக் கடமையாகும். இரண்டாவது, ‘சதகா’ என்பது  இது உபரியான கடமையாகும்.

    ஜகாத் யார் கொடுக்க வேண்டும்? எவ்வாறு கொடுக்க வேண்டும்? யாருக்குக் கொடுக்க வேண்டும்? என்பது தெளிவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ‘சதகா’ எனும் உபரித் தொகைக்கு அளவே இல்லை.

    இஸ்லாம் அறக்கொடையை ஊக்குவித்து கஞ்சத்தனத்தை கடுமையாக சாடுகின்றது. கலீபா அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில் சிலர் ‘தொழுவோம் ஆனால் ஜகாத் கொடுக்க மாட்டோம்’ என்று கூறியபோது ‘ஜகாத் கொடுக்க மறுப்பவர்கள் மீது நான் போர் தொடுப்பேன்’ என்றார்கள் கலீபா அபூபக்கர் (ரலி) அவர்கள்.

    “உங்களுடைய செல்வங்களில், யாசிப்பவருக்கும் இல்லாதவருக்கும் உரிமை இருக்கிறது” என்ற இறைவசனம் (51:19) நமக்கு அருளப்பட்ட செல்வம் நமக்காக மட்டுமல்ல பிறருக்கும் சேர்த்தே என்று கூறுகிறது. எனவே நமது செல்வத்தில் ஒரு பகுதியை நலிவுற்ற மக்களுக்கு வழங்காவிடில் அவர்களது பொருளை நாம் அபகரித்ததாகவே கருதப்படும்.

    “செல்வம் உங்களிலுள்ள செல்வந்தர்களுக்கிடையே மட்டும் சுற்றிக் கொண்டிருக்க வேண்டாம்“ என்ற வசனம் (59:7) செல்வம் ஓரிடத்தில் தேங்கி நிற்காமல் மக்களிடையே சுழல வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

    “நபியே! மக்களுடைய பொருட்களிலிருந்து தானத்தை வசூல் செய்து அதன் மூலம் அவர்களை தூய்மைப்படுத்துவீராக” என்ற வசனம் (9:103) ஜகாத் ஒரு வரியைப் போல மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு நலிவுற்ற மக்களுக்கு கொண்டு சேர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

    “அல்லாஹ்வுடைய வழியில் தங்கள் பொருள்களைச் செலவழிப்போர்களின் செலவுக்கு உவமானம், ஒரு தானிய விதையைப் பயிரிடுவது போன்றதாகும். அதிலிருந்து ஏழு கதிர்கள் முளைக்கின்றன. ஒவ்வொரு கதிரும் நூறு தானிய மணிகளைக் கொண்டுள்ளது. (இவ்வாறு) அல்லாஹ் தான் நாடுவோருக்கு (அவர்களுடைய நற்செயல்களின் பயன்களை) பன்மடங்காக்குகின்றான்.” (திருக்குர்ஆன் 2: 261)

    தானம் கொடுப்பதால் எவரது செல்வமும் குறைந்துபோவதில்லை. தானம் கொடுப்பவருக்கு இறைவன் இம்மையிலும் மறுமையிலும் அதனை பன்மடங்காக திருப்பித் தருவான்.
    பிரார்த்தனை செய்யும் முன் நல்லறம் ஒன்றை அவசியம் செய்யுங்கள். தான தர்மம், நோயாளிக்கு உதவி, கல்வி, கற்க உதவுதல், நலிவுற்ற மக்களுக்கு உதவுதல் என்பது போன்ற நல்லறத்தை செய்துவிட்டு பிரார்த்தனை செய்யுங்கள்.
    பிரார்த்தனை செய்யும் முன் நல்லறம் ஒன்றை அவசியம் செய்யுங்கள். தான தர்மம், நோயாளிக்கு உதவி, கல்வி, கற்க உதவுதல், நலிவுற்ற மக்களுக்கு உதவுதல் என்பது போன்ற நல்லறத்தை செய்துவிட்டு பிரார்த்தனை செய்யுங்கள்.

    நீங்கள் முன்னர் செய்த நல்லறங்களை நினைவுகூர்ந்து அதன் வாயிலாக வாய்மையுடன் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

    மிகப் பணிவுடனும், நடுங்கிய உள்ளத்துடனும் பிரார்த்தியுங்கள். இறைவனின் மேன்மை, மகத்துவம், ஆற்றல் குறித்த அச்சத்தினால் உங்கள் இதயம் நடுங்க வேண்டும். தலையும் பார்வையும், குரலும் தாழ்ந்திருக்க வேண்டும். கண்கள் ஈரமாக இருக்க வேண்டும்.

    "நபியே! காலையிலும், மாலையிலும் உம் இறைவனை நினைவு கூர்வீராக. உம் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும் மெதுவான குரலிலும் (பிரார்த்தனை செய்வீராக)" என்று இறைவன் நபிகள் நாயகத்திற்கு கட்டளையிடுவதைக் கவனியுங்கள். ( திருக்குர்ஆன் 7:205)

    இறைவனிடம் நேரடியாகப் பிரார்த்தியுங்கள். இறைவனிடம் முறையிட எவருடைய துணையும் தேவையில்லை. ஏனெனில் இறைவன் நமக்கு மிக அருகில் உள்ளான். "பிடரி நரம்பைவிட சமீபமாக இருக்கின்றான்." என்று குர்ஆன் கூறுகிறது (50:16).

    "நபியே! என் அடியார்கள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்கள். நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கின்றேன். என்னை எவரேனும் அழைத்தால் அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கிறேன் (என்பதைத் தெரிவித்து விடுங்கள்) என்ற இறைவசனம் (2:186) இறைவனை நேரடியாக நெருங்க முடியும் என்பதை உணர்த்துகிறது.

    பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொள்வான் என்ற முழு நம்பிக்கையுடன் பிரார்த்தியுங்கள். பிரார்த்தித்த விஷயங்கள் நிறைவேற தாமதமானால் பிரார்த்தனை புரிதலை விட்டுவிடாதீர்கள்.

    "உங்கள் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படலாம் அல்லது இறைவன் உங்களுடைய வேறு தேவையை பூர்த்தி செய்கின்றான் அல்லது மறுமையில் வெகுமதிகளை வழங்குகின்றான்" என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்). (நூல்: ஹாகிம்)

    உங்களுக்காக மட்டுமல்ல. மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை புரியுங்கள்.

    "எங்கள் இறைவனே! எனக்கும் என் பெற்றோருக்கும், நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் மறுமையில் மன்னிப்பை அருள்வாயாக" (14:41)

    "எங்கள் அதிபதியே! எங்களையும் எங்களை விட முந்தி நம்பிக்கை கொண்டு விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக" (59:10)

    மேற்கண்ட இந்த இறைவசனங்கள் அனைவருக்காகவும் பிரார்த்திக்கும் பண்பை நமக்குக் கற்றுத்தருகிறது. எனவே நாம் செய்யும் பிரார்த்தனையிலும் பொதுநலம் தேவை.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது
    சென்னை.
    அலட்சியமாகவும், அக்கறையின்றியும், உள்ளத்திலிருந்து வெளிப்படும் பிரார்த்தனைகளை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்). (நூல்: திர்மிதி)
    இறைவனிடம் பிரார்த்திப்பதும் ஒரு வழிபாடாகும். பிரார்த்தனை வழிபாட்டின் சாரம், பிழிவு என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்). (நூல்: திர்மிதி)
    “சில குறிப்பிட்ட நேரங்களில், இடங்களில் செய்யப்படும் பிரார்த்தனைகள் உடன் அங்கீகரிக்கப்படுகின்றன”, என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

    ரமலானில் நோன்பு திறக்கும் நேரம், குர்ஆன் அருளப்பட்ட இரவு (லைலத்துல் கத்ர்) ஆகிய தருணங்களில் செய்யப்படும் பிரார்த்தனைகளும் அதில் அடங்கும்.
    ஏக இறைவனிடம் மட்டும் பிரார்த்தனையைப் புரியுங்கள். மனிதனின் காரியங்களை, தேவைகளை நிறைவேற்றும் அதிகாரமும், ஆற்றலும் அவன் வசமே உள்ளது. அவனே நமது பிரார்த்தனைகளை கேட்கும் ஆற்றல் படைத்தவனாக இருக்கின்றான். பதில் அளிக்கக்கூடியவனாக இருக்கின்றான்.

    “மனிதன் தன்னுடைய தேவைகளை அல்லாஹ்விடமே பிரார்த்திக்க வேண்டும். காலணியின் வார் பட்டை அறுந்தாலும் அந்த இறைவனிடமே கேட்க வேண்டும்” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (நூல்: திர்மிதி)

    இறைவன் தடுத்துள்ள தீமைகள், தவறான செயல்கள், பாவச் செயல்கள் ஆகியவற்றிலிருந்து உங்களைக் காத்துக் கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள். இறைவனுக்குப் பிடிக்காத செயல்களை செய்துகொண்டே இறைவனிடம் பிரார்த்தித்தால் இறைவன் எப்படி ஏற்றுக் கொள்வான்?

    “இறைவன் தூய்மையானவன். அவன் தூய வருவாய் ஈட்டுவோரின் பிரார்த்தனையைத் தான் அங்கீகரிக்கின்றான்” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்).
    நபி (ஸல்) அவர்கள் நீண்ட தூரத்தைக் கடந்து புனிதப் பயணம் செய்யும் மனிதனைப் பற்றி இவ்வாறு வருணித்துக் கூறினார்கள்: “புழுதி படிந்த தலையுடன் அந்த மனிதன் தன் இரு கைகளையும் வானத்தின் பால் உயர்த்தி “என் இறைவனே!” என்று பிரார்த்திக்கின்றான். அவனுடைய உணவும், பானமும் ஹராமான வழியில் ஈட்டப்பட்டுள்ளன. அவனுடைய ஆடையும் அவ்வாறே! அவன் ஹராமான

    (தடுக்கப்பட்ட) வழியில்தான் தன் உடலையும் வளர்த்திருக்கின்றான். இறைவரம்புகளை மீறிய இத்தகைய மனிதனுடைய துஆ (பிரார்த்தனை) எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?” (முஸ்லிம்)

    பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொள்வான் என்ற முழு நம்பிக்கையுடன் பிரார்த்தனை புரியுங்கள். மலை போல குவிந்திருக்கும் தன் பாவங்கள் பற்றி மலைப்பு கொள்ளாமல் இறைவனின் எல்லையற்ற மன்னிக்கும் தன்மை, கணக்கின்றி வழங்கும் கருணை, ஆற்றல், கொடை ஆகியவற்றில் நம்பிக்கை வைத்து பிரார்த்தியுங்கள்.

    “தன்னுடைய பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று முழு உறுதியுடன் உளப்பூர்வமாகப் பிரார்த்தியுங்கள். அலட்சியமாகவும், அக்கறையின்றியும், உள்ளத்திலிருந்து வெளிப்படும் பிரார்த்தனைகளை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்). (நூல்: திர்மிதி)

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    இறைவனிடம் மட்டுமே பாவமன்னிப்பை கோருங்கள். பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் அவனுக்கு மட்டுமே உண்டு. மனிதர்களுக்கு அவ்வதிகாரம் வழங்கப்படவில்லை.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “மனிதன் ஒரு பாவம் புரிந்தால், அவன் இதயத்தில் ஓர் கரும்புள்ளி விழுந்துவிடுகிறது. பிறகு அவன் அந்தப் பாவத்தை விட்டு விலகிவிட்டால்... அந்தப் பாவத்தை உணர்ந்து, வெட்கமும் வேதனையும்பட்டு தவ்பா - பாவமன்னிப்பை நாடினால்... ஏக இறைவனின்பால் திரும்பி ‘பாவங்களிலிருந்து தப்பி வாழ்வேன்’ என உறுதியான வாக்குறுதி அளித்தால்... ஏக இறைவன் அவன் உள்ளத்தில் ஓர் ஒளியை உருவாக்குகிறான்.
    எனது பாவங்களை இறைவன் மன்னிப்பான் என்ற உறுதியான நம்பிக்கையுடன் பாவமன்னிப்பு கோருங்கள். உங்களுடைய பாவங்கள் கடலின் நுரை அளவு இருந்தாலும் இறைவன் அவற்றை மன்னிப்பான்.

    “தங்கள் ஆன்மாக்களுக்கு கேடு இழைத்துக் கொண்ட என் அடிமைகளே! இறைவனின் கருணை பற்றி நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். திண்ணமாக இறைவன் எல்லாப் பாவங்களையும் மன்னித்துவிடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பாளனும் கருணையாளனும் ஆவான், என்ற இறைவசனம் இறைநம்பிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது.

    இறைவனிடம் மட்டுமே பாவமன்னிப்பை கோருங்கள். பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் அவனுக்கு மட்டுமே உண்டு. மனிதர்களுக்கு அவ்வதிகாரம் வழங்கப்படவில்லை. நீங்கள் ஏன் பாவம் செய்தீர்கள். பாவம் செய்ய உங்களை தூண்டியது எது? என்பவற்றை இறைவன் மட்டும் அறிவான். எனவே அவனிடமே பாவமன்னிப்பு கோருங்கள்.

    “அவனே தன் அடிமைகளின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கின்றான். அவர்கள் குற்றங்களைப் பொறுத்தருளுகின்றான். உங்கள் செயல்கள் அனைத்தையும் அறிகின்றான்” என்று குர்ஆன் (42:25) கூறுகிறது.

    பாவமன்னிப்பு கோருதலை தாமதப்படுத்தாதீர்கள். நமது வாழ்வு என்று முடிவுக்கு வரும் என்பது நமக்குத் தெரியாது. நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்: “இறைவன் இரவில் தன் கையை நீட்டுகின்றான்,  மனிதன் பகலில் பாவமிழைத்த பின் இரவில் இறைவன்பால் மன்னிப்புத் தேடி மீளுவதற்காக. மேலும், இறைவன் பகலில் தன் கையை நீட்டுகின்றான்.

    மனிதன் இரவில் பாவமிழைத்த பின் பகலில் இறைவன்பால் மன்னிப்புத் தேடி மீளுவதற்காக” (முஸ்லிம்) இறைவனுக்கு அதிக மகிழ்ச்சியை தருவது பாவமன்னிப்பே. அதற்குப் பெயர் தவ்பா. அதன் பொருள் திரும்புதல், மீளுதல் ஆகும். தவறிழைத்த மனிதன் இறைவனிடமிருந்து விலகிச் சென்றுவிட்டான். பின்னர் மனம் திருந்தி பாவமன்னிப்புக் கோருவதால் இறைவனிடம் மீளுகின்றான். அதனைக் கண்டு இறைவன் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றான். எனவே பாவமிழைத்தவர்கள் நம்பிக்கையுடன் படைத்த இறைவனிடம் திரும்புங்கள்.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    குர்ஆனை சாதாரண புத்தகத்தைப் போன்று வாசிக்காமல், பொருள் உணர்ந்து, சிந்தனை செய்து, பகுப்பாய்வு செய்தால் மட்டுமே குர்ஆனின் முழுப் பலனையும் பெற முடியும்.
    குர்ஆன் யாரால் அருளப்பட்டது? எதற்காக அருளப்பட்டது? குர்ஆனை எப்படி படிக்க வேண்டும்? இத்தகைய கேள்விக்கு குர்ஆனே விடை அளித்து குர்ஆனை அணுகும் முறையை நமக்குக் கற்றுத் தருகிறது. குர்ஆன் என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்படுவது” என்று பொருள். ஓதி உணர்வதற்காக அருளப்பட்டது குர்ஆன்.
    குர்ஆன் மனித இனத்திற்கு ஒரு வழிகாட்டி நூலாகும். (2:2)

    இது உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையாகவே திகழ்கிறது. (68:52)

    நேர்வழியை தெளிவாக அறிவிக்கக்கூடியது, சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியது. (2:185)

    மனிதர்களை இருளிலிருந்து ஒளிக்கு கொண்டு வரும் நூல். (5:15)

    கொடுமைக்காரர்களுக்கு எச்சரிக்கை, நல்ல நடத்தை கொண்டவர்களுக்கு நற்செய்தி (46:12)

    இறைவனிடமிருந்து வந்துள்ள தெளிவான சான்று (6:104)

    இறைநம்பிக்கையாளர்களின் (இதய நோய்க்கு) நிவாரணமாகவும் அருளாகவும் உள்ளது. (17:82)

    எனவே குர்ஆன் என்பது மனித குலம் முழுமைக்கும் ஒரு வழிகாட்டியாக அருளப்பட்ட நூலாகும். மனிதன் வாழ்வில் சந்திக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள், ஆன்மிகம், அரசியல், பொருளாதாரம், சட்டம், நீதி என எல்லாத் துறைகளுக்கும் தேவையான அடிப்படைகளை கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனின் போதனைகளின்படி வாழ்ந்து காட்டி ஒரு சமூக அமைப்பையும் நிறுவினார்கள். குர்ஆனுக்கு விளக்கமாக நபிகள் நாயகத்தின் வாழ்வும், வாக்கியமும் அமைந்துள்ளது. இறைவேதத்தையும் நபிகளாரின் வாழ்வையும், வாக்கையும் வாசிக்கும்போது ஒரு தெளிவான வழிகாட்டுதல் கிட்டும். எனவே குர்ஆனை ஆழ்ந்து வாசிக்குமாறும், சிந்திக்குமாறும் மனிதர்களுக்கு குர்ஆன் கட்டளையிடுகின்றது.

    “இவர்கள் குர்ஆனை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அவர்களின் இதயத்தின் மீது பூட்டுகள் போடப்பட்டிருக்கின்றனவா?” (47:24)
    “இது பாக்கியம் நிறைந்த வேதமாகும். மக்கள் இந்த வசனங்களை சிந்திக்க வேண்டும். அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினை பெறவேண்டும் என்பதற்காக (அருளப்பட்டது)” (38:29)

    சிந்திக்க தூண்டும் இதுபோன்ற ஏராளமான வசனங்கள் திருக்குர்ஆனில் உள்ளன. எனவே குர்ஆனை சாதாரண புத்தகத்தைப் போன்று வாசிக்காமல், பொருள் உணர்ந்து, சிந்தனை செய்து, பகுப்பாய்வு செய்தால் மட்டுமே குர்ஆனின் முழுப் பலனையும் பெற முடியும். அப்போது தான் அது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமையும்.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    முஸ்லிம்களுக்கு மக்காவில் கிடைத்த வெற்றி, மூளையை மழுங்கச் செய்த சிலை வணக்கக் கலாச்சாரத்தை வேரோடு கலைந்து விட்டு, அவர்களின் சந்தேகங்கள் நீங்கி, இஸ்லாமை ஏற்றுக் கொள்ள விரைந்தனர்.
    முஸ்லிம்களுக்கு மக்காவில் கிடைத்த வெற்றி, மூளையை மழுங்கச் செய்த சிலை வணக்கக் கலாச்சாரத்தை வேரோடு கலைந்து விட்டு, அவர்களின் சந்தேகங்கள் நீங்கி, இஸ்லாமை ஏற்றுக் கொள்ள விரைந்தனர்.

    ஜகாத் பொருட்களை ஏழை எளியோருக்குப் பங்கிட்டு வழங்கிய பின்பு மீதி இருப்பதை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து ஆலோசனை கேட்டனர் தஜீப் குழுவினர். அப்படியே நபி(ஸல்) அவர்களுடன் சில காலம் தங்கி மார்க்கக் கல்வியைக் கற்றனர். கற்றுக் கொண்ட விஷயத்தை அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் எழுதியும் கேட்டனர். அதன்பின் அங்கிருந்து புறப்படும்போது அவர்களின் அடிமையொருவர், நபி (ஸல்) அவர்களிடம் தன்னை அல்லாஹ் மன்னித்து, தன் மீது கருணை காட்டி உள்ளத்தால் சீமானாக்க வேண்டுமென்று தனக்காகப் பிரார்த்திக்கும்படி கேட்டுக் கொண்டார். நபி(ஸல்) அவர்களும் அவ்வாறே அவருக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள்.

    தய் குழுவினரை சந்தித்தபோது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை அழகிய முறையில் எடுத்துக் கூற, அனைவரும் முஸ்லிமானார்கள். “ஒருவரைப் பற்றி என்னிடம் உயர்வாகப் பேசப்படும். ஆனால், அவர் என்னை நேரடியாகக் காணும் போது பேசப்பட்டதை விடக் குறைவாகவே அவரைப் பார்த்திருக்கிறேன். எனினும், ஜைதைப் பற்றி என்னிடம் உயர்வாகப் பேசப்பட்டது. என்றாலும் ஜைதை நேரடியாகக் காணும் போது அவரைப் பற்றிக் கூறப்பட்டது எனக்குக் குறைவாகவே பட்டது. எனவே, “’ஜைது அல் கைர் - சிறந்த ஜைது’ என நான் பெயரிடுகிறேன்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

    இவ்வாறு பல குழுக்கள் மதீனா வந்து நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துச் சென்றனர். முழு அரபியத் தீபகற்பத்திற்கும் மதீனாவே தலைநகராக மாறியது. ஆனால் புதிதாக இஸ்லாமை ஏற்றவர்களில் சிலர் உண்மையில் இஸ்லாமை நேசித்து ஏற்கவில்லை, தங்களது தலைவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்பதற்காக மட்டுமே இவர்கள் இஸ்லாமை ஏற்றனர். ஆகையால் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் கொள்ளையடித்தனர், பல்வேறு குற்றங்களைப் புரிந்தனர்.

    இவர்களைப் பற்றித் திருக்குர்ஆனில் “காட்டரபிகள் நிராகரிப்பிலும் நயவஞ்சகத்திலும் மிகவும் கொடியவர்கள்; அல்லாஹ் தன்னுடைய தூதர் மீது அருளியிருக்கும் வேதத்தின் வரம்புகளை அவர்கள் அறியாதிருக்கவே தகுதியானவர்கள். கிராமப்புறத்தவர்களில் சிலர் தர்மத்திற்காகச் செலவு செய்வதை நஷ்டமாகக் கருதுகின்றனர். நீங்கள் காலச் சுழலில் சிக்கித் துன்பம் அடைய வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார்கள்.

    ஆனால் அவர்கள் மீதுதான் கெட்டகாலம் சுழன்று கொண்டு இருக்கிறது. இன்னும், அல்லாஹ் எல்லாவற்றையும் கேட்பவனாகவும் யாவற்றையும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான். கிராமப்புறத்தவர்களில் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொள்பவர்களும் இருக்கின்றார்கள்; தாம் தர்மத்திற்காகச் செலவு செய்வது தங்களுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தையும், இறைத் தூதரின் பிரார்த்தனையும் தங்களுக்குப் பெற்றுத்தரும் என நம்புகிறார்கள்; நிச்சயமாக அது அவர்களை அல்லாஹ்வின் அண்மையில் கொண்டு சேர்ப்பதுதான்; வெகு சீக்கிரத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் பேரருளில் புகுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்”

    திருக்குர்ஆன் 9:97,98,99, அர்ரஹீக் அல்மக்தூம்

    - ஜெஸிலா பானு.
    ரமலானில் திருக்குர்ஆன் அருளப்பட்டதால் ரமலானில் அதை அதிகம் வாசிக்கிறார்கள். திருக்குர்ஆன் வந்த மாதத்தில் அதை அதிகமாக ஓதுவதுதான் திருக்குர்ஆனுக்கு தரும் மரியாதை ஆகும்.
    நோன்பிருப்பதற்கான மாதமாக மற்ற மாதங்களை விடுத்து ரமலான் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டதேன்?

    “ரமலான் மாதம் எத்தகையதென்றால் அம்மாதத்தில் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்” என்று குர்ஆன் கூறுகிறது. (2:185)

    மனிதன் இவ்வுலகில் செம்மையாக, அமைதியாக வாழ ஒரு வழிகாட்டுதல் தேவை. மனிதர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொண்டான். மனிதனைப் படைத்த இறைவனே அதற்கு தகுதியானவன். எனவே முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்களுக்கு தனது முதல் வழிகாட்டுதலை வழங்கினான். பின்னர் பல்வேறு நாடுகளில் வாழ்ந்த, பல்வேறு இறைத்தூதர்களுக்கு வழிகாட்டுதல்கள் அருளப்பட்டன.

    அரேபியாவிலுள்ள மக்காவில் பிறந்த நபிகள் நாயகம் (ஸல்) மக்காவில் நிலவிய மூடநம்பிக்கைகளை, இறைவனைப் பற்றிய தவறான கருத்துக்களை, அநீதிகள் ஆகியவற்றைப் பற்றி ஆழமாகச் சிந்தித்தார். மக்காவிற்கு அருகிலுள்ள ‘ஹிரா’ என்ற குகையில் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். அவ்வேளையில் வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) மூலம் அவருக்கு இறைவசனங்கள் அருளப்பட்டன.

    “ஓதுவீராக! (முஹம்மதே!) படைத்த இறைவனின் திருப்பெயரைக் கொண்டு! இரத்தக்கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான். ஓதுவீராக! மேலும் உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன்றியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.”(96:1-5) என்ற வசனங்களே தொடக்கத்தில் நபிகளாருக்கு அருளப்பட்ட வசனங்களாகும்.

    இது ரமலான் மாதத்தின் கடைசி பத்து தினங்களில் ஒன்றில் நடைபெற்றது. அன்றிலிருந்து இருபத்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இறைவசனங்கள் நபிகளாருக்கு அருளப்பட்டுக் கொண்டேயிருந்தன. மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் அவ்வசனங்களின் மூலம் மனித குலத்திற்கு அறிவிக்கப்பட்டது.

    அருளப்பட்ட காலத்தில், அருளப்பட்ட மொழியில் திருக்குர் ஆன் தொகுக்கப்பட்டதால் அதில் முரண்பாடுகளோ, இடைச்செருல்களோ இல்லாமல் பாதுகாக்கப்பட்ட நூலாக திகழ்கிறது.

    ரமலானில் திருக்குர்ஆன் அருளப்பட்டதால் ரமலானில் அதை அதிகம் வாசிக்கிறார்கள். முழு திருக்குர்ஆனையும் தொழுகைகளில் ஓதுகின்றார்கள். திருக்குர்ஆன் வந்த மாதத்தில் அதை அதிகமாக ஓதுவதுதான் திருக்குர்ஆனுக்கு தரும் மரியாதை ஆகும்.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    ×