search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கே.எஸ்.அழகிரி"

    தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக வந்த தகவல்கள் வடிகட்டின பொய் என கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். #TMC #GKVasan
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகளுக்காக காங்கிரஸ் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன என தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவரின் இந்த அறிக்கைக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்தன்மையுடன் செயல்படுகிறது. கட்சியின் வளர்ச்சியை பிடிக்காதவர்களின் சதி இது. பா.ஜ.க.வில் இணைவதாக வந்த செய்திகள் வடிகட்டிய பொய் என தெரிவித்துள்ளார்.

    இரு கட்சி தலைவர்கள் அறிக்கைகள் தமிழக காங்கிரஸ், தமாகா தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TMC #GKVasan
    தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன என மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க உள்ளதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகி உள்ளன.



    காங்கிரசில் வாழ்க்கையை தொடங்கியவர்கள் பாஜகவில் இணைவது தற்கொலைக்கு சமம். எனவே, கருத்து வேறுபாட்டால் தமாகாவுக்கு சென்ற தொண்டர்கள் காங்கிரசில் மீண்டும் இணைய வேண்டும். அவர்களுக்காக சத்தியமூர்த்தி பவன் கதவுகள் திறந்தே உள்ளன என தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri
    சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி இன்று பதவியேற்றுக் கொண்டார். #Congress #KSAlagiri
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு, காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என காங்கிரஸ் தலைமை கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

    மேலும், செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளார் என் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி இன்று பதவியேற்றுக் கொண்டார். முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

    இதேபோல், செயல் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்ட வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத், திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், குஷ்பு உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் செயல் தலைவர்களுக்கு நாம் முழு ஒத்துழைப்பை அளிப்போம் என மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri
    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி வரும் 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பதவியேற்கிறார். #Congress #KSAlagiri
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சாதாரண தொண்டராக இருந்த என்னை பெரியார், காமராஜர், மூப்பனார் ஆகியோர் அமர்ந்து பெருமை சேர்த்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் நியமித்த தலைவர் ராகுல்காந்திக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல, சோனியா காந்தியின் வாழ்த்துகளை பெறுவதை பாக்கியமாக கருதுகிறேன்.

    இந்தியாவின் எதிர்கால பிரதமராக ராகுல்காந்தியை அமர்த்துகிற இமாலய பணியில் தமது பங்களிப்பை செய்வதற்கு காங்கிரஸ் கட்சியினர் அல்லும், பகலும் அயராது உழைக்க வேண்டிய சூழல் இன்றைக்கு உருவாகி இருக்கிறது.

    இந்த பணியை செய்து முடிப்பதற்காக நமக்கு 100 நாட்கள் கூட இல்லை. கண் துஞ்சாது, அயராது, கடமை உணர்வோடு உழைப்பதன் மூலமே நமது வெற்றிகளைப் பெற முடியும்.

    எனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக 8-ந் தேதி மாலை 3 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பொறுப்பேற்க இருக்கிறேன். என்னோடு செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள எச்.வசந்தகுமார், கே.ஜெயக்குமார், எம்.கே.விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் பொறுப்பேற்க இருக்கிறார்கள்.

    விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் செயல்வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

    இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என அன்போடு அழைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #Congress #KSAlagiri  
    டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை, தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சந்தித்து பேசினர். #RahulGandhi #KSAlagiri
    புதுடெல்லி:

    தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் கே.எஸ்.அழகிரி, செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டு இருக்கும் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நேற்று மாலை டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள்.

    அப்போது தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், சஞ்சய் தத் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது.

    இச்சந்திப்பு குறித்து புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராகுல்காந்தியை சந்தித்து தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் பற்றி பேசினோம். தேர்தலில் எப்படி பணியாற்றுவது, கட்சி அமைப்பை எப்படி பலப்படுத்துவது என்பது பற்றி விவாதித்தோம்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை தமிழக அரசு நசுக்கி விட்டது என்று ராகுல்காந்தியிடம் கூறினோம். அரசு ஊழியர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவை வழங்கி இருப்பதாக ராகுல்காந்தி சொல்ல சொன்னார். எனவே, அரசு ஊழியர்களுக்கு எங்கள் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம்.

    நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெற வேண்டும், அதற்கான பணிகளை செய்யுங்கள் என்று ராகுல்காந்தி உத்தரவிட்டு இருக்கிறார். தேர்தலில் எங்களுக்கு 100 சதவீத வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

    கோஷ்டி பூசல் என்பதை நீங்கள்தான் (பத்திரிகையாளர்கள்) நினைவூட்டி வருகிறீர்கள். நான் கேட்பது என்னவென்றால், கருத்து வேறுபாடு இல்லாத அரசியல் இயக்கம் எங்காவது இருக்கிறதா?. சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதை கோஷ்டி பூசல் என்று சொல்ல முடியாது.

    திருநாவுக்கரசர் 2½ வருடம் தலைவராக பணியாற்றி இருக்கிறார். அவருக்கு வேறு வாய்ப்புகள் வழங்கப்பட இருக்கின்றன. காங்கிரசில் நிச்சயமாக கோஷ்டி பூசல் இல்லை. கருத்து வேறுபாடு இருப்பதில் எந்த தவறும் இல்லை.

    நாங்கள் நிதர்சனமான அரசியல் கட்சி. தேர்தலில் எங்கெல்லாம் வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ? எங்கெல்லாம் தொண்டர்கள் வேகமாக பணியாற்றுகிறார்களோ? அந்த தொகுதிகளைத்தான் கேட்போம்.

    கூட்டணிக்கு இன்னும் அதிகமான கட்சிகள் வருவார்களானால் அவர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டியிருக்கும். நாங்களும், தி.மு.க.வும் மட்டுமே கூட்டணி என்றால் பிரித்துக்கொள்ளலாம். கூட்டணிக்கு இன்னும் ஏராளமான கட்சிகள் வர விரும்புகின்றன. 4 மாநில தேர்தல் வெற்றிக்கு பிறகு தமிழ்நாட்டில் பல கட்சிகள் எங்கள் கூட்டணியல் சேர விருப்பமாக இருக்கின்றன.

    ராகுல்காந்தி இந்த மாதம் தமிழ்நாட்டுக்கு வருகிறார். தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. திருநாவுக்கரசர் தேர்தலில் போட்டியிடுவாரா? என்பது பற்றி கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.

    வருகிற 7-ந்தேதி நான் பதவி ஏற்றுக்கொள்ள இருக்கிறேன். அதற்கு முன்னதாக தலைவர்களை சந்திப்பேன். பதவி ஏற்ற பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் நிருபர்கள் “தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. சேர இருப்பதாக கூறப்படுகிறதே, அதற்கு வாய்ப்பு இருக்கிறதா?” என்று கேட்டனர்.

    அதற்கு அவர் பதில் அளிக்கையில், “கூட்டணிக்கு யார்- யார்? வருவார்கள் என்பதையெல்லாம் இப்போதே நாங்கள் சொல்லி விட்டால் நீங்கள் (பத்திரிகையாளர்கள்) சென்று தடுத்து விடுவீர்கள். அதனால் இப்போது சொல்ல முடியாது. நேரம் வரும்போது அவர்கள் வருவார்கள்” என்று கூறினார்.

    முன்னதாக டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறுகையில் ‘தமிழகத்தில் ஊழல் அற்ற, மக்களை மேம்படுத்துகிற ஆட்சியை உருவாக்குவதே எங்கள் நோக்கம்’ என்று கூறினார்.
    ×