search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுமலதா"

    விவசாயிகளுக்காக மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தவர் அம்பரீஷ் என்று சுமலதா ஆவேசமாக கூறியுள்ளார். #Sumalatha #MandyaConstituency
    பெங்களூரு :

    நடிகை சுமலதா, மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று மாண்டியா கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மஞ்சுஸ்ரீயிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் நடிகர் தர்ஷன், யஷ் உள்பட கன்னட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    அதன் பிறகு மாண்டியா சில்வர் ஜூப்ளி பூங்காவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகை சுமலதா கலந்துகொண்டு பேசியதாவது:-

    நான் இன்று (அதாவது நேற்று) வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் எனது கணவர் மாண்டியாவுக்கு செய்ய வேண்டிய பணிகளில் இன்னும் சிலவற்றை விட்டுச் சென்றுள்ளார். அது என்ன என்பது எனக்கு தெரியும்.

    அந்த பணிகளையும், அம்பரீசின் கனவுகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசியலுக்கு வந்துள்ளேன். நான் இங்கு வெற்றி பெற்றுவிட்டால், வெளிநாட்டுக்கு சென்றுவிடுவேன் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

    நான் ஏற்கனவே எல்லா நாடுகளுக்கும் சென்று வந்துவிட்டேன். நான் கன்னடம் உள்பட 5 மொழி படங்களில் நடித்துள்ளேன். எனக்கு அதில் இருந்து போதுமான அளவுக்கு புகழ் கிடைத்துள்ளது. அதனால் அரசியலுக்கு வந்து தான் புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.

    மாண்டியா மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்பது தான் எனது நோக்கம். நான் மாண்டியாவில் கிராமம், கிராமமாக சென்று மக்களிடம் கருத்துகளை கேட்டேன். அவர்கள், நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறினார்கள். அதை ஏற்று நான், காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினேன்.

    மக்களின் விருப்பப்படி நான் மாண்டியா தொகுதியில் போட்டியிட டிக்கெட் வழங்குமாறு கேட்டேன். ஆனால் கூட்டணி தர்மத்தை பின்பற்ற வேண்டும், டிக்கெட் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டனர்.

    அதனால் நான் சுயேச்சையாக போட்டியிட்டு உள்ளேன். இன்று (நேற்று) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். நான் யார் என்று கேட்கிறார்கள். நான் அம்பரீசின் மனைவி. இந்த மண்ணின் மகள், மருமகள். நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, என்னை பற்றி பல்வேறு விமர்சனங்கள் வந்தன. எனக்கு அவமானங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதற்கு நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை. நீங்களே (மக்கள்) பதில் சொல்லுங்கள்.



    என் முன்னால் இமயமலை அளவுக்கு பெரிய சவால் உள்ளது. அந்த சவாலை உங்களின் ஆதரவுடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. என்னை இந்த தொகுதியில் நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.

    அம்பரீஷ் இந்த தொகுதிக்கு என்ன செய்தார் என்று கேட்கிறார்கள். மாண்டியா மருத்துவ கல்லூரியை கொண்டு வந்தது அவர் தான். பள்ளி கட்டிடங்களை கட்டி கொடுத்தார். கிராமங்களில் சமுதாய கூடங்களை கட்டினார். இப்படி பல்வேறு பணிகளை செய்துள்ளார். கிராமங்களுக்கு சென்று மக்களிடம் கேட்டால் அவர்கள் சொல்கிறார்கள்.

    வேறு தொகுதியில் டிக்கெட் தருவதாகவும், எம்.எல்.சி. பதவி, மந்திரி பதவி தருவதாக என்னிடம் கூறினர். மாண்டியா தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று கூறினர். பதவி ஆசை இருந்திருந்தால், அதை ஏற்றுக்கொண்டு போய் இருப்பேன். இங்கு போட்டியிட்டு இருக்கமாட்டேன். மாண்டியா தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய நன்றிக்கடன் உள்ளது. அதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன்.

    எனக்கு மிரட்டல் விடுத்தனர். எங்கள் ஆதரவாளர்களை மிரட்டுகிறார்கள். உங்களின் அன்புக்கு முன்னால் அது எடுபடாது. அதை பற்றி நான் கவலைப்படவில்லை. நான் இந்த தொகுதி மக்களின் பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றத்தில் குரல்கொடுப்பேன். விவசாயிகளின் பிரச்சினைகளை பற்றி பேசுவேன்.

    நடிகர்கள் தர்ஷன், யஷ் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதையும் விமர்சனம் செய்கிறார்கள். அவர்கள் எனது குழந்தைகளை போன்றவர்கள். ஒரு தாய்க்கு ஆதரவாக குழந்தைகள் பிரசாரம் செய்வது தவறா?. உங்கள் (குமாரசாமி) மகனுக்கு ஆதரவாக நீங்கள் பிரசாரம் செய்யவில்லையா?.

    அம்பரீஷ் விவசாயிகளுக்கு என்ன செய்தார் என்று கேட்கிறார்கள். விவசாயிகள் கஷ்டத்தில் இருந்தபோது, மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தார்.

    இவ்வாறு சுமலதா பேசினார்.

    இதில் சுமலதாவின் மகன் அபிஷேக், நடிகர் தர்ஷன், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்பட கன்னட திரைத்துறையினர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். #Sumalatha #MandyaConstituency 
    மாண்டியா பாராளுமன்ற தொகுதியில் நடிகை சுமலதா சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதாகவும் கூறியுள்ளார். #Sumalatha #MandyaConstituency
    பெங்களூரு:

    கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் அம்பரீஷ். இவரது மனைவியும், நடிகையுமான சுமலதா, மாண்டியா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரசில் டிக்கெட் கேட்டிருந்தார். ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனால் மாண்டியா தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார்.



    இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை சுமலதா மனம் தளராமல் தொடர்ந்து மாண்டியாவில் தனக்கு ஆதரவு திரட்டி வந்தார். இதற்கிடையே அவரை பா.ஜனதா தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்தது. இதனால் மாண்டியாவில் சுயேச்சையாக களமிறங்குவதா? அல்லது கட்சி சார்பில் போட்டியிடுவதா? என்பது பற்றி மார்ச் 18-ந்தேதி (அதாவது நேற்று) அறிவிப்பதாக சுமலதா கூறியிருந்தார்.

    அதன்படி சுமலதா, மாண்டியா தொகுதியில் தான் சுயேச்சையாக போட்டியிடுவதாக நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் அடிப்படையில் அரசியல்வாதி அல்ல. அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருக்கவில்லை. எனது கணவர் எம்.பி., எம்,.எல்.ஏ. மற்றும் மந்திரியாக பணியாற்றியபோது, நாங்கள் அரசியலை பற்றி கவலைப்பட்டது இல்லை.

    தவிர்க்க முடியாத சூழ்நிலையால் நான் தற்போது அரசியலுக்கு வந்துள்ளேன். மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அம்பரீஷ் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மாண்டியா தொகுதியில் நான் சுயேச்சையாக போட்டியிடுகிறேன்.

    என்னிடம் ஆட்சி அதிகாரம், பணம் எதுவும் இல்லை. அம்பரீஷ், மக்களின் அன்பு, நம்பிக்கையை பெற்றார். அது தான் எங்கள் சொத்து. மாண்டியா மக்கள் சுயமரியாதைக்காரர்கள். பணத்திற்காக வாக்கை விற்க மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும்.

    வருகிற 20-ந் தேதி (நாளை) மாண்டியா தொகுதியில் நான் வேட்புமனு தாக்கல் செய்கிறேன். வெற்றி, தோல்வி எனக்கு முக்கியம் அல்ல. மாண்டியா மக்களுக்கு நாங்கள் பட்டுள்ள நன்றிக்கடனை தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

    எனக்கு காங்கிரசில் பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு தொகுதிகளை ஒதுக்குவதாக கூறினர். எம்.எல்.சி. பதவியை வழங்குவதாகவும் உறுதியளித்தனர். ஆனால் நான் எதற்கும் மதிப்பு கொடுக்காமல் அம்பரீஷ் மீது மாண்டியா மக்கள் வைத்திருந்த அன்பு, நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

    தனிப்பட்ட முறையில் எனக்கு யார் மீதும் விரோதம் இல்லை. தேர்தல் களத்தில் இருந்து விலகும்படி எனக்கு பெரிய அளவில் பணம், பொருள் ஆசைகள் காட்டப்பட்டன. வேறு வேறு அரசியல் பதவிகள் வழங்குவதாகவும் கூறினர். நான் அதை பற்றி கவலைப்படாமல், அம்பரீசின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

    எனக்கு எவ்வளவு பெரிய சவால்கள் இருக்கிறது என்பது தெரியும். மாண்டியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது, சுமலதா எங்கே இருந்தார் என்று சிலர் கேட்கிறார்கள். காவிரி நதிநீர் பிரச்சினை வந்தபோது, அம்பரீஷ் மத்திய மந்திரியாக இருந்தார். மாண்டியா மக்கள் மீது வைத்திருந்த அன்புக்காக, அவர் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    கர்நாடக வரலாற்றில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக அம்பரீசை தவிர வேறு யாராவது மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தது உண்டா?. எங்கள் குடும்பம் எப்போதும், விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்கிறது. விவசாயிகளுக்கு அம்பரீஷ் எவ்வளவோ உதவி செய்தார். அது யாருக்கும் தெரியாது.

    நான் இருக்கும் வரை குடும்பத்தினர் அரசியலுக்கு வரக்கூடாது என்று அம்பரீஷ் கூறினார். அதன்படி நாங்கள் நடந்து கொண்டோம். நாங்கள் எப்போதும் குடும்ப அரசியல் செய்தது இல்லை. கடவுளின் விருப்பம், மக்களின் ஆசி மற்றும் அம்பரீசின் வழிகாட்டுதல்படி நான் நடந்து கொள்வேன். மாண்டியாவில் பல்வேறு சட்டசபை தொகுதியில் நான் சுற்றுப்பயணம் செய்து, மக்களின் கருத்தை சேகரித்தேன்.

    அப்போது அவர்கள், தேர்தலில் நிற்குமாறு என்னிடம் கூறினர். அதன்படி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். நான் கஷ்டத்தில் இருக்கும்போது, கன்னட திரைத் துறையினர் எனக்கு உதவி செய்தனர். தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், எனது பெரிய மகனை போன்றவருமான நடிகர் தர்ஷன், சிறிய மகனை போன்றவரான நடிகர் யஷ் ஆகியோர் தாமாக முன்வந்து முழு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

    அரசியலில் பரஸ்பர குற்றச்சாட்டுகளை கூறுவது சகஜமானது. தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதை நான் விரும்பவில்லை. எங்களின் எதிரிகளை கூட உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும்.

    காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் ஆதரவை கேட்டுள்ளேன். எனக்கு எதிராக முதல்-மந்திரியின் மகன் போட்டியிடுகிறார். ஆனால் மாண்டியா மக்களின் முழு ஆதரவு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    எத்தகைய அழுத்தம் வந்தாலும், நான் போட்டியில் இருந்து விலக மாட்டேன். இந்த திடமான முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை.

    இவ்வாறு சுமலதா கூறினார்.

    இந்த பேட்டியின்போது நடிகை சுமலதாவின் மகன் அபிஷேக், நடிகர்கள் தர்ஷன், யஷ், திரைப்பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், தொட்டண்ணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். #Sumalatha #MandyaConstituency
    மாண்டியா தொகுதியில் குமாரசாமி மகனை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுவது உறுதி என்று நடிகை சுமலதா அறிவித்துள்ளார். #ParliamentElection #MandyaConstituency #Sumalatha
    பெங்களூர்:

    கன்னட நடிகரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மறைந்த அம்பரீஷ் மனைவியான நடிகை சுமலதா பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்.

    ஆனால் மாண்டியா தொகுதியை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முதல்வர் குமாரசாமி கட்சியான ஜே.டி.எஸ். கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

    மாண்டியா தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுகிறார். இதனால் சுமலதாவிடம் வேறு தொகுதியில் போட்டியிடுமாறு சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தும் அதை சுமலதா ஏற்கவில்லை.

    நேற்று மாண்டியா தொகுதியில் சுமலதா தனது மகனுடன் சென்று தொகுதி முழுக்க ஆதரவு திரட்டினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் கண்டிப்பாக போட்டியிடுவேன். மாண்டியா மாவட்டத்தின் அனைத்து காங்கிரஸ் பிரமுகர்களும், அம்பரீஷ் ரசிகர்களும் எனக்கு ஆதரவு தந்து பக்கபலமாக இருந்து வருகிறார்கள்.

    எனவே நான் தேர்தல் களத்தில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. இந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.



    இந்த நிலையில் அவரை கர்நாடக முன்னாள் துணை முதல் மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் சந்தித்து பேச இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சுமலதாவுக்கு ஆதரவு கொடுக்க பா.ஜனதா முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா கூறியதாவது:-

    பா.ஜனதாவில் சேருவது தொடர்பாக நடிகை சுமலதா தனது நிலைப்பாட்டை அறிவித்த பிறகு கட்சி மேலிடத்திடம் பேசி முடிவு எடுக்கப்படும். அம்பரீஷ் உயிரோடு இருந்தபோது அவரை பாராட்டி வந்த முதல்-மந்திரி குமாரசாமி தற்போது அவரது குடும்பத்தை விமர்சித்து வருகிறார். மாண்டியா தொகுதி மக்கள் குமாரசாமிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே இன்று மாண்டியா தொகுதியில் ஜே.டி.எஸ். தேர்தல் பிரசாரமும், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடக்கிறது. இதில் தனது மகனை அறிமுகப்படுத்தி குமாரசாமி பேச உள்ளார்.

    கடந்த வாரம் நிகிலின் தாயாரும், எம்.எல்.ஏ.வுமான அனிதா மாண்டியா தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து தனது மகனை நிர்வாகிகளிடம் அறிமுகம் செய்தார். கோவில்களுக்கும் அழைத்து சென்று பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #ParliamentElection #MandyaConstituency #Sumalatha

    நடிகை சுமலதா பற்றி மந்திரி ரேவண்ணா கூறிய கருத்துக்காக கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மன்னிப்பு கேட்டு உள்ளார். #kumarasamy #Sumalatha

    பெங்களூரு:

    நடிகை சுமலதா பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்க முடிவு செய்துள்ளார். இது பற்றி கருத்து தெரிவித்த கர்நாடக பொதுப்பணித்துறை மந்திரி ரேவண்ணா, “கணவர் இறந்து 6 மாதங்கள் கூட ஆகவில்லை, அதற்குள் அவரது மனைவி சுமலதா தேர்தலில் போட்டியிட வேண்டுமா?” என்று கூறினார்.

    மந்திரி ரேவண்ணா கூறிய இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கர்நாடகத்தில் குறிப்பாக மாண்டியா தொகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.


    ஜே.டி.எஸ். கட்சியை சேர்ந்தவர்களே, நடிகை சுமலதாவுக்கு ஆதரவாக ஓட்டு போடுவோம் என்று ஆவேசமாக கூறி வருகிறார்கள். இது ஜே.டி.எஸ். கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாண்டியா தொகுதியில் தனது மகன் நிகில் குமாரசாமி வெற்றிக்கு சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்று குமாரசாமி மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளார்.

    நடிகை சுமலதா பற்றி மந்திரி ரேவண்ணா கூறிய கருத்துக்காக முதல்-மந்திரி குமாரசாமி மன்னிப்பு கேட்டு உள்ளார்.

    இது குறித்து முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    நடிகை சுமலதா பற்றி மந்திரி ரேவண்ணா கூறிய கருத்து, யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். எங்கள் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் ரேவண்ணா சார்பில் நான் இந்த மன்னிப்பை கேட்கிறேன்.

    எங்கள் குடும்பம், சாமானிய மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அவமரியாதை செய்யாது. ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு, நான் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், உதவி செய்து வந்திருக்கிறேன்.

    இது பற்றி எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். மந்திரி ரேவண்ணா பேசும்போது, எச்சரிக்கையுடன் பேசி இருந்தால் சர்ச்சை ஏற்பட்டு இருக்காது. ஊடகங்கள் சென்று அவரிடம் கருத்து கேட்டபோது, அவர் வாய் தவறி கருத்து தெரிவித்து விட்டார்.

    மாண்டியா தொகுதி வி‌ஷயத்தில் இந்த அளவுக்கு முக்கியத்துவம் காட்டுவது ஏன்? என்று தெரியவில்லை. குதிரை பேர விவகாரத்தில் வெளியான ஆடியோ உரையாடல் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுஅமைக்கப்படும். 15 நாட்கள் தாமதமானால் என்ன ஆகிவிடும்.

    இந்த வி‌ஷயத்தில் அதிகாரிகள் உரிய முடிவு எடுப்பார்கள். ஆளுங்கட்சிகளின் எம்.எல்.ஏக்களை இழுக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வி‌ஷயத்தில் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ரமேஷ் ஜார்கிகோளியை பா.ஜனதாவை சேர்ந்த சிவன்னகவுடா நாயக் சந்தித்து பேசியது பற்றி யாரும் கவலைப்பட தேவை இல்லை. எனக்கும், ரமேஷ் ஜார்கிகோளிக்கும் இடையே உள்ள நல்லுறவு நன்றாகவே உள்ளது.

    காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். நான் மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறேன்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #kumarasamy #Sumalatha

    ×