search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலப்பரீட்சை"

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது. #INDvsAUS
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத், நாக்பூரில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், ராஞ்சி, மொகாலியில் நடந்த அடுத்த இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

    தொடக்க இரு ஆட்டங்களில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியா சறுக்கி விட்டது. குறிப்பாக மொகாலியில் நடந்த முந்தைய ஆட்டத்தில் இந்திய அணி 358 ரன்கள் குவித்த போதிலும் மோசமான பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இதே போல் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்டும் சில வாய்ப்புகளை வீணடித்தார். முதலில் பேட் செய்து இந்தியா 350 ரன்களுக்கு மேல் எடுத்தும் தோற்றது அது தான் முதல் தடவையாகும். பனிப்பொழிவால் பவுலர்களுக்கு பந்து வீசுவதற்கு சரியான ‘கிரிப்’ கிடைக்கவில்லை என்று கேப்டன் கோலி காரணம் சொல்லி நழுவினார். தற்போது, தவறுக்கு பரிகாரம் தேட வேண்டிய நேரமாகும்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி களம் இறங்கும் கடைசி சர்வதேச போட்டி இதுவாகும். உலக கோப்பைக்கு நம்பிக்கையான மனநிலையுடன் புறப்படுவதற்கு இந்த தொடரை வெல்வது அவசியமாகும்.

    கடந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் முதல் விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்து வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்தனர். அதே போன்று இன்றைய ஆட்டத்திலும் விளையாடினால், மறுபடியும் பெரிய ஸ்கோரை எட்ட முடியும். இது, கேப்டன் விராட் கோலியின் சொந்த ஊர் ஆகும். இந்த தொடரில் ஏற்கனவே 2 செஞ்சுரி அடித்துள்ள கோலி சொந்த ஊரிலும் அசத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    டெல்லி ஆடுகளம் எப்போதும் வேகமின்றி (ஸ்லோ) காணப்படும். அதனால் இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும். இதையொட்டி இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் அளித்த பேட்டியில், ‘4-வது ஒரு நாள் போட்டியில் ஆஷ்டன் டர்னருக்கு எதிராக நாங்கள் திட்டமிட்டபடி துல்லியமாக பந்து வீசவில்லை. ஆனால் மீண்டும் அதே போன்ற சூழ்நிலை எழுந்தால், நிச்சயம் சிறப்பாக செயல்படுவோம். பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்று துறைகளிலும் சில பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும்’ என்றார்.

    ‘இந்த ஆஸ்திரேலிய தொடரில் பயன்படுத்திய இந்திய ஆடும் லெவன் அணியை அப்படியே உலக கோப்பை போட்டியிலும் தொடர வேண்டிய அவசியம் கிடையாது. உலக கோப்பை தொடரில் எந்த மாதிரியான கலவையில் வீரர்களை இடம் பெறச்செய்வோம் என்பது ஏறக்குறைய தெரிந்து விட்டது. ஆனாலும் அதற்கு முன்பாக எல்லாவிதமான பரிசோதனை முயற்சிகளையும் செய்து பார்க்க விரும்புகிறோம்’ என்றும் பரத் அருண் குறிப்பிட்டார்.

    ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை சரிவில் இருந்து எழுச்சி பெற்று அடுத்தடுத்து கிடைத்த வெற்றியால் புது தெம்பு அடைந்துள்ளது. உஸ்மான் கவாஜாவின் நிலையான ஆட்டம் அந்த அணியின் பேட்டிங்குக்கு வலு சேர்க்கிறது. முந்தைய ஆட்டத்தில் இமாலய இலக்கை எட்ட வைத்த பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் (117 ரன்), ஆஷ்டன் டர்னர் (43 பந்தில் 84 ரன்) ஆகியோரும் இன்றைய ஆட்டத்தில் கவனிக்கத்தக்க வீரர்களாக இருப்பார்கள். 2009-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இந்திய மண்ணில் தொடரை வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலிய அணியினர் வியூகங்களை வகுத்துள்ளனர்.

    ஆஸ்திரேலிய துணை கேப்டனும், விக்கெட் கீப்பருமான அலெக்ஸ் காரி அளித்த பேட்டியில், ‘நாங்கள் சில இந்திய உள்ளூர் பவுலர்களை கொண்டு வலை பயிற்சியில் ஈடுபட்டோம். இது உண்மையிலேயே நல்ல அனுபவமாக இருந்தது. அது மட்டுமின்றி கடந்த 12-18 மாதங்களாக சுழற்பந்து வீச்சை திறம்பட சமாளிப்பதில் கடினமாக உழைத்து வருகிறோம். அதற்குரிய பலனையும் பார்த்துள்ளோம். மீண்டும் இந்திய சுழற்பந்து வீச்சை அடித்து நொறுக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எங்களது வீரர்கள் நாளைய (இன்று) போட்டியில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இது தொடரை முடிவு செய்யும் ஆட்டம் என்பதால் சுவாரஸ்யமாக இருக்கும்’ என்றார். ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கி அதன் பிறகு தொடரை வென்றதாக வரலாறு கிடையாது. அந்த பெருமையை இந்தியா தக்க வைத்துக் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    டெல்லி மைதானத்தில் இந்திய அணி இதுவரை 19 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 12-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி இங்கு 5 ஆட்டங்களில் ஆடி 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. இவற்றில் இந்தியாவை எதிர்கொண்ட 4 ஆட்டங்களில் 3-ல் தோல்வி கண்டிருக்கிறது.

    2011-ம் ஆண்டு நெதர்லாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 330 ரன்கள் குவித்தது, இங்கு ஒரு அணியின் சிறந்த ஸ்கோராகும். 1987-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 289 ரன்கள் எடுத்தது இந்தியாவின் அதிகபட்சமாகும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல் அல்லது அம்பத்தி ராயுடு, ரிஷாப் பான்ட், கேதர் ஜாதவ், விஜய் சங்கர், புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா.

    ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் காரி, கம்மின்ஸ், நாதன் லயன், ஜெயே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா.

    பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. #INDvsAUS

    பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #WomenHockeyWorldCup #India #Ireland
    லண்டன்:

    16 அணிகள் இடையிலான 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த கால்இறுதிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10-வது இடம் வகிக்கும் இந்திய அணி, 17-வது இடத்தில் உள்ள இத்தாலியை எதிர்கொண்டது.

    தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 9-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. லால்ரெம்சியாமி இந்த கோலை அடித்தார். 45-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி நேகா கோயல் 2-வது கோலை திணித்தார். 55-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை மற்றொரு இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா கோலாக மாற்றி அசத்தினார். பதில் கோல் திருப்ப இத்தாலி அணி எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை.

    முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. 1978-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி பெற்று இருப்பது இதுவே முதல்முறையாகும். நடப்பு தொடரில் இந்திய அணி சுவைத்த முதல் வெற்றி இதுவாகும். முன்னதாக லீக் சுற்றில் இந்திய அணி 2 டிரா, ஒரு தோல்வி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, உலக தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள அயர்லாந்துடன் மல்லுகட்டுகிறது. நல்ல பார்மில் இருக்கும் அயர்லாந்து அணி லீக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இருந்தது. அதற்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.  #WomenHockeyWorldCup #India #Ireland 
    பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள அமெரிக்காவுடன் மோதுகிறது. #IndiaAmerica #WomenHockeyWorldCup2018
    லண்டன்:

    16 அணிகள் பங்கேற்றுள்ள 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. 2-வது ஆட்டத்தில் அயர்லாந்துடன் 0-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

    இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று, தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள அமெரிக்காவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இந்தியாவுக்கு வாழ்வா-சாவா? மோதலாகும். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் கால்இறுதியை எட்டுவதற்கான பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். முந்தைய ஆட்டத்தில் நிறைய கோல் வாய்ப்புகளை வீணடித்த இந்திய அணி அதே தவறை மீண்டும் செய்யாது என்று இந்திய பயிற்சியாளர் ஜோர்ட் மர்ஜின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    முன்னதாக நேற்று ‘சி’ பிரிவில் நடந்த கடைசி கட்ட லீக் ஆட்டத்தில் ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை சாய்த்தது. இதே பிரிவில் நடந்த அர்ஜென்டினா- தென்ஆப்பிரிக்கா இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. இந்த பிரிவில் ஜெர்மனி 9 புள்ளிகளுடன் கால்இறுதியை உறுதி செய்தது. அர்ஜென்டினா (4 புள்ளி), ஸ்பெயின் (3 புள்ளி) பிளே-ஆப் சுற்றை எட்டின. தென்ஆப்பிரிக்கா (2 புள்ளி) வெளியேறியது. #IndiaAmerica #WomenHockeyWorldCup2018
    ×