search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சிபுரம்"

    தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பொன்னையா கூறினார். #LokSabhaElections2019
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-

    2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி முதல் அமலில் உள்ளது.

    சில நாட்களாக கட்சி தலைவர்களின் கூட்டங்கள், 2-ம் கட்ட தலைவர்களின் பிரசாரங்களில் 2-ம் கட்ட தலைவர்களின் சர்ச்சை பேச்சுக்களால் தேர்தல் விதிமீறல் நடந்துள்ளது. காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4122 வாக்குசாவடிகள் உள்ளன. அவற்றில் 236 பதற்றமான வாக்குசாவடிகள். 1357 வாக்குசாவடிகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

    வாக்குசாவடிகளில் நடைபெறும் வாக்குபதிவு தொடர்பான நிகழ்வுகள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பாராளுமன்ற தேர்தலில் 20,500 வாக்குசாவடி அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். 4122 வாக்குசாவடிகளுக்கும் தலா 4 பேர் வீதம் பணிபுரிவர். இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்போரூரில் மட்டும் கூடுதலாக 6 பேர் பணியில் இருப்பர்.

    அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குசாவடிகளில் மொத்தம் 17,102 வாக்குசாவடி அலுவலர்கள் தேர்தல் நாளன்று பணிபுரிய உள்ளனர். 3298 வாக்குசாவடி அலுவலர்கள் மாற்றாக வைக்கப்படுவர்.

    வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக மாற்று வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குசாவடிகளுக்கு மண்டல அலுவலர்கள் 578 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

    வெளி மாவட்ட கட்சியினர் அவரவர் ஊர்களுக்கு வெளியேற உத்திரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு செல்லாதவர்கள் மீது தேர்தல் சட்டத்தின் 133 வது பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருமண மண்டபம், தங்கும்விடுதிகளில் வெளியூர் ஆட்கள் அதிக அளவில் தங்கி கட்சிப்பணியில் ஈடுபட்டாலோ, அல்லது வேறு ஏதேனும் பிரச்சாரம் செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019

    ஜெயலலிதா அறிவித்த தாய் சேய் நலப்பெட்டகம் நினைவாகவே பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்வு செய்தோம் என அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #AMMK #Dinakaran #GiftPack
    காஞ்சிபுரம்:

    டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. அதற்கு பின்னர் பொதுவான சின்னம் தேர்வு செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டள்ளது. அதன்படி டி.டி.வி. தினகரன் அணிக்கு பரிசு பெட்டகம் சின்னம் இன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பரிசுப்பெட்டி சின்னத்தை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:



    தேர்தல் ஆணையம் தனிச்சின்னம் அடங்கிய பட்டியலை அனுப்பி தேர்வு செய்ய கோரியது. அதற்காக 36 சின்னங்கள் அடங்கிய பட்டியலை எங்களுக்கு அனுப்பியது. அதில் பரிசு பெட்டகத்தை தேர்வு செய்தோம்.

    ஜெயலலிதா அறிவித்த தாய் சேய் நலப்பெட்டகம் நினைவாக பரிசு பெட்டகத்தை தேர்வு செய்தேன். மிகப் பெரிய போராட்டத்திறகு பிறகு பரிசு பெட்டகம் சின்னம் கிடைத்துள்ளது. 

    அமைச்சர் ஜெயக்குமார் எப்படி பேசுகிறாரோ, அதற்கு எதிராகவே மக்கள் வாக்களித்து வருகின்றனர். எனவே அவர் அப்படி பேசுவது எங்களைப் பொறுத்தவரை நல்ல சகுனம்தான் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #AMMK #Dinakaran #GiftPack
    ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு பல்வேறு வே‌ஷங்களை போடுகிறார் என்று துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். #OPS #MKStalin

    திருப்போரூர்:

    காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்டமன்ற வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து திருப்போரூர் பஸ் நிலையம் அருகே துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம்  செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    எங்கள் கூட்டணி பலம் வாய்ந்த மகா கூட்டணி. புரட்சித்தலைவி அம்மா மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அர்ப்பணித்து சிறப்பான ஆட்சி நடத்தியதை யாரும் மறக்கமுடியாது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்றம்வரை எடுத்துச்சென்று பல சட்டப் போராட்டங்களை நடத்தினார்.

    மத்தியில் காங்கிரஸ், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்த போது தான் இலங்கையில் 4 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 5 லட்சம் பேர் கை, கால்கள் மற்றும் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கதியாயினர்.

    கருணாநிதியின் கபட நாடகத்தால் போர் நின்று விட்டதாக அறிந்து பதுங்கு குழியிலிருந்து வெளியில் வந்த 40 ஆயிரம் குழந்தைகள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். தமிழர்களுக்கு துரோகம் செய்த கட்சி தி.மு.க.

    அ.தி.மு.க.வின் 2011-16 ஆண்டு வரையிலான பொற்கால ஆட்சியில் விலையில்லா அரிசி, பசுமை வீடுகள், மற்றும் தொலை நோக்கு திட்டம் தயாரிக்கப்பட்டது. இதனால் கிராமம், நகரம், பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில் குடிசைவீடுகள் அற்ற நிலை உருவாகிறது.

    இதுவரை தமிழகத்தில் 16 லட்சம் குடிசைவீடுகள் கணக்கிடப்பட்டு 6 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. 2023-க்குள் அம்மா எண்ணப்படி தரமான வீடுகள் கட்டித்தரப்படும்.

    இந்த இடைத்தேர்தல் எதனால் வந்தது கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள். அவர்கள் தன்னை வளர்த்து ஆளாக்கிய அம்மாவிற்கு துரோகம் செய்தவர்கள்.

    ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு பல்வேறு வே‌ஷங்களை போடுகிறார். அவர் டீக்கடையில் டீ குடிக்கிறார். நான் டீக் கடையே நடத்தியவன். தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, வன்முறை கலாச்சாரம், காலூன்றி கொடிகட்டிபறக்கும்.

    தமிழகத்தில் தீயசக்திகளை தலைதூக்க விடமாட்டோம். இது எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சி. புரட்சித்தலைவியின் உழைப்பால் பல்வேறு சோதனைகள், பிரச்சனைகள் சதிகளை முறியடித்து இன்று ஒன்றரை கோடி பேர் உள்ள இயக்கமாக மாறி உள்ளது. இது எஃகு கோட்டை. எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார். #OPS #MKStalin

    காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஸ் மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #MaduranthakamAccident
    மதுராந்தகம்:

    மன்னார்குடியை சேர்ந்தவர் பத்மாவதி (வயது 50). சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவரது உறவினர் வீட்டு திருமணம் மன்னார்குடியில் நடந்தது.

    இந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக பத்மாவதி, சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னை வந்தார்.

    அவரை அழைத்து செல்வதற்காக மன்னார்குடியில் இருந்து பத்மாவதியின் மகன் மணிகண்டன் (25), மருமகன் வேல்முருகன் (35), பேத்தி திரிஷா (12) ஆகியோர் காரில் வந்தனர்.

    விமான நிலையத்துக்கு வந்து பத்மாவதியை 3 பேரும் காரில் ஏற்றிக் கொண்டு மன்னார்குடி நோக்கி சென்றனர். காரை வேல் முருகன் ஓட்டினார். மதுராந்தகம் அடுத்த திருநாகலூர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது வேல்முருகன் திடீரென்று கண் அயர்ந்தார்.

    அப்போது கார் தறிகெட்டு ஓடத் தொடங்கியது. பின்னர் அந்த கார் சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரை இடித்துக் கொண்டு சாலையின் மறுபுறம் ஓடியது. அப்போது எதிரே வந்த தனியார் ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் மீது கார் வேகமாக மோதியது.

    இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்த பத்மாவதி, மணிகண்டன், வேல்முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். திரிஷா பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிய திரிஷாவை மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #MaduranthakamAccident
    காஞ்சிபுரத்தில் அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். #MKStalin

    காஞ்சிபுரம்:

    சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் அறிஞர் அண்ணா நடத்தி வந்த திராவிட நாடு பத்திரிகைக்கு சொந்தமான கட்டிடத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் முழுஉருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை திறந்து வைக்கிறார்.

    முன்னதாக காஞ்சிபுரம் அடுத்த சேக்காங்குளம் பகுதியில் ஒன்றியச் செயலாளர் சிறுவேடல் செல்வம் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள 20 அடி உயர பிரமாண்டமான கல்வெட்டினை திறந்து வைத்து 95 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியை ஏற்றுகிறார். இதேபோல் காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே கல்வெட்டினை திறந்து கட்சி கொடியை ஏற்றுகிறார்.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடி பகுதியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. மேற்பார்வையில் பிரமாண்டமான மேடை அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன.

    இதையொட்டி காஞ்சிபுரம் நகரம் முழுவதும் தி.மு.க. கொடிகளும் தோரணங்களும் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் முக. ஸ்டாலின் ஆகியோரின் உருவங்கள் வண்ண விளக்குகளால் கண்ணை கவரும் விதத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    நிகழ்ச்சிகளுக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார். நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்துகிறார். சி.வி.எம். அ.சேகரன், எழிலரசன் எம்.எல்.ஏ., தசரதன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். #MKStalin

    காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். போலீசார் தேடுவதை அறிந்த அவன் வெளிநாடு தப்பி சென்று இருந்தான்.

    கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீதர், கம்போடியா நாட்டில் உள்ள ஓட்டலில் திடீரென சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்டான்.

    இதைத் தொடர்ந்து ஸ்ரீதரின் கூட்டாளிகளாக இருந்த தனிகா மற்றும் தினேஷ் ஆகியோர் இரு பிரிவாக பிரிந்தனர். அவர்களுக்குள் யார் பெரியவர் என்பதில் மோதல்கள் ஏற்பட்டு வந்தன.

    இதனால் ரவுடி ஸ்ரீதரின் இறப்புக்கு பின்னரும் காஞ்சிபுரம் பகுதிகளில் தொடர்ந்து குற்ற செயல்கள் நடந்து வந்தன.

    இந்த நிலையில் சிறையில் இருந்த தினேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்தார். கடந்த வாரம் பொன்னேரிக்கரை அருகே ஆயுதங்களுடன் சுற்றிய அவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே ரவுடி தனிகா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

    இதற்கிடையே ரவுடி தினேசின் கூட்டாளிகளான சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சரவணன், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    பொன்னேரிக்கரை அருகே காரில் ஆயுதங்களுடன் சுற்றிய அவர்கள் 2 பேரும் போலீசில் சிக்கி உள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    காஞ்சிபுரத்தில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீட்டில் வைத்து இருந்த நாட்டு வெடி வெடித்ததில் பெண் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். #Kanchipuram #Diwali
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் நாகலு தெருவில் இருக்கும் சைரா பானு என்பவர் தீபாவளி சீட்டுபோட்டு, பட்டாசு விநியோகம் செய்து வந்துள்ளார். அதற்கென அவரது வீட்டில் வாங்கி வைக்கப்பட்டு இருந்த நாட்டு வெடிகள் திடீரென வெடித்ததில், சைரா பானுவின் மகன்கள் உட்பட 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    வெடி விபத்தில் வீடு இடிந்து தரை மட்டம் ஆனது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    பட்டாசுகளை முறையான அனுமதி பெற்றே விற்க வேண்டும் என உத்தரவிட்டும் இதுபோன்று சட்டவிரோதமாக குடியிருப்பு பகுதிகளில் வைத்திருந்ததே இந்த தீ விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. #Kanchipuram #Diwali
    ×