search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாசிமகம்"

    பங்குனி உத்திர விழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.
    கும்பகோணம் நாகேஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், கொட்டையூர் கோடிஸ்வரர் சாமி கோவில்களில் கடந்த 12-ந் தேதி பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.

    இதையொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் பலவித வாகனங்களில் சாமி, அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது. விழாவின் பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழி பாடுகள் தொடங்கியது.

    பின்னர் விநாயகர், சுப்ரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் மற்றும் பெரியநாயகியம்மன் சமேத நாகேஸ்வரர் மற்றும் அனந்தநிதியம்பிகை சமேத கம்பட்டவிஸ்வநாதர் ஆகிய சாமிகள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலாவாக மகாமக குளத்தை வந்தடைந்தனர்.

    பின்னர் பகல் 12 மணியளவில் மகாமக குளக்கரையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.இதே போல் கொட்டையூரில் உள்ள கோடிஸ்வரர் கோவிலிலும் தீர்த்தவாரி காவிரி ஆற்றில் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.
    மாசி மகத்தையொட்டி கடலூர் கடலில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மாசி மாதம் பவுர்ணமியும், மகம் நட்சத்திரமும் இணைந்து வரும் தினத்தை மாசி மகம் என்கிறார்கள். மாசி மகத்தில் கோவில்களில் உள்ள உற்சவ மூர்த்திகளை கடற்கரைக்கு கொண்டு சென்று தீர்த்தவாரி நடத்துவது வழக்கம்.

    தீர்த்தவாரியின் போது சாமிகளுடன் சேர்ந்து நீராடினால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தீர்த்தவாரியின் போது கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளித்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதன்படி மாசிமகமான நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந் தது. இதற்காக கடலூர், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோவில்களில் இருந்து சாமிகளை வாகனங்களில் வைத்து வீதி உலாவாக மேள தாளம் முழங்க தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

    காலை 7 மணியில் இருந்தே தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு சாமிகள் வீதி உலாவாக வந்து கொண்டு இருந்ததால் சில்வர் பீச்சுக்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை போலீசார் சரி செய்தனர். தொடர்ந்து தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு வந்த சாமிகளுக்கு கடலில் தீர்த்தவாரி நடந்தது. அப்போது பக்தர்களும் புனித நீராடினர். தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    உற்சவ மூர்த்திகளுக்கு தேங்காய், பழம் போன்ற பூஜைக்குரிய பொருட்களை வைத்து, தீபாராதனை காண்பித்து பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் சாமிகளை மீண்டும் வீதி உலாவாக கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

    தீர்த்தவாரியில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், திருவந்திபுரம் தேவநாதசாமி, திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள், வண்டிப்பாளையம் அங்காளம்மன், மஞ்சக்குப்பம் ஆட்கொண்டவரதராஜபெருமாள், திண்டிவனம் செண்டூர் வரதராஜபெருமாள், புதுப்பாளையம் துர்க்காளம்மன், நெல்லிக்குப்பம் வீரபத்ரசுப்பிரமணியர், தேவனாம்பட்டினம் இடிதாங்கி மாரியம்மன், தேவனாம்பட்டினம் சீனுவாசபெருமாள், நத்தப்பட்டு முத்துமாரியம்மன், செல்லாங்குப்பம் பொட்லாயி அம்மன், மார்க்கெட் காலனி சோலை வாழியம்மன், புதுச்சேரி சோரியாங்குப்பம் செங்கழுநீர் மாரியம்மன், பெரியகுப்பம் பெரியநாயகி அம்மன் உள்பட 90-க்கும் மேற்பட்ட கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கலந்து கொண்டனர்.



    இதில் முதுநகர் பீமாராவ் நகர் கெங்கை மாரியம்மன் குளிர்பான பாட்டில்களாலும், நவநீதம்நகர் சோலைபுத்துமாரியம்மன், உச்சிமேடு பொட்லாயி அம்மன், ராமாபுரம் மேட்டுக்குப்பம் பொட்லாயி அம்மன் போன்ற சாமிகள் பிஸ்கெட் பாக்கெட்டுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தனர்.

    பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அவர்கள் சாமியை வழிபட்டு, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பக்தர்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் மற்றும் நீர், மோர் வழங்கப்பட்டது.

    முன்னதாக உற்சவ மூர்த்திகளுடன் மேளம், தாளம் முழங்க நகர முக்கிய சாலைகளில் நடனம் ஆடி வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் சிலர் ஆட்டம், பாட்டத்துடன் வந்தனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். போக்குவரத்துக்கு இடையூறாக வந்த சிலரையும் போலீசார் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.

    காசியை விட வீசம் பெரிது என்பதற்கு ஏற்ப காசியில் நீராடிய புண்ணியத்தை விருத்தகாசி என்றழைக்கப்படும் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் பெறலாம் என்பது நம்பிக்கை. அதன்படி புண்ணிய நதியாக விருத்தாசலம் மணிமுக்தாற்றில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைந்து ஆசி வழங்குவார்கள் என கூறப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் மணிமுக்தாற்றில் நடக்கும் மாசி மகத்திருவிழாவில் திரளான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

    அதன்படி நேற்று மாசி மகம் என்பதால் ஏராளமான மக்கள் திதி கொடுப்பதற்காக மணிமுக்தாற்றில் குவிந்தனர். அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஊற்று குழிகளில் நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். பின்னர் அனைவரும் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
    கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரியையொட்டி மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடினார்கள்.
    மாசிமக திருவிழாவையொட்டி மகாமக குளத்தில் நேற்று அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடினர். ஆண்டுதோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசிமக விழா கொண்டாடப்படுகிறது. இதே விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    மாசிமக விழாவினை முன்னிட்டு கடந்த 10-ந் தேதி ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவாலயங்களில் பத்து நாள் உற்சவம் நடைபெற்றது. விழாவின் 5-ம் நாள் ஓலைச்சப்பரமும், 9-ம் நாள் விழாவில் தேரோட்டமும் நடைபெற்றது.

    இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 12 சிவாலயங்களில் இருந்து சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருளினர்.

    பின்னர் பகல் 12 மணிக்கு அந்தந்த கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு 21 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடியதை தொடர்ந்து குளத்தின் 4 கரைகளிலும் மற்றும் குளத்திலும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

    தீர்த்தவாரியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணி முதல் நேற்று மாலை வரை தொடர்ந்து மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

    பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார், தீயணைப்பு வீரர் கள், அறநிலையத்துறையினர், மருத்துவ குழுவினர், வருவாய்த்துறையினர், நகராட்சியினர் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.
    மாசிமகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுவை வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது.
    மாசிமகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுவை வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது. இதற்காக கடற்கரையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழாக்குழு சார்பில் மேடைகள் மற்றும் பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தீர்த்தவாரியில் மயிலம் முருகன், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், லட்சுமி நாராயண பெருமாள், செஞ்சி ரங்கநாதர், திண்டிவனம் நல்லியகோடான் நகர் சீனிவாச பெருமாள், புதுவை மணக்குள விநாயகர், எம்.எஸ்.அக்ரகாரம் கோதண்டராமர், ராமகிருஷ்ணாநகர் ஹயக்ரீவர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கலந்துகொள்கின்றனர்.

    இந்த ஆண்டு முதல் முறையாக மேல்மலையனூர் அங்காளம்மன் தீர்த்தவாரியில் கலந்துகொள்கிறார். இதற்காக வெளியூர்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் நேற்று இரவு புதுச்சேரி வந்தன. உற்சவ மூர்த்திகளுக்கு புதுவையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்ததும் உற்சவமூர்த்திகள் ஒருசில நாட்கள் புதுவையில் தங்கி இருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளனர்.

    புதுவை போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா உத்தரவின்பேரில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தீர்த்தவாரியை முன்னிட்டு முத்தியால்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    வைத்திக்குப்பம் பகுதியில் இன்று வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வருவோர் தங்கள் வாகனங்களை பழைய சாராய ஆலை பகுதியில் நிறுத்திவிட்டு விழா நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும். பகல் 1 மணிக்கு அஜந்தா சந்திப்பில் இருந்து முத்தியால்பேட்டை செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    நாளை மாசிமக நாளில் வரும் பவுர்ணமி விரதத்தை கடைப்பிடித்து, அம்மையப்பனை வழிபட்டு வளம் பல பெறுங்கள். அந்த நாளில் குளத்தில் நீராடுவதால் கர்ம வினைகள் நீங்கி பிறவிப்பயன் கிடைக்கப்பெறலாம்.
    19.2.2019 அன்று மாசி மகம்

    பிரபஞ்ச சக்தி உண்மை என்பதை உணர்த்துவது சூரியனும், சந்திரனும். உலக இயக்கம் சூரியன், சந்திரனை கொண்டே இருக்கிறது. சூரியனும் சந்திரனும் ஒன்று சேரும் நாள் அமாவாசை. சூரியனுக்கு நேரே 180 டிகிரியில் சந்திரன் சஞ்சரிக்கும் நாள் பவுர்ணமி. இந்த இரு நாட்களும் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் நாட்கள் என்பதால், நம் முன்னோர்கள் சுபகாரியங்களை தவிர்த்து வழிபாட்டிற்கு முக்கியத்துவம் தந்தனர்.

    இந்த உலகத்தில் மனிதர்கள் உள்பட அனைத்து ஜீவராசிகளும், கர்ம வினைகளை தீர்க்கவே ஜனனம் செய்கிறது. கர்ம வினையைக் குறைப்பதற்கு மூன்று விதமான வழிகளை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அவை ‘மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம்’ ஆகும். புராண இதிகாசங்களுடன் தொடர்பு பெற்ற ஸ்தலங்களும் அங்கு வீற்றிருக்கும் மூர்த்தியும், தீர்த்தங்களும் கர்ம வினைப் பலனை மாற்றும் சக்தி படைத்தவை. வருடத்தின் சில குறிப்பிட்ட மாதம் மற்றும் நாளில் சில தீர்த்தங்களுக்கு தனிச் சிறப்பு ஏற்படுகிறது.

    ஒவ்வொரு தமிழ் மாதமும் சில குறிப்பிட்ட நட்சத்திரத்தில் தான் பவுர்ணமி வரும். ஒவ்வொரு மாதம் பவுர்ணமி வந்தாலும் மகம் நட்சத்திரமும் மாசி மாதமும் இணையும் பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. மாதம் தோறும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாத மகம் நட்சத்திரத்திற்கு வலிமை அதிகம்.

    சிம்ம ராசியைச் சேர்ந்த மகம் நட்சத்திரத்தின் ராசி அதிபதி சூரியன். எனவே இந்த நட்சத்திரத்திற்கும் ஆளுமை தன்மை அதிகம். மகம் என்பது கேதுவின் நட்சத்திரம். ஒரு ஆன்மாவை உலக இன்பங்களுக்கு அழைப்பது ராகு என்றாலும், மோட்சம் அளிப்பது கேது தான். மோட்சக்காரகன் எனப்படும் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார்.

    மாசி மகம் அன்று, கால புருஷ 5-ம் இடத்தின் அதிபதி சூரியன் வீட்டில் சந்திரன் இருக்கிறார். 5-ம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம். சூரியன் ஆன்மா, சந்திரன் உடல். சந்திரன் புனித நீருக்கு அதிபதி. ராஜ கிரகமான சூரியன் தன் வீட்டை தானே பார்ப்பதால் மகம் நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் போது சூரியன், சந்திரன், கேதுவின் தொடர்பு ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஜீவாத்மாவின் கர்ம வினையை போக்குவதில் நிகரற்ற சக்தி படைத்த நாளாக மாசி மகம் திகழ்கிறது. அதாவது சந்திரன், ஆன்மா என்ற சூரியனின் பார்வை பெறும் நாள் மகம் நட்சத்திரம் என்பதால் அன்றைய தினம் ஆன்மாவையும், உடலையும் பரிசுத்தம் அடையச்செய்வார்கள். ஆன்மாவும் உடலும் பரிசுத்தம் அடையும் போது, கர்ம வினைப் பதிவு குறையும்.

    இந்த ஆத்ம சுத்தி சூரியன், சந்திரனின் தொடர்பு எப்பொழுது சிம்மத்திற்கு கிடைக்கிறதோ, அப்பொழுது மட்டுமே சாத்தியம். அத்துடன் குரு சிம்மத்திற்கு வரும் போது ‘மகாமகம்’ என்ற அதி புனித நாள் 12 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம், கும்பகோணம் கும்பேஸ்வரர் திருக்கோவிலின் மகாமகத் திருக்குளத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. அன்று அனைத்து புண்ணிய நதிகளும் தங்கள் பாவ சுமையை நீக்க மகாமகக் குளத்திற்கு வருவதாக ஐதீகம். அந்த நாளில் குளத்தில் நீராடுவதால் கர்ம வினைகள் நீங்கி பிறவிப்பயன் கிடைக்கப்பெறலாம்.

    மகாமக குளத்திற்கு சென்று நீராட முடியாதவர்கள், உங்களது ஊரிலோ, அதற்கு அருகாமையிலோ உள்ள பழமையான ஆலயங்களிலும் நடைபெறும் அபிஷேக ஆராதனை, தீர்த்தவாரியில் கலந்து கொள்ளலாம்.

    மாசிமக நாளில் வரும் பவுர்ணமி விரதத்தை கடைப் பிடித்து, அம்மையப்பனை வழிபட்டு வளம் பல பெறுங்கள்.
    ×