search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிவரலாறு"

    டைரக்டர் ஸ்ரீதர், "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரித்தார். மூன்றிலும் கதாநாயகியாக லதா நடித்தார்.
    டைரக்டர் ஸ்ரீதர், "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரித்தார். மூன்றிலும் கதாநாயகியாக லதா நடித்தார்.

    டைரக்டர் ஸ்ரீதரின் "உரிமைக்குரல்'' படத்தில் எம்.ஜி.ஆரும், லதாவும் நடித்தார்கள். ஸ்ரீதர் மீண்டும் தனது "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்தில் நடிக்க லதாவை அழைத்தார். ஒரு இளம் பெண்ணின் மன உணர்வுகளை படம் பிடித்த அந்த கதைக்கு `அழகே உன்னை ஆராதிக்கிறேன்' என்று கவித்துவமான பெயரை சூட்டினார்.

    இந்தப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் படமானது.

    இந்த மும்மொழிப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

    "உரிமைக்குரல்'' படத்தில் நடித்தபோதே ஸ்ரீதரின் அற்புதமான இயக்கும் திறமையை என்னால் உணர முடிந்தது. மறுபடியும் இவரது படத்தில் நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் உள்ளூர இருந்தது. நடிகர் சிவகுமாருடன் "கண்ணாமூச்சி'' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஸ்ரீதரிடம் இருந்து அழைப்பு.

    "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' என்று ஒரு படம் எடுக்கிறேன். நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். தவிர, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் தயார் ஆகிறது. மூன்று மொழிகளுக்கும் நீங்கள்தான் கதாநாயகி'' என்றார். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன்.

    தமிழில் விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் என்னுடன் நடித்தார்கள். தெலுங்கில் சரத்பாபு, முரளி மோகன். கன்னடத்தில் ஸ்ரீநாத் நடித்தார். மூன்று மொழி கதாநாயகர்களுடனும் ஒரே நேரத்தில் மாறி மாறி நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

    எனக்கு தெலுங்கு சரளமாக பேச வரும். கன்னட வசனங்களை மட்டும் தமிழில் எழுதி வைத்து பேசினேன்.

    தமிழில் வெள்ளி விழா கொண்டாடிய இந்தப்படம், மற்ற 2 மொழிகளிலும் 100 நாட்கள் ஓடியது. இந்தப் படத்துக்கு பிறகு சிறிது இடைவெளிவிட்டு, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். ஹீரோவாக நடித்த "மீனவ நண்பன்'' படத்திலும் நடித்தேன். உணர்வுபூர்வமான கேரக்டர்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நின்றவர் டைரக்டர் ஸ்ரீதர்.''

    இவ்வாறு லதா கூறினார்.

    இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெற்றி பெற்ற "சஞ்சீர்'' படத்தை, தமிழிலும், தெலுங்கிலும் எடுத்தார்கள். தமிழில் எம்.ஜி.ஆர் - லதா நடிக்க "சிரித்து வாழவேண்டும்'' என்ற பெயரில் தயாரானது. தெலுங்குப் பதிப்பில் என்.டி.ராமராவ் - லதா நடித்தனர்.

    இரண்டு படங்களும் எஸ்.எஸ்.பாலன் டைரக்ஷனில் தயாராயின.

    இந்தப் படங்களில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

    "இரண்டு மொழிகளிலும் நான்தான் கதாநாயகி. இரண்டு படத்தின் சீன்களுமே அடுத்தடுத்து எடுக்கப்படும். தமிழ்ப்படம் என்றால், "தமிழ் ïனிட்டெல்லாம் வாங்க'' என்று அழைப்பார்கள். தெலுங்கு படப்பிடிப்பு என்றால், தெலுங்கு ïனிட்டை தயாராக இருக்கச் சொல்லி அறிவிப்பார்கள்.''

    இரண்டிலும் நான் இருப்பேன்.

    இந்தப் படத்தில் ஒரு முக்கியமான காட்சி. பள்ளிக் குழந்தைகள் 20 பேரை வில்லன் கூட்டம் கொன்றுவிடும். கொலையாளி யார் என்பது எனக்கு மட்டும் தெரியும்.

    ரோட்டில் நின்றபடி சாணை பிடிக்கிற கேரக்டரில் நான் நடித்தேன். கொலையாளி யாரென்று தெரிந்த நிலையிலும், பயம் காரணமாக வெளியே சொல்லாமல் மவுனமாகிவிடுவேன்.

    உண்மை எனக்குத் தெரிந்தும் சொல்லாமல் இருக்கிறேன் என்பது, ஹீரோவுக்கு தெரிந்து விடும். அதன் பிறகு என்னை சந்திக்கிற ஹீரோ (எம்.ஜி.ஆர்) நேராக குழந்தைகளின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மார்ச்சுவரிக்கு இழுத்துப் போவார். உயிரிழந்த அந்த குழந்தைகளை காட்டி, "நல்லாப்பாரு! சாக வேண்டிய வயசா இவங்களுக்கு? இவங்கள்ல எத்தனை பேர் காமராஜர், அண்ணாவா வந்திருப்பாங்களோ? இந்தப் பிஞ்சுகளை கருக்கின பாவி பற்றி தெரிந்தும், நீ மவுனமாக இருந்தால் உன்னைவிட சுயநலவாதி யாருமில்லை'' என்கிற மாதிரி உணர்ச்சி பொங்க

    பேசுவார்.இந்த வசனத்தைப் பேசுவதற்கு முன் என்னை மார்ச்சுவரி அறை வரை கையை பிடித்து இழுத்துச் செல்லும் எம்.ஜி.ஆர்., உள்ளே என்னைப் பிடித்திருக்கும் கையை உதறிவிட்டு இப்படி பேசுவார். நான் அவர் சொல்வதை கேட்டு மனம் மாறுவது போல் காட்சி.

    மறுநாள் இதையே தெலுங்கில் எடுத்தார்கள். காட்சி படமாக்கப்பட்டபோது, கதாநாயகன் என்.டி.ராமராவ் வேகவேகமாக என் கையை பற்றிக்கொண்டு மார்ச்சுவரிக்கு இழுத்துப்போனார். அப்போதே அவர் அந்த கேரக்டருக்குள் `இன்வால்வ்' ஆகிவிட்டது தெரிந்தது.

    நேராக மார்ச்சுவரி அறையை அடைந்தவர், பிடித்துக் கொண்டிருந்த என் கையை உதறிவிட்டு குழந்தைகளைப் பார்த்து வசனம் பேசவேண்டும். ஆனால், என் கையை உதறுவதாக நினைத்துக் கொண்டு, வேகமாக தள்ளிவிட்டார். நான் கீழே விழுந்து விட்டேன்.

    ஆனால், உணர்ச்சிமயமாக நடிப்பில் மூழ்கிவிட்ட ராமராவ் அதை கவனிக்கவில்லை. உயிரற்ற குழந்தைகளைப் பார்த்து ஆக்ரோஷமாக பேசிக்கொண்டே போனார். வசனத்தை அவர் பேசி நிறுத்திய பிறகுதான், என்னை அவர் உதறிய வேகத்தில் நான் விழுந்ததை புரிந்து அதிர்ந்து போனார். என்னிடம் வருத்தம் தெரிவித்தார். பெரிய நடிகராக இருந்தும் அவர் வருத்தம் தெரிவித்தது என்னை நெகிழச் செய்தது. "அதெல்லாம் ஒன்றுமில்லை'' என்று கூறி அவரது வருத்தத்தை சரி செய்தேன்.

    தெலுங்குப் படப்பிடிப்புக்கு போனால் என்னைப் பார்த்த மாத்திரத்தில், "லதா காரு! பிரதர் நல்லாயிருக்காரா?'' என்று கேட்பார். அவர் `பிரதர்' என்று சொல்வது எம்.ஜி.ஆரை. இருவரிடமும் அப்படியொரு சகோதர பாசம் இருந்தது.

    தெலுங்கில் நாகேஸ்வரராவுடன் நான் நடித்த "அந்தால ராமுடு'' நன்றாக ஓடியது. "உலகம் சுற்றும் வாலிபன்'' படப்பிடிப்பு முடிந்த நேரத்தில் எம்.ஜி.ஆரிடம் அனுமதி பெற்று நடித்த படம் இது.

    அதுமாதிரி `காந்தி புட்டின தேசம்' படத்தில் கிருஷ்ணம ராஜ×வுடன் சேர்ந்து நடித்தேன். இப்படத்தில் நடித்ததற்காக, ஆந்திர அரசின் விருது எனக்குக் கிடைத்தது.''

    இவ்வாறு லதா கூறினார்.

    நடிகை லதா, எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்தாலும் சிவாஜியுடன் "சிவகாமியின் செல்வன்'' என்ற படத்தில் மட்டுமே நடித்தார்.
    நடிகை லதா, எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்தாலும் சிவாஜியுடன் "சிவகாமியின் செல்வன்'' என்ற படத்தில் மட்டுமே நடித்தார்.

    இதுபற்றி லதா கூறியதாவது:-

    "15 வயதில் நடிக்க வந்து விட்டாலும் என் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் எம்.ஜி.ஆர். எனக்கு போன் செய்து வாழ்த்துவதுண்டு. என் 18-வது பிறந்த நாளன்றும் காலையிலேயே போனில் வாழ்த்தினார். "மதியம் ஆபீசுக்கு வரமுடியுமா?'' என்று கேட்டார்.

    போனேன். என்னைப் பார்த்ததும், "உங்கம்மாவுக்கு நான் பண்ணின வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். இப்ப நான் ஒண்ணு கேக்கறேன். செய்வியா?'' என்று கேட்டார்.

    அவர் கேட்ட கேள்வி எனக்குப் புரியவில்லை. அவரே விளக்கினார். "லதா! உனக்கு 18 வயது பிறந்து விட்டது. இப்போது நீ மேஜராகி விட்டாய். உங்கம்மா உன் நடிப்பு தொடர்பாக முன்பு போட்டுக் கொடுத்திருந்த காண்டிராக்ட் இனி செல்லுபடியாகாது. இப்போது நான் போட்டிருக்கும் புதிய காண்டிராக்டில் கையெழுத்து போடுவாயா?'' என்று விளக்கி என் பதிலை எதிர்பார்த்தார்.

    நான் எதுவும் பேசாமல், அவரிடம் இருந்த காண்டிராக்ட் பேப்பரை வாங்கி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.

    என்ன ஏதென்று கூட கேட்காமல் நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தது, அவருக்கு மிக ஆச்சரியமாக இருந்திருக்கும். ஆனாலும், பட உலகத்தில் அவர் என்னை அவரது படங்களில் ஜோடியாக நடிக்க வைத்திராவிட்டால் நான் ஏது?

    ஆனால் புது ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததால், மற்ற நடிகர்கள் படங்களில் நடிக்க கேட்டு வந்த வாய்ப்புகளை நான் ஏற்க முடியாமல் போயிற்று. சிவாஜி படத்தில் கூட "டாக்டர் சிவா'', "அவன்தான் மனிதன்'' என்று என்னைத் தேடி வந்த 2 படங்களில் நடிக்க முடியாமல் போயிற்று.

    ஆனாலும், எம்.ஜி.ஆர். என்னிடம், மற்றவர்கள் படங்களில் நடிக்கக் கூடாது என்று ஒருபோதும் சொன்னதில்லை. "என்னிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு நடி. அப்படிச் செய்தால் படப்பிடிப்பு தேதிகள் இடிக்காமல் இருக்கும்'' என்றுதான் சொல்லியிருந்தார்.

    சிவாஜியுடன் ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அப்போதுதான் சிவாஜி நடிக்கும் "சிவகாமியின் செல்வன்'' படம் தயாராக இருந்த நேரம். படத்துக்கு 2 கதாநாயகிகள். ஒரு கதாநாயகி வாணிஸ்ரீ. இன்னொரு கதாநாயகியின் கேரக்டர் படத்தின் பிற்பகுதியில்தான் வரும் என்றார்கள். அதாவது பெரிய சிவாஜியின் மனைவி வாணிஸ்ரீ. அவரின் வாரிசாக உருவாகும் சிவாஜிக்கு யாரைப் போடலாம் என்று பரிசீலித்துக் கொண்டிருந்தார்கள்.

    இந்த தகவல் என் காதுக்கு வந்ததும் இந்த கேரக்டரையாவது ஏற்று நடிப்போமே என்று தோன்றியது. அதோடு மிகக்குறைந்த நாட்களே கால்ஷீட் கேட்டார்கள். அதனால் சிவாஜி படத்தில் நடிக்கும் ஆர்வத்தில் அந்த கேரக்டரில் நடிக்க `ஓ.கே' சொல்லிவிட்டேன்.

    செட்டில் என்னை ரொம்ப மரியாதையாக நடத்தினார், சிவாஜி. "அண்ணனுடன் (எம்.ஜி.ஆர்) நடிக்கிறீங்க. என் கூட இது முதல் படம். நடிப்பில் எந்த மாதிரி சந்தேகம்னாலும் தயங்காம கேளுங்க'' என்று சொன்னவர், "உங்க அப்பா என்னோட நல்ல நண்பர் தெரியுமா?'' என்றும் சகஜமாக பேசி, பதட்டமில்லாமல் நடிக்க வைத்தார். ஆனாலும் தொடர்ந்து அவரது படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமையாமலே போய்விட்டது.''

    இவ்வாறு லதா கூறினார்.

    எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சரான நேரத்தில் நடிகர் சங்க அரங்கத்தின் திறப்பு விழா நடந்தது. எம்.ஜி.ஆர். தலைமையில், சிவாஜி முன்னிலையில் நடந்த இந்த விழாவில் லதாவின் நடனம் இடம் பெற்றது.

    அதுபற்றி லதா கூறியதாவது:-

    "நடிகர் சங்க விழாவில் உன் நடனம் முத்தாய்ப்பாக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருந்தார். 45 நிமிட நேரம் எனது நடனத்துக்கு ஒதுக்கியிருந்தார்கள். எனவே புராணக்கதையான மகாபாரதக் கதையை எடுத்துக்கொண்டு அதில் வருகிற திரவுபதி போன்ற கேரக்டர்களை `மோனோ' ஆக்டிங்கில் வெளிப்படுத்தி நடனமாடினேன்.

    இந்த நடனத்துக்காக நான் ரிகர்சல் பார்த்தபோது காலில் ஒரு ஆணி குத்திவிட்டது. மறுநாளே நடன நிகழ்ச்சி என்பதால் வலியைப் பொறுத்துக்கொண்டு ரிகர்சலை முடித்தேன்.

    மறுநாள் நிகழ்ச்சியின்போது மேடையில் ஆடும்போது காலில் இருந்து ரத்தம் கொட்டுகிறது. மேடை முழுக்க ரத்தம் கோடுகளைப் போல காணப்பட்டது. முந்தினநாள் என் காலில் ஆணி குத்தியிருந்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும்.

    எனவே, மேடையில் நான் ஆடியபோது மற்றவர்கள் கரகோஷம் செய்து கொண்டிருக்க, எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் இறுக்கமாக இருந்தது.

    நடனம் முடிந்ததும் மேடையேறி என்னைப் பாராட்டியவர், காலில் ஆணி குத்திய நிலையில் நான் நடனமாடியதை குறிப்பிட்டார். "கலை மீது எத்தகைய பற்று இருந்தால், இப்படி காலெல்லாம் ரத்தம் ஒழுக நடனமாடமுடியும்'' என்று அவர் பேசியபோது, அரங்கு முழுக்க ஒரு கணம் அமைதி. மறுகணம் அரங்கே அதிர்ந்து போகும் அளவுக்கு கரகோஷம். நெகிழ்ந்து போனேன்.

    நிகழ்ச்சி முடிந்ததும், மேக்கப் ரூமுக்கு வந்து என்னைப் பாராட்டிய சிவாஜி, "நடனம் ரொம்ப நன்றாக இருந்தது. அதோடு அண்ணன் (எம்.ஜி.ஆர்) சொன்ன மாதிரி தொழிலில் ஈர்ப்பு இருந்தால் மட்டுமே வலியைப் பொறுத்துக் கொண்டு ஆடமுடியும்'' என்று பாராட்டினார்.

    இரு பெரிய திலகங்களின் பாராட்டும், என் கால் வலிக்கு மிகப்பெரிய ஒத்தடமாக அமைந்தது.''

    இவ்வாறு லதா கூறினார்.

    தமிழில் எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே நடித்து வந்த நேரத்தில், தெலுங்குப் படங்களில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கிருஷ்ணமராஜ×, சோபன்பாபு ஆகியோருடன் லதா நடிக்கவே செய்தார். இதில் பல படங்கள் `ஹிட்' படங்கள்.

    "சிரித்து வாழவேண்டும்'' என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த நேரத்தில், அந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் என்.டி.ராமராவுடன் சேர்ந்து நடித்தார். (மும்மொழிப் படத்தில் கதாநாயகி)

    "சிவகாமியின் செல்வன்'' படத்தில் சிவாஜியும், லதாவும். இவர்கள் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான்.

    "வட்டத்துக்குள் சதுரம்'' என்ற படத்தில் சுமித்ரா, லதா.

    நடிக்க வந்த புதிதில் தொடர்ந்து எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே லதா நடித்து வந்தார். "உரிமைக்குரல்'' படத்தில் நடிக்கும் போது ஒரு விபத்தில் சிக்கினார்.
    நடிக்க வந்த புதிதில் தொடர்ந்து எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே லதா நடித்து வந்தார். "உரிமைக்குரல்'' படத்தில் நடிக்கும் போது ஒரு விபத்தில் சிக்கினார்.

    இதுபற்றி லதா கூறியதாவது:-

    "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் நடித்து முடித்த கையோடு எனக்கு எம்.ஜி.ஆருடன் "நினைத்ததை முடிப்பவன்'' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதிலும் என்னுடன் மஞ்சுளா இருந்தார். எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நல்லவராகவும், வைரக் கொள்ளையராகவும் வருவார். வைரக் கொள்ளையராக வரும் எம்.ஜி.ஆரின் ஜோடியாக நான் வருவேன்.

    "சச்சா ஜுட்டா'' என்ற இந்திப்படத்தின் `ரீமேக்' இந்தப்படம். தமிழுக்கென சில மாற்றங்களை செய்தார், எம்.ஜி.ஆர். குறிப்பாக படத்தின் கொள்ளையன் ரஞ்சித்தின் பாதை மாறிய பின்னணியை விவரிக்கும் தாய்ப்பாசத்துடன் கூடிய கிளைமாக்சை உருவாக்கினார்.

    அவரது ஸ்பெஷாலிட்டியே இதுதான். தனது கேரக்டரின் தன்மை ரசிகர்களின் உணர்வுகளுடன் கலந்து போவதாக இருக்க வேண்டும் என்பார். ஒரிஜினல் கதையான இந்திப்படத்தில், ரஞ்சித் கேரக்டரை வில்லனாகவே காட்டுவார்கள். பிரபல இந்தி நடிகர் ராஜேஷ்கன்னா நடித்திருந்தார்.

    இந்தப் படத்தில் எனக்கும் மஞ்சுளாவுக்கும் ஒரு நடனப்பாட்டு அமைந்தது. `உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் சந்திரகலாவுக்குத்தான் நடனமாடும் வாய்ப்பு அமைந்தது. எனக்கு நடன வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம், "நினைத்ததை முடிப்பவன்'' படத்தில் தீர்ந்தது. "கொள்ளையிட்டவன் நீதானே'' என்ற அந்தப் பாடல் காட்சியை, டிவியில் இப்போது பார்க்க நேர்ந்தாலும் பிரமிப்பு விலகாமல் பார்த்து ரசிப்பேன்.

    தொடர்ந்து பட வாய்ப்புகள். இடைவிடாத படப்பிடிப்பு என வளர்ந்து கொண்டிருந்தேன். "எம்.ஜி.ஆர். ஜோடி'' என்ற முறையில், திரையுலகில் ஒரு தனி மரியாதை இருந்தது. இந்த நேரத்தில்தான் ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கப் போகிறார் என்ற தகவல் கிடைத்தது.

    முக்கோணக் காதல் கதைகளை சொல்வதில் புகழ் பெற்ற ஸ்ரீதர், அதுவரை எம்.ஜி.ஆரின் எந்தப் படத்தையும் இயக்கவில்லை என்பதால், இந்த கூட்டணிக்கு அப்போதே ரசிகர்கள் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகிவிட்டது. இந்தப் படத்திலும் நான்தான் நாயகி என்றபோது, என் சந்தோஷம் இரட்டிப்பானது.

    தொடர்ந்து நடிப்பு நடிப்பு என்று போய்க் கொண்டிருந்ததால், திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு வரலாம் என்று அம்மா பிரியப்பட்டார். ஒரு அரை நாள் விடுமுறை கிடைத்தால் சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு வந்து விடலாம் என்று எண்ணினோம். எனவே டைரக்டர் ஸ்ரீதர் செட்டில் தனியாக இருந்த நேரத்தில், "சார்! நாளைக்கு காலையில் அம்மாவும் நானும் திருப்பதி சென்று வரலாம் என்றிருக்கிறோம். அரை நாள் தேவைப்படும்'' என்றேன்.

    "நாளைக்கு முழுக்க உன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கின்றன. எனவே நாளை முடியாது'' என்றார், ஸ்ரீதர்.

    "அரைநாள் தானே கேட்கிறேன். காலையில் போய்விட்டு மதியம் 2 மணிக்கு படப்பிடிப்பு அரங்குக்கு வந்து விடுவேன்'' என்று சொன்னேன்.

    அவரோ பிடிவாதமாக `லீவு தரமுடியாது' என்று மறுத்து விட்டார்.

    நானும் விடவில்லை. "அரை நாள் தந்தே ஆகவேண்டும்'' என்ற ரீதியில் அவரை வற்புறுத்திக்கொண்டிருந்தேன்.

    இந்த நேரத்தில் அங்கே எம்.ஜி.ஆர். வந்துவிட்டார். "என்ன பிரச்சினை?'' என்று பொதுவாக கேட்டார்.

    டைரக்டர் ஸ்ரீதர் சொல்வதற்குள் நான் முந்திக்கொண்டு, "நாளைக்கு திருப்பதி போய்வர அரை நாள் விடுமுறை கேட்டேன். தர மறுக்கிறார்'' என்றேன்.

    உடனே எம்.ஜி.ஆர். ஸ்ரீதரை பார்த்தார். "கோவில் தரிசனம் என்றால் போய்த்தான் ஆகவேண்டும். மதியம் 2 மணிக்கு வந்து விடுவதாக இருந்தால் அதுவரை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்'' என்றார். ஸ்ரீதரும் சம்மதித்தார்.

    எம்.ஜி.ஆர். தனது "ஏ.சி'' காரையும், டிரைவரையும் அனுப்பி வைத்தார்.

    விடியற்காலை 3 மணிக்கு காரில் புறப்பட்டோம். காலை 10 மணிக்கு சுவாமி தரிசனம் முடித்து, தாமதிக்காமல் சென்னைக்கு பயணம் ஆனோம்.

    திரும்பி வரும் வழியில்தான் சோதனை. கார் ஓடிக்கொண்டிருக்கும்போது எதிர்பாராமல் டயர் வெடித்து விட்டது. டிரைவர் சாமர்த்தியமாக காரை நிறுத்தினார். டயரை கழற்றி ஸ்டெப்னி மாட்டி கார் புறப்பட்டபோது, மீண்டும் பிரச்சினை. சித்தூரைத் தாண்டி கார் வந்து கொண்டிருந்த நேரத்தில் அந்த `ஸ்டெப்னி' டயரும் வெடித்து விட்டது.

    ஏற்கனவே, ஸ்டெப்னி மாட்டியதில் ஒரு மணி நேர தாமதம். இருந்தாலும் எப்படியும் பிற்பகல் 3 மணிக்கு சென்னை வந்து விடலாம் என்றிருந்த நம்பிக்கையை, மறுபடியும் வெடித்த டயர் கெடுத்துவிட்டது.

    10 மைல் தூரத்துக்கு ஆள் நடமாட்டமே இல்லாத பகுதி. பஞ்சர் போடவேண்டுமானால் கூட, 10 மைல் போனால்தான் முடியும். எனக்கு டென்ஷன். டிரைவர் என் டென்ஷனை உணர்ந்தாலும், பஞ்சர் போட்டு வருவதாக சொல்லிவிட்டு கிளம்பிப் போனார்.

    ஆனால் அவர் திரும்பி வந்தது மாலை 4 மணிக்கு. அதுவும் பஞ்சர் போடும் கடை விடுமுறை என்ற தகவலுடன் வந்து சேர்ந்தார்.

    இனி என்ன செய்வது? எனக்குள் தவிப்பு. இப்போது போல் போன் வசதியெல்லாம் அப்போது கிடையாது. சென்னைக்கு போன் போட வேண்டுமானால் `டிரங்க் கால்' புக் செய்து, காத்திருந்துதான் பேசவேண்டும். அதனால் யாருக்கும் எந்த தகவலும் சொல்ல முடியவில்லை.

    வேறு வழியின்றி சித்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட பஸ்சில் அம்மாவும் நானும் சென்னை வந்தோம். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் நாங்கள் வந்த பஸ் நின்றபோது இரவு 8 மணி.

    அம்மாவுக்கு இன்னொரு கவலையும் இப்போது சேர்ந்து கொண்டு விட்டது. மதியத்துக்குள்தான் வந்துவிடுவோமே என்ற எண்ணத்தில் வீட்டில் இருந்த 3 தம்பிகளுக்கும் தங்கைக்கும் மதிய சாப்பாடு மட்டுமே தயார் செய்து கொடுத்துவிட்டு வந்திருந்தார். இப்போது பிள்ளைகள் வேறு பசியாக இருப்பார்களே என்ற கவலை அம்மாவை வாட்டியது.

    சென்ட்ரலில் இருந்து வாடகைக் காரில் வீடு வந்து சேர்ந்தபோது 9 மணி. ஹாலில் தம்பிகளும், தங்கையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு சாப்பாடு பரிமாறி சாப்பிட வைத்திருந்தவர் யாரென்று நினைக்கிறீர்கள்? எம்.ஜி.ஆரேதான்!

    அதுமட்டுமா? டிபன் கேரியரில் எனக்கும் அம்மாவுக்குமான சாப்பாட்டையும் கொண்டு வந்திருந்தார்.

    அம்மாவுக்கு கண் கலங்கியது. எனக்கும்தான். தாமதத்துக்கான காரணம் பற்றி எம்.ஜி.ஆரிடம் சொல்ல முயன்றோம். ஆனால், நடந்தது என்ன என்ற தகவல் அவருக்கு ஏற்கனவே கிடைத்து விட்டது! "பயணத்தில் இதெல்லாம் சகஜம்தான். கார் டயர் வெடித்தபோது விபத்து நேராமல் இருந்ததே, அதுவே போதும்'' என்று ஒரே வரியில் எங்கள் டென்ஷனை குறைத்து விட்டார்.

    பிள்ளைகளின் பசியறிந்து அமுதூட்டிய எம்.ஜி.ஆரின் அன்பும், அக்கறையும் அம்மாவை ரொம்பவே நெகிழச்செய்து விட்டது. இதன் பின்னர் தனது சொந்த சகோதரர் போல அவரிடம் அன்பு பாராட்டினார் அம்மா.

    எம்.ஜி.ஆருக்கு காடை வறுவல் ரொம்ப இஷ்டம். அம்மா `சமையல் ஸ்பெஷலிஸ்ட்' என்பதை தெரிந்து கொண்டவர், உரிமையுடன் "அம்மா! காடை வறுவல் கொடுத்து அனுப்புங்க'' என்று கேட்டு அனுப்புவார். அம்மாவும் தனது கைப்பக்குவம் மிளிர `காடை வறுவல்' செய்து கொடுத்து அனுப்புவார்.

    எம்.ஜி.ஆரின் கடைசிப்படமான `மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனி'லும் நான்தானே நாயகி. இந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் எம்.ஜி.ஆரால் நான் உயிர் தப்பியிருக்கிறேன்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் உள்ள மாளிகையில் நடந்து கொண்டிருந்தது. மாளிகையின் ஹாலில் எம்.ஜி.ஆரும் நானும் 2 அடி இடைவெளியில் ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்திருந்தோம்.

    திடீரென "லதா! உடனே இங்கே வா'' என்று அவசரமாக அழைத்தார். நான் எழுந்து அவர் அருகே சென்றேன். சில நொடிகளில் நான் முதலில் உட்கார்ந்திருந்த இடத்தில் என் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்த பெரிய சரவிளக்கு பலத்த சத்தத்துடன் கீழே விழுந்து சிதறியது. எம்.ஜி.ஆர். மட்டும் அந்த நேரத்தில் அழைத்திருக்காவிட்டால், அந்த சரவிளக்கு என் தலையில் விழுந்து அப்போதே என் கதை முடிந்திருக்கும்.''

    இவ்வாறு லதா கூறினார்.


    "உரிமைக்குரல்'' படத்தில் "விழியே கதை எழுது'' கனவுக்காட்சியில் எம்.ஜி.ஆர்., லதா.

    "நினைத்ததை முடிப்பவன்'' படத்தில் எம்.ஜி.ஆர்., லதா.




    உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் லதா நடிப்பது என்று முடிவானதும், அவருக்கு நடிப்பதற்கும், நடனம் ஆடுவதற்கும் வேண்டிய பயிற்சிகளை அளிக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார்.

    நடிகர் மனோகர், லதாவின் வீடு தேடி வந்து அவரை நடிக்க அழைத்தார் அல்லவா? அதன்பின் நடந்தது பற்றி லதா கூறியதாவது:-

    "மனோகரின் அழைப்பு என் அம்மாவுக்கு திகைப்பையும், வியப்பையும் மட்டும் அல்ல, அதிர்ச்சியையும் அளித்தது. மவுனமாக இருந்தார். அப்போது மனோகர் கூறினார்:

    "என் நாடக நிகழ்ச்சிகளை படம் பிடிப்பவர்தான், உங்கள் மகள் நாட்டிய நிகழ்ச்சியையும் படம் எடுத்திருக்கிறார். எங்கள் நிகழ்ச்சி படங்களை பிரிண்ட் போட்டு எடுத்து வந்தபோது, அவர் கையில் உங்கள் மகளின் நடன போட்டோவும் இருந்தது. அதை வாங்கிப் பார்த்தேன். உங்கள் மகள் அழகாக இருந்தார்.

    சமீபத்தில் எம்.ஜி.ஆர். என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அடுத்து தான் எடுக்க இருக்கும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில், கதாநாயகிகளில் ஒருவராகப் புதுமுகத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், தெரிந்த அழகான பெண் யாராவது இருந்தால் சொல்லும்படியும் கூறியிருந்தார். அது நினைவுக்கு வந்ததும், உங்கள் மகள் படத்தைக் கொண்டு போய் அவரிடம் காட்டினேன்.

    'நான் எடுக்கப்போகும் படத்துக்கு இந்தப் பெண் பொருத்தமாக இருப்பாள். எனவே, விவரத்தை சொல்லி அழைத்து வாருங்கள்' என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதன் பேரில்தான் இங்கு வந்திருக்கிறேன்.

    " இவ்வாறு கூறிவிட்டு, என் தாயாரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார், மனோகர்.

    "என் பெண்ணை நடிக்க வைப்பதாக இல்லை" என்றார் அம்மா, பிடிவாதமாக.

    மனோகரும் விடவில்லை. "உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், எம்.ஜி.ஆரிடம் நேரடியாக போய் சொல்லி விடுங்கள்" என்றார்.

    அம்மாவுக்கும் அது சரியெனப்பட்டது. மறுப்பை, நேரில் சென்று நாகரீகமாக சொல்லி விடலாம் என்று முடிவு செய்தார்.

    இந்த இரண்டு நாட்களில் எனக்குள் ஒரு மாற்றம். 'எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்க எத்தனையோ பேர் விரும்பினாலும், அவர்களுக்கெல்லாம் அத்தனை சுலபத்தில் வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. நமக்கோ வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. இதை ஏன் விடவேண்டும்' என்று எனக்குள்ளாக கேட்டுக்கொண்டேன்.

    அம்மாவிடம் இதுபற்றி மூச்சு விடவில்லையே தவிர, பெரியம்மாவிடம் சொன்னேன். அவர் நடிகையாக இருந்தவர் என்பதால் எம்.ஜி.ஆர். பட வாய்ப்பு அத்தனை சுலபத்தில் யாருக்கும் தேடி வந்து விடாது என்பதை சட்டென புரிந்து கொண்டார். என்னை எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்க வைக்க அம்மாவிடம் பக்குவமாக பேசுவதாக சொன்னார்.

    மறுநாள் மதியம் மனோகர் வந்தார். 'எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்' பட நிறுவனத்துக்கு காரில் அம்மாவையும், என்னையும் அழைத்துப் போனார்.

    அங்கே போனபோது படப்பிடிப்பு முடிந்து ஆற்காடு சாலையில் உள்ள ஆபீசில் சாப்பிடப்போயிருக்கிறார் என்றார்கள். அங்கே போனால் டைரக்டர் ப.நீலகண்டன், அசோகன் ஆகியோருடன் தரையில் உட்கார்ந்தபடி எம்.ஜி.ஆர். சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மனோகர் சார் அவரிடம், எங்களை அறிமுகப்படுத்தினார். உடனே எம்.ஜி.ஆர், "முதலில் எல்லோரும் சாப்பிடுங்க" என்றார்.

    நாங்கள் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டே போயிருந்தோம். அதைச் சொன்னதும், "அப்ப பாயசமாவது சாப்பிடுங்க" என்று சொன்னவர், எங்களுக்கு பாயசம் தருவித்து கொடுத்தார்.

    சாப்பிட்டு முடித்து வந்ததும், ஏற்கனவே சந்தித்துப் பேசியதுபோல சகஜமாக பேசத்தொடங்கினார் எம்.ஜி.ஆர்.

    அவர் என் அம்மாவிடம், "உங்க ராஜபரம்பரை பற்றி எனக்குத் தெரியும். நான் குண்டடி பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் உங்கள் கணவர் என் பக்கத்து பெட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். உங்க பரம்பரைக்கு எந்தக் குறையும் வராமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு. எங்கள் யூனிட்டில் உங்கள் பெண்ணை கண்ணியத்துடன் நடத்துவார்கள்" என்றார்.

    அம்மா யோசிப்பது தெரிந்தது. அந்த நேரத்தில் என் பக்கம் திரும்பிய எம்.ஜி.ஆர், "உன் விருப்பம் பற்றி எதுவும் சொல்லவில்லையே? வெளிப்படையாக சொல்லலாம்" என்றார்.

    "எனக்கு விருப்பம்தான். ஆனால், நடிப்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாதே" என்றேன்.

    "ஒரு நடிகைக்கு தேவை, சரியான முகபாவனைகள். ஏற்கனவே நடனம் கற்ற அனுபவம் இருப்பதால், உன்னால் கேரக்டருக்கேற்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும்" என்றார், எம்.ஜி.ஆர்.

    எனக்கு ஆண்டுப் பரீட்சை நடக்கவிருந்த நேரம் அது. படிக்கத் தயாராக வேண்டும். எனவே, நான், "பரீட்சையை முடித்துவிட்டு நடிக்க வரலாம் இல்லையா?" என்று கேட்டேன்.

    "படப்பிடிப்புக்கு போய் வந்த பிறகு பரீட்சையை பிரைவேட்டாக எழுதிக்கொள்ளலாம்" என்றார், எம்.ஜி.ஆர்.

    அதுவரை என் பெயர் "நளினி"தான். சினிமாவுக்காக "லதா" என்று பெயர் சூட்டினார், எம்.ஜி.ஆர்."

    இவ்வாறு லதா கூறினார்.

    எம்.ஜி.ஆர். படத்தின் கதாநாயகி லதா என்று முடிவானதும், மறுநாளே படப்பிடிப்பு தளத்துக்கு அவரை வரச்சொன்னார்கள். நடிப்பு பற்றி தெரிந்து கொள்வதற்காக இது எம்.ஜி.ஆரின் ஏற்பாடு.

    எம்.ஜி.ஆர். நடித்த "ரிக்ஷாக்காரன்" படம், அப்போது தயாரிப்பில் இருந்தது. தினமும் மஞ்சுளா நடிப்பதை சற்றுத் தொலைவில் நின்றபடி கவனிக்கலானார், லதா.

    இதற்கிடையே படப்பிடிப்பை மட்டும் பார்த்துவிட்டு போகிற மாதிரி இல்லாமல், சினிமா நடனங்களிலும் லதாவுக்கு பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்தார் எம்.ஜி.ஆர். பிரபல டான்ஸ் மாஸ்டர்கள் சோப்ரா, புலியூர் சரோஜா, ரகுராம் ஆகியோர் லதாவுக்கு நடனப்பயிற்சி கொடுத்தார்கள்.

    சினிமா நடனத்திலும் லதா தேறிவிட்டார் என்று எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டதும், லதாவின் ஆட்டம் பார்க்க ஒரு நாள் செட்டுக்கு வந்தார். ஆனால் எம்.ஜி.ஆர். வந்த அன்று அவரைப் பார்த்ததும் லதாவால் இயல்பாக நடனமாட இயலவில்லை.

    அதுபற்றி லதா கூறுகிறார்:

    "எம்.ஜி.ஆர். வந்து என் நடனம் பார்க்க விரும்பியதும் எனக்குள் உதறல். கால்களை கட்டி வைத்துக் கொண்டதுபோல் உணர்ந்தேன். நடனம் பார்த்து என்ன சொல்வாரோ என்ற பயம்தான். நான் அவரிடம், "உங்களை பார்த்ததும் எனக்கு ஆடவரலை" என்றேன்.

    அவரோ, "அப்படியானால் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் ஹீரோவை மாற்றி விடலாமா?" என்று வேடிக்கையாக கேட்டார். பிறகு அவரே சகஜமாக பேசி, பயம் தெளிவித்து இயல்பாக நடனமாட வைத்தார்."
    எம்.ஜி.ஆர். தயாரித்து டைரக்ட் செய்த "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் அறிமுகமானவர் லதா. எம்.ஜி.ஆருடன் 16 படங்களில் இணைந்து நடித்தார்.
    எம்.ஜி.ஆர். தயாரித்து டைரக்ட் செய்த "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் அறிமுகமானவர் லதா. எம்.ஜி.ஆருடன் 16 படங்களில் இணைந்து நடித்தார்.

    "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் 3 கதாநாயகிகள். மஞ்சுளா, சந்திரகலா, லதா ஆகிய மூவரில் மஞ்சுளா எம்.ஜி.ஆர். நடித்த ரிக்ஷாக்காரனில் அறிமுகம் ஆனவர். சந்திரகலா, சிவாஜி நடித்த "பிராப்தம்'' படத்தின் மூலம் பட உலகில் காலடி எடுத்து வைத்தார்.

    பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த லதா, "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் நடித்தது எப்படி?

    லதாவே கூறுகிறார்:-

    "என் தாயார் லீலாராணி, சென்னையில் உள்ள செயின்ட் தாமஸ் கான்வென்டில் படித்தவர். என் தந்தை ராமநாதபுரம் ராஜா சண்முக ராஜேஸ்வர சேதுபதி. இந்தியா சுதந்திரம் அடைந்தபின் சுதேச சமஸ்தானங்கள் ஒழிக்கப்பட்டு, ஆட்சிப்பொறுப்பை மத்திய அரசே ஏற்றது. அந்தக் காலக்கட்டத்தில், ராஜாஜி மந்திரிசபையிலும், காமராஜர் மந்திரிசபையிலும் என் தந்தை அமைச்சர் பதவி வகித்தார்.

    என் பெரியம்மா கமலா கோட்னீஸ், இந்திப் படங்களிலும், தெலுங்குப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

    எனக்கு ஒரு அக்கா; 3 தம்பிகள்; ஒரு தங்கை. என் அக்காவும், நானும் சென்னை ஹோலிகிராஸ் கான்வென்டில் படித்தோம்.

    நான்கு வயதிலேயே, எனக்கு நடனம் மீது ஆர்வம் வந்துவிட்டது. வீட்டில் ரேடியோவில் கேட்கும் பாட்டுக்கு நானாக ஆடுவேன். பெரியம்மா நடிகையாக இருந்ததால், நான் நடனம் ஆடுவதை அவர் உற்சாகப்படுத்தனார்.

    பெரியம்மா அதோடு நின்று விடாமல், பிரபல நடனக் கலைஞர் வழுவூர் ராமையா பிள்ளையிடம் முறைப்படி நான் நடனம் கற்க ஏற்பாடு செய்தார். பெரியம்மா வீடு, அப்போது தி.நகரில் இருந்தது. அங்குதான் மாஸ்டர் வந்து எனக்கு நடனம் கற்றுத் தருவார்.

    சினிமாவில் எனக்கு அப்போது பிடித்த ஒரே நடிகை பத்மினி. அவர் நடனம் என்றால் எனக்கு உயிர். பத்மினி நடித்த படம் பார்த்தால், அன்று முழுக்க படத்தில் அவர் ஆடியபடியே ஆட வீட்டில் முயன்று கொண்டிருப்பேன்.

    என் அக்காவுக்கு நடனம் என்றால் ஆகாது. மாஸ்டரை பார்த்ததும் ஓட்டம் பிடித்து விடுவாள்!

    நடனத்தில் தேர்ந்ததும், பள்ளி விழாக்களில் நடனம் ஆடத் தொடங்கினேன். நடனத்தில் மட்டுமல்லாமல் படிப்பிலும் முதல் பரிசை பெறும் மாணவியாக இருந்ததால், பள்ளியிலும் எனக்கு நல்ல பெயர். அந்த அளவுக்கு எந்த வம்பு தும்புக்கும் போகாமல் அமைதியாக இருப்பேன்.

    அக்கா எனக்கு நேர் எதிர். எந்த நேரமும் அரட்டைதான். இதனால் படிப்பில் பின்தங்கிப்போன அக்கா, தேர்வில் பெயிலாகி என் வகுப்பிலேயே வந்து சேர்ந்து கொண்டார். நான் முன் பெஞ்சில் அமைதியின் வடிவாகவும், அக்கா பின்பெஞ்சில் அரட்டைத் திலகமாகவும் அறியப்பட்டோம்.

    அம்மா எங்களிடம் பாசம் காட்டிய அளவுக்கு கண்டிப்பாகவும் இருந்தார். பள்ளியில் எங்காவது சுற்றுலா அழைத்துச் சென்றால்கூட பாதுகாப்பு கருதி அம்மாவும் எங்களுடன் வந்திருக்கிறார்.

    ஒருமுறை பள்ளியில் `ஹெர்குலிஸ்' என்ற ஆங்கிலப்படம் பார்க்க அழைத்துச் சென்றார்கள். படம்தானே என்று அம்மாவிடம் சொல்லவில்லை. எங்களைக் காணாமல் தேடித் தவித்த அம்மாவுக்கு, அப்புறம்தான் நாங்கள் பள்ளியில் இருந்து படம் பார்க்கப்போன விஷயம் தெரிந்திருக்கிறது. வீட்டுக்குப் போனதும் அம்மா அடி பின்னிவிட்டார். அம்மாவுக்கு தகவல் தெரிவிக்காமல் படம் பார்க்கப் போனதால் ஏற்பட்ட கோபம், அம்மாவை ஆத்திரத்தின் உச்சிக்குக் கொண்டுபோய் விட்டது. எங்களை எப்படி கண்டிப்பாக வளர்த்திருக்கிறார்கள் என்பதற்காக இதைச் சொல்ல

    வந்தேன்.பத்தாவது படிக்கும்போது `கதக்' நடனமும் கற்றுக்கொண்டேன். கிருஷ்ணகுமார் மாஸ்டர்தான் கற்றுக்கொடுத்தார். நடனப் பள்ளியில் தேறியபோது, ராமராவ் கல்யாண மண்டபத்தில் நடனமாடினேன். பரதம், கதக்  ஆடியதோடு வெரைட்டியாக சில நடன வகைகளையும் ஆடிக்காட்டினேன்.

    நடனம் சிறப்பாக நடந்து முடிந்தது. அத்தோடு அதை மறந்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினேன்.

    ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த நேரத்தில் டெலிபோன் ஒலித்தது. நான்தான் எடுத்துப் பேசினேன். எதிர் முனையில் நடிகர் ஆர்.எஸ்.மனோகர் பேசினார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், "சினிமாவில் நடிப்பாயா?'' என்று கேட்டார்.

    நான், `நடிப்பதாக இல்லை' என்று சொல்லி, போனை வைத்து விட்டேன்.

    அப்போது எங்கள் வீடு அடையாறு போட் கிளப்பில் இருந்தது.

    மறுநாள் மாலை நான் பள்ளிக்கு போய்விட்டு வீடு திரும்பியபோது, பிளைமவுத் காரில் வந்து இறங்கினார், மனோகர்.

    வந்தவர் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். அம்மாவிடம் "எம்.ஜி.ஆர். தனது படத்தில் உங்கள் மகளை அறிமுகப்படுத்த விரும்புகிறார்'' என்று சொன்னார். அம்மா முகத்தில் அதிர்ச்சி.
    "சிறுகதை மன்னன்'' என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது.
    "சிறுகதை மன்னன்'' என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது.

    புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருதாசலம். தந்தை பெயர் சொக்கலிங்கம் பிள்ளை. தாயார் பர்வதம் அம்மாள்.

    இவர்கள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனினும், சொக்கலிங்கம் பிள்ளை தாசில்தாராக வேலை பார்த்ததால், ஊர் ஊராகப் போகவேண்டியிருந்தது.

    இந்நிலையில், கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலிïரில், 1906-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி புதுமைப்பித்தன் பிறந்தார்.

    புதுமைப்பித்தனுக்கு எட்டு வயதானபோது, தாயார் பர்வதம் அம்மாள் காலமானார்.

    அதன்பின், சொக்கலிங்கம் பிள்ளை மறுமணம் செய்து கொண்டார்.

    புதுமைப்பித்தன் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் ஆரம்பக் கல்வி பயின்றார்.

    சொக்கலிங்கம் பிள்ளை 1918-ல் ஓய்வு பெற்ற பின், சொந்த ஊரான திருநெல்வேலியில் குடியேறினார்.

    புதுமைப்பித்தன், திருநெல்வேலி யோவான் கல்லூரியிலும், பின்னர் இந்துக் கல்லூரியிலும் படித்து 1931-ல் "பி.ஏ'' தேறினார்.

    மகன் அரசாங்க உத்தியோகத்துக்குச் செல்ல வேண்டும் என்று சொக்கலிங்கம் பிள்ளை விரும்பினார். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

    1931 ஜுலை மாதத்தில், புதுமைப்பித்தனுக்கும், திருவனந்தபுரத்தில் மராமத்து இலாகா அதிகாரியாக இருந்த பி.டி.சுப்பிரமணிய பிள்ளையின் மகள் கமலாவுக்கும் திருமணம் நடந்தது.

    புதுமைப்பித்தன் நண்பர்களுடன் இலக்கிய சர்ச்சைகளில் ஈடுபடுவது, புத்தகங்கள் படிப்பது ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார். ஆனால் மகன் வெட்டிப்பொழுது போக்கிக் கொண்டிருப்பதாக சொக்கலிங்கம் பிள்ளை நினைத்தார். இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறுகள்  ஏற்பட்டன.

    இந்தச் சமயத்தில், கே.சீனிவாசன் "மணிக்கொடி'' என்ற இலக்கியப் பத்திரிகையை சென்னையில் தொடங்கினார். டி.எஸ்.சொக்கலிங்கம், "வ.ரா'' ஆகியோர் அவருக்குத் துணையாக இருந்தனர்.

    "மணிக்கொடி''யில் புதுமைப்பித்தன் கதைகள் எழுதினார். மற்றும் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் "காந்தி'', சங்கு சுப்பிரமணியத்தின் "சுதந்திரச் சங்கு'' ஆகிய பத்திரிகைகளிலும் அவருடைய கதைகள் பிரசுரமாயின.

    புதுமைப்பித்தனின் சிறுகதைகள் புதிய கோணத்தில், தனித்தன்மையுடன் திகழ்வதை "வ.ரா''வும், டி.எஸ்.சொக்கலிங்கமும் பாராட்டி, புதுமைப்பித்தனுக்குக் கடிதங்கள் எழுதி உற்சாகப்படுத்தினார்கள்.

    புதுமைப்பித்தனுக்கு இருந்த இலக்கிய மோகம் அவரைச் சென்னைக்கு இழுத்துச் சென்றது. "மணிக்கொடி''யில் எழுதியதுடன், ராய.சொக்கலிங்கத்தின் "ஊழியன்'' பத்திரிகையில் உதவி ஆசிரியர் பணியையும் கவனித்தார். எனினும், அந்தப்பதவியில் அவர் அதிக காலம்

    நீடிக்கவில்லை."மணிக்கொடி''யில் எழுதி வந்த புதுமைப்பித்தன், பின்னர் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் அழைப்பின் பேரில், "தினமணி'' நாளிதழின் துணை ஆசிரியர் பொறுப்பில் சேர்ந்தார்.

    "தினமணி'' ஆண்டு மலரைத் தயாரிக்கும் பொறுப்பு புதுமைப்பித்தனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த ஆண்டு மலர்களைச் சிறந்த இலக்கியப் பெட்டகங்களாகப் புதுமைப்பித்தன் கொண்டு வந்தார். "நாசகாரக்கும்பல்'' போன்ற அவருடைய சிறந்த சிறுகதைகள், "தினமணி'' ஆண்டு மலரில் வெளிவந்தவைதான்.

    1943-ல் டி.எஸ்.சொக்கலிங்கம் "தினமணி''யை விட்டு விலகி, "தினசரி''யைத் தொடங்கினார். புதுமைப்பித்தனும் "தினசரி''யில் சேர்ந்தார். பிறகு சொக்கலிங்கத்துடன் மனத்தாங்கல் ஏற்பட்டு, தினசரியை விட்டு விலகினார்.

    "தினமணி''யில் புதுமைப்பித்தனுடன் பணியாற்றிய சிலர் சினிமாத்துறையில் புகுந்து முன்னேறிக் கொண்டிருந்தார்கள். "இளங்கோவன்'' என்ற புனைப்பெயர் கொண்ட ம.க.தணிகாசலம், சினிமா வசனகர்த்தாவாக கொடிகட்டிப் பறந்தார். "மணிக்கொடி'' ஆசிரியராக இருந்த பி.எஸ்.ராமையா சினிமா டைரக்டராக உயர்ந்திருந்தார். "மணிக்கொடி'' துணை ஆசிரியர் கி.ரா. (கி.ராமச்சந்திரன்) ஜெமினி கதை இலாகாவில் சேர்ந்து பணிபுரிந்து கொண்டிருந்தார்.

    எனவே சினிமா துறையில் நுழைய விரும்பினார், புதுமைப்பித்தன். "காமவல்லி'' என்ற படத்திற்கு வசனம் எழுதினார். அதற்குக் கணிசமான பணமும் கிடைத்தது.

    "அவ்வையார்'' படத்தைத் தயாரிக்க முதன் முதலாக ஜெமினி திட்டமிட்டபோது, கி.ரா.வும், புதுமைப்பித்தனும் சேர்ந்து வசனம் எழுதினார்கள். (பின்னர் கே.பி.சுந்தரம்பாள் நடிக்க, ஜெமினி தயாரித்த அவ்வையார் படத்தில் புதுமைப்பித்தனின் வசனம் இடம் பெறவில்லை)

    1945-ம் ஆண்டைப் பொறுத்தவரை புதுமைப்பித்தனுக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது. சொந்தத்தில் சினிமாப்படம் எடுக்கத் தீர்மானித்து, தன் தாயார் பெயரில் "பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்'' என்ற படக் கம்பெனியையும் தொடங்கினார். குற்றாலக் குறவஞ்சி கதையை "வசந்தவல்லி'' என்ற பெயரில் படமாக்க வேண்டும் என்பது, அவரது திட்டம்.

    இதில், கதாநாயகனாக நாகர்கோவில் மகாதேவன் நடிப்பதாக இருந்தது. மகாதேவனை, சில நண்பர்கள் புதுமைப்பித்தனிடம் அழைத்து வந்தனர். பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்து முடிந்தது.

    "கதாநாயகனுக்கு அட்வான்ஸ் கொடுங்கள்'' என்று ஒருவர் கூற, புதுமைப்பித்தன் தன்னிடம் இருந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அட்வான்சாகக் கொடுத்தார்!

    அதன்பின், சில பத்திரிகைகளில் "வசந்தவல்லி'' பற்றி விளம்பரங்கள் வெளிவந்தன. படம் தயாரிக்கப்படவில்லை.

    அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைதாகி, சட்டத்துடன்

    2ஷி ஆண்டு காலம் போராடி, 1947 ஏப்ரலில் விடுதலையானார்.

    அவருடைய மகத்தான வெற்றிப்படங்களான "ஹரிதாஸ்'', "சிவகவி'', "அசோக்குமார்'', "அம்பிகாபதி'' முதலான படங்களுக்கு வசனம் எழுதியவர் இளங்கோவன். அவருடன் மனத்தாங்கல் கொண்டிருந்த பாகவதர், விடுதலைக்குப்பின் சொந்தமாகத் தயாரித்த ''ராஜமுக்தி'' படத்துக்கு வசனம் எழுத புதுமைப்பித்தனை அழைத்தார்.

    படப்பிடிப்பு முழுவதும், புனாவில் அகில இந்தியப் புகழ் பெற்ற பிரபாத் ஸ்டூடியோவில் நடந்தது. புனாவுக்குச் சென்று, அங்கேயே தங்கி வசனம் எழுதினார், புதுமைப்பித்தன்.

    வசனம் எழுதும் பணி முடிவடையும் தருணத்தில், அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

    காசநோய் காரணமாக, அவர் உடல் நிலை வரவர மோசம் அடைந்தது. 1948 மே மாதம் முதல் வாரத்தில் மனைவி கமலா தங்கியிருந்த திருவனந்தபுரத்துக்கு வந்து சேர்ந்தார். நடக்க முடியாமல் கம்பு ஊன்றி நடக்க வேண்டிய அளவுக்கு, அவர் உடல்நிலை மோசமடைந்திருந்தது.

    "ராஜமுக்தி''க்கு வசனம் எழுதியதில் ஓரளவு பணம் கிடைத்திருந்த போதிலும், முழு நேர எழுத்தாளராக வாழ்ந்த காரணத்தாலும், தந்தையுடன் சுமுக உறவு இல்லாததாலும், புதுமைப்பித்தன் இறுதிக்காலத்தில் வறுமையுடன் போராட வேண்டியிருந்தது.

    மனைவி கமலாவையும், ஒரே மகள் தினகரியையும், தமிழ்  இலக்கிய உலகையும் தவிக்க விட்டு, 30-6-1948 அன்று புதுமைப்பித்தன் காலமானார்.

    புதுமைப்பித்தன் வரலாற்றில் ஆச்சரியமான ஒரு நிகழ்ச்சி:

    தமிழ் இலக்கியத்துக்கு இணையற்ற சேவை செய்த புதுமைப்பித்தன் வறுமையுடன் போராடி தமது 42-வது வயதில் காலமானார். இதற்கு 20 ஆண்டுகளுக்குப்பின், தமிழக அரசு லாட்டரியில் அவர் மனைவி கமலாவுக்கு ரூ.2 லட்சம் பரிசு கிடைத்தது.

    அந்த சமயத்தில், புதுமைப்பித்தனின் ஒரே மகள் தினகரிக்கு திருமண ஏற்பாடு நடந்து வந்தது. "மகள் திருமணத்துக்கு, தந்தை கொடுத்த சீதனமாக இந்த பணத்தைக் கருதுகிறேன்'' என்றார், கமலா விருதாசலம்.

    தினகரி திருமணம் சிறப்பாக நடந்தது. கணவர் பெயர் சொக்கலிங்கம். இவர் என்ஜினீயர்.

    புதுமைப்பித்தன் நூல்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது.

    புதுமைப்பித்தன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.

    சினிமாவில் தோல்வியைச் சந்தித்த கோவி.மணிசேகரன், டெலிவிஷனுக்கு தொடர்கள் எழுதி வெற்றி பெற்றார்.
    சினிமாவில் தோல்வியைச் சந்தித்த கோவி.மணிசேகரன், டெலிவிஷனுக்கு தொடர்கள் எழுதி வெற்றி பெற்றார்.

    "மனோரஞ்சிதம்'' திரைப்படம் வெளிவராமல் போனதால் மணிசேகரன் மனம் வருந்தினார் என்றாலும், சினிமா மோகம் அவரை  விடவில்லை.

    கீதையை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய "யாகசாலை'' என்ற நாவலை சொந்தமாக படமாக்க எண்ணினார். 1,200 பக்கங்கள் கொண்ட பெரிய நாவல் இது.

    "இலக்கிய உலகில் பேரும் புகழுமாக இருக்கிறீர்கள். சினிமா நமக்குத் தேவையா?'' என்று மனைவி சொன்னதை அவர் கேட்கவில்லை.

    வேகமாக வசனங்களை எழுதி முடித்தார்.

    இவருடைய நாவல்களில் மனதைப் பறிகொடுத்து, இவருக்கு நண்பரானவர் ஜெமினிகணேசன். அவருக்கு படத்தில் ஒரு முக்கிய வேடம் கொடுக்கத் தீர்மானித்தார்.

    இதன்பின் நடந்தது பற்றி மணிசேகரன் கூறியதாவது:-

    "யாகசாலை நாவலைப் படித்துப் பாராட்டியவர், எம்.ஜி.ஆர். நான் அந்த நாவலைப் படமாக்கப்போகிறேன் என்பதை அறிந்து `இது புரட்சிகரமான நாவல். படமாக வந்தால், நாவலின் ஜீவன் கெட்டுப்போகும். படமாக்கும் முயற்சியைக் கைவிடுங்கள் என்று கூறினார்.

    நான் கேட்கவில்லை. அதாவது, என் விதி, அவர் அறிவுரையைக் கேட்க மறுத்து விட்டது!

    படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்தன.

    இந்தப் படத்தின் கதாநாயகி, நல்ல குடும்பத்தில் பிறந்து, விதி வசத்தால் கற்பை இழக்க, பிறகு அதுவே தொழிலாய் போய்விட, கடைசியில் நோய்வாய்படுகிறாள்.

    இந்தக் காலக்கட்டத்தில் "சிவப்பு ரோஜாக்கள்'' படத்தில் அறிமுகமாகியிருந்த வடிவுக்கரசிக்கு, கதாநாயகி வேடம் கொடுத்தேன்.

    படத்தில் இரு கதாநாயகர்கள். ஒருவர், கீதையில் வரும் கண்ணன் பாத்திரத்துக்கு ஒப்பானவர். அந்தக் கண்ணன் தேர் ஓட்டினான். இந்த கண்ணன் குதிரை ஓட்டுபவன். இந்தப் பாத்திரத்துக்கு பொருத்தமான நடிகர் அமையவில்லை. பலபேரை பார்த்தும் திருப்தி ஏற்படவில்லை.

    இன்று திரை உலகிலும், அரசியலிலும் விஸ்வரூபம் எடுத்துள்ள விஜயகாந்த், அப்போதுதான் திரைப்பட உலகுக்கு வந்திருந்தார். அவரை என்னுடைய `கண்ணன்' கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்த நேரத்தில், விதி விளையாடியது.

    என் கையில் போதிய பணம் இல்லை. படப்பிடிப்புக்கு செல்ல, மேலும் ரூ.30 ஆயிரம் தேவைப்பட்டது. அப்போது ஒரு புதுமுக நடிகர் என்னிடம் வந்தார். நல்ல கதாபாத்திரம் கொடுத்தால் ரூ.30 ஆயிரம் `பைனான்ஸ்' செய்வதாகக் கூறினார். இதனால் நான் விஜயகாந்தை இழக்க நேரிட்டது. அன்று நான் அவரை பயன்படுத்தி இருந்தால், ஒரு சரித்திரத்தின் முதல் அத்தியாயத்தைப் பார்த்தவனாக இருந்திருப்பேன். விதியின் சதியால், அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டாமல் போயிற்று.

    படப்பிடிப்பு தொடங்கியது. முதலில் வெளிப்புறக் காட்சிகளை எடுக்கத் தீர்மானித்தேன். மதராந்தகத்தின் அருகேயுள்ள கோட்டைக்காடு கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது. ஒய்.ஜி.மகேந்திரன், கே.நட்ராஜ், டி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் நடித்தனர்.

    மேற்கொண்டு, ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டபோது, மீண்டும் பணமுடை ஏற்பட்டது. அப்போது, இப்ராகிம் என்ற தயாரிப்பாளர் என்னை நாடி வந்தார். என்னுடைய "அகிலா'' என்ற நாவல், நடிகை சுஜாதாவுக்கு மிகவும் பிடித்தமானதாகும். அவர் சொல்லி, அக்கதையை என்னுடைய இயக்கத்தில் படமாக்க விரும்பி, இப்ராகிம் வந்திருந்தார்.

    வெளிப்படங்களுக்கு வசனம் எழுதி, டைரக்ட் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தேன். அதை அவரிடம் தெரிவித்து, "வேண்டுமானால் கதையை வாங்கிக் கொண்டு, நீங்களே தயாரியுங்கள். கூடுதலோ, குறைவோ, ஒரு தொகையை தவணை முறையில் கொடுக்காமல் மொத்தமாக கொடுத்துவிடவேண்டும்'' என்று தெரிவித்தேன்.

    அதன்படி அவர்கள் ஒரே `செக்' கொடுத்தார்கள். அந்தத் தொகை, "யாகசாலை'' படத்தை தொடர்ந்து உருவாக்க உதவியது.

    யாகசாலை தயாராகிக் கொண்டிருந்தபோதே, "அகிலா'' கதை "மீண்டும் பல்லவி'' என்ற பெயரில் படமாக வெளிவந்தது. `கதை: கோவி.மணிசேகரன்' என்று டைட்டிலில் போட்டார்கள்.

    "யாகசாலை'' 95 சதவீதம் முடிந்து விட்டது. ஜெமினிகணேசன் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் பாக்கி. இந்த நிலையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவருடைய சம்மதத்தைப் பெற்று அந்தப் பாத்திரத்தில் பூரணம் விஸ்வநாதனை நடிக்க வைத்தேன். அவரும் நன்றாக நடித்தார்.

    படம் ரிலீஸ் தேதியை நெருங்கியபோது, ஒரு கடன்காரர் வந்து மென்னியைப் பிடித்தார். படத்தை, "அவுட்ரைட்'' முறையில் நான் விற்று விட்டதால், படம் வெளியான பின்னர் பணம் வராது என்று அவர் நினைத்து விட்டார் போலும்!

    வீடு கட்டுவதற்காக வாங்கியிருந்த நிலத்தை விற்று, கடனை அடைத்தேன்.

    "யாகசாலை'' ரிலீஸ் ஆகியது. நான்கே நாளில் ரிசல்ட் தெரிந்து விட்டது. படம் "அவுட்!'' சென்னை எமரால்டு தியேட்டரில் மட்டும் நான்கு வாரம் ஓடியது.

    அன்றே சினிமாவுக்கு தலைமுழுகத் தீர்மானித்தேன். ஒரு சனிக்கிழமையன்று, எண்ணை வாங்கி வரச்செய்து, தலைமுழுகினேன்!

    என்னிடம் புகழ்வாய்ந்த - உறுதியான பேனா இருந்ததால், என் வாழ்க்கை தப்பியது. இல்லையென்றால், `நடுத்தெரு நாராயணன்' ஆகியிருப்பேன். நான் வணங்கும் சக்தி என்னைக் காப்பாற்றினாள்.

    தொடர்ந்து இலக்கியப்பணிகளில் ஈடுபட்டேன்.

    சென்னை தொலைக்காட்சிக்கு, புதுமுகங்களை வைத்து நான் தயாரித்த "ஊஞ்சல் ஊர்வலம்'' என்ற தொடர், பெரிய வெற்றி பெற்றது.

    அதன் பிறகு திரிசூலி, அக்னிப் பரீட்சை முதலான தொடர்களும் வெற்றி பெற்றன.

    பெரிய திரையில் வெற்றி பெறாமல் போன நான், சின்னத்திரையில் வெற்றி கண்டேன்.

    சினிமாவில் இருந்து விடுபட்டு இலக்கியத்தில் கவனம் செலுத்தியதால், 3,571 பாடல்கள் கொண்ட "கோவி.ராமாயண''த்தை என்னால் எழுத முடிந்தது.

    நான் விதி பற்றி பல முறை குறிப்பிட்டேன். நமக்கு நல்ல வாய்ப்பு வரும்போது, விதி குறுக்கிட்டு கெடுத்து விடும். உதாரணத்துக்கு ஒன்று சொல்வேன்.

    இந்நாளைய இணையற்ற நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 1973-ல் சினிமா உலகில் நுழைய முயற்சி செய்து கொண்டிருந்த சிவாஜிராவ். நான் பாலசந்தரிடம் பயிற்சி பெற்றுவிட்டு, சினிமா தயாரிக்கலாம் என்று இருந்த நேரம்.

    ரஜினியுடன் நடிப்பு பயின்ற கோபால் என்ற நண்பர், ரஜினிக்கு வாய்ப்பு கேட்டு வந்தார். படம் தொடங்கும்போது நிச்சயம் அவர் இடம் பெறுவார் என்று கூறினேன்.

    ரஜினி என் வீட்டுக்கு வருவார். சிகரெட் வித்தைகளை பிள்ளைகளிடம் காட்டி மகிழ்விப்பார்.

    இதற்கிடையே ரஜினி, "அபூர்வராகங்கள்'' படத்தில் அறிமுகம் ஆகிவிட்டார். ஏராளமான படங்களுக்கு ஒப்பந்தம் ஆனார்.

    "தென்னங்கீற்று'' படம் ஆரம்பம் ஆனதும், ரஜினியிடம் பேசினேன். "குரு! இருபது நாட்களுக்கு என்னை விட்டு விடுங்கள். அப்புறம் ஒரு வாரம் பெங்களூர் வந்து உங்கள் மனதைக் குளிரச் செய்கிறேன்'' என்றார்.

    ஆனால், படத் தயாரிப்பாளரோ இதற்கு சம்மதிக்கவில்லை. ஏற்கனவே, மற்ற நடிகர் - நடிகைகளிடம் பெற்ற `கால்ஷீட்'படி உடனே படத்தைத் தொடங்க வேண்டும் என்றார். இதனால் என் படத்தில் ரஜினி இடம் பெறவில்லை. இதை விதி என்று சொல்லாமல், வேறு எப்படி சொல்வது?

    சினிமா உலகில் நுழைந்து விடவேண்டும் என்ற ஆசை கொண்ட இளைஞர்களும், இளம் நங்கையர்களும் ஏராளம். அவர்களுக்கு ஒன்று

    சொல்வேன்:`சினிமா என்பது பல ரசவாத வித்தைக் தெரிந்த ஒரு அழகான மாயமோகினி. அந்த மோகினியிடம் சென்றால், மீள்வது அரிது. அந்த மோகினியின் வித்தையில் பாதியேனும் தெரிந்தவர்கள் தப்பித்து திரும்பி வரலாம்; அல்லது மோகினியை அடிமைப்படுத்தி, அவளைக் காதலிக்கச் செய்யலாம். அந்த வித்தை தெரியாதவர்கள் நுழைந்து விட்டால், அந்த மோகினி நம் ரத்தத்தை உறிஞ்சி, சக்கையாகத்தான்

    துப்புவாள்!''இவ்வாறு கோவி.மணிசேகரன் கூறினார்.

    மணிசேகரன் - சரசுவதி தம்பதிகளுக்கு அம்பிகாபதி, மாமல்லன், செல்வக்கண்ணன் என்ற மூன்று மகன்கள். பீலிவளை, அம்மங்கை, ஸ்ரீ, சமயபுரி, வானதி என்று ஐந்து மகள்கள்.

    மூத்த மகன் அம்பிகாபதி, இளம் வயதில் காலமாகிவிட்டார். மற்ற 7 பேரும் படித்து, பட்டம் பெற்றவர்கள். எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    மனோரஞ்சிதம் படமாகும்போது, பல சோதனைகளைச் சந்தித்தது.
    "மனோரஞ்சிதம்'' படமாகும்போது, பல சோதனைகளைச் சந்தித்தது.

    அதுபற்றி கோவி.மணிசேகரன் கூறியதாவது:-

    "மனோரஞ்சிதம் நாவல், அக்காலத்தில் மிகப்பிரபலம்.

    ஒரு சலவைத் தொழிலாளியின் மகள் தன் வீட்டுக்கு வரும் அழுக்குத் துணிகளில், ஒரு பட்டு ஜிப்பாவில் மட்டும் மனோரஞ்சிதம் வாசனை மணப்பதை கவனிப்பாள். அந்த சென்ட் வாசனையை வைத்து, அதை அணிபவன் எத்தகைய அழகான இளைஞனாக இருப்பான் என்று கற்பனை செய்வாள்; காதல் கொள்வாள். கடைசியில் அவன் ஒரு குஷ்டரோகி என்பதுதான் கிளைமாக்ஸ்!

    எஸ்.வி.சுப்பையாதான், அந்த சென்ட் வாசனை ஜிப்பாக்காரராக நடித்தார்.

    4 பக்கங்கள் கொண்ட நீண்ட வசனத்தை அவர் பேசி நடிக்க வேண்டிய காட்சியைப் படமாக்கும்போது அவருக்கு சோதனை ஏற்பட்டது; எனக்கும் சோதனைதான்!

    "ரத்தக்கண்ணீர்'' படத்தில், எம்.ஆர்.ராதா பேசிக்கொண்டே உடம்பை சொறிந்து கொள்வார். அந்த பாணியில் நடிக்க வேண்டிய சுப்பையா, பேசும்போது சொறிய மறந்து விடுவார்; சொறியும்போது வசனம் மறந்துவிடும்!

    10 முறை படம் எடுத்தும் காட்சி "ஓகே'' ஆகவில்லை.

    நேரம் பகல் ஒரு மணி. சாப்பாட்டு நேரம். இந்த காட்சியை எடுத்து விட்டால், நிம்மதியாக இருக்கும் என்று நினைத்தேன். "ஒன் மோர் டேக்'' என்றேன்.

    சுப்பையாவோ, "சாப்பிட்டு விட்டு வந்து முயற்சிக்கலாமே'' என்றார்.

    நான் விடவில்லை. "அண்ணே! இந்த ஒரு டேக்கில் ஓகே ஆகிவிடும் ப்ளீஸ்!'' என்றேன்.

    ஆனால் சுப்பையா, தன் "விக்''கை கழற்றி எறிந்தார். "பிரேக்'' என்று கூறிவிட்டார்.

    படப்பிடிப்பு முடிந்தது என்பதை குறிப்பிடும் "பிரேக்'' என்ற சொல்லை டைரக்டர்தான் கூறவேண்டும். அதை சுப்பையா கூறியதால் கோபம் அடைந்தேன்.

    "மிஸ்டர் சுப்பையா! `பிரேக்' சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை. பிளீஸ் கெட் அவுட்!'' என்றேன்.

    சுப்பையா கோபித்துக்கொண்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டார். படப்பிடிப்பு ரத்து ஆனது. ஒரு மாத காலம் படப்பிடிப்பு

    நடைபெறவில்லை.சிவாஜிகணேசன் தீர்ப்பு

    நான் எஸ்.வி.சுப்பையாவை அவமானப்படுத்தி விட்டதாக, அவர் தரப்பில் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்கள். நான் டைரக்டர்கள் சங்கத்தில், சுப்பையா மீது புகார் செய்தேன்.

    அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். செயலாளர் மேஜர் சுந்தரராஜன்.

    இரு தரப்பையும் அழைத்து சிவாஜி விசாரித்தார்.

    பிறகு எஸ்.வி.சுப்பையாவை நோக்கி, "நீங்கள் இப்படி நடந்திருக்கக் கூடாது. ஒரு துரும்பைக் கிள்ளி, டைரக்டர் என்று சொன்னாலும், உரிய மரியாதை தரவேண்டும். கோவி.மணிசேகரன் பெரிய இலக்கியவாதி. விருதுகள் பெற்றவர். நாம் எல்லோரும் மதிக்கும் கே.பி.யின் மாணவர். ஒரு டேக் எடுக்க விட்டுக் கொடுக்காமல் `பிரேக்' என்று நீங்கள் சொன்னது தவறு'' என்றார்.

    ஆனால், எஸ்.வி.சுப்பையா தொடர்ந்து நடிக்க மறுத்துவிட்டார். வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகக் கூறினார்.

    "வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிடலாம். ஆனால் இதுவரை ஆன செலவை யார் தருவது? தயவு செய்து நடிக்க வாருங்கள்'' என்று நான் கேட்டுக்கொண்டும், சுப்பையா பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

    நான் கோர்ட்டுக்குப் போகப்போவதாகக் கூறினேன்.

    அப்போது சிவாஜி, மேஜர் சுந்தரராஜனை அழைத்து, "சுந்தர்ராஜா! நீ போய் அந்த குஷ்டரோகி வேடத்தில் நடித்துவிடு. பணம் எதுவும் கேட்காதே!'' என்றார்.

    சிவாஜி இவ்வாறு கூறியதும் மெய்சிலிர்த்துப் போனேன்.

    சிவாஜி சொன்னபடியே, மேஜர் சுந்தரராஜன் அந்த வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.

    படம் 90 சதவீதம் வளர்ந்தபோது, படத்தயாரிப்பாளர் சிதம்பரத்துக்கும் அவருடைய பார்ட்னருக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்டது. அந்த பார்ட்னருடன், என்னால் நியமனம் செய்யப்பட்ட இசை அமைப்பார் வி.குமாரும் சேர்ந்து கொண்டார்.

    மூவரும் என்னை சந்தித்தார்கள். டைரக்டர் பொறுப்பில் இருந்து என்னை விலகிக் கொள்ளச் சொன்னார்கள்.

    சிதம்பரம் நல்லவர். ஆனால், மற்ற இருவரும் செய்த சூழ்ச்சியினால் நான் டைரக்டர் பொறுப்பில் இருந்து விலகினேன்.

    மீதிப்பகுதியை டைரக்டர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவை வைத்து, படத்தை முடிக்க முயற்சி செய்தார்கள்.

    அவர்கள், அதுவரை படமாக்கியிருந்த காட்சிகளைப் போட்டு பார்த்தார்கள். பாதி புரிந்தது; பாதி புரியவில்லை.

    நான் காட்சிகளைப் பகுதி பகுதியாக படமாக்கியிருந்தேன். அதனால் மேற்கொண்டு எப்படி எடுப்பது என்று அவர்கள் குழம்பினார்கள். "முக்கால்வாசி எடுத்த படத்தில் அரை பாகத்தை நீக்கிவிட்டு, கால் பாகத்தை வைத்துக்கொண்டு மீதி படத்தை எடுக்கலாம். சம்மதமா?'' என்று டைரக்டர் பஞ்சு கேட்டார்.

    மீண்டும் கால்ஷீட் பெறுவதில் உள்ள சிக்கல்கள், மேற்கொண்டு ஆகக்கூடிய செலவுகள் என்று யோசித்தபோது, சிதம்பரத்துக்கு தலை

    சுற்றியது."கோவி.மணிசேகரன் வந்து விளக்கங்கள் சொன்னால் தவிர, நாங்கள் இந்தப் படத்தை தொடர்ந்து டைரக்ட் செய்ய இயலாது'' என்று கிருஷ்ணன் - பஞ்சு முடிவாக கூறிவிட்டார்கள்.

    பட அதிபர்கள் வன்நெஞ்சம் அவர்களையே சுட்டது. இனி எப்படி அவர்கள் என்னிடம் வரமுடியும்?

    சிதம்பரத்தை எண்ணி நான் வருந்தினேன் என்பதை விட, கண்ணீர் விட்டேன். அப்படிப்பட்ட நல்ல மனிதர் அவர்.

    மனோரஞ்சிதம் வெளிவராமல் போனதில், இன்னமும் எனக்கு வருத்தம் உண்டு. நட்சத்திரங்கள் நிறைந்த படம். முக்கால்வாசி முடிந்தும், நின்று போய்விட்டது. என்ன செய்வது? இதுதான் விதி!''

    இவ்வாறு மணிசேகரன் கூறினார்.

    கோவி.மணிசேகரன் எழுதிய "தென்னங்கீற்று'' என்ற நாவல், அவருடைய டைரக்ஷனில் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் படமாகியது. இந்தப்படம் கன்னடத்தில் வெற்றி பெற, தமிழில் தோல்வி அடைந்தது.
    கோவி.மணிசேகரன் எழுதிய "தென்னங்கீற்று'' என்ற நாவல், அவருடைய டைரக்ஷனில் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் படமாகியது. இந்தப்படம் கன்னடத்தில் வெற்றி பெற, தமிழில் தோல்வி அடைந்தது.

    "தென்னங்கீற்று'' கதையின் நாயகி பெயர் வசுமதி. இருபத்தெட்டு வயது வரை பூப்படையாத பெண் அவள்.

    ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, கோவி.மணிசேகரன் இந்த நாவலை எழுதியிருந்தார்.

    தமிழ்ப் படத்துக்கு கதாநாயகியாக சுஜாதாவும், கதாநாயகனாக விஜயகுமாரும் ஒப்பந்தம் ஆனார்கள்.

    கன்னடப்படத்துக்கு "நிரீக்ஷே'' (எதிர்பாராதது) என்று பெயரிடப்பட்டது. அப்போது கன்னடத்தில் மிகப்பிரபலமாக இருந்த கல்பனா, (கன்னட) மஞ்சுளா ஆகியோர் கன்னடப்படத்துக்கு ஒப்பந்தம் ஆனார்கள். தமிழில் இரண்டாவது கதாநாயகியாக (டாக்டர் வேடத்தில்) நடிக்கவும் கல்பனா சம்மதித்தார்.

    கன்னடப் படவுலகில் நெம்பர் 1 இசை அமைப்பாளராக விளங்கிய ஜி.கே.வெங்கடேஷ், இரு படங்களுக்கு இசை அமைத்தார்.

    பாலசந்தர் எச்சரிக்கை

    "தென்னங்கீற்று'' படப்பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடந்தது. மணிசேகரன் கேட்டுக்கொண்டதன் பேரில், கே.பாலசந்தர் இந்த படப்பூஜையில் கலந்து கொண்டு, கேமராவை முடுக்கி வைத்து, படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

    ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் படத்தை இயக்கப் போகிறேன் என்று கோவி.மணிசேகரன் சொன்னதும், "என்ன கோவி! முதன் முதலாக டைரக்ட் செய்யப் போகிறீர்கள். எதற்கு இந்த விஷப்பரீட்சை?'' என்று கேட்டார்.

    "ஒரு சோதனைதான்!'' என்றார், மணிசேகரன்.

    "அதற்கில்லை. நானும் தென்னங்கீற்று நாவலைப் படித்திருக்கிறேன். படம் எடுக்க முடியுமா என்று பலநாள் யோசித்து, `முடியாது' என்று கைவிட்டேன். ஒரு பெண் பருவம் அடையவில்லை என்று, 13,000 அடி வரை எப்படி சொல்லப்போகிறீர்கள்? கத்தி மேல் நடப்பது போன்ற இந்தக் கதையை, ஒரே நேரத்தில் இரு மொழிகளில் தயாரிக்கிறீர்கள். இது விஷப்பரீட்சை. ஜாக்கிரதையாக இருங்கள்'' என்று

    எச்சரித்தார்.படப்பிடிப்பை, இரு மொழிகளிலும், ஏக காலத்தில் வேகமாக நடத்தி, குறிப்பிட்ட காலத்தில் முடித்தார், மணிசேகரன்.

    படத்தை வாங்க, விநியோகஸ்தர்கள் ஈபோல் மொய்த்தனர். இரு மொழிகளிலும் பட அதிபருக்கு கொள்ளை லாபம்.

    "தென்னங்கீற்று'' 4-7-1975-ல் ரிலீஸ் ஆயிற்று. அதே சமயத்தில் கன்னடப்படமும் கர்நாடகத்தில் வெளியாயிற்று.

    கன்னடப்படம் 75 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. தமிழ்ப்படம் 4 வாரம்தான்!

    கதையின் மையக்கருத்தை பெண்கள் ஏற்காததால், தமிழ்ப்படம் பெண்களை கவரவில்லை. ஆனால், கர்நாடக ரசிகர்கள், புதுமையை ஏற்றுக்கொண்டார்கள்.

    "தென்னங்கீற்று'' படத்தைப் பார்த்த டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், "இது விருதுக்கு உரிய படம். அனுப்பி வைக்கலாம்'' என்று யோசனை சொன்னார்.

    அவர் கூறியபடியே, "தென்னங்கீற்று'' தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் சங்க விருதைப் பெற்றது. கன்னட "நிரீக்ஷே'', கர்நாடக அரசின் விருதைப் பெற்றது.

    பட அதிபர் எங்கே?

    பட அதிபர் பாபாதேசாய் புத்திசாலி. நிறைய லாபத்தை சம்பாதித்தவர், மீண்டும் படம் எடுப்பதில்லை என்று முடிவு செய்து, வேறு வியாபாரத்துக்கு போய்விட்டார்.

    "தென்னங்கீற்று'' படம் தயாராகி முடிந்திருந்தபோது, அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் தர பல பட அதிபர்கள் கோவி.மணிசேகரன் வீட்டுக்கு படையெடுத்தனர். அவற்றை மணிசேகரன் ஏற்கவில்லை. "படம் வரட்டும்; பிறகு பார்ப்போம்'' என்று கூறிவிட்டார்.

    படம் வெளிவந்து, சரிவர ஓடாததால், அந்தப் பட அதிபர்களில் ஒருவர்கூட மணிசேகரனைத் தேடி வரவில்லை. மூலைக்கு ஒருவராக ஓடி மறைந்துவிட்டனர்!

    "இலக்கியத் துறையில் வெற்றி மேல் வெற்றி பெற்றோம். கலைத்துறையில் மட்டும் ஏனிந்த தோல்வி?'' என்று எண்ணி வருந்தினார், மணிசேகரன்.

    `இனி திரைப்படத்துறையே வேண்டாம்' என்று தீர்மானித்து, மீண்டும் இலக்கியப்பணியில் ஈடுபட்டார். பாதியில் நின்றிருந்த "யாகசாலை'' என்ற நாவலை எழுதி முடித்தார்.

    மனோரஞ்சிதம்

    இந்த சமயத்தில், சிவகாசியில் காலண்டர் வியாபாரம் செய்து வந்த சிதம்பரம் என்ற தொழில் அதிபர், மணிசேகரனை

    சந்தித்தார்."தென்னங்கீற்று'' படத்தால் ஈர்க்கப்பட்டவர் அவர்.

    மணிசேகரனிடம் சிதம்பரம் சொன்னார்:

    "மணிசேகரன் அய்யா! தென்னங்கீற்றில், வயதுக்கு வராத ஒரு பெண்ணை கதாநாயகியாகப் படைத்தது பெரிதல்ல. அவள் வயதுக்கு வந்து விட்டாள் என்பதை உணர்த்த, திரையில் ரத்தச் சிதறலைக் காட்டினீர்களே... ஆ! அது அற்புதம். அதில் மயங்கியே, உங்களை வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறேன்'' என்றார்.

    மணிசேகரன், தனது "யாகசாலை'', "மனோரஞ்சிதம்'' ஆகிய கதைகளைச் சொன்னார். "மனோரஞ்சிதம்'' அவருக்குப் பிடித்துப்போயிற்று. அதை படமாக்குவதாகச் சொன்னார்.

    பட வேலைகள் தொடங்கின. டைரக்டர் துரையால் தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்ட சுமித்ராதான் கதாநாயகி. விஜயகுமார் கதாநாயகன். மற்றும் எஸ்.வி.சுப்பையா, மனோரமா, தேங்காய் சீனிவாசன், புதுமுகம் எம்.எஸ்.வசந்தி, எம்.என்.ராஜம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

    திரைக்கதை, வசனத்தை எழுதி முடித்தார், மணிசேகரன்.

    "மனோரஞ்சிதம்'' படத்தொடக்க விழா அமர்க்களமாக நடந்தது. விழாவுக்கு வந்த அனைவருக்கும் மனோரஞ்சித மலர்

    வழங்கப்பட்டது!("மனோரஞ்சிதம்'' சந்தித்த சோதனைகள் - நாளை)
    டைரக்டர் கே.பாலசந்தரிடம் கோவி.மணிசேகரன் 2ஷி ஆண்டு காலம் உதவியாளராகப் பணியாற்றினார். அந்த காலத்தில் டைரக்ஷன் துறையில் அவர் பெற்ற அனுபவங்கள் ஏராளம்.
    டைரக்டர் கே.பாலசந்தரிடம் கோவி.மணிசேகரன் 2ஷி ஆண்டு காலம் உதவியாளராகப் பணியாற்றினார். அந்த காலத்தில் டைரக்ஷன் துறையில் அவர் பெற்ற அனுபவங்கள் ஏராளம்.

    பாலசந்தரிடம் பணியாற்றியபோது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து கோவி.மணிசேகரன் கூறுகிறார்:

    "விஜயதசமி அன்று இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரிடம் உதவியாளனாகச் சேர்ந்தேன். `அரங்கேற்றம்' படம்தான் எனக்கும் ஆரம்ப அரங்கேற்றம்.

    அவரது சிந்தனை நான்கு திசைகளிலும் சிறகடிக்கும். சிந்தனை அளவுக்கு அவரிடம் சினமும் குடிபுகுந்திருந்தது. ஆயினும் முரட்டுக்கோபம் அல்ல; முன்கோபம்.

    எவருக்கும் `அது இது' என்று எடுத்துச் சொல்லமாட்டார். புத்தி உள்ளவன் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஏறத்தாழ இரண்டரை வருடங்கள் அந்த குருகுலத்து ஏணிப்படிகளை எண்ணலானேன். நானே யோசிப்பேன்; நானே ஆய்வேன்; நானே புரிந்து கொள்வேன்.

    அரங்கேற்றம் டைட்டிலில் ஒரு குடுகுடுப்பைக்காரன் `நல்ல காலம் வருது, நல்ல காலம் வருது' என்று குடுகுடுப்பையைக் குலுக்குவான். அவன் உருவத்தின் மீது என் பெயர் வரும். துணை டைரக்ஷன் - கோவி.மணிசேகரன் என்று! ஆம்; தனி டைட்டில் கார்டுதான்!

    இப்படி தனி டைட்டில் போட்டது குறித்து எங்கள் குழுவில் பிரச்சினை எழுந்தது. குரு கே.பாலசந்தர் சொன்னார்: "அவர் இலக்கிய சாம்ராட் விருது பெற்றவர். நான் அவரை இறக்கி மதித்தால், அவருடைய வாசகர்கள் என்னை இறக்கி மதிப்பிடுவார்கள். எனவே இதுதான் அறம்.''

    அவரது பதில், பலருக்கு இரும்பைக் காய்ச்சி இறக்கியது போலிருந்தது. அன்று முதலே, என் மீது சிலருக்கு எரிச்சல் ஏற்பட்டது.

    இந்திப்படம் செய்கிற போதுகூட, பாலசந்தர் என்னை இறக்கிப் பார்த்ததில்லை. அவருக்கு எழும் இலக்கிய ஐயங்களை நான் அண்ணாந்து வழங்கியதில்லை; அடிபணிந்து வழங்கியிருக்கிறேன்.

    இருமுறை அவர் என்னை கோபித்துக் கொண்டிருக்கிறார்.

    ஒன்று: வசனத்தாளில் திருத்தப்பட்ட வசனங்களை வரிசையாக எழுதத் தவறியது.

    மற்றொன்று: மைசூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, கன்னடத்தில் அதிகமாகப் பேசப்பட்ட கலை நுணுக்கங்கள் நிறைந்த படம் அருகேயுள்ள ஒரு திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படத்தைப் பார்க்க விரும்பினேன். துணைக்கு வர யாரும் இல்லை. ஒரு துணை நடிகையும் அந்தப் படத்தைப் பார்க்கத் துடித்தாள்.

    இயக்குனருக்கு எங்கே தெரியப்போகிறது என்று நினைத்து படத்துக்குப்போனோமë. திரும்பி வரும்போதுதான் தெரிந்தது, கருகருவென ஆசான் காத்திருந்தது!

    நடிகையோ ஓடி ஒளிந்து கொண்டாள். நான் அகப்பட்டுக்கொண்டேன். கே.பி.யின் கண்களில் கோபம். என்னை ஏசிவிட்டு, பிறகு ஒரு குழந்தைக்குக் கூறுவது போல் சொன்னார்:

    "கோவி! நீங்கள் பிரபல எழுத்தாளர். அவளோ நடிகை. நாளை இது பத்திரிகைகளில் வந்தால் எவருடைய பெயர் எப்படிக் கெடும் யோசித்தீர்களா?''

    இவ்வாறு பாலசந்தர் கூறியதும், நான் தலை குனிந்தேன். தவறுக்காக மன்னிப்பு கேட்டேன்.

    பாலசந்தரிடம் 2ஷி ஆண்டுகள் பணியாற்றினேன். அவரிடம் இருந்து விடைபெறும் நேரம் வந்தது. கண்ணீருடன் விடைபெற்றேன். அவர் கண்களும் கலங்கின.''

    இவ்வாறு கோவி.மணிசேகரன் கூறினார்.

    "பாலசந்தரிடம் இருந்து ஏன் விலகினீர்கள்?'' என்று கேட்டதற்கு மணிசேகரன் சொன்னார்:

    "சினிமா துணை டைரக்டராக பணியாற்றியபோது, எனக்கு கிடைத்த வருமானம் குறைவு. அதற்குமுன் புத்தகம் எழுதுவதன் மூலம்தான் வாழ்க்கை நடந்தது. சினிமாவில் பணியாற்றியபோது, மனைவியின் நகைகளை விற்று குடும்பம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

    "திரைத்தொழில் கற்று என்ன சாதித்து விடப்போகிறீர்கள்?'' என்று என் அன்பு மனையாள் கண்ணீருடன் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை.

    தவிரவும், பாலசந்தரின் முக்கிய உதவியாளராக விளங்கிய அனந்துடன் எனக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது.

    இத்தகைய காரணங்களால், நான் பிரிய நேர்ந்தது'' என்று கூறிய மணிசேகரன், தொடர்ந்து சொன்னார்:

    இந்த சமயத்தில், என் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

    நான் எழுதிய "தென்னங்கீற்று'' என்ற நாவல், புத்தகமாக வெளிவந்தது. அதைப் பாராட்டி, "இந்து'' நாளிதழில் விமர்சனம் வெளியாகியிருந்தது.

    பெங்களூரைச் சேர்ந்த பாபாதேசாய் என்ற படத்தயாரிப்பாளர், அந்த விமர்சனத்தைப்  படித்துவிட்டு, அதைப் படமாக்க விரும்பி, என்னைத் தேடி வந்தார்.

    "இந்து பத்திரிகையில் விமர்சனம் படித்தேன். கதை முழுவதையும் சொல்லுங்கள்'' என்று கூறினார். எனக்கே புரியாத எதிர்பாராத அதிர்ச்சி.

    நான் கதையை ஆங்கிலத்தில் சொன்னேன். பாலசந்தர் பட்டறையில் இருந்ததால், சினிமாவுக்கு ஏற்றபடி கதை சொல்லப் பழகியிருந்தேன். பட அதிபரை கவரும் விதத்தில் கதையைச் சொல்லி கலக்கினேன்.

    கதையைக் கேட்டதும் அவர் கண்களில் நீர் மல்கியது. "இக்கதையை கன்னடத்தில் படமாக எடுக்கிறேன். கதைக்கு என்ன விலை?'' என்று கேட்டார்.

    வெறும் கதையை விற்பதற்கா 2ஷி ஆண்டுகள் திரைத்தவம் செய்தேன்!

    "தமிழில் எடுப்பதானால், கதையைத் தருகிறேன். அதுவும் வசனத்தை நானே எழுதி, டைரக்ட் செய்ய வேண்டும்'' என்று கூறி, பாலசந்தரிடம் பணியாற்றியது பற்றி விவரித்தேன்.

    பாலசந்தர் பெயரைச் சொன்னதும், பாபாதேசாய் மகிழ்ந்து போனார். "தமிழிலும், கன்னடத்திலும் எடுப்போம். ஒரே நேரத்தில் இரு மொழிகளில் எடுக்க உங்களால் முடியுமா?'' என்று கேட்டார்.

    "ஏன் முடியாது?'' என்று திருப்பிக் கேட்டேன்.

    "அப்படியென்றால் ஆகட்டும். திரைக்கதை எழுதத் தொடங்கலாம்'' என்று கூறிவிட்டு, முறைப்படி ஒப்பந்தம் போட்டு, அட்வான்சும் வழங்கினார்.'' 
    இலக்கிய உலகில் பெரும் சாதனையாளரான கோவி.மணிசேகரன், டைரக்டர் கே.பாலசந்தரிடம் உதவியாளராகச் சேர்ந்து, சினிமா நுட்பங்களைக் கற்றறிந்தார்.
    இலக்கிய உலகில் பெரும் சாதனையாளரான கோவி.மணிசேகரன், டைரக்டர் கே.பாலசந்தரிடம் உதவியாளராகச் சேர்ந்து, சினிமா நுட்பங்களைக் கற்றறிந்தார்.

    1,000-க்கு மேற்பட்ட சிறுகதைகள்; 200 நாவல்கள்; 10 ஆயிரம் கவிதைகள்; 10 நாடகங்கள் எழுதியவர் கோவி.மணிசேகரன்.

    இவரது சொந்த ஊர் வேலூர். தந்தை கோவிந்தன். தாயார் பட்டம்மாள்.

    இவருக்கு இலக்கிய ஆர்வம் ஏற்படுவதற்கு முன்பே உதயமானது, சினிமா ஆசை.

    சேலம் மாடர்ன் தியேட்டர்சார் நடத்திய "சண்டமாருதம்'' என்ற சினிமா பத்திரிகையில் இவர் பணியாற்றியபோது, சினிமா ஆசை அதிகரித்தது. அப்போது, இப்பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியவர் கண்ணதாசன்.

    தவிரவும், அந்தக் கால சூப்பர் ஸ்டார்களான எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.ï.சின்னப்பா ஆகியோர் பாடிய பாடல்களை அப்படியே பாடக்கூடிய அளவுக்கு இசை ஞானமும், குரல் வளமும் பெற்றிருந்தார், மணிசேகரன்.

    (பிற்காலத்தில் முறைப்படி இசை பயின்று, பட்டம் பெற்றார்)

    இந்தக் காலக்கட்டத்தில், கலைஞர் மு.கருணாநிதி கதை - வசனத்தில் உருவான "மந்திரிகுமாரி'' வெளிவந்தது.

    அந்த வசனங்களைக் கேட்டதும், "தமிழில் இப்படியும் எழுத முடியுமா!'' என்று பிரமித்தார். அதுபோல் தானும் வசனகர்த்தா ஆகவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

    24 வயதானபோது, டி.எஸ்.பாலையா கூட்டுறவோடு எம்.எல்.பதி தயாரித்த "நல்லகாலம்'' என்ற படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா.

    வசனம் எழுதுவதற்கு, கோவி.மணிசேகரனுக்கு கொடுக்கப்பட்ட அட் வான்ஸ் 101 ரூபாய். அதற்கு பிறகு பணம் எதுவும் கிடைக்கவில்லை. காரணம் - படம் சரியாக ஓடவில்லை!

    இதன் பிறகு, 1958-ல் ஜெமினிகணேசன், அஞ்சலிதேவி நடிக்க, அசோகா பிக்சர்ஸ் தயாரித்த "பூலோக ரம்பை'' படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதினார். இசை அமைத்தவர் சி.என்.பாண்டுரங்கம். கோவி.மணிசேகரனுக்குக் கிடைத்த தொகை ரூ.1,000. அக்காலத்தில் இது பெரிய தொகை.

    மணிசேகரன் எழுதிய பாடல்களை ஏ.எம்.ராஜாவும், ராதா - ஜெயலட்சுமியும் பாடினார்கள். இதில் ஒரு சுவையான தகவல் என்னவென்றால், வேலூரில் நரசிம்மலு நாயுடு என்ற சங்கீத வித்துவானிடம் ஏ.எம்.ராஜாவும், கோவி.மணிசேகரனும் ஒன்றாக இசை பயின்றவர்கள்!

    இதற்கிடையே, பத்திரிகைகளில் கதை - கட்டுரைகள், தொடர்கதைகள் எழுதி, பெரும் புகழ் பெற்றார். "இலக்கிய சாம்ராட்'' முதலான பட்டங்களைப் பெற்றார்.

    இலக்கியத்தில் பெரும் வெற்றி கண்ட போதிலும், உள்ளத்தின் அடியில் சினிமா ஆசையும் கனன்று கொண்டிருந்தது.

    1969-ல் "நான்கு திசைகள்'' என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றினார். அடுத்த ஆண்டு "ஜாதிமல்லி'' என்ற நாடகம் மேடை ஏறியது.

    இரண்டு நாடகங்களுக்கும் இசை அமைத்தவர்: இளையராஜா.

    இடையிடையே, சில பட அதிபர்கள் கோவி.மணிசேகரனை அழைத்து, சினிமாவுக்கு கதை கேட்டார்கள்.

    சினிமாவுக்கு கதை சொல்வது என்பது தனிக்கலை. கதையை நன்றாக எழுதத் தெரிந்த எழுத்தாளர்களுக்கு, கதை சொல்லத் தெரியாது. இந்த நìயதிப்படியே, மணிசேகரனின் கதைகள் சினிமா அதிபர்களிடம் "ஓகே'' பெறமுடியவில்லை.

    தீவிரமாக சிந்தித்த மணிசேகரன், ஒரு குருவின் மூலம் சினிமா கலையை கற்றறிய முடிவு செய்தார்.

    அவர் தேர்வு செய்த குரு - இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்!

    இதுபற்றி கோவி.மணிசேகரன் கூறுகிறார்:-

    "யாரிடம் உதவியாளராக சேருவது என்று ஒரு மாதம் வரை ஓயாமல் சிந்தித்தேன்.

    இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் நாடகங்களை நடத்தி வந்த காலம் முதல், அவரை ஓரளவு அறிவேன். அவரிடம் உதவியாளராகச் சேர முயற்சி செய்தால் என்ன?

    அவருடைய திரைப்படங்களுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு இருந்தது. திரை அறிஞர் அவர். "வெள்ளி விழா'' படம் வெளியாகி இருந்த நேரம் அது. அடுத்து "அரங்கேற்றம்'' படம் பண்ணப்போவதாக அறிந்தேன். நமக்கும் இது அரங்கேற்றமாக இருக்கட்டுமே!

    சாதிக்க முடிந்தால் சாதிப்போம். இயலாது போனால், இலக்கியங்களைப் படைப்போம் என்று எண்ணினேன்.

    ஓர் ஆயுத பூஜைக்கு முந்திய நாள், இயக்குனர் சிகரத்தை சந்தித்தேன்.

    என்னைக் கண்டதும், "வாங்க, மணிசேகரன்! ஏது, இந்தப்பக்கம்?'' என்றார்.

    "இமயமலையைப் பார்க்க, பரங்கிமலை வந்திருக்கிறது!'' என்றேன்.

    அவருக்குப் புரியவில்லை. "பரங்கிமலையா? நீங்களா?'' என்றார். "திரை உலகைப் பொறுத்தமட்டில் நான் பரங்கிமலைதான். அதைவிடச் சின்னமலையை நான் அறிந்ததில்லை!'' என்றேன்.

    அவர் கொஞ்ச நேரம் என்னை உற்றுப் பார்த்தார்.

    "திரைக்கலை நுணுக்கம் பயில, ஆசானைத் தேடி னேன். உங்களிடம் வந்திருக்கிறேன்'' என்றேன்.

    "நீங்கள் பெரிய இலக்கியவாதி. என்னிடம்...'' என்று அவர் இழுக்க, நான் இடைமறித்து, "இது விஷயத்தில் உங்கள் முன் நான் `ஏ.பி.சி.டி' மாணவன்'' என்று இதமாகச் சொன்னேன், ஆங்கிலத்தில்.

    அவர் கை விரலில் சுழன்று கொண்டிருந்த சாவிக்கொத்து, நழுவி விழுந்தது. அதுவாக விழுந்ததோ அல்லது அவராகவே நழுவ விட்டாரோ என்னவோ! நான் உடனே அதை எடுத்து, அவரிடம் பணிவுடன் கொடுத்தேன். மீண்டும் ஒரு கணம் என்னை நோக்கியவர், "விஜயதசமியன்று நீங்கள் என்னிடம் விஜயம் செய்யலாம்'' என்றார்.

    நாளை மறுநாள் விஜயதசமி. நாடி நரம்புகள் வீணை போல் நாதம் எழுப்ப, நான் எழுந்தேன்; வணங்கினேன்; விடைபெற்றேன்.''
    விஜயகுமார் திரை உலகில் நுழைவதற்கு முன்பே திருமணமாகி விட்டது. மனைவி பெயர் முத்துக்கண்ணு. இந்த தம்பதிகளுக்கு கவிதா, அனிதா என்ற 2 மகள்கள். அருண் விஜய் என்று ஒரே மகன்.
    விஜயகுமார் திரை உலகில் நுழைவதற்கு முன்பே திருமணமாகி விட்டது. மனைவி பெயர் முத்துக்கண்ணு. இந்த தம்பதிகளுக்கு கவிதா, அனிதா என்ற 2 மகள்கள். அருண் விஜய் என்று ஒரே மகன்.

    விஜயகுமார் நடிகராகப் புகழ் பெற்ற பிறகு, அவர் காதலித்து மணந்தவர் நடிகை மஞ்சுளா.

    விஜயகுமார் -மஞ்சுளா தம்பதிகளுக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி என்று 3 மகள்கள்.

    ஸ்ரீதேவி தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். மற்ற 5 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    தனது குடும்பம் பற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    "அப்பா வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். `கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படியர் மெள்ள மெள்ள வந்து வெள்ளாளரானார்' என்றொரு பாடல் உண்டு. இந்த வழியில் வந்த சமூகம் எங்களுடையது. பட்டுக்கோட்டையை சுற்றிலும் உள்ள 32 கிராமங்களில் எங்கள் சமூகத்தவர்தான் இருக்கிறார்கள். இந்த தொகுதியில் போட்டியிடும் எம்.எல்.ஏ.யின் வெற்றி இந்த 32 கிராமங்களில் உள்ளவர்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

    இந்த சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தில் இருந்தே திருமணம் நடந்தது. மனைவி முத்துக்கண்ணு நான் நடிக்க வரும் முன்னரே எனக்கு மனைவி ஆனவர். என் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்தவர்.

    கலையுலகுக்கு வந்த பிறகு எனக்கு மனைவியான மஞ்சுளா, பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். மனைவியர் இருவருமே சொந்த சகோதரிகள் போல் அன்பு செலுத்துகிறார்கள்.

    மஞ்சுளா பற்றி சொல்ல வேண்டும். திரையுலகில் எம்.ஜி.ஆர் -சிவாஜி என முன்னணி கலைஞர்களுக்கு ஜோடியாக நடித்தவர். ஆந்திராவில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் போன்ற சூப்பர் ஸ்டார்களுடனும் கதாநாயகியாக நடித்தவர். இவர் கலை மூலம் வெளிப்பட்டாலும் இவரது பூர்வீகம் மற்ற துறைகளில் பிரபலமானவர்களைக் கொண்டிருக்கிறது.

    மஞ்சுளாவின் கொள்ளுத்தாத்தா சர் டி.பி.முத்துசாமி அய்யர் சென்னை ஐகோர்ட்டின் முதல் நீதிபதியாக பணியாற்றியவர். அதை நினைவுபடுத்தும் வகையில் சென்னை ஐகோர்ட்டில் அவருக்கு மார்பளவு சிலை வைத்து மரியாதை செய்திருக்கிறார்கள்.

    மஞ்சுளாவின் தாத்தா சர்.டி.ஏகாம்பரம் அய்யர், தமிழ்நாட்டின் முதல் வருமான வரி ஆணையராக இருந்தவர். அப்பா பானிராவ் ரெயில்வேயில் ஐ.ஜி.யாக இருந்தவர். இவர் ஆற்றிய பணி குறித்து இப்போதும் தென்னக ரெயில்வேயில் பெருமையாக பேசிக்கொள்கிறார்கள்.

    மூத்த மகள் கவிதா திருமணமாகி கணவர் ரவிசங்கருடன் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் இருக்கிறாள்.

    அடுத்த மகள் டாக்டர் அனிதாவின் கணவர் கோகுலகிருஷ்ணா. இவர்கள் துபாயில் இருக்கிறார்கள்.

    அடுத்தடுத்த மகள்கள் வனிதாவும், பிரீதாவும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களை மணந்து கொண்டிருக்கிறார்கள்.

    வனிதா மணந்து கொண்ட ஆகாஷ், நடிகர். பிரீதாவின் கணவர் ஹரி, சினிமா டைரக்டர்.

    மகன் அருண் விஜய்க்கு கடந்த ஆண்டு திருமணமானது. மனைவி பெயர் ஆர்த்தி.

    பிள்ளைகள் திருமண விஷயத்தில் நான் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்'' என்ற கண்ணோட்டத்தில் நடந்து கொண்டேன். ஜாதி மத பேதமின்றி ஒரு இந்தியனாக இருந்து காட்டவேண்டும் என்பது என் முடிவான எண்ணம். கலைத்துறைக்குள் வந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பன்மொழிகளிலும் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது, `என்னை ரசிக்கிற நேசிக்கிற இத்தனை மக்களும் என்னை சொந்தம் கொண்டாடியபோதே, `ஒன்றே குலம் ஒருவனே தேவன்' சிந்தனைக்குள் வந்துவிட்டேன்.

    கோடிக்கணக்கில் நான் சம்பாதிக்காவிட்டாலும், கோடிக்கணக்கான ரசிகர் இதயங்களில் இருக்கிறேன். ஒரு கலைஞனான எனக்கு இதைவிட வேறென்ன சந்தோஷம் வேண்டும்? இந்த வகையில் என்னை கலை மூலம் அடையாளம் காட்டிய கலைத்தாய்க்கும் என் நன்றி.

    என்னை இந்த பூமிக்குத் தந்த என் பெற்றோரையும் நான் கொண்டாடி மகிழ்கிறேன். அப்பா எம்.என்.ரெங்கசாமி என் தன்னம்பிக்கைக்கு ஆணிவேராக இருந்தார். அவர் மட்டும் எனது சினிமா கனவுக்கு உயிர் கொடுக்காதிருந்தால், `நிச்சயம் நீ ஜெயிப்பாய்' என்று வாழ்த்தி சென்னைக்கு அனுப்பாதிருந்தால், பஞ்சாட்சரம் என்ற பெயருடன் கிராமத்தில் சாதாரண பிரஜையாகத்தானே இருந்திருப்பேன்.

    இந்த வகையில் கலை மூலம் என்னை உலகறியச் செய்த அப்பாவுக்கு எங்கள் ஊரில் 1995-ம் ஆண்டு ஒரு சிலை எழுப்பியிருக்கிறேன். அப்பா ரைஸ் மில் நடத்திய இடத்தில் தம்பி சக்திவேல் `எம்.என்.ஆர்' என்ற பெயரில் ஒரு திருமண மண்டபம் கட்டியிருக்கிறார். ரைஸ் மில் இருந்த இடத்தில் என் பங்குக்கான பகுதியில் அப்பாவுக்கு சிலை வைத்திருக்கிறேன்.

    என் தாயாருக்கும் சிலை வைக்கும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறேன். அப்பா  95 வயதிலும், அம்மா 90 வயதிலும் இறைவனடி சேர்ந்தார்கள். அது உலகப்பிரகாரம். என் இதயப் பிரகாரம் எப்போதும் என்னுடன் சிலையாக மட்டுமின்றி நிலையாகவும் இருந்து கொண்டிருப்பார்கள்.''

    இவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார்.

    விஜயகுமார் இப்போது நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.
    ×