search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கச்சத்தீவு"

    நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் மீனவர்கள் அச்சத்துடன் கரை திரும்பினர்.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த தாக்குதல் அதிகரித்துள்ளது.

    நேற்று ராமேசுவரத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 600 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 7 குட்டி ரோந்து கப்பல்களில் இலங்கை கடற் படையினர் வந்தனர்.

    அவர்கள் தங்கள் படகை, விசைப்படகுகளின் மீது மோதுவது போல் வந்ததால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர். இங்கு மீன்பிடிக்கக்கூடாது என எச்சரித்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மீனவர்கள் அவசரம் அவசரமாக புறப்பட்டனர். அப்போது அவர்களது வலைகளை இலங்கை கடற்படையினர் அறுத்து எறிந்து சேதப்படுத்தனர். இதனால் மீனவர்கள் அச்சத்துடன் கரை திரும்பினர். அவர்கள் கூறுகையில், கடந்த ஒரு வாரத்தில் இது 2-வது தாக்குதல் ஆகும்.

    இதனால் எங்கள் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க முடியாத நிலையிலும் வலை உள்ளிட்ட உடமைகளும் சேதப்படுத்தப்பட்டதால் நாங்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளோம் என்றனர்.

    பதவிக்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தி.மு.க. என்றும், தி.மு.க.வின் அரசியல் வேட்கையினாலும், பதவி வெறியினாலும் தான் இலங்கை தமிழர்கள் இன்னலுக்குள்ளானார்கள் என்பதை மேலும் வெட்ட வெளிச்சமாக்குவோம் என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #TamilisaiSoundararajan
    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வரலாறு தெரிந்து பேச வேண்டும் என்று தி.மு.க. செய்தித் தொடர்பாளர் கூறியதால் வரலாற்றை திரும்பி பார்த்தேன். அந்த வரலாற்று துளிகளில் சிலவற்றை கூற விரும்புகிறேன். பதவிக்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த தி.மு.க.வின் வரலாறு குறித்து பேசலாமா?. இலங்கையில் பல தமிழர்களைக் கொன்றவர்கள் புலிகள். பிரபாகரன் ஒரு சர்வாதிகார மனப்பான்மை கொண்டவர் என்பதால், புலிகள் என்றாலே புளித்துப்போய்விட்டது என்றும் கருணாநிதி கூறியது உண்மையா இல்லையா?. தமிழீழ தனிநாடு இனி சாத்தியமானது அல்ல. சம உரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு சிங்களவர்களிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் என்று கருணாநிதி சொன்னது உண்மையா இல்லையா?.

    மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைபுலிகளால் ஆபத்து உள்ளது என்றும் அதனால் அவருக்கு மத்திய அரசின் பாதுகாப்பு வேண்டும் என்றும் கருணாநிதி கேட்டது உண்மையா இல்லையா?. அதனடிப்படையில் தான் இன்றைக்கும் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுக்கொண்டிருப்பது உண்மையா இல்லையா?. தற்போது 7 பேரை விடுதலை செய்ய வேண்டி நாடகம் போடும் மு.க.ஸ்டாலினை கேட்கிறேன், அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதை மறந்து விட்டீர்களா? மறைத்து விட்டீர்களா?.


    எல்லாவற்றிற்கும் மேலாக போரை முடித்து வைக்கிறேன் என்று ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தது, பல லட்சக்கணக்கான தமிழர்களை முடித்து வைக்கத் தான் என்று ராஜபக்சே கூறியதை உங்களால் மறைக்கவும் முடியாது. தமிழர்களால் மறக்கவும் முடியாது. கச்சத்தீவை மீட்க நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் அன்றைக்கே போராடியது பா.ஜ.க.வினர் தான் என்பதை உணருங்கள். ஆனால் அன்றைக்கு பதவி சுகத்திற்காக அமைதி காத்த தி.மு.க.வினர் இன்றைக்கு வரலாறு குறித்து பேசுவது வரலாற்று பிழை.

    1980-ம் ஆண்டு மதுரை மாநாட்டில் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கூறியவர் எங்கள் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய். பா.ஜ.க. ஆட்சியில் இலங்கைக்கு ஆயுதம் வழங்கவும் மாட்டோம், விற்கவும் மாட்டோம் என்ற கொள்கை முடிவெடுத்தவர்கள் நாங்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போது விடுதலைப் புலிகளையும், இலங்கை தமிழர்களையும் தூண்டி விட்டு, ஆளும் கட்சியாக இருக்கும் போது பதவியை காப்பாற்றிக் கொள்ள தாண்டி செல்லும் கொடுங்கோலர்கள் தான் தி.மு.க.வினர் என்பதை உலகறியும்.

    நான் கல்லூரியில் படிக்கும் போதே மாணவியாக இலங்கை தமிழர்களுக்காக களத்தில் இறங்கி போராடியவள். போருக்கு பிறகு இலங்கை தமிழர்களுக்காக வீதி வீதியாக சென்று நிவாரண பொருட்களை திரட்டி அனுப்பியவள். இது நாள் வரையில் அவதியுறும் இலங்கை தமிழர்களை கண்டு ஆறுதல் சொல்லக்கூட செல்ல மனமில்லாத, துணிவில்லாத தமிழக அரசியல்வாதிகள், அவர்களின் துயரத்தில் பங்கு கொள்ளாதவர்கள் ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததற்கு இணையானவர்கள். ஆனால், நேரடியாக இலங்கை சென்று அங்கே இருக்கும் தமிழர்களின் நிலையை கண்டறிந்து, அவர்களின் தேவைகளை மத்திய அரசின் பார்வைக்கு எடுத்துச் சென்று தமிழின மக்களின் நல்வாழ்விற்கு பங்காற்றியவள் நான் என்பதை மறந்து விடாதீர்கள்.

    உங்களின் தூண்டுதலாலும், அரசியல் வேட்கையினாலும், பதவி வெறியினாலும் தான் இலங்கை தமிழர்கள் இன்னலுக்குள்ளானார்கள் என்பதை மேலும் வெட்ட வெளிச்சமாக்குவோம். வரலாறு குறித்து எங்களுக்கு பாடம் தேவையில்லை. உண்மையான வரலாறு குறித்த பாடத்தை உங்களுக்கு பா.ஜ.க. புகட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #Karunanidhi #MKStalin #DMK #Katchatheevu
    கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை குவிக்கப்பட்டதால் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்காமல் பாதியிலேயே கரை திரும்பினர். #Fishermen #SriLankaNavy

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும்போது கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை அவர்களை சிறைபிடிப்பதும், தாக்கி விரட்டியடிப்பதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.

    தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுக்க இலங்கை அரசு கடும் சட்டங்களை இயற்றி உள்ளது. இலங்கை கடற்படையின் அச்சுறுத்தல் காரணமாக மீனவர்கள் உயிர் பயத்துடனேயே தொழில் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று ராமேசுவரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினர் அதிக அளவில் ரோந்து பணியில் இருந்தனர். இதனால் மீனவர்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் பல மணி நேரம் ஒரே இடத்திலேயே நின்று கொண்டிருந்தனர்.

    ஆனாலும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அந்த பகுதியில் முகாமிட்டு இருந்தனர். இதனால் சிறை பிடிக்கப்படுவோமோ என்று அஞ்சிய ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிப்பதை கைவிட்டு விட்டு ஏமாற்றத்துடன் பாதியிலேயே கரை திரும்பினர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தற்போது டீசல் விலை உயர்ந்த நிலையிலும் கடன் வாங்கி கொண்டு மீன்பிடிக்க செல்கிறோம். ஒவ்வொரு முறை கடலுக்கு செல்லும்போது டீசலுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் செலவாகிறது.

    ஆனாலும் மீன் பிடிக்கவிடாமல் இலங்கை கடற் படையினர் அச்சுறுத்தி வருகின்றனர். தமிழக மீனவர்களின் வாழ்வா தாரத்தை சீர்குலைக்கவே இதுபோன்ற செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபடுகிறது.

    இந்த முறை கடலுக்கு செல்லும்போது சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படை குவிக்கப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 1200 பேரை இலங்கை கடற்படை விரட்டியடித்தது. #Fishermen #SriLankaNavy

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 1200 மீனவர்கள் 265 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.

    தமிழக மீனவர்களிடம் “நீங்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். உடனே இங்கிருந்து செல்லுங்கள்” என்று எச்சரித்தனர்.

    அச்சத்தில் நடுங்கிய மீனவர்கள் படகுகளை திருப்பிக்கொண்டு கரைக்கு திரும்ப ஆயத்தமானார்கள். அப்போது இலங்கை கடற்படையினர் திடீரென்று ராமேசுவரம் மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத் தெறிந்தனர். படகுகளையும் சேதப்படுத்தினர்.

    “வலைகளை அறுத்து எங்கள் பிழைப்பை கெடுக்காதீர்கள்” என்று கெஞ்சினர். ஆனால் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து வலைகளை சேதப்படுத்தினர். பின்னர் உடனே இடத்தை காலி செய்யுங்கள் என்று விரட்டியடித்தனர்.

    ராமேசுவரம் மீனவர்களும் உயிர் பிழைத்தால் போதும் என நினைத்து படகுகளை திருப்பிக் கொண்டு இன்று அதிகாலை கரை திரும்பினர்.

    இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் தங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது எனறு மீனவர்கள் தங்கள் வேதனையை தெரிவித்தனர். #Fishermen #SriLankaNavy

    ×