search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராட்டு"

    செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளனர். #Modi #MissionShakti #RamNathKovind #VenkaiahNaidu
    புதுடெல்லி:

    செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில், “மிஷன் சக்தி, இந்தியாவின் பெருமைமிகு தருணம். இந்த சோதனை, இந்தியாவின் விஞ்ஞான திறன் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் உறுதிப்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள்“ என்று கூறியுள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது வாழ்த்து செய்தியில், “இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். நமது விஞ்ஞானிகளால் நாம் பெருமைப்படுகிறோம்“ என்று கூறியுள்ளார்.

    நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷவர்தன், சுரேஷ் பிரபு, ஸ்மிரிதி இரானி, முதல்-மந்திரிகள் யோகி ஆதித்யநாத், தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். #MissionShakti #RamNathKovind  #VenkaiahNaidu
    ராஜஸ்தானில் முதல் முறையாக சிஏ தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்வான டெய்லர் மகனுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். #RahulGandhi #CAtopper

    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா நகரை சேர்ந்தவர் ஷதாப் உசேன். இவரது அப்பா டெய்லராக வேலை பார்த்து வருகிறார். ஷஹாப் உசேன் சமீபத்தில் சிஏ தேர்வை முதல் முறையாக எழுதினார். 

    இதற்கிடையே, சிஏ தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியானது. அதில் ஷதாப் உசேன் 800 மதிப்பெண்களுக்கு 597 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது 74.63 சதவீதமாகும்.



    இந்நிலையில், ராஜஸ்தானில் முதல் முறையாக சிஏ தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்வான டெய்லர் மகனுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் கூறுகையில், வாழ்த்துக்கள் ஷதாப். உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். உங்கள் பயணத்தில் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். #RahulGandhi #CAtopper
    எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்த்து ஜனநாயகத்தை மீட்டெடுத்ததாக மம்தா பானர்ஜிக்கு பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த சத்ருகன் சின்கா எம்.பி. புகழாரம் சூட்டியுள்ளார். #ShatrughanSinha #MamataBanerjee #Democracy
    பாட்னா:

    மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பா.ஜனதா கட்சிக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் பிரமாண்ட மாநாட்டை நடத்தினார். இதில் பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த சத்ருகன் சின்கா எம்.பி. கலந்து கொண்டார்.



    இந்த நிலையில், அவர் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்த்து ஜனநாயகத்தை மீட்டெடுத்ததாக மம்தா பானர்ஜிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

    இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மாநாட்டில் கலந்து கொண்ட சத்ருகன் சின்கா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பா.ஜனதா தேசிய செய்தித்தொடர்பாளர் பிரதாப் ரூடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், இதுபற்றி கவனத்தில் கொள்ளப்படும்’ என்று தெரிவித்தார்.   #ShatrughanSinha #MamataBanerjee #Democracy 
    ஐதராபாத் அரசு மருத்துவமனை அருகே பசி தாங்காமல் துடித்து கொண்டிருந்த அனாதை கைக்குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீஸ் பிரியங்காவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. #HyderabadwomanPolice #WomanPolice
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் நகரில் உள்ள அப்சல்கஞ்ச் பகுதியில் மிகவும் பழமையான ஒஸ்மானியா அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த மருத்துவமனை வாசலில் யாகுத்புரா பகுதியை சேர்ந்த முஹம்மது இர்பான் என்பவர் நின்றிருந்தபோது, மிதமிஞ்சிய போதையில் அவ்வழியாக வந்த ஒரு பெண் தன் கையில் இருந்த குழந்தையை இர்பான் கையில் திணித்தார்.

    சற்று நேரம் குழந்தையை பார்த்து கொள்ளுங்கள், இதோ வந்து விடுகிறேன் என்று கூறிச் சென்ற அந்தப் பெண் சிலமணி நேரமாகியும் திரும்பி வரவில்லை. அதற்குள் இர்பான் கையில் இருந்த அந்த இரண்டுமாத பெண் குழந்தை பசி தாங்காமல் அழ ஆரம்பித்தது.

    குழந்தையின் அழுகை அதிகரிக்கவே அருகாமையில் உள்ள தனது வீட்டுக்கு அதை தூக்கிச் சென்ற இர்பான், புட்டிப்பால் கொடுத்து சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அதை குடிக்க மறுத்த குழந்தையின் கதறல் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இதற்குள் இரவு நெருங்கி விட்டதால், என்ன செய்வது? என்று புரியாமல் தவித்த இர்பான் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்.

    குழந்தையை தூக்கிக்கொண்டு அருகாமையில் இருக்கும் அப்சல்கஞ்ச் காவல் நிலையத்துக்கு சென்றார். அங்கு இரவுநேரப் பணியில் இருந்த தலைமை காவலர் ரவீந்திரனிடம் நிலைமையை கூறி, பசியால் துடித்து அழும் குழந்தையை அவரிடம் ஒப்படைத்தார்.

    அழுதழுது சோர்ந்து பலவீனமாக காணப்பட்ட அந்த குழந்தையின் தவிப்பையும் பசியையும் உணர்ந்த ரவீந்திரன், மகப்பேறு முடிந்து பிரசவ விடுமுறையில் வீட்டில் இருக்கும் தனது மனைவி பிரியங்காவை கைப்பேசியில் தொடர்பு கொண்டார்.

    பேகம்பேட் காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணியாற்றும் பிரியங்காவிடம் விபரத்தை கூறினார். கணவன் கூறிய தகவல்களின் இடையே பசியால் துடித்து கதறும் குழந்தையின் அழுகுரல் மறுமுனையில் பேசிக்கொண்டிருந்த பிரியங்காவின் இதயத்தை பிழிந்தது.

    சற்றும் தாமதிக்காமல் வாடகை கார் பிடித்து அப்சல்கஞ்ச் காவல் நிலையம் வந்துசேர்ந்தார், பிரியங்கா. அங்கு கணவர் ரவீந்திரன் குழந்தையை சமாதானப்படுத்த முடியாமல் தவித்து கொண்டிருந்ததை கண்ட அவர், உடனடியாக குழந்தையை வாரி அணைத்து, தாய்ப்பால் புகட்ட தொடங்கினார்.



    இந்த தகவலை அறிந்த ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் அஞ்சானி குமார், தலைமை காவலர் ரவீந்திரனின் கடமை உணர்வையும், பெண் காவலர் பிரியங்காவின் தாய்மை உணர்வையும் பெரிதும் பாராட்டினார். பெற்றோர் தேடிவரும் வரை அந்த பெண் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பையும் பிரியங்காவிடம் ஒப்படைத்தார்.

    இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாக தொடங்கியதும், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உரிய நேரத்தில் அரியதொரு உதவியை செய்த பெண் போலீஸ் பிரியங்காவுக்கும் அவரது கணவர் ரவீந்திரனுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

    இதற்கிடையில் தெருக்களில் குப்பை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டுவரும் அந்த குழந்தையின் தாயாரை போலீசார் கண்டுபிடித்து எச்சரித்து குழந்தையை ஒப்படைத்தனர். #HyderabadwomanPolice #WomanPolice #WomanPolicePriyanka
    தொழில் அதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கில் உதவிய இங்கிலாந்து அதிகாரிகளுக்கு இந்தியா பாராட்டு தெரிவித்து உள்ளது. #VijayMallya #VijayMallyaextradition
    புதுடெல்லி:

    தொழில் அதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்றார். இது தொடர்பாக அமலாக்க துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து அதிகாரிகள் மூலமாக இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்த வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் நடந்து வந்தது. இங்கிலாந்து கோர்ட்டு நேற்று முன்தினம் அளித்த பரபரப்பு தீர்ப்பில், விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம் என உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை மத்திய மந்திரி அருண் ஜெட்லி, பா.ஜ.க. தேசிய செயலாளர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் வரவேற்றனர். அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஊழலை ஒழிக்க இந்தியா எடுத்து வரும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த பெருமை அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியையே சாரும்” என பாராட்டு தெரிவித்தார்.

    அதே சமயம் தீர்ப்பு குறித்து விஜய் மல்லையா கூறுகையில், “இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. மேல்முறையீடு செய்ய எங்களுக்கு 14 நாட்கள் அவகாசம் தரப்பட்டு உள்ளது” என்றார்.

    இதனிடையே இந்த தீர்ப்பு குறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பாக இங்கிலாந்து கோர்ட்டு அளித்த தீர்ப்பு எங்களுக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது. இந்த வழக்கில் உதவிய இங்கிலாந்து அதிகாரிகளுக்கு எங்களுடைய பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துகொள்கிறோம்.

    மிக விரைவில் அவரை இந்தியாவுக்கு கொண்டு வர தீவிர முயற்சி எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விஜய் மல்லையாவுக்கு எதிரான கடன் மோசடி வழக்கு மும்பை சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. கோர்ட்டில் விஜய் மல்லையாவின் வக்கீல் நேற்று ஆஜராகி, தேடப்படும் குற்றவாளி என அறிவிக்க கோரும் அமலாக்க துறையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர் வாதிடுகையில், “அமலாக்க துறை கூறுவது போல விஜய் மல்லையா இந்தியாவை விட்டு ரகசியமாக தப்பவில்லை. அவர் வெளிநாடு வாழ் இந்தியர். லண்டனில் அவர் தங்கியிருக்கும் இடம் அனைவருக்கும் தெரியும்” என்றார்.  #VijayMallya #VijayMallyaextradition

    கஜா புயல் மீட்புப்பணிகளில் இரவு-பகலாக தன்னலம் கருதாமல் சிறப்பாக பணியாற்றும் அனைத்து துறை பணியாளர்களுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். #GajaCyclone #EdappadiPalanisamy
    சென்னை:

    கஜா புயல் மீட்புப்பணிகளில் இரவு-பகலாக தன்னலம் கருதாமல் சிறப்பாக பணியாற்றும் அனைத்து துறை பணியாளர்களுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    16.11.2018 அன்று ‘கஜா’ புயல் நாகப்பட்டினம் மாவட்டம் அருகே கரையைக் கடந்தபோது, டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயின. அரசு எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டன.



    எனினும், புயலின் தாக்கத்தினால், கால்நடைகள், வீடுகள், பயிர்கள், மின்கம்பங்கள், குடிநீர் குழாய்கள் போன்ற உள்கட்டமைப்புகள் பெருமளவில் சேதம் அடைந்தன.

    ‘கஜா’ புயல் கரையை கடப்பதற்கு முன்பும், கடந்த பின்னரும், எனது தலைமையில் பல ஆய்வுக் கூட்டங்களை நடத்தி பல்வேறு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், பால், வேட்டி, சேலை, 10 கிலோ அரிசி, மண்எண்ணெய் மற்றும் பருவ மழையிலிருந்து வீடுகளை பாதுகாப்பதற்கு ஏதுவாக கூரை மேல் போடுவதற்கு தார்பாய்கள் போன்றவை உடனடியாக வழங்க உத்தரவிட்டிருந்தேன்.



    எனது உத்தரவின் பேரில், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு பிற மாவட்டங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பணியாளர்கள் அனுப்பப்பட்டு, நிவாரணம் மற்றும் மீட்புப் பணியில் இரவு-பகல் பாராது, பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலேயே தங்கி, சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அவ்வாறு தன்னலம் கருதாமல் சிறப்பாக பணியாற்றி வரும் அனைத்து துறை பணியாளர்களையும் நான் மனதார பாராட்டுகிறேன்.

    இந்தநிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு, நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த, திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தில், ஓட்டுனராக பணிபுரிந்து வந்த பாலசுப்பிரமணியனின் மகன் பி.நாகராஜ் 25-ந் தேதியன்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

    கஜா புயலின் தாக்கத்தினால் வீடுகள் சேதமடைந்து, முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த நாகராஜின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அவரது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, சிறப்பினமாக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். நாகராஜின் குடும்பத்தினர் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு நிறுவனத்தில் வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #GajaCyclone #EdappadiPalanisamy
    திருப்பூரில் நடுரோட்டில் கிடந்த ரூ.2 லட்சம் பணத்தை, நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த தொழிலாளியை போலீசார் பாராட்டினர்.
    திருப்பூர்:

    திருப்பூர் அருகே உள்ள நாச்சிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 34). பனியன் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    அப்போது, வழியில் இருந்த, டாஸ்மாக் மதுக்கடை அருகே சென்ற போது நடுரோட்டில் ஒரு கவர் கிடந்தது. அதைப்பார்த்து சந்தேகம் அடைந்த செந்தில்குமார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கவரை எடுத்து பிரித்து பார்த்தார். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. பணத்தை கண்டெடுத்தது குறித்து திருப்பூர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணத்தை ஒப்படைக்குமாறு கமி‌ஷனர் அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து ரூரல் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனிடம், பணம் இருந்த கவரை செந்தில்குமார் ஒப்படைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் கவரை பெற்று பணத்தை எண்ணிப்பார்த்தபோது அதில் ரூ.2 லட்சம்இருந்தது.

    நடுரோட்டில் கிடந்த பணத்தை, நேர்மையுடன் போலீசிடம் ஒப்படைத்த, செந்தில்குமாரை போலீசார் பாராட்டினர். மேலும், அவருக்கு பரிசு வழங்கி கவுரவப்படுத்த, போலீசார் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு, பரிந்துரைத்தனர்.

    பணத்தை கண்டெடுத்த செந்தில்குமார் கூறும்போது, யாரோ உழைத்து சம்பாதித்த பணம். தவறவிட்டனர் என்பதற்காக நான் வைத்துக்கொள்வது நியாயமில்லை. இதனால் பணத்தை போலீசில் ஒப்படைத்தேன் என்று கூறினார். ரூ.2 லட்சம் தவற விட்டவர்கள் உரிய ஆதாரங்களை திருப்பூர் ரூரல் போலீசில் காண்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று போலீசார் அறிவித்து உள்ளனர்.
    சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 62 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண் அடைந்தனர். #Naxals #Surrendered
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறை தாக்குதல்கள் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேசமயம் பயங்கரவாதப் பாதையில் இருந்து திரும்பி திருந்தி வாழ விரும்பும் மாவோயிஸ்டுகளுக்கு, புனர்வாழ்வு பணிகளுக்கான ஏற்பாடுகளையும் அரசு செய்து கொடுக்கிறது.

    மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்தால் அவர்கள் திருந்தி வாழ வாய்ப்பு வழங்கப்படும் என்று காவல்துறை தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில் பஸ்தார் பிராந்தியம் நாராயண்பூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்டுகள் 62 பேர் நேற்று போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இவர்கள் அனைவரும் கடந்த 9 ஆண்டுகளாக ஜன்தனா சர்கார் என்ற மாவோயிஸ்ட் அமைப்பின்கீழ் செயல்பட்டு வந்தவர்கள் என்றும், அவர்களில் 55 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்ததாகவும் ஐஜி விவேகானந்த் சின்கா தெரிவித்துள்ளார்.



    இந்த அளவுக்கு மாவோயிஸ்டுகள் சரண் அடைந்திருப்பது மிகப்பெரிய சாதனை என்றும், இது அரசின் சரண்டர் கொள்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி பெற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மாநில முதல்வர், டிஜிபி மற்றும் காவல்துறையினருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் 12ம் தேதி மற்றும் 20-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.  #Naxals #Surrendered
    தூய்மை இந்தியா திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் களத்தில் இறங்கி செயல்பட்ட புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். #CleanIndia #PMModi #Narayanasamy
    புதுடெல்லி:

    புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் முதல் மந்திரி நாராயணசாமி அக்டோபர் ஒன்றாம் தேதி 'தூய்மையே சேவை' திட்டத்தை தொடங்கி வைத்தார். 

    அப்போது, திடீரென வேட்டியை மடித்துக் கட்டிய அவர், அருகிலிருந்த கழிவுநீர் கால்வாயில் இறங்கி, மண்வெட்டியால் தூர்வாரி சுத்தம் செய்தார்.



    இதையறிந்த பிரதமர் நரேந்திர மோடி, புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், தூய்மை இந்தியா திட்டத்துக்கு வலுசேர்க்கவும், அனைவருக்கும் உத்வேகம் தரும் வகையிலும் முன்னுதாரணமாக திகழ்ந்த நாராயணசாமிக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். #CleanIndia #PMModi #Narayanasamy
    சென்னை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் உயிரை காப்பாற்றிய பெண் போலீசுக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
    சென்னை:

    சென்னை கலெக்டர் அலுவலகத்தில் கிழக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் கோமதி என்ற பெண் போலீஸ் நேற்று பணியில் இருந்தார்.

    அப்போது எண்ணூரை சேர்ந்த யுவராஜ் என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளோடு அங்கு வந்தார். அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண் எண்ணை கேனை எடுத்து தனது உடலில் ஊற்றியதுடன் மனைவி, குழந்தைகள் உடலிலுல் ஊற்றினார். பின்னர் திடீரென தீப்பெட்டியை எடுத்து தீயை பற்ற வைத்து தீக்குளிக்க முயன்றார்.

    இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் கோமதி பாய்ந்து சென்று தீப்பெட்டியையும், மண்எண்ணை கேனையும் பறித்தார். இதனால் ஒரே குடும்பத்தில் 5 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் பெண் போலீஸ் கோமதியை அழைத்து உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர். குறித்த நேரத்தில் சமயோசிதமாக செயல்பட்ட கோமதி நேற்று மதியம் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டார். அவரை போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர். #tamilnews
    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் கேல் ரத்னா விருது பெற்ற விராட் கோலிக்கும் வாழ்த்து கூறியுள்ளார். #ManmohanSingh #HappyBirthdayDrSingh #ModiWishes
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மேகன் சிங் இன்று 86-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், ‘நமது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். டாக்டர் மன்மோகன் சிங் நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.



    இதேபோல் கேல் ரத்னா விருது பெற்ற விராட் கோலி மற்றும் பிற தேசிய விளையாட்டு விருதுகளைப் பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கும் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.

    ‘விளையாட்டுத் துறையில் பல ஆண்டு கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் செயல் திறனால் வீரர்களுக்கு இந்த விருதுகள் கிடைத்துள்ளன. நமது விளையாட்டு வீரர்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது’ எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    தேசிய விளையாட்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று விருதுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. #ManmohanSingh #HappyBirthdayDrSingh #ModiWishes
    ‘பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தொடர்ச்சியாக இந்திய அணி வெற்றி பெற பந்து வீச்சாளர்கள் முக்கிய காரணம்’ என்று கேப்டன் ரோகித் சர்மா பாராட்டினார். #AsiaCup2018 #RohitSharma #IndiavsPakistan
    14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் துபாயில் நேற்று முன்தினம் நடந்த சூப்பர்-4 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடி அசத்தியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்ய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோயிப் மாலிக் 78 ரன்னும், கேப்டன் சர்ப்ராஸ் அகமது 44 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் அதிரடியாக அடித்து ஆடி பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை பதற வைத்ததுடன், அணியை வெற்றிப் பாதையில் அருமையாக அழைத்து சென்றனர். 15-வது சதம் அடித்த ஷிகர் தவான் 100 பந்துகளில் 16 பவுண்டரி, 2 சிக்சருடன் 114 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் சோயிப் மாலிக் பந்து வீச்சில் ஹசன் அலியால் ரன்-அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 33.3 ஓவர்களில் 210 ரன்னாக இருந்தது.



    அடுத்து அம்பத்தி ராயுடு, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். இந்த இணை அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. இந்திய அணி 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. 19-வது சதம் கண்ட கேப்டன் ரோகித் சர்மா 119 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 111 ரன்னும், அம்பத்தி ராயுடு 18 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 14 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய வீரர் ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காத இந்திய அணி ‘சூப்பர்-4’ சுற்றில் தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை சாய்த்து இருந்தது. முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்த பாகிஸ்தான் அணி ‘சூப்பர்-4’ சுற்றில் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். வங்காளதேசத்துக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து இந்திய அணி ஒரு ஆட்டம் மீதம் இருக்கையிலேயே இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. லீக் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை பதம் பார்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், ‘நமது அணியின் ஒட்டுமொத்த பவுலர்களும் தங்கள் இலக்கை எட்ட தீவிரம் காட்டினார்கள். சவாலான இந்த சூழலில் பந்து வீச்சாளர்கள் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு எதிரணியை அதிகம் ரன் குவிக்க விடாமல் கட்டுப்படுத்தியது பாராட்டுக்குரிய விஷயமாகும். இதனால் வெற்றி எளிதில் நமது வசமானது. ஷிகர் தவான் அணியில் தனது பங்கை உணர்ந்து விளையாடக்கூடியவர். நான் அவரிடம் அதிகம் பேச வேண்டிய அவசியம் கிடையாது. எங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. இங்குள்ள சூழலில் சிக்சர் அடிப்பது எளிதான காரியம் அல்ல. அதற்காக கடினமாக பயிற்சி எடுத்தேன். எதிரணி பவுலர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற அதிரடி ஷாட்களை ஆடினேன். ஏனெனில் பாகிஸ்தான் அணி வலுவான பந்து வீச்சை கொண்டதாகும். அவர்களுக்கு நாம் நெருக்கடி கொடுக்கவில்லை என்றால் அவர்கள் முன்பு போல் நமக்கு தொல்லை கொடுத்து விடுவார்கள். முதல் 10 ஓவர்களுக்குள் விக்கெட்டை இழக்காமல் விளையாட வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டோம்’ என்று தெரிவித்தார்.

    தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கருத்து தெரிவிக்கையில், ‘ரோகித் சர்மா உள்பட சிலரின் கேட்ச் வாய்ப்புகளை நாங்கள் தவறவிட்டதன் பலனை போட்டி முடிவில் அனுபவித்தோம். அத்துடன் நாங்கள் 20 முதல் 25 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். கேட்ச்களை நாங்கள் தவறவிடாமல் இருந்திருந்தால் ஆட்டத்தின் போக்கு வேறு மாதிரி அமைந்து இருக்கலாம். மாலையில் இந்த பிட்ச்சில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. நாங்கள் தொடக்கத்தில் விக்கெட் வீழ்த்தி இருந்தால் வெற்றி இலக்கை சேசிங் செய்வது எதிரணிக்கு கடினமானதாக இருந்து இருக்கும். தொடக்கத்தில் நாங்கள் அதிக விக்கெட்டுகளை இழந்ததால் சரிவில் இருந்து மீண்டு வர முடியாமல் போய்விட்டது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆட்டம் அருமையாக இருந்தது. எங்களுடன் ஒப்பிடுகையில் அவர்கள் ஆட்ட திறன் உயர்வானது. நாங்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் எங்கள் ஆட்ட திறனை மேம்படுத்த வேண்டியது அவசியமானதாகும். வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டம் எங்களுக்கு வாழ்வா-சாவா? போட்டியாகும். அதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்று நம்புகிறேன்’ என்றார். #AsiaCup2018 #RohitSharma #IndiavsPakistan

    ×