search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறந்தாங்கி"

    அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் உள்ள பெரியாரின் சிலை மர்மநபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #PeriyarStatueVandalised
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை சாலையில் அரசு ஆஸ்பத்திரி அருகே 8 அடி உயரம் கொண்ட பெரியார் சிலை உள்ளது. கடந்த 1998-ம் ஆண்டு தி.க. தலைவர் கி.வீரமணி இந்த சிலையை திறந்து வைத்தார்.

    பெரியாரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் தி.க., தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பெரியார் சிலை சாக்குகளால் போர்த்தி மூடி வைக்கப்பட்டிருந்தது.

    ஆனால் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மறைந்த பழைய தலைவர்களின் சிலைகளை மூடி வைக்க தேவையில்லை என்று அறிவித்திருந்தார். அதனடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறந்தாங்கியில் மூடி வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை சாக்குகள் அகற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

    இந்தநிலையில் இன்று அதிகாலை அந்த பகுதிக்கு வந்த யாரோ மர்ம நபர்கள் பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். சிலையின் தலைபகுதியை இரண்டு துண்டுகளாக உடைத்து அதே இடத்தில் வீசி இருந்தனர்.



    காலையில் அந்த பகுதிக்கு வந்தவர்கள் பெரியார் சிலை உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறந்தாங்கி முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. அடுத்த சில நிமிடங்களில் அங்கு தி.க., தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். மேலும் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. சிவ.மெய்யநாதனும் வந்தார்.

    பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்திய மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தி.க. அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் யோகராஜ் அறந்தாங்கி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், டி.எஸ்.பி. கோகிலா ஆகியோரும் வந்து விசாரித்தனர்.

    இதற்கிடையே தி.க. மண்டல தலைவர் ராவணன் தலைமையில் அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் கட்சியினர் திடீரென அமர்ந்து மறியல் செய்தனர். உடனடியாக பெரியார் சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றனர். அவர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தார். இந்த மறியலால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சென்றனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதேபோல் அறந்தாங்கியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அதையும் மீறி இன்று அதிகாலை பெரியார் சிலை உடைக்கப்பட்டது பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசியதை இந்து முன்னணியினர் கண்டித்தனர். இதில் பயங்கர மோதல் உருவானது.

    அதேபோல் இந்து கடவுள் கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த தி.க. தலைவர் கி.வீரமணிக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் தற்போது அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது.  #PeriyarStatueVandalised
    அறந்தாங்கியில் குடும்ப தகராறில் 3 குழந்தைகளுடன் பெண் மாயமானார். இது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே உள்ள துரையரசபுரம், புதுகாலணியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30) இவர் வெளியூரில் தங்கியிருந்து பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராதிகா (வயது 26). இவர்களுக்கு புவனாட்சி(8), கிருத்திகா(4) என்ற 2 மகள்களும் அருள்பிரகாஷ் என்ற 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

    பிரபாகரனுக்கும் ராதிகாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 5 மாதத்திற்கு முன்பு ராதிகா கணவரிடம் கோபித்து கொண்டு மயிலாடுதுறையில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றார். பின்னர் கடந்த மாதம் 27-ந் தேதி கணவர் வீட்டிற்கு வந்தார்.

    28-ந் தேதி வீட்டின் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, 3 குழந்தைகளின் ஆதார்கார்டு ஆகியவற்றை எடுத்து கொண்டு தனது 3 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.

    அப்போது பிரபாகரன் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். வீட்டிற்கு வந்து பார்த்த போது தான் மனைவி குழந்தையுடன் மாயமானது தெரியவந்தது. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை.

    பிரபாகரன் இது குறித்து ஆவுடையார் கோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து 3 குழந்தைகளுடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள்.

    அறந்தாங்கி அருகே வாலிபர் கொலை செய்யப்பட்டசம்பவத்தில், தகராறில் ஈடுபட்டதால் அடித்து கொன்ற சித்தப்பா உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆமாஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் வீரபத்திரன் என்ற அறிவழகன் (வயது 28). அவரது குடும்பத்தினரும், அவரது சித்தப்பா பழனியப்பன் குடும்பத்தினரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். வீரபத்திரன் இரவு நேரத்தில் அவரது வீட்டின் அருகில் உள்ள ரகுபதி என்பவருக்கு சொந்தமான குடிசையில் தங்கி வந்துள்ளார். மது அருந்தும் பழக்கம் உடைய வீரபத்திரன் பலருடன் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வீரபத்திரன் சாப்பிட்டு விட்டு, குடிசையில் படுத்து தூங்கினார். இந்நிலையில் நேற்று காலை பழனியப்பன் குடும்பத்தினர் பார்த்தபோது, வீரபத்திரன் முகம் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இச்சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரபத்திரனை கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்தநிலையில் வீரபத்திரனை கொலை செய்த வழக்கில் அவரது சித்தப்பா பழனியப்பன் (42), உறவினர் ரவிச்சந்திரன் (42) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலம் பின் வருமாறு:- சம்பவத்தன்று இரவு வீரபத்திரன், குடிசையில் வழக்கமாக தூங்கும் இடத்தில் தூங்கினார். அப்போது நாங்கள் 2 பேரும் அங்கு சென்று தூங்கி கொண்டிருந்த வீரபத்திரனை எழுப்பி, ஏன் இப்படி குடித்து விட்டு பலருடன் தகராறு செய்கிறாய் என்று கேட்டோம். அப்போது வீரபத்திரனுக்கும் எங்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் இரும்பு கம்பி, உருட்டு கட்டையால் வீரபத்திரனை முகம் சிதையும் அளவிற்கு அடித்தோம். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதையடுத்து நாங்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டோம், என்று தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  
    அறந்தாங்கி அருகே நள்ளிரவில் மது குடிக்கும் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆமாஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் வீரபத்திரன் என்ற அறிவழகன் (வயது 28). இன்னும் திருமணமாக வில்லை.

    இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவையில் தங்கியிருந்து வீடுகளுக்கு சிமெண்டு மற்றும் பிளாஸ்டிக் கூரை அமைக்கும் பணி செய்து வந்தார். பின்னர் சொந்த ஊருக்கு வந்த அவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். பெற்றோர் கண்டித்ததால் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில் செய்தார்.

    வழக்கமான ஆமாஞ்சி கிராமத்தில் பெரும்பாலானோர் கூலி வேலை மற்றும் விவசாயம் பார்த்து வந்ததால் இரவு 8 மணிக்கே அனைவரும் தூங்க சென்று விடுவார்கள். அதேபோல் நேற்று இரவு கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த சிவக்குமார் குடும்பத்தினரும் தூங்க சென்றனர்.

    வீரபத்திரனும் சாப்பிட்டு விட்டு வீட்டு முன்பு தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை சிவக்குமார் குடும்பத்தினர் எழுந்து பார்த்த போது அங்கு வீரபத்திரன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது முகம் கல்லால் தாக்கி சிதைந்த நிலையில் காணப்பட்டது.

    அவர் பிணமாக கிடந்த இடத்தின் அருகில் 2 மது பாட்டில்கள், அதனை குடிக்க பயன்படுத்திய பிளாஸ்டிக் கப்புகள் கிடந்தன. எனவே நள்ளிரவில் வீரபத்திரன் மற்றும் சிலர் அந்த இடத்தில் மது அருந்தியிருக்கலாம் என்றும், அதில் ஏற்பட்ட தகராறில் வீரபத்திரனை கொடூரமாக கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட வீரபத்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

    வீரபத்திரன் மது குடிக்கும் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது முன் விரோதம் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×