search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிவரலாறு"

    "அரங்கேற்றம்'' படத்துக்குப்பிறகு பாலசந்தரின் மகத்தான படமாக அமைந்தது, "அவள் ஒரு தொடர்கதை.'' நல்ல படம் என்ற பெயர் எடுத்ததுடன், வசூலிலும் சாதனை புரிந்தது.
    "அரங்கேற்றம்'' படத்துக்குப்பிறகு பாலசந்தரின் மகத்தான படமாக அமைந்தது, "அவள் ஒரு தொடர்கதை.'' நல்ல படம் என்ற பெயர் எடுத்ததுடன், வசூலிலும் சாதனை புரிந்தது.

    "அரங்கேற்றம்'' படத்தைத் தொடர்ந்து, பாலசந்தர் திரைக்கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை ஏற்ற படம் "சொல்லத்தான் நினைக்கிறேன்.''

    இது, ஆனந்த விகடனில் "மணியன்'' எழுதிய கதை. இதை மணியனும், வித்வான் வே.லட்சுமணனும் சேர்ந்து படமாக எடுத்தனர்.

    இந்தப் படம் தயாரானது பற்றி மணியன் எழுதியிருப்பதாவது:-

    "ஆனந்த விகடனில் நான் "இலவுகாத்த கிளி'' என்ற குறுநாவலை எழுதியிருந்தேன். அப்புறம் நானே அதை நாடக வடிவில் தயாரித்தேன். சினிமாப்படங்கள் நூறாவது நாள் கொண்டாடுவது உண்டு. நூறாவது நாள் கொண்டாடிய நாடகம் "சொல்லத்தான் நினைக்கிறேன்.''

    அப்படிப்பட்ட ஒரு வெற்றி நாடகத்தை சினிமாவாக எடுக்க வேண்டும் என்று நானும், வித்வான் வே.லட்சுமணனும் ஆசைப்பட்டதில் ஆச்சரியமில்லை.

    நாங்கள் இருவருமாக பாலசந்தரிடம் போனோம். "நாங்கள் இதயம் புரொடக்ஷன்ஸ் சார்பில், `சொல்லத்தான் நினைக்கிறேன்' நாடகத்தைப் படமாகத் தயாரிக்க விரும்புகிறோம். நீங்கள்தான் டைரக்ட் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

    சிறிது நேரம் யோசித்தார் அவர் பிறகு, "மிஸ்டர் மணியன்! நல்ல யோசனைதான். ஆனால் இதில் நான் சம்பந்தப்பட வேண்டுமா என்று யோசித்துப் பாருங்கள். இது ஒரு பாப்புலர் நாடகம். ஏற்கனவே நீங்கள் டைரக்ட் செய்து விட்டீர்கள். நீங்கள் இருவருமே எழுத்தாளர்கள். நானும் எழுத்தாளன். கருத்து வேறுபாடுகள் வருமே! என்ன செய்வீர்கள்?'' என்று கேட்டார்.

    நான் சிறிதும் தயங்கவில்லை. "இது உங்கள் குழந்தை. உங்கள் விருப்பப்படிதான் வளர்த்து உருவாக்கவேண்டும். நாங்கள் தலையிடமாட்டோம். கிரியேடிவ் ஆர்டிஸ்டுகளின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிப்பவர்கள் நாங்கள்'' என்று பதில் சொன்னேன்.

    `சொல்லத்தான் நினைக்கிறேன்' படம் உருவாகத் தொடங்கியது. படத்தில் வரும் காட்சிகள் மறக்க முடியாதவை. படத்தைப் பார்த்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களிலும் அவை அழியாமல் பதிந்து போயிருப்பது எனக்குத் தெரியும்.''

    இவ்வாறு மணியன் குறிப்பிட்டுள்ளார்.

    "சொல்லத்தான் நினைக்கிறேன்'' 1973 டிசம்பர் 7-ந்தேதி வெளிவந்த படமாகும். இந்தப் படத்தில் சிவகுமார் கதாநாயகன். கமலஹாசன் வில்லன். மற்றும் லட்சுமி, ஜெயசித்ரா, ஜெயசுதா ஆகியோர் நடித்தனர்.

    பின்னர் ஜெமினிகணேசன் சொந்தமாகத் தயாரித்த "நான் அவனில்லை'' என்ற படத்தை பாலசந்தர் இயக்கினார்.

    இதில் ஜெமினிகணேசன், ஒவ்வொரு ஊருக்கு செல்லும்போதும் ஒவ்வொரு பெயர் வைத்துக்கொண்டு, பல பெண்களைத் திருமணம் செய்து கொள்வார். மாறுபட்ட மேக்கப்களில் அற்புதமாக நடித்தார். ஜெமினிகணேசனின் நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்திய படம் இது.

    இதன்பின் அரங்கண்ணல் தயாரிக்க பாலசந்தர் இயக்கிய படம் "அவள் ஒரு தொடர்கதை.''

    வானொலியில் பணியாற்றியவரும், எழுத்தாளர் "சுகி'' சுப்பிரமணியத்தின் மகனுமான எம்.எஸ்.பெருமாள் "வாழ்க்கை அழைக்கிறது'' என்ற பெயரில் எழுதிய குறுநாவல்தான் "அவள் ஒரு தொடர்கதை'' என்ற பெயரில் படமாகியது. திரைக்கதை, வசனம் எழுதினார், பாலசந்தர்.

    வேலைக்குச் செல்லும் பெண்களின் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதை. தன் குடும்பத்துக்காக, திருமணம் செய்து கொள்ளாமல் வேலைக்குச் செல்லும் பெண்ணாக சுஜாதா பிரமாதமாக நடித்தார். மற்றும் விஜயகுமார், ஜெய்கணேஷ், கமலஹாசன், ஜெய்சித்ரா, `படாபட்' ஜெயலட்சுமி ஆகியோர் நடித்தனர்.

    இளம் வயது கமலஹாசன், உள்ளத்தைத் தொடும் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். "கடவுள் அமைத்து வைத்த மேடை...'' என்ற பாடல் காட்சியை பிரமாதமாக படமாக்கியிருந்தார், பாலசந்தர்.

    13-11-1974-ல் வெளிவந்த "அவள் ஒரு தொடர்கதை'' மகத்தான வெற்றிப்படமாக அமைந்தது. அது மட்டுமல்ல, "மக்கள் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் படம் அமையவேண்டும்'' என்ற லட்சியத்தில், பாலசந்தர் முழு வெற்றி பெற்றார்.

    "அரங்கேற்றம்'' தமிழ்ப்பட உலகில் எப்படி ஒரு மைல்கல்லோ, அது போல மற்றொரு மைல்கல் "அவள் ஒரு தொடர்கதை.''

    இது இந்தி, தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் படமாகியது.

    இந்தக் காலக்கட்டத்தில் பாலசந்தர் ரொம்பவும் "பிசி''யாக இருந்தார். இரவு -பகல் என்று பாராமல் படப்பிடிப்பில் ஈடுபட்டார்.

    இரவில் எவ்வளவு தாமதமாக படுக்கச் சென்றாலும், காலை 6 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்து விடுவார். சிற்றுண்டிக்குப்பின் காலை 9 மணிக்கு படப்பிடிப்புக்கு கிளம்பி விடுவார்.

    பாலசந்தர், ஆரம்ப காலத்தில் அக்கவுன்டென்ட் ஜெனரல் ஆபீசில் வேலை பார்த்துக்கொண்டே, லீவு போட்டுவிட்டு சினிமா படங்களில் பணியாற்றி வந்தார். ஒரு கட்டத்தில், "சினிமாவா? வேலையா?'' என்று முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்தது.

    பட அதிபர் ஏவி.மெய்யப்ப செட்டியாரை சந்தித்து இதுபற்றி ஆலோசனை கேட்டார். "வேலையை விட்டு விட்டு, சினிமாவுக்கு வந்துவிடலாமா? அதில் நான் வெற்றி பெறமுடியுமா? உங்கள் கருத்து என்ன?'' என்று கேட்டார்.

    அப்போது ஏவி.எம்., "உங்கள் திறமையில் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? உங்கள் திறமையில் உங்களுக்கு சந்தேகம் இருக்குமானால், நான் இப்பொழுதே வருடத்திற்கு 3 படங்கள் நீங்கள் தயாரிப்பதற்கு 3 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன்'' என்று கூறினார்.

    இதனால் பாலசந்தருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. வேலையை ராஜினாமா செய்துவிட்டு படத்தொழிலில் தீவிரமாக இறங்கினார்.

    டைரக்டர் கே.பாலசந்தர் பல சாதனைகளைப் படைத்தவர். அவற்றில் முக்கிய சாதனை, ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியதாகும். அவரை சூப்பர் ஸ்டாராக உருவாக்கியதில் பாலசந்தருக்கு பெரும் பங்கு உண்டு.
    "அபூர்வ ராகங்கள்'' கதை புதுமையானது. விக்கிரமாதித்தன் கதையில், விக்கிரமாதித்தனிடம் வேதாளம் பல விடுகதைகளை போடும்.

    அதில் ஒரு விடுகதை:-

    "தந்தையும், மகனுமான இருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, மணலில் இரண்டு பெண்கள் நடந்து சென்ற கால் தடங்களைப் பார்க்கிறார்கள். அந்த கால் தடங்களை பின்பற்றிச் சென்று அந்த இருவரையும் கண்டுபிடிப்பது என்றும், பெரிய கால் தடத்துக்கு உரியவளை தந்தையும், சிறிய கால் தடத்துக்கு உரியவளை மகனும் திருமணம் செய்து கொள்வது என்றும் முடிவு செய்கிறார்கள்.

    அவ்வாறே, கால் தடங்களை பின்பற்றிச் செல்லும் தந்தையும், மகனும் அந்த 2 பெண்களையும் கண்டுபிடிக்கிறார்கள். இதில் விசித்திரம் என்னவென்றால், பெரிய பாதங்களுக்கு உரியவள் மகள். சிறிய பாதங்களுக்கு உரியவள் தாய்!

    ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்த இரு பெண்களையும் தந்தையும், மகனும் மணந்து கொண்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உறவு முறை என்ன?'' - இதுதான் வேதாளத்தின் விடுகதை.

    அதற்கு விடை கூறமுடியாமல் விழிப்பான், விக்கிரமாதித்தன்.

    வேதாளத்தின் விடுகதையை அடிப்படையாக வைத்து, அபூர்வராகங்கள் கதையைப் பின்னினார் பாலசந்தர்.

    இதில் ஸ்ரீவித்யா தாய்; ஜெயசுதா மகள்.

    மேஜர் சுந்தரராஜன் தந்தை; கமலஹாசன் மகன்.

    ஸ்ரீவித்யாவை கமலஹாசன் காதலிப்பார்.

    மேஜர் சுந்தரராஜன், ஜெயசுதாவை மணக்க விரும்புவார்!

    கத்திமேல் நடப்பது போன்ற கதை.

    கடைசியில், ஸ்ரீவித்யாவின் காணாமல் போன கணவன் திரும்பி வருவார். அவர்தான் ரஜினிகாந்த்!

    கொஞ்ச நேரமே வந்தாலும், கதையை முடித்து வைக்கும் கதாபாத்திரம்!

    தாடி -மீசையுடன், ஸ்ரீவித்யாவின் பங்களா கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைவார், ரஜினிகாந்த்.

    "யார் இந்தப் புதுமுகம்?'' என்று படம் பார்க்கிறவர்கள் கேட்கும்படியாக அமைந்தது, அக்காட்சி.

    கர்நாடகத்தை சேர்ந்தவர். கறுப்பு நிறம். தமிழை லாவகமாகப் பேசக்கூடிய ஆற்றல் அவ்வளவாக இல்லை. அப்படியிருந்தும், ரஜினிகாந்த் ஒரு வைரம் என்பதை கண்டுபிடித்து, அபூர்வராகங்களில் அறிமுகப்படுத்தினார், பாலசந்தர்.

    "ரஜினிகாந்த் கண்களில் ஒருவித பிரகாசத்தைக் கண்டேன். எதிர்காலத்தில் பெரிய நட்சத்திரமாக வருவார் என்று அப்போதே கணித்தேன்'' என்று கூறுகிறார், பாலசந்தர்.

    ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியதோடு பாலசந்தர் நின்றுவிடவில்லை. அவரை பட்டை தீட்டும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

    "மூன்று முடிச்சு'' படத்தில், முக்கிய வேடம் கொடுத்தார். இதில் கமலஹாசன் நடித்திருந்தாலும், அவர் ஏற்றிருந்தது "கவுரவ வேடம்'' போன்றதுதான்.

    ஸ்டைல் மன்னன் என்று பிற்காலத்தில் புகழ் பெற்ற ரஜினிகாந்த், சிகரெட்டை தூக்கிப்போடும் ஸ்டைலை முதன் முதலாகச் செய்து காட்டியது, இந்தப் படத்தில்தான்.

    இந்தப் படத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. குழந்தை நட்சத்திரமாகப் புகழ் பெற்றிருந்த ஸ்ரீதேவி, கதாநாயகியாக நடித்த முதல் படம் இதுதான்.

    மூன்று முடிச்சு பெரிய வெற்றிப்படம் அல்லவென்றாலும், ரஜினிகாந்துக்கு கணிசமான ரசிகர்களைத் தேடிக்கொடுத்தது.

    பாலசந்தர் படத்தில் அறிமுகமானது பற்றி ரஜினிகாந்த் கூறியதாவது:-

    "திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்ற பிறகு, மீண்டும் பெங்களூர் சென்று கண்டக்டர் வேலை பார்த்துக்கொண்டே பொழுது போக்காகக் கன்னடப் படங்களில் நடிக்கலாம் என்று எண்ணியிருந்தேன்.

    தமிழ்ப்படத்தில் நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. ஆனால் நான் எதிர்பாராதவிதமாக பாலசந்தர் சாரை சந்தித்து, அவர் மூலமாக "அபூர்வ ராகங்கள்'' படத்தில் அறிமுகமானேன்.

    அந்த `அபூர்வ ராகங்கள்' படப்பிடிப்பின்போதுதான், ஒரு நாள் என்னையே எனக்கு உணர்த்தினார், அவர். என்னிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன, அவற்றை எப்படி எல்லாம் வெளிப்படுத்த வேண்டும் என்பனவற்றை எடுத்துக் கூறினார்.

    அன்று அவர் வழங்கிய ஆலோசனைகள் அனைத்தும் எனக்குப் பெரிதும் உதவின. இன்றும் உதவி வருகின்றன.''

    இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
    புரட்சிகரமான கதையைக் கொண்ட "அரங்கேற்றம்'' படத்தின் மூலம், பாலசந்தர் பெரும் பரபரப்பை உண்டாக்கினார்.
    1972-ல் "வெள்ளி விழா'' படம் வாகினி ஸ்டூடியோவில் படமாகிக் கொண்டிருந்த சமயத்தில், பாலசந்தருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு காரில் புறப்பட்டார்.

    அதன்பின் நடந்தது பற்றி பாலசந்தர் கூறுகிறார்:-

    "ஜெமினி அருகே கார் நின்றது. தனிமையில் இருந்த நான், என் கடந்த காலத்தைப் பற்றி நினைத்தேன். அப்போது, "கண்ணா நலமா'' பேனர் கண்ணில் பட்டது. `இத்தனை ஆண்டுகள் கலைத்துறையில் இருந்து என்ன சாதித்து விட்டோம்' என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

    இதற்குக் கிடைத்த பதில் `ஒன்றுமில்லை' என்பதுதான். `இதுவரை ஒன்றும் சாதிக்கவில்லை. ஏதும் சாதிக்காமலேயே போய்விடுவோமா?' என்று எண்ணியபோது, கண்களில் நீர்த்துளிகள் மல்கின.

    கார் நகரத் தொடங்கியது. என் சிந்தனைகளும் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன. அப்போது, கதீட்ரல் ரோட்டில் என் கார் ஊர்ந்து கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் இருந்த "புன்னகை'' பேனர்களைப் பார்த்தேன். சிறிது ஆறுதல். `ஏதும் செய்யாமல் இல்லை. ஏதோ நம்மால் முடிந்ததைச் செய்துதான் இருக்கிறோம்' என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டேன். என் மனச்சுமை சிறிது இறங்கியது போல் இருந்தது.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய எனக்கு புதிய வேகமும், தெம்பும், தன்னம்பிக்கையும் ஏற்பட்டன. `எதையாவது புதுமையாகச் செய்யவேண்டும். அதன் மூலம் சினிமா துறையில் நான் நின்றாலும் சரி, வீழ்ந்தாலும் சரி' என்று முடிவு எடுத்தேன்.

    "வெள்ளி விழா'' படத்தை முடித்து திரையிட்டவுடன், அரங்கேற்றம் படத்தை எடுத்தேன்.''

    இவ்வாறு பாலசந்தர் கூறினார்.

    பாலசந்தரின் திரை உலக வாழ்க்கையில், "தெய்வத்தாய்'' முதல் "வெள்ளி விழா'' வரை முதல் பாகம். இரண்டாம் பாகம் "அரங்கேற்ற''த்தில் தொடங்குகிறது.

    இதை இரண்டாம் பாகம் என்று குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது. "ஒரு நல்ல படத்தைத் தயாரிக்க வேண்டும்'' என்பதே, இதற்குமுன் பாலசந்தரின் நோக்கமாக இருந்தது. ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றபோது, தான் அதுவரை நடந்து வந்த பாதையையும், தன் படைப்புகள் பற்றியும் சிந்தித்துப் பார்க்க அவகாசம் கிடைத்தது.

    "இனி நல்ல படங்களை எடுத்தால் மட்டும் போதாது. சமுதாயத்துக்கு உதவக்கூடிய கருத்துக்களை எடுத்துக் கூறும் படங்களை தயாரிக்க வேண்டும். பிறர் தொடத்தயங்கும் கதைகளை துணிந்து படமாக்க வேண்டும்'' என்று முடிவு எடுத்தார். அதன் தொடக்கமே "அரங்கேற்றம்.''

    வறுமையினாலும், சந்தர்ப்ப சூழ்நிலையினாலும் வழி தவறிச் செல்லும் ஒரு பெண்ணைச் சுற்றிச் சுழலும் கதை. வழுக்கி விழுந்த பெண்ணாக பிரமிளா நடித்தார். அவருக்கு வாழ்வு கொடுக்க முன்வரும் இளைஞனாக சிவகுமார் நடித்தார்.

    "களத்தூர் கண்ணம்மா''வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமலஹாசன், வாலிபனாக இப்படத்தில் முதன் முதலாகத் தோன்றினார். "கலாகேந்திரா'' தயாரிப்பான `அரங்கேற்றம்' 1973-ல் வெளிவந்தது.

    இந்தப்படம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. கதையை சில பத்திரிகைகள் பாராட்டின; சில பத்திரிகைகள் தாக்கின. படம் பார்த்த பலர் படத்தை ஓகோ என்று புகழ்ந்தனர்; சிலர் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.

    கதாநாயகி ஒரு பிராமணப் பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருந்ததால், பிராமணர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

    இதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "சூழ்நிலை காரணமான தவறான பாதைக்குப் போனவர்கள் எந்த ஜாதியிலும் இல்லாமல் இல்லை.

    இந்தப் படத்தைப் பொறுத்தவரை, வறுமையின் எல்லையை படம் பிடித்துக்காட்ட விரும்பினேன். அதற்கு வைதீக பிராமணக் குடும்பம் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதை கருவாகக் கொண்டு, கற்பனையில் கதையை உருவாக்கினேன்.

    திரைப்படத்துறை ஒரு தொழில்தான். மறுக்கவில்லை. ஆனால் அது கலப்படம் இல்லாமல் இருக்கவேண்டும்.

    ஏதேனும் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தின் அடிப்படையில் திரைப்படங்கள் அமையும்போதுதான், திரைப்படத் தொழில் சமுதாயத்திற்கு தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடித்ததாக கருதமுடியும்.

    ஏற்கனவே சில திரைப்படங்களில் ஆங்காங்கே `குடும்பக் கட்டுப்பாடு' மென்மையாக வலியுறுத்தப்பட்டு இருந்தது. என்றாலும், முழுத் திரைக்கதை அமைப்பிலும் குடும்பக் கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டு இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால், `இல்லை' என்ற பதில்தான் என் நினைவுக்கு எட்டியவரை தோன்றியது.

    எனவே, அரங்கேற்றத்தின் மூலக் கருத்தாக அதை வைத்தேன்.

    எந்த ஒரு விஷயத்தை மேலெழுந்த வாரியாகவும் சொல்ல முடியும். ஆனால் அரங்கேற்றம் கதையைப் பொறுத்தவரை மேலெழுந்த வாரியாகச் சொல்ல நான் விரும்பவில்லை.

    கற்பனையை விட உண்மை சில நேரங்களில் விசித்திரமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஏன், பயங்கரமான உண்மைகளும் உண்டு. சில உண்மைகளைச் சொல்வதற்கு நாம் அஞ்சுகிறோம். ஆனால் அரங்கேற்றத்தில் அதைச் சொல்ல நான் அஞ்சவில்லை.''

    இவ்வாறு பாலசந்தர் கூறியுள்ளார்.

    "அரங்கேற்றம்'' படத்தின் கதை பற்றி வாதப் பிரதிவாதங்களும், பட்டிமன்றங்களும் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், படம் மக்கள் ஆதரவுடன் வெற்றிநடைபோட்டது.

    தமிழ்த்திரை உலக வரலாற்றில் "அரங்கேற்றம்'' ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல. #tamilnews
    பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த "இருகோடுகள்'' சிறந்த குடும்பப்படம் என்று பெயர் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது.
    பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த "இருகோடுகள்'' சிறந்த குடும்பப்படம் என்று பெயர் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது.

    இதற்கிடையே, தமிழில் வெற்றி பெற்ற பாலசந்தரின் படங்கள் தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான மொழிகளில் எடுக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றை பாலசந்தரே இயக்கினார். இதனால் தென்னாடெங்கும் பாலசந்தரின் புகழ் பரவியது.

    ஜோசப் ஆனந்தன் எழுதிய "இருகோடுகள்'' (1969) ஏற்கனவே நாடகமாக மேடை ஏறி வெற்றி பெற்றிருந்தது. அதை திரைப்படமாக்க "கலாகேந்திரா'' முடிவு செய்தது. திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை பாலசந்தர் ஏற்றார்.

    இதன் கதைக்கரு வித்தியாசமானது. விவாகரத்து செய்து கொள்ளும் கணவனும், மனைவியும் எதிர்பாராமல் மீண்டும் சந்திக்கிறார்கள். அப்போது மனைவி கலெக்டர். கணவன், அவளிடம் வேலை பார்க்கும் குமாஸ்தா!

    கலெக்டராக சவுகார் ஜானகியும், கணவனாக ஜெமினிகணேசனும், அவருடைய இரண்டாவது மனைவியாக ஜெயந்தியும் நடித்தனர். சுவையான முக்கோண காதல் கதையை அருமையாக எடுத்திருந்தார், பாலசந்தர். வி.குமார் இசை அமைப்பில் "புன்னகை மன்னன் பூழிவிக்கண்ணன்'', "நான் ஒரு குமாஸ்தா'' பாடல்கள் ஹிட்டாயின.

    பாலசந்தரின் மிகச்சிறந்த 10 படங்களை தேர்வு செய்தால், அதில் "இருகோடுகள்'' நிச்சயம் இடம் பெறும்.

    "உழைத்து பாஸ் செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் எடுத்த படம்தான் "இருகோடுகள்.'' மக்களின் ஆதரவை மிகப்பெரிய அளவில் பெற்றதுகூட உண்மைதான். மாநில மொழிப்படங்களில் சிறந்த படம் என்று, ஜனாதிபதியின் பரிசை பெற்றதும் என்னவோ உண்மைதான்.

    ஆனாலும் ஒரு இயக்குனருக்கு இதுவெறும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுதானே! பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவனுக்கு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கிடைக்கும் வெற்றி மிகப்பெரிதாகத் தோன்றலாம். ஆனால் ஆற அமர ஆராய்ந்து பார்த்தால், படிப்பே இத்துடன் முடிந்து விடுவதில்லையே. குறுக்கு வழிகளைத் தேடிப்போகாமல் நேர்கோட்டில் நடைபோட்ட எனக்கு, "இருகோடுகள்'' தந்தது இணையற்ற வெற்றிதான். இருப்பினும், இன்னும் எத்தனையோ இருக்கிறது. கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு ஆயிற்றே! எனவே சினிமாவில் என் படிப்பு தொடர்ந்தது.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.


    1970-ல் வெளிவந்த "பத்தாம்பசலி'' ஒரு தோல்விப்படமாக அமைந்தது.

    அதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "இருகோடுகளை அடுத்து வெளிவந்த பத்தாம் பசலி பெரிய சறுக்கல்.

    ஆனாலும், இப்படம் கற்றுத்தந்த சிறந்த பாடம் ஒன்றும் இருக்கிறது. இதே பத்தாம் பசலி கதையை, இதே திரைக்கதை அமைப்புகளுடன் நான் ஏற்கனவே தெலுங்கில் இயக்கி வெளிவந்தபோது, அந்தப்படம் பெரிய வெற்றி பெற்றது. அதே திரைக்கதை தமிழில் மட்டும் தோல்வியைத் தழுவுவானேன். காரணம் இருக்கத்தான் செய்தது.

    தெலுங்குப்படத்தில் கதாநாயகன் சலம். தமிழ்ப்படத்தில் நாகேஷ். சலம் இத்தகைய வேடத்தில் நடிப்பது இதுவே முதல் தடவை. எனவே புதுமையாக இருந்தது. நாகேஷ் ஏற்கனவே பல படங்களில் பிரமிக்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கதாநாயகனாக நடிப்பதும் இது முதல் தடவை அல்ல.

    கதை அமைப்பின்படி, தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த நாகேசுக்கு இதில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. அத்துடன் ஒரு முட்டாள் கதாபாத்திரத்தில் நாகேசை மக்கள் ஏற்கவில்லை.

    பாத்திரத்திற்கு ஏற்ப நடிகர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதை, இப்படத்தின் மூலம் நான் கற்றுக்கொண்டேன்.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    இதே ஆண்டு வெளிவந்த "நவக்கிரகம்'' மிகச்சாதாரணமாக அமைந்தது.

    ஒரு இந்திப்படத்தை தழுவி இரு வேடங்களில் சவுகார் ஜானகி நடித்த "காவியத் தலைவி'', சவுகார் ஜானகியின் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியதே தவிர, பாலசந்தரின் திறமையை எடுத்துக் காட்டும் படமாக அமையவில்லை.

    சிவாஜிகணேசன் பெரும் புகழ் பெற்ற நடிகராக வலம் வந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது.

    `சிவாஜியும், பாலசந்தரும் இணைந்து பணியாற்றினால், அப்படம் எவ்வளவு பிரமாதமாக இருக்கும்'' என்று ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர்.

    இவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதத்தில், "எதிரொலி'' என்ற படத்தை ஜி.என்.வேலுமணி தயாரித்தார். இதில், சிவாஜிகணேசனும், கே.ஆர்.விஜயாவும் நடித்தனர்.

    கதை, வசனம் எழுதி, டைரக்ட் செய்தார், பாலசந்தர்.

    1970 ஜுன் 27-ந்தேதி வெளிவந்த "எதிரொலி'' தோல்வியை சந்தித்தது. அதற்குக் காரணம் அது சிவாஜி படமாகவும் இல்லை; பாலசந்தர் படமாகவும் இல்லை.

    இதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் முழுத்திறமையையும் பயன்படுத்திக் கொள்ள முடியாத ஒரு கதையில், அவரை கதாநாயகனாக நடிக்க வைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை "எதிரொலி'' எனக்கு எடுத்துக் காட்டியது.

    ரசிகர்களிடம் மிகுந்த மதிப்பும், செல்வாக்கும் பெற்ற நடிகர்களை, குற்றம் செய்யும் கதாபாத்திரத்தில் காட்டுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும், எதிரொலி எனக்கு சொல்லிக் கொடுத்தது.

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    இதன்பின், நான்கு சுவர்கள், நூற்றுக்கு நூறு, புன்னகை, வெள்ளி விழா, கண்ணா நலமா முதலான படங்களை பாலசந்தர் எடுத்தார்.

    இவற்றில் "புன்னகை''யை தனது லட்சியப்படமாக பாலசந்தர் கருதினார். அமுதம் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப்படத்தில் ஜெமினிகணேசனும், ஜெயந்தியும் நடித்தனர். கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை பாலசந்தர் கவனித்தார்.

    1971 நவம்பரில் வெளிவந்த இப்படம், நன்றாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

    இது பாலசந்தருக்கு பெரும் வருத்தத்தை அளித்தது. "புன்னகை படம், என் முகத்தில் புன்னகையைப் பறித்ததுடன், என்னை மிகப்பெரிய சோதனையில் ஆழ்த்தியது. "முதலில் ரசிகப் பெருமக்களைப் புரிந்து கொள்'' என்பதே, புன்னகை மூலம் நான் கற்றுக்கொண்ட பாடம்'' என்றார், பாலசந்தர்.

    நாடக உலகில் இருந்த கே.பாலசந்தர், திரை உலகில் நுழைவதற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம். அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக, "தெய்வத்தாய்'' படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதினார், பாலசந்தர்.
    நாடக உலகில் இருந்த கே.பாலசந்தர், திரை உலகில் நுழைவதற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம். அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக, "தெய்வத்தாய்'' படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதினார், பாலசந்தர்.

    பாலசந்தர் நடத்திய வெற்றி நாடகங்களில் ஒன்று "மெழுகுவர்த்தி.'' ஒரு முறை அந்த நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார்.

    நாடகம் எம்.ஜி.ஆரை வெகுவாகக் கவர்ந்தது.

    அவர் பேசும்போது, "பாலசந்தரைப் போன்ற இளைஞர்கள், திரை உலகில் சேவை செய்ய முன்வரவேண்டும். அதற்குரிய வாய்ப்பை நான் கண்டிப்பாக பெற்றுத்தருவேன்'' என்றார்.

    அப்போது எம்.ஜி.ஆர். நடிக்க "தெய்வத்தாய்'' என்ற படத்தை தயாரிக்க, ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் முடிவு செய்திருந்தது. அப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் வாய்ப்பை பாலசந்தருக்கு வழங்குமாறு வீரப்பனிடம் எம்.ஜி.ஆர். கூறினார். அதன்படியே, பாலசந்தரை அழைத்து, வசனம் எழுதும் பொறுப்பை ஆர்.எம்.வீ. ஒப்படைத்தார்.

    அதுவரை சினிமா பற்றிய எண்ணமே இல்லாமல், தன் சிந்தனை, செயல் அனைத்தையும் நாடகத்துறையிலேயே ஈடுபடுத்தியிருந்த பாலசந்தரின் திரை உலகப்பிரவேசம் இவ்வாறுதான் நிகழ்ந்தது. இது, பாலசந்தரின் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ்த்திரை உலக வரலாற்றிலும் பெரும்திருப்பு முனையை ஏற்படுத்தியது.

    சினிமாவுக்கு வசனம் எழுதுவது என்பது பாலசந்தருக்கு புதிய அனுபவமாக இருந்தது.

    அந்த அனுபவம் பற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "ஒவ்வொரு காட்சிக்கும் நான் எழுதித்தரும் வசனங்களை, படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன்பாக, கூட்டியோ, குறைத்தோ மாற்றியமைத்து ஆர்.எம்.வீ. அனுப்பி வைப்பார். `நம்முடைய வசனங்கள் இப்படி சிதைக்கப்படுகிறதே' என்று முதலில் நான் வருந்தியது உண்டு.

    ஆனால், நாடகத்திற்கும், சினிமாவிற்கும் வசனத்தில் இருக்க வேண்டிய மாற்றங்கள் பற்றி பின்னர் தெரிந்து கொண்டேன். ஒரு முறை நான் எழுதியிருந்த ஒரு பாரா வசனத்தை, அப்படியே அடித்து அதை ஒரே ஒரு வாக்கியமாகத் திருத்தி எழுதியிருந்த ஆர்.எமë.வீ.யின் திறமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதிலிருந்து ஜனரஞ்சகமான காட்சி அமைப்பு, பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்கிற அளவுக்கு எழுதப்பட்ட வசனங்களை நான் கூர்ந்து கவனித்து வந்தேன்.

    இன்னும் சொல்லப்போனால், இந்த ஒரே திரைப்பட அனுபவத்தில் நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டது ஏராளம்.

    அப்போது கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் இன்னமும் எனக்கு பலமாகவும், ஆதாரமாகவும் இருக்கிறதோ என்று கூட இப்போது எண்ணத் தோன்றுகிறது'' என்கிறார், பாலசந்தர்.

    "தெய்வத்தாய்'' படம் 1964 ஜுலை 18-ந்தேதி வெளிவந்தது. எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் நடித்த இந்தப் படத்தை பி.மாதவன் இயக்கியிருந்தார். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

    படம் பெரிய வெற்றி பெற்றது. தான் வசனம் எழுதிய படம் வெற்றி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார், பாலசந்தர். எனினும், `இந்தப் படத்தில் நம்முடைய வேலை அப்படி ஒன்றும் குறிப்பிடும்படியாக இல்லையே' என்ற எண்ணம்தான் மனதில் மேலோங்கியிருந்தது.

    "தெய்வத்தாய்'' படத்தைத் தொடர்ந்து, சில படங்களுக்கு கதை-வசனம் எழுத பாலசந்தருக்கு அழைப்பு வந்தது.

    நாடகமாக பெரிய வெற்றி பெற்ற "சர்வர் சுந்தர''த்தை படமாக்க ஏ.வி.எம். நிறுவனம் தீர்மானித்தது. அதன் கதை-வசனத்தை பாலசந்தர் எழுதினார். முத்துராமன், நாகேஷ், கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்தனர். கிருஷ்ணன்-பஞ்சு டைரக்ட் செய்தனர்.

    படம் பெரிய வெற்றி பெற்றது.

    அடுத்து, இதே ஆண்டில் முக்தா சீனிவாசன் தயாரித்து டைரக்ட் செய்த "பூஜைக்கு வந்த மலர்'' படத்துக்கு பாலசந்தர் வசனம் எழுதினார்.

    இதே ஆண்டில் வெளிவந்த "நீலவானம்'' படத்துக்கும் பாலசந்தர் கதை- வசனம் எழுதினார். சிவாஜி கணேசனும், தேவிகாவும் இணைந்து நடித்தனர். தேவிகாவின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படம்.

    இந்த படத்தை டைரக்ட் செய்தவர் பி.மாதவன்.

    "நீலவானம்'' சிறந்த படமாக அமைந்தது.

    இந்த சமயத்தில், பாலசந்தர் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு படத்தை டைரக்ட் செய்யும் வாய்ப்பு தேடி வந்தது.

    வரலாறு படைத்த டைரக்டர் கே.பாலசந்தர்
    பிறர் படமாக்கத் துணியாத புரட்சிகரமான கதைகளைப் படமாக்கி வரலாறு படைத்தவர், கே.பாலசந்தர். ரஜினிகாந்தையும், மற்றும் ஏராளமான புதுமுகங்களையும் தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்திய சாதனையாளர்.

    சினிமாவுக்கு தொடர்பில்லாத குடும்பத்தில் தோன்றி, நாடக உலகில் புகுந்து, பிறகு சினிமா உலகிற்கு வந்தார்.

    தஞ்சை மாவட்டம் நன்னிலத்திற்கு அருகில் உள்ள நல்லமாங்குடி என்ற கிராமம்தான் பாலசந்தரின் சொந்த ஊர்.

    அந்த கிராமத்தின் முன்சீப்பான கைலாசம் அய்யர் -காமாட்சியம்மாள் தம்பதிகளின் மகனாக 1930 ஜுலை 9-ந்தேதி பிறந்தார்.

    படிப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்ததுடன் நாடகத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். நண்பர்களை வைத்துக் கொண்டு வீட்டுத் திண்ணையிலேயே நாடகங்கள் நடத்துவார்.

    ஆரம்பக் கல்வி முடித்ததும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு படிக்கும் போதும் நாடக ஆசை தொடர்ந்தது. அவரே கதை -வசனம் எழுதி, முக்கிய வேடங்களில் நடிப்பது வழக்கம்.

    கல்லூரியில் ஹாஸ்டல் தினம், பட்டமளிப்பு விழா என்றெல்லாம் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, பாலசந்தரின் நாடகம் நிச்சயம் இடம் பெறும்.

    "பி.எஸ்.சி'' பட்டம் பெற்ற பின், முத்துப்பேட்டையில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேலை பார்த்தார். ஒரு வருட காலம் ஆசிரியர் பணியில் நீடித்தார். அங்கும், மாணவர்களை வைத்து நாடகம் நடத்துவார்.

    அதுமட்டுமல்ல; சட்டசபை எப்படி நடக்கிறது, பாராளுமன்றம் எப்படி நடக்கிறது என்பதை விளக்கும் வகையில், "மாதிரி சட்டசபை'', "மாதிரி பாராளுமன்றம்'' ஆகிய நிகழ்ச்சிகளை தயாரித்து நடத்தி, பாராட்டு பெற்றார்.

    சென்னையில் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில், 1950-ல் பாலசந்தருக்கு வேலை கிடைத்தது. ரத்தத்தில் ஊறிய நாடக ஆசை அப்போதும் தொடர்ந்தது.

    மாலை ஐந்து மணி ஆனதும், அதிகாரிகளும், ஊழியர்களும் அவரவர் வீட்டுக்கு கிளம்புவார்கள். பாலசந்தரோ, ராஜா அண்ணாமலை மன்றம் அல்லது ஆர்.ஆர்.சபாவுக்குப் போவார். "இன்று என்ன நாடகம்? நாளை என்ன நாடகம்? யார் -யார் நடிக்கிறார்கள்?'' என்று அறிவிப்பு பலகைகளைப் பார்ப்பார். முக்கிய நாடகங்களையெல்லாம் தவறாமல் பார்த்து விடுவார்.

    அந்தக் காலக்கட்டத்தில், பாலசந்தருக்கு நாடகம் மீதுதான் ஆசை இருந்ததே தவிர, சினிமாவை லட்சியமாகக் கொள்ளவில்லை.

    ஏ.ஜி.அலுவலகத்தில் ஒரு விழா. மேல் அதிகாரியை பாலசந்தர் சந்தித்து, "இந்த விழாவில் நாடகம் நடத்தலாம். நாடகம் நடத்துவதில் எனக்கு அனுபவம் உண்டு'' என்று கூறினார்.

    அதற்கு அதிகாரி அனுமதியளித்தார்.

    உடனே நாடகத்தைத் தயாரிக்கத் தொடங்கினார், பாலசந்தர்.

    சென்னையில் அவர் முதன் முதலாக நடத்திய இந்த நாடகத்தின் பெயர் "சினிமா விசிறி.'' எப்போதும் சினிமா பற்றி பேசிக்கொண்டிருக்கும் கேரக்டர்தான் இந்த நாடகத்தின் கதாநாயகன்.

    இந்த நாடகத்தின் கதை, வசனம், நடிப்பு அனைத்தும் பாலசந்தர்தான்.

    நாடகத்தைப் பார்த்தவர்கள், பாலசந்தரின் திறமையை வானளாவப் புகழ்ந்தார்கள்.

    (இந்த நாடகம்தான் பிற்காலத்தில் "எதிர்நீச்சல்'' என்ற பெயரில் படமாகியது. சினிமா பித்து கொண்ட கதாநாயகனை, பட்டுமாமி என்ற பெயரில் கதாநாயகியாக மாற்றினார், பாலசந்தர்.)

    "சினிமா விசிறி'' நாடகத்தைப் பார்த்த சினிமா நடிகர் வி.கோபாலகிருஷ்ணன், பாலசந்தரை பார்க்க வந்தார். அவர் தனியாக நாடகக் குழு ஒன்றை நடத்தி வந்தார்.

    "சினிமா விசிறி நாடகத்தைப் பார்த்தேன். ரொம்பப் பிரமாதம். என்னுடைய நாடகம் ஒன்றில் நீங்கள் நடிக்கவேண்டும்'' என்று பாலசந்தரிடம் கோபாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

    அதற்கு பாலசந்தர் சம்மதித்தார். கோபாலகிருஷ்ணனின் "உயிருள்ளளவும்'' என்ற நாடகத்தில் நடித்தார். அப்போது பாலசந்தருக்கு வயது 21. நடித்தது அப்பா வேடத்தில்!

    வயதான தோற்றத்தில் அற்புதமாக நடித்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

    இதைத்தொடர்ந்து, வி.எஸ்.ராகவன் நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு பாலசந்தரை தேடி வந்தது.

    வெளி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த பாலசந்தர் சொந்தமாக "ராகினி ரிக்ரியேஷன்ஸ்'' என்ற பெயரில் நாடகக்குழு அமைத்தார். நாடகம் நடத்த சபாக்களை மட்டும் நம்பியிராமல், திருமண வீடுகளிலும், மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளிலும் நடத்தி வந்தார்.

    அப்படி ஒரு திருமண வீட்டில் அவர் நடத்திய நாடகத்தின் பெயர் புஷ்பலதா. "புஷ்பா'', "லதா'' என்ற இரண்டு பெண்களைப் பற்றி மூன்று கல்லூரி மாணவர்கள் அடிக்கும் அரட்டைதான் நாடகம். கடைசிவரை புஷ்பாவோ, லதாவோ வரமாட்டார்கள்!

    பாலசந்தரின் இந்த புதுமை நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது.

    ஏ.ஜி.ஆபீஸ் உயர் அதிகாரி மாற்றலாகிச் செல்லும்போது, பிரிவு உபசார விழாவில் பாலசந்தர் நடத்திய நாடகம் "மேஜர் சந்திரகாந்த்.''

    இந்த நாடகத்தை நடத்தும்போது, ஒரு புதுமையைப் புகுத்தினார். மேடைக்கு திரை கிடையாது. மூன்று பக்கமும் திறந்தவெளி! நடிகர்கள் பார்வையாளர்களுடன் அமர்ந்து இருப்பார்கள். நடிக்க வேண்டிய கட்டம் வரும்போது, கூட்டத்தில் இருந்து எழுந்து வந்து நடித்து விட்டுப் போவார்கள்!

    நாடகத்தில் மேஜர் சந்திரகாந்த் வேடத்தில் பாலசந்தர் நடித்தார்.

    இந்த நாடகம், அவருக்கு மேலும் புகழ் தேடித்தந்தது.

    ஏ.ஜி.ஆபீசில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோதே 1956 மே 13-ந்தேதி பாலசந்தருக்கு திருமணம் நடந்தது. மனைவி பெயர் ராஜம்.

    நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி, கதாநாயகி, வில்லி வேடங்களையும் ஏற்று 300 படங்களுக்கு மேல் நடித்தவர், சுந்தரிபாய்.
    நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி, கதாநாயகி, வில்லி வேடங்களையும் ஏற்று 300 படங்களுக்கு மேல் நடித்தவர், சுந்தரிபாய்.

    சுந்தரிபாயின் சொந்த ஊர் மதுரை. 1927-ல் பிறந்தார். சின்ன வயதிலேயே இசை மீது ஆர்வம் கொண்டவர். அப்போது, எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "சிந்தாமணி'' படம் வெளிவந்து ஒரு வருடத்துக்கு மேலாக ஓடிக்கொண்டிருந்தது. அதில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாம் சுந்தரிபாய்க்கு மனப்பாடம். அந்தப் பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பதுதான் அவரது பொழுதுபோக்கு.

    இசை மீது சுந்தரிபாய்க்கு இருந்த ஆர்வத்தை கவனித்த அவர் பெற்றோர்கள், முறைப்படி சங்கீதம் கற்றுத்தந்தனர்.

    முதல் படம்

    உறவினர் ஒருவர் எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக, 1937-ல் "சுகுணசரசா'' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு சுந்தரிபாய்க்கு கிடைத்தது. நாள் ஒன்றுக்கு இருபது ரூபாய் சம்பளத்தில், மூன்று நாட்கள் நடித்தார்.

    இதன் பின், ஜெமினி நிறுவனத்தில் மாத சம்பளத்திற்கு சேர்ந்தார். இதே சமயத்தில்தான், கொத்தமங்கலம் சுப்புவும் ஜெமினி கதை இலாகாவில் சேர்ந்தார்.

    ஜெமினியின் முதல் படமான "மதனகாமராஜன்'' படத்தில், கொத்தமங்கலம் சுப்புவும், சுந்தரிபாயும் நடித்தனர். அதைத்தொடர்ந்து, காதல் ஏற்பட்டு இருவரும் மணந்து கொண்டனர்.

    இதுபற்றி சுந்தரிபாய் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது:-

    "இது காதல் திருமணம் மட்டுமல்ல. கலப்பு திருமணமும்கூட. என் தாய் மொழி மராத்தி. அவர் தமிழர்.

    இதன்பின், ஜெமினி எடுத்த படங்களில் எல்லாம் எனக்கொரு வேடம் தவறாமல் கிடைத்து வந்தது.

    1945-ல் ஜெமினி தயாரித்த "கண்ணம்மா என் காதலி'' என்ற படத்தில் நான் கதாநாயகியாக நடித்தேன். வசனமும், பாடலும் எழுதியதுடன் டைரக்ஷனையும் சுப்புதான் கவனித்தார். இந்தப் படத்தின் கதாநாயகனாக எம்.கே.ராதா நடித்தார்.''

    இவ்வாறு சுந்தரிபாய் குறிப்பிட்டுள்ளார்.

    1948-ல் ஜெமினியின் பிரமாண்டமான படமான "சந்திரலேகா'' வெளிவந்தது. அதில் முக்கிய வேடத்தில் சுந்தரிபாய் நடித்தார்.

    கதாநாயகி டி.ஆர்.ராஜகுமாரியைக் காப்பாற்றுவதற்காக, "இச்சைகளைத் தீர்க்கும் பச்சை மலைப்பாவை''யாக மாறுவேடத்தில் சென்று, ரஞ்சனை ஏமாற்றும் கட்டத்தில் ரசிகர்களிடம் சபாஷ் பெற்றார்.

    சுந்தரிபாய், ஜெமினியில் சேர்ந்தபோது அவரது மாத சம்பளம் 150 ரூபாய். சந்திரலேகாவில் நடித்தபோது, அது 1,500 ரூபாயாக உயர்ந்தது.

    ஜெமினியின் வெற்றிப்படமான "சம்சார''த்தில், வில்லி வேடத்தில் சுந்தரிபாய் நடித்தார்.

    "வள்ளியின் செல்வன்'' படத்தில், குணச்சித்திர வேடத்தில் நடித்தார். ஏறத்தாழ 17 ஆண்டுகள் ஜெமினியில் பணியாற்றினார். ஒப்பந்தம் முடிவடைந்தபின், வெளிப்படங்களிலும் நடித்தார். அவற்றில் பெரும்பாலானவை வில்லி வேடங்கள்.

    கே.பாலசந்தர் தயாரித்த "அரங்கேற்றம்'' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

    சுந்தரிபாய் நடித்த படங்கள் ஏறத்தாழ 300. சில ஆண்டுகள் உடல் நலம் இல்லாமல் இருந்த சுந்தரிபாய், அண்மையில் காலமானார்.
    சினிமாவில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தபோதே, நடிகை லதாவை அரசியலுக்கு அழைத்தார், எம்.ஜி.ஆர். ஆனால், அப்போது அரசியலைத் தவிர்த்த லதா, அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது அதில் சேர்ந்தார்.
    சினிமாவில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தபோதே, நடிகை லதாவை அரசியலுக்கு அழைத்தார், எம்.ஜி.ஆர். ஆனால், அப்போது அரசியலைத் தவிர்த்த லதா, அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது அதில் சேர்ந்தார்.

    எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. சந்தித்த முதல் பொதுத்தேர்தலில், நடன நிகழ்ச்சி மூலம் கட்சிக்கு நிதி திரட்டிக் கொடுத்தார் லதா.

    எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த திருநாவுக்கரசின் அழைப்பின் பேரில், அப்போது அவர் தொடங்கிய "எம்.ஜி.ஆர். அ.தி.மு.க''வில் இணைந்தார்.

    எம்.ஜி.ஆருடனான அரசியல் அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

    "எம்.ஜி.ஆர். படங்களில் நான் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒருநாள் அவர் என்னிடம், "லதா! உனக்கு அரசியலில் ஆர்வம் உண்டா?'' என்று கேட்டார். "ஆர்வம் இல்லை. அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என்றேன்.

    ''அரசியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதானே தேர்தலின்போது சரியானவர்களை தேர்ந்தெடுக்க முடியும்'' என்றார்.

    ஆனால் காலச்சூழலில் அவரே அ.தி.மு.க.வை தொடங்க வேண்டியதாயிற்று. கட்சியில் நானும் சேர்ந்தேன். கட்சியில் சேரும்படி என்னை அவர் கேட்கவில்லை. என்றாலும், சினிமாவில் என்னை இந்த அளவுக்கு உருவாக்கியவருக்கு காட்டும் நன்றிக்கடனாக, அவர் கேட்காமலே கட்சியில் சேர்ந்து விட்டேன்.

    எம்.ஜி.ஆர். கட்சி, முதல் பொதுத்தேர்தலை சந்தித்த நேரத்தில், "தேர்தலுக்கு நான் என்ன செய்தால் சரியாக இருக்கும்?'' என்று கேட்டேன். "உனக்கு எது சரியாக இருக்குமோ, அதைச் செய்தால்தான் சிறப்பாக வரும்'' என்றார், எம்.ஜி.ஆர். பிறகு அவரே "லதா! நீ முக்கிய நகரங்களில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொள். கட்சிக்கு நிதி திரட்டிய மாதிரியும் இருக்கும்'' என்றார்.

    உடனே தாமதமின்றி நான் உருவாக்கிய நாட்டிய நாடகம்தான் "சாகுந்தலம்.'' முப்பதுக்கும் மேற்பட்ட நடனக்குழுவினருடன் நான் கட்சிக்கூட்டம் நடக்கும் இடங்களில் இந்த நாட்டிய நாடகத்தை நடத்துவேன். மக்கள் திரண்டு வந்து, இந்த நிகழ்ச்சியை ரசித்தார்கள். திருச்சியில் நடந்த பொதுக்கூட்ட மேடையில் அதுவரை நடன நிகழ்ச்சிக்கு வசூலான தொகையை எம்.ஜி.ஆரிடம் அளித்தேன்.

    இந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று முதல்-அமைச்சரானார். தேர்தலில் நேரம் காலம் பார்க்காமல் விடிய விடிய நாட்டிய நாடகம் நடத்தியதை அவர் மறக்காமல் மனதில் வைத்திருந்தார். ஒருநாள் என்னை அழைத்துப் பேசியவர், "லதா! மக்களின் அன்பு எத்தகையது என்பதை நேரில் காண, இந்த தேர்தல் உனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. நீ முழுநேர அரசியலுக்கு வரலாம் என்று எண்ணுகிறேன். உன் விருப்பம் என்ன?'' என்று கேட்டார்.

    நான் அவரிடம், "அரசியலிலும் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்காகவே நடன நிகழ்ச்சியையும் உற்சாகமாக செய்தேன். மற்றபடி அரசியலில் ஈடுபடும் அளவுக்கு இன்னமும் எனக்கு பக்குவம் இல்லை'' என்று கூறினேன்.

    எம்.ஜி.ஆர். என்னைப் புரிந்து கொண்டார். அதன்பிறகு என்னை அரசியலுக்கு அழைக்கவில்லை.''

    இவ்வாறு லதா கூறினார்.

    தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரின் அழைப்பு தவிர, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும் லதாவை அரசியலுக்கு அழைத்தார்.

    அதுபற்றி லதா கூறியதாவது:-

    ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல்தான் எங்கள் பூர்வீகம். அங்குள்ள அம்மன் கோவில் பிரபலம். ஊர் எல்லையில் இருக்கிற இந்த கோவிலை என் அம்மா விருப்பப்படி 1977-ல் நான் புதுப்பித்தேன். இப்போதும் தம்பி ராஜ்குமார் இந்த கோவிலை பராமரிக்கும் பொறுப்பில்

    இருக்கிறான்.தெலுங்கில் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தது மூலமாக தெலுங்கு ரசிகர்களிடமும் நான் பிரபலமாகியிருந்தேன். இப்போது கோவிலை புதுப்பித்ததன் மூலம் அந்தப் பகுதி மக்களிடமும் நல்லவிதமாக அறியப்பட்டிருந்தேன்.

    இதனால் சந்திரபாபு நாயுடு என்னை தனது கட்சி சார்பில் இந்த தொகுதியில் நிற்கச்சொன்னார். அப்போது அவர் போட்ட ஒரே கண்டிஷன், "தேர்தலுக்குப்பிறகு, ஆந்திராவிலேயே செட்டிலாகி விடவேண்டும்'' என்பதுதான்.

    நான் அவரிடம், "நான் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே தமிழ்நாட்டில்தான். அங்கேதான் நடிகையாக அறிமுகமானேன். எம்.ஜி.ஆர். மட்டும் அவரது ஜோடியாக படங்களில் என்னை அறிமுகப்படுத்தாமல் இருந்திருந்தால், `லதா' என்ற பெண்ணை யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். எனவே எனக்கு புகழ் தேடித்தந்த தமிழ்நாட்டில், தமிழ் மக்களிடையே இருக்கவே விரும்புகிறேன்'' என்று சொல்லி, நாயுடு தந்த அரசியல் வாய்ப்பை தவிர்த்து விட்டேன்.

    இவ்வாறு கூறினார், லதா.

    எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராக இருந்த திருநாவுக்கரசு, எம்.ஜி.ஆர். காலமான பிறகு "எம்.ஜி.ஆர். அ.தி.மு.க'' என்றொரு கட்சியை தொடங்கினார். இதில் சேரும்படி நடிகை லதாவை கேட்டுக்கொண்டார். லதாவும் இந்தக் கட்சியில் சேர்ந்து அரசியலில்

    ஈடுபட்டார்.1998-ல் நடந்த "எம்.பி'' தேர்தலில், திண்டுக்கல்லில் தனது கட்சி சார்பில் போட்டியிட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் 60 ஆயிரத்துக்கு மேல் ஓட்டு வாங்கி, அரசியல் வட்டத்தை ஆச்சரியப்படுத்தினார்.

    திருநாவுக்கரசு, தனது கட்சியை பாரதீய ஜனதாவுடன் இணைத்த நேரத்தில் லதாவும் பாரதீய ஜனதாவில் ஐக்கியமானார். கட்சியில் அவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

    லதா இப்போது சினிமா, சின்னத்திரை என இரண்டிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த பிஸி நிலை, அவருக்கும் அரசியலுக்கும் ஒரு இடைவெளி இருப்பதுபோல் காட்டுகிறது. தொடர்ந்து அரசியலில் நீடிக்கும் எண்ணம் லதாவுக்கு உண்டா? அவரே கூறுகிறார்:-

    "திருநாவுக்கரசரின் `எம்.ஜி.ஆர். அ.தி.மு.க' சார்பில் நான் திண்டுக்கல் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டபோது, கட்சிக்கென்று அங்கீகார சின்னம் எதுவும் தரவில்லை. அப்போது சுயேச்சை சின்னங்களில் ஒன்றாக இருந்த மாம்பழம் சின்னம் ஒதுக்கினார்கள். பிரசாரத்தின்போது மக்களை சந்தித்தேனே அந்த

    30 நாட்கள்தான் என் வாழ்க்கையில் திருப்பம். "தலைவர்

    (எம்.ஜி.ஆர்) கூட நடிச்ச பொண்ணு'' என்று சொல்லி என்னைக் கொண்டாடினார்கள். "உங்க முகத்துல தலைவரைப் பார்க்கிறோம்மா'' என்றார்கள்.

    வயதானவர்கள்கூட என் காலில் விழ வந்தார்கள். அவர்களை தடுத்து அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இதெல்லாம் எம்.ஜி.ஆர். மீது அவர்கள் வைத்திருந்த அன்பைத்தான் எடுத்துக்காட்டின.

    சிலர் என்னிடம், தங்கள் ஊரில் உள்ள "குழாயில் தணணீர் வரவில்லை'' உள்ளிட்ட பல குறைகளை உரிமையுடன் சொல்லத் தொடங்கி விட்டார்கள். எம்.ஜி.ஆருடன் நடித்தவள் என்ற உரிமையில், அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையாகவே அது எனக்குப் பட்டது. சிலர், "மதியம் சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்கு வாங்க'', "இரவு சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்குத்தான் வரணும்'' என்றெல்லாம் அன்போடு கேட்டு, அழைத்துப்போய் சாப்பாடும் கொடுத்தார்கள். சூதுவாது தெரியாத அன்பை மட்டுமே பொழியத் தெரிந்த இந்த மக்களுக்காக அவர்களுக்கு நல்லது செய்யும் அரசியலில் நான் நீடிப்பதுதான் சரியாக இருக்கும்.

    இந்த பிரசாரத்தில் ஒரு வேடிக்கையும் நடந்தது. நான் எங்கள் "எம்.ஜி.ஆர். அ.தி.மு.க'' கட்சி வேட்பாளராக போட்டியிட்ட அதே தொகுதியில், தி.மு.க.வுக்கு ஓட்டு கேட்டு என் தோழி ராதிகா பிரசாரம் செய்தார். அரசியலுக்கு அப்பாற்பட்ட தோழிகள் என்பதால், பிரசாரத்தில் எதிரும் புதிருமாக சந்தித்துக்கொண்டபோதுகூட மறக்காமல் "ஹாய்! ஹலோ'' சொல்லிக்கொண்டோம். நட்பு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது அல்லவா?

    இப்போது படங்களிலும், தொடர்களிலும் நடிப்பதை தொடர்ந்தாலும், அரசியல் ஈடுபாடும் இருக்கவே செய்கிறது. அரசியலில் முழு மூச்சாக இறங்கும் காலம் வரும்போது நிச்சயம் அதில் என்னை முழுவீச்சில் வெளிப்படுத்தவே செய்வேன். தேசியக்கட்சியில் (பா.ஜ.க) இருந்தாலும் எனது அரசியல் தமிழ்நாட்டில் இருக்கும்.

    மக்கள் தந்த ஆதரவில் வளர்ந்த நான், மக்கள் பிரச்சினைக்காக என்னை அர்ப்பணிப்பேன்.''

    சினிமாவில் மறுபிரவேசம் செய்த லதாவுக்கு, சின்னத்திரை வாய்ப்பும் தேடி வந்தது. டைரக்டர் கே.சங்கர் இயக்கிய "ராமாயணம்'' தொடரில் நடித்து, சின்னத்திரையிலும் தனது நடிப்பைத் தொடங்கினார்.
    சினிமாவில் மறுபிரவேசம் செய்த லதாவுக்கு, சின்னத்திரை வாய்ப்பும் தேடி வந்தது. டைரக்டர் கே.சங்கர் இயக்கிய "ராமாயணம்'' தொடரில் நடித்து, சின்னத்திரையிலும் தனது நடிப்பைத் தொடங்கினார்.

    சின்னத்திரை அனுபவங்கள் குறித்து லதா கூறியதாவது:-

    "சினிமாவில் இரண்டாவது இன்னிங்சிலும் பிசியாகவே இருந்தேன். டைரக்டர்கள் பி.வாசு, மணிவண்ணன், கஸ்தூரிராஜா, ராம.நாராயணன் போன்றோர் படங்களில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருந்தேன்.

    இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் -சிவாஜியை பல படங்களில் இயக்கிய டைரக்டர் கே.சங்கரிடம் இருந்து எனக்கு போன் வந்தது. "ராமாயணம்'' என்ற பெயரில் ஒரு புராணத் தொடர் எடுக்க இருப்பதாகவும், அதில் ராதாரவி ராவணனாக நடிப்பதாகவும் சொன்னவர், நான் ராவணனின் மனைவி மண்டோதரியாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    `பிரபல டைரக்டர் என் மீது நம்பிக்கை வைத்து கேட்கிறார். எனவே மறுக்கக்கூடாது' என்று, அந்தத் தொடரில் நடித்தேன். 1997-ல் இந்த தொடர் சன் டிவியில் ஒளிபரப்பானது.

    தொடர்ந்து பாலாஜி டெலிபிலிம்சுக்காக "பவித்ர பந்தம்'' என்ற தெலுங்கு சீரியலிலும் நடிக்கலானேன்.

    "கிழக்கே போகும் ரெயில்'' படத்தில் நடிகை ராதிகா அறிமுகமாகியிருந்தார். அடுத்து "அன்னப்பறவை'' என்ற படத்தில் நானும் ராதிகாவும் நடித்தோம். அந்தப் படத்தில் ராதிகாவின் இளம் வயது அம்மா நான். இந்தப் படத்தில் நடிக்கும்போதே, ராதிகா எனக்கு நல்ல தோழியானார். அதோடு நடிகை ஸ்ரீபிரியா இவருக்கு நெருக்கமான தோழி. என் தம்பி ராஜ்குமார் ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொண்டபிறகு, ராதிகா இன்னும் எனக்கு நெருக்கமானார்.

    இந்த நட்பின் அடிப்படையில், ராதிகா சின்னத்திரைக்கு வந்த நேரத்தில் "இதி கத காது'' என்ற மெகா தொடரில் என்னை நடிக்கும்படி கேட்டார். உயிர்த் தோழிகளாக இருக்கும் இருவர் காலச் சூழலில் ஜென்ம எதிரிகள் போல் மோதிக்கொள்ளும் கதை. தெலுங்கில் இந்த "மெகா'' சீரியலுக்கு மகா வரவேற்பு.

    ராதிகாவுக்கு தமிழில் திருப்புமுனையாக அமைந்தது `சித்தி' தொடர். இந்த தொடரில் 250 எபிசோடு வரை நான் கிடையாது. கதைப்படி ஒரு பெற்றோர் 250 எபிசோடு தாண்டி அறிமுகமாகிறார்கள். அதில் `அம்மா' கேரக்டரில் ஏற்கனவே ரசிகர்களிடம் பிரபலமான ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர் சி.ஜே.பாஸ்கர் அபிப்ராயப்பட்டிருக்கிறார். இதை என்னிடம் சொன்ன ராதிகா, "நீங்களே நடித்தால் சிறப்பாக இருக்கும்'' என்றார். ஒப்புக்கொண்டு நடித்தேன்.

    என் போர்ஷன் அதிகபட்சம் 30 எபிசோடு வரை வந்திருக்கும். எனக்கு ரொம்ப நல்ல பெயரை வாங்கிக்கொடுத்த கேரக்டராக அது அமைந்தது.

    தொடர்ந்து பாலாஜி பிலிம்சுக்கு நாலைந்து தொடர்கள் நடித்தேன். இந்த நேரத்தில் ஏவி.எம்.மில் இருந்து "ஈ நாட்டு ராமாயணம் இல்லாலு'' என்ற தெலுங்கு தொடரில் நடிக்க கேட்டார்கள். அது ஒளிபரப்பாகி மிகப் பெரிய "ஹிட்.''

    தொடர்ந்து ஹரிராஜனின் தொடர், பாலாஜி டெலிபிலிம்சின் "கேளுங்க கேளுங்க மாமியாரே'' என்று தொடர்ந்தேன். இதில் `கேளுங்க கேளுங்க மாமியாரே' தொடர், முற்றுப்பெறாமல் பாதியிலேயே நின்று போனது வருத்தம் தந்தது.

    ராதிகாவின் "செல்வி'' தொடரில்தான் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனை. நான் தெலுங்கில் பிசியாக இருந்த நேரத்தில் ஒருநாள் ராதிகாவின் அம்மா எங்கள் வீட்டுக்கு வந்தார். `செல்வி' என்ற பெயரில் புதிய தொடர் தயாரிப்பதாக சொன்னவர், "இலங்கையில்தான் படப்பிடிப்பு தொடங்குகிறது.

    இலங்கையில் `ஓஹோ'வென வாழ்ந்த ஒரு குடும்பம், அங்கே சொத்துக்களை இழந்து தமிழ்நாட்டில் தஞ்சமாகிற கதை. கோடீசுவரப் பெண், நடுத்தர வாழ்க்கைக்கு பழகி, அனுதினமும் பொருளாதாரம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய கேரக்டர் இருக்கிறது. நீ செய்தால் சரியாக இருக்கும் என்பது ராதிகாவின் எதிர்பார்ப்பு'' என்றார்.

    இந்த கேரக்டரில் நடிக்க நடிகை ராதிகாவும், டைரக்டர் சுந்தர் கே.விஜயனும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்கள். இந்தத் தொடரில் நான் பேசிய வசனங்கள், "என்ன புள்ள!'' "உன்னைப் பார்த்தா எனக்கு படபடங்குது'', "ரொம்ப டூ மச்'' போன்றவை ரசிகர்களிடையே இப்போதும் பிரபலம்.

    இலங்கையில் பங்களாவில் வாழ்ந்து பழக்கப்பட்ட பெண், சென்னையில் புறாக்கூண்டு போன்ற வீட்டில் வாழும்போது என் கேரக்டர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், ரசிகர்களை பாதித்திருக்கிறது. இதற்கு உதாரணமான விஷயமும் நடந்தது.

    தி.நகரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு போயிருந்தேன். என்னைப் பார்த்ததும் ஒரு பூக்காரப் பெண்மணி ஓடி வந்தாள். "அம்மா அம்மா! பூ வாங்கிக்கம்மா'' என்று நாலைந்து முழம் பூவை என் கையில் திணித்தாள். "காசு எவ்வளவு அம்மா?'' என்று நான் கேட்டு பணம் கொடுக்க முயன்றபோது, அந்தப் பெண் பணத்தை வாங்க மறுத்து விட்டாள். அதோடு, "போம்மா! உன் கிட்ட காசு வாங்கினா தப்பும்மா! தலைவரோட (எம்.ஜி.ஆர்) ஜோடியாக எல்லாம் நடிச்ச நீ, இப்ப எவ்வளவு கஷ்டப்படறேன்னுதான் `செல்வி' தொடரில் பார்த்தேனே!'' என்று கூறினாள்! அப்போதுதான் செல்வியில் என் கேரக்டர் எந்த அளவுக்கு மக்களிடம் ஊடுருவியிருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

    இப்போது கலைஞர் `டிவி'யில் ஒளிபரப்பாகி வரும் "மஞ்சள் மகிமை'' தொடரிலும் எனக்கு வித்தியாசமான கேரக்டர்.''

    இவ்வாறு லதா கூறினார். 
    திருமணத்துக்குப்பின் படங்களில் நடிக்காமல் இருந்த லதா, 10 ஆண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் நடித்தார்.
    திருமணத்துக்குப்பின் படங்களில் நடிக்காமல் இருந்த லதா, 10 ஆண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் நடித்தார்.

    லண்டனில் இருந்து லதா திரும்பியபின், பல பட அதிபர்கள் அவரை மீண்டும் நடிக்க அழைத்தனர். ஆனால், "இனி நடிப்பதாக இல்லை'' என்பதையே பதிலாக சொல்லி வந்தார்.

    ஆனால், நடிகரும் டைரக்டருமான ராஜ்கிரண் கேட்டபோது லதாவால் மறுக்க முடியவில்லை. அவர் இயக்கிய "பொன்னு விளையும் பூமி'' படத்தில் நடித்தார் லதா. இதன் மூலம் சினிமாவில் மறுபிரவேசம் செய்தார்.

    சினிமாவில் தனது மறுபிரவேசம் குறித்து லதா கூறியதாவது:-

    "குடும்ப வாழ்க்கைக்குள் வந்த பிறகு நடிப்பு பற்றி நான் நினைத்துப் பார்க்கவில்லை.

    2 மகன்களுக்கு அம்மா என்ற முறையில் அவர்களின் மகிழ்ச்சி, அவர்களின் கல்வி, கணவரின் தேவையறிந்து செயல்படுவது என்றே முழு நாட்களும் ஓடின.

    இந்த சமயத்தில்கூட, டைரக்டர் கே.பாக்யராஜ் என் லண்டன் முகவரியைத் தெரிந்து கொண்டு என்னிடம் தொடர்பு கொண்டார். அப்போது அவர், எம்.ஜி.ஆரும் நானும் நடித்து பாதியில் நின்றுபோன "அண்ணா நீ என் தெய்வம்'' படத்தை கொஞ்சம் மாற்றி "அவசர போலீஸ்'' என்ற பெயரில் எடுக்கவிருப்பதாகவும், அதன் சில காட்சிகளில் நான் நடித்துத்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    நான் அவரிடம், "நடிப்பை அடியோடு மறந்து விட்டேன். அதனால் தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்'' என்று தெளிவாக கூறி, நடிப்புக்கு வைத்த முற்றுப்புள்ளியை உறுதி செய்தேன்.

    லண்டனில் இருந்து எப்போதாவது ஊருக்கு வரும்போது, எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் `வீனஸ் ஸ்டூடியோ'வில் நடக்கும் படப்பிடிப்பு கண்ணில் படும். "நாமும் இந்த சினிமாவில்தானே இருந்தோம். இப்போது நடிப்பு பற்றிய சிந்தனையே எழவில்லையே'' என்று நினைத்துக் கொள்வேன்.

    இப்படியாக நடிப்பதில்லை என்ற முடிவுடன்தான் வெளிநாட்டில் நான் இருந்த 10 வருடங்களும் ஓடிற்று. அம்மாவுக்காக ஊர் வந்தபோது இங்கேயே நிரந்தரமானேன்.

    தங்கையின் திருமணத்தையும் முடித்த நேரத்தில் ஒருநாள் மஞ்சுளாவின் பிறந்த நாளுக்காக அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

    "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் நடித்த நாளில் இருந்தே நானும் மஞ்சுளாவும் நல்ல தோழிகளாகி விட்டோம். அந்த நட்பு இன்றைக்கும் அதே நிலையில் தொடர்கிறது.

    நான் மஞ்சுளாவுடன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், டைரக்டர் ராஜ்கிரண் அங்கே வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், அப்போது அவர் இயக்கி நடிக்கவிருந்த "பொன்னு விளையும் பூமி'' படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று என்னைக் கேட்டுக்கொண்டார்.

    அப்போதும், "நான் நடிப்பதில்லை. நடிப்பையெல்லாம் விட்டு வருஷக்கணக்காச்சே'' என்றேன்.

    ஆனால் அவர் விடவில்லை. "எம்.ஜி.ஆருடன் நடித்த நட்சத்திரம் நடிப்பை விடுவதாக சொன்னால் எப்படி?'' என்றார்.

    அவர் பேச்சில் எப்படியும் என்னை நடிக்க வைத்துவிடவேண்டும் என்கிற குறிக்கோள் பிரதானமாக இருந்தது.

    அன்றைக்கு `முடியாது' என்று மறுத்துவிட்டாலும், ஒரு மாதம் அவர் என்னை விடவில்லை. "படத்தின் கதையைக் கேளுங்கள். மறுக்காமல் நடிப்பீர்கள்'' என்று வற்புறுத்தி வந்தார். ஒருநாள் என்னை சந்தித்து கதையும் சொன்னார்.

    எம்.ஜி.ஆர். ஹீரோயினை எப்படியாவது நமது படத்தில் நடிக்க வைத்துவிடவேண்டும் என்ற அவரது ஆவல் தெரிந்தது. மஞ்சுளாவும் என்னிடம், "இவ்வளவு தூரம் உனக்காக காத்திருப்பவரை இனியும் `முடியாது' என்று சொல்லி நோகடிக்காதே. நல்ல கேரக்டராகத்தானே இருக்கிறது. நடியேன்'' என்றார்.

    ஒரு வழியாக இப்படி 1997-ல் நான் ஒப்புக்கொண்டு நடித்து வெளியான படம் "பொன்னு விளையும் பூமி.''

    கைதட்டல்

    இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தது. முதன் முதலாக வயதான மேக்கப் போட்டு நடிக்க வைத்தார்கள். காமிரா முன் நிற்கும்வரை கூட, "எப்படி நடிக்கப்போகிறேனோ'' என்ற உதறல் இருந்தது. ஆனால் டைரக்டர் "ரெடி... டேக்'' என்றபோது எப்படித்தான் நடித்தேன் என்பதே தெரியாது. ïனிட் ஆட்கள் கரகோஷம் செய்தபோதுதான் நடிப்பு மறுபடியும் எனக்கும் ஒட்டிக்கொண்டு விட்டதை உணர்ந்தேன்.

    தொடர்ந்து மளமளவென படங்கள் வந்தன. எனக்குப் பிடித்த கேரக்டர்களை மட்டும் ஏற்று நடித்தேன்.''

    இவ்வாறு நடிகை லதா கூறினார்.

    சென்னைக்கு வந்ததும் `ஏரோபிக்ஸ்' வகுப்புக்கு போகத்தொடங்கியிருந்தார், லதா. இப்படி ஒருநாள் காலை வகுப்புக்கு காரில் போனபோது, விபத்தில் சிக்கினார்.

    அதுபற்றி லதா கூறியதாவது:-

    "காலை 6 மணிக்கே எழுந்து `ஏரோபிக்ஸ்' கிளாசுக்கு புறப்பட்டேன். காரை நானே `டிரைவ்' செய்தேன்.

    கார் `டிரைவ் இன் உட்லண்ட்ஸ்' ஓட்டலைத் தாண்டும்போது, நான் கொஞ்சமும் எதிர்பாராதவிதமாக ஓட்டல் சந்தில் இருந்து ஒரு ஆட்டோ மெயின் ரோட்டுக்கு திரும்பியது. ஆட்டோ வந்த வேகத்தில் என் கார் மீது உரசி விடும் என்று புரிந்து கொண்டு, ஸ்டியரிங்கை கொஞ்சம் வேகமாக வலப்பக்கம் ஒடித்தேன். கார் என் கட்டுப்பாட்டை மீறி, பிளாட்பார மேடையில் மோதி கவிழ்ந்து விட்டது.

    அது காலை நேரம் என்பதால், ரோட்டில் வாகனப் போக்குவரத்து இல்லை. தலைகீழாக கிடந்த காருக்குள் முகத்தில் ரத்தம் கொட்டிய நிலையில் அரை மயக்கத்துடன் நான் கிடந்தேன். அப்போது, எங்கிருந்தோ வந்த இன்னொரு ஆட்டோ டிரைவர் ஓடிவந்து காருக்கு வெளியே நான் வர உதவினார்.

    அதே வேகத்தில் அவரது ஆட்டோவிலேயே என்னை, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் சேர்த்தார். முகமெல்லாம் ரத்தம் கொட்டிய நிலையில் இருந்த என்னை யாரென்றே அவருக்குத் தெரியாது! அப்படியிருந்தும் எனக்கு உதவி செய்த அவருடைய மனித நேயம் என்னால் மறக்கவே முடியாது.

    ஆஸ்பத்திரியில் இருந்து அவர் புறப்படும்போதுகூட, "உங்கள் முகவரியைக் கொடுத்துவிட்டுப் போங்கள்'' என்றேன். அவரோ, "அதெல்லாம் இருக்கட்டும்மா'' என்று சொல்லி விட்டுப்போய்விட்டார்.

    5 மணி நேரம் அப்பல்லோவில் ஆபரேஷன் நடந்தது. கண் பக்கத்தில் ஸ்டியரிங் இடித்ததில் கொஞ்சம் தவறினாலும், கண் போயிருக்கும். தெய்வாதீனமாக தப்பியதாகத்தான் இப்போதும் நினைக்கிறேன்.

    தெய்வம் போல் அந்த நேரத்தில் வந்து உதவிய ஆட்டோ டிரைவர் யாரென்றும் தெரியவில்லை. ஆனால் சமயத்தில் உதவிய அந்த அன்பை என்னால் மறக்கவே முடியாது.''

    இவ்வாறு லதா கூறினார்.
    ஒரு கட்டத்தில் படங்களில் நடித்தது போதும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது லதா திருமணம் செய்து கொண்டார். கணவர் சபாபதி, சிங்கப்பூரில் பிஸினசில் இருந்ததால் கணவருடன் அங்கே போனார்.
    ஒரு கட்டத்தில் படங்களில் நடித்தது போதும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது லதா திருமணம் செய்து கொண்டார். கணவர் சபாபதி, சிங்கப்பூரில் பிஸினசில் இருந்ததால் கணவருடன் அங்கே போனார். கணவரின் பிஸினஸ் லண்டன், பிரான்ஸ், மலேசியா என்று விரிவுபடுத்தப்பட, 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாடுகளிலேயே இருந்தார்.

    லதா தம்பதிகளுக்கு 2 மகன்கள். லதா கணவருடன் வெளிநாடுகளில் இருக்க நேர்ந்தாலும் மகன்கள், சென்னையில் பாட்டி வீட்டில் தங்கி படித்தார்கள். சென்னை கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் பிளஸ்-2 வரை படித்த கார்த்திக், அதன் பிறகு மேல் படிப்புக்காக லண்டன் போனார்.

    அதே பள்ளியில் பத்தாவது வரை படித்து விட்டு சீனிவாஸ் மேற்படிப்புக்காக லண்டன் போனார். மூத்தவர் கார்த்திக் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் கணித நிர்வாகத்தில் பட்டப்படிப்பை முடித்து விட்டு இரண்டாண்டுகள் `பேங்கிங்' படிப்பை தொடருகிறார்.

    இளையவர் `லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் கல்லூரியில்' இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பை தொடர்ந்து வருகிறார்.

    இப்படி 10 ஆண்டுகள் கடந்த நிலையில் லதாவின் அம்மாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் `கேன்சர்' என்பது உறுதியானதும் லதாவுக்கு தகவல் பறக்க, அடுத்த விமானத்தில் பறந்து சென்னை வந்தார் லதா.

    மீண்டும் சென்னை விஜயம் பற்றி லதா கூறியதாவது:-

    "கணவரின் தொழில், பிள்ளைகளின் படிப்பு என்று வெளிநாட்டு வாழ்க்கை 10 வருடமாக தொடர்ந்தது. இடையிடையே ஊருக்கு வந்து போவதுண்டு. ஆனால் அம்மாவுக்கு கேன்சர் என்றதும் மனம் தாங்காமல் சென்னை வந்துவிட்டேன்.

    இந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நான் சென்னை வந்த நேரத்தில் எம்.ஜி.ஆரும் சிகிச்சை முடிந்து பூரண சுகம் பெற்று சென்னை திரும்பியிருந்தார். சென்னைக்கு வந்ததும் என் அம்மாவின் உடல்நிலை அவருக்கு சொல்லப்பட, உடனே அம்மாவை பார்க்க ஆஸ்பத்திரிக்கே வந்து விட்டார். அப்போது அவர் மூன்றாவது முறையாக முதல்-அமைச்சர் ஆகியிருந்தார்.

    என்னைப் பார்த்ததும், "அம்மாவுக்கு இப்படி இருப்பதை என்னிடம் ஏன் முன்பே சொல்லவில்லை?'' என்று கேட்டார். நான் லண்டனில் இருந்து சென்னை வந்ததே அம்மாவை கவனித்துக் கொள்ளத்தான் என்பதை சொன்னேன். சிகிச்சை முறைகளை டாக்டர்கள் மூலம் தெரிந்து கொண்டவர், சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி கூறினார். அமெரிக்க சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு சரியாக பேச்சு வராத நேரம். அப்படியிருந்தும் அக்கறை எடுத்துக்கொண்டு நேரில் வந்து அம்மாவை பார்த்த அவரது அன்பை இப்போது நினைத்தாலும் கண்கள் கலங்குகின்றன.

    கேன்சர் முற்றிவிட்டதால், அம்மா சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதனால் என் கடைசித் தங்கைக்கு நான் தாயாகும் நிலை ஏற்பட்டது.

    அம்மா இருந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக என் தங்கை தேவி திருமணத்தை நடத்தி வைப்பார்களோ, அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அவள் திருமணத்தை நடத்தி வைக்க விரும்பினேன். தங்கைக்கேற்ற வரன் தேடியபோது ஓட்டல் பார்க் ஷெரட்டன் அதிபரின் மகன் கவுரவ் கோயல் கிடைத்தார். திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்தேன். அன்றைய தினம் அவள் தாய்போல நான் மன நிறைவு பெற்ற நாள்.

    என் தம்பிகளில் ராஜ்குமார் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். நான் படித்த ஹோலிகிராஸ் கான்வென்ட் பெண்களுக்கானது என்றாலும், முதல் ஐந்து வகுப்புகளில் மட்டும் ஆண் -பெண் சேர்ந்து படித்து வந்தனர். இந்த வகையில் தம்பி ராஜ்குமார் ஹோலிகிராஸ் கான்வென்டில் சேர்ந்தான்.

    நான் நடிக்க வந்த நேரத்தில் ராஜ்குமார் முழு எம்.ஜி.ஆர். ரசிகனாகவே மாறிவிட்டான். ஒருமுறை அவன் வீட்டில் இருந்த நேரத்தில் டெலிபோன் ஒலித்திருக்கிறது. எடுத்துப் பேசியபோது, "நான் எம்.ஜி.ஆர். பேசுகிறேன்'' என்று எம்.ஜி.ஆர். சொல்ல, அவரிடம் பேசி முடித்துவிட்டு அன்று முழுக்க அவன் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

    அப்போது, "ரிக்ஷாக்காரன்'' படம் ரிலீசாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. ராஜ்குமாரின் வகுப்பாசிரியர் அன்று மாணவர்களிடம், "எதிர்காலத்தில் யார் யார் என்னென்னவாக வரப்போகிறீர்கள்?'' என்று கேட்டிருக்கிறார். மாணவர்களில் பலரும் "டாக்டராவேன்'', "என்ஜினீயராவேன்'', "பைலட்டாவேன்'' என்று சொல்ல, ராஜ்குமார் முறை வந்தபோது அவன் எழுந்து, "நான் ரிக்ஷாக்காரன் ஆவேன் சார்'' என்றிருக்கிறான்.

    மாணவர்கள் குபீரென சிரித்து வகுப்பறையை அலற வைத்திருக்கிறார்கள். ஆசிரியரும் அந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை என்பதால், "ஏன் அப்படி?'' என்று கேட்டிருக்கிறார். அப்போது, ரிக்ஷாக்காரன் படத்தில் எம்.ஜி.ஆர். நடித்த ரிக்ஷாக்காரன் கேரக்டர் அந்த அளவுக்கு ஒரு நல்ல கேரக்டராக ராஜ்குமார் மனதில் பதிந்திருப்பதை ஆசிரியர் தெரிந்து கொண்டார்.

    மறுநாள் படப்பிடிப்பில், பள்ளியில் `ரிக்ஷாக்காரன்' ஆக விரும்பிய தம்பியின் எதிர்கால ஆசை பற்றி எம்.ஜி.ஆரிடம் சொன்னேன். ஆச்சரியமாக கேட்ட எம்.ஜி.ஆர், "பார்த்தியா லதா! இதுதான் நம் உழைப்புக்கான மரியாதை. ரிக்ஷா ஓட்டுபவர் தனது நேர்மையான கேரக்டர் மூலம் உன் தம்பி மனதில் பதிந்திருக்கிறார். ஒரு கேரக்டர் மக்கள் மனதில் நல்லவிதமாய் பதிய வேண்டும் என்பதற்காகத்தானே அவ்வளவு கஷ்டப்படுகிறோம். அதற்கு கிடைத்த பலன்தான் உன் தம்பியின் மனதில் பதிந்த `ரிக்ஷாக்காரன்' ஆசை'' என்று விளக்கம் தந்தார்.

    ராஜ்குமார் பின்னாளில் நடிகராகி, நடிகை ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொண்டு 2 பிள்ளைகளுக்கு அப்பா ஆனாலும், இப்போதும் எம்.ஜி.ஆர். ரசிகன்தான்.''

    இவ்வாறு லதா கூறினார். 
    எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சர் ஆன பிறகு, படங்களில் நடிக்கவில்லை. அதன் பிறகு மற்ற நடிகர்கள் படங்களில் லதா பிஸியானார். கமல், ரஜினி படங்களிலும் கதாநாயகியாக நடித்தார்.
    எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சர் ஆன பிறகு, படங்களில் நடிக்கவில்லை. அதன் பிறகு மற்ற நடிகர்கள் படங்களில் லதா பிஸியானார். கமல், ரஜினி படங்களிலும் கதாநாயகியாக நடித்தார்.

    கமல், ரஜினி படங்களில் நடித்த அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

    "கமலுடன் எனக்கு வாய்ப்பு வந்த முதல் படமே "வயநாடு தம்பான்'' என்ற மலையாளப்படம்தான். படத்தை வின்சென்ட் இயக்கினார். இந்தப்படம் மலையாளத்தில் பெரிய `ஹிட்' ஆனது.

    இந்தப் படத்தில் எனக்கு கிடைத்த புதிய அனுபவம் மேக்கப் போடாமல் நடித்ததுதான். மலையாளப் படங்களில் பொதுவாகவே மேக்கப்புக்கு அதிக முக்கியத்துவம் தரமாட்டார்கள். கேரக்டர்கள் இயல்பாக இருக்கவேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.

    தமிழ்ப் படங்களில் மேக்கப் போட்டே பழகிய எனக்கு, `மேக்கப் அவசியமில்லை' என்று டைரக்டர் வின்சென்ட் சொன்னதும் என்னவோ போலிருந்தது. அதன் பிறகு கேரக்டருடன் ஒன்றத் தொடங்கிய பிறகு சரியாகி விட்டது. படத்தைப் பார்த்தபோது, பிரமிப்பாக இருந்தது.

    இந்த அனுபவம், இதற்கு முன்பே மலையாள இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் எம்.ஜி.ஆரை இயக்கிய "நாளை நமதே'' படத்திலும் எனக்கு ஏற்பட்டது. மேக்கப் போட்டாலே அவருக்கு ஆகாதே. "எதற்காக இப்படி மேக்கப் போடவேண்டும்'' என்று கேட்பார். அதுவரை மேக்கப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்ததால், அவரது கேள்வி அந்த நேரத்தில் எரிச்சலாகக் கூட இருந்தது.

    கமலுடன் தமிழில் நான் நடித்த "நíயா'' படம் ரொம்பவே முக்கியமானது. இதில் கமலுடன் சேர்ந்து 5 ஹீரோக்கள்! டைரக்டர் துரை சொன்ன கதையில் என் கேரக்டருக்கு இருந்த முக்கியத்துவம் கருதியும், கமல் ஜோடி என்பதற்காகவும் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தப் படமும் பெரிய `ஹிட்.'

    நான் ரஜினியுடன் நடித்த முதல் படம் "சங்கர் சலீம் சைமன்.'' இந்தப்படத்தில் நடிப்பது தொடர்பாக டைரக்டர் பி.மாதவன் என்னை சந்தித்தபோது, "ரஜினின்னு ஒருத்தர் புதுசா வந்திருக்கார். நல்லாவே பண்றார். இந்தப்படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் வருகிறார். அவருக்குத்தான் நீங்க ஜோடியா நடிக்கறீங்க'' என்றார். நானும் ஒப்புக்கொண்டேன்.

    முதல் நாள் படப்பிடிப்பு ஒரு வீட்டில் நடந்தது. ரஜினி ஸ்கூட்டரில் என்னை ஏற்றிக்கொண்டு போவதாக காட்சி. இந்தக் காட்சி பற்றி டைரக்டர் பி.மாதவன் ரஜினியிடம் விவரித்துச் சொன்னபோது, "லதா மேடம் பெரிய ஆர்ட்டிஸ்ட் ஆச்சே! அவங்களை என் ஸ்கூட்டரில் ஏத்திட்டு போறதுன்னா எப்படி?'' என்று தயங்கியிருக்கிறார்.

    இதனால் டைரக்டர் பி.மாதவன் என்னை அழைத்து, "ரஜினி ரொம்ப டென்ஷனாகிறார். `எம்.ஜி.ஆர். சார் கூட நடித்த பெரிய ஆர்ட்டிஸ்ட் நீங்க என்கிற மரியாதை இப்படி அவரை டென்ஷனாக்குகிறது' என்று நினைக்கிறேன்'' என்றார்.

    உடனே நான், "சரி சார்! நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்று சொல்லி விட்டு அப்போதே மேக்கப் ரூமில் இருந்த ரஜினியை சந்தித்தேன். "ஹலோ ரஜினி! எப்படி இருக்கிறீங்க?'' என்று ஆரம்பித்து ஐந்து நிமிடம் இயல்பாக பேசிக் கொண்டிருந்தேன். நான் சகஜமாக பேசியது அவருக்குள் இருந்த படபடப்பை குறைத்திருக்க வேண்டும். அடுத்து, ஸ்கூட்டர் காட்சியில் இயல்பாக நடித்தார்.

    ரஜினியுடன் அன்று ஆரம்பித்த நட்பு இன்றுவரை தொடர்கிறது. இப்போது பார்த்தாலும் அதே நட்பு பாராட்டும் ஒரு நல்ல நடிகர் அவர்.

    ரஜினிக்கு திருமணமாகியிருந்த நேரம். ஒருநாள் மைலாப்பூரில் உள்ள `நீல்கிரிஸ்' கடைக்கு போனேன். அப்போது "லதா மேடம்! லதா மேடம்!'' என்றொரு குரல். திரும்பிப் பார்த்தேன். என்னை நோக்கி வேகவேகமாய் வந்து கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. அருகில் வந்ததும்தான் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் என்பது தெரிந்தது.

    நான் அவரிடம் "எப்படி இருக்கீங்க?'' என்று கேட்டேன். அவரோ மூச்சு விடாமல், "என் கணவர் (ரஜினி) உங்களைப்பற்றி ரொம்ப நல்லவிதமாக சொல்வார். உங்கள் மேல் அவருக்கு ரொம்ப மரியாதை'' என்றார். மகிழ்ந்து போனேன். அதுமுதல் லதா ரஜினிகாந்தும் எனக்கு ரொம்ப நெருக்கமான சிநேகிதி ஆகிவிட்டார்.

    இதன் பிறகு ரஜினி வீட்டில் நடக்கும் எந்தவொரு விசேஷத்திற்கும் எனக்கு அழைப்பு வந்து விடும். மகள் திருமணத்திற்கு அழைத்தார்கள். லேட்டஸ்ட்டாக ரஜினி நடித்த `சிவாஜி' படத்தின் பிரத்யேக காட்சிக்கு கூட அழைப்பு வந்தது. நட்பை போற்றுவதில் ரஜினி தம்பதிகள் ரொம்பவே கிரேட்!

    ரஜினியும் நானும் சேர்ந்து நடித்த படங்களில் மறக்க முடியாத ஒரு படம் "ஆயிரம் ஜென்மங்கள்.'' அதில் என் கேரக்டரின் தன்மை இரண்டு விதமாக இருக்கும். ஒன்று: இயல்பான கேரக்டர். அடுத்தது: `ஆவி' புகுந்த கேரக்டர்.

    படத்தில் விஜயகுமார்தான் ஹீரோ என்றாலும், எனக்கும் ரஜினிக்கும் எங்கள் நடிப்புக்கு சவால் வருகிற மாதிரியான கேரக்டர்கள். பெரும்பாலான படப்பிடிப்பு ஊட்டி, பொள்ளாச்சி போன்ற இடங்களில் நடந்தது. ஒரு காட்சியில் நடித்து விட்டு வந்ததும் "லதாஜி! சரியா பண்ணினேனா?'' என்று ஆர்வத்துடன் கேட்பார் ரஜினி. இத்தனைக்கும் அப்போது அவர் `சூப்பர் ஸ்டாராய்' வளர்ந்து விட்ட நேரம்.

    டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய "வட்டத்துக்குள் சதுரம்'' படத்தில் ரஜினியுடன் நடித்தபோது, "லதாஜி! இந்த கேரக்டர் உங்களை பெரிய அளவில் பேச வைக்கும்'' என்றார். அவர் சொன்னபடிதான் ஆயிற்று. படத்தில் எனது கேரக்டரும் பேசப்பட்டது. அதோடு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் அவார்டும் எனது நடிப்புக்காக கிடைத்தது. ரஜினியுடன் "முள்ளும் மலரும்'' படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தும், கால்ஷீட் பிரச்சினையால் அந்த வாய்ப்பு நழுவிப்போனது. இது இன்றளவும் எனக்கு வருத்தமே.''

    இவ்வாறு லதா கூறினார்.

    ×