search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்லாந்து"

    தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி, இறையாண்மையை மீறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. #Thailandlovers

    பாங்காக்:

    அமெரிக்காவை சேர்ந்தவர் சாட் எல்வர்டோஸ்கி. இவர் பிட்காயின் முதலீட்டாளர். இவரது தாய்லாந்து காதலி சுப்ரானே தெப்பெட். இவரும் பிட்காயின் முதலீட்டாளர் ஆவார்.

    கோடீஸ்வரர்களான இருவரும் தாய்லாந்தில் கடலுக்குள் கான்கிரீட் வீடு கட்டியுள்ளனர். கடற்கரையில் இருந்து 12 நாட்டிக்கல் தொலைவில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் இதன் போட்டோ வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த வீட்டை தாய்லாந்து கடற்படையினர் கண்டுபிடித்து புகெட் போலீசில் புகார் செய்தனர். அனுமதி பெறாமலும், தாய்லாந்து இறையான்மையை மீறியும் கடலுக்குள் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த வீடு கடற்கரையில் இருந்து 13 நாட்டிகல் தொலைவில் கட்டப்பட்டுள்ளது. தாய்லாந்து கடல் எல்லைக்கு அப்பால் இது உள்ளது. எனவே தாய்லாந்தின் இறையான்மையை மீறவில்லை. என சாட் எல்வார்டோஸ் கி தெரிவித்தார்.

    எனது காதலி சுப்ரானே எங்காவது சுதந்திரமாக வாழ வேண்டும் என விரும்பினார். அவருக்காக வித்தியாசமாக கடலுக்குள் வீடு கட்டினேன் என்றும் அவர் கூறினார். தாய்லாந்தின் இறையாண்மைக்கு எதிராக நடந்து கொண்டதாக கூறி இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

    தாய்லாந்து நாட்டின் ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். #BangkokFire
    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டின் தலைநகரம் பாங்காங். இந்நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது பாங்காங் சென்ட்ரல் வேர்ல்டு ஷாப்பிங் மால். இந்த ஷாப்பிங் மாலில் இன்று மாலை திடீரென தீ ஏற்பட்டது. மாலின் 8வது மாடியில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்ட தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர்  தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #BangkokFire
    தாய்லாந்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொடர்ச்சியான புகார்கள் மற்றும் முறையற்ற தகவல்கள் காரணமாக தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. #ThailandElection
    பாங்காக்:

    தாய்லாந்தில் 2014-ம் ஆண்டு நடந்த ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு பொதுத்தேர்தல் நடந்தது. 5 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்த நிலையில், இந்த தேர்தலில் 64 சதவீத வாக்குகள்தான் பதிவானது.

    ஞாயிற்றுக்கிழமை மாலை வாக்குப்பதிவு முடிந்தபிறகு 90 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் எண்ணிக்கை முடிந்துவிட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் ராணுவ ஆதரவு பெற்ற கட்சியான பாலங் பிரச்சா ரத் கட்சி முன்னணியில் இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது. அதன்படி தற்போதைய பிரதமர் பிரயாட் சான்ஓசா தலைமையில் அரசு அமைக்கப்பட வேண்டிய சூழல் உருவானது. ஆனால் தொடர்ச்சியான புகார்கள் மற்றும் முறையற்ற தகவல்கள் காரணமாக தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் குழப்பம் ஏற்பட்டது.

    இதையடுத்து தேர்தல் முடிவுகள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் அதிகாரப்பூர்வமான முழுமையான முடிவுகள் மே மாதம் வரை வெளியிடப்படாது என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுத்தேர்தலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி உள்ள முன்னாள் பிரதமர் தக்‌ஷின் ஷினவத்ரா, முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
    ராணுவ ஆட்சி நடைபெறுகிற தாய்லாந்து பொதுத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. #ThailandElection
    பாங்காக்:

    தாய்லாந்தில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் அங்கு ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவம் அரியணை ஏறுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அப்படி கடந்த 90 ஆண்டுகளில் 12 முறை ஆட்சி கவிழ்க்கப்பட்டு உள்ளது.

    அந்த வகையில், கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவரது பதவியை பறித்து அந்நாட்டு அரசியல் சாசன கோர்ட்டு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நிவாட்டம்ராங் பூன்சாங் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால் வலுவான தலைமை இல்லாததால் அந்நாட்டின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ராணுவ தளபதியாக இருந்த பிரயாட் சான்ஓசா பிரதமராக பொறுப்பேற்றார்.

    நாட்டின் சட்டம், ஒழுங்கு சரியாகும் வரை மட்டுமே ராணுவ ஆட்சி அமலில் இருக்கும் என கூறப்பட்ட நிலையில், இதுவரை அங்கு ஜனநாயக ஆட்சி மலரவே இல்லை.

    இந்த சூழலில் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் உத்தரவு பிறப்பித்தன் பேரில், மார்ச் மாதம் 24-ந்தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. தாய்லாந்து அரச குடும்பத்தினர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் பெரும்பாலும் அரசியல் விவகாரங்களில் தலையிடுவது கிடையாது.

    ஆனால் எதிர்பாராத வகையில் மன்னர் மகா வஜ்ரலோங்கோனின் சகோதரியும், இளவரசியுமான உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தார். எனினும் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் உப்லோரட்டனா மஹிடோல் தனது முடிவில் இருந்து பின் வாங்கினார்.

    இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், 500 உறுப்பினர்களை கொண்ட தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பள்ளிக்கூட வளாகங்கள், கோவில்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் அமைக் கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். பொதுவான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

    இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் பிரயாட் சான்ஓசா, முன்னாள் பிரதமர் தாக்‌ஷின் ஷினவத்ராவின் பெகு தாய் கட்சியின் சார்பில் களம் இறங்கி உள்ள சூடாரத் கீரப்பான் ஆகியோர் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. தேர்தல் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மன்னர் மகா வஜ்ரலோங்கோன் மக்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

    அதில் அவர் தனது தந்தையும், முன்னாள் மன்னருமான பூமிபோல் அதுல்யாதேஜ் கூறிய “அரசுக்கும் சமூகத்துக்கும் நல்லது செய்யக்கூடிய மற்றும் கெட்டவர்களை கட்டுப்படுத்தும் ஆளுமை கொண்ட நல்ல மனிதர்களை ஆதரியுங்கள்” என்கிற வாசகத்தை சுட்டிக்காட்டி “இதை நினைவில் வைத்து விழிப்புடன் செயல்படுங்கள்” என தெரிவித்திருந்தார். மன்னரின் இந்த அறிக்கை செய்தி சேனல்களில் தொடர்ச்சியாக காட்டப்பட்டுக்கொண்டே இருந்தன.
    தாய்லாந்து பிரதமர் தேர்தலில் 3 பிரதான வேட்பாளர்களில் ஒருவராக, முதல் திருநங்கை வேட்பாளர் களமிறங்கி உள்ளார். #Thailand #Transgender #PrimeMinister
    பாங்காக்:

    தாய்லாந்தில் அடுத்த மாதம் (மார்ச்) 24-ந்தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக அங்குள்ள பிரதான கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. இதில் நாட்டின் பிரபல கட்சிகளில் ஒன்றான மகாசோன் கட்சி, பவுலின் காம்ப்ரிங் (வயது 52) என்ற திருநங்கையை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி உள்ளது. கடந்த 3 ஆண்டுக்கு முன்பு வரை பினித் காம்ப்ரிங் என்ற பெயரில் ஆணாக இருந்து 2 குழந்தைகளுக்கு தந்தையாகவும் இருந்த இவர், பத்திரிகையாளராகவும், தொழிலதிபராகவும் இருந்தார். கால்பந்து ரசிகர் கூட்டமைப்பை நிறுவி தாய்லாந்து விளையாட்டு துறையிலும் புகழ்பெற்று விளங்கினார். பின்னர் பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறி தனது பெயரையும் பவுலின் என மாற்றிக்கொண்டார்.

    தாய்லாந்து பிரதமர் தேர்தலில் 3 பிரதான வேட்பாளர்களில் ஒருவராகவும், முதல் திருநங்கை வேட்பாளராகவும் களமிறங்கி இருக்கும் பவுலின் காம்ப்ரிங் தனது பிரசாரத்தை தொடங்கி உள்ளார். தான் வெற்றி பெறவில்லை என்றாலும், அடுத்த தலைமுறையிலாவது திருநங்கை ஒருவர் நாட்டின் தலைவராக வருவார் என்று அவர் கூறினார். #Thailand #Transgender #PrimeMinister
    தாய்லாந்து நாட்டின் பிரதமர் பதவிக்கான தேர்தலில் அந்நாட்டின் இளவரசி போட்டியிட அனுமதிக்க வேண்டாமென மன்னர் வஜ்ரலோங்கோனி தடை விதித்துள்ளார். #ThaiPMelection #Ubolratana #MahaVajiralongkorn
    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் அங்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி கவிழ்க்கப்படுவதும், ராணுவம் அரியணை ஏறுவதும் தொடர்கதையாக உள்ளது.
     
    அந்த வகையில், கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. பிரதமரை பதவி விலகக்கோரி நடந்த போராட்டங்களில் பெரும் வன்முறை வெடித்தது.

    இதற்கிடையில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் யிங்லக் ஷினவத்ராவின் பிரதமர் பதவியை பறித்து அந்நாட்டு அரசியல் சாசன கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதனைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக வர்த்தக மந்திரி நிவாட்டம்ராங் பூன்சாங் நியமிக்கப்பட்டார். ஆனால், நாட்டில் வலிமையான தலைமை இல்லாததால் பெரும் அரசியல் குழப்பம் எழுந்தது.

    இதையடுத்து அந்நாட்டின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ராணுவ தளபதியாக இருந்த பிரயாட் சான்ஓசா பிரதமராக பொறுப்பேற்றார். நாட்டின் சட்டம், ஒழுங்கு சரியாகும் வரை மட்டுமே ராணுவ ஆட்சி அமலில் இருக்கும் என கூறிய நிலையில் அங்கு ராணுவ ஆட்சியே தொடர்ந்தது.

    பொதுத்தேர்தலை நடத்தி ஜனநாயக ஆட்சியை கொண்டு வர வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் குதித்தனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் பொதுத்தேர்தலை நடத்தும்படி கடந்த மாதம் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் ஆணை பிறப்பித்தார். அதனைதொடர்ந்தது பிப்ரவரி மாதம் 24-ந்தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    ஆனால் சில காரணங்களால் பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி 500 உறுப்பினர்களை கொண்டு தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு அடுத்த மார்ச் 24-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் பொதுத்தேர்தல் என்பதால் அரசியல் கட்சியினரிடமும், தாய்லாந்து மக்களிடமும் இந்த தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

    வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று தாய்லாந்து இளவரசி உபோல்ரட்டனா பிரதமர் பதவிக்காக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    முன்னாள் பிரதமர்கள் யிங்லக் ஷினவத்ரா, தாக்‌ஷின் ஷினவத்ரா ஆகியோருக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட புதிய கட்சியான தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு (தாய் ரக்சா சார்ட்) கட்சியின் வேட்பாளராக அவர் களமிறங்கினார். உபோல்ரட்டனா மஹிடோல் முன்னாள் மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜின் கடைசி மகளும், தற்போதைய மன்னர் மஹா வஜ்ரலோங்கோர்னின் மூத்த சகோதரியும் ஆவார்.



    இளவரசி உபோல்ரட்டனா பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்த சில மணி நேரத்தில் தற்போதைய பிரதமர் பிரயாட் சான்ஓசா தானும் களத்தில் இருப்பதாக அறிவித்தார்.

    இதனால் இந்த பொதுத்தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்ட நிலையில் இளவரசி உபோல்ரட்டனா பிரதமர் பதவிக்கு போட்டியிட கூடாது என தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு கட்சிக்கு மன்னர் மஹா வஜ்ரலோங்கோர்ன் நேற்றிரவு உத்தரவிட்டார்.

    மன்னரின் உத்தரவுக்கு மதிப்பளித்தும், அரண்மனைக்கு விசுவாசமாகவும் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இளவரசி உபோல்ரட்டனா திரும்பப்பெறப்படுவதாக தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு கட்சி இன்று அறிவித்துள்ளது.

    தாய்லாந்தில் வழக்கமாக மன்னர் குடும்பத்தின் பெண்கள் அவ்வளவாக பொதுவெளியில் பேசப்படாத நிலை சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை நீடித்து வந்தது. ஆனால், அந்த மரபுகளை எல்லாம் தகர்த்தெறிந்த இளவரசி  உபோல்ரட்டனா மஹிடோல் அந்நாட்டின் பிரபல சினிமா நடிகையாக விளங்கினார். இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் இவருக்கு சுமார் ஒரு லட்சம் அபிமானிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ThaiPMelection #Ubolratana #MahaVajiralongkorn
    ராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்தில் அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் பிரதமர் பதவிக்கு அந்நாட்டின் இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் போட்டியிடுகிறார். #UbolratanaMahidol
    பாங்காக்:

    தாய்லாந்தில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் ஆட்சி கவிழ்க்கப்படுவதும், ராணுவம் அரியணை ஏறுவதும் தொடர்கதையாக உள்ளது.

    அந்த வகையில், கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. பிரதமரை பதவி விலகக்கோரி நடந்த போராட்டங்களில் பெரும் வன்முறை வெடித்தது.

    இதற்கிடையில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் யிங்லக் ஷினவத்ராவின் பிரதமர் பதவியை பறித்து அந்நாட்டு அரசியல் சாசன கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதனைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக வர்த்தக மந்திரி நிவாட்டம்ராங் பூன்சாங் நியமிக்கப்பட்டார். ஆனால் வலுவான தலைமை இல்லாததால் பெரும் அரசியல் குழப்பம் எழுந்தது.

    இதையடுத்து அந்நாட்டின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ராணுவ தளபதியாக இருந்த பிரயாட் சான்ஓசா பிரதமராக பொறுப்பேற்றார். நாட்டின் சட்டம், ஒழுங்கு சரியாகும் வரை மட்டுமே ராணுவ ஆட்சி அமலில் இருக்கும் என கூறிய நிலையில் அங்கு ராணுவ ஆட்சியே தொடர்ந்தது.

    பொதுத்தேர்தலை நடத்தி ஜனநாயக ஆட்சியை கொண்டு வர வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் குதித்தனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்படுவது வாடிக்கையானது.

    இந்த நிலையில் பொதுத்தேர்தலை நடத்தும்படி கடந்த மாதம் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் ஆணை பிறப்பித்தார். அதனை தொடர்ந்தது பிப்ரவரி மாதம் 24-ந்தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    ஆனால் சில காரணங்களால் பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி 500 உறுப்பினர்களை கொண்டு தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (மார்ச்) 24-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் பொதுத்தேர்தல் என்பதால் அரசியல் கட்சியினரிடமும், தாய்லாந்து மக்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தாய்லாந்து இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று உப்லோரட்டனா மஹிடோல் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    முன்னாள் பிரதமர்கள் யிங்லக் ஷினவத்ரா, தாக்‌ஷின் ஷினவத்ரா ஆகியோருக்கு ஆதரவான தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு கட்சியின் வேட்பாளராக அவர் களம் இறக்கப்பட்டு உள்ளார்.

    இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்த சில மணி நேரத்தில் தற்போதைய பிரதமர் பிரயாட் சான்ஓசா தானும் களத்தில் இருப்பதாக அறிவித்தார்.

    இதனால் இந்த பொதுத்தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உப்லோரட்டனா மஹிடோல் முன்னாள் மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜின் கடைசி மகளும், தற்போதைய மன்னர் மஹா வஜ்ரலோங்கோனியின் சகோதரியும் ஆவார்.#UbolratanaMahidol
    இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு காயத்திலிருந்து மீண்டு தாய்லாந்தில் நடந்த போட்டி ஒன்றில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். #EGATCup #MirabaiChanu
    இந்திய பளுதூக்கும் வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு (24). மணிப்பூரை சேர்ந்த இவர் கடந்த 2017ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர். கோல்டு கோஸ்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு 196 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார்.

    காயத்தினால் அவதிப்பட்ட அவர் கடந்த 9 மாதமாக எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. தொடர் சிகிச்சைக்கு பின் அவர் காயத்திலிருந்து மீண்டார்.

    இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் நடந்த ஈ.ஜி.ஏ.டி. கோப்பைக்கான பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு கலந்து கொண்டார்.

    இதில், 49 கிலோ எடை பிரிவில் சானு மொத்தம் 192 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். ஜப்பானின் மியாகே ஹிரோமி (183 கிலோ) வெள்ளிப்பதக்கமும், பப்புவா நியூ கினியாவின் லாவோ டிக்கா தவுவா (179 கிலோ) வெண்கலப் பதக்கமும் வென்றனர். #EGATCup #MirabaiChanu
    தாய்லாந்தில் 2 புத்த பிட்சுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாங்காங்க்:

    தாய்லாந்தில் மலேசிய எல்லையில் நராதிவாட் மாகாணம் உள்ளது. அங்குள்ள ரத்தானுபாப் என்ற இடத்தில் உள்ள புத்தர் கோவிலுக்குள் கறுப்பு நிற உடை அணிந்த பலர் திடீரென புகுந்தனர்.

    பின்னர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதில் புத்த பிட்சுகள் 2 பேர் அதே  இடத்தில் பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களை சுட்டுக் கொன்றது யார் என தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சவுதி அரேபியாவில் இஸ்லாம் மதத்தை துறந்து வீட்டை விட்டு வெளியேறி, தாய்லாந்தில் தவித்து வந்த இளம்பெண்ணுக்கு கனடா பிரதமர் அடைக்கலம் அளித்துள்ளார். #RahafMohammedalQunun #Saudiasylumseeker #Canadaasylum
    ஒட்டாவா:

    சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணான ரஹாஃப் முஹம்மது அல்-குனுன் சமீபத்தில் இஸ்லாம் மதத்தை துறந்ததுடன் பெற்றோருக்கு தெரியாமல் துபாயில் இருந்து விமானம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக பல வெளிநாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது.

    அவரது இந்த நடத்தைக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்படும் என்பதால் இவ்விவகாரம் பலரின் கவனத்தை கவர்ந்தது. ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் தனது தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்று அஞ்சிய ரஹாஃப், வழியில் தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் வந்து சேர்ந்தார்.

    பாங்காக் விமான நிலையத்தில் உள்ள குடியுரிமைத்துறை அதிகாரிகளிடம் தஞ்சம் கேட்டு மனு அளித்தார். அங்கு ஒரு அறை எடுத்து தங்கிய அவர், தனது கைபேசி மூலம் அவசரமாக டுவிட்டரில் கணக்கு தொடங்கினார். டுவிட்டர் பக்கத்தின் மூலம் தன்னுடைய நிலையை உலக மக்களுக்கு தெரியப்படுத்தினார். ஒரு வாரத்தில் அவருக்கு டுவிட்டரில் சுமார் ஒரு லட்சம் அபிமானிகள் குவிந்தனர். 

    அகதியாக வந்த தன்னை தாய்லாந்து குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்து அகதிகள் முகாமில் அடைக்கலாம். சிறைக்கும் அனுப்பலாம் என்று கருதிய அந்த இளம்பெண், அவர் தங்கியிருந்த அறையின் கதவை உள்பக்கம் தாளிட்டுக் கொண்டு தனது டுவிட்டர் பிரசாரத்தை நடத்தி வந்தார்.

    அதேவேளையில், அவருக்கு டுவிட்டர் மூலம் ஏகப்பட்ட கொலை மிரட்டல்களும் வந்ததால் திடீரென்று தனது டுவிட்டர் பக்கத்தை அவர் முடக்கினார். எனினும், #SaveRahaf என்ற ஹேஷ்டாக் மூலம் அவருக்கு ஆதரவான பிரசார இயக்கத்தை பலர் நடத்தி வந்தனர். சமூக வலைத்தளங்களில் #SaveRahaf வைரலானது. 

    இதற்கிடையில், அவருக்கு தாய்லாந்து அரசு குடியுரிமை அளிக்கக் கூடாது என்று அந்தப் பெண்ணின் குடும்பத்தாரும் பாங்காக்கில் உள்ள சவுதி தூதரக அதிகாரிகளும் வலியுறுத்தினர். இந்த பிரச்சனை சர்வதேச மனித உரிமை அமைப்பின் கவனத்துக்கு சென்றது.

    உயிர் பயத்தில் நடுங்கி கொண்டிருக்கும் ரஹாஃப் முஹம்மது அல்-குனுன்-க்கு எந்த நாடாவது அடைக்கலம் அளிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்பின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதேவேளையில், அந்தப் பெண்ணின் தந்தையும் சகோதரரும் தாய்லாந்துக்கு புறப்பட்டனர்.



    இந்நிலையில், அவரது நிலைமையை கண்டு மனமிரங்கிய கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடேயு,  ரஹாஃப் முஹம்மது அல்-குனுன்-க்கு அடைக்கலம் அளிக்க முன்வந்தார். இதையடுத்து, மனித உரிமை அமைப்பு அதிகாரிகள் மற்றும் தாய்லாந்து போலீசார், குடியுரிமைத்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் ரஹாஃப் டொரான்ட்டோ நகருக்கு விமானம் மூலம் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார். 

    சர்வதேச மனித உரிமை அமைப்பின் கோரிக்கையை ஏற்று கனடா அரசு இந்த முடிவுக்கு வந்ததாக டுருடேயு குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த நடவடிக்கை ஏற்கனவே பூசலில் இருக்கும் சவுதி-கனடா உறவில் மேலும் விரிசலையும், பகையையும் உருவாக்கும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    இஸ்லாமிய சட்டதிட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நடத்திவரும் சவுதி அரேபியாவில் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக கனடா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. சமீபத்தில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி துருக்கி நாட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் கனடா அரசு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தது.

    இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கனடாவுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் சவுதி துண்டித்து விட்டது. ரியாத்தில் இருந்த கனடா தலைமை தூதரும் திருப்பி அனுப்பப்பட்டார். 

    சவுதி அரசுக்கு எதிராக வலைத்தளங்களில் (பிளாக்) கருத்து வெளியிட்ட பலரை அந்நாட்டு அரசு கைதுசெய்து சிறையில் அடைத்து வைத்துள்ளது. அவர்களில் கனடா நாட்டின் கியூபெக் நகரில் வசிக்கும் ரைஃப் படாவி என்ற பெண்ணின் சகோதரரான சமர் படாவி என்பவரும் ஒருவராவார். 

    சமர் படாவி உள்பட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தற்போது கனடா அரசு மிக தீவிரமாக வலியுறுத்தி வருகிறது.

    இத்தனை விவகாரங்களுக்கு இடையில் சவுதி பெண்ணுக்கு கனடா தஞ்சமளித்துள்ள சம்பவம் அந்நாட்டின் ஆட்சியாளர்களின் ஆத்திரத்தை மேலும் பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும் என கருதப்படுகிறது. #RahafMohammedalQunun  #Saudiasylumseeker #Canadaasylum #JustinTrudeau #SaveRahaf
    தாய்லாந்தில் மாடி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். #Thailand #TouristBus #Accident
    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டின் ரோய் இட் மாகாணத்தில் உள்ள பனோம் பிராய் மாவட்டத்தில் இருந்து தலைநகர் பாங்காக்குக்கு மாடி பஸ் சென்றுகொண்டிருந்தது. இந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    இந்த பஸ் கோலோங் லுவாங் மாவட்டத்தில் உள்ள ஒரு சாலையில் சென்றுகொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியது. பின்னர் அந்த பஸ் சாலையில் கவிழ்ந்தது.

    இந்த பஸ் கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 50 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  #Thailand #TouristBus #Accident 
    ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் தாய்லாந்து அணியை 4 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. #AFCAsianCup #India #Thailand #SunilChhetri
    அபுதாபி:

    17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இது பிப்ரவரி 1-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா, அல் அய்ன் ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.
     
    இதில் அபுதாபியில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தாய்லாந்தின் டீராசில் டங்டா 33வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார்.

    ஆட்டத்தின் 46-வது நிமிடத்தில் சுனில் சேதரி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது.

    அவரை தொடர்ந்து, இந்திய வீரர்கள் அனிருத் தபா 68-வது நிமிடத்திலும், ஜிஜி லால் பெக்லுவா 80வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

    இறுதியில், இந்திய அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. #AFCAsianCup #India #Thailand #SunilChhetri
    ×