என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஐகோர்ட்டு"
சென்னை ஐகோர்ட்டில் மீனவர்கள் நல சங்கம் சார்பில் பீட்டர் ராயன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘நடுக்கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இதுதொடர்பாக சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணிய பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக மீன்வளத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுடன் பேசி அவ்வப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1991-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட 168 துப்பாக்கி சூடு சம்பவங்களில் மொத்தம் 85 மீனவர்கள் பலியாகியுள்ளனர். 180 மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.
2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 3,033 மீனவர்களும், 393 மீன்பிடி படகுகளும் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் 29 மீனவர்களும் 177 படகுகளும் இலங்கை அரசின் பிடியில் உள்ளது.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்கவும், கச்சத்தீவை மீட்கவும் மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க இந்திய கடலோர காவல் படை, இந்திய கடற்படை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதனை படித்துப்பார்த்த நீதிபதிகள், ‘தமிழக மீனவர்கள் நடுக்கடலில் இந்திய எல்லையை துல்லியமாக கண்டறிவது கடினமான ஒன்றாகும். இலங்கை மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடிக்கத்தானே செய்கின்றனர்?’ என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், ‘இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதமாக நடுக்கடலில் நாட்டிக்கல் மைலை அளவிடும் கருவியை தமிழக மீனவர்களின் படகுகளில் பொருத்தினால் என்ன? இது இந்திய எல்லையை மீனவர்கள் எளிதாக தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும். இந்த நடவடிக்கை மேற்கொள்ளும் வரை நடுக்கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களுக்கு இந்திய கடற்படை கப்பல்கள் பாதுகாப்பாக செல்லமுடியுமா?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து மத்திய அரசு பதில் அளிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 31-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். #TNfishermen
சென்னை ஐகோர்ட்டில், ராஜேந்திரன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ‘மோட்டார் வாகன சட்டத்தின்படி, மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர், பின்னால் உட்கார்ந்து இருப் பவர் ஆகியோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அதேபோல, கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக ‘சீட் பெல்ட்’ அணிந்திருக்க வேண்டும்.
ஆனால், இந்த மோட்டார் வாகன சட்டத்தை தமிழக அரசு தீவிரமாக அமல்படுத்துவது இல்லை. இதனால், ஹெல்மெட் அணியாமல், செல்பவர்கள் விபத்தில் சிக்கி மரணமடைந்து வருகின்றனர்.
இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஏற்கனவே கட்டாய ஹெல்மெட் அணியவேண்டும் என்ற அரசாணை இருக்கும்போது, அதை ஏன் அரசு தீவிரமாக அமல்படுத்தாமல் உள்ளது? இதுபோன்ற கட்டாய ஹெல்மெட் அணிவது தொடர்பான அரசாணையை மட்டும் வெளியிட்டு விட்டு அரசு அமைதியாக இருக்க முடியாது. அதை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
பின்னர் தமிழகத்தில், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பித்த அரசாணை எந்த அளவுக்கு தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது? என்பது குறித்து தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி., போக்குவரத்து துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்டோர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். #Helmet #HighCourt
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்த இந்திரா பானர்ஜி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ஐகோர்ட்டின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக ஹூலுவாடி ஜி.ரமேஷ் நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக மும்பை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் விஜய கம்லேஷ் தஹில் ரமானியை நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தலைமை நீதிபதியாக விஜய கம்லேஷ் தஹில் ரமானி பதவி ஏற்க உள்ளார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். #KamleshTahilRamani
ஐகோர்ட்டில் ஏ.சவுந்தரராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘திருவண்ணாமலை மாவட்டம் விண்ணமங்கலம், கங்காபுரம் உள்ளிட்ட கிராமங்களில் செய்யாறு ஆற்றில் சட்டவிரோதமாக பலர் மணல் அள்ளுகின்றனர். எனவே, மணல் கொள்ளையை தடுக்க இங்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் அதிகாரிகளை ஈடுபடுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். சட்டவிரோதமாக மணல் குவாரிகள் செயல்படும் இடத்தில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த கிராமங்களில் ஜூலை 22-ந்தேதி சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டபோது எடுத்த புகைப்படங்களையும் ஐகோர்ட்டில் சமர்பித்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘மனுதாரர் புகைப்படத்தை எப்போது எடுத்தார் என்பது தெரியவில்லை. அவர் கூறும் இடங்களில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர். 2017-18-ம் ஆண்டுகளில் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட 783 லாரிகள், 1,426 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 15 லட்சத்து 44 ஆயிரத்து 405 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் அவர், ‘2016-17-ம் ஆண்டுகளில் 120 லாரிகள், 60 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.56 லட்சத்து 84 ஆயிரத்து 330 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மணல் கொள்ளையர்கள் மீது 215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆரணி, சேத்துப்பட்டு தாசில்தார்கள் இரவு-பகலாக அங்கு திடீர் சோதனையில் ஈடுபடுகின்றனர்’ என்றும் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த விளக்கத்தை பார்க்கும்போது, மனுதாரர் கூறும் இடங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது என்று தெரிகிறது. எனவே, இந்த பகுதியில் சூரியசக்தியை கொண்டு இயங்கும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடியுமா? என்பது குறித்து அக்டோபர் 1-ந்தேதிக்குள் தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர். #ChennaiHighCourt #TNGovernment
சென்னை:
தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கடிதம் கொடுத்தனர்.
இதையடுத்து கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் அந்த 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேராலும் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
இதையடுத்து இந்த வழக்கை 3-வது நீதிபதி சத்திய நாராயணன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சபாநாயகர் சார்பில் ஆரியமா சுந்தரம் ஆஜராகி வாதிட்டார்.
18 பேரும் முதல்-அமைச்சருக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்தது தீவிரமான குற்றமாகும். அவர்களது செயல் கட்சி தாவல் தடைச் சட்டத்துக்கு எதிரானது. அதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு உத்தரவிட, சபாநாயகருக்கு முழு அதிகாரம் உள்ளது என்று அவர் வாதிட்டார். இதையடுத்து முதல்-அமைச்சர் சார்பில் மூத்த வக்கீல் வைத்தியநாதன் ஆஜராகி தன் வாதத்தை தொடங்கினார்.
தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களில் இருந்து புராதன சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதில் சில சிலைகளை, சர்வதேச கடத்தல் கும்பலுடன் சேர்ந்து சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கடத்தியதாக சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், சிலைக்கடத்தல் குறித்த அனைத்து வழக்குகளையும் விசாரிக்க ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் ஒரு தனிப்படையை உருவாக்கினார்.
மேலும், கோவில்களில் உள்ள புராதன சாமி சிலைகளை பாதுகாக்க, பாதுகாப்பு அறைகளை கட்ட வேண்டும் என்பது உள்பட பல உத்தரவுகளை தமிழக அரசுக்கு நீதிபதி பிறப்பித்தார்.
ஆனால், இந்த உத்தரவுகளை தமிழக அரசு அமல் படுத்தவில்லை. இதையடுத்து தமிழக அரசுக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய பதில் மனுவில், ‘தமிழகத்தில் உள்ள 242 கோவில்களில் வருகிற 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் பாதுகாப்பு அறைகள் ஆகம சாஸ்திரங்களுடன் கட்டி முடிக்கப்படும். இதற்காக முன்னோடி திட்டமாக பந்தநல்லூர் பசுபதீஸ் வரர் கோவிலில் பாதுகாப்பு அறை கட்ட தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலமாக பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற இடங் களில் பாதுகாப்பு அறைகள் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட உள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதி, எந்த கோவில்களில் உடனடியாக பாதுகாப்பு அறைகளை அமைக்க வேண்டும் என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டார். மேலும் கோவில் சிலைகள் மாயமான வழக்கில், தொடர்புடைய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற விவரத்தையும் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். விசாரணை 2 வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. #TamilnaduGovernment #HighCourt #tamilnews
மதுரை:
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வளா கத்தை தூய்மையாக சுத்தமாக பராமரிக்கும் வகையிலும், பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்றும் வகையி லும் இன்று சிறப்பு தூய் மைப்பணி முகாம் நடந்தது.
இதில் மாநகராட்சியின் சார்பில் 75துப்புரவு பணியாளர்களும், 4 டிராக்டர்களும், 1 டம்பர் பிளேசரும், 8 டம்பர் பின்களும், 1 டிப்பர் லாரியும், 1 ஜே.சி.பி. எந்திரமும், 1 மினிரோபோவும், 1 புகை பரப்பும் ஆட்டோவும், 4 கை கொசு புகைபரப்பும் எந்திரமும் ஈடுபடுத்தப் பட்டது.
மேலும் தூய்மைப்பணிக் கான தளவாட சாமான்கள் மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை வாளிகள் பயன்படுத்தப்பட்டது.
6-வது பட்டாலியனை சார்ந்த 40 காவலர்களும், 40 ஊராட்சி பணியாளர்களும், 45 மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை வீரர்களும் நீதிமன்ற பணியாளர்களும் இந்த தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து எடுக்கும் வகையில் பச்சை மற்றும் நீல நிற குப்பைத் தொட்டிகளையும், பிளாஸ் டிக் பைகளுக்கு மாற்றாத துணிப்பைகளையும் நீதிபதிகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் செல்வம் (நிர்வாகம்), பசீர்அகமது, சுந்தர், நிஷாபானு, கிருஷ்ணவள்ளி, சுரேஷ் குமார், கலெக்டர் வீரராக வராவ், மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர், முதன்மை நகர்நல அலுவலர் சதீஷ் ராகவன், உதவி ஆணையாளர் பழனிச்சாமி, செயற் பொறியாளர் ராஜேந் திரன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் தங்கவேல், சித்திரைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிளாஸ் டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட வளாகமாக ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதனை தொடர்ந்து கடைபிடித்தும் வருகிறோம். பொதுமக்கள் அனைவரும் சுற்றச்சுழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் கேரிபைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பையை உபயோகபடுத்தவேண்டும். ஏனென்றால் பிளாஸ்டிக் பையினை பூமியில் போட்டால் பல ஆண்டு காலத்திற்கு பிறகும் அது பிளாஸ்டிக் பொருளாகவே இருக்கும். பொதுமக்கள் பிளாஸ்டிக்கி னால் ஏற்படும் தீங்கினை கருத்தில் கொண்டு முற்றிலுமாக தவிர்த்து மாற்று பொருளை உபயோகப்படுத்தவேண்டும். இயற்கை வளங்களை நாம் மதித்தால்தான் இயற்கை நம்மை மதிக்கும் என தெரிவித்தார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி, சென்னை ஐகோர்ட்டில் பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், அரசு பிளடர் ராஜகோபாலன், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பிரகாஷ், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சார்பில் வக்கீல் தொண்டன் சுப்பிரமணியன், தீபக் சார்பில் எஸ்.எல்.சுதர்சனம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அதன் விவரம் வருமாறு:-
மனுதாரர் வக்கீல்:- என்.டி.திவாரி வழக்கில், ஒருவரை மரபணு சோதனைக்கு செல்லவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, இதுபோன்ற சோதனைக்கு உத்தரவிட ஐகோர்ட்டுக்கு அதிகாரம் உண்டு. மரபணு சோதனையில் பெற்றோர் என்று நிரூபணம் ஆகவில்லை என்றால், அதனால் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதமுடியாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் கூறியுள்ளது.
தீபக் வக்கீல்:- மனுதாரர் அம்ருதாவுக்கு தற்போது 37 வயது. அவரிடம் கண்டிப்பாக ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பள்ளிச்சான்றிதழ் என்று ஏதாவது ஒரு ஆதாரமாவது இருக்கும். ஆனால் அவற்றில் ஒன்றைக்கூட தாக்கல் செய்யவில்லை. அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையை மட்டும் தாக்கல் செய்துள்ளார்.
மனுதாரர் வக்கீல்:- இவர்களை பொறுத்தவரை சந்தியாவுக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா என்ற இருவர் மட்டுமே வாரிசு. 3-வதாக பிறந்த சைலஜா என்பவரை இவர்கள் ஏற்கவில்லை. ஆனால் சந்தியாவுக்கு அவரது கணவர் இறந்த பின்னர் சைலஜா பிறந்ததால் அவரை பெங்களூருவில் வைத்து வளர்த்துள்ளார்.
அரசு பிளடர்:- சைலஜா உயிருடன் இருந்தபோது இதுபோன்ற குற்றச்சாட்டை சுமத்தியதால் அவர் மீது ஜெயலலிதா கிரிமினல் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.
மனுதாரர் வக்கீல்:- பின்னர் அந்த வழக்கை வலியுறுத்த விரும்பவில்லை என்று ஜெயலலிதா தரப்பில் கூறியதால், அந்த அவதூறு வழக்கு தள்ளுபடியாகிவிட்டது என்று கூறப்படுகிறது. சைலஜாவுக்கும், சாரதி என்பவருக்கும் திருமணம் நடந்தது. அதனால் தனக்கு பிறந்த குழந்தையை அவர்களது குழந்தையாக வளர்க்கும்படி ஜெயலலிதா ஒப்படைத்துள்ளார். அதேநேரம் இந்த உண்மையை சைலஜா சாகும்வரை அம்ருதாவிடம் சொல்லவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் சாரதி இறக்கும் தருவாயில் உண்மையை கூறியுள்ளார்.
அதன்பின்னர் தான் ஜெயலலிதா தன் தாய் என்று அம்ருதாவுக்கு தெரியவந்துள்ளது. மனுதாரரின் பிரச்சினை இரண்டு தலைமுறைக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஒரு குழந்தை யாருக்கு பிறந்தது என்று அறிவியல் தான் உறுதியான முடிவை அறிவிக்கும். சட்டம் இதுபோல அறிவிக்க முடியாது. அதனால் மரபணு சோதனைக்கு உட்படுத்தினால் தான் மனுதாரர் யாருடைய மகள்? என்று தெரியவரும். அதனால் அம்ருதா, தீபா ஆகியோரது ரத்தமாதிரிகளை கொண்டு மரபணு சோதனை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.
தீபக் வக்கீல்:- தீபக்கின் பாட்டி சந்தியா 1971-ம் ஆண்டு உயில் எழுதிவைத்துள்ளார். அதில் சைலஜாவின் பெயரே இல்லை.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன்:- சைலஜா படித்துள்ளாரா? அவர் சந்தியாவின் மகள் என்று வெளியில் ஏன் சொல்லவில்லை?
மனுதாரர் வக்கீல்:- அவர் நன்றாக படித்தவர். இந்துஸ்தான் விமான நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். பல கேள்விகள் இவர்களது வாழ்க்கையில் உள்ளது.
நீதிபதி:- ஆமாம், சைலஜா யார்? என்பதில் கேள்விக்குறி. அம்ருதா யார் மகள்? என்பதும் கேள்விக்குறி முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்திலும் கேள்விக்குறி. எல்லாவற்றிலும் கேள்விக்குறி தான்.
மனுதாரர் வக்கீல்:- அம்ருதா ஜெயலலிதாவின் மகள் என்பது உண்மை. எனவே மரபணு சோதனைக்கு உத்தரவிட வேண்டும். அதில் நிரூபிக்கவில்லை என்றால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளை மனுதாரர் சந்திக்க தயாராக உள்ளார்.
அட்வகேட் ஜெனரல்:- இந்த வழக்கு ஜெயலலிதாவின் சொத்துகளை குறிவைத்து தொடரப்பட்டுள்ளது. இதில் கூட்டுச்சதி உள்ளது. 1980-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந்தேதி அம்ருதா பிறந்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது. அதே ஆண்டு ஜூலை 6-ந்தேதி நடந்த 27-வது ‘பிலிம்பேர்‘ விருது நிகழ்ச்சியில் ஜெயலலிதா கலந்துகொண்டார். அந்த வீடியோ காட்சியை பாருங்கள். (இவ்வாறு கூறி அந்த வீடியோ காட்சியை ‘லேப்-டாப்பில்‘ நீதிபதிக்கு போட்டுக்காட்டினார்) நிறைமாத கர்ப்பிணியாக ஜெயலலிதா இல்லை. எனவே, இது முழுக்க முழுக்க பொய் வழக்கு. இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது எதுவுமே உண்மை இல்லை. அனைத்து விவரங்களும் நகைச்சுவையாக உள்ளது.
1996-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவை சந்தித்தாகவும், போயஸ் கார்டனில் அதிக நாட்கள் வசித்ததாகவும் மனுதாரர் கூறுகிறார். ஆனால் ஒரு புகைப்படம் கூடவா அவருடன் எடுத்திருக்கவில்லை? 242 வினாடிகள் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசியதாக ரசீதை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். ஆனால், அந்த போனில் ஜெயலலிதாவிடம் தான் பேசினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே, எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்.
நீதிபதி வைத்தியநாதன்:- இந்த வழக்கை பார்த்தாலே ஒரு சினிமா படம் போல் உள்ளது. ‘கிளைமாக்ஸ்’ காட்சியை நான் எழுத வேண்டும்.
இவ்வாறு கூறி விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார். #Amrutha #Jayalalithaa #tamilnews
சென்னை ஐகோர்ட்டில், திவ்யா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எனது தாயார் ஜெயந்தி, இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இலங்கையில் நடந்த போரின் காரணமாக இந்தியாவுக்கு வந்து எனது தந்தையான பிரேம்குமாரை கடந்த 1992-ம் ஆண்டு திருமணம் செய்தார். எனது தாயார் தமிழகத்தில் தான் படித்துள்ளார். அவர், இந்தியர் என்பதற்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் என அனைத்து ஆதாரங்களும் உள்ளன. பணிநிமித்தமாக இத்தாலி சென்று, அங்கிருந்து அடிக்கடி இந்தியா வந்து செல்வார். கடந்த ஜூலை 1-ந்தேதி எனது தாயார் சட்டவிரோதமாக இந்தியா வந்துள்ளதாகக் கூறி அவரை சென்னை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். எனவே விமான நிலைய அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள எனது தாயாரை விடுவித்து, மீண்டும் இத்தாலி செல்ல அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இலங்கையை சேர்ந்த ஜெயந்தியின் இலங்கை பாஸ்போர்ட் கடந்த 1994-ம் ஆண்டோடு காலாவதியாகி விட்டது. அதன்பிறகு மோசடியாக இந்தியாவில் பாஸ்போர்ட் பெற்றுள்ளார். எனவே தான் அவரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்’ என்று கூறப்பட்டிருந்தது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி டி.ராஜா, ‘ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவைகளை பெற்றுவிட்டதால் மட்டும் ஒருவர் இந்திய குடிமகன் ஆகி விட முடியாது. அவற்றை எல்லாம் அரசு அங்கீகரிக்க வேண்டும். ஜெயந்தி இலங்கை பிரஜை என்று கூறி, அந்நாட்டு அரசு அவருக்கு பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. எனவே, அவரை விடுவிக்க உத்தரவிட முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.
அனைத்து மருத்துவமனைகளிலும் ஊனமுற்ற நோயாளிகள் சிகிச்சை பெற வசதியாக சாய்தள பாதை மற்றும் தீயணைப்பு சாதனங்களை அமைக்க வேண்டும் என்று உத்தரவிடக்கோரி ஜவஹர் சண்முகம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு இதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:-
அரசு மருத்துவமனைகளில் தீயணைப்பு வசதிகளை செய்வதற்காக தமிழக அரசு ரூ.89 கோடியே 58 லட்சம் ஒதுக்கியுள்ளது. இதில் 34 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு தீயணைப்பு வசதிகளை செய்வதற்காக ரூ.37 கோடியே 3 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனைகளில் இந்த தீயணைப்பு வசதிகளை செய்ய ரூ.4 கோடியே 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு ரூ.2.9 கோடியும், கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1.57 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் சாய்தள பாதை வசதி அமைப்பதற்காக ரூ.16 கோடியே 30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. 19 அரசு மருத்துவமனைகளில் ரூ.27 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் ஜெனரேட்டர்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐகோர்ட்டு உத்தரவின்படி அமைக்கப்பட்ட குழு தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் ஆய்வு செய்தது. இதில், 1,877 மருத்துவமனைகள் தீயணைப்பு உரிமம் பெற்றுள்ளன. 538 மருத்துவமனைகள் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளன. 1,400 மருத்துவமனைகளில் தீயணைப்பு வசதிகள் இல்லை என்று தெரியவந்துள்ளது.
இதுதவிர 1,059 மருத்துவமனைகளில் சாய்தள பாதை வசதி உள்ளன. 2,023 மருத்துவமனைகளில் இந்த வசதி குறித்த திட்டமே இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் 30-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச். அரவிந்த் பாண்டியன் ஆஜராகி வாதாடுகையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் தாக்கப்பட்டனர். உயிரைப் பணயம் வைத்து பொதுமக்களை பாதுகாத்தனர்.
இது தொடர்பான வீடியோவை பார்த்தால் தூத்துக்குடி போராட்டத்தில் போலீசார் கையாண்ட விதம் சரியானது என்பது தெரியவரும் என்றார்.
உடனே நீதிபதி கிருபாகரன் கூறுகையில், அந்த வீடியோவை பொதுமக்களுக்கு போட்டுக் காட்டுங்கள், பொதுமக்கள் பார்க்கட்டும், அதன் பிறகு நாங்கள் பார்த்து என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்கிறோம். முதலில் மக்கள் உண்மையை புரிந்து கொள்ளட்டும். போலீசார் அத்து மீறினார்களா? அல்லது போராட்டக்காரர்கள் அத்து மீறினார்களா? என்பதை தெரிந்து கொள்ளட்டும். அதற்கு முன் நாம் வெளிப்படையாக எதையும் தெரிந்து கொள்ள முடியாது என்றார். #ThoothukudiProtest #Sterlite
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்