search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புயல்"

    வடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் காற்றுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #BayofBengal #Rain #Storm
    சென்னை:

    வங்க கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறுகிறது. இது தீவிர புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது என்றும், இந்த புயல் ஆந்திரா நோக்கி செல்கிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது.

    ஆந்திரா நோக்கி புயல் சென்றாலும், வட தமிழக கடலோர பகுதிகள் வழியாக அது கடந்து செல்வதால், வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. இது சென்னைக்கு தென்கிழக்கே 930 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 1,090 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டு இருக்கிறது.

    மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் இது நகர்ந்து வருகிறது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று அதிகாலையில்) புயலாக வலுவடைகிறது. இந்த புயல் ஆந்திர கடலோர பகுதிகளான ஓங்கோலுக்கும், காக்கிநாடாவுக்கும் இடையே 17-ந் தேதி (நாளை மறுநாள்) கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வடதமிழக கடலோரங்களில் இருந்து 200 கி.மீ. தொலைவில் இந்த புயல் வடக்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்வதால், வடதமிழக கடலோர மாவட்டங்களில் 15 (இன்று), 16 (நாளை) ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் காற்றுடன் மழையும், ஓரிரு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யும். குறிப்பாக, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

    15, 16-ந் தேதிகளில் தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். தரைக்காற்றை பொறுத்தவரையில், மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை வீசக்கூடும்.

    புயலானது தற்போது வடக்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அதுவே மேற்கு, வடமேற்கு நோக்கி நகரும் பட்சத்தில் தமிழகத்தை நெருங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் அது பெரிய மாற்றம். தற்போது உருவாகும் இந்த புயல், ‘கஜா’ புயலை விட சற்று அழுத்தம் அதிகமாக இருப்பதாகவே காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #BayofBengal #Rain #Storm
    வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாகியிருப்பதால் வட தமிழகத்தில் 15, 16ந்தேதிகளில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #BayofBengal #Rain #Storm
    சென்னை:

    கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி வங்கக்கடலில் உருவான கஜா புயல் டெல்டா மாவட்டங்களை தாக்கி கடுமையான பேரழிவை ஏற்படுத்தியது.

    புயல் கரையை கடந்தபோது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் தென்னை மரங்களையும், மின் கம்பங்களையும் வேரோடு சாய்த்து நாசப்படுத்தியது.



    அதே போன்ற ஒரு புதிய புயல் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ளது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது.

    அது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று மதியம் புயல் உருவானது. இதற்கு தாய்லாந்து ‘பேத்தாய்’ என பெயர் சூட்டியுள்ளது.

    தற்போது இந்த புயலானது சென்னைக்கு தெற்கு, தென்கிழக்கில் 960 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கு தெற்கு, தென்கிழக்கில் 1130 கி.மீ. தொலைவிலும் இலங்கையின் திரிகோணமலைக்கு தென்கிழக்கில் 700 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டு உள்ளது.

    6 மணி நேரத்தில் 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. தொடர்ந்து இதே திசையில் நகர்ந்து நாளை மறுநாள் (16-ந்தேதி) காலை அதிதீவிர புயலாக வலுப்பெற்று சென்னையை நெருங்கும். அன்று மாலை வரை சென்னை அருகே மையம் கொண்டு இருக்கும். அதன் பிறகு வடக்கு திசையில் ஆந்திரா நோக்கி நகரும். ஆந்திராவின் நெல்லூர், கவாலி, சிராலா, மசூலிப்பட்டினம் கடற்கரை பகுதி வழியாக செல்லும்.

    17-ந்தேதி இரவு மசூலிப்பட்டினத்துக்கும் அமலாபுரத்துக்கும் இடைப்பட்ட பகுதியான ஓங்கோல்-காக்கிநாடா இடையே கரையை கடக்கும். அதன் பிறகு படிப்படியாக வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    தற்போது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் மணிக்கு 65 முதல் 75 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 85 கி.மீ. வேகத்திலும் காற்று வீசுகிறது.

    நாளை (15-ந்தேதி) தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் 90 முதல் 100 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது.

    தென்கிழக்கு வங்கக்கடலில் 16-ந்தேதி காற்றின் வேகம் 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும், கடல் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பி கொந்தளிப்பு ஏற்படும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே ஆழ்கடல் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் கடந்த 3 நாட்களாக வானிலை மையம் அறிவுறுத்தி வருகிறது.

    தமிழக கடற்கரை பகுதிகளில் தற்போது மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. இதனால் தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    நாளை தமிழகத்தின் சென்னை மற்றும் வட கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்யும், நாளை மறுநாள் (16-ந் தேதி) பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    புயல் கரையை நெருங்க நெருங்க காற்றின் வேகம் கஜா புயல் போல் 120 கி.மீ. வரை இருக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையை நோக்கி நகர்ந்து வரும் புயல் திசை மாறி ஆந்திரா பக்கம் செல்வதால் சென்னைக்கு ஆபத்து இல்லை. 15-ந்தேதி மிதமான மழையும், 16-ந்தேதி பலத்த மழையும் மட்டுமே இருக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #BayofBengal #Rain #Storm

    தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுவதால் வருகிற 15, 16-ந்தேதிகளில் சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர பகுதியில் மிக பலத்த மழை பெய்யும். #Rain #IMD
    சென்னை:

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்துள்ளது.

    இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக (புயலாக) மாறி நாளை சென்னை மற்றும் வடதமிழகம் நோக்கி நகரத் தொடங்கும்.

    அடுத்த 48 மணி நேத்தில் இது வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நெருங்கும்.

    இதன் காரணமாக வருகிற 15-ந்தேதியும், 16-ந்தேதியும் 2 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர பகுதியிலும், தெற்கு ஆந்திராவிலும் பலத்த மழையும், ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்யும். குறைந்த நேரத்தில் அதிக அளவில் மழை கொட்டும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இன்று காலை முதல் தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரையும் அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்திலும் கடல் காற்று வீசும்.

    தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடலில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வரையும், அதிகபட்சமாக 80 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பும்.

    எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.



    இன்றைய நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்தமானது நாளை புயலாகவும், பின்னர் தீவிர புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது.

    15-ந்தேதி காலை சென்னையை நெருங்கும், 16-ந்தேதி ஆந்திரா நோக்கி நகரும். 17-ந்தேதி அதிகாலை நெல்லூருக்கும், விசாகபட்டினத்துக்கும் இடையே மசூலிப்பட்டனம் அருகே கரையை கடந்து வலுவிழந்து காற்றழுத்த மண்டலமாக மாறும் என்று தனியார் வானிலை இணைய தளங்கள் தெரிவித்துள்ளன.

    அதன்பிறகு தென்கிழக்கு வங்கக்கடலில் வருகிற 19-ந்தேதி புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழக கடற்கரை பகுதியில் நிலவும் என்றும், இதன் மூலம் தமிழகத்துக்கு பரவலாக மழை கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. என்றாலும் காற்றின் போக்கால் வானிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. #Rain #IMD
    இருதய ஆபரேஷனுக்காக உண்டியலில் சேமித்த பணத்தை கஜா புயல் நிவாரணத்துக்கு சென்னை போலீஸ்காரர் மகள் வழங்கினார். #GajaStorm
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் பாலு (வயது 38). இவர் சென்னையில் போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கவிதா (37). இவரும் சென்னையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர்கள் சென்னை ஆவடியில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். இவர்களுடைய மகள் இசனா பாலு (7).

    கணவன், மனைவி 2 பேரும் சென்னையில் வசித்து வருவதால், இசனா பாலு சத்தியமங்கலத்தில் உள்ள தனது பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வருகிறாள். மேலும் அவள் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். இசனா பாலுவுக்கு 3 வயது இருக்கும்போது இருதய பாதிப்பு இருந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. மேலும் 10 வயது ஆகும்போது 2-வது தடவையாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வந்தனர். விழாவுக்கு தனது பாட்டி பூங்கோதையுடன் வந்த இசனா பாலு தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் வழங்கினார். அப்போது சிறுமியின் பாட்டி பூங்கோதை கூறுகையில், ‘இவள் (இசனா பாலு) எனது பேத்தி. இவளுக்கு ஏற்கனவே இருதய ஆபரேஷன் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இன்னொரு ஆபரேஷன் செய்யவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். தன்னுடைய இருதய ஆபரேஷன் செலவுகளுக்காக உண்டியலில் கடந்த 2 ஆண்டுகளாக பணம் சேர்த்து வந்தாள். தற்போது கஜா புயல் நிவாரணத்துக்காக பலரும் நிதி வழங்குவதை தெரிந்து கொண்டு அவள் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணம் முழுவதையும் அமைச்சரிடம் வழங்குகிறாள்,’ என்றார். உண்டியலில் ரூ.950 இருந்தது.

    அந்த பணத்தை பெற்றுக்கொண்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறுகையில், ‘இந்த சிறுமியின் 2-வது இருதய ஆபரேஷனுக்கான மருத்துவ செலவை அரசு ஏற்கும்,’ என்றார். #GajaStorm
    கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டினார். #MinisterUdhayaKumar #GajaCyclone #GajaCycloneRelief
    மதுரை:

    மதுரை திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு ‘கஜா’ புயல் பாதித்த டெல்டா மாவட்ட மக்களுக்கு ரூ.1,400 கோடி வழங்கி உள்ளது. அத்துடன் 29 பொருட்கள் அடங்கிய பெட்டகமும் வழங்கியது. ஆனால் தற்போது வரை புயல் பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை. தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையைத்தான் வழங்கி உள்ளது.

    முதல்-அமைச்சர், அமைச்சர்கள் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினர். ஆனால் ஸ்டாலின் ஒருநாள் சென்று பார்வையிட்டு புயல் நிவாரண பணிகள் குறித்து விமர்சனம் செய்கிறார்.



    மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா சைக்கிள் கர்நாடக அரசால் நிராகரிக்கப்பட்டது என்று புரளி கிளப்புகின்றனர். கர்நாடக மாநில அரசு வழங்கும் சைக்கிள் வண்ணம் வேறு, தமிழக அரசு வழங்கும் சைக்கிள் வண்ணம் வேறு. தமிழக அரசு வழங்கும் சைக்கிள் தரமானது.

    காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில் காவிரி படுகையில் மேகதாது அல்லது வேறு எந்த ஒரு இடத்திலும் தமிழ்நாட்டின் இசைவின்றி எந்த ஒரு கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என தமிழக சட்டசபையில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. எனவே மேகதாது உள்பட காவிரி படுகையில் எந்த அணையும் கர்நாடகம் கட்ட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MinisterUdhayaKumar #GajaCyclone #GajaCycloneRelief
    புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை வெட்ட அரிவாளுடன் ஒரு வாலிபர் பாயும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GajaCyclone #OSManian
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த பகுதிகளை கடந்த மாதம் 18-ந்தேதி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட சென்றபோது அவரது காரை சிலர் வழிமறித்து அடித்து நொறுக்கினர்.

    இதுகுறித்து கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி மனோகரன்(வயது 53), கவியரசன்(30), ராமச்சந்திரன்(30) ஆகிய 3 பேரை கைது செய்தனர். நேற்று வீரசேகரன்(30), அவரது தம்பி பன்னீர்செல்வம்(29) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


    இந்த நிலையில் அமைச்சர் சென்ற காரை சிலர் வழிமறித்து தாக்குவதும், அமைச்சரின் காரை நோக்கி ஒரு வாலிபர் அரிவாளால் வெட்ட பாய்ந்து செல்வது போலவும் சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி வேகமாக பரவி வருகிறது.

    அந்த சமயத்தில் அமைச்சரின் கார் வேகமாக பின்னோக்கி சென்றதால், அவர்கள் அமைச்சர் காருடன் வந்த மற்றொரு காரை அடித்து நொறுக்குவது போலவும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ காட்சி தற்போது நாகை மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GajaCyclone #OSManian
    புகைப்பட ஆதாரங்கள் இல்லை என்றாலும் கஜா புயலால் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #GajaCyclone #GajaCycloneRelief

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் கஜா புயலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும். சாய்ந்த தென்னை மரங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதேபோல் ராமநாதபுரத்தை சேர்ந்த வக்கீல் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் அவசர வழக்காக தாக்கல் செய்த மனுவில் கஜா புயலால் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணமாகவும், சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும்.

    மத்திய அரசின் புயல் மறுசீரமைப்பு நிவாரண முகாம்களை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அமைக்க வேண்டும். மின் இணைப்பை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மீட்பு பணியில் முப்படையினரையும், துணை ராணுவ படையினரையும் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.


    புயல் நிவாரண பணிகள் குறித்து தஞ்சாவூர் பேராவூரணியை சேர்ந்த முருகேசனும் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்குகள் கடந்த 27-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட நிவாரண உதவிகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார்.

    அதை தொடர்ந்து நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் கஜா புயல் இடைக்கால நிவாரணத்தை ஒரு வாரத்துக்குள் அறிவிக்க வேண்டும், பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து விசாரணையை டிசம்பர் 5-ந்தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

    அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கஜா புயலில் பாதித்த பகுதிகளில் 100 சதவீதம் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு விட்டது.

    இதுவரை 97 ஆயிரத்து 200 மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. முழுமையாக மின் விநியோகம் செய்ய ஒரு வாரம் ஆகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த செல்வராஜ் என்பவரும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் புகைப்பட ஆதாரங்கள் இல்லை என்று கூறி அரசின் நிவாரண பொருட்களை திருப்பி அனுப்புவதாக தகவல் வந்துள்ளது. ஆதாரங்கள் இல்லை என்றாலும் நிவாரண பொருட்களை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் புகைப்பட ஆதாரம் இல்லை என்று கூறி நிவாரண பொருட்களை திருப்பி அனுப்பக் கூடாது. கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி பாதிப்பு விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 12-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #GajaCyclone #GajaCycloneRelief

    புயல் நிவாரணம் வழங்க கோரி திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று நடந்த மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

    மன்னார்குடி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் சாலை மறியல் போராட்டம் இன்று நடந்தது.

    கஜாபுயலால் பாதிக்கப்பட்ட குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் காலனி வீடுகள் என அனைத்து வீடுகளுக்கும் முழு நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க ரூ.1 லட்சம் வழங்க வேண்டு நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரண தொகை வழங்க வேண்டும் ,ரேசன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் 30 கிலோ அரிசி, 10 லிட்டர் மண்ணெய்- வேட்டிசேலை மற்றும் அத்தியவசிய பொருட்கள் வாங்க ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், சேலம் 8 வழிச்சாலை நிலம் எடுப்பின் போது தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்கியது போல் தென்னை மரம் ஒன்றுக்கு ரூ 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி திருவாரூர் மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவாரூர், மன்னார் குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், கொரடாச்சேரி, கூத்தா நல்லூர், பேரளம், குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட இடங்களில் இன்று மறியல் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், பெண்கள், விவசாய சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.

    மன்னார்குடி கீழப்பாலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் வீ.கலைச்செல்வன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் துரை அருள்ராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    மன்னார்குடியில் மேலப்பாலம், கீழப்பாலம், காளவாய்க்கரை, சவளக்காரன், கோட்டூரில் தட்டாங்கோவில், ஆதிச்சபுரம், திருநெல்லிக் காவல், திருப்பத்தூர் களப்பல், பெருக வாழ்ந்தான், திருமக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம் நடந்ததால் இதுகுறித்து தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் சமரச பேச்சு வார்த்தை ஏற்காமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர்.

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று நடந்த மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

    கஜா புயல் காரணமாக கொடைக்கானல் பகுதியில் பயிர்கள் சேதம் அடைந்தது. இதனை பார்வையிடுவதற்காக வந்த அமைச்சர் மற்றும் எம்பி காரை மலை கிராம மக்கள் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #gajayclone

    பெரும்பாறை:

    கஜா புயல் காரணமாக கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான பெரும்பாறை, கே.சி.பட்டி, குப்பமாள்பட்டி, பெரியூர், பாச்சலூர், மஞ்சள்பரப்பு, தாண்டிக்குடி, காமனூர், பண்ணைக்காடு, ஆடலூர், சோலைக்காடு, பன்றிமலை, பூலத்தூர் உள்ளிட்ட இடங்களில் பயிரிட்டிருந்த காபி, மிளகு, வாழை, அவக்கோடா, ஆரஞ்சு உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது.

    இதனை பார்வையிடுவதற்காக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் உதயகுமார் எம்.பி., கலெக்டர் வினய் மற்றும் அதிகாரிகள் கொடைக்கானல் பகுதிக்கு சென்றனர். கே.சி.பட்டி பகுதியில் சென்ற போது மலை கிராம மக்கள் திடீர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் எம்.பி. காரை மறித்தனர்.

    அப்போது மக்கள் ஆவேசமாக எங்களது பகுதியில் கஜா புயலால் கடும் பாதிப்பு அடைந்தோம். எங்களை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை போல் எங்களுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் யாரும் உதவவில்லை என்று கூறினர்.

    உடனே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காரை விட்டு கீழே இறங்கி மக்களை சந்தித்து குறைகேட்டார். அப்போது மலை கிராம மக்கள் அவரிடம் மனுக்களை அளித்தனர்.

    அந்த மனுவில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும் எம்.பி. இதுவரை தங்களது பகுதிக்கு வரவில்லை. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து எந்த பணியும் மேற்கொள்ள வில்லை.

    எங்களது பகுதியில் யானைகள் வாழையை அழித்து விட்டு செல்கின்றன. கஜா புயல் காபி தோட்டங்களை முற்றிலும் அழித்து விட்டது. சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தனர்.

    மனுக்களை வாங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். #gajayclone

    புயல் நிவாரண பணிகளை மூடி மறைக்க மேகதாது அணை பிரச்சினையை கிளப்பி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துகிறார் என்று துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். #MKStalin #Mekedatudam

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுக்கோட்டையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.6 கோடி மதிப்பிலான அரிசி, போர்வை, பாய், தண்ணீர் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. புயல் பாதிப்பு மீட்பு பணியில் ஈடுபட தமிழக அரசிடம் போதிய வலிமை இருந்ததால் ராணுவத்தின் உதவி தேவைப்படாமல் இருந்து இருக்கலாம் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதா ராமன் கூறியுள்ளார். மேலும் அவர் தானாக முன்வந்து ராணுவ உதவி தேவையென்றால் அனுப்புகிறோம் என கூறியதற்கு நன்றி.

    தற்போது டெல்டா பகுதி மக்கள் புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் வேளையில் எதிர் கட்சியினர் நிவாரணம் கொடுக்கும் பணியில் கவனம் செலுத்தாமல் அண்ணா அறிவாலயத்தில் அரசியல் நடத்துகின்றனர். தமிழக அரசின் புயல் நிவாரண பணிகளை மூடி மறைக்க மேகதாது அணை பிரச்சினையை கிளப்பி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துகிறார்.

     


    மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம் தான். கூட்டணியில் உள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின், சோனியா மற்றும் ராகுல் காந்தியிடம் பேசி மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும். இல்லையென்றால் ஸ்டாலின் காங்கிரசுடன் உள்ள உறவை முறித்து கொள்வாரா?.

    மேகதாதுவில் அணை கட்ட அ.தி.மு.க. அரசாங்கம் விடாது. இதற்காக தொடர்ந்து அ.தி.மு.க. அரசு போராடும். அ.தி.மு.க.வால் மட்டும்தான் மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த முடியும். எங்களிடம் 50 எம்.பி.க்கள் உள்ளனர். வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #Mekedatudam

    அரசு வீடு கட்டி கொடுக்கும் வரை புயல் பாதித்த மக்கள், தார்பாயிலேயே அகதிகளாக வாழ வேண்டுமா? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam #GajaStorm

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த வாரம் கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு உதவிகளை செய்தார். மீண்டும் புயல் பாதித்த பகுதியை பார்வையிட சென்றுள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட பகுதிகளை மீண்டும் பார்வையிடுவதற்காக எங்களுடைய குழுவை சார்ந்தவர்கள் இப்போது திருச்சி செல்கிறோம்.

    அங்கு ஏற்பட்ட பாதிப்பு மிக மோசமான ஒரு பாதிப்பு. அதில் இருந்து அந்த மக்கள் மீண்டு வருவதற்கு சில ஆண்டுகள் ஆகலாம்.

    தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டி கொடுப்பதாக அறிவித்துள்ளது. அந்த வீடுகள் கட்டி முடித்து ஒப்படைப்பதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம். அதுவரையில் அந்த மக்கள் தார்ப்பாய்களின் கீழ் அகதிகளாக குடியிருக்க வேண்டுமா?

    எனவே இதை எல்லாம் முழுமையாக அறிந்து ஆய்வு செய்வதற்காக எங்கள் குழு தற்போது செல்கிறது.


    மத்திய அரசு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் இல்லை என்று சொல்லி உள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

    இந்த டெல்டா பகுதிகள் தான் நாட்டில் அனைவருக்கும் சோறு போடுகிறது. எனவே நாட்டிற்கு சோறு கொடுக்கும் ஒரு முக்கியமான பகுதி இது.

    புயல் பாதித்த பகுதியை தேசிய பேரிடராக அறிவிப்பதுதான் சரியாக இருக்கும். எனக்கு தெரிந்தது எல்லாம் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதுதான். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

    பிரதமர் இவ்வளவு பெரிய பாதிப்பை நிச்சயமாக வந்து பார்த்து இருக்க வேண்டும். ஒன்றுபட்டு அதற்காக குரல் கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam #GajaStorm

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரைக்கால் விரைவு ரெயில் மூலமாக இன்று காலை நாகை சென்றடைந்தார். #EdappadiPalanisamy #GajaCyclone
    நாகை :

    ‘கஜா’ புயலின் கோரத் தாண்டவத்தால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 20-ந்தேதி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மோசமான வானிலை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்ல இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் திடீரென பாதியில் ரத்தானது. இதற்கிடையே ரத்து செய்யப்பட்ட புயல் சேத பகுதிகளை பார்வையிடும் எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் மீண்டும் வகுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.



    அதன்படி திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த பகுதிகளை எடப்பாடி பழனிசாமி பார்வையிடும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி எடப்பாடி பழனிசாமி நேற்று (செவ்வாய்க்கிழமை) ரெயில் மூலம் நாகைக்கு புறப்பட்டார். காரைக்கால் விரைவு ரெயில் மூலமாக நாகைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) காலை வந்தடைந்தார்.

    கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று ஆய்வுப் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதுடன், பாதித்த மக்களுக்கு நிவாரணப் பொருள்களையும், நிதியுதவிகளையும் வழங்குகிறார். இதைத் தொடர்ந்து, திருவாரூரிலும் கஜா புயல் பாதித்த பகுதிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர், திருவாரூரில் இருந்து புதன்கிழமை இரவு ரயில் மூலமாக சென்னை திரும்புகிறார். #EdappadiPalanisamy #GajaCyclone 
    ×