search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 122132"

    • வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே கடலுார் பிரதான சாலையில், கத்தோலிக்க கிறித்துவர்களின் பத்தாம்பத்திநாதர் மற்றும் புனித அந்தோனியார் தேவாலயம் அமைந்துள்ளது.
    • வாழப்பாடி பத்தாம்பத்திநாதர் தேவாலய வணிக வளாக கட்டடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த இயேசு சிலை நேற்று மாலை தேவாலய நிர்வாகத்தால் அகற்றப்பட்டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே கடலுார் பிரதான சாலையில், கத்தோலிக்க கிறித்துவர்களின் பத்தாம்பத்திநாதர் மற்றும் புனித அந்தோனியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலய வளாகத்தி லுள்ள மூன்றடுக்கு வணிக கட்டத்தை புதுப்பிக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.

    இதற்கிடையே, வணிக கட்டடத்தின் 3-வது அடுக்கின் மேல் பகுதியில், 8 அடி உயர இயேசுவின் முழு உருவ பைபர் சிலை கடந்த ஜனவரி மாதம் 22 -ம் தேதி நிறுவப்பட்டது.

    அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள இச்சிலையை அகற்ற வேண்டு மென சிலர் கோரிக்கை விடுத்தனர். மேலும் அவர்கள் தேவாலயத்திற்கு முன் கூடியதால் பர பரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, இச்சிலை திரைச்சேலைகளால் மூடி மறைக்கப்பட்டது.

    கடந்த சில தினங்களுக்கு முன் திரைச்சேலைகள் அகற்றப்பட்டு சிலை திறக்கப்பட்டது. அனுமதி இன்றி வைக்கப்பட்ட இயேசு சிலை திறக்கப்பட்டதாக மீண்டும் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து, வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள், தேவாலய நிர்வாகிகளுடன் அமைதிப்பேச்சு நடத்தினர்.

    இறுதியாக, தேவாலய வணிக கட்டடத்தின் மேல் நிறுவப்பட்ட இயேசு உருவசிலை, திரைச்சேலைக் கொண்டு நேற்று முன்தினம் மீண்டும் மூடி மறைக்கப்பட்டது. முறையான அனுமதி பெற்ற பிறகு இயேசு‌ சிலையை திறக்க அறிவுறுத்தப்பட்டது.

    இதற்கிடையே, வாழப்பாடி பத்தாம்பத்திநாதர் தேவாலய வணிக வளாக கட்டடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த இயேசு சிலை நேற்று மாலை தேவாலய நிர்வாகத்தால் அகற்றப்பட்டது. இச்சிலையை பத்தாம் பத்திநாதர் தேவாலய வளாகத்திற்குள் நிறுவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • திட மனதுடன், நம்பிக்கையுடன், கடவுளுக்கே காத்திருங்கள்.
    • சூழ்நிலைகளைப் பார்த்து கலங்காமல், பயப்படாமல் இறைவன் மேல் நம்பிக்கையாய் இருங்கள்.

    அன்பானவர்களே, இவ்வுலக வாழ்க்கையில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை, எதிர்பார்ப்பு, ஏதோ ஒரு காத்திருப்பு இருக்கும். இறைவனுடைய வாக்குத்தத்த வார்த்தைகளும் இருக்கும். ஆனாலும் வாழ்க்கையில் எதிர்பார்த்த காரியங்கள், உயர்வுகள், வேலைகள், தாமதித்து கொண்டிருக்கும், அல்லது எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக வாழ்வில் நடந்து கொண்டிருக்கும். எதிர்கால கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தைச்செல்வம், ஆரோக்கியம், உயர்ந்த பதவி, வசதியான வாழ்க்கை உள்பட பல்வேறு ஆசைகள், கனவுகள் அனைவருக்கும் இருக்கும்.

    இவை இயல்பாகவே எல்லா மனிதர்களிடத்திலும் இருக்கக்கூடிய தேவையான, நியாயமான ஆசைகளே ஆகும். ஆனாலும் ஒரு சிலருக்கு ஆசைப்படுவது, விரும்புவது தாமதமாகிக் கொண்டிருக்கும் அல்லது நேர்மாறாக வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும். இதனால் மனதில் சோர்வு, வருத்தம் ஏற்படுகிறது. இதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு நம்பிக்கையோடு இருந்தால் கர்த்தர் நமக்கு நாம் விரும்பியதை தருவார். இதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வை காண்போம்.

    வேதாகமத்தில் யோசேப்பு என்று ஒரு மனிதர் இருந்தார். அவர் ஒருநாள் ஒரு கனவு கண்டு அதை தன்னுடைய சகோதரர்களிடமும், தந்தையிடமும் கூறுகிறார். அந்த கனவில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்களும் தன்னை வணங்கியதாக கூறுகிறார். இதன் காரணமாக அவருடைய சகோதரர்கள் பொறாமை கொண்டு அவரை வெறுத்து பகைக்கின்றார்கள்.

    ஒருநாள் சகோதரர்கள் ஆடு மேய்க்கின்ற இடத்திற்கு யோசேப்பு செல்கிறார். அங்கே அவருடைய சகோதரர்கள் அவரை கொலை செய்யும் படி ஆலோசனை பண்ணி, பின்பு அவரை 20 வெள்ளிக் காசுக்கு விற்று விடுகிறார்கள். எகிப்து தேசத்தின் பிரதான அதிகாரி போத்திபார் என்பவரின் வீட்டிற்கு விலைக்கு விற்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறார். ஒருநாள் போத்திபாரின் மனைவியால் பொய் குற்றம் சாட்டப்பட்டு யோசேப்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்படுகிறார்.

    எகிப்தின் மன்னர் பார்வோனால் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட இரண்டு வேலைக்காரர்கள் யோசேப்போடு சிறைச்சாலையில் இருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரு கனவு காண்கிறார்கள். அதன் அர்த்தம் அவர்களுக்கு புரியவில்லை. யோசேப்பு கடவுளின் அருளால் அந்தக் கனவின் அர்த்தத்தை அவர்களுக்கு தெரியப்படுத்துகிறார். யோசேப்பு கூறியபடியே அதில் ஒரு வேலைக்காரன் தூக்கில் தொங்கவிடப்படுகிறார். ஒரு வேலைக்காரன் திரும்பவும் மன்னரிடமே வேலைக்கு திரும்புகிறார். அவன் யோசேப்பை மறந்து விடுகிறான்.

    இதன் பிறகு நீண்ட நாள் கழித்து எகிப்து மன்னர் பார்வோன் ஒரு கனவு காண்கிறார். அதன் அர்த்தம் அவருக்கு புரியவில்லை. எகிப்தின் மந்திரவாதிகளாலும், ஜோதிடர்களாலும் அந்தக்கனவின் அர்த்தத்தை கூறமுடியவில்லை. அப்பொழுது யோசேப்போடு சிறைச்சாலையில் இருந்த வேலைக்காரன் யோசேப்பை பற்றி மன்னரிடம் கூறுகிறார். உடனே யோசேப்பு சிறைச்சாலையிலிருந்து புது ஆடை அணிவிக்கப்பட்டு மன்னரின் முன்பு நிறுத்தப்படுகிறார். பார்வோன் கண்ட கனவு மற்றும் அதன் அர்த்தத்தை யோசேப்பு சரியாக விளக்கிக் கூறுகிறார்.

    யோசேப்போடு கடவுள் இருக்கிறார் என்று பார்வோன் அறிந்து அவரை எகிப்தின் பிரதம மந்திரியாக உயர்த்துகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பாக யோசேப்பு கண்ட கனவு, கடவுள் மூலமாக நிறைவேற்றப்படுகிறது. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாக யோசேப்புக்கு கடவுள் கொடுத்த வாக்குத்தத்த கனவு அவருக்கு உடனடியாக அற்புதத்தை செய்யவில்லை. மாறாக சொந்த சகோதரர்களால் பகைக்கப்படுகிறார், அடிமையாக விற்கப்படுகிறார், பொய் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறைச்சாலைக்கு செல்கிறார். நண்பரால் மறைக்கப்படுகிறார். அதன் பின்பு ஒரு நாள் வந்தது, நாட்டிற்கே பிரதம மந்திரியாக உயர்த்தப்படுகிறார். எல்லா சூழ்நிலைகளிலும் கடவுள் யோசேப்போடு இருந்தார். அதனால் அவர் விவேகத்துடன் செயல்பட்டு நல்ல பெயர் பெறுகிறார்.

    இன்றைக்கும் நம்மில் அநேகர் ஏதோ ஒரு காரியத்திற்காக, பொருளாதார தேவைகளுக்காக, படிப்புக்காக, வேலைக்காக, திருமணத்திற்காக, குழந்தை செல்வத்திற்காக, நோய் குணமாகி ஆரோக்கியமாக... இப்படி ஏதோ ஒன்றிற்காக இறைவனிடம் கையேந்தி நிற்கிறோமா? இறைவனும் வாக்குத்தத்தங்கள் கொடுத்த பின்பும் தாமதமாகிறதா? அல்லது நடக்கவில்லையே என்று வருத்தப்படுகிறீர்களா? இறைவன் உங்களைப் பார்த்து கூறுகிறார், "உங்களைக் குறித்து சொல்லப்பட்ட காரியங்கள் அனைத்தும், நீங்கள் எதிர்பார்த்திருக்கும் காரியங்கள் யாவும் நிச்சயமாய் நிறைவேறும்.

    திட மனதுடன், நம்பிக்கையுடன், கடவுளுக்கே காத்திருங்கள்". வேதாகமத்தில் கடவுள் சொல்கிறார்: "குறித்த காலத்திற்கு தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது, முடிவிலே அது விளங்கும். அது பொய் சொல்லாது, அது தாமதித்தாலும் அதற்கு காத்திரு. அது நிச்சயமாய் வரும் அது தாமதிப்பதில்லை". (ஆபகூக் 2:3). "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படி நான் உங்கள் பெயரில் நினைத்து இருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

    அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கு ஏதுவான நினைவுகளே" - எரேமியா 29:11. ஆகவே சூழ்நிலைகளைப் பார்த்து கலங்காமல், பயப்படாமல் இறைவன் மேல் நம்பிக்கையாய் இருங்கள். எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை, சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை வீண் போவதில்லை. கர்த்தர் சொல்கிறார்: "அவர் சிறியவனை புழுதியிலிருந்து தூக்கி விடுகிறார், எளியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறார், அவனை பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப் பண்ணுகிறார்" சங்கீதம் 113-7,8.

    • நம்பிக்கையோடு தேவனிடம் சரணடையுங்கள்.
    • தேவன் எல்லா சூழ்நிலைகளிலும் உங்களோடு இருப்பார்.

    வேதாகமத்தில் 'பயப்படாதே' என்னும் வார்த்தை கடவுளின் வாக்குறுதியாய் 365 முறை கூறப்பட்டுள்ளது. ஒரு வருடத்தின் 365 நாட்களுக்கும், கடவுளை நம்புகிறவர்களுக்கு, 'நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்' என்று கடவுள் நம்பிக்கையுடன் கூறுகிறார். வேதாகமத்தில் ஆகார் என்ற பெண்மணி தன் குழந்தையுடன் பாரான் வனாந்திரத்தில் நடந்து செல்கிறாள். அவர்களிடம் இருந்த உணவு, தண்ணீர் அனைத்தும் பயணத்தின் பாதிவழியிலேயே தீர்ந்துவிட்டது. அவள் நடந்து செல்வதோ கடுமையான வெப்பமும், புழுதிக்காற்றும் அடிக்கின்ற வறண்ட பாலைவனம்.

    அந்த பாலை வனத்தில் அவளுக்கு உதவி செய்வதற்கு யாரும் கிடையாது. பசியாலும், தாகத்தாலும் குழந்தை துடித்து அழுதது. அப்போது, பாலைவனத்தில் உள்ள ஒரு செடியைக்கண்டு, அந்த செடியின் நிழலில் குழந்தையை விட்டு விட்டு, சற்று தூரமாக போய் நின்று கதறுகிறாள். 'உணவு, தண்ணீர் இல்லாமல் குழந்தை சாவதை நான் பார்க்க மாட்டே ன்' என்று உரத்த குரலில் சத்தமிட்டு அழுகிறாள். அந்த அழுகையின் குரலை கேட்பதற்கு எந்த மனிதர்களும் அந்த இடத்தில் கிடையாது. 'தாகத்தால் சோர்வுடன் அழுத பிள்ளையின் சத்தத்தை தேவன் கேட்டார்'.

    தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு, "ஆகாரே உனக்கு என்ன நேர்ந்தது?, 'பயப்படாதே'. பிள்ளை இருக்கும் இடத்தில் தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார். நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக் கொண்டு போ , அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்". (ஆதியாகமம் 21:17,18,19) தேவன் அவளுடைய கண்களுக்கு அந்த வறண்ட பாலை வனத்திலே ஒரு தண்ணீர்த்தடாகத்தைக் காட்டினார். அவள் ஓடிப்போய் தான் வைத்திருந்த தோல் பையிலே தண்ணீரை நிரப்பி, பிள்ளைக்கு குடிக்கக் கொடுத்தாள். உண்பதற்கு உணவில்லை, குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என்று அழுத அவளுக்கு வறட்சியான பாலைவனத்தில் தண்ணீரும் கொடுத்து, அவனை பெரிய ஜாதியாக்குவேன் என்று வாக்குத்தத்தமும் கொடுக்கிறார், என்றால் நமது தேவன் எத்தனை மகிமை மிக்கவர் என்பதை அறியலாம்.

    மேலும் தன்னை நம்பி அழைத்தவர்களின் குரலுக்கு அவர் உடனே பதில் அளிக்கக்கூடியவர் என்பதையும் உணர்ந்து கொள்ளலாம். அன்பானவர்களே , இன்று நாமும் ஒரு தன்னந்தனியான சூழலில், எந்த உதவியும் இல்லாத நிலையில் தவித்துக் கொண்டு இருக்கலாம். நோய்களை குறித்த பயம், வருமானத்தை குறித்த பயம், கடன் தொல்லைகளால் வரும் பயம், தேர்வு தோல்வியை குறித்த பயம், பிள்ளைகளின் எதிர்காலத்தை குறித்து பயம்... இப்படி ஏதோ ஒரு பயத்தினால் கலங்கி தவிக்கின்றீர்களா? ஆகாரின் கண்ணீரைக் கண்டு உதவிய தேவன், அவளது பயத்தை மாற்றிய தேவன், அவளது தேவைகளை சந்தித்த தேவன், உயர்வைக்கொடுத்த தேவன், இன்று உங்களுடைய பயம், கலக்கம், கவலைகளை நீக்கி, உங்கள் தேவைகளையும் நிறைவேற்றுவார்.

    ஆகவே, நம்பிக்கையோடு தேவனிடம் சரணடையுங்கள். பயப்படாதிருங்கள், தேவன் எல்லா சூழ்நிலைகளிலும் உங்களோடு இருப்பார். உங்களது கவலை, பயம், கலக்கங்களை கடவுளிடத்தில் கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் நடந்து செல்லுங்கள். கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.

    நெல்லை மானக் ஷா.

    • இயேசு கிறிஸ்து தம் வாழ்வில் உடல் ஊனமுற்ற சிலரையும் அற்புதமாக குணப்படுத்தினார்.
    • ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக்கொண்டிருந்தார்.

    இயேசு கிறிஸ்து தம் பணி வாழ்வில் உடல் ஊனமுற்ற சிலரையும் அற்புதமாக குணப்படுத்தினார். கை சூம்பியவர் ஒருவருக்கும், கூன் முதுகு கொண்ட ஒரு பெண்ணுக்கும், காது வெட்டுண்ட பணியாளர் ஒருவருக்கும் இயேசு சுகமளித்த நிகழ்வுகளை இங்கு காணலாம்.

    கை சூம்பியவர்

    இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர். இயேசு கை சூம்பிவரை நோக்கி, "எழுந்து, நடுவே நில்லும்" என்றார். பின்பு அவர்களிடம், "ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?" என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள். அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, "கையை நீட்டும்" என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது. (மாற்கு 3:1-5)

    கூன் முதுகாளர்

    ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக்கொண்டிருந்தார். பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல்நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார். இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, "அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்" என்று கூறி, தம் கைகளை அவர் மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். (லூக்கா 13:10-13)

    காதை இழந்தவர்

    இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான். இயேசு அவனிடம், "யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?" என்றார். அவரைச் சூழ நின்றவர்கள் நிகழப்போவதை உணர்ந்து, "ஆண்டவரே, வாளால் வெட்டலாமா?" என்று கேட்டார்கள். அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார். இயேசு அவர்களைப் பார்த்து, "விடுங்கள், போதும்" என்று கூறி அவருடைய காதைத் தொட்டு நலமாக்கினார். (லூக்கா 22:47-51)

    • ஒவ்வொரு மனிதனுக்கும் எண்ணங்களில் ஏற்படுகிற போராட்டங்களே மிகுந்த சவாலாக இருக்கிறது.
    • தர்க்கங்கள் தொடங்கும் போதே உங்கள் வாய்க்கு காவல் வையுங்கள்.

    பிரியமானவர்களே! இயேசுவின் நாமத்தில் அன்புடன் வாழ்த்துகிறேன். 'நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஏற்ற வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்'. (ரோமர் 12:2) ஆம், நம்முடைய மனது புதிதாக்கப்பட்டால் பழைய கஷ்டங்கள், இழப்புகள் மற்றும் எண்ணற்ற தோல்விகள் அனைத்தையும் மறந்து முன்னேறிச் செல்ல முடியும்.

    ஒவ்வொருவருடைய மனது மிகவும் முக்கியம். 'அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்'. (2 கொரி 10:5) இன்றைக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் எண்ணங்களில் ஏற்படுகிற போராட்டங்களே மிகுந்த சவாலாக இருக்கிறது. அவைகளை மேற்கொள்ள முடியாமல் சிந்தனையில் வீணரானவர்கள் ஏராளம். ஆனால் தேவபிள்ளைகளாகிய நீங்கள் தேவன் விரும்பாத எண்ணங்களை மேற்கொண்டு ஜெயம் பெறவே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

    மனிதனின் தவறான எண்ணங்களே தேவனுடைய சித்தத்திற்கு மாறாக செயல்படவைக்கும் பயங்கரமான ஆயுதமாகும். உதாரணமாக நம்முடைய சமாதானத்தைக் கெடுக்கிற பிசாசின் ஆயுதம் தர்க்கமாகும். 'அதினாலே அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் மிகுந்த வாக்குவாதமும் தர்க்கமும் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களைச் சேர்ந்த வேறுசிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள்'. (அப்.15:2) 'அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம் பண்ணினார்கள்'. (அப்.6:9) மேற்கண்ட இரண்டு வசனங்களிலும் தர்க்கங்களைக் குறித்து நீங்கள் வாசிக்கலாம்.

    முதலாம் நூற்றாண்டிலே இப்படிப்பட்ட தர்க்கங்கள் நடைபெற்றது உண்மையானால், கொடிய நாட்களாகிய இக்கடைசிக் காலத்தில் மனுஷனுடைய அன்பு தணிந்து போன நாட்களில் சத்துரு பலவிதங்களில் தர்க்கங்களைக் கொண்டு வருவான் அல்லவா? எனவே, தர்க்கங்களுக்கு இடம் கொடாதீர்கள். தர்க்கங்கள் தொடங்கும் போதே உங்கள் வாய்க்கு காவல் வையுங்கள். நிச்சயமாக தர்க்கங்களை தவிர்க்கிற தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையான எண்ணங்களை சிறைப்படுத்துகிறவர்களாய் மாறுவீர்கள்.

    எங்கள் பரிசுத்தமுள்ள நல்ல ஆண்டவரே! மேற்கண்ட ஆவிக்குரிய சத்தியங்களை நான் விசுவாசிக்கிறேன். நிச்சயமாக மாம்சத்தின் எண்ணங்களை சிறைப்படுத்தவும், ஆவியின் பெலத்தினால் அவைகளை மேற்கொள்ளவும் ஆண்டவரே நீர் உதவி செய்யப் போகிறீர். ஆகவே நான் சிந்தனையில் ஜெயம் பெறுவது நிச்சயம். இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்.

    • இயேசு எளியவரிலும் எளியவராய் வாழ்ந்தார்.
    • தன்னை உயர்த்திக் கொள்ள நினைப்பவர் தாழ்த்தப்படுவார்.

    இயேசு ஒரு முறை விருந்தொன்றிற்குச் சென்றிருந்தார். அங்கே விருந்துக்கு வந்திருந்தவர்கள் முதன்மையான இடங்களுக்காய் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள்.

    அப்போது இயேசு சொன்னார், "உங்களை விருந்துக்கு கூப்பிட்டால் ஓடிப்போய் முதல் இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட முக்கியமான ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். அப்படி இருந்தால், அவர் வந்து, 'கொஞ்சம் பின்னாடி இருக்கையில் அமர முடியுமா?' என்று உங்களைக் கேட்கலாம். அப்போது எல்லா விருந்தினருக்கும் முன்னால் நீங்கள் அவமானமாய் உணர்வீர்கள். அதே நேரம், நீங்களே போய் கடைசி இடத்தில் அமர்ந்து கொண்டால், அவர் வந்து, 'என்ன இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள்... முதன்மையான இடத்துக்கு வாங்க' என அழைக்கலாம். அப்போது எல்லோருக்கும் முன்பாக நீங்கள் பெருமைப்படுத்தப்படுவீர்கள். ஒருவர் தம்மைத் தாழ்த்திக் கொண்டால், அவர் உயர்த்தப்படுவார். தன்னை உயர்த்திக் கொள்ள நினைப்பவர் தாழ்த்தப்படுவார்" என்றார்.

    இயேசுவின் இந்த அறிவுரையானது எல்லா காலத்துக்கும் பொருத்தமான அறிவுரையாய் இருக்கிறது. நாம் ஒரு இடத்துக்குச் செல்லும்போது அங்கே கவுரவத்தையோ, பெருமையையோ எதிர்பாராமல் தாழ்மையான இடங்களை தேர்வு செய்து கொண்டால் அவமானம் நேர்வதே இல்லை.

    நம்மை யாராவது பெருமைப்படுத்தவேண்டும், வார்த்தைகளால் புகழ வேண்டும், முதல் மரியாதையை வழங்க வேண்டும் எனும் அதிகபட்ச எதிர்பார்ப்புகளுக்குக் காரணம், நம்மை நாம் உயர்வாய் நினைப்பது தான்.

    'நான் சாதாரணமானவன், இறைவன் படைப்பில் எல்லாருமே சமம்' எனும் சிந்தனை நம்மில் இருந்தால் பிறருடைய வார்த்தைகளோ, செயல்களோ நம்மை எளிதில் காயப்படுத்துவதில்லை.

    இயேசு தாழ்மையை வெறுமனே வார்த்தைகளில் மட்டும் சொல்லவில்லை. தனது வாழ்க்கையிலும் அதையே செயலாற்றினார். அவரது பிறப்பு ஒரு குடிலில், கந்தையின் நடுவில் நிகழ்ந்தது. அவரது பிறப்பின் செய்தி நிராகரிப்பின் விளிம்பில் இருந்த இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

    அவரது மரணம் அவமானச் சிலுவையின் உச்சியில் நிகழ்ந்தது. ஆடைகள் கூட கிழிக்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட அரை நிர்வாண நிலையில் தான் அவரது மரணம் எல்லோருக்கும் முன்பாக நிகழ்ந்தது. அவரது அடக்கம் இரவல் கல்லறையில் நிகழ்ந்தது.

    அவரது உயிர்ப்பும் கூட மேல்தட்டு மக்களுக்கு முதலில் அறிவிக்கப்படவில்லை. உயிர்ப்பின் செய்தி முதன் முதலில் ஒரு பெண்ணுக்குத் தான் சொல்லப்பட்டது. ஆணாதிக்கச் சமூகத்தில் புறக்கணிப்பின் பக்கத்தில் இருந்த பெண் ஒருவரையே கடவுள் தனது உயிர்ப்பின் முதல் காட்சிக்காய் தேர்ந்தெடுத்தார்.

    இயேசு எளியவரிலும் எளியவராய் வாழ்ந்தார். எளிமையிலும் எளிமையாய் செயலாற்றினார்.

    நமது வாழ்விலும் ஒவ்வோர் நிகழ்விலும் தாழ்மையைத் தேர்ந்தெடுப்போம், நிராகரிக்கப்பட்டவர்களின் சார்பாய் நிற்போம், புறக்கணிக்கப்பட்டவருக்காய் பேசுவோம். அப்போது நாம் இறைவனின் சாயலாய் மாறுவோம்.

    சேவியர், சென்னை.

    • இயேசுவை சுற்றி நெருக்கி நின்று கொண்டு இருந்த பலரது கரங்கள் அவரை தொடவும் செய்தன.
    • அவர்களுடைய நெருக்கமோ அல்லது தொடுதலோ இயேசுவை திரும்பி பார்க்க வைக்கவில்லை.

    அன்றும் இயேசு வழக்கம்போல் திரளான மக்கள் மத்தியில் இறை செய்தியை அறிவித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தொழுகை கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர், இயேசுவிடம் "நீர் வந்து சாகும் தறுவாயில் இருக்கும் என்னுடைய மகள் மீது உமது கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்று பிழைத்துக் கொள்வாள்" என்று அவரை வருந்தி வேண்டினார். அவருடைய வேண்டுதலை ஏற்று கொண்ட இயேசு, அவருடன் புறப்பட்டார்.

    அப்போது அங்கிருந்த பெருந்திரளான மக்கள் கூட்டமும் நடக்க இருக்கும் நிகழ்வை காணும் ஆர்வத்தில் அவரை நெருக்கியபடி அவருடன் சென்றனர். யாயிரின் வீட்டை நோக்கி வேகமாய் சென்று கொண்டிருந்த இயேசுவின் நடை திடீரென்று தடைப்பட்டது. அவர் நின்று, திரும்பி, தான் பின்னால் இருந்த கூட்டத்தை பார்த்து "என்னை தொட்டவர் யார்?" என்று வினவினார். உடன் இருந்தவர்களோ 'இவ்வளவு கூட்டம் அவரை நெருக்கி நடக்கும் போது, தன்னை தொட்டது யார்? என்று இவர் கேட்கிறாரே' என்று குழம்பி போயினர். (மாற்கு 5 : 21-31)

    இயேசு நிற்கவும், திரும்பி பார்த்து தன்னை தொட்டது யார் என்று கேள்வி கேட்கவும் காரணம் தான் என்ன? விவிலியம் அதற்கான பதிலை கொடுக்கிறது.

    பன்னிரு ஆண்டுகளாய் ரத்தப்போக்கு நோயினால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவர் அந்த கூட்டத்தில் இருந்தார். அவர் தன்னுடைய சொத்துகள் முழுவதையும் விற்று பணத்தை செலவழித்து மருத்துவம் பார்த்தும் சுகம் கிடைக்காமல் வருந்தினார். இயேசுவை பற்றி கேள்விபட்ட அவர், 'நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்' என்று எண்ணிய படி இயேசுவின் பின் வந்து அவருடைய ஆடைகளை தொட்டார். உடனே தனது நோய் நீங்கி சுகமும் பெற்றார்.

    அவருடைய இந்த தொடுதலே இயேசுவை திரும்பிப் பார்க்க வைத்தது. 'இயேசுவின் கரங்கள் தன் மீது பட வேண்டும், அவர் என்னை தொட வேண்டும் அப்போது எனக்கு விடுதலை கிடைக்கும்' என்று எண்ணி அவரின் முன் நின்ற பலரின் மத்தியில், அவரின் பின் சென்று, 'அவருடைய ஆடையை தொட்டாலே போதும் நான் சுகம் பெறுவேன்' என்ற அந்த பெண்ணின் விசுவாசமே இயேசுவை நிற்க வைத்தது. அந்த பெண்மணி தொட்டதோ இயேசுவின் ஆடையைத் தான். ஆனால் அவரின் விசுவாசமோ தேவனுடைய உள்ளத்தையே தொட்டது. அதனால் தான் இயேசு திரும்பி பார்த்து 'என்னை தொட்டவர் யார்?' என்று கேட்டார். (லூக்கா 8 : 45)

    உண்மையில் அந்த பெண்மணியின் தொடுதலோ அல்லது இயேசுவின் ஆடையோ அவருக்கு சுகத்தை பெற்று தரவில்லை. 'அவர் தொட்டால், நான் சுகம் பெறுவேன்' என்று விசுவாசித்த பலரின் மத்தியில் 'அவரை அல்ல, அவருடைய ஆடையை தொட்டாலே நான் சுகம் பெறுவேன்' என்ற அவருடைய முழுமையான உன்னத நம்பிக்கையே, இயேசுவிடம் இருந்து வல்லமை வெளிப்பட்டு, அவரின் நோய் நீங்க காரணமாய் அமைந்தது. ஏனெனில் இயேசு அவரை பார்த்து 'மகளே, உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ' (லூக்கா 8 : 48) என்று கூறியதன் மூலம் அவருடைய உண்மையான விசுவாசமே அவரை சுகப்படுத்தியது என்பதை நாம் எளிதாக அறிந்து கொள்ளலாம். பல வருடங்களாய் தனது பணத்தை எல்லாம் செலவழித்தும் கிடைக்காத விடுதலையை, அந்த பெண்மணி முழு விசுவாசத்துடன் இயேசுவை தொட்ட அந்த ஒரு நொடியிலேயே பெற்று கொண்டார்.

    இந்த நிகழ்வின் போது இயேசுவை சுற்றி நெருக்கி நின்று கொண்டு இருந்த பலரது கரங்கள் அவரை தொடவும் செய்தன. அவர்களுடைய நெருக்கமோ அல்லது தொடுதலோ இயேசுவை திரும்பி பார்க்க வைக்கவில்லை. ஆனால் ரத்தப்போக்கினால் அவதிப்பட்ட இந்த பெண்மணியின் கரத்தின் தொடுதல் மட்டும் இயேசுவை நின்று திரும்பி பார்க்க வைத்ததுடன், அவருடைய வல்லமையையும் வெளிப்பட வைத்தது. அதற்கு காரணம், அவருடைய தொடுதலில் இருந்த உண்மையான முழுமையான விசுவாசமே.

    இயேசுவின் அருகில் இருந்த மற்றவர்களின் தொடுதலை போல் அல்லாமல், ஜெயத்தை பெற்று, இயேசுவை நின்று திரும்பி பார்க்க வைத்த இந்த பெண்மணியின் தொடுதலை போல் நம்முடைய ஜெபங்களும் முழுமையான விசுவாசத்துடன் கூடியதாக இருக்கட்டும்.

    • தற்போது நீங்கள் சந்திக்கிற சகல பிரச்சினைகளைக் குறித்து மனம் துவண்டு போகாதீர்கள்.
    • ஜீவனுள்ள ஆண்டவரிடத்தில் உங்களைப் பூரணமாய் அர்ப்பணித்து, விசுவாசத்தோடு துதியுங்கள்.

    அன்பானவர்களே! நம் அருமை ஆண்டவர் இன்றும் ஜீவிக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.

    அவருடைய வருகையை எதிர்நோக்கி இருக்கிற நாம் ஒவ்வொருவரும் அவருக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு எப்பொழுதும் விழித்திருந்து ஜெபம் பண்ண வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. தற்போது நீங்கள் சந்திக்கிற சகல பிரச்சினைகளைக் குறித்து மனம் துவண்டு போகாதீர்கள். ஜீவனுள்ள ஆண்டவரிடத்தில் உங்களைப் பூரணமாய் அர்ப்பணித்து, விசுவாசத்தோடு துதியுங்கள்.

    உங்களுக்காக, எனக்காக மரித்த ஆண்டவர் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து, தாம் உயிரோடிருக்கிறேன் என்று தம்முடைய சீடர்களுக்கு வெளிப்படுத்தின சில சந்தர்ப்பங்களை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். வாசித்து சந்தோஷமாய் துதியுங்கள்.

    'வாரத்தின் முதல்நாளாகிய அன்றையதினம் சாயங்கால வேளையிலே, சீடர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்'. யோவான் 20:19

    பிரியமானவர்களே! வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் உயிரோடெழுந்த அருமை ஆண்டவர் அன்று மாலை நேரத்தில் தம்முடைய சீடர்களுக்கு தரிசனம் கொடுக்க அவர்கள் கூடியிருந்த அறைக்கு சென்ற போது வேதம் தெளிவாக சொல்லுகிறது. அவர்கள் யூதர்களுக்கு பயந்து தங்கள் கதவு களையெல்லாம் பூட்டிக்கொண்டு நடுக்கத்தோடு காணப்பட்டார்கள். இதற்கு ஒரே காரணம் அவர்களுக்குள் இருந்த பயம்.

    அந்த வகையில் பயத்தின் ஆவியினால் பாதிக்கப்பட்ட தம்முடைய சீடர்களை விடுவிக்க தாமே அவர்கள் அறைக்கு இயேசு சென்றார்.

    உங்கள் வீட்டுக்குள் ஏதாகிலும் ஒரு பயத்தோடு கலக்கத்தோடு இருந்தால் நான் உங்களுக்குக் கூறுகிற ஒரே ஒரு வார்த்தை 'என் மீட்பர் உயிரோடிருக்கிறார்'. சகல பயத்திலிருந்தும் உங்களை விடுதலையாக்கி மன சமாதானத்தையும், சந்தோஷத்தையும் உங்களுக்குத் தருவார்.

    'மற்றச் சீடர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று தோமாவிடம் சொன்னார்கள், அதற்கு அவன்: அவருடைய கைகளில் அணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்க மாட்டேன் என்றான்'. யோவான் 20:25

    தோமாவை சந்தேக ஆவி பிடித்திருந்தது. ஆகவே தான் இயேசுவின் காயத்தை நான் கண்டு காயத்தில் என் விரலையிட்டு அவருடைய விலாவில் என் கையை போடவேண்டும் என்று கூறினார்.

    ஆனால் நம் அருமை ஆண்டவரோ, 8 நாளைக்குப் பிறகு மீண்டும் தோமாவுக்காக மறுபடியும் சீடர்களை சந்திக்கச் சென்றார். அந்த சந்திப்பு தோமாவின் வாழ்வில் பெரிய திருப்புமுனையை உண்டாக்கியது. அதன் விளைவாக எந்த அப்போஸ்தலரும் பிரயாணம் பண்ண இயலாத அளவுக்கு நீண்ட தூரம் பிரயாணம் பண்ணி நம் இந்தியாவுக்கு வந்து சுவிசேஷம் அறிவித்து சென்னையில் ரத்த சாட்சியாக மரித்தார்.

    நம்முடைய ஆண்டவர் ஒருவரை ஒருமுறை அழைத்துவிட்டால், அவர்களை தெரிந்து கொள்வார். எனினும் பிசாசானவன் எந்த அளவுக்கு அப்படிப்பட்டவர்களை தன்னுடைய மாய வலைக்கும், உலகத்துக்குள்ளும் இழுத்துக் கொண்டு சென்றாலும், அவர்களை எப்படியாகிலும் தப்புவித்து தம்முடன் இழுத்துக் கொள்வார் என்பதற்கு யோவான் 21:1-4 வசனங்கள் நம் அனைவருக்கும் ஆதாரமாகும்.

    அன்பானவர்களே! ஒரு வேளை நீங்களும் இந்நாட்களில் வாழ்வில் தோல்வியடைந்து, சோர்ந்து போய் பலவிதமான உலகக் கவலையினால் பாதிக்கப்பட்டு இருந்தால், மனம் கலங்காமல், கடந்த வாழ்வின் தவறுகளை உணர்ந்து சிலுவையின் பக்கம் திரும்புங்கள். நிச்சயம் உங்கள் பின்னடைவு முடிவுக்கு வரும். ஒரு புதிய ஆரம்பம் உங்கள் வாழ்வில் தோன்றும்.

    ஜி.பி.எஸ். ராபின்சன், சென்னை.

    • இயேசு துக்கத்தை நீக்கி, நம்மை சந்தோஷமாக மாற்றி ஆனந்த கிரீடத்தை தருவார்.
    • இறைமகன் இயேசுவிடம் கையேந்தினால் நிச்சயம் நம் வாழ்வும் சந்தோஷமாக மாறும்.

    நாம், நம்முடைய முயற்சியை மட்டும் சரியாக செய்து விட்டு எல்லா கவலைகளையும், வேதனைகளையும், துக்கங்களையும், கண்ணீரையும் இறைவன் மீது வைத்து விடுவோம். மனிதனுக்கு ஏற்படும் கவலை அல்லது துக்கம் என்பது பல வடிவங்களைக்கொண்டது. நெருங்கியவர்களின் இழப்புகள், தோல்விகள், உதவியற்று தனித்துவிடப்பட்ட நிலைகள், பணி நெருக்கடிகள், பண நெருக்கடிகள், விரும்பிய கல்வி கிடைக்கவில்லை, வேலை கிடைக்கவில்லை, நல்ல வரன் அமையவில்லை, என் சொந்த வீட்டார் கூட என்னை புரிந்து கொள்ளவில்லை... என்று இந்தப்பட்டியல் மிகவும் பெரியதாய் நீளும்.

    இவ்வாறு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏதோ ஒரு நிகழ்கால, எதிர்கால கவலைகள் வந்து அவன் மனதை, உடலை வாட்டி வருத்துகிறது. வேதத்தில், எருசலேமுக்கு அருகில் பெத்தானியா என்ற ஊரில் மார்த்தாள்-மரியாள் என்ற சகோதரிகளுக்கு லாசர் என்ற சகோதரர் இருந்தார். இயேசு இந்த சகோதரிகளிடத்திலும் லாசருவிடத்திலும் அன்பாய் இருந்தார். இந்த லாசரு நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். அப்பொழுது அவனுடைய சகோதரிகள் இயேசுவினிடத்தில் ஆளனுப்பி 'நீர் சினேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான், வந்து சுக மாக்கும்' என்று வேண்டினார்கள்.

    இயேசு பெத்தானியாவுக்கு வந்தபோது லாசரு இறந்து, உடல் கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டது. மார்த்தாளும், மரியாளும் இயேசுவினிடத்தில் வந்து, "ஆண்டவரே நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் மரித்து இருக்கமாட்டான்" என்று கூறி சத்தமிட்டு அழுதார்கள். அவளோடு கூட இருந்த உறவினர்களும் அழுதார்கள், இயேசுவும் கண்ணீர் விட்டார். உடனே இயேசு கல்லறைக்குச் சென்று ''கல்லை எடுத்துப் போடுங்கள்'' என்றார். மரித்தவனுடைய சகோதரிகள் "ஆண்டவரே நாலு நாள் ஆயிற்று நாறுமே" என்றார்கள்.

    இயேசு அவளை நோக்கி "நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்" என்றார். கல்லறையின் கல்லை எடுத்தார்கள், பின்பு "லாசருவே வெளியே வா" என்று உரத்த சத்தமாய் இயேசு கூப்பிட்டார். மரித்தவன் உயிரோடு வெளியே வந்தான். எல்லோரும் மிகவும் களிகூர்ந்து, மகிழ்ந்து சந்தோஷப்பட்டார்கள். கவலையான சூழ்நிலை, சந்தோசமாக, குதூகலமாக மாறியது. இன்றைக்கு நாமும் வாழ்க்கையில் எல்லாமே இழந்து விட்டோம், இழப்பதற்கு இனி ஒன்றுமேயில்லை என்று கண்ணீரோடு, கவலையுடன் நிற்கும்போது இறைமகன் இயேசுவிடம் கையேந்தினால் நிச்சயம் நம் வாழ்வும் சந்தோஷமாக மாறும்.

    இயேசு சொல்கிறார், "கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்". (மத்தேயு 6:27, லூக்கா 12:25). ஆகாயத்துப் பறவைகளை கவனித்துப் பாருங்கள். அவை விதைக்கிறதுமில்லை, நடுகிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதுமில்லை. ஆனால் அவைகளையும் பரமபிதா எந்த குறைவுமின்றி நடத்துகிறார். காட்டு புஷ்பங்களை கவனித்துப் பாருங்கள். அவை நெய்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை. ஆனாலும் அவைகளின் இலைகள், மலர்கள் எவ்வளவு அழகாக மகிமையாக உள்ளது.

    இன்றைக்கு இருந்து நாளைக்கு இல்லாமல் போகும் பறவைகள், செடிகளுக்கு தேவன் இவ்வளவு சிறந்ததை தரும் போது அவருடைய சாயலாக உள்ள நமக்கு எல்லாமே நிறைவாக தருவார். ஆகவே நாம், நம்முடைய முயற்சியை மட்டும் சரியாக செய்து விட்டு எல்லா கவலைகளையும், வேதனைகளையும், துக்கங்களையும், கண்ணீரையும் இறைவன் மீது வைத்து விடுவோம். மரித்து நான்கு நாளான லாசருவின் சரீரத்தை உயிரோடு எழுப்பிய இயேசு, நிச்சயமாக நம்முடைய வாழ்விலும் உள்ள கண்ணீர், கவலை, துக்கத்தை நீக்கி, நம்மை சந்தோஷமாக மாற்றி ஆனந்த கிரீடத்தை தருவார்.

    பாவத்தில் விழுகையில் மனம் திரும்பி இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே இந்த நூல் சொல்லும் அடிப்படைச் செய்தி.
    சாமுவேல் முதல் நூலும், இரண்டாம் நூலும் இணைந்த ஒரே நூலாக இருந்தவை. எபிரேயத்திலிருந்து கிரேக்கத்துக்கு மொழிபெயர்த்த போது அதை வசதிக்காக இரண்டு பகுதிகளாகப் பிரித்தார்கள். சாமுவேல் இரண்டாம் நூல் தாவீது மன்னனைச் சுற்றியே நகர்கிறது.

    சாமுவேல் நூலை எழுதியவர் இறைவாக்கினர் சாமுவேல் என பாரம்பரியம் சொல்கிறது. அவருடன் நாத்தானும், காத்தும் இணைந்து இந்த நூலை உருவாக்கினார்கள் என்பது வரலாறு.

    ஆனால் முதல் பாகத்திலேயே சாமுவேல் இறந்து விடுவதால், இந்த பாகத்தை நாத்தான், காத் போன்றவர்கள் எழுதினார்கள், அல்லது அவர்களுடைய எழுத்தை பிற்காலத்தில் தொகுத்தார்கள் என இறையியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

    கிமு 971 -க்கும், 1011-க்கும் இடைப்பட்ட நாற்பது ஆண்டுகாலத்தை இந்த நூல் மையப்படுத்துகிறது. அது தான் தாவீது மன்னன் இஸ்ரயேல் மக்களை ஆட்சி செலுத்திய காலம்.

    சாமுவேல் முதலாம் நூல் இஸ்ரயேல் மக்களின் முதல் மன்னனான சவுலையும், அவருடைய ஆட்சியையும் பலவீனங்களையும் பேசியது. இறைவனை விட்டு விலகி நடந்த சவுல் மன்னனின் வாழ்க்கை அது.

    சாமுவேல் இரண்டாம் நூல், இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்த தாவீது மன்னனையும், அவரது ஆட்சியையும், அவருடைய பலம், பலவீனம் போன்றவற்றைப் பேசுகிறது. தன்னை எதிர்த்த சவுலின் மறைவிற்கும், தன்னை நேசித்த யோனத்தானின் மறைவுக்கும் தாவீது மன்னர் கசிந்துருகுகிறார். அது அவருடைய இளகிய மனதை எடுத்துக்காட்டுகிறது.

    தாவீது மன்னனின் வழிமரபிலிருந்து தான் மீட்பர் தோன்றுவார் எனும் இறைவாக்கு பின்னர் இயேசுவின் மூலம் நிறைவேறியது. ஆபிரகாமுக்கும், இயேசுவுக்கும் இடையேயான மையப்புள்ளியாய் தாவீது மன்னன் இருக்கிறார் என வைத்துக் கொள்ளலாம். நீதி, துணிச்சல், ஞானம், இறையச்சம், மனிதநேயம் போன்றவையெல்லாம் அவரிடம் காணப்பட்ட சில முக்கிய குணாதிசயங்கள்.

    இந்த நூலில் இருபத்து நான்கு அதிகாரங்களும், 695 வசனங்களும், 20,612 வார்த்தைகளும் உள்ளன. இது விவிலியத்தில் உள்ள பத்தாவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது. விவிலியத்தில் மொத்தம் பன்னிரண்டு வரலாற்று நூல்கள் உள்ளன அவற்றில் இது ஐந்தாவது நூல்.

    இருபத்து நான்கு அதிகாரங்கள் உடைய இந்த நூலின் முதல் பத்து அதிகாரங்கள் தாவீது மன்னனின் வெற்றிப் பயணத்தை விவரிக்கிறது. அவரது வெற்றிகளையும், அவரை மக்கள் போற்றுவதையும், அவரது நடனத்தையும் சுவை பட விவரிக்கிறது. தனது நண்பன் யோனத்தானின் உடல் ஊனமுற்ற மகனை தன்னோடு அரண்மனையில் வைத்து பராமரிக்கும் அவரது அன்பு அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது. தனது ஆட்சிக்குட்பட்ட எந்த இடத்திலும் சிலை வழிபாடு நடக்காமல் பார்த்துக் கொண்ட இஸ்ரயேலின் மன்னராக தாவீது விளங்கினார்.

    நூலின் இரண்டாவது பகுதியில் தாவீது மன்னனின் பலவீனம் பதிவு செய்யப்படுகிறது. உரியா என்பவருடைய மனைவியான பத்சேபா மீது பொருந்தாக் காதல் கொள்கிறார் மன்னன். அவளை அடைவதற்காக அவரது கணவனை சூழ்ச்சியால் கொல்கிறார். இதனால் கடவுளின் கோபம் அவர் மேல் விழுகிறது. பத்சேபாவுக்குப் பிறக்கும் அவரது குழந்தை இறந்து விடுகிறது. அது தாவீது மன்னனை கலங்கடிக்கிறது.

    தனது தவறை நாத்தான் இறைவாக்கினர் மூலம் புரிந்து கொள்ளும் மன்னர் உடனடியாக கதறி, இறை வனிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்பதில் தாவீது மன்னன் தனித்துவம் பெறுகிறார். தவறிழைக்கும் போதெல்லாம் இறைவனே கதியென திரும்பி வருவதில் அவரது இறை நம்பிக்கை வெளிப்படுகிறது.

    அதனால் தான் இறைவன் தாவீதையும், அவரது தலை முறைகளையும் தனது வாக்குறுதியின் படி காக்கிறார்.

    அவரது வாழ்க்கையில் சில நிகழ்வுகள் கசப்பானவையாகவும், நெகிழ்ச்சியானவையாகவும் நடந்து விடுகின்றன. அம்னோன் என்னும் அவரது ஒரு மகன், தனது மாற்றாந்தாய்க்கும் பிறந்த சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார். அவரை, இன்னொரு மகன் அப்சலோம் கொன்று விடுகிறார். பின்னர் அவர் தாவீது மன்னனுக்கு எதிராகவே திரும்பி விடுகிறார்.

    அவரது மகன் அப்சலோமுக்கும், அவருக்கும் இடைேயயான அந்த மனக்கசப்பும். தந்தையைக் கொல்லத் தேடும் மகனின் வெறித்தனமும், மகனை வெறுக்க முடியாத தந்தை தாவீதின் தவிப்பும் இந்த நூலின் ஈரமாக எழுதப்பட்டிருக்கின்றன.

    தாவீது மன்னன் எழுதிய இரண்டு பாடல்களும் இந்த நூலில் சிறப்பிடம் பெறுகின்றன. ஒரு ஏழை ஆடு மேய்ப் பனான தாவீது, இறைவனால் தெரிந்தெடுக்கப்பட்டு ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை நாற்பது ஆண்டுகள் சிறப்புற வழிநடத்தியது வியப்பின் வரலாறு.

    பாவம் செய்வது இயல்பு. எவ்வளவு பெரிய இறை மனிதராக இருந்தாலும் அவர் பாவத்தில் விழும் வாய்ப்பு நிச்சயம் உண்டு. அப்படி பாவத்தில் விழுகையில் மனம் திரும்பி இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே இந்த நூல் சொல்லும் அடிப்படைச் செய்தி. அற்புதமான கதைகளுக்காகவும், ஆழமான ஆன்மிக புரிதலுக்காகவும் இந்த நூலை நிச்சயம் படிக்கலாம்.

    சேவியர்
    பிராகா அல்லது பிரேகு நகர் குழந்தை இயேசு (Infant Jesus of Prague) என்ற மிகவும் பிரபலமான சொரூபம், செக் குடியரசு நாட்டில் உள்ள பிராகா நகரின் மலாஸ்ட்ரானா பகுதியில் உள்ள வெற்றியின் அன்னை ஆலயத்தில் அமைந்துள்ளது.
    பிராகா அல்லது பிரேகு நகர் குழந்தை இயேசு (Infant Jesus of Prague) என்ற மிகவும் பிரபலமான சொரூபம், செக் குடியரசு நாட்டில் உள்ள பிராகா நகரின் மலாஸ்ட்ரானா பகுதியில் உள்ள வெற்றியின் அன்னை ஆலயத்தில் அமைந்துள்ளது.

    வரலாறு

    1628ல் இளவரசி பொலிக்சேனா (1566-1642) பிராகா நகர் கார்மேல் துறவிகளுக்கு 19 அங்குல உயரமுடைய குழந்தை இயேசுவின் மெழுகு சொரூபத்தை வழங்கியதிலிருந்து இந்த வரலாறு தொடங்குகிறது. இந்தச் சொரூபம், அவிலா புனித தெரேசாவால் எசுப்பானிய அரச குடும்பத்திற்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.[1] அந்தக் குடும்பத்தின் விலையேறப் பெற்ற சொத்தாக மதிக்கப்பட்ட இந்தச் சொரூபம், இளவரசி பொலிக்சேனாவின் திருமணப் பரிசாக அவரது தாய் மரிய மான்ரிக்கால் 1603ல் வழங்கப்பட்டது.

    குழந்தை இயேசு பக்தியால் பல்வேறு அற்புதங்களைப் பெற்றுக்கொண்ட இளவரசி பொலிக்சேனா, தன்னிடம் இருந்த குழந்தை இயேசு சொரூபத்துக்கு அரச உடைகளும், மணிமகுடமும் அணிவித்து அழகு பார்த்தார். அரசர் 2ம் பெர்டினான்ட், தனது தலைநகரை பிராகாவிலிருந்து வியன்னாவுக்கு மாற்றியபோது, பொலிக்சேனா இந்தக் குழந்தை இயேசு சொரூபத்தை கார்மேல் சபைத் துறவிகளிடம் ஒப்படைத்தார். அவர்கள் குழந்தை இயேசு பக்தியை மக்களிடையே பரப்பினர். போர் உள்ளிட்ட சில காரணங்களால், துறவிகள் வாழ்ந்த கார்மேல் மடம் சிறிது காலம் மூடப்பட்டது. அக்காலத்தில் இந்தச் சொரூபம் மறைவான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டது.

    1637ஆம் ஆண்டு, கரங்கள் சேதமடைந்த குழந்தை இயேசுவின் இந்தச் சொரூபத்தை அருட்தந்தை சிரிலஸ் மீண்டும் கண்டெடுத்தார். அவர் குழந்தை இயேசு முன்பாகச் செபித்துக் கொண்டிருந்த வேளையில், "எனக்குக் கரங்களைக் கொடு; நீ என்னை மகிமைப்படுத்தினால், நான் உனக்கு அமைதியும் உயர்வும் தருவேன்" என்ற குரலைக் கேட்டார். அதன் பிறகு குழந்தை இயேசுவின் கரங்கள் சரிசெய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அந்நகரில் பரவிய கொள்ளை நோய் நீங்கியது. குழந்தை இயேசுவை நாடிச் சென்ற அனைவரும் அற்புதங்களைப் பெற்று மகிழ்ந்தனர். அதனால், குழந்தை இயேசுவின் பக்தி உலமெங்கும் விரிந்து பரவியது.

    இயேசு கிறிஸ்துவின் குழந்தைப் பருவத்தைத் தியானிக்கும் பக்திமுயற்சியாக இது அமைந்துள்ளது.

    இன்றளவும், பிராகா நகர் குழந்தை இயேசுவை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் திருப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பிராகா குழந்தை இயேசு ஆலய ஆண்டுத் திருவிழாவின் நிறைவில், குழந்தை இயேசுவின் திருப்பவனியும், குழந்தை இயேசுவுக்கு மகுடம் அணிவித்தலும் இக்காலம் வரை மரபாகத் தொடர்கின்றன.

    முற்காலத்தில், அயர்லாந்து நாட்டுத் திருமண நிகழ்ச்சிகளின்போது காலநிலை சீராக இருக்க வேண்டும் என்பதற்காக, மணமக்கள் தங்கள் திருமணத்திற்கு முந்திய நாள் இரவில் தங்கள் இல்லத்தின் முன்பாகப் பிராகா நகர் குழந்தை இயேசுவின் சொரூபத்தை வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.[2]

    நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பிரேகு நகர் குழந்தை இயேசுவின் இரண்டு மரச் சொரூபங்கள் செய்யப்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூர் குழந்தை இயேசு ஆலயத்திலும், பெரம்பூர் புனித தெரேசா ஆலயத்திலும் இந்தச் சொரூபங்கள் உள்ளன. 
    தஞ்சை பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் உள்ள குழந்தை ஏசு ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று நடைபெற்றது.
    தஞ்சை பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் குழந்தை ஏசு ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்துக்கு தஞ்சை மாவட்ட தலைமை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமை தாங்கினார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் குழந்தை ஏசுவை வைத்து தேர்பவனி நடைபெற்றது. பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜுடு பால்ராஜ் புனிதம் செய்து தேர்பவனியை தொடங்கி வைத்தார். முன்னதாக கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    விழாவில் குடந்தை ஆயர் அந்தோணிசாமி, ஆலய அதிபர் வென்சஸ்லாஸ் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.
    ×