search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சக்கரத்தாழ்வார்"

    சக்கரத்தாழ்வாரை வழிபடும்போது, கீழ்கண்ட ஸ்ரீ சுதர்சன கவசத்தை மனதுக்குள் சொல்லி, தியானித்தால் அவரது அருளை எளிதில் பெறலாம்...
    முழங்கால் வரையில் நீண்ட கைகளை உள்ள வரும் தாமரைத்தளம் போன்ற நீண்ட கண்களை உடைய வரும் எப்போதும் மலர்ந்திருக்கும் பரிசுத்தமான மலர்ச்சியைக் கொண்டவரும் சியாமள வண்ணரும்
    கத்தி, சுதை, சங்கு, வில், அம்பு ஆகியவற்றினைப் பெற்றிருப்பவரும்
    உதாரமான உருவத்தை உடையவரும்
    ஸ்ரீ மகாலட்சுமியுடன் கூடியவரும்
    ஆதிசேஷனைக் குடையாகப் பெற்றவருமான ஸ்ரீ மகாவிஷ்ணுவின் திருக்கரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசுதர்ஸனர் என்ற பெயரைக் கொண்ட ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை நான் வணங்கி வழிபாடு செய்கின்றேன்.
    சக்கரத்தாழ்வாரின் 16 கரங்களிலும்... சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், சமமுகாக்னி, கத்தி, வேல், சங்கு, வில், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதாயுதம், உலக்கை, சூலம் ஆகிய 16 ஆயுதங்கள் உள்ளது.
    திருமாலிருஞ்சோலை என்று ஆழ்வார்களால் மங்கள சாசனம் செய்யப்பட்ட, உலகப் புகழ் வாய்ந்த திவ்விய தேசம் அழகர் மலை. இங்கே மூலவர், ஸ்ரீபரமஸ்வாதி ஸ்ரீசுதர்சனம் எனும் சக்கரத்துடனும், பாஞ்ச சன்யம் எனும் சக்கரத்துடனும், கௌமோதகீ எனும் கதாயுதத்துடனும், நந்தகம் என்ற வாளுடனும் சார்ங்கம் எனும் வில்லுடனும் காட்சியளிக்கிறார்.

    இதை சேவித்த பீஷ்மாச்சார்யா, சங்க சக்ர கதா கட்சி சார்ங்கதந்வா கதாதர எனக் கள்ளழகரை மங்களாசாசனம் செய்கிறார். ஆயினும், எவரால் எப்போது பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்று அறிய முடியாதவண்ணம், மிகப் பழைமையானவராகத் திகழ்கிறார் இந்தச் சக்கரத்தாழ்வார். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாதுகாப்பு கருதி, மலையிலிருந்த ஸ்ரீசக்கரத்தாழ்வாரை அழகர்கோவிலின் உட்புறம் 3-ஆம் பிராகாரத்தில் தாயார் சந்நிதிக்குப் பின்புறம் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

    ஜ்வாலா கேசம், த்ரிநேத்திரத்துடன் திகழும் இவரின் 16 கரங்களிலும்... சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், சமமுகாக்னி, கத்தி, வேல், சங்கு, வில், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதாயுதம், உலக்கை, சூலம் ஆகிய 16 ஆயுதங்கள். இவரைச் சுற்றி ஷட்கோணம். இந்த அறுகோணத்தைச் சுற்றிலும் பீஜாஷர தேவதையர், வேறெங்கும் காண்பதற்கரிய தரிசனமாக பிம்ப ரூபத்தில் காட்சி தருகின்றார்.

    மனம், வாக்கு, காயம் என்று திரிகரண சுத்தியுடன் ஸ்ரீசுதர்ஸனரைப் பிரார்த்தித்து, நெய் விளக்கேற்றி வழிபட்டு வந்தால், நினைத்தது யாவும் கைகூடும்.

    மேலும் புதன், சனிக்கிழமை ஆகிய விசேஷ நாட்களிலும், முடிந்தால் தினமுமேகூட ஸ்ரீசுதர்சன மூர்த்தியை சேவித்து, பழ வகைகள், பானகம், தயிர்சாதம், உளுந்து வடை முதலானவற்றை நிவேதனம் செய்து, பக்தர்களுக்கும் விநியோகித்து வழிபட்டு வரலாம். 
    திரேதா யுகத்தில் இராமாவதாரத்தின் போது சக்கரத்தாழ்வாரே பரதனாக அவதாரம் எடுத்தார். இது குறித்த வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திரேதா யுகத்தில் இராமாவதாரத்தின் போது சக்கரத்தாழ்வாரே பரதனாக அவதாரம் எடுத்தார். அவரையும் பரதாழ்வார் என்றே அழைக்கிறோம். இறைவன் எதைத் தந்தாலும் அது நல்லதுக்கே என்று ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் பரதனிடம் இருந்தது. ஒரு மாவீரனுக்கான அடையாளம் அது. இராமன் மேல் அசைக்க முடியாத பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருந்தான் பரதன்.

    ஆனால் இராமனே சொன்னால் கூட, அறம் என்று அவன் நினைத்ததை, பரதன் ஒரு போதும் விலக நினைக்கவில்லை. இராம பக்தியையும் விஞ்சி நிற்கிறது அவனின் அறத்தின் மேல் கொண்ட பிடிப்பு.

    அரசு வேண்டாம். தாய் கூட வேண்டாம். இந்த இடத்தில் இராமன் ஒன்றே பிராதானம் என்று நினைக்கிறான். உன் தந்தை தயரதன் இறந்து போனான் என்று கைகேயி பரதனிடம் கூறினாள். அதைக் கேட்ட பரதன் துக்கப் படுகிறான். தான் பெற்ற வரங்களினால் தயரதன் இறக்கவும், இராமன் காடு போக நேர்ந்ததையும் கைகேயி சொல்லக் கேட்ட பரதன் அவளை பலவாறாக வைது தீர்க்கிறான். அழுது புலம்புகிறான். அறம் பிறழ தானும் ஒரு காரணம் என்று உலகம் சொல்லுமே என்று வருந்துகிறான்.

    பரதன், அண்ணனிடம் நீங்கள் வந்து முடிசூட்டி ஆட்சிபுரிய வேண்டும் என்று மன்றாடி கேட்கிறான். இராமனோ தந்தை சொல்லை தன்னால் மீற முடியாது, பதினாலு ஆண்டு வனவாசம் புரிய வேண்டும் என்ற ஆணையை தான் கைவிடக்கூடாது என்கிறார்.

    பதினாலு ஆண்டுகளை பதினாலு நாட்களாகக் கழித்து விட்டு வந்து அரசாட்சியை எடுத்துக் கொள்கிறேன் நீ அயோத்திக்குப் போய் கடமையைச் செய் என்கிறார். தேவர்கள் அசீரியாக இராமர் வனவாசம் புரிதல் வேண்டும் என்று கூறுகிறார்கள். திரும்பி வர பதினாலு ஆண்டுகளுக்கு மேல் ஒரு நொடி அதிகம் ஆனாலும் உயிர் தியாகம் செய்வேன் என்று பரதன் சொல்கிறான். கொள்கைக்கு முன் உயிரை துச்சமெனக் கருதுகிறான் மாவீரன் பரதன். எம்பிரானுடைய பாதுகைகளைப் பெற்றுக் கொண்டு பலமுறை இராமபிரானைத் தொழுது அழுது புறப்படுகிறான் பரதன்.

    அயோத்திக்கே செல்லாமல், அருகில் நந்திக் கிராமத்தில் மணி மண்டபம் அமைத்து, இராமனுடைய பாதுகைகளை வைத்து, அப்பாதுகைகளுக்கு முடிசூட்டி வழிபட ஆரம்பிகிறான் பரதன். தென் திசையையன்றி வேறு திசையை நோக்காமல் பொறி புலன்களை அவித்து உப்பில்லாத கஞ்சியைப் பருகி, இராமனின் பாதுகைகளுக்கு தினந்தினம் ஆயிரம் மந்திரங்களால் அர்ச்சனை புரிந்து இடையறாத இராம பக்தியுடன் தவநெறியில் இருந்தான் பரதன். இலங்கை வேந்தன் இராவணனை வதம் செய்த பின்னர் இராமபிரான் சீதாதேவியுடன் அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வழியில் பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில் முன்பே வாக்குக் கொடுத்திருந்தபடியால் அனைவரும் தங்கினார்கள்.

    இதற்கிடையில் குறித்த நாளில் இராமபிரான் அயோத்திக்கு வராத காரணத்தால் முன்பு கூறியது போல் பரதன் தீயில் விழுந்து உயிரை விட முற்படுகிறான். இதுவும் மாவீரனுக்குரிய ஒரு செயல்! அப்போது இராமனால் அனுப்பப்பட்ட அனுமன், பரதனை தடுத்து தான் கொண்டு வந்திருந்த மோதிரத்தை காட்டுகிறான்.

    இதைக்கண்டு மகிழ்ந்த பரதன், சத்ருக்கனன் ஆகியோர் இராமனை அழைத்து செல்வதற்காக அனுமனுடனே பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்துக்கு செல்கின்றனர்.
    இராமனை உயர்த்திக் காட்ட வந்த பல பாத்திரங்களுள் பரதன் மிக முக்கிய பங்கை வகிக்கிறான். இலக்குவன் இராமன் கூடவே இருக்கும் பேற்றினைப் பெற்றான். ஆனால் பரதனோ அவப் பெயரையும் சுமந்து, இராமனையும் பிரிந்து பதினாலு ஆண்டுகள் தவ வாழ்க்கையை வாழ்ந்தான்.

    அவனின் ஒவ்வொரு செயலும் இராமனைப் பெருமை படுத்துவதாகவே அமைந்தது. இராமன் பட்டாபிஷேகம் பின்னொருநாளில் தான் வந்தது. ஆனால் அதற்கு முன்பே இராமனின் திருவடிகளைத் தொட்ட பாதுகைக்கு அளப்பறியா பெருமை சேரும்படி பாதுகா பட்டாபிஷேகத்தை நிகழ்த்தியவன் பரதன். க்கரத்தாழ்வாராகிய பரதாழ்வாரின் புகழ் இராமன் புகழ் இருக்கும் காலம் வரை இதனால் இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
    பாரதப் போரில் சுதர்சனத்தின் சக்தியை உலகுக்குப் புரிய வைத்தார் பெருமாள். இது குறித்த ஆன்மிக கதையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஒரு முறை துர்வாச முனிவர் திருமாலை நேரில் பார்க்க வேண்டும் என்று தவம் இருந்தார். இதை அறிந்த நாரதர், என்ன துர்வாசரே! எதற்காக திருமாலைப் பார்க்க இவ்வளவு கடுந்தவம் செய்கிறீர்கள்? என்று கேட்டார்.

    உலகத்திற்குப் பேரழிவு வரும் என்று என் மனம் சொல்கிறது. அதைத் தடுக்க வேண்டும். அதை திருமாலால் மட்டுமே செய்ய இயலும். அதனால்தான் அவரைக் காண தவம் செய்கிறேன் என்றார்.

    உடனே நாரதர், முனிவரே, திருப்பாற்கடலில் திருமால் ஓய்வில் உள்ளபோது இது போன்ற பணிகளை சுதர்சனரே செய்துவிடுவார் எனக் கூறி, சுதர்சனரை நினைத்து வேண்டினார். உடனே நாரதர்முன் தோன்றிய சுதர்சனர், என்ன நாரதரே! ஏன் என்னை நினைத்தீர்கள்? என்று வினவினார்.

    நடந்ததை நாரதர் விளக்கமாகச் சொன்னார். துர்வாசரைப் பார்த்த சுதர்சனர், என்னை விட ஆற்றல் மிக்க இவரே அதைச் செய்யட்டுமே என்று துர்வாசரை இகழ்ந்து பேசினார். உடனே கோபம் கொண்ட துர்வாசர், முன்பு என்னைக் கொல்வதற்காக வந்தார். இப்பொழுது என்னை இகழ்ந்து பேசிவிட்டார். அதனால் பொன்னிறமான சுதர்சனர் கறுப்பாக மாறட்டும் என்று சாபமிட்டார்.

    கோபம் கொண்ட சுதர்சனர் முனிவரைத் தாக்கச் சென்றார். உடனே திருமால் சுதர்சனரைத் தடுத்து நிறுத்தி, துர்வாசர் கொடுத்த சாபம் ஒருநாள் பலிக்கும் என்று கூறினார். அதுபோலவே பின்னாளில் நடந்தது.

    பாரதப்போரில் அர்ஜுனன் மகன் அபிமன்யுவை துரியோதனின் கூட்டத்தார் சூழ்ச்சி செய்து பத்ம வியூகத்தில் சிக்க வைக்க அவனை ஜெயத்ரதன் கொன்றான். இந்தச் செய்தியைக் கேட்ட அர்ஜுனன் கதறி அழுது, நாளை சூரியன் மறைவதற்குள்ளாக ஜெயத்ரதனைக் கொன்றுவிடுவேன். இல்லையென்றால் நானே தீயில் இறங்கி உயிரை விடுவேன் என்று கண்ணன் முன் சபதம் செய்தான்.

    மறுநாள் மிகவும் உக்கிரமாக போர் நடந்துகொண்டிருந்தது. அர்ஜுனன் ஜெயத்ரதனைத் தேடினான். அவன் எங்கும் காணாமல் போக, மாலை நேரம் நெருங்குவதை உணர்ந்த அர்ஜுனன், தீயில் இறங்க எல்லா ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னான்.

    அப்போது அர்ஜுனனின் தேரில் சாரதியாக இருந்த கண்ணன் தனது சக்கராயுதத்தை எடுத்து சூரியனை நோக்கி எறிந்தார். சுதர்சனச் சக்கரம் சூரியனை மறைத்து பிரபஞ்சத்தை இருளடையச் செய்தது. இருள் சூழ்ந்ததைப் பார்த்த ஜெயத்ரதன் வெளியில் வந்து, அர்ஜுனன் இறந்துவிடுவான் என்று மகிழ்ச்சியில் இருந்தான்.

    கிருஷ்ணர் இதைப் பார்த்து தனது சக்ராயுதத்தை திரும்புமாறு கூறினார். சூரியன் தன் கதிர்களை பிரபஞ்சத்தின்மீது பரவவிட்டான். உடனே கிருஷ்ணர் அர்ஜுனனைப் பார்த்து, இதோ ஜெயத்ரதன் அவன்மீது அம்பை எறி என்று கூறினார்.

    அர்ஜுனன் அம்பை எய்தவுடன் தலை தனியாகி அவன் தந்தை மடியில் விழுந்து, ஏற்கெனவே உள்ள சாபத்தின்படி இருவரும் தலை வெடித்து இறந்தார்கள். பாரதப் போரில் சுதர்சனத்தின் சக்தியை உலகுக்குப் புரிய வைத்தார் பெருமாள்.
    மகா விஷ்ணு எடுத்த அவதாரங்கள் அனைத்தும் போற்றுதலுக்கு உரியவை. பகவான் எந்த அவதாரம் எடுத்தாலும், அப்போது அவர் தாங்கியுள்ள ஆயுதங்களும் முக்கியமான இடம் பெற்றுவிடும்.
    உண்மையான பக்தர்களுக்கு சதாசர்வ காலமும் அபயம் அளிக்கும் ஸ்ரீதர்சன சக்கரம், துஷ்டர்களை வதம் செய்யக்கூடியது.

    இதற்காக மகா விஷ்ணு எடுத்த அவதாரங்கள் அனைத்தும் போற்றுதலுக்கு உரியவை. பகவான் எந்த அவதாரம் எடுத்தாலும், அப்போது அவர் தாங்கியுள்ள ஆயுதங்களும் முக்கியமான இடம் பெற்றுவிடும்.

    மகா விஷ்ணுவின் ஒவ்வோர் அவதாரத்திலும் ஸ்ரீசுதர்சனரும் உடன் வந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

    வராக அவதாரத்தின் போது ஹிரண்யாட்சன் என்னும் அசுரனை அழிக்க வராகத்தின் மூக்குப் பகுதியில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார். பக்த பிரகலாதனைக் காப்பாற்ற, நரசிம்ம அவதாரம் எடுத்து, ஹிரண்யகசிபுவை அழித்தபோது, நரசிம்மரின் கை நகங்களாக இருந்தவர் ஸ்ரீசுதர்சனர்.

    மகாவிஷ்ணு, ராம அவதாரம் எடுத்தபோது அவரது வில்லில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார். (பரதனாக வந்தவர் ஸ்ரீசுதர்சனர் என்றும் சில புராணங்கள் சொல்கின்றன).
    பரசுராமர் அவதாரத்தின் போது அவரது ஏர்க் கலப்பையின் சக்தியாக ஸ்ரீசுதர்சனர் இருந்தார்.

    கிருஷ்ண அவதாரத்தின் போது நேரடியாகவும், மறைமுகமாகவும் இருந்து நீதி நிலைக்கப்பாடுபட்டார் ஸ்ரீசுதர்சனர். பவுண்ட்ர வாசுதேவன், சிசுபாலன், ஜெயத்ரதன் போன்றோரை அழிப்பதற்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு உதவியது ஸ்ரீசுதர்சனரே.

    கஜேந்திர மோட்சம் கதையிலும் ஒரு பக்த யானைக்கு உதவ வந்தது ஸ்ரீசுதர்சனர்தான்.

    கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னிதி எழுப்புகிறார்கள். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை ‘சக்கரத்தாழ்வார்’ என்பர். பக்தர்களின் துன்பம் தீர்க்க திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது. சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக நீங்கும் என்பது ஐதீகம். பக்தனான பிரகலாதனைக் காக்க திருமால் நரசிம்மராக அவதரித்தார். தாயின் கருவில் இருந்து வராததால், இந்த அவதாரத்தை ‘அவசரத் திருக்கோலம்’ என்பர்.

    ‘நாளை என்பது நரசிம்மனுக்கு கிடையாது’ என்று குறிப்பிடுவர். துன்பத்தில் இருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன் உண்டாக சக்கரத்தையும், நரசிம்மரையும் ஒருசேர வழிபடுவது சிறப்பு. இதன் அடிப்படையில் கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னிதி எழுப்புகிறார்கள்.

    திருமால்பூர் சென்று வணங்கி வழிபட்டபின், சக்கரத்தாழ்வார் வழிபாட்டினை இருபத்தேழு நாட்கள் செய்தால் வாழ்வில் நலம் பல பெறுவார்கள்.
    காஞ்சீபுரத்தில் இருந்து அரக்கோணம் - திருத்தணி செல்லும் சாலையில் திருமால் பூர் ஊர் இருக்கின்றது.

    இறைவனை நோக்கி, திருமாலானவர் ஆயிரத் தெட்டு நாட்கள் பூஜிக்க விரும்பினார். அதற்கான பொருத்தமான இடம் தேடி, இறைவனைப் பூஜித்த இடம் திருமால்பூர் ஆகும். தினம், திருக்குளத்தில் நீராடி, தினம் ஒரு தாமரை மலரைக் கொண்டு பூஜித்து வந்தார். தன் மீது, உண்மை பக்தி கொண்டு பூஜிக்கின்றாரா என்று சோதிக்க விரும்பிய சிவபெருமான், திருமால் கொய்து வந்த ஆயிரத்தெட்டாம் மலரைக் காணாமல் செய்து விட்டார்.

    பூஜை வேளையில் , பூஜிக்க வேண்டிய மலர் காணாமல் போக, கண நேரமும் தாமதியாது, திருமால் தன் கண்களையே தாமரை மலராக எண்ணி, ஒரு கண்ணை எடுத்து பூஜித்தார்.

    தரிசனமளித்த இறைவன், திரும்ப கண்களை அளித்தார். தாமரை மணாளனுக்கு, கமலக் கண்ணன் எனும் திருப்பெயரையும் வழங்கி, தன்னிடம் சக்கராயுதம் பெறவே, இப்பூஜை என்பதனை உணர்ந்து சக்கராயுதம் எனப்படும் சுதர்சன சக்கரத்தை வழங்கினார்.

    இந்த ஆலயத்து இறைவனை வழிபட, இருபத்தேழு நட்சத்திரக் காரர்களால், பட வேண்டிய துன்பங்கள் கொடூரமானதாக இல்லாமல், களைந்தெறியும் சிறப்புமிக்க ஆலயம் எதிரியால் மிகவும் துன்பப்படுவோரும், கண் கலங்கி எதிரியை வெல்ல முடியாமல் அவதியுறுவோரும், இந்த ஆலயத்துக்கு வந்து பரிகார பூஜித்தால், நலம் பெறுவார்கள்.

    தேங்காய் , ஆறு வாழைப் பழம், ஊது வத்தி, மஞ்சள் சாமந்திப் பூ-முல்லைப் பூ கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் பிறகு, இறைவனை வணங்கும் திருமாலிற்கும் அர்ச்சனை செய்தல் வேண்டும். அதன் பின்பாக, திருமாலின் முன்பாக உள்ள நந்திகேசுவரரின் முன்பாக, ஒன்பது நெய் தீபங்களை, ஒரு நெய் அகல் தீபங்கொண்டு ஏற்றி, ஒருவரையும் இனி எதிரியாய் நினைத்து கெடுதல் மறந்தும் செய்ய மாட்டேன்.

    எந்த எதிரியும், என் சொல்லாலும், செயலாலும், புதியதாக உருவாகாமலும், உருவாக்கிக் கொண்ட எதிரியாலும் துன்பம் நேராதிருக்க அருள வேண்டுமென்ற கோரிக்கை வைக்க வேண்டும். திருமால்பூர் சென்று வணங்கி வழிபட்டபின், சக்கரத்தாழ்வார் வழிபாட்டினை இருபத்தேழு நாட்கள் செய்தால் வாழ்வில் நலம் பல பெறுவார்கள். 
    எதிரிக்கு எதிரியாக விளங்கி, பக்தர்களுக்கு சந்தோஷத்தை தரும் சக்கரத்தாழ்வாரை, அவரது ஜெயந்தி நாளில் விரதம் இருந்து வழிபட்டு பலமும் வளமும் பெறுவோமாக!
    மகாவிஷ்ணு தன்னுடைய நான்கு கரங்களிலும் சங்கு (பாஞ்சசன்யம்), சக்கரம் (சுதர்சனம்), கதை (கவுமோதகீ), வாள் (நந்தகம்) ஆகியவற்றையும், தோளில் வில்லையும் (சாரங்கம்) ஆயுதங்களாகத் தரித்திருப்பார். இந்த ஆயுதங்கள் அவர் இட்ட பணியை செய்யக்கூடிய சர்வ வல்லமை பொருந்தியவை.

    பன்னிரு ஆழ்வார்களில் திருமழிசை ஆழ்வார் சக்கரத்தின் அம்சமாகவும், பொய்கையாழ்வார் சங்கின் அம்சமாகவும், பூதத்தாழ்வார் கதையின் அம்சமாகவும், பேயாழ்வார் வாளின் அம்சமாகவும், திருமங்கையாழ்வார் வில்லின் அம்சமாகவும் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

    ஆனால் பெரும்பாலான கோவில்கள் மற்றும் திவ்யதேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில் தான் பெருமாள் காட்சியளிப்பார். ‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’ என்று திருப்பாவையில் திருமாலை பாடுகிறார் ஆண்டாள். சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையில் இடம் பெற்று இருப்பதே ஸ்ரீசக்கரம். ஆனால் சில ஆலயங்களில் மாறுபட்டு அமைந்திருப்பதும் உண்டு. திருக்கோவிலூர் மூலவர் மற்றும் பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்திலும் இடக்கையில் ஸ்ரீசக்கரம் காட்சி அளிக்கிறது.

    சிவாலயங்களில் சிவனை பார்த்தவாறு நந்தியம்பெருமான் இடம் பெற்றிருப்பது போல, வைணவ ஆலயங்களில் பெருமாளுக்கு நேராக பெருமாளைப் பார்த்தவாறு சக்கரத்தாழ்வார் அருள் பாலிப்பதைக் காணலாம். இவர் வேறு யாருமல்ல, பெருமாளின் கரங்களில் இருக்கும் ஸ்ரீசக்கரமே ‘சக்கரத்தாழ்வார்’ என்னும் திருநாமம் கொண்டு அருள்பாலிக்கிறார். இது தவிர பெருமாளின் கருவறை திருச்சுற்றிலும் இவர் தனி சன்னிதியில் இடம் பெற்றிருப்பார்.

    திருமாலை எப்போதும் தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேஷனை ‘அனந்தாழ்வான்’ என்றும், வாகனமான கருடனை ‘கருடாழ்வார்’ என்றும், நம்மாழ்வார் ஞானம் பெற்ற புளியமரத்தை ‘திருப்புளியாழ்வான்’ என்றும், மகாவிஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்களில் முதன்மையான சக்கரத்தை ‘திருவாழிஆழ்வான்’ என்னும் ‘சக்கரத்தாழ்வான்’ என்றும் வைணவ சாஸ்திரங்களும், சில்பரத்தினம் என்ற நூலும் தெரிவிக்கின்றன.

    சக்கரத்தாழ்வார் என்ற பெயரைத் தவிர, சுதர்சனர், சக்கரபாணி, சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் உள்ளிட்ட பல்வேறு பெயர்களாலும் இவர் அழைக்கப்படுகிறார். இவர் எட்டு (ஸ்ரீசுதர்சனர்), பதினாறு (ஸ்ரீசுதர்சன மூர்த்தி) மற்றும் முப்பத்திரண்டு (ஸ்ரீமகாசுதர்சன மூர்த்தி) கரங்களைக் கொண்டவராகவும் காட்சி தருகிறார்.

    இறைவழிபாட்டில் கடவுளர்கள் கைக்கொண்டிருந்த ஆயுதங்களையும் வழிபடுவதும் ஒரு முறையாக இருக்கிறது. குடிதெய்வ வழிபாட்டு முறையில்இருந்து தோன்றி படிப்படியாக சிவனது சூலம், முருகனின் வில், மகாவிஷ்ணுவின் சக்கரம் என்று வளர்ந்ததாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். கடவுள்கள் கொண்டிருந்த ஆயுதங்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியதே வழிபாட்டிற்கு அடித்தளம் அமைத்ததாக அறிஞர்கள் விவரிக்கின்றனர். இப்படி வழிபடப்படும் இறைவனின் ஆயுதங்களில் தனித்துவம் பெற்றது, மகாவிஷ்ணுவின் ஸ்ரீசக்கரம்.

    திருமாலின் வாமன அவதாரத்தின்போது, பவித்ர தர்ப்பத்தின் நுனியில் அமர்ந்து சுக்ரனின் கண்ணைக் கிளறி அழித்தவர் சுதர்சனர். ராவணனின் முன்னோர்களான மால்யவான், சுமாலி போன்ற அசுரர்களை தண்டிக்க கருட வாகனத்தில் இலங்கை சென்ற திருமால், சுதர்சன சக்கரத்தை ஏவியே அவர்களை அழித்தார்.

    காசிநகரில் கண்ணனைப் போன்று சங்கு, சக்கரம் தரித்து, ‘நானே உண்மையான வாசுதேவன்' என்று பவுண்டரக வாசுதேவன் என்ற வலிமைமிக்க மன்னன் கூறிவந்தான். கண்ணனை மிரட்டி போருக்கு அழைத்தான். கருடன் மேல் ஏறிச்சென்ற கண்ணன் சக்கரத்தால் அவனைக் கொன்றார்.

    சிசுபாலனின் தாய்க்கு அளித்த வாக்கின்படி, சிசுபாலனின் தவறை கண்ணன் நூறு முறை மன்னித்தார். தொடர்ந்து அவன் தவறு செய்ய அது கண்டு கொதித்த சுதர்சன சக்கரம், சீறி எழுந்து பெருமாளின் எதிரியான சிசுபாலனை அழித்தது.

    மகாபாரத யுத்தத்தின் போது, ஜயத்ரதனை வெல்ல இயலாத நிலையில் பெருமாளின் சக்கரம் வானில் சுழன்று எழுந்து சூரியனை மறைத்தது. அதனால் குருஷேத்திரமே இருண்டது. இதனால் ஜயத்ரதன் ஒழிக்கப்பட்டு, மகாபாரத வெற்றிக்கு வித்திடப்பட்டது. கஜேந்திர மோட்சம் என்ற புராணக் கதையில், யானையின் காலைப் பிடித்துக்கொண்ட மகேந்திரன் என்ற முதலையை சீவித் தள்ளி, கஜேந்திரனைக் காப்பாற்றியது.

    இப்படி பக்தர்களுக்குத் துன்பம் ஏற்படும் போதெல்லாம், அது பெருமாளுக்கே ஏற்படும் இடையூறு போல் எண்ணி விரைந்து வந்து காப்பது ஸ்ரீசக்கரம் எனப்படும் சக்கரத்தாழ்வார்.

    பெருமாளின் பஞ்சாயுதங்களில் ஸ்ரீசக்கரம் எப்போதும், தீயவற்றை அழிக்க, பெருமாளோடு கூடவே தயாராக இருப்பதாக ஐதீகம். பகவான் நினைக்கும் பணியை உடனே முடிப்பவர் அவர். அதனால் சக்கரத்தாழ்வாரை விஷ்ணுவின் அம்சம் என விவரிக்கிறது சில்பசாஸ்திரம் என்னும் நூல். வேதாந்த தேசிகரும் ‘சக்கரத்தாழ்வாராக விளங்கும் ஸ்ரீசக்கரம் திருமாலுக்கு இணையானது’ என்கிறார்.

    பிரம்மதேவரின் தலையை கொய்ததால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்தபாவத்தை நிவர்த்தி செய்ய திருமாலிடம் வழி கேட்டார். திருமாலோ, பத்திரிகாச்ரமத்தில் நடைபெறும் சுதர்சன வழிபாட்டை விளக்கி, சக்கரத்தாழ்வாரை வழிபடும்படி அருளினார். அப்படியே, சிவனும் கயிலாயத்தில் முறைப்படி சக்கரத்தாழ்வாரை வழிபட, பிரம்ம தேவரின் சிரசைக் கொய்த பாவம் நிவர்த்தியானது. அதன்பின்னர் இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும், பரமசிவனிடமிருந்து சுதர்சன வழிபாட்டை அறிந்து, சக்கரத்தாழ்வாரை வழிபட்டு அவரது திருவருளைப் பெற்றனர்.

    சக்கரத்தாழ்வார் விஷ்ணுவின் அம்சம் என்பதை உணர்த்தும் பொருட்டே அவரது திருவுருவின் பின்னால் உபதேவதையாக நரசிம்மரை இடம் பெறச் செய்தனர். ஒரு ஷட்கோண (அறுகோணம்) சக்கரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள சக்கரத்தாழ்வாரின் திருவுருவையும், பின்பக்கம் திரிகோண சக்கரத்தின் (முக்கோணம்) மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யோகநரசிம்மர் அல்லது ஜ்வாலா நரசிம்மரையும் ஒருசேர தரிசிக்க ஏதுவாக, கருவறைச்சுற்றில் அமைக்கப்பட்டுள்ள சக்கரத்தாழ்வார் சன்னிதியில் கண்ணாடி பொருத்தப்பட்டிப்பதை காணலாம்.

    அழிக்க முடியாத பகையை அழித்து, நீக்க முடியாத பயத்தை நீக்க வல்லவர் சுதர்சன மூர்த்தி. மனிதனுக்கு பெரும்பாலான பாதிப்புகளுக்கு மூல காரணமாக இருப்பவை ருணம், ரோகம், சத்ரு எனப்படும் கடன், வியாதி, எதிரி ஆகியவை தான். அவற்றை அழித்து மனஅமைதியை தருபவர் சுதர்சன மூர்த்தி. கல்வி தொடர்பான தடைகளை நீக்கி சரளமான கல்வி யோகத்தை அருள்பவர். கெட்ட கனவுகள், மனசஞ்சலம், சித்தபிரமை, பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல் போன்ற மனம் தொடர்பான பாதிப்புகள், தொந்தரவுகளில் இருந்தும் விடுபடச் செய்வார். ஸ்ரீ மகாவிஷ்ணு, உலகில் வாழும் மக்களுக்கு ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் ஆகியவற்றை வழங்கும் பணியை சக்கரத்தாழ்வாரிடம் கொடுத்திருப்பதாக ‘சுதர்ஸன சதகம்’ விளக்குகிறது.

    பகவானுக்கு பஞ்சாயுதங்கள். ஆனால் சக்கரத்தாழ்வாருக்கு பதினாறு ஆயுதங்கள். இதில் வலது கைகளில் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி, மிஸ்கிரிசம், வேல் ஆகியவைகளையும், இடது கைகளில் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியவைகளையும் கொண்டுள்ளார்.

    எதிரிக்கு எதிரியாக விளங்கி, பக்தர்களுக்கு சந்தோஷத்தை தரும் சக்கரத்தாழ்வாரை, அவரது ஜெயந்தி நாளில் வழிபட்டு பலமும் வளமும் பெறுவோமாக! 
    விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும், நவக்கிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு வழிபாடு செய்வது உகந்தது.
    சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சாத்தி, துளசியால் அர்ச்சனை செய்து 12, 24, 48 வரிசையில் வலம் வந்து வழிபட்டால் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் நிறைவேறும்.

    நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள், தடை, தடங்கல்கள் எல்லாம் விலகி நல்வழி கிடைக்கும் என்பது நம்பிக்கை. நவக்கிரக தோஷம் நீங்க சிவன் கோவில்களில் மட்டுமே நவக்கிரக வழிபாடு உண்டு. அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக்கொள்வார்கள்.

    விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும், நவக்கிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வார் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, `ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’ என்ற மந்திரம் சொன்னால், நவக்கிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

    மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும். சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்றைய தினங்களில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். 
    ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் அரங்கனுக்கும் தொடர்பு உண்டு. இதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் அரங்கனுக்கும் தொடர்பு உண்டு. ஒரு முறை காவிரியில் அரங்கனுக்கு தெப்ப உற்சவம் நடைபெற்ற நேரம் காவிரியில் வேகம் அதிகரித்தது. அரங்கனை அந்த வெள்ளத்தில் இருந்து மீட்க முடியுமா என்ற பயம் ஏற்பட்ட போது ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருந்த கூரநாராயண ஜீயர் என்பவர், சுதர்சன சதகத்தை இயற்றி ஸ்ரீசுதர்சனரை வேண்ட... காவிரி வெள்ளம் குறைந்து, அரங்கள் கரையேறினான். இந்த சுதர்சன சதக பாராயணம் பல சங்கடங்களைப் போக்கும் மாமருந்தாகும்.

    கும்பகோணத்தில் சக்கரத்தாழ்வாருக்கு என்றே தனிக் கோவில் அமைந்துள்ளது. வேறெங்கும் காண முடியாத அமைப்பு அது. மேலும், இங்கு மூலஸ்தானத்தில் சக்கரத்தாழ்வார் (மூலவரும் உற்சவரும்) சுதர்சனவல்லித் தாயாருடன் காட்சியளிக்கிறார். தவிர, விஜயவல்லித் தாயாரும் பிரகாரத்தில் தனிக்கோவில் கொண்டு காட்சியளிக்கிறார்.

    இவரை தரிசிக்க தட்சிணாயன, உத்தராயன வாசல்கள் அமைந்துள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயன வாசல் வழியாகச் செல்ல வேண்டும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன வாசல் வழியாகச் செல்ல வேண்டும். சூரிய பகவானின் கர்வத்தை அடக்கியவர் சக்கரபாணி என்கிறது தலவரலாறு. அதனால் இத்தலத்தை பாஸ்கர க்ஷேத்திரம் என்றும் போற்றுவர்.
    108 வைணவ திருத்தலங்களில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக போற்றப்படும் மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர், சோழவந்தானில் சுதர்சன சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
    108 வைணவ திருத்தலங்களில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக போற்றப்படும் மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேக பெருமாள் கோவில். இந்த கோவிலில் மூலவர் காளமேகப் பெருமாளுக்கு அடுத்தபடியாக, சிறப்பு வாய்ந்ததாக போற்றப்படுவது சக்கரத்தாழ்வார், நரசிம்மர் சன்னிதி.

    நேற்று இங்கு சுதர்சன சக்கரத்தாழ்வார் ஜெயந்தியையொட்டி, காலை முதல் மதியம் வரை சக்கரத்தாழ்வாருக்கும், நரசிம்மருக்கும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக சுதர்சன யாகம் நடந்தது.விழா ஏற்பாட்டை கோவில் உதவி ஆணையர் ராமசாமி, செயல் அலுவலர் ஜெயதேவி ஆகியோர் செய்திருந்தனர்.

    வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள பிரளயநாதசாமி விசாக நட்சத்திர ஆலயத்தில் நேற்று சுதர்சன ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி, கோவில் பிரகாரத்தில் வலம்புரி விநாயகர் சன்னதி அருகே அமைந்துள்ள சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

    கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு விசாக நட்சத்திரத்தையொட்டி, இங்குள்ள சனீஸ்வரலிங்கம், பிரளயநாதசாமி (ராகு) ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற உள்ளது. 
    ×