search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டெர்லைட்"

    ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கு வாதத்தின்போது ஸ்டெர்லைட்நிர்வாகம் தெரிவித்த கருத்துக்கு வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்தார். #SterliteIssue #Vaiko
    சென்னை:

    ம.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலை குறித்த வழக்கு, டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கோயல் தலைமையிலான அமர்வில் இன்று (20.08.2018) விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலை தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம், அரசியல் கட்சிகளின் தூண்டுதலால்தான் தூத்துக்குடியில் போராட்டம் நடந்தது. பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இங்கு வந்துள்ள வைகோ போன்ற அரசியல கட்சித் தலைவர்கள்
    தொடக்கத்திலிருந்து எதிர்த்து வருகின்றனர் என்று கூறினார்.

    அதற்கு வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‘22 ஆண்டுகளாக மக்கள் நலனுக்காக, சுற்றுச் சூழலைக் காப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வருகிறேன். நான் தொடுத்த ரிட் மனு மீது 2010 ஆண்டு ஆலை மூடப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் ஆலையைத் திறப்பதற்குத் தீர்ப்பளித்தாலும், நீதிபதிகள் என்னுடைய பொதுநல நோக்கத்தையும், பணியையும் அந்தத் தீர்ப்பில் பாராட்டினார்கள். சக்திவாய்ந்த பெரிய நிறுவனங்களை எதிர்த்துப் போராட ஒருசிலர்தான் வருவார்கள். அப்படி ஈடுபடுகிறவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றும் அத்தீர்ப்பில் குறிப்பிட்டார்கள்’ என்று வைகோ கூறினார்.

    ‘2018 மே 22, இரத்தம் தோய்ந்த துக்க கரமான நாளாகும். பல்லாயிரக்கணக்கான மக்கள் தாங்களாகவே ஸ்டெர்லைட்டை எதிர்த்து அறப்போராட்டம் நடத்தினர். ஏராளமான பெண்களும், மாணவ - மாணவிகளும் கலந்துகொண்டனர். காவல்துறை திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், மாணவிகள் உள்ளிட்டோர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். வெளி மாநிலங்களிலிருந்து போராட்டத்தைத் தூண்ட எவரும் வரவில்லை. 

    தூத்துக்குடியிலும், சுற்றுவட்டாரத்திலும் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஸ்டெர்லைட் ஆலை நச்சு வாயுவினால் புற்றுநோய், நுரையீரல் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ எனவும் வைகோ கூறினார்.

    ஸ்டெர்லைட் ஆலை குறித்த அனைத்து அம்சங்களையும் விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைக்க தீர்ப்பாயம் முடிவுசெய்தபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் நீதிபதிகளில் ஒருவரை நியமிக்கலாம் என்று நீதிபதி கோயல் கூறியதற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த நீதிபதியையும் நியமிக்கக் கூடாது. அவர்கள் தமிழ்நாட்டு மக்களுடைய மனோநிலையை பிரதிபலிக்கும் நிலையை எண்ணிப் பயப்படுவார்கள். கேரளா, அல்லது கர்நாடகாவைச் சேர்ந்த நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு வைகோ கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகள் நடுநிலை தவறாத நேர்மையாளர்கள். அவர்கள் நேர்மையைச் சந்தேகப்படும் விதத்தில் ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் கூறி இருப்பது மிகவும் துரதிஷ்டவசமானது; எங்கள் மனதை மிகவும் துன்புறுத்துகிறது. யாரை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் முடிவெடுக்கட்டும். ஆலை நிர்வாகம் சொல்லக்கூடாது என்று வைகோ கூறினார்.

    முன்னாள் நீதிபதி ஒருவரின் தலைமையில் இரண்டு வாரத்திற்குள் குழு அமைக்கப்படும் என்றும், நான்கு வாரத்திற்குள் அந்தக் குழு தனது விசாரணை முடிவை தெரிவிக்கும் என்றும் தீர்ப்பாய நீதிபதி கோயல் கூறினார். 

    இந்த வழக்கில் வைகோவுடன் கழக சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ், வழக்கறிஞர் ஆனந்தசெல்வம் ஆகியோர் பங்கேற்றார்கள். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #SterliteIssue #Vaiko
    ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 17-ம் தேதி விசாரிக்க உள்ளது. #SterliteProtest #NGT
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை பிறப்பித்தது.  இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணியை மேற்கொள்ள பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 9-ந்தேதி அனுமதி அளித்தது.

    இந்த தீர்ப்பு தமிழக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.



    இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணியை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதியை எதிர்த்தும்,  தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் தமிழக அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  தமிழக அரசின் சார்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பு கோரிக்கை விடுத்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு மனுவை ஆகஸ்ட் 17-ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. #SterliteProtest #NGT
    கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் இடம் தரக்கூடாது என்று அக்கறை காட்டிய தமிழக அரசு, ஸ்டெர்லைட் விவகாரத்தில் அந்த அக்கறையை காட்டவில்லை என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டி உள்ளார். #Kanimozhi #EdappadiPalanisamy
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் இடம் தரக்கூடாது என்று அக்கறை காட்டிய தமிழக அரசு, ஸ்டெர்லைட் விவகாரத்தில் அந்த அக்கறையை காட்டவில்லை என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டி உள்ளார்.

    இதுதொடர்பாக கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வேதாந்தா நிறுவனம், அதன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினை திறந்து நிர்வாக பணிகளை மேற்கொள்ளலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மே 22-ந்தேதி 13 பேர் கொல்லப்பட்ட பிறகு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.


    வேதாந்தா இந்த தடையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜரானார். வேதாந்தா போன்ற பெரிய நிறுவனத்தை எதிர்த்து வழக்காடுகையில் முதல் நாளே போதுமான கலந்தாலோசனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

    ஆனால் இதற்கான ஆலோசனை, வழக்கு 10.30-க்கு தொடங்க இருந்த நிலையில் அரைமணி நேரம் முன்னதாக 10 மணிக்கு நடைபெற்றுள்ளது. ஏன் தாமதம் என்றால் சி.எஸ். வைத்தியநாதன், தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் தரக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்தார்.

    கலைஞருக்கு இடம் தரக் கூடாது என்பதில் முனைப்பு காட்டிய எடப்பாடி பழனிசாமி அந்த அக்கறையை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் காட்டியிருந்தால் இத்தோல்வி நிகழ்ந்திருக்காது. எடப்பாடி பழனிசாமி வரலாறு காணாத வகையில் தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுதியை குலைத்துக் கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். #Karunanidhi #Kanimozhi #EdappadiPalanisamy
    தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட நடிகை நிலானி குன்னூரில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். #SterliteProtest
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடியில் நடத்தப்பட்ட பேரணியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தொலைக்காட்சி நடிகை நிலானி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

    போலீஸ் உடை அணிந்து நிலானி அந்த வீடியோவில் பேசும் போது, இது தற்செயலாக நடந்தது இல்லை. திட்டமிட்ட படுகொலை. இறந்தவர்களில் 8 பேர் போராட்டத்திற்காக முன்நின்றவர்கள். அவர்களை திட்டமிட்டே கொன்றுள்ளனர். என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார். இதையடுத்து நடிகை நிலானி மீது 4 பிரிவுகளில் தியாகராய நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 



    இந்த நிலையில், நிலானி இன்று குன்னூரில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். #SterliteProtest #Nilani

    ஸ்டெர்லைட் ஆலையில் லேசான ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #Sterlite
    தூத்துக்குடி :
     
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் 100-வது நாள் கலவரம் வெடித்தது, கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதைத்தொடர்ந்து, ஆலையில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே, அதிகாரிகள் குழு ஸ்டெர்லைட் ஆலையில் கசிவு குறித்து ஆய்வு செய்ய உள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருந்தார்.

    சார் ஆட்சியர் தலைமையில் தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பட்டு வாரியம் மற்றும் காவல்துறையை சேர்ந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இன்று மாலை முதல் ஆலையில் ஆய்வு செய்து முடித்துள்ளனர்.

    இந்நிலையில், ஆலையில் லேசான ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது அதிகாரிகள் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது என ஆட்சியர் கூறியதை அடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. #Sterlite
    ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்படுவதாக வெளியான தகவலை அடுத்து அங்கு அதிகாரிகள் குழு ஆய்வு செய்வதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #Sterlite
    தூத்துக்குடி :
     
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் 100-வது நாள் கலவரம் வெடித்தது, கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆலையில் ரசாயன கசிவு ஏற்ப்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் குழு ஸ்டெர்லைட் ஆலையில் கசிவு குறித்து ஆய்வு செய்ய உள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து, சார் ஆட்சியர் தலைமையில் தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பட்டு வாரியம் மற்றும் காவல்துறையை சேர்ந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு மாலை முதல் ஆலையில் ஆய்வு செய்து வருகிறது.

    ஆலையில் ரசாயன கசிவு உள்ளதாக வதந்திகள் பரவக்கூடாது என்பதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என ஆட்சியர்  சந்தீப் நந்தூரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Sterlite
    தமிழக அரசு காவல் துறையை தங்கள் இஷ்டத்துக்கு பயன் படுத்தி வருகிறது என்று டிடிவி தினகரன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TTVDhinakaran #Thoothukudishooting

    ஆலந்தூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது கண்டு கொள்ளாத அரசு துப்பாக்கிசூடு நடத்தி 13 பேரை படுகொலை செய்தது. மக்களை பற்றி இந்த அரசுக்கு கவலை இல்லை.

    படுகொலை நடந்த பிறகு அரசாணை போட்டு ஆலையை மூடுவோம் என்றனர். பின்னர் நிரந்தரமாக மூடுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

    அதேபோல் தான் சேலத்தில் 8 வழி பசுமை சாலையை அமைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அங்கிருக்கும் மக்கள் விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது. பசுமை வழிச் சாலை வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

    சென்னை - பெங்களூர் சாலையில் அதிக போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை 8 வழிச் சாலையாக அரசு மாற்றினால் பரவாயில்லை. அதைவிட்டுவிட்டு போக்குவரத்தே இல்லாத சேலத்தில் சாலை அமைக்கிறார்கள்.

    மற்றொரு தூத்துக்குடி போல சேலம் மாற வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறாரா? அவர் நினைப்பது நடக்காது. அதற்குள் இந்த அரசாங்கத்துக்கு முடிவு வரும்.

     


    சட்டசபையில் டாஸ்மாக் பற்றி நான் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் கொடுக்கிறார். அதற்கு விளக்கம் தர நான் எழுந்த போது அவர் உங்களையும் பற்றி சொல்லவில்லை என்று சபாநாயகர் சொன்னதால் நான் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தேன்.

    பின்பு சபாநாயகருக்கு கடிதம் எழுதினேன். அதில் உறுப்பினர் உரிமையை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும். பேசுவதற்கு வாய்ப்பு தர வேண்டும் என்று கூறி இருந்தேன். சட்டசபையில் எதிர்க்கட்சியினர் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

    எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை என்று முதல்-அமைச்சரிடம் தான் கேட்க வேண்டும். மத்திய அரசின் ஆதரவு இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று மாநில அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது.

    காவல் துறையை தங்கள் இஷ்டத்துக்கு அரசு பயன் படுத்தி வருகிறது. அரசை கண்டு காவல்துறை பயப்படுகிறது. மக்கள் இதை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Thoothukudishooting

    தூத்துக்குடி படுகொலையை நியாயப்படுத்த அரசு ஊழியர்களை மிரட்டி வாக்குமூலம் வாங்குவதாக பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.#sterliteprotest #ThoothukudiFiring

    சென்னை:

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக வரலாற்றில் இது வரை இல்லாத வகையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி பொது மக்கள் 13 பேரை சுட்டுக் கொன்ற தமிழகக் காவல்துறை, அதை நியாயப்படுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களை கட்டாயப்படுத்தி போலி வாக்குமூலம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. காவல் துறையின் இந்த சட்டவிரோத செயல் கண்டிக்கத்தக்கது ஆகும்.

    தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று காலை பணிக்கு வந்த பணியாளர்களின் மேசைகளில் காவல்துறை சார்பில் ஒரு படிவம் வைக்கப்பட்டிருந்தது. அதில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய பேரணியின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் என்ன நடந்தது? போராட்டக்காரர்களால் ஆட்சியர் அலுவலகப் பணியாளர்களுக்கு எத்தகைய காயங்கள் ஏற்பட்டன.

    பொதுச்சொத்துக்கள் எந்தெந்த வகையில் சேதப்படுத்தப்பட்டன என்பன உள்ளிட்ட விவரங்களை ஒவ்வொரு பணியாளரும் அவர்களின் பெயர், முகவரி, பதவி உள்ளிட்ட விவரங்களுடன் தெரிவிக்க வேண்டும் என்று கோரப் பட்டிருந்தாக செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கோரப்பட்டிருந்த விவரங்களை காவல்துறையினர் விரும்பும் வகையில் நிரப்பித் தரும்படி ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மேலதிகாரிகளின் அனுமதியின்றி இத்தகைய விவரங்கள் கோரப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த வருவாய்த்துறை ஊழியர்கள், உடனடியாக தங்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தைக் கூட்டி, படிவத்தை நிரப்பித் தருவதில்லை என்று தீர்மானித்தனர் அதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் படிவத்தை நிரப்பித்தர மறுத்து விட்டனர்.

     


    தூத்துக்குடியில் அப்பாவி பொது மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவதற்கு எந்த காரணமும் இல்லை. அதனால் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்களை போராட்டக்காரர்கள் தாக்கினார்கள். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக போலியான ஆதாரங்களை ஏற்படுத்தும் முயற்சியில் காவல் துறையும், தமிழக அரசும் ஈடுபட்டுள்ளன.

    அதன் ஒரு கட்டமாகவே ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் தாக்கப்பட்டதாக அவர்களிடமிருந்தே பொய்யான வாக்குமூலத்தை கட்டாயப்படுத்தி மிரட்டி வாங்க காவல்துறை துடிக்கிறது. அதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் உடன்படாததால் பெரும் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

    ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச் சூடு உள்ளூர் காவல்துறை நிலையில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. எங்கிருந்தோ தமிழக ஆட்சியாளர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தான் உள்ளூர் காவல்துறை மூலம் செயல்படுத்தப்பட்டது. அந்த துப்பாக்கிச்சூட்டுக்கு துணை வட்டாட்சியர்கள் தான் ஆணையிட்டதாக ஒரு நாடகத்தை தமிழக அரசு அரங்கேற்றியது.

    ஆனால், சம்பவ இடத்திலேயே இல்லாத துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிட்டதாக போலியான ஆவணங்கள் தயாரித்து, அதுவும் அம்பலமானது. அதனால் வேறு வழியின்றி இப்படி நாடகத்தை அரங்கேற்ற அரசு முயல்கிறது. செய்த குற்றத்தை மறைக்க அரசே போலி ஆவணங்களை தயாரிப்பது அருவருக்கத்தக்கது.

    சட்டப் பேரவையில் பேசுவதே விசாரணையை பாதிக்கும் எனும் போது, விசாரணையுடன் சம்பந்தமில்லாத உள்ளூர் காவல் துறை ஆட்சியர் அலுவலக ஊழியர்களை மிரட்டி வாக்குமூலம் பெறுவது விசாரணையை பாதிக்காதா? என்பதை முதல்- அமைச்சர் விளக்க வேண்டும். இதன் பின்னணியிலுள்ள சக்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை மேற் கொள்ளப்பட வேண்டும்.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து நடை பெற்றுவரும் நிகழ்வுகள் அனைத்துமே, இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதைத் தான் உறுதி செய்கின்றன. எனவே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த நீதி விசாரணைக்கு பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளை அமர்த்த வேண்டும். அதேபோல், இதுகுறித்த குற்ற வழக்கின் விசாரணையை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #sterliteprotest #ThoothukudiFiring

    போலீசாரின் எப்.ஐ.ஆரில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி புகார் அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரி கோபால், நான் எந்த புகாரும் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். #ThoothukudiShooting

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூட்டை தொடர்ந்து வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகம் சூறையாடப்பட்டது. தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் போலீஸ் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது.

    இந்த சம்பவங்கள் குறித்து தூத்துக்குடி வடபாகம், சிப்காட், தென்பாகம் போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதில் திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கோபால் புகார் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    தற்போது திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலராக கண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். கோபால் ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலராக பணியில் உள்ளார்.

    துப்பாக்கி சூடு விவகாரத்தில் போலீசார் தவறுதலாக தனது பெயரை பயன்படுத்தியதாக ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலர் கோபால், உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார்.

     


    அதில், ‘துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த 22-ந்தேதி நான் தூத்துக்குடி சப்-கலெக்டர் உத்தரவின் பேரில் நிர்வாக நடுவராக 3-வது மைல் பகுதியில் பணியில் இருந்தேன். அந்த பகுதியில் எவ்வித பிரச்சினையும் இல்லை. இது தொடர்பாக நான் எதுவும் புகார் அளிக்கவும். ஆனால் நான் முன்பு பணிபுரிந்த திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பதவியை குறிப்பிட்டு தென்பாகம் போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனால் நானும், எனது குடும்பத்தாரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். எனவே இதுபற்றி உண்மை தன்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

    இந்த கடிதம் காவல்துறை வட்டாரத்திலும், அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வட்ட வழங்கல் அலுவலர் கோபாலுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க செயலாளர் செந்தூர்ராஜன், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் நேற்று மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ந்தேதி போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட அசம்பாவிதம் தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கோபால் என்பவர் புகார் அளித்ததாகவும், அதன்பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து உள்ளன.

    கோபால் தற்போது ஸ்ரீவைகுண்டத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் அவர் புகார் அளிக்கவில்லை என மறுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் வருவாய்த்துறை அலுவலர்களை இது போன்ற பொய்யான புகார் அளிக்க வற்புறுத்துவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தென்பாகம் போலீசார் முதல் தகவல் அறிக்கையில் பொய்யான பெயரை குறிப்பிட்டிருப்பதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ThoothukudiShooting

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி ஸ்னோலின் உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. #Thoothukudifiring

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பேரணியாக சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன. இதில் சண்முகம் (38), செல்வசேகர் (42), கார்த்திக் (20), கந்தையா (58), காளியப்பன் (22), ஸ்னோலின் (17), தமிழரசன் (42) ஆகிய 7 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

    இந்த நிலையில் 7 பேரின் உடல்களையும் டெல்லி எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர் அல்லது திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தலைமையில் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் அம்பிகா பிரசாத் பத்ரா தலைமையில், தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவர்கள் மனோகரன், சுடலைமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர், நீதித்துறை நடுவர்கள் முன்னிலையில் உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து முதல் கட்டமாக மறு பிரேத பரிசோதனை முடிந்த சண்முகம், கார்த்திக், செல்வ சேகர் ஆகிய 3 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.தொடர்ந்து காளியப்பன், கந்தையா ஆகியோரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    நேற்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த தமிழக செய்தி மற்றும் விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர் ராஜூ துப்பாக்கி சூட்டில் பலியாகி மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட தமிழரசன் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து அவர்கள் தமிழரசனின் உடலை பெற்றுக்கொண்டனர்.


    இதையடுத்து தமிழரசனின் உடல் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. மாணவி ஸ்னோலின் உடலை பெற உறவினர்கள் தொடர்ந்து மறுத்து வந்தனர். அவர்களிடம் மாவட்ட நிர்வாகம் சார்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது மாணவி ஸ்னோலின் உடலை பெற அவர்களது உறவினர்கள் சம்மதித்தனர். இதைத்தொடர்ந்து ஸ்னோலினின் தாய் வனிதாவிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

    பிரேத பரிசோதனை செய்யப்படாத அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், ஜான்சி, மணிராஜ், ரஞ்சித்குமார், ஜெயராமன் ஆகிய 6 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    ஐகோர்ட்டு உத்தரவுப்படி வருகிற 6-ந்தேதிக்கு பிறகு இவர்களது உடல் பிரேத பரிசோதனை செய்யப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Thoothukudifiring

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சீத்தாராம் யெச்சூரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #Thoothukudifiring #SitaramYechury

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இன்று தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி திரேஸ்புரத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான ஜான்சியின் வீட்டிற்கு அவர் சென்றார். அங்கு ஜான்சியின் குடும்பத்தினரை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

    அங்கு காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை தனித்தனியாக சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். அப்போது அமைதியாக போராட்டம் நடத்திய எங்கள் மீது போலீசார் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டனர் என சரமாரியாக புகார் கூறினர். அவர்களிடம் விவரங்களை கேட்ட சீத்தாராம் யெச்சூரி இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக தெரிவித்தார். #Thoothukudifiring #SitaramYechury

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணைய குழுவினரின் விசாரணை இன்று 2-வது நாளாக நடைபெற்றது. #ThoothukudiShooting

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ந் தேதி நடந்த பேரணியின்போது கலவரம் வெடித்தது. இதைக் கட்டுப்படுத்த காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    துப்பாக்கி சூடு குறித்து மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்களான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்தரஞ்சன் மோகன்தாஸ், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயசந்திரன், சத்தியபிரியா, பாலகிருஷ்ண பிரபு மற்றும் மாநில மனித உரிமை ஆணைய உதவி பதிவாளர் வாசுதேவன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.

    கலவரத்தின்போது சேதப்படுத்தப்பட்ட தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம், தீ வைத்து எரிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கூடம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பு, இறந்தவர்களின் வீடுகள், திரேஸ்புரம் பகுதி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரிடமும் விசாரணை நடத்தினர்.

    மேலும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிர் இழந்த கார்த்திக், சண்முகம் ஆகியோர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து, விருந்தினர் மாளிகையில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.


    பின்னர், நேற்று மாலை அவர்கள் சென்னை புறப்பட்டுச் சென்றனர். பின்னர் மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி ஜெயச்சந்திரன் கூறுகையில், “எங்களது விசாரணை அறிக்கையை ஓரிரு நாளில் மனித உரிமை ஆணைய தலைவரிடம் சமர்ப்பிப்போம்” என்றனர்.

    இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக தேசிய மனித உரிமை ஆணைய குழு நேற்று மாலை தூத்துக்குடிக்கு வந்தது. இந்த குழுவில் தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினரும், மூத்த போலீஸ் சூப்பிரண்டுமான புபுல் பிரிட்டோ பிரசாத் தலைமையில், உறுப்பினர்கள் ரஜ்வீர்சிங், நிதின்குமார், அருண் தியாகி, லால் பகர் ஆகியோர் இடம் பெற்றிருந்த‌னர்.

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.


    அப்போது அவர்கள், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கலவரத்தின்போது ஜன்னல், கதவுகள் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டு இருந்ததையும், இருசக்கர வாகனங்கள், கார்கள் தீவைத்து எரிக்கப்பட்டு சேதமடைந்து கிடப்பதையும் பார்வையிட்டனர். தொடர்ந்து அவர்கள் கலவரம் நடந்த ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் தீவைக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டனர்.

    தேசிய குழுவினரின் விசாரணை இன்று 2-வது நாளாக நடைபெற்றது. இன்று துப்பாக்கி சூடு தொடர்பான‌ பல்வேறு வீடியோ பதிவு காட்சி பதிவுகளையும் பார்வையிட்டனர். பின்பு பேரணி புறப்பட்டு தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் மற்றும் மடத்தூர் பகுதிகளையும் அவர்கள் பார்வையிட்டனர். இந்த குழுவினர் வருகிற 7-ந் தேதி வரை பல்வேறு தரப்பினரையும் சந்தித்து விசாரணை நடத்த உள்ளனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரிடமும், காயமடைந்தவர்களிடமும் அவர்கள் விசாரணை நடத்த உள்ளனர்.

    இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நாளை(திங்கட்கிழமை) தூத்துக்குடிக்கு வருகிறார். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக தூத்துக்குடி பழைய விருந்தினர் மாளிகையில் முகாம் அலுவலகத்திலும் விசாரணை ஆணையம் செயல்பட இருக்கிறது.

    இங்கு நீதிபதி அருணா ஜெகதீசனிடம் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அவரவருக்கு தெரிந்த தகவல்களை சத்திய பிரமான உறுதிமொழி பத்திரவடிவில் விசாரணை ஆணையத்தில் தலைமை அலுவலகம், முகாம் அலுவலகத்தில் நேரிலோ, தபால் மூலமோ வருகிற 22-ந் தேதி வரை வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. #ThoothukudiShooting

    ×