search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவா"

    கோவா மாநிலத்தில் பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வந்த மகாராஷ்டிர கோமந்தக் கட்சி இரண்டாக உடைந்துள்ள நிலையில், அதில் 2 எம்எல்ஏக்களைக் கொண்ட ஒரு அணி பாஜகவில் இணைந்தது. #GoaBJPGovt #MGPMLAs
    பனாஜி:

    கோவா மாநிலத்தில் முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானதையடுத்து, சட்டசபையில் ஆளும் பாஜக கூட்டணியின் பலம் குறைந்தது. எனவே, தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியது. ஆனால் பாஜக கூட்டணிக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்த நிலையில், பாஜகவின் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட பிரமோத் சாவந்துக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பிரமோத் சாவந்த் வெற்றி பெற்றார்.



    இந்நிலையில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி (எம்ஜிபி) இரண்டாக உடைந்தது. அந்த கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களில் மனோகர் அஜாங்கர், தீபக் பவாஸ்கர் ஆகியோர் கட்சியில் இருந்து பிரிந்து புதிய அணியை உருவாக்கினர். பின்னர் அவர்கள் பாஜகவில் இணைந்தனர்.

    இந்த இணைப்பு தொடர்பாக நள்ளிரவில் இருவரும் சபாநாயகர் மைக்கேல் லோபோவிடம் கடிதம் கொடுத்தனர். அந்த கடிதத்தில் மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் மற்றொரு எம்எல்ஏவும் துணை முதல்வருமான சுதின் தவாலிகர் கையெழுத்திடவில்லை.

    கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தனி அணியாகப் பிரிந்து, மற்றொரு கட்சியில் இணைந்தால் கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

    தற்போது 2 எம்எல்ஏக்கள் வருகையால் கோவா சட்டசபையில் பாஜக உறுப்பினர்களின் பலம் 14 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரசுக்கும் 14 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

    கட்சியில் பிளவு ஏற்படுத்த சதி நடப்பதாகவும், அதனால் சாவந்த் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாகவும் எம்ஜிபி கட்சியின் தலைவர் தீபக் தவாலிகர் நேற்று மிரட்டல் விடுத்திருந்தார். இன்று (புதன்கிழமை) நடக்கும் மத்திய குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியிருந்த நிலையில், 2 எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்து பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

    2012ல் இருந்து பாஜகவுடன் மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி கூட்டணி வைத்துள்ளது. இன்று நடக்கும் கூட்டத்தில் பாஜக அரசுக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை முதல்வர் சுதின் தவாலிகர், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

    கூட்டணி கட்சிகளை பாஜக மிரட்டுவது இதன்மூலம் நிரூபணமாகியிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுனில் காவ்தாங்கர் விமர்சித்துள்ளார்.  #GoaBJPGovt #MGPMLAs

    கோவா சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றது. #GoanewCM #Goafloortest #PramodSawant
    பனாஜி:

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து, புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கான கூட்டம் பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார். 
     
    கோவாவின் புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் நேற்று அதிகாலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

    முன்னதாக, கோவா முதல் மந்திரி காலமானதால் சட்டசபையில் ஆளும்கட்சியின் பலம் குறைந்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து கடிதம் அளித்திருந்தனர்.

    இதற்கிடையே, முதல் மந்திரியாக பதவியேற்ற பிரமோத் சாவந்த், ‘என்னுடன் 2 துணை முதல் மந்திரிகளாக விஜய் சர்தேசாய், சுதின் தவில்கர் ஆகியோர் விரைவில் பதவி ஏற்கவுள்ளனர். இந்த அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் சட்டசபையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறும். அதில் பா.ஜ.க. அரசு வெற்றி பெறும் என தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில்,  கோவா சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது.

    கோவா சட்டசபையில் ஆட்சி அமைக்க மொத்தம் 19 உறுப்பினர்களின் ஆதரவு தேவையான நிலையில், பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு 20 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. அவருக்கு எதிராக 15 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றது. #GoanewCM #Goafloortest  #PramodSawant
    கோவா மாநில சட்டசபையில் இன்று பாஜக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. #GoanewCM #ManoharParikkar #PramodSawant
    பனாஜி:

    கோவா முதல்-மந்திரியாக இருந்து வந்த மனோகர் பாரிக்கர் கடந்த 17-ந்தேதி மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து அங்கு முதல்- மந்திரி நாற்காலி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.

    40 இடங்களை கொண்ட கோவா சட்டசபையில் 14 உறுப்பினர்களுடன் தனிப் பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னர் மிருதுளா சின்காவை சந்தித்து வலியுறுத்தினர்.

    ஆனால் பாரதீய ஜனதா கட்சிக்கு 12 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்; அதன் கூட்டணியில் உள்ள மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி (எம்.ஜி.பி.), கோவா பார்வர்டு கட்சி (ஜி.எப்.பி.) ஆகியவற்றுக்கு தலா 3 உறுப்பினர்களும், சுயேச்சைகள் 3 பேரும் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவு அளிக்கின்றனர்.



    இந்த நிலையில் கோவா சட்டசபை சபாநாயகராக இருந்து வந்த பிரமோத் சாவந்த் (வயது 46), புதிய முதல்-மந்திரியாக நேற்று முன்தினம் தேர்ந் தெடுக்கப்பட்டார். ஆயுர்வேத மருத்துவரான இவர், மறைந்த முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

    பிரமோத் சாவந்த் ஆட்சி அமைக்க கவர்னர் மிருதுளா சின்கா அழைப்பு விடுத்தார்.

    அதைத் தொடர்ந்து பனாஜியில் உள்ள கவர்னர் மாளிகையில் நள்ளிரவில் நடந்த எளிய நிகழ்ச்சியில் புதிய முதல்-மந்திரி பிரமோத் சாவந்துக்கு கவர்னர் மிருதுளா சின்கா பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

    அவருடன் சுதன் தாவ்லிகார், விஜய் சர்தேசாய், பாபு அஜ்காவோங்கர், ரோகன் காண்டே, கோவிந்த் கவுடே, வினோத பால்யகர், ஜெயேஷ் சால்காவோங்கர், மாவின் கோதின்ஹோ, விஷ்வஜித் ரானே, மிலிந்த் நாயக், நிலேஷ் கேப்ரால் ஆகியோர் கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்ற னர். மந்திரிகள் இலாகா அறிவிக்கப்படவில்லை.

    சுதன் தாவ்லிகார், விஜய் சர்தேசாய் ஆகிய 2 பேரும் துணை முதல்-மந்திரிகளாக செயல்படுவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.

    பதவி ஏற்பு விழாவில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி கலந்துகொண்டார்.

    கோவாவில் மீண்டும் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க கவர்னர் மிருதுளா சின்கா வாய்ப்பு வழங்கியதை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடி உள்ளது.

    இதையொட்டி மாநில காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் சுனில் காவாதாங்கர் விடுத்துள்ள அறிக்கையில், “தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியை அரசு அமைக்க அழைக்காத கவர்னர் மிருதுளா சின்காவின் செயல் கண்டனத்துக்கு உரியது. ஆட்சி அமைக்க போதுமான எண்ணிக்கை இல்லாதபோதும், பாரதீய ஜனதா கட்சி குதிரைப்பேரம் நடத்த வழிவகுத்து விட்டார். கவர்னர் பாரதீய ஜனதா கட்சியின் ஏஜெண்டாக செயல்பட்டுள்ளார்” என சாடி உள்ளார்.

    இதற்கிடையே கோவா சட்டசபையில் முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் இன்று (புதன்கிழமை) நம்பிக்கை வாக்கு கோருகிறார். இதற்கான அழைப்பை கவர்னர் விடுத்துள்ளார். #GoanewCM #ManoharParikkar #PramodSawant
    கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் முன்னர் உரிமை கோரிய நிலையில் புதிய முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசின் மீது சட்டசபையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. #GoanewCM #Goafloortest #PramodSawan
    பனாஜி:

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து, புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கான கூட்டம் பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார்.

    கோவாவின் புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் இன்று அதிகாலை 2 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.



    முன்னதாக, கோவா முதல் மந்திரி காலமானதால் சட்டசபையில் ஆளும்கட்சியின் பலம் குறைந்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து கடிதம் அளித்திருந்தனர்.

    இந்நிலையில், முதல் மந்திரியாக பதவியேற்ற பிரமோத் சாவந்த் இன்று காலை தனது பணிகளை கவனிக்க தொடங்கினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  ‘என்னுடன் 2 துணை முதல் மந்திரிகளாக விஜய் சர்தேசாய், சுதின் தவில்கர் ஆகியோர் விரைவில் பதவி ஏற்கவுள்ளனர். இந்த அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் சட்டசபையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறும்.

    முன்னாள் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவுக்காக அரசின் சார்பில் 7 நாட்கள் துக்கம் கடைபிடிக்கும் நிலையில் எனக்கு வாழ்த்து கூறவும், மலர் மாலைகளுடன் வரவேற்பு அளிக்கவும் யாரும் வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார். #GoanewCM #Goafloortest  #PramodSawan
    மனோகர் பாரிக்கர் மறைவை தொடர்ந்து கோவாவின் புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக் கொண்டார். #GoanewCM #ManoharParikkar #PramodSawant
    பனாஜி:

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல் மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.



    இதையடுத்து, கோவாவில் உள்ள மனோகர் பாரிக்கர் வீட்டில் பிரதமர் மோடி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து, அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
     
    இதற்கிடையே, பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதற்காக கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், கோவாவின் புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் இன்று அதிகாலை 2 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #GoanewCM #ManoharParikkar #PramodSawant
    கோவா முதல் மந்திரி காலமானதால் சட்டசபையில் ஆளும்கட்சியின் பலம் குறைந்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். #ManoharParrikar #Congressstakesclaim #Goagovernment
    பனாஜி:

    கோவா சட்டசபையில் உள்ள 40 இடங்களில் முன்னர் பெரும்பான்மை பலம் கொண்ட பாஜக 13 சொந்தக்கட்சி உறுப்பினர்கள் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 9 உறுப்பினர்களின் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைத்தது.

    முன்னாள் ராணுவ மந்திரியான மனோகர் பாரிக்கர் கோவா முதல் மந்திரியாக பதவி வகித்து வந்தார். சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 14 உறுப்பினர்கள் உள்ளனர்.



    இதற்கிடையில், பாஜகவை சேர்ந்த சட்டசபை உறுப்பினரான பிரான்சிஸ் டி சோசா என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 14-2-2019 அன்று காலமானார். இதனால், ஆளும்கட்சியான பாஜக சட்டசபையில் தற்போது ஒரு உறுப்பினரை இழந்துள்ளது. இதுதவிர 2 இடங்கள் ஏற்கனவே காலியாக இருந்தது.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கோவா முதல் மந்திரி மனோகர் நேற்றிரவு திடீரென்று மரணம் அடைந்ததையடுத்து ஆளும்கட்சியின் பலம் மேலும் குறைந்துள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் இன்று பிற்பகல் கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்தனர். சட்டசபையில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி என்ற வகையில் காங்கிரஸ் தலைமையில் புதிய ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என்ற கடிதத்தை அவர்கள் கவர்னரிடம் அளித்தனர்.

    இதற்கிடையில், கோவாவில் புதிய முதல் மந்திரியை தேர்வு செய்ய பாஜக மேலிட ஆலோசனை கூட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும். புதிய முதல் மந்திரியின் பெயர் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என பாஜக சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. #ManoharParrikar #Congressstakesclaim  #Goagovernment 
    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
    புதுடெல்லி :

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மனோகர் பாரிக்கர் மறைவு செய்தி மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. பொதுவாழ்க்கையில் மனோகர் பாரிக்கரின் சேவையை நாட்டு மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.



    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மனோகர் பாரிக்கர் ஈடு இணையில்லாத தலைவர். உண்மையான தேசபக்தர். சிறந்த நிர்வாகி. அனைவராலும் பாராட்டப் பெற்றவர். நாட்டிற்கு அவர் ஆற்றிய பணிகள் பல தலைமுறையினரின் நினைவில் இருக்கும். அவரது மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தனது நோயை எதிர்த்து ஒரு ஆண்டுக்கும் மேலாக போராடிய கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவு வருத்தமளிக்கிறது. கட்சி எல்லைகளை தாண்டி அவருக்கு அனைவரும் மரியாதை அளித்தனர். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
    முன்னாள் ராணுவ அமைச்சரும் கோவா முதல் மந்திரியுமான மனோகர் பாரிக்கர் மறைவுக்கு மத்திய அமைச்சரவை சார்பில் நாளை இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது. #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
    புதுடெல்லி;

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார். கோவா மற்றும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன்பிறகு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    அவருக்கு கணையத்தில் புற்றுநோய் பாதித்திருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றவாறு தனது இல்லத்தில் இருந்தபடி முதல் மந்திரி பணிகளை கவனித்து வந்தார் மனோகர் பாரிக்கர்,

    இதற்கிடையே, இன்று மாலை உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மனோகர் பாரிக்கர் சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இந்நிலையில், முன்னாள் ராணுவ அமைச்சரும் கோவா முதல் மந்திரியுமான மனோகர் பாரிக்கர் மறைவுக்கு மத்திய அமைச்சரவை சார்பில் நாளை காலை 11 மணியளவில் இரங்கல் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
     
    மேலும், மனோகர் பாரிக்கர் மறைவையொட்டி நாளை துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்றும், தேசிய தலைநகரம் மற்றும் மாநில தலைநகரங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இன்று பெங்களூரு எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #BengaluruFC #FCGoa #ISLFinal
    மும்பை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி தொடங்கியது. ஆசிய கோப்பை கால்பந்து போட்டி அட்டவணை குறுக்கிட்டதால் சில காலம் இடைவெளி விட்டு நடந்த இந்த போட்டியில் லீக் ஆட்டம் முடிவில் பெங்களூரு, எப்.சி., எப்.சி. கோவா, மும்பை சிட்டி எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி. ஆகிய 4 அணிகள் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறின. ஜாம்ஷெட்பூர் எப்.சி., அட்லெடிகோ டி கொல்கத்தா, எப்.சி.புனே சிட்டி, டெல்லி டைனமோஸ் எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. மற்றும் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணிகள் முறையே 5 முதல் 10 இடங்களை பெற்று அரை இறுதி சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின.

    பெங்களூரு எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி. அணிகள் இடையிலான முதலாவது அரைஇறுதியின் முதல் சுற்றில் பெங்களூரு அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோவ்வியும், 2-வது தகுதி சுற்றில் பெங்களூரு அணி 3-0 என்ற கணக்கில் வெற்றியும் பெற்றது. கோல் வித்தியாசம் அடிப்படையில் பெங்களூரு எப்.சி. அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. எப்.சி.கோவா-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் இடையிலான 2-வது அரைஇறுதியின் முதல் சுற்றில் கோவா அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றியும், 2-வது சுற்றில் கோவா அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியும் கண்டது. கோல் வித்தியாசம் அடிப்படையில் கோவா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    மும்பையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் மோதுகின்றன. கடந்த சீசனில் 2-வது இடம் பெற்ற பெங்களூரு அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதேபோல் 2015-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த கோவா அணி 2-வது தடவையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

    கோவா அணியில் பெர்ரான் கோரோமினாஸ் (ஸ்பெயின்) 16 கோல்கள் அடித்து இந்த போட்டி தொடரில் முன்னிலை வகிக்கிறார். அந்த அணியில் இடம் பிடித்துள்ள எடு பெடியா 7 கோல்கள் அடித்துள்ளார். அவர்கள் இருவரையும் தான் அந்த அணி அதிகம் நம்பி இருக்கிறது. பெங்களூரு அணியில் கேப்டன் சுனில் சேத்ரி (9 கோல்கள்), மிகு (5 கோல்கள்) ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். லீக் ஆட்டம் முடிவில் சமபுள்ளிகள் பெற்ற (10 வெற்றி, 4 டிரா, 4 தோல்வி) இந்த இரு அணிகளும் தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்படுவதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    பெங்களூரு, கோவா அணிகள் இதுவரை 4 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் பெங்களூரு அணி 3 முறையும், கோவா அணி ஒரு தடவையும் வென்று இருக்கின்றன. இந்த சீசனில் இரு அணிகளும் சந்தித்த 2 ஆட்டத்திலும் பெங்களூரு அணியே வெற்றி கண்டது. எனவே அந்த ஆதிக்கத்தை பெங்களூரு அணி இறுதிப்போட்டியிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.8 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.4 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.
    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீன்வளத்துறை அமைச்சகம் உருவாக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #ParliamentElection #Congress #RahulGandhi #FisheriesMinistry
    பனாஜி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தேதிகளில் அறிவிக்கப்பட உள்ளதால், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒவ்வொரு மாநிலமாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கோவா சென்றார். அங்கு பல்வேறு அமைப்பினர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:



    மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். தற்போது வேளாண் துறையின் கீழ் உள்ள மூன்று துறைகளில் ஒன்றாக மீன்வளத்துறை உள்ளது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கென தனி அமைச்சகமாக மீன்வளத்துறை அமைச்சகம் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். #ParliamentElection #Congress #RahulGandhi #FisheriesMinistry
    உடல்நலக் குறைவால் கோவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். #ManoharParrikar
    பனாஜி:

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக, வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

    இதற்கிடையே, மனோகர் பாரிக்கர் மீண்டும் உடல் நலக்குறைவால் கோவாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், கோவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.

    அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. தொடர்ந்து அவரது வீட்டில் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும் என கோவா முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #ManoharParrikar
    கோவா தலைநகர் பனாஜியில் உள்ள பெண்கள் கழிப்பறைக்குள் கோவாவில் புர்கா அணிந்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். #Burqaman #ladiestoilet #BurqamaninGoa
    பனாஜி:

    கோவா தலைநகர் பனாஜி நகரில் அரசு தலைமை பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் ஆண்-பெண்களுக்கான கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், நேற்று முன்தினம் பெண்கள் கழிப்பறைக்குள் சென்றுவிட்டு வெளியே வந்த ஒரு உருவத்தின் நடை, உடை, பாவனையில் சந்தேகப்பட்ட சிலர் அந்நபரை பிடித்து விசாரித்தபோது ‘அவ்வை சண்முகி’ நாடகம் அம்பலமானது.

    சுமார் 35 மதிக்கத்தக்க அந்நபர் புர்காவின் உள்ளே ஜீன்ஸ் பேன்ட் மற்றும் டி-ஷர்ட் அணிந்து தலையில் சவுரி முடியுடன் பெண்கள் கழிப்பறைக்குள் வேண்டுமென்றே நுழைந்தது தெரியவந்தது.

    சம்பவம் அறிந்து அங்குவந்த போலீசார், விர்ஜில் பாஸ்கோ பெர்னான்டஸ் என்னும் அந்நபரை கைது செய்து, முஸ்லிம் பெண்ணைப்போல் ஆள்மாறாட்டம் செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. #Burqaman #ladiestoilet #BurqamaninGoa
    ×