search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணையதளம்"

    ஆபாச செய்கைகள், அரை நிர்வாண காட்சிகள், இளைஞர்கள்-இளம்பெண்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படும் கவர்ச்சி திரைப்படங்கள் என... இந்திய சினிமாவிலும் ஆபாசம் அதிரடியாக நுழைந்திருக்கிறது.
    ‘அ டல்ட் கண்டன்ட்’, ‘18+ தகவல்கள்’, ‘போர்னோகிராபி’... போன்ற வார்த்தைகள் எல்லாம் இன்றைய தலைமுறையினருக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. ஏனெனில் இளைய தலைமுறை `இணையதலைமுறை' என்பதால், அவர்களது கைகளில் இருக்கும் ஸ்மார்ட் போன்களில் ஆபாச படங்களும், அந்தரங்க கட்டுரைகளும் தாராளமாக காணக்கிடைக்கின்றன. அதுமட்டுமா..?, பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும், கவர்ச்சி மீம்ஸ்களின் ஆதிக்கமே அதிகரித்திருக்கிறது. இது நவீன யுகத்தின் தலைவிதி என்றால், இக்காலத்து சினிமாவும், கவர்ச்சி டிரெண்டிங்கில் வைரலாகி வருகிறது.

    இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச செய்கைகள், அரை நிர்வாண காட்சிகள், இளைஞர்கள்-இளம்பெண்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படும் கவர்ச்சி திரைப்படங்கள் என... இந்திய சினிமாவிலும் ஆபாசம் அதிரடியாக நுழைந்திருக்கிறது. பிரபல நடிகர்களும், இத்தகைய திரைப்படங்களில் நடித்து டிரெண்டிங் ஆவதுதான், இந்திய சினிமாவின் தலையெழுத்தாகிவிட்டது.

    ஒரு காலத்தில் இலை மறைகாயாக மட்டுமே நடமாடி வந்த ஆபாசம் இன்று வெளிப்படையாகவே நடமாட ஆரம்பித்துவிட்டது. குளியறையிலும், ஒதுக்கு புறமான இடத்திலும் மறைத்து மறைத்து படித்த ஆபாச கதைகளை, இன்று தங்களுடைய தனி அறையிலேயே ஏ.சி.வசதியுடனேயே படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கூடவே, கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட்போன்களின் மூலம் ஆபாச படங்களையும் பார்க்க பழகிவிட்டனர். படங்களை தரவிறக்கம் செய்து பார்க்கும் இந்தக்காலத்திலும், டி.வி.டி.களின் ராஜ்ஜியம் நடக்கிறது என்றால், அதற்கு ஆபாச படங்களும் ஒரு காரணமாகின்றன.

    ஆபாசத்தை ரசிக்கும் பழக்கம், இந்தியாவில் பலரது பழக்கமாக மாறியதால் இந்தியர்களை குறிவைத்தே புதுப்புது ஆபாசப் படங்களும், பிரத்யேக இணையதளங்களும் வந்து கொண்டே இருக்கின்றன. இதை பொழுதுபோக்கிற்காக பார்ப்பவர்களுடன், பணம் செலுத்தி பார்ப்பவர்களும் அதிகரித்துவிட்டனர். அவர்களுக்காகவே ஆபாச இணையதளங்கள், ரூ.30-ல் தொடங்கி ரூ.10,000 வரை கட்டணத்தை நிர்ணயித்து உள்ளன. அதிலும் மிகத்தெளிவான ஹெச்.டி. வீடியோக்கள் என்றால், நுழைவு கட்டணம் ரூ. 20 ஆயிரம் வரை நீளும். ஆபாச வீடியோக்களை பார்த்து சலித்தவர்கள், தங்களது அந்தரங்க ஆசைகளை புதுவிதமாக நிறைவேற்றி பார்க்கவும் ஆசைப்படுகிறார்கள். அதற்கும் சில இணையதளங்கள் ‘லைவ்-சாட்’ எனப்படும் நேரலை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளன.

    இந்த இணையதளங்களில் நுழைவு கட்டணம் செலுத்தி தங்களை பதிவு செய்துகொண்டால், நம்முடைய கட்டளைக்கு தலையாட்டும் பொம்மைகளை போன்ற பெண்கள் நேரலையில் தோன்றுவார்கள். இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா... போன்ற பல நாடுகளில் இருந்தும் பலர் இந்த இணைய தளங்களில் இணைந்திருப்பதால், ஆசைக்கேற்ப ஆட்களை தேர்வு செய்யமுடியும். இவை பல இளையோரின் ஆசைகளைத் தீர்க்க வழியாக அமைகின்றன. தங்களை நல்லவராக சமூகத்தில் காண்பிக்க நினைப்பவர்கள் இத்தகைய ஆபாச இணைய தளங்கள் வழியாக தங்களது அந்தரங்க ஆசைகளை தீர்த்துக்கொள்கிறார்கள்.

    மேலும் உடல் அழகை வெளிப்படுத்த விரும்பியும், ஆண்மையின் பெருமையை வெளிக்காட்டும் ஆசையாலும், ஆண், பெண் நட்புகளை உருவாக்கும் நோக்கத்துடனும், நிர்வாண உடலை பொழுதுபோக்காக காட்ட நினைத்தும் பலர் இத்தகைய இணையதளங்களில் இணைகின்றனர். சிலர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காகவும், இதில் இணைகிறார்கள். அதனால்தான் அந்தரங்க கதைகள், ஆபாச வீடியோக்கள், லைவ் செக்ஸ் சாட் சம்பந்தமான உலக மார்க்கெட்டில், இந்தியா முன்னேறிக்கொண்டே இருக்கிறது. இந்த வேகம் இணைய தலைமுறையினரின் எதிர்காலம் மீதான அச்சத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. ஏனெனில் சமீபகாலமாக அரங்கேறி வரும் காம களியாட்டங்களுக்கு, ஆபாசப் படங்களும் ஒருவித காரணமாகிவிட்டன.



    ‘போர்னோகிராபி’ என்பது, உடலுறவு சம்பந்தப்பட்ட காட்சிகளை மையப்படுத்தி எடுக்கப்படும் ஆபாச திரைப்படம். இதுபோன்ற திரைப்படங்களை எடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அனுமதி வழங்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க கற்பனை கதையில் உருவாகும் திரைப் படம் என்பதால், இதில் உறவு முறைகளை கொச்சப்படுத்தி எடுப்பதும் உண்டு. அதாவது ‘பிறர் மனை நோக்காதே’ என்பதற்கு எதிர்மறையாக உறவுமுறையிலும், வயது வித்தியாசமின்றியும் கதைக்களம் அமைத்து, உடலுறவு காட்சிகளை படம்பிடிப்பார்கள்.

    இவை கற்பனை படங்கள் என்பதை உணர்ந்தவர்கள், எளிதில் கடந்துவிடுவார்கள். ஆனால் அதை உணராதவர்கள், அந்த படத்தில் நிகழ்த்தப்பட்டதை தங்களது நிஜ வாழ்விலும், நிகழ்த்தி பார்க்க முயலும்போதுதான் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல், ஆசிரியர்-மாணவர் இடையிலான காதல், கள்ளத்தொடர்பு, கூட்டாக நிகழும் பாலியல் வன்முறை... போன்ற பல பிரச்சினைகளுக்கு இத்தகைய ஆபாச படங்கள் காரணமாகிவிடுகின்றன. அதனால்தான் ஆபாசத்தை விரும்பும் இளையதலைமுறையினர் பற்றிய கவலை அதிகரித்திருக்கிறது.

    ஆபாச இணையதளங்கள் பலவும் மேற்கத்திய கலாசாரத்தை மற்ற நாடுகளில் திணிக்கும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. நமது சமூகத்தில் அருவருப்பாகவும், ஆபாசமாகவும் பார்க்கப்படும் பல விஷயங்கள், மேற்கத்திய நாடுகளில் கலாசாரமாக கொண்டாடப்படுகின்றன. அவர்களின் கொண்டாட்டத்தைதான் நாம் பணம் செலுத்தி, ஆபாசம் என்ற பெயரில் ரசித்துக்கொண்டிருக்கிறோம். இதை மேற்கத்திய நாடுகள் ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் இந்திய இளையதலைமுறை கொண்டாடுவதுதான் பெரும் சிக்கலாக மாறியிருக்கிறது.

    இதை உணர்ந்துகொண்ட இந்திய அரசாங்கம், இந்தியாவில் அதிகம் தேடப்படும் ஆபாச இணையதளங்களை முடக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறது. 2015-ம் ஆண்டு முதலே இத்தகைய முயற்சிகளில் இறங்கியிருக்கும் இந்திய அரசாங்கம், அந்த சமயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்களை முடக்க முயற்சித்தது. இருப்பினும் ஆபாச இணையதளங்களின் கொட்டம் அடங்கியபாடில்லை. புதுப்புது பெயர்களில் ஆபாச வீடியோக்களையும், அந்தரங்க கதை களையும் உள்ளடக்கிய இணையதளங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

    அதேசமயம் இளைஞர்களின் காமப்பசிக்கு தீனி போடும் விதமாக குறிப்பிட்ட சில தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இலவச மொபைல் டேட்டாக்களை வழங்குகின்றன. இதன்மூலம் செலவில்லா சீரழிவு திட்டத்தின் வாயிலாக, இலவசமாகவே ஆபாச வீடியோக்களை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

    ஆபாசம் என்பதை ‘ஆடை குறைபாடு’ என்ற சொற்களில் அடக்கிவிட முடியாது. அதையும் தாண்டி, அந்தரங்கமாக மட்டுமே நிகழ வேண்டிய செயல்களை பொது இடத்தில் அரங்கேற்றுவதையே ‘ஆபாசம்’ என்ற வார்த்தையின் அர்த்தமாக கொள்ளலாம்.



    ஓர் இளைஞன் முன்பின் அறிமுகம் இல்லாத பெண்ணிடமும், ஓர் இளம்பெண் யாரென்றே தெரியாத ஆணிடமும் ‘வீடியோ சாட்’ மூலம் நிர்வாணமாகத் தன்னை அறிமுகம் செய்து கொள்வதும் ஆபாசமாக பார்க்கப்படுகிறது. இது எதிர்கால வாழ்வில் பல சிக்கல்களை உருவாக்க வாய்ப்புள்ளது.

    சிலர் தினந்தோறும் இத்தகைய இணையதளங்களில் நேரத்தை செலவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது அவர்களது நிகழ்காலத்தை பாதித்து, எதிர்மறை சிந்தனைகளை மனதில் உருவாக்கும். திருமணத்துக்கு புறம்பான உடலுறவை ஊக்குவிக்கும் வகையிலான பல வீடியோக்களும் இத்தகைய தளங்களில் காணப்படுகின்றன.

    ஓரினச்சேர்க்கை, தகாத உறவுமுறைகள், வயது வித்தியாசமில்லாத உறவுகள்... போன்றவற்றை தூண்டுவதாக இவை அமைந்துவிடுகின்றன.

    இப்போது பெரும்பாலானோர் கேமரா உள்ள செல்போன் களையே பயன்படுத்துகின்றனர். அவர்களில் துடுக்கான சிலர் பூங்காக்கள், கடற்கரைகள் போன்ற பொது இடங்களில் அரங் கேறும் அந்தரங்ககாட்சிகளை ரகசியமாக படம்பிடித்து இத்தகைய இணையதளங்களில் பதிவேற்றம் செய்து விடுகின்றனர்.

    ஆபாச இணையதளங்களும் காப்புரிமை பற்றி எவ்வித கவலையும் இன்றி வீடியோக்களைப் பதிவேற்றம் செய்ய அனு மதிக்கின்றன. அதேசமயம் சிறந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களுக்கு தக்க சன்மானமும் வழங்குகின்றன. இலவசமாக ஆபாச வீடியோக்களை காண்பித்து, அதுபோன்ற தவறான உறவுகளில் ஈடுபட வைத்து, அதை வீடியோவாக எடுத்து, தங்களுடைய இணையதளங்களை பலப்படுத்தி கொள்கின்றன.

    அமேசான் மற்றும் அந்தமான் காடுகளில் இன்றளவும் ஆடை அணியாமல் வாழும் சில பழங்குடி சமூகங்கள் கட்டுக்கோப்பான ஒழுக்கம் கொண்டவர்களாக வாழ்கின்றனர். கோவணத்துடன் வயலில் வேலை செய்யும் விவசாயிகளையோ, குறைந்த உடையுடன் சாக்கடைகளைத் தூய்மை செய்வோரையோ யாரும் ஆபாசமாக பார்ப்பதில்லை. ஆகவே, நிர்வாணமோ குறைவான ஆடையோ ஒருவரை ஆபாசம் என்ற வரம்புக்குள் கொண்டு வராது. நமது எண்ணங்களே எது ஆபாசம் என்று முடிவு செய்கிறது.

    நிர்வாணம் என்பது இயல்பாகவே தவறானது அல்ல. கெட்ட எண்ணம் கொண்ட பார்வையில் அது ஆபாசமாக மாறுகிறது. எதையும் இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியாத சிந்தனையே ஆபாசத்தின் எல்லையைத் தீர்மானம் செய்கிறது. சமூகத்தில் நிகழும் பாலியல் வன்முறைகளுக்கும் ஒழுக்கக்கேடுகளுக்கும் ஆபாச இணையதளங்கள் தீனி போடுகின்றன. இனப்பெருக்கத்திற்காக இயற்கை தந்துள்ள பாலுணர்வைத் தவறான வழியில் பயன்படுத்த இளையோரை அவைத் தூண்டுகின்றன என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.

    தனியாக இருக்கும் பிள்ளைகள் அதிக அளவில் ஆபாச இணையதளங்களுக்கு அடிமையாவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இளம் வயதினருக்கு செல்போன்களைக் கொடுத்து வளர்க்கும் பெற்றோர்கள், அவர்கள் அவற்றை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை கவனிப்பது அவசியம். எது தவறு என்று சுட்டிக் காட்டுவதை விடவும், குழந்தைகள் சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து முன்னேற உடனிருந்து பயிற்சி அளிப்பது நன்மை பயக்கும். இளையோரும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால், வருங்காலத்திலும் கட்டுப்பாடான சமூக ஒழுக்கத்தைப் பாதுகாக்க முடியும்.

    -டே. ஆக்னல் ஜோஸ்
    பெண்கள் சமூக வலைத்தளங்களில் நமது தனிப்பட்ட விஷயங்களைப் பகிராமலும், புகைப்படங்களைப் பகிராமலும், விரோத சிந்தனைகளைப் பகிராமலும் இருந்தால் பெரும்பாலான சிக்கல்களிலிருந்து விடுபட்டு விடலாம்.
    சமூக வலைத்தளங்கள் இன்றைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாய் உருமாறியிருக்கின்றன. ஒரு காலத்தில் இணையம் என்பதே தொழில்நுட்ப வல்லுநர்களுக்கானது எனும் நிலமை இருந்தது. இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் உலவாத மக்களே இல்லை எனும் நிலை தான் எங்கும். அதிலும் வீடுகளில் பொழுது போகாமல் இருக்கும் பெண்கள் சமூக வலைத்தளங்களை சீரியலுக்கு மாற்றாக நினைத்துக் கொள்வதுண்டு.

    சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு இருக்கும் மிக முக்கியமான அச்சுறுத்தல் பாதுகாப்பு தான். வலைத்தளங்களில் தங்களுடைய புகைப்படங்களை வெளியிடுவதில் பெரும்பாலான இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் கிடைக்கின்ற கமென்ட்களும், லைக்களும் தங்களுக்கான அங்கீகாரம் என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் கருத்து சொல்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் விஷமிகள் என்பது தான் அச்சமூட்டும் விஷயம்.

    பலான தளங்களில் இருக்கும் புகைப்படங்களில் 69 சதவீதம் புகைப்படங்களும் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாமல் பயன்படுத்தப்படுவது தான் என சமீபத்தில் புள்ளி விவரம் ஒன்று சொன்னது. ஒரு புகைப்படம் நல்ல தளத்தில் இருப்பதற்கும், பலான தளத்தில் இருப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை நீங்கள் அறிவீர்கள். அந்த தளங்களில் பயணிப்பவர்களுடைய பார்வையின் உக்கிரத்தையும், வக்கிரத்தையும் நீங்கள் உணர்வீர்கள். எனவே எந்த ஒரு புகைப்படத்தையும் பதிவேற்றும் முன் ஒரு கேள்வி கேளுங்கள். “இது அவசியம் பதிவேற்ற வேண்டுமா ?”. அவசியம் என மனம் சொன்னால் பதிவேற்றுங்கள், இல்லையேல் விட்டு விடுங்கள்.

    இன்னொரு ஆபத்தான ஏரியா சேட்டிங். உரையாடுங்கள் என வசீகர அழைப்புடன் எக்கச்சக்கமான செயலிகள் இப்போது வருகின்றன. வாட்ஸப், மெசஞ்சர், டெலிகிராம் என ஏகப்பட்ட செயலிகள் இருக்கின்றன. இத்தகைய தளங்களில் உரையாடும் போதும் கவனம் அவசியம். நாம் ஒருவருக்கு அனுப்புகின்ற ஒரு செய்தி நேரடியாக அவரிடம் போவதில்லை. முதலில் நமது மொபைபில் பயணிக்கிறது, பிறகு நமது மொபைல் நெட்வர்க்கில் பயணிக்கிறது, பின்னர் அடுத்த நபரின் நெட்வர்க்கில் பயணிக்கிறது, பின் அவரது மொபைபில் போகிறது, இரண்டு மொபைல்களிலும் உள்ள ஆப் வழியாக செல்கிறது. இந்த பயணத்தின் எந்த ஒரு ஒரு இடத்தில் வேண்டுமானாலும் உங்களுடைய தகவலை சம்பந்தப் பட்ட நெட்வர்க்கோ, அல்லது மொபைல் நிறுவனமோ, அல்லது ஆப் நிறுவனமோ மிக எளிதாக எடுக்க முடியும்.

    சமூக வலைத்தளங்களில் தேவையற்ற விஷயங்களைக் கொடுப்பது வம்பை விலைக்கு வாங்குவது போல. ‘பிவேர் ஆஃ டி.எம்.ஐ” என ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஏகப்பட்ட தகவல்களை இணையத்தில் கொட்டாமல் கவனமாய் இருங்கள் என்பது அதன் பொருள்.

    நமது  பெற்றோர் பெயர், விலாசம், மொபைல் நம்பர் போன்ற எதுவுமே இணையத்தில் இல்லாமல் இருப்பதே சிறந்தது. நமது பிறந்த ஊர், நம்முடைய வங்கி விவரங்கள் போன்ற தகவல்களெல்லாம் பல்வேறு தகவல் திருட்டுகளுக்குப் பயன்படலாம் என்பதில் கவனமாய் இருங்கள்.

    சமூக வலைத்தளத்தை மொபைலில் வைத்திருக்கிறீர்களெனில், மொபைலுக்கு ஒரு வலிமையான பாஸ்வேர்ட் போடுங்கள். ஆப்ஸ்களை அணுக தனி பாஸ்வேர்ட் போட்டு வைப்பதும் நல்லது.

    சமூக வலைத்தளங்களில் யாரேனும் தவறாய் அணுகினால் அவர்களை பிளாக் செய்யவோ, நேரடியாக “சாரி” என சொல்லி விலகிக் கொள்வதோ மிகவும் முக்கியமான தேவை. அடுத்த நபர் என்ன நினைப்பாரோ ? காயமடைவாரோ எனும் சந்தேகங்கள் தேவையில்லை.

    குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. அப்படி பயன்படுத்துகிறார்களெனில் பெற்றோர் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் பிள்ளைகளை வைத்திருக்க வேண்டும். சமூக வலைத்தளச் சிக்கல்களை அவர்களுக்கு விளக்க வேண்டும். எதை செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்பதை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    சமூக வலைத்தளங்களில் நமது தனிப்பட்ட விஷயங்களைப் பகிராமலும், புகைப்படங்களைப் பகிராமலும், விரோத சிந்தனைகளைப் பகிராமலும் இருந்தால் பெரும்பாலான சிக்கல்களிலிருந்து விடுபட்டு விடலாம். 
    இன்று பேஸ்புக் பயன்படுத்தும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. பேஸ்புக்கில் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு.
    இன்று பேஸ்புக் பயன்படுத்தும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. பேஸ்புக்கில் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது நமது கைகளில் தான் இருக்கிறது. பேஸ்புக்கை பயன்படுத்தும் பெண்கள் தெரியாமல் செய்யும் செயலால் பல பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. சாலை என்று இருந்தால் அதில் விபத்துக்கள் நடக்க கூடும். விபத்திலிருந்து நம்மை பாதுகாப்பதற்கு சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். அதுபோல் தான் பேஸ்புக்கில் நம்மை பாதுகாப்பதற்கு சில வழிமுறைகளை பின்பற்றினால் பாதுகாப்பாக இருக்கலாம். இல்லை என்றால் பல ஆபத்துகளை சந்திக்கக்கூடும். பேஸ்புக்கில் பெண்கள் செய்யும் சில தவறுகளை பற்றி பார்ப்போம்.

    பேஸ்புக்கில் இன்று பெண்கள் செய்யும் மிக பெரிய தவறில் ஒன்று தங்களுடைய புகைப்படங்களை பகிர்வது. அந்த புகைப்படங்கள் எல்லாம் எங்கே செல்கிறது எவ்வாறு பயன்படுத்தபடுகிறது என்று பெண்களுக்கு தெரிவது இல்லை. பெண்கள் சர்வசாதாரணமாக புகைப்படங்களை பகிர்கின்றனர். நீங்கள் பகிரும் புகைப்படங்களை விஷமிகள் எடுத்து மார்பிங் செய்து ஆபாச இணையதளத்திற்கு விற்று விடுகிறார்கள். இப்படி பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கின்றனர். சற்று தெளிவான பெண்கள் பேஸ்புக் டைம் லைனில் புகைபடங்களை பகிர்வதில்லை.

    பேஸ்புக்கில் பெண்கள் அவர்களின் உறவினர்களுடன் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் உரையாடும் போது அவர்களின் புகைப்படங்களை பகிர்வார்கள். நம் உறவினர் மற்றும் நம் நண்பர்களை தவிர வேறு யாராலும் பார்க்க முடியாது அப்படி செய்வது மிகவும் பாதுகாப்பானது என்று பல பெண்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். அது தான் இல்லை. நீங்கள் பேஸ்புக்கை எப்போது தொடங்கினீர்களோ அப்போதிலிருந்து நீங்கள் பேசிய உரையாடல், புகைப்படங்கள் மற்றும் அனைத்து நடவடிக்கையும் பேஸ்புக் சர்வரில் சேமித்து வைத்து இருக்கும்.

    இதில் சுவாரஸ்யமான விஷயம் என்ன வென்றால் நீங்கள் அழித்தவற்றையும் பேஸ்புக் சேமித்து வைத்து இருக்கும். இதனால் எனக்கு என்ன ஆபத்து என்று கேட்கலாம் உங்கள் பேஸ்புக் கணக்குஹேக்கர்ஸ் அல்லது விஷ கிருமியிடம் கிடைத்தால் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள அனைத்து தகவல்களையும் எடுத்து அதை எந்த வழிகளிலும் பயன்படுத்த முடியும். ஆகையால் பெண்கள் பேஸ்புக்கில் உரையாடும் போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    பேஸ்புக்கில் நமக்கு அறிமுகம் இல்லாத நபர் யாரும் நட்பு வேண்டுதல் கொடுத்தால் அதை ஏற்காதீர்கள். உங்களுக்கு நன்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மட்டும் நட்பு வைத்து கொள்ளுங்கள். இதனால் பல பிரச்சினைகளை தவிர்க்கலாம். பேஸ்புக்கில் போலி கணக்குகளும் இருக்கின்றன. எனவே யாரையும் எளிதாக நம்பிவிடவேண்டாம்.

    எந்த புரொபைலையும்(சுய விவர குறிப்பு) பார்த்ததும் நட்பு வேண்டுதல் செய்து விடாமல், அந்த கணக்கை பற்றி முழு விவரம் தெரிந்த பின்னர் நட்பு வேண்டுதலை தெரிவியுங்கள். பெண்கள் பேஸ்புக் கணக்கை தொடங்கும் போது தங்களின் தொலைபேசி எண் வைத்து கணக்கை தொடங்குவார்கள். அவ்வாறு செய்வது பெண்களுக்கு பாதுகாப்பானது இல்லை.

    நீங்கள் உங்கள் பேஸ்புக் கணக்கை தொலைபேசி எண்ணை வைத்து உருவாக்கினால் உங்கள் தொலைபேசி எண் பேஸ்புக்கில் உள்ள ரிப்போர்ட் பக்கத்தில் தோன்றும் அதை எல்லாராலும் பார்க்க முடியும். இதனால் அந்த எண்ணுக்கு தேவையில்லாத அழைப்புகள் வரக் கூடும். பேஸ்புக் கணக்கை உருவாக்கும்போது பெண்கள் மின்னஞ்சலை பயன்படுத்தி உருவாக்குங்கள் அது பாதுகாப்பானது. அந்த மின்னஞ்சலை வேறு எதற்கும் பயன்படுத்த வேண்டாம் பேஸ்புக் கணக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.

    ஒரு சில நேரம் பெண்கள் சிலரை நல்லவர் என்று நினைத்து அவர்களின் நட்பு வேண்டுதலை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் ஏற்றுகொண்ட பிறகு அவர்களின் தொல்லை அதிகமாக இருக்கும். அவர்களை முதலிலே தவிர்த்து விடுவது நல்லது. பேஸ்புக்கில் அவர்களை எப்படி பிளாக் செய்வது என்று பார்ப்போம். முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள செட்டிங்ஸ் என்ற பக்கத்திற்கு செல்லுங்கள். அந்த பக்கத்தில் இடது பக்கம் இருக்கின்ற ப்ளாக்கிங் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அதில் இருக்கும் ப்ளாக் யூசர்ஸில் நீங்கள் ப்ளாக் செய்ய விரும்புவோரின் பெயர், மின்னஞ்சல் அல்லது அவரின் புரொபைல் யூ. ஆர். எல் . இதில் ஏதேனும் ஒன்றை அந்த இடத்தில் கொடுத்து ப்ளாக் என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான் இனி அவர் எப்போதும் உங்களை தொடர்பு கொள்ள முடியாது.

    நீங்கள் ஏதாவது ஒரு பக்கத்திற்கு சென்றால் அந்த பக்கத்தில் ஓர் பதிவிற்கு நீங்கள் கருத்துகள் தெரிவிக்கும் போது அந்த கருத்துகள் மற்றும் புரொபைல் அதே பக்கத்தில் இருக்கும். இதனால் வெளியாட்கள் அந்த பக்கத்திற்கு வரும் போது உங்கள் புரொபைலுக்கு நட்பு வேண்டுதல் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. இது பெண்கள் அறியாமல் செய்யும் மிக பெரிய தவறு இதனால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும்.

    இது பெண்களுக்கு பாதுகாப்பானது இல்லை. இணையதளத்தில் உங்கள் புகைப்படங்களை பதிவேற்றுங்கள் முப்பது வருடங்களுக்கு பிறகு நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று சொல்கிறேன் என்று கேள்வி கேட்டால் அதில் பெண்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யாதீர்கள் மற்றும் ஒரு லிங்கை அனுப்பி இந்த லிங்கில் நீங்கள் சென்று லாகின் செய்தால் 15ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள் உங்களுக்கு வெறும் 1200 ரூபாய்க்கு கிடைக்கும் என்று கூறினால் செல்லாதீர்கள்.

    ஏனென்றால் உங்கள் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்ய நினைப்பார்கள். “பிஷிங்” என்ற முறையில் உங்கள் பேஸ்புக்கை மற்றும் இதர கணக்குகளை ஹேக் செய்து விடுவார்கள். பிஷிங் என்றால் பேஸ்புக் லாகின் பக்கம் மாதிரியே உருவாக்கி அதை உங்களுக்கு அனுப்புவார்கள். அதை நீங்களும் கிளிக் செய்து உங்கள் கணக்கை லாகின் செய்தால் உங்கள் யூசர் நேம், பாஸ்வேர்டு உள்ளிட்டவை திருடப்பட்டுவிடும். மேலே கூறப்பட்டுள்ள வழிகளை பெண்கள் பின்பற்றினால் பேஸ்புக்கில் பாதுகாப்பாக இருக்கலாம்.

    ப.பொன்விக்னேஸ், கல்லூரி மாணவர்
    சமீபகாலமாக மற்றவர்களை விட இளம்பெண்களுக்கு பேஸ்புக்கில் பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது. எனவே பேஸ்புக்கில் இருக்கும் பெண்கள் தாங்களே தங்களை பாதுகாத்து கொள்ள சில டிப்ஸ்...
    சமீபகாலமாக மற்றவர்களை விட இளம்பெண்களுக்கு பேஸ்புக்கில் பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது. பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட பெண்களின் படங்களை திருடி, ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டதால் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே பேஸ்புக்கில் இருக்கும் பெண்கள் தாங்களே தங்களை பாதுகாத்து கொள்ள சில டிப்ஸ்...

    பேஸ்புக் தகவல்களில் உங்கள் தொலைபேசி எண், முகவரி போன்ற தகவல்களை அளிக்காதீர்கள்.

    இன்டர்நெட் சென்டர்கள், கல்லூரி, நண்பர்களின் கணினிகள் மூலம் பேஸ்புக் கணக்கை லாக் இன் செய்தால், வேலை முடிந்ததும் லாக் அவுட்செய்ய மறக்காதீர்கள். இல்லையெனில் உங்கள் பேஸ்புக் கணக்கை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தக்கூடும்.

    உங்களுடைய போட்டோக்களை பேஸ்புக்கில் பதிவிடும் போது கவனமாக இருங்கள். உங்களுக்கு நன்கு தெரிந்த நட்பு வட்டாரங்கள் மட்டும் பார்க்கும் வகையில் பேஸ்புக் செட்டிங்கை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.



    நீங்கள் என்ன செய்கிறீர்கள், என்ன செய்யப் போகிறீர்கள், தற்போது எங்கே இருக்கிறீர்கள் என உங்கள் சொந்த விஷயங்களை பேஸ்புக் ஸ்டேட்டஸ் மூலம் தம்பட்டம் அடிக்காதீர்கள்

    தெரியாத நபர்களிடமிருந்து வரும் நட்பு அழைப்புகளை ஏற்காதீர்கள். புள்ளிவிபரங்களின் படி பேஸ்புக்கில் உள்ள ஓவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 130 நண்பர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 130 பேரில் உங்களுக்கு எத்தனை பேரை நீங்கள் நேரில் சந்தித்த அனுபவம் உள்ளது? என்பதை அறிந்து பின்னர் அவர்களை மட்டும் பின்தொடருங்கள்.

    உங்கள் குழந்தைகளின் படங்களை பேஸ்புக்கில் பதிவிடாதீர்கள். குறிப்பாக சிறிய குழந்தைதானே என ஆடை அணியாத உங்கள் பிள்ளைகளின் படங்களை பதிவிட வேண்டாம்.

    பேஸ்புக்கில் உள்ள உங்கள் நட்பு வரிசையை அனைவரும் பார்க்கும் வண்ணம் பப்ளிக்கில் வைக்காதீர்கள்.

    உங்களுக்கு தொல்லை கொடுக்கும் நபர்கள், ஆபாச புகைப்படங்கள், வீடியோ அனுப்பும் நபர்களை பிளாக் செய்து, ரிப்போர்ட் செய்யுங்கள். உங்கள் சக நண்பர்களிடமும் சொல்லி அந்த குறிப்பிட்ட நபரை ரிப்போர்ட் செய்ய சொல்லுங்கள்.
    பொது இடங்களில் இருக்கும் வை-பைகள் பாதுகாப்பானவை அல்ல என்பது நாம் அறிந்ததே. அதனால் தான் பொது இடங்களிலுள்ள வை-பையைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கைகள் தொடர்ந்து விடுக்கப்படுகின்றன.
    வை-பை இல்லாத வாழ்க்கையை இப்போது நினைத்துப் பார்க்க முடிவதில்லை. ‘எங்கெங்கு காணினும் வை-பையடா’ என்னும் அளவுக்கு விமான நிலையங்கள், ரெயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ஓட்டல்கள், உணவு விடுதிகள் என எல்லா இடங்களிலும் வை-பை வசதிகள் இருக்கின்றன. பொது இடங்களில் இருக்கும் வை-பைகள் பாதுகாப்பானவை அல்ல என்பது நாம் அறிந்ததே. அதனால் தான் பொது இடங்களிலுள்ள வை-பையைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கைகள் தொடர்ந்து விடுக்கப்படுகின்றன. அப்படியே பயன்படுத்தினாலும், அதைக்கொண்டு முக்கியமான வங்கிப் பரிவர்த்தனைகள் போன்றவற்றை நடத்தக் கூடாது.

    பொது இடங்களிலுள்ள வை-பையை எக்காரணம் கொண்டும் ‘ஆட்டோ கனெக்ட்’ மோடில் சேமிக்கக் கூடாது. அதுபோல பொது இட வை-பைகளைப் பயன்படுத்திய பின்னர் நமது பிரவுசர்களில் இருக்கின்ற குக்கிகளையும், ஹிஸ்டரியையும் முழுதாக அழித்து விடவேண்டும்.

    பொது இடங்களில் இருக்கின்ற வை-பைகளைப் பயன்படுத்துவது ஆபத்தானது எனும் புரிதல் இப்போது பெரும்பாலானவர்களுக்கு உண்டாகி இருக்கிறது. எனவே அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் எடுத்து விடுகின்றனர். ஆனால் வீட்டில் வந்து வை-பையை இணைக்கும் போது, ‘ஆஹா இது நமக்கே நமக்கான வை-பை. இதில் யாரும் நுழைய முடியாது’ எனும் இறுமாப்புடன் வேலையைத் தொடங்குவோம். அதற்கு அச்சாரமிடும் வகையில் வீட்டுக்குள் நாம் நுழையும் முன் நம்முடைய போன்கள் ஆட்டோமேட்டிக்காக வை-பையுடன் இணைந்து விடுகின்றன‌. லேப்டாப், டேப்லெட் என எல்லாமே எப்போதும் வை-பையுடன் இணைந்து தான் இருக்கின்றன.

    ‘இதுவும் பாதுகாப்பு இல்லையப்பா’ என நம்முடைய நம்பிக்கையின் உச்சந்தலையில் சுத்தியல் கொண்டு அடித்துச் சொல்கிற விஷயம் தான் இந்த வை-ஜாக்கிங். அதாவது நாம் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கின்ற நமது வை-பை கூட மிக எளிதான தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்பதே வை-ஜாக்கிங் சொல்கிற செய்தி. நமது வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கின்ற நபர்கள் நினைத்தால் நமது வீட்டிலுள்ள வை-பைக்குள் நுழைய முடியும். நமது வீட்டு வை-பையை அவர்கள் விருப்பம் போல பயன்படுத்த முடியும் என்பது தான் ஆரம்ப அதிர்ச்சி.

    ‘எனக்கு தான் ஆயிரம் ஜி.பி. லிமிட் இருக்கே, அடுத்த வீட்டுக்காரர் கொஞ்சம் எடுத்துட்டு போகட்டும்’ என சும்மா இருந்து விட முடியாது. வீட்டுக்குள் நுழையும் திருடன் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு போவதில்லை. கையில் கிடைப்பதையெல்லாம் சுருட்டி எடுத்துக் கொண்டு தான் போவான். அதே போல, நமது நெட்வொர்க்குக்குள் ஒருவர் நுழைந்து விட்டால் நமது கணினி, மொபைல் என நம்மை சுற்றி இருக்கும் கருவிகளில் இருக்கின்ற அத்தனை தகவல்களையும் திருடி செல்லும் வாய்ப்புகள் உண்டு.

    இப்போதெல்லாம் நம்முடைய பரம ரகசிய விஷயங்கள் கூட மொபைலிலோ, கணினியிலோ தான் ஓய்வெடுக்கும். நமது நெட்வொர்க்கிற்குள் நுழைகின்ற நபரிடம் நமது வங்கிக் கணக்கின் விவரங்கள், பாஸ்வேர்ட் போன்றவை கிடைத்தால் நமது வங்கியை துடைத்து சுத்தம் செய்து விடுவார்கள். அதே போல தனிப்பட்ட விஷயங்களைத் திருடிக் கொண்டால் அதன் மூலம் நமக்கு தேவையற்ற மன உளைச்சலோ, பெரும் நஷ்டமோ உருவாக்கலாம்.

    இது எப்படி நடக்கிறது ? நாம் வீடுகளில் பயன்படுத்துகின்ற பிரவுசர்களில் ‘பாஸ்வேர்ட்’ ஆட்டோ சேவ் ஆக இருக்கும். அதாவது ஒருமுறை கடவு சொல் கொடுத்து திறந்தால் போதும், அடுத்த நொடியே நம்முடைய கடவு சொல்லை சேமித்து வைத்துக்கொள்ளட்டுமா..? என்ற சலுகை திரையில் தோன்றும். நாமும் நம்முடைய சவுகரியத்திற்காக, அத்தகைய ஆட்டோ சேவ் சலுகையை பயன்படுத்தியிருந்தால்.... அதில் நம்முடைய கணக்கு விவரங்களும், கடவுசொல் விவரங்களும் பிரவுசரில் சேமிக்கப்பட்டிருக்கும்.

    இதற்கும் நமது வீடுகளில் இருக்கும் மோடத்திற்கும் இடையேயான தகவல் பரிமாற்றம் ‘அன்.என்கிரிப்டர் ஹைச்.டி.டி.பி’ அதாவது ‘குறியீடுகளாய் மாற்றப்படாத நேரடியான தகவல் பரிமாற்றமாய்’ இருக்கும். நமது மோடத்தையும், நமது மொபைல் மற்றும் கணினியையும் ஆட்டோமேட்டிக்காக இணைக்கும் ‘இன்டர்நெட் பாஸ்வேர்ட்’ தகவல்களும் இப்படி பாதுகாப்பில்லாமல்தான் இருக்கின்றன.

    இந்த பிரவுசர் ‘ஆட்டோசேவ்’ மற்றும் ‘அன்.என்கிரிப்டட்’ தகவல் பரிமாற்றம் இரண்டும் சேர்ந்து தான் நமது வை-பை இணைப்பை வலுவிழக்க வைக்கின்றன. இதைப் பயன்படுத்தி வெளியிலிருக்கும் ஒருவர் நமது கணினியில் ஒரு பிரவுசரை லோடு செய்யவும், அதன்மூலம் நமது இணைய பாஸ்வேர்ட் தகவல்களை பிறருக்கு அனுப்பி வைக்கவும் முடியும். மிக எளிய வகையில் இந்த ஹேக்கிங் நடக்கும். அது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்.



    ஸ்யூயர் கிளவுட் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான எலியட் தாம்சன் என்பவர் இந்த அச்சுறுத்தலை முதன் முதலாய் கண்டுபிடித்துச் சொன்னது கடந்த மார்ச் மாதம்தான். பல மாதங்களுக்குப் பிறகு இப்போது அந்த வை-ஜாக்கிங்கின் வீரியம் நிறுவனங்களுக்கும், மக்களுக்கும் புரிய ஆரம்பித்திருக்கிறது. சில நிறுவனங்கள் தங்களுடைய பிரவுசர்களிலுள்ள ஆட்டோ சேவ் ஆப்ஷனை விலக்க முடிவு செய்திருக்கின்றன.

    இந்த வை-ஜாக்கிங் நடக்க வேண்டுமெனில் சில விஷயங்கள் நடந்திருக்க வேண்டும். அவற்றை அறிந்து கொள்வது நாம் பாதுகாப்பாக இருக்க உதவும்.

    முதலில் நமது வை-பை ஆன் நிலையில் இருக்கும் போது தான் இந்த தாக்குதல் நடக்கும். இரண்டாவது, நாம் முன்பு எப்போதாவது வேறு ஒரு பொது வை-பையில் இணைந்திருக்க வேண்டும். அது ‘ஆட்டோ ரிகனக்ட் ஆப்ஷனில்’ இருக்க வேண்டும். மூன்றாவது குரோம், ஓப்பேரா போன்ற பிரவுசர்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். நான்காவது, நமது போனில் வை-பை தானாக இணையும் விதத்தில் இருக்க வேண்டும். இவை எல்லாமே சர்வ சாதாரணமாய் இருக்கக் கூடிய விஷயங்கள். எனவே தான் இந்த அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு நமக்கு அவசியமாகிறது.

    சரி, இதிலிருந்து தப்பிப்பது எப்படி?

    1. ‘இன்காக்னிடோ மோடு’ தெரியுமா ? பிரவுசரில் உள்ள ஒரு ஆப்ஷன் இது. இதில் நுழைந்தால் நமது பாஸ்வேர்ட் போன்ற தகவல்கள் சேமிக்கப்படாது. அதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. இதை பிரைவேட் பிரவுசிங் என்றும் சொல்வார்கள்.

    2. பழைய வெர்ஷன் பிரவுசர்களையெல்லாம் மாற்றி புதியவற்றை இன்ஸ்டால் செய்யுங்கள். அல்லது பிரவுசரின் புது வெர்ஷனை இன்ஸ்டால் செய்யுங்கள்.

    3. உங்களுடைய எல்லா பிரவுசர்களில் இருந்தும் ஹிஸ்டரி (தேடல் வரலாறு), குக்கீஸ் போன்றவற்றை அழியுங்கள்.

    4. நெட்வொர்க் ஆட்டோகனெக்ட் ஆப்ஷனை அழித்து விடுங்கள்.

    5. பொது இட வை-பைகளைத் தவிருங்கள்.

    6. ‘பர்சனல் பயர் வால்’ எனப்படும் பாதுகாப்பு வளையத்தை உங்களுடைய வீட்டு நெட்வொர்க்கிலும் இணையுங்கள்.

    7. வை-பை மோடத்தை சுவர் அருகிலோ, ஜன்னல் அருகிலோ வைக்காமல் வீட்டிற்கு உள்ளே வையுங்கள். வெளியிட இணைப்பு அச்சுறுத்தலை அது கொஞ்சம் குறைக்கும்.

    8. ரொம்ப பாதுகாப்பு அவசியமெனில் வி.பி.என். பயன்படுத்தலாம். நெட்வொர்க்கை அது அதிக பாதுகாப்பு உடையதாக்கும்.

    9. உங்கள் வை-பை ரவுட்டரை பரிசோதியுங்கள். செக்யூர்ட், என்கிரிப்டட் நிலையில் அது இல்லையேல் மாற்றுங்கள்.

    10. இவ்வளவும் செய்தபின் உங்களுடைய நெட்வொர்க் பாஸ்வேர்டை உடனடியாக மாற்றுங்கள். ஏற்கனவே உங்கள் வை-பையை யாரேனும் கவர்ந்திருந்தால் பாஸ்வேர்டு மாற்றுவது ஒன்றே வழி.

    கட்டுரையாளர்: சேவியர்
    பல மேம்பட்ட பாதுகாப்பு முறைகள் இருந்தாலும், அடிப்படை முறைகளை பின்பற்றினாலே பெரும்பாலான இணைய அச்சுறுத்தல்களில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளலாம்.
    மனிதனின் அத்தியாவசிய தேவைகளாக உணவு, உடை, மற்றும் உறைவிடத்தை கூறுவார்கள். இன்று அதனுடன் இணைய தேவையும் இணைந்துள்ளது என்று சொன்னால் அது மிகை ஆகாது. அந்த அளவுக்கு இன்று இணையம் நம் வாழ்வில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. நமக்கு தேவையான எந்த தகவலையும் இணையத்தின் மூலமாக ஒரு வினாடி பொழுதில் அறிந்து கொள்ளலாம்.

    அது மட்டுமின்றி இணையத்தின் மூலமாக வங்கி, மின்சாரம், வருமானவரி, பயணம் மற்றும் இதர பல சேவைகளை நம் வீட்டில் இருந்த படியே பயன்படுத்திக்கொள்ளலாம்.

    அப்படி இணையத்தை பயன்படுத்தும்போது நாம் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும். ஏன் என்றால் இணையத்தை நல்ல முறையில் பயன்படுத்துபவர்களை போல அதனை தீய செயல்களுக்கு (ஹேக்கிங்) பயன்படுத்துபவர்களும் உள்ளனர்.

    அவர்களிடம் இருந்து உங்களை பாதுகாத்துகொள்ள நீங்கள் பின்வரும் பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

    நாம் அன்றாட வாழ்வில் இணையத்தை பேஸ்புக், இ-மெயில், வங்கி சேவை, ரெயில் முன்பதிவு மற்றும் பல சேவைகளுக்கு பயன்படுத்துகிறோம். சிலர் அத்தனை இணையதளங்களுக்கும் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துவார்கள். ஆனால் இது ஒரு தவறான செயல்.

    அதாவது, ஒருவர் உங்களின் ஒரு இணையதளத்தின் பாஸ்வேர்டை தெரிந்து கொண்டால் அவரால் உங்கள் வங்கி கணக்கு உள்பட அனைத்து கணக்குகளையும் தன் வசப்படுத்திகொள்ள முடியும். அதனால் முடிந்தவரை உங்களின் ஒவ்வொரு இணைய சேவைக்கும் வெவ்வேறு பாஸ்வேர்டை வைத்துக்கொள்ள வேண்டும். அந்த பாஸ்வேர்டு உங்கள் மனதில் பதியவேண்டுமே அன்றி டைரியிலோ அல்லது நோட்புக்கிலோ அல்ல.

    இப்படி ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்தியதால் பல பேர் தங்களின் பணம் மற்றும் சுயதகவல்களை இழந்திருக்கின்றனர். அப்படி ஒரே பாஸ்வேர்டை நீங்கள் பயன்படுத்துபவராயின், இன்று முதல் வேலையாக உங்களின் அனைத்து இணைய கணக்கு பாஸ்வேர்டுகளையும் மாற்றிவிடுங்கள். யாரும் விரைவில் கண்டுபிடிக்க முடியாத, அதே நேரம் உங்கள் மனதில் எளிதில் பதியும் வகையில் இருக்கும்படி பாஸ்வேர்டை தேர்வு செய்ய வேண்டும்.

    உங்கள் வங்கியில் இருந்து வரும் தகவலை போல உங்களுக்கு ஒரு இ-மெயில் வரும். அதில் காட்டும் ஒரு ‘லிங்’கை கிளிக் செய்தால் அது உங்கள் வங்கியின் வெப்சைட் பக்கத்தை போல (உங்கள் வங்கி வெப்சைட் அல்ல ) ஒரு வெப்சைட்டை திறக்கும். அங்கு நீங்கள் உங்கள் வங்கி முகவரி, பாஸ்வேர்டை கொடுத்தால் ஹேக்கர்கள், அதை திருடி உங்கள் கணக்கினுள் நுழைந்து விடுவார்கள். அதன் மூலம் உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை அவர்கள் எளிதில் எடுத்துக்கொள்ள முடியும்.

    எனவே, உங்களுக்கு வங்கியிலிருந்து இ-மெயில் அல்லது குறுந்தகவல் வந்தால் அது நம்பகமானதா? என்று சோதித்து பின்னரே நீங்கள் உங்கள் விவரங்களை அளிக்க வேண்டும். அந்த வெப்சைட் ‘லிங்’கை இரண்டு முறை சரிபார்த்த பின்பே உங்கள் தகவல்களை அளிக்க வேண்டும்.

    மேலும், உங்கள் கம்ப்யூட்டரில் கட்டாயம் ஆன்டிவைரஸ் சாப்ட்வேர் இருப்பது மிக அவசியம். வைரஸ் என்பது இணையதளம் வழியாக உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்படும் சாப்ட்வேர் ஆகும். இந்த வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து விவரங்களை உங்களுக்கு தெரியாமலேயே மற்றவர்களுக்கு அனுப்பி விடும்.

    அது மட்டுமன்றி உங்கள் கம்ப்யூட்டரேயே செயலிழக்க வைத்து விடும் அளவுக்கு திறன் கொண்டது. ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் அந்த வைரசிலிருந்து உங்கள் கம்ப்யூட்டரை பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது. அது மட்டுமன்றி நீங்கள் பயனற்ற வெப்சைட்டுகளை அணுகாமல் இருப்பதும் உங்களை வைரசிலிருந்து காப்பாற்றும்.

    ஓ.டி.பி. எண் (ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பாஸ்வேர்டு) பயன்பாட்டிலும் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். உதாரணமாக, ஆன்லைன் வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்ய உங்கள் செல்போன் எண்ணுக்கு ஒரு நம்பரை அனுப்புவார்கள். அதாவது உங்கள் பாஸ்வேர்டை தவிர நீங்கள் இந்த ஓ.டி.பி. எண்ணையும் கூடுதலாக கொடுக்க வேண்டும்.

    ஒருவர் உங்களது பாஸ்வேர்டை தெரிந்து கொண்டாலும், அவரால் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை இந்த ஓ.டி.பி. எண் இல்லாமல் எடுக்க முடியாது. அதனால் இந்த எண்ணை நீங்கள் யாருக்கும் பகிரக் கூடாது. உங்கள் வங்கியிலிருந்து பேசுகின்றோம் உங்கள் ஓ.டி.பி. எண்ணை கொடுங்கள் என்றாலும் நீங்கள் அதை பகிரக்கூடாது. ஏனேனில் ஓ.டி.பி. என்பது உங்கள் பாஸ்வேர்டை போன்றது.

    இன்னும் பல மேம்பட்ட பாதுகாப்பு முறைகள் இருந்தாலும், இந்த அடிப்படை முறைகளை பின்பற்றினாலே பெரும்பாலான இணைய அச்சுறுத்தல்களில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளலாம். இணையதளம் என்பது கடல் போன்றது. அதில் பாதுகாப்போடு நீந்தினால் உங்கள் அறிவை மட்டுமன்றி உங்கள் வாழ்வையே மேம்படுத்திக்கொள்ளலாம். விழிப்போடு இருக்க தவறினால், உங்கள் வாழ்வு நடுக்கடலில் தொலைந்துபோகவும் வாய்ப்புண்டு.

    த.கதிரவன்,

    மென்பொருள் பொறியாளர்,

    சியாட்டில், வாஷிங்டன்
    சரியோ, தப்போ எப்படி மனிதர்கள் போதைக்கு அடிமையானார்களோ அதே போல் இன்றைய பெண்கள் இணையதளத்துக்கு அடிமையாகி விட்டார்கள்.
    இன்றைய மனித வாழ்க்கையில், பெரியவர்கள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள் என எல்லோருடைய பொன்னான நேரத்தை மொத்த குத்தகைக்கு எடுத்திருப்பது இணைய தளம் என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு தான்.

    அதன் விளைவு நம் சமுதாயத்தில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

    பத்திரிகைகள் மிகச் சிறந்த ஊடகம்! அரசியலில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த கூடிய சக்தி வாய்ந்தவை. பத்திரிகைகளுக்கு எல்லா ஊர்களிலும் நிருபர்கள் இருப்பார்கள். அவர்கள் சேகரித்துக் கொடுக்கும் செய்திகளை நன்கு ஆய்வு செய்து, அதை வெளியிட்டால் சமுதாயத்தில் எந்த மாதிரி பாதிப்புகள் ஏற்படலாம் என்பதை எல்லாம் யோசித்து, படிப்பும் உலக அனுபவமும் உள்ள ஆசிரியர்கள் வெளியிடுவார்கள். அப்படித்தான் நல்ல செய்தியோ அல்லது கெட்ட செய்தியோ பத்திரிகைகளில் வெளிவரும்.

    அதனால் அவை சமுதாயத்தில் தேவைக்கு அதிகமான விளைவுகளை ஏற்படுத்தி விடாது. நியாயமான விளைவுகளைத் தான் ஏற்படுத்தும்.

    இணைய தளம் வந்த பிறகு மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டு விட்டது. ஒரு விலை உயர்ந்த இணையதள வசதி உள்ள செல்போனை பயன்படுத்த தெரிந்தால் போதும்! படிப்பு, அறிவு, அனுபவம் எதுவுமே வேண்டாம். எல்லோருமே பத்திரிகை ஆசிரியர்கள் மட்டுமல்ல, என்ஜினீயர்கள், டாக்டர்கள் தான். கண்ணதாசன்கள், ஜெயகாந்தன்கள் தான்!

    தமிழில் எழுத்துகள் தெரிந்தால் போதும், எல்லோரும் மேதைகள் தான். வல்லினம், இடையினம் தெரியாத, உயர்நிலை பள்ளி கூட தாண்டாத இந்த மேதைகள் பல அவதாரம் எடுத்து, இணைய தளத்தில் போடும் பதிவுகள் கோடிக் கணக்கான இளைஞர்களின் கைகளில் இருக்கும் செல்போன்களுக்கு பல ரூபங்களில் போய் சேருகிறது.

    பத்திரிகை செய்திகள் கூட குறிப்பிட்ட நேரத்தில் தான் வரும். இவர்கள் போடும் பதிவுகள் 24 மணி நேரமும் வந்து கொண்டே இருக்கிறது.

    8-ம் வகுப்பு படித்த டாக்டர், 5-ம் வகுப்பை தாண்டாத என்ஜினீயர்கள் போடும் பதிவுகளை எல்லாம் உண்மை என்று நம்பி செயல்படும் மக்கள் நம்மிடம் நிறைய இருக்கிறார்கள். ஒழுங்காக கையெழுத்துக் கூடப் போடத் தெரியாதவன் சொல்வதை எல்லாம் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சொல்வதாக நினைத்துக் கொண்டு அந்த வைத்தியத்தை செய்து பார்க்கும் மக்கள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணம், வீட்டிலேயே ஆண் பிரசவம் பார்த்தது.

    இணையதளத்தில் வரும் பதிவுகளில் 90 சதவீதம் அபத்தம். இந்த அபத்தங்களை உண்மை என்று நம்பி அதை ஆதரித்து பதிவிடுபவர்கள் 50 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இதனால் சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது.



    சரியோ, தப்போ எப்படி மனிதர்கள் போதைக்கு அடிமையானார்களோ அதே போல் இன்றைய இளைஞர்கள் இணையதளத்துக்கு அடிமையாகி விட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் போதைக்கு அடிமையானவர்களால், அவர்களின் குடும்பம் மட்டுமே கெடும். ஆனால் இந்த இணையதள போதையர்கள் அவர்களை மட்டும் கெடுத்துக்கொள்வதில்லை. அவர்களுக்கு எதிர்படும், அவர்களுக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத பலர் வாழ்க்கை வீணாகி விடுகிறது.

    இணையதளத்தில் நன்மை இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது...! அதை உணர்ந்து செயல்படுத்த அறிவும், பக்குவமும் வேண்டும். இப்போது இளைஞர்கள் இணையதளத்தைப் பயன்படுத்துவது எல்லாம் பொழுது போக்குக்கு தான்.

    ஒவ்வொரு இளைஞனுக்கும் எதிர் வீட்டில் இருக்கும் இளைஞனோடு நட்பு பாராட்ட நேரம் இல்லை. ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கண்ணால் ஒரு முறை கூட பார்க்காத நல்லவர்களா? கெட்டவர்களா? என்று தெரியாத நண்பர்கள் தான் பல நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். இதில் ஆண்-பெண் நட்புகள் ஏராளம். இதனால் பல பெண்கள் வாழ்க்கை நாசமாவது தாராளம்.

    தெருவில் நடப்பதைப் பார்ப்பது, கண்ட புத்தகங்களைப் படிப்பது, பிறர் சொல்வதை கேட்பது இவைகளால் மட்டும் யாரும் டாக்டரோ, என்ஜினீயரோ ஆகி விட முடியாது.

    முறையான படிப்பு, பயிற்சி, அனுபவம் இருந்தால் மட்டுமே எந்த துறையிலும் ஒருவன் முன்னுக்கு வர முடியும். அப்படிப்பட்டவர்கள் தங்களின் அனுபவத்தை பதிவாகப் போட்டால் தான் அது மற்றவர்களுக்குப் பயன்படும்.

    இப்படிப் பட்ட பதிவுகள் இணைய தளங்களில் 10 சதவீதம்தான் இருக்கும். இதை புரிந்து கொள்ளும் பக்குவம் நம் இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் வரும்வரை இணையதளங்களால் பாதிப்புகள் தான் அதிகம். இதை சொல்வதால் அறிவியலை எதிர்ப்பதாக அர்த்தம் இல்லை.

    அறிவியல் நல்ல பாதையையும் காட்டும். தீயப்பாதையையும் காட்டும். அதில் நீங்கள் எந்த பாதையை தேர்வு செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். நல்ல பாதையை காட்டுவதற்கு பெற்றோர் எப்போதும் துணை நிற்க வேண்டும். தங்களின் பிள்ளைகள் எப்போதும் செல்போனும் கையுமாக இருக்காமல் பார்த்துக்கொள்வது பெற்றோரின் கடமையாகும்!

    எழுத்தாளர் துடுப்பதி ரகுநாதன்

    பள்ளி மாணவர்கள் தங்களின் கல்வி தகுதியை இணையதளம் மூலமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ஜோதி நிர்மலா சாமி தெரிவித்து உள்ளார்.
    தூத்துக்குடி:

    பள்ளி மாணவர்கள் தங்களின் கல்வி தகுதியை இணையதளம் மூலமாக வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்யலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ஜோதி நிர்மலா சாமி தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியினை தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாக 2011ம் ஆண்டு முதல் நேரடியாக வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து செலவு, காலவிரயம், தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்கள் ஆகியவை தவிர்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 2018-ம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வருகிற 30-ந் தேதி வரை ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் படித்த பள்ளியிலேயே இணையதளம் மூலமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.

    இதற்கான சிறப்பு நடவடிக்கைகளை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், தனியார் பள்ளிகளிலும் இந்த வசதியை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம்.

    சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு துறையின் இணைய தளத்தில் (http.//tnvelaivaaippu.gov.in ) ஆன்லைனில் பதிவு செய்யலாம். அல்லது அவர்கள் தங்களது மாவட்டத்துக்கு உரிய வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சென்று பதிவு செய்யலாம். ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, சாதி சான்றிதழ் மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    உள்ளாட்சி நிதி தணிக்கை துறைக்கு தனி இணையதளம் உருவாக்கப்படும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #OPanneerselvam
    சென்னை:

    நிதித்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    சென்னை நந்தனத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை கட்டிடத்தில் ரூ.10.98 கோடி மதிப்பீட்டில் சுமார் 50 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 2 கூடுதல் தளங்கள் கட்டப்படும். நிதித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மீன்வளத்துறையை சார்ந்த கட்டிடங்கள் அமைந்துள்ள இவ்வாளகத்துக்கு ‘அம்மா வளாகம்’ என பெயரிடப்படும்.

    நெல்லை மாவட்ட கருவூலத்துக்கு சுமார் 21 ஆயிரத்து 400 சதுரஅடி பரப்பளவில் ரூ.3.52 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டிடம் கட்டப் படும்.

    கருவூல கணக்குத்துறை பயன்பாட்டுக்காக ரூ.2.44 கோடி மதிப்பீட்டில் 38 புதிய ஜீப்புகள் வழங்கப்படுவதுடன், 38 புதிய டிரைவர் பணியிடங்களும் ஏற்படுத்தப்படும்.

    சார் கருவூலங்கள் இல்லாத வட்ட தலைமையிடங்களில் புதிய சார் கருவூலங்கள் அமைப்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்படும்.

    உள்ளாட்சி நிதி தணிக்கை துறைக்கென தனி இணையதளம் உருவாக்கப்படும்.

    உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பயன்கள் உள்ளிட்டவற்றை மின்னணு முறையில் அனுமதித்தல் பயன்பாட்டுக்காக கணினி ‘சர்வர்’ வழங்கப்படும்.

    உள்ளாட்சி நிதி தணிக்கை துறை தணிக்கையாளர்களுக்கு ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் 165 புதிய மடிக்கணினிகள் வழங்கப்படும். 2-வது கட்டமாக ரூ.62½ லட்சம் மதிப்பீட்டில் 250 புதிய மடிக் கணினிகள் வழங்கப்படும்.

    உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியர் அடையாள அட்டை வழங்கப்படும்.

    கூட்டுறவு சங்கங்களின் கணக்குகள் தணிக்கையின்போது கண்டறியப்பட்ட நிதி முறைகேடுகள், நிதி இழப்புகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விவரம் ஆண்டறிக்கையாக தயாரிக்கப்படும்.

    பால் கூட்டுறவு சங்கங்களின் தணிக்கை பணிகளை கூட்டுறவு தணிக்கைத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவது குறித்து ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்கப்படும்.

    அரசுத்துறை நிறுவன தணிக்கை துறையின் சார்நிலை அலுவலகங்களுக்காக ரூ.23.21 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தலா 36 கணினிகள், அச்சுப்பொறிகள், ஸ்கேனர்கள் மற்றும் தடையற்ற மின்சாரம் தரும் கருவிகள் வழங்கப்படும்.

    அரசுத்துறை நிறுவன தணிக்கைத்துறையில் ஆய்வாளர் நிலையில் இயங்கிவரும் 10 மாவட்ட அலுவலகங்கள் உதவி இயக்குனர் நிலைக்கு தரம் உயர்த்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #OPanneerselvam
    வீட்டுவசதி சாதனங்கள், உடைகளை வாங்குவதற்கு இணையதளம் வழியாக பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. #OnlineShoping #IndianConsumer
    புதுடெல்லி:

    தகவல், தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்டு உள்ள வளர்ச்சியால் இப்போது செல்போன், உடைகள், வீட்டு வசதி சாதனங்கள் போன்றவற்றை இப்போது இணையதளம் வழியாக வாங்குகிற ‘ஆன்லைன் ஷாப்பிங்’ அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளையதலைமுறையினர் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    கடந்த 2017-ம் ஆண்டு, இணையதளம் வழியாக 10 கோடியே 80 லட்சம் பேர் தங்களுக்கு வேண்டிய பொருட்களையும், சாதனங்களையும் வாங்கி உள்ளனர்.

    இந்த ஆண்டிலும் இப்படி இணையதளம் வழியாக பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. குறிப்பாக 12 கோடிப்பேர் இந்த ஆண்டு இணையதளம் வழியாக பொருட்களை வாங்குவார்கள் என்று ‘அசோசாம்’ என்று சொல்லப்படுகிற இந்திய தொழில், வர்த்தக சபை மற்றும் ரீ சர்ஜன்ட் அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு கூறுகிறது.

    இணையதளம் வழியாக பொருட்களை, சாதனங்களை வாங்குவோரில் 60 முதல் 65 சதவீதம்பேர் செல்போனில் ‘ஆர்டர்’ செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    கடந்த ஆண்டில் இணையதளம் வழியாக பொருட்களை, சாதனங்களை வாங்கியவர்களில் 74 சதவீதம் பேர், தங்களுக்கு உரிய பொருள் அல்லது சாதனம் கையில் கிடைக்கிறபோது பணம் செலுத்தும் வழியை தேர்ந்தெடுத்து உள்ளனர்.   #OnlineShoping #IndianConsumer
    பாலில் கலந்த விஷம் எத்தனை கொடியதோ, எத்தனை பேரை காவு வாங்குமோ, அப்படித்தான் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் விஷமத்தனமான கருத்துகளும்.
    கத்தி முனையை விட பேனா முனை சக்தி வாய்ந்தது. வில் முனையை விட சொல் முனை வலிமையானது. காரணம் புரட்சியாளர்களும், தலைவர்களும் தங்கள் கருத்துகளை பேனா முனையில் உருக்கி எழுதி மக்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றியதன் விளைவாக ஆட்சி மாற்றங்கள், நாட்டு விடுதலை, சமுதாய புரட்சி என்று பல சம்பவங்கள் நடந்துள்ளதை நாம் அறிவோம்.

    தற்போது பேனா முனைக்கெல்லாம் வேலையில்லை. விஞ்ஞானத்தின் விஸ்வரூப கட்டமைப்புக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு விரல்களின் மீட்டலில் கணினிகளிலும், செல்போன்களிலும் கருத்துகளை விரைவாக எடுத்து வைக்கும் அவசரங்கள் அரங்கேறத்தொடங்கி விட்டன.

    கடந்த காலங்களில் ஒருவர் கதை, கட்டுரை, கருத்துரை, விமர்சனம் ஆகியவற்றை எழுதுகிறார் என்றால், அதற்காக அவர் எழுதி எழுதி கிழித்துப்போடும் காகிதங்கள் அதிகமாக இருக்கும். இன்றைக்கு அந்த நிலை இல்லை. அதேநேரம் இன்று கருத்துகளின் கூர்மையும், அது அனைவரையும் சென்றடையும் நேரமும் குறைந்து விட்டது.

    இரவுக்கு பகல் எப்படியோ, அதேபோல கருத்துக்கு எதிர்கருத்து எப்போதுமே உண்டு. கருத்துமோதல்கள் என்பது காலம் காலமாக உலக அளவில் இருந்து வரும் ஒரு கலை. அந்த கருத்து சுதந்திரம் என்பது எல்லை மீறும்போது பல மனங்களை காயப்படுத்தி விடுகிறது. சமுதாயத்தையே சில நேரங்களில் சீர்குலைத்துவிடுகிறது.

    பாலில் கலந்த விஷம் எத்தனை கொடியதோ, எத்தனை பேரை காவு வாங்குமோ, அப்படித்தான் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் விஷமத்தனமான கருத்துகளும். குறிப்பாக ஒருவர் தெரிவிக்கும் கருத்துக்கு ஆக்கப்பூர்வமான பதில் சொல்ல முடியாத நிலையில், சிலர் ஆபாச வார்த்தைகளால் ‘கமெண்ட்’ செய்வதை பார்க்க முடிகிறது.

    அது மட்டுமின்றி தங்களது தரப்பு பிரச்சினைகளை நியாயப்படுத்த கத்தரித்து கற்பனையுடன் தொகுக்கப்பட்ட படக்காட்சிகளை வெளியிடுகின்றனர். இதை பார்த்து உண்மை என்று நம்பி பலரும் தங்கள் கருத்துகளை பதிவிடும் சூழலும், கொதித்தெழும் நிலைமையும் நீடிக்கிறது.

    அதை விடவும் மோசமாக தொலைக்காட்சிகளில் போடப்படும் அவசர செய்தி (பிரேக்கிங் நியூஸ்) பாக்ஸ்களை அப்படியே எடுத்து பொய் தகவல்களை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறார்கள். இது அவசர உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது பொய்யான தகவல் என்பதே பலருக்கும் தெரியாமல் முடிந்து போய்விடுகிறது என்பதுதான் காலக்கொடுமையாக உள்ளது.



    அதுமட்டுமா, கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் பெண் மற்றும் ஆண் அரசியல்வாதிகளின் அழகையும், குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி மீம்ஸ் என்ற பெயரில் பதிவிடுகிறார்கள். கடந்த காலங்களில் பத்திரிகைகளில் கேலிச்சித்திரம் மற்றும் கருத்து சித்திரம் வரைந்து வெளியிடும் பழக்கம் ஏற்பட்டது. அந்த சித்திரங்களை பார்த்து சம்பந்தப்பட்டவர்களே சிரித்து இருக்கிறார்கள். காரணம் அதில் உள்நோக்கம் இருக்காது.

    ஆனால் இன்று அந்த நிலை மாறிவருகிறது. சமூக ஊடகங்களில் வலம் வரும் கேலிச்சித்திரம் சம்பந்தப்பட்டவர்களை கோபமடையச்செய்கிறது. அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு மன வலியையும் ஏற்படுத்துகிறது. இதனால் காவல் துறையில் புகார் கொடுக்கும் நிலைமைக்கு பலரும் தள்ளப்படுகிறார்கள். இருப்பினும் யாரோ ஒருவர் அனுப்பும் மோசமான கருத்து, பலரால் பகிரப்பட்டு விடுகிறது. இதில் யாரை பிடித்து காவல்துறை விசாரிக்கும்? இது இன்றைய காலத்தின் ஒரு கவலைக்குரிய விஷயமாகவே மாறி வருகிறது.

    அதுமட்டுமின்றி தங்களுக்கு பிடிக்காத தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பது, அவர்கள் இறந்து விட்டதுபோல கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை பதிவிடுவது போன்ற பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இது எப்படி கருத்து சுதந்திரமாகும்? சமூக வலைத்தளங்களில் உண்மை முகங்களை விடவும் பொய் முகங்களே அதிகமாக வெளிக்காட்டப்படுகிறது. இது இந்த சமுதாயத்தை அச்சுறுத்தும் மிகவும் ஆபத்தான அறிகுறி.

    அதுமட்டுமின்றி ஒரு கருப்பு நிறமுடைய குண்டான ஆணும், சிகப்பு நிறம் கொண்ட ஒல்லியான பெண்ணும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு நெல்லை அல்வா ஆப்பிரிக்காக் காரனுக்கு கிடைத்து உள்ளது என்று பதிவிடுகிறார்கள். அழகை யார் நிர்ணயிப்பது. ஒருவருக்கு அழகாக தெரியும் ஒன்று மற்றவருக்கு அவலட்சணமாக தெரியலாம். ஒருவருக்கு லட்டு பிடிக்கும், இன்னொருவருக்கு ஜாங்கிரி பிடிக்கும். இரண்டுமே இனிப்புதான். ஆனால் பொருள் வேறு அல்லவா?

    மணப்பெண்கூட அந்த மாப்பிள்ளையை ஏற்றுக்கொண்டு விட்டார். ஆனால் அதை பார்க்கும் மற்றவர் மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அந்த வன்மத்தை புகைப்படத்துடன் பதிவாக கொடுக்கிறார்கள். இதை சம்பந்தப்பட்டவர்கள் பார்த்தால் அவர்களது மனநிலை எப்படி இருக்கும். அதை பதிவிடும் முன்பு நமது வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி இருக்கும்? என்று சிந்தித்தால், இப்படிப்பட்ட பதிவுகள் வெளியிடும் மனது யாருக்கும் வராது.

    சமூக வலைத்தளம் என்பது பொழுதுபோக்குக்கும், பொது அறிவு தேடலுக்குமான களமாக இருக்க வேண்டும். போர் என்றால் கூட விதிமுறை உண்டு. ஒரு விளையாட்டு என்றாலும் ஒரு விதிமுறை உண்டு. விதிமுறை இல்லாத கருத்து சுதந்திரம் என்பது சிந்திக்க வேண்டிய விஷயமாகவே இருக்கிறது.

    எனவே, கருத்தை பதிவிடும் ஒவ்வொருவரும் அந்த கருத்தால் மற்றவருக்கு என்ன பயன்? என்று சிந்தித்து பதிவிடுவது முக்கியம். மற்றவர்கள் இதயத்தை குத்திக்கிழிக்கும் எந்த ஒரு கருத்தும் மனங்களை கொள்ளை கொள்ளாது என்பதை கருத்தில் கொண்டால், விரும்பத்தகாத, அருவருக்கத்தக்க கருத்துகளும், படக்காட்சிகளும், வீடியோ காட்சிகளும் வலைத்தளங்களில் வட்டமடிக்காது.

    அது இந்த சமுதாயத்திற்கு மட்டுமல்ல, எதிர்கால சந்ததிக்கும் ஒரு வழிகாட்டுதலாக அமையும். சமூக பொறுப்பு என்பது முதலில் தனி மனிதனிடம் இருந்துதான் தொடங்குகிறது என்பதை நாம் எப்போதும் மறந்து விடக்கூடாது.

    -முத்துக்குட்டி 
    அசாம் மாநில பாஜகவின் பழைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரும்பத்தகாத படங்களை பதிவு செய்யப்பட்டிருந்ததால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    திஸ்பூர்:

    அசாம் மாநிலத்தில் பாஜகவின் இணையதளத்தை கூகுளில் தேடிய போது, அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அம்மாநில பாஜகவின் பழைய அதிகாரப்பூர்வ இணையதளம் ஒன்று முழுமையாக ஆபாச வீடியோ தளமாக மாறியுள்ளது. 

    இதுகுறித்து வெளிவந்த தகவல்களின்படி, அசாம் மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.assam.bjp.org. ஆனால், இதற்கு முன்பு ஒரு தனியார் அமெரிக்க நிறுவனம் மூலம் ஒரு அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை நடத்தி வந்தது. அதன் டொமைன் காலம் முடிவடையும் தருவாயில், அந்த பழைய இணையதளத்தின் டொமைனை, வேறொருவர் வாங்கியுள்ளார். இதையடுத்து பாஜகவின் பழைய அதிகார்ப்பூர்வ பக்கத்தை, அந்த ஆபாச வீடியோ வலைதளமாக மாற்றியுள்ளார். 

    பின்னர், தகவலறிந்து அதிர்ச்சியடைந்த அசாம் மாநில பாஜகவினர், அந்த தனியார் அமெரிக்க நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், தங்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், பழைய இணையதளத்தை ஆபாச இணையதளமாக மாற்றப்பட்டுள்தாகவும், எனவே அதை முடக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    தற்போது அந்த இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.
    ×