search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரமேஸ்வரா"

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழாது. கூட்டணி அரசு உறுதியாக உள்ளது. எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கூறியுள்ளார். #LokSabhaElections2019 #MinisterParameshwara
    பெங்களூரு :

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 23-ந் தேதியுடன் கர்நாடகத்தில் முடிவடைந்தது. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக ரமேஷ் ஜார்கிகோளி அறிவித்துள்ளார். அவருடன் சில எம்.எல்.ஏ.க்களும் பதவி விலகுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணி அரசு விரைவில் கவிழும் என்று பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமியை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேரில் சந்தித்து பேசினார். கூட்டணி அரசுக்கு எழுந்துள்ள சிக்கல், ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. தூக்கியுள்ள போர்க்கொடி குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு பரமேஸ்வரா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று பா.ஜனதாவினர் வெறுமனே சொல்கிறார்கள். ஆனால் இந்த அரசு கவிழாது. கூட்டணி அரசு உறுதியாக உள்ளது. எங்களுக்கு எந்த பயமும் இல்லை. வறட்சி குறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசனை நடத்தினேன்.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக நாங்கள் ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் ஆட்சி நிர்வாகம் குறித்தும் முதல்-மந்திரியுடன் ஆலோசனை நடத்தினேன்.

    கர்நாடகத்தில் தேர்தல் முடிவடைந்துவிட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுப்போம்.

    இவ்வாறு பரமேஸ்வரா கூறினார். #LokSabhaElections2019 #MinisterParameshwara 
    நடிகைகள் திருமணத்துக்கு செல்லும் மோடிக்கு சாமியார் இறுதிச்சடங்கில் பங்கேற்க நேரமில்லையா? என்று கர்நாடக துணை முதல் மந்திரி பரமேஸ்வரா கேள்வி எழுப்பியுள்ளார். #PMModi #Parameshwara
    பெங்களூரு:

    111 வயதில் மறைந்த கர்நாடக மடாதிபதி சிவகுமார சுவாமி உடலுக்கு பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், சதானந்தகவுடா ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    அவரது உடலுக்கு பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தாதது குறித்து காங்கிரஸ் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து காங்கிரசை சேர்ந்த கர்நாடக துணை முதல் மந்திரி பரமேஸ்வரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி நடிகர்- நடிகைகளின் திருமணங்களுக்கு போகிறார். பிரபலங்களை சந்திக்கிறார். ஆனால் நமது கடவுளாக வாழ்ந்து மறைந்தவரின் இறுதிச்சடங்குக்கு வர முடியவில்லை.



    தனது வாழ்க்கையை முழுமையாக ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டோருக்காகவும் ஒதுக்கி பாடுபட்டு மறைந்துள்ளார் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி. அவருக்கு அஞ்சலி செலுத்த பிரதமருக்கு நேரம் இல்லையா?

    சாமியாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை வீணாகி போய்விட்டது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #PMModi #Parameshwara
    போலீஸ் துறையை விட்டுக்கொடுக்கும்படி பரமேஸ்வராவிடம் நான் கேட்கவில்லை. எனக்கும், பரமேஸ்வராவுக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். #Parameshwara #Siddaramaiah
    உப்பள்ளி :

    பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஆட்சி ஒருங்கிணைப்பாளருமான சித்தராமையா பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் உப்பள்ளிக்கு வந்தார். உப்பள்ளி கோகுல்ரோடு பகுதியில் உள்ள விமான நிலையத்தில் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    போலீஸ் துறை பற்றி எனக்கும், பரமேஸ்வருக்கும் வாதம் நடந்தது உண்மை தான். ஆனால், நான் அவரிடம் போலீஸ் துறையை விட்டுக்கொடுக்கும்படி கேட்கவில்லை. எனக்கும், பரமேஸ்வராவுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் ஒற்றுமையோடு தான் இருக்கிறோம்.

    மந்திரிசபை விரிவாக்கம் குறித்து என்னுடைய கருத்தை கட்சி மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலிடம் தெரிவித்தேன். யாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படாதவாறு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிய மந்திரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஒதுக்கப்படும் துறை பற்றி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தான் முடிவு செய்தார். இதற்காக வேணுகோபால் டெல்லி சென்றுள்ளார்.



    மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் காங்கிரசில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களால் 24 மணி நேரத்தில் கூட்டணி ஆட்சி கவிழும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் உமேஷ் கத்தி தெரிவித்துள்ளார். அவர் கூறியது போன்று எதுவும் நடக்காது. கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளையும் முழுமையாக பூர்த்தி செய்யும். எப்படியாவது கூட்டணி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டசபை மற்றும் பாராளுமன்ற இடைத்தேர்தலை கூட்டணி அமைத்தே எதிர்கொண்டோம். அதே போல் பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி தொடரும்.

    தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடக்கும்போது, தொகுதிகள் ஒதுக்கீடு உள்பட அனைத்து விஷயங்களும் இறுதி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Parameshwara #Siddaramaiah
    சரியான நேரத்தில் மழை பெய்யாதபோது, விவசாயிகள் தற்கொலை வழியை தேடுகிறார்கள். எத்தகைய சூழ்நிலையிலும் தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கூறியுள்ளார். #Parameshwara
    பெங்களூரு :

    கர்நாடக அரசின் விவசாயத்துறை சார்பில் பெங்களூருவில் விவசாய கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கலந்து கொண்டு பேசியதாவது:-

    சரியான நேரத்தில் மழை பெய்யாதபோது, விவசாயிகள் தற்கொலை வழியை தேடுகிறார்கள். எத்தகைய சூழ்நிலையிலும் தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம். இந்த முறை பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால் வறட்சி ஏற்பட்டுள்ளது. மாநில அரசு வறட்சி நிவாரண பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறது.

    பெங்களூரு விவசாய பல்கலைக்கழகம் நாட்டுக்கே முன்மாதிரியாக திகழ்கிறது. இங்கு புதிதாக 184 வகையான விதைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பல்கலைக்கழகத்தில் நானும் படித்தவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன். முந்தைய காலங்களில் உணவு தானியங்களை நமது நாடு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. ஆனால் இன்று நமது நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்கிறோம். இன்னும் ஏராளமான சாதனைகள் செய்ய வேண்டியது உள்ளன. இன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    விவசாயிகள் ஆர்வமாக விவசாய பணிகளை மேற்கொண்டால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறந்த வகையில் பங்களிப்பை அளிக்க முடியும்.

    இவ்வாறு பரமேஸ்வரா பேசினார். #Parameshwara
    திப்பு ஜெயந்தி விழாவை ரத்து செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். #TipuJayanthi #Yeddyurappa
    பெங்களூரு :

    கர்நாடக அரசு சார்பில் வருகிற 10-ந் தேதி திப்பு ஜெயந்தி விழா நடக்கிறது. இந்த விழாவை ரத்து செய்ய வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திப்பு சுல்தான் பல்வேறு விஷயங்களில் பிரச்சினைக்குரிய நபராக இருக்கிறார். மேலும் அவர் மதவெறி கொண்டவர். வரலாற்று ஆவணங்கள்படி, கொடவா சமூகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தவர். கொடவா சமூக மக்கள் சமீபத்தில் டெல்லியில் இங்கிலாந்து தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மலைவாழ் மக்களுக்கு எதிராக போரிட்டபோது, திப்பு சுல்தானுக்கு இங்கிலாந்து ஆதரவு வழங்கியது. இதற்காக மன்னிப்பு கேட்குமாறு கொடவா மக்கள் வலியுறுத்தினர்.



    திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறி இருக்கிறார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். திப்பு ஜெயந்தி விழாவை நடத்துவது, மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. அதனால் இந்த விழாவை நாங்கள் எதிர்க்கிறோம்.

    சிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விழாவை மாநில அரசு நடத்துகிறது. இது வாக்கு வங்கி அரசியல். முஸ்லிம் சமுதாயத்தில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்க வேண்டும் என்று விரும்பினால், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அப்துல் ஹமித் ஆகியோர் இருக்கிறார்கள். அதனால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து திப்பு ஜெயந்தி விழாவை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TipuJayanthi #Yeddyurappa 
    பெங்களூருவில் பொது இடங்களில் குப்பை வீசினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா எச்சரிக்கை விடுத்துள்ளார். #Parameshwara
    பெங்களூரு :

    பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளுடன் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா நேற்று பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். இதில் மேயர் கங்காம்பிகே, மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு பரமேஸ்வரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நகரில் சிலர் கண்ட இடங்களில் குப்பைகளை வீசுகிறார்கள். இதனால் குப்பை குவிக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு, பொது இடங்களில் குப்பைகளை வீசினால், அபராதமாக ரூ.500 விதிக்க மாநகராட்சி அனுமதி கேட்டுள்ளது. இதற்கு மாநில அரசு விரைவில் அனுமதி வழங்கும். பொது இடங்களில் குப்பை வீசினால் ரூ.500 அபராதம் விதிப்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கண்ட இடங்களில் குப்பைகளை வீசுபவர்களை பிடிக்க ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு ஓய்வுபெற்ற ராணுவ வீரரை நியமிக்க முடிவு செய்துள்ளோம். குப்பைகளை அகற்றும்படி மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை நான் வரவேற்கிறேன். குப்பைகளை அகற்றும் பணி தற்போது நல்ல முறையில் நடந்து வருகிறது. தேங்கிய குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

    பெங்களூருவில் 1.30 கோடி மக்கள் வசிக்கிறார்கள். 29 லட்சம் வீடுகளும், 5 லட்சம் வணிக நிறுவன கட்டிடங்களும் உள்ளன. நகரில் தினமும் மொத்தம் 5,700 டன் குப்பைகள் சேருகின்றன. இதில் வீடுகளில் இருந்து 4,200 டன் குப்பைகள் சேகரமாகிறது. குப்பைகளை அகற்ற 4,213 ஆட்டோ டிப்பர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கின்றன. 566 குப்பை சேகரிக்கும் லாரிகள், 8 தானியங்கி தூய்மை எந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளன.

    நகரில் 18 ஆயிரத்து 500 துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். 11 இடங்களில் உயிரி எரிவாயு தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குப்பையை சேகரிக்கும் லாரிகளுக்கு ஜி.பி..எஸ். கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆட்டோக்களுக்கு அத்தகைய தொழில்நுட்பத்தை பொருத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    புதிய குப்பை லாரிகள் மற்றும் ஆட்டோக்களை வாங்கும்போது, அவற்றை பராமரிக்கும் பொறுப்பை ஒப்பந்ததாரர்களே நிர்வகிக்கும் அம்சம் சேர்க்கப்படும். புதிதாக தூய்மைபடுத்தும் எந்திரங்களை வாங்க டெண்டர் விடப்படும். இப்போது பெல்லஹள்ளியில் உள்ள குப்பை கிடங்கு மூடப்படும். அதற்கு பதிலாக தொட்டபள்ளாபுராவில் குப்பை கிடங்கு நவீனபடுத்தப்படும்.

    குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் 6 மாதத்திற்குள் அமல்படுத்தப்படும். பிடதியில் அமைக்கப்பட்டு வரும் மின் உற்பத்தி நிலையம் இன்னும் சில நாட்களில் திறக்கப்படும். குப்பையை பிரச்சினையை கவனிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு செயற்பொறியாளர் நியமிக்கப்படுவார்.

    இவ்வாறு பரமேஸ்வரா கூறினார். #Parameshwara
    பெங்களூருவில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கூறியுள்ளார். #Parameshwara
    பெங்களூரு :

    பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளுடன் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா பெங்களூரு விகாச சவுதாவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் சிமெண்டு சாலைகளை அமைப்பது, சாலை குழிகளை மூடுவது, குப்பை பிரச்சினையை தீர்ப்பது ஆகியவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதில் மாநகராட்சி மேயர் கங்காம்பிகே, கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்ட்னர். இந்த கூட்டத்திற்கு பிறகு பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளின் பணியில் குறைகளை கண்டறிந்து, கர்நாடக ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. பெங்களூருவில் சாலை குழிகளை மூடும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அதிகாரிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு, 27-ந் தேதிக்குள்(நாளை) நகரில் சாலைகளில் உள்ள அனைத்து குழிகளையும் மூட வேண்டும்.

    சாலை குழிகள் மூடியது குறித்த ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். சாலைகளை மூட தவறினால் சம்பந்தப்பட்ட மண்டல இணை கமிஷனரே அதற்கு பொறுப்பாவார். சாலைகளை தரம் உயர்த்த, ‘டெண்டர் சூர்‘, சிமெண்டு சாலைகள் அமைக்கும் திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை வருகிற மே மாதத்திற்குள் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    100 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.945 கோடி செலவில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில சாலைகளில் கடுமையான போக்குரத்து நெரிசல் உண்டாகிறது. இதனால் அத்தகைய சாலைகளில் இந்த சாலை மேம்பாட்டு பணிகள் முடிவடையாமல் உள்ளன. நடப்பு ஆண்டில் ரூ.665 கோடி செலவில் 63 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை மேம்பாட்டு பணிகளுக்கான டெண்டர் அழைக்கப்பட்டுள்ளது. இதில் 41 சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன.

    குப்பையை அகற்றும் பணிக்கு கடந்த 2 ஆண்டுகளாக டெண்டர் விடவில்லை. இப்போது அதற்கு டெண்டர் விட முடிவு செய்துள்ளோம். குப்பைகளை அகற்றும் எந்திரங்களை ஒப்பந்ததாரர் வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளோம். குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு 10 மாதங்களுக்குள் பணிகள் முடி வடைந்து அமல்படுத்தப்படும்.

    தெருக்களில் எல்.இ.டி. விளக்குகளை பொருத்த டெண்டர் பணிகள் முடிவடைந்துவிட்டன. மந்திரிசபையில் இதற்கு ஒப்புதல் வழங்கப்படும். அரசு-தனியார் பங்களிப்பில் ரூ.800 கோடியில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. சுதந்திர பூங்காவில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டிட பணிகளை விரைவாக முடிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். ஜே.சி.ரோட்டிலும் அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அதில் கூடுதலாக 2 மாடிகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரு மாநகராட்சியை பிரிப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. பெங்களூருவுக்கு என்று தனி சட்டத்தை இயற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. துப்புரவு தொழிலாளர்கள் தங்களுக்கு ஏதாவது பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு பரமேஸ்வரா கூறினார். #Parameshwara
    விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பின்பும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வரவேண்டாம் என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #Karnataka #ChiefMinister #Kumaraswamy
    பெங்களூரு :

    காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி பெங்களூரு விதானசவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த, காந்தியின் உருவப்படத்திற்கு முதல்-மந்திரி குமாரசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதுபோல, துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா, காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் காந்தி பவனில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களின் தலைநகரங்களிலும் காந்திபவன் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் சில மாவட்டங்களில் காந்திபவன் கட்டுவதற்கு தேவையான இடம் கிடைக்கவில்லை. அந்த மாவட்டங்களில் எங்கு இடம் இருக்கிறது என்பதை கண்டறிந்து, அங்கு காந்திபவன் கட்டப்படும். 30 மாவட்டங்களிலும் காந்திபவன் கட்டப்படும். நள்ளிரவு 12 மணிக்கு ஒரு பெண் தனியாக வெளியே சென்று விட்டு எந்த பிரச்சினையும் இ்ல்லாமல் வீட்டிற்கு வர வேண்டும் என்பதே மகாத்மா காந்தியின் கனவாகும். அவரது கனவை கர்நாடகத்தில் நினைவாக்க நான் மிகவும் விரும்புகிறேன். மக்கள் நிம்மதியாக வாழ சட்டவிரோதமாக நடைபெறும் சம்பவங்களை தடுக்க வேண்டும். கொள்ளையர்களை அடியோடு ஒழிக்க வேண்டும். அதற்காக பெங்களூரு நகர போலீஸ் துறைக்கு நேர்மையான அதிகாரிகளை நியமித்துள்ளேன்.

    எந்த விதமான நெருக்கடிகளுக்கும் அடி பணியாமல் சுதந்திரமாக மக்களுக்காக பணியாற்றும்படி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். நான் சொன்னால் கூட நீங்கள் கேட்க வேண்டாம், நேர்மையாக பணியாற்றுங்கள் என்று போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். குறிப்பாக பெண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதற்காக போலீசாருக்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுக்க தயாராக உள்ளது.



    பல கோடி ரூபாயை வைத்து கொண்டு சூதாட்டத்தில் ஈடுபடும் விடுதிகள் மீது போலீசார் சோதனை நடத்தி வருவதுடன், சூதாட்டத்திற்கு கடிவாளம் போட்டு வருகின்றனர். பெங்களூருவில் குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். பெங்களூருவில் தற்போது பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. நகரின் பாதுகாப்புக்காக பல கோடி ரூபாய் செலவில் பெங்களூரு முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதே இந்த அரசின் நோக்கமாகும்.

    இதற்கு முன்பு நான் முதல்-மந்திரியாக இருந்தபோது மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு தடை விதித்தேன். லாட்டரி விற்பனையை தடை செய்தேன். அப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது புதிய மதுபான கடைகள் திறக்க அனுமதி அளிப்பேனா?. புதிய மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்க நான் ஆலோசிப்பதாக தகவல்கள் வருகின்றன. அது தவறானது. மாநிலத்தில் புதிய மதுக்கடைகள் திறக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அவ்வாறு புதிய மதுக்கடைகள் திறக்க உரிமம் வழங்க வேண்டும் என்று நான் நினைத்தது கூட இல்லை. அதனால் புதிய மதுக்கடைகள் திறக்க ஒரு போதும் அனுமதி அளிக்க மாட்டேன்.

    ஜனதா தரிசனம் நிகழ்ச்சியை விருப்பம் இல்லாமல் நடத்துவதாக சிலர் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். ஜனதா தரிசனம் நிகழ்ச்சியில் காலையில் இருந்து இரவு வரை மக்களின் குறைகளை கேட்டு அறிவதுடன், ஏராளமான மக்களின் குறைகளை சரி செய்துள்ளேன். வேலை வாய்ப்பு முகாம் நடத்தி ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். கூட்டணி ஆட்சியில் விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    அப்படி இருந்தும் விவசாயிகள் தற்கொலை செய்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்யக்கூடாது என்பதாலும், விவசாயிகள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகவும் தான் விவசாயக்கடனை தள்ளுபடி செய்தேன். ஒரு விவசாயி தற்கொலை செய்வதால், அவரது குடும்பமே வீதிக்்கு வந்து விடுகிறது. அதனால் எந்த ஒரு விவசாயியும் தற்கொலை செய்யும் முடிவுக்கு வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி பேசினார். #Karnataka #ChiefMinister #Kumaraswamy 
    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டுக்கு நல்லது அல்ல என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கூறியுள்ளார். #Parameshwara #Modi
    பெங்களூரு :

    பெங்களூருவில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதுடன், ராகுல்காந்தி பிரதமராவது உறுதி. மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 4½ ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

    இந்த 4½ ஆண்டுகளில் நாட்டில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. நாட்டின் பொருளாதாரம் பெரிதும் வீழ்ச்சி அடைந்து விட்டது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டுக்கு நல்லது அல்ல.



    இந்த 4½ ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் மக்கள் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து விட்டனர். பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. விலை உயர்வை கட்டுப்படுத்த பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சாதாரண மக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.

    மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மந்திரி பதவி யார், யாருக்கு வழங்கப்படும் என்பதை ராகுல்காந்தி தான் முடிவு செய்வார்.

    சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கூட்டணி ஆட்சி என்றாலே பிரச்சினைகள் வருவது சகஜம் தான். ஆனால் பெரிய அளவில் எந்த பிரச்சினைகளும் இல்லை.

    இவ்வாறு பரமேஸ்வரா கூறினார். #Parameshwara #Modi
    மாநில எல்லை பகுதிகளில் பயங்கரவாத செயல்களுக்கு பண பரிமாற்றம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்று தென்மண்டல போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் பரமேஸ்வரா கூறினார். #Parameshwara #Congress
    பெங்களூரு :

    பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தென் மண்டல போலீஸ் டி.ஜி.பி.க்களின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த டி.ஜி.பி. நீலமணி ராஜூ, தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மற்றும் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த டி.ஜி.பி.க்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த மாநாட்டை கர்நாடக மாநில துணை முதல்-மந்திரியான பரமேஸ்வரா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மாநாட்டில் பேசியதாவது:-

    தென் மாநிலங்களை சேர்ந்த போலீஸ் டி.ஜி.பி.க்களின் மாநாடு நடைபெறுவது மிகவும் அவசியமானதாகும். இந்த மாநாடு தென்மாநிலங்களில் நடைபெறும் குற்றங்களை குறைக்க பயன் உள்ளதாக இருக்கும். ஏனெனில் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் போலீசார் தினம், தினம் புதிய சவால்களை சந்தித்து வருகிறார்கள். அதுபோன்ற புதிய சவால்களை இந்த மாநாட்டில் நடைபெறும் கருத்து பரிமாற்றத்தின் மூலம் எதிர்கொள்ள முடியும். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மாநிலத்தின் எல்லை பகுதிகளில் இருந்து தான் முறைகேடாக பண பரிமாற்றம் நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன.

    அவ்வாறு பண பரிமாற்றம் நடைபெறுகிறதா? என்பதை ஒவ்வொரு மாநில போலீசாரும் தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டியது அவசியமாகும். சமூக வலைதளங்கள் மற்றும் வேறு வழிகளில் இளைஞர்களை தூண்டிவிட்டு பயங்கரவாத செயல்களில் சமூக விரோதிகள் ஈடுபட வைப்பதை தடுப்பது போலீசாருக்கு இருக்கும் மற்றொரு மிகப் பெரிய சவாலாகும். இத்தகைய சவால்களை போலீசார் திறமையாக கையாள வேண்டும். அந்த சவால்களை திறமையாக சமாளித்து கட்டுக்குள் கொண்டுவர வேண்டியது அவசியமாகும்.


    பெங்களூருவில் நடந்த தென்மண்டல போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டை துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். அருகில் டி.ஜி.பி.க்கள் நீலமணிராஜு (கர்நாடகம்), டி.கே.ராஜேந்திரன்(தமிழ்நாடு), லோகநாத் பெகெரா(கேரளா) மற்றும் பலர் உள்ளனர்.

    இந்த மாநாட்டின் மூலம் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற போலீஸ் துறையில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்கள் மற்றும் தகவல்களை பரிமாற்றம் செய்து கொண்டால், சிறப்பான முறையில் பணியாற்ற முடியும். சட்டவிரோத செயல்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மாநிலங்களுக்கு இடையே உதவிகள் செய்வது அவசியமானதாகும். தற்போது நமது நாட்டில் தகவல் தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து விட்டது. இதனால் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுவது அதிகமாகி விட்டது. இதனை தடுக்கும் விதமாக போலீஸ் துறையிலும் புதிய தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டும்.

    இரவில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ்காரர்கள், போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு வெளியே செல்கிறார்கள். அவர்கள் எங்கு ரோந்து பணியில் உள்ளார்கள் என்பதை கண்டறிவதும் தேவையான ஒன்றாகும். இந்த மாநாடு 5 மாநிலங்களில் நடைபெறும் குற்றங்களை தடுப்பது, சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்கவும், அவற்றை தடுக்கவும் பயன் உள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு பரமேஸ்வரா கூறினார்.

    பின்னர் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா நிருபர்களிடம் கூறுகையில், “கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய 5 மாநிலங்களின் போலீஸ் டி.ஜி.பி.க்களின் மாநாடு பெங்களூருவில் முதல் முறையாக நடந்துள்ளது. போலீஸ் துறையை மேம்படுத்துவது, குற்றங்களை குறைப்பது, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களை சேர்ந்த டி.ஜி.பி.க்களின் மாநாட்டை 6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அந்தந்த மாநிலங்களில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்கவும், அதனை சமாளிப்பது குறித்தும் மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களிடையே தகவல்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த மாநாடு பயன் உள்ளதாக இருக்கும்“ என்றார். 
    பெங்களூரில் உள்ள சொகுசு விடுதியில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக பரமேஸ்வரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். #KarnatakaCMRace #Congress #Parameshwara
    பெங்களூர்:

    கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

    இதற்கிடையே, மைசூரு சாலையில் உள்ள சொகுசு விடுதியில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ளனர். இன்று எடியூரப்பா பதவியேற்ற நிலையில், விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

    கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சொகுசு விடுதியில் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், தற்போது மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள பரமேஸ்வரா, கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    ஒருவேளை காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமையும் பட்சத்தில், பரமேஸ்வராவிற்கு துணை முதல் மந்திரி பதவி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #KarnatakaCMRace #Congress #Parameshwara
    ×