search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துருக்கி"

    துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட 1,112 பேரை கைது செய்ய துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. #Turkey #GulenLink
    அங்காரா:

    துருக்கியில் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தாயீப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்தது. ஆனால் மக்கள் ஆதரவுடன் அதிபர் அந்த புரட்சியை முறியடித்தார்.

    அமெரிக்காவில் வசித்துவரும் துருக்கியை சேர்ந்த மத குரு பெதுல்லா குலென் தான், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு காரணம் என தாயீப் எர்டோகன் குற்றம் சாட்டினார். அதனை தொடர்ந்து அவர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தொடங்கினார்.



    இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை போலீஸ் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் என 77 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இந்த நிலையில், தற்போது மத குரு குலனுடன் தொடர்புடைய 1,112 பேரை கைது செய்ய துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. போலீஸ் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
    சிரியாவின் எல்லையில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது, துருக்கி தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். #Trump #SyrianKurds
    வாஷிங்டன்:

    சிரியாவில் ஆதிக்கம் செலுத்திய ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டுவதற்கு அமெரிக்க படைகள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2015-ம் ஆண்டு முதல்முறையாக அப்போதைய ஜனாதிபதி ஒபாமா உத்தரவின்பேரில், சிரியாவில் ஐஎஸ் அமைப்பினரோடு போரிட்டு வந்த உள்ளூர் குர்திஷ் போராளிகளுக்கு உதவ அமெரிக்க துருப்புகள் அங்கு சென்றன.

    அதன்பின்னர் அமெரிக்க படையினர், ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து வான்தாக்குதல்கள் நடத்தி, பல நகரங்களை அவர்களிடம் இருந்து மீட்டனர். அமெரிக்க படைகள் வருகைக்கு பிறகு அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பெருத்த பின்னடைவை சந்தித்தனர்.

    சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவும், எனவே அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த மாத இறுதியில் அதிரடியாக அறிவித்தார். அதன்படி சிரியாவில் இருந்து அமெரிக்க வீரர்கள் வெளியேறி வருகிறார்கள்.



    இதற்கிடையே தாங்கள் பயங்கரவாதக் குழுவாகக் கருதும் குர்திஷ் படைகள் மீது ராணுவத் தாக்குதல் தொடங்க உள்ளதாக அண்டை நாடான துருக்கி அறிவித்தது. இந்த விவகாரம், அமெரிக்கா, துருக்கி இடையே மோதல் போக்கை உருவாக்கி உள்ளது.

    சிரியாவில் உள்ள குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தினால், பொருளாதார ரீதியாக துருக்கி நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்துவோம் என்றும், 20 மைல் சுற்றளவுக்கு பாதுகாப்பு மண்டலம் உருவாக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அதேசமயம், துருக்கியின் ஆத்திரத்தை தூண்டும் வகையில் குர்துக்கள் நடந்துகொள்வதை விரும்பவில்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தினால், துருக்கி மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கலாம் என தெரிகிறது. #Trump #SyrianKurds
    துருக்கி நாட்டில் கார் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. #TurkeyCarAccident
    இஸ்தான்புல்:

    துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள தெக்ரிடாக் மாநிலத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலைதடுமாறிய கார் சாலையில் கவிழ்ந்து விழுந்தது.

    இந்த விபத்தில் காரில் இருந்த குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.

    தகவல் அறிந்து மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அங்கிருந்து 8 உடல்களை மீட்டனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    துருக்கியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார்  விசாரித்து வருகின்றனர். #TurkeyCarAccident
    சிரியா எல்லையில் துருக்கியின் தாக்குதலை தடுப்பதற்காக குர்து போராளிகள், அதிபர் பஷார் அல் ஆசாத்துடன் புதிய கூட்டணியை அமைத்து உள்ளன. #Syria #Kurdish
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் 2011-ம் ஆண்டு, மார்ச் 15-ந் தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் தொடங்கியது. 9-வது ஆண்டாக அது நீடிக்கிறது.

    இந்த உள்நாட்டுப் போரைப் பயன்படுத்தி அங்கே காலூன்றிய ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதற்காக அமெரிக்கா 2 ஆயிரம் படை வீரர்களை சிரியாவுக்கு அனுப்பியது.

    ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் மீது அமெரிக்க படையினர் தொடர் தாக்குதல்கள் நடத்தி அவர்களது கட்டுப்பாட்டில் இருந்து பல நகரங்களை மீட்டனர்.

    இந்தநிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் கடந்த 19-ந் தேதி, “சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரை வீழ்த்தி விட்டோம், அமெரிக்க படைகள் அங்கிருந்து திரும்பப்பெறப்படுகின்றன” என்ற அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார்.

    இது உலக அரங்கை உலுக்கியது. அமெரிக்க படைகள் வாபஸ், சிரியாவில் மீண்டும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கும் என விமர்சனங்கள் எழுந்தன.

    ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினை அமெரிக்கா வீழ்த்துவதற்கு சிரியாவில் குர்து போராளிகள் பக்க பலமாக இருந்தனர். அமெரிக்கா படைகளை திடீரென வாபஸ் பெறுவதாக அறிவித்து, தங்களுக்கு துரோகம் செய்து விட்டதாக அவர்கள் கருதுகின்றனர்.

    குர்து போராளிகள், தென் துருக்கி எல்லையில் தன்னாட்சி பிரதேசத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக 30 ஆண்டுகளாக போராடி வருகிற நிலையில், அவர்களை பயங்கரவாதிகள் என கூறி துருக்கி தடை செய்துள்ளது.

    சிரியாவில் இருந்து படைகள் வாபஸ் என்று அமெரிக்கா அறிவித்ததும், இதுதான் சமயம் என துருக்கி அதிபர் எர்டோகன் முடிவுக்கு வந்து, குர்து போராளிகளை ஓழித்துக் கட்ட வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்.

    சிரியா, துருக்கி எல்லையில் குர்து போராளிகள் தன்னாட்சி பிரதேசத்தை கட்டமைத்து விடக்கூடாது என்பதில் அவர் தீவிரமாக இருக்கிறார்.

    இந்தநிலையில் சிரியா அரசுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்கு குர்து போராளிகள் தள்ளப்பட்டனர்.

    அமெரிக்க படை விலகலால், தங்களுக்கு எதிராக இப்போது துருக்கி படைகள் போர்க்கோலம் பூண்டுள்ள நிலையில், ரஷியா மற்றும் ஈரான் ஆதரவை பெற்றுள்ள சிரியா படைகளுடன் கூட்டு சேர்ந்தால் மட்டுமே துருக்கியின் தாக்குதலை தடுக்க முடியும் என்பதுதான் குர்து போராளிகள் நிலை.

    அதன் ஒரு அங்கமாக சிரியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மான்பிஜ் நகரை அவர்கள் சிரியா படைகளுக்கு விட்டுக்கொடுத்து விட்டனர். அங்கிருந்து குர்து போராளிகள் விலகிக்கொண்டு அங்கு சிரியா படைகளை வரவழைத்துள்ளனர்.

    சிரியா படைகளும் அந்த நகரத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலாக நுழைந்து இருக்கின்றன. அங்கு சிரியா படைகள் கொடியை ஏற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்துடன் புதிய கூட்டணியை அமைத்துள்ள குர்து போராளிகளை இனி துருக்கி என்ன செய்யும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் என்று உலக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
    தூதரகத்துக்குள் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டபோது, பதிவான ஆடியோ பதிவு குறித்து டெலிவிஷனில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. #JamalKhashoggi #Saudi
    வாஷிங்டன்:

    துருக்கி தலைநகர் இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் 2-ந் தேதி சென்ற சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, அங்கு கொலை செய்யப்பட்டார். முதலில் இதனை மறுத்த சவுதி அரேபியா பின்னர் ஒப்புக்கொண்டது.

    இந்த நிலையில், தூதரகத்துக்குள் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டபோது, பதிவான ஆடியோ பதிவு குறித்து சி.என்.என். டெலிவிஷனில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

    அந்த ஆடியோ டேப்பில், ‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ என ஜமால் கசோக்கி கூறியதை கேட்க முடிகிறது. மேலும் ஜமால் கசோக்கியின் கடைசி நிமிடங்கள் குறித்து கொலையாளிகள் தொடர்ந்து செல்போனில் தகவல் தெரிவித்துக்கொண்டே இருந்ததும் தெரிகிறது. ஜமால் கசோக்கி இறந்த பின்னர் அவரது உடலை ரம்பம் மூலம் அறுத்து கூறுபோடும் சத்தமும் ஆடியோவில் பதிவாகி இருக்கிறது. இந்த ஆடியோ பதிவு மூலம் ஜமால் கசோக்கி திட்டமிட்டே படுகொலை செய்யப்பட்டார் என்பது உறுதியாகி இருப்பதாக அமெரிக்கா தரப்பில் கூறப்படுகிறது. மேலும் ஜமால் கசோக்கியின் கடைசி தருணம் பற்றி தகவல்கள் பரிமாறப்பட்ட செல்போன் அழைப்புகள் அனைத்தும் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்ததை துருக்கி உளவுத்துறை அமைப்புகள் உறுதி செய்து உள்ளன.

    இவ்வாறு சி.என்.என். டெலிவிஷனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, ஜமால் கசோக்கி கொலையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சால்மானின் நெருங்கிய கூட்டாளிகள் 2 பேரை துருக்கிக்கு நாடு கடத்த வேண்டும் என துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் விடுத்த கோரிக்கையை சவுதி அரேபியா நிராகரித்து விட்டது.
    சவுதி அரேபிய துணைத் தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமாக திட்டமிடப்பட்ட செயல் என துருக்கி அரசு குற்றம் சாட்டியுள்ளது. #JamalKhashoggi
    இஸ்தான்புல்:

    சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர், மாயமானார்.

    அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வந்தது.

    பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயமானது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டார். சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி போலீஸ் அதிகாரிகள் இஸ்தான்புல் துணை தூதரகம் சென்று விசாரித்தனர்.

    இதற்கிடையே, இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார் என சவுதி அரேபியா உறுதி செய்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.



    இந்நிலையில், சவுதி அரேபிய துணைத் தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமாக திட்டமிடப்பட்ட செயல் என துருக்கி அரசு குற்றம் சாட்டியுள்ளது.

    இதுதொடர்பாக, துருக்கி நாட்டின் ஆளும் கட்சியான நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சி செய்தித் தொடர்பாளர் ஒமர் செலீக் அங்காராவில் கூறுகையில், இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி துணைத் தூதரகத்துக்குச் சென்ற பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமான முறையில் முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட செயல்.

    அந்த உண்மையை மூடி மறைப்பதற்கு கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தை வெறும் யூகமாகவே வைத்திருக்க துருக்கியால் முடியாது. கசோக்கி படுகொலை விவகாரத்தில் சவுதி அரேபியாவுடன் நாங்கள் சமரசம் செய்து கொண்டால், அது நீதிக்குப் புறம்பானது என் தெரிவித்தார். #JamalKhashoggi
    துருக்கியில் சவுதி பத்திரிகையாளர் மாயமான விவகாரம் தொடர்பாக சவுதி அரேபிய சர்வதேச மாநாட்டை அமெரிக்கா, இங்கிலாந்து புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Boycott #SaudiConference #Journalist
    லண்டன்:

    துருக்கியில் சவுதி பத்திரிகையாளர் மாயமான விவகாரம் விசுவரூபம் எடுக்கிறது. அவர் சவுதி அரேபியாவால் கொல்லப்பட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பதால், அங்கு நடக்க உள்ள சர்வதேச மாநாட்டை அமெரிக்கா, இங்கிலாந்து புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59). இவர் சவுதி அரேபிய மன்னராட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். ஏமனில் சவுதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்தி வருகிற வான்தாக்குதல்களையும் கடுமையாக சாடி வந்தார்.



    இந்த நிலையில் இவர் கடந்த 2-ந் தேதி துருக்கியில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணைத்தூதரகத்துக்கு சென்றபோது, மாயமாகி விட்டார். அவர் அந்த துணைத்தூதரக கட்டிடத்தின் முக்கிய நுழைவு வாயிலுக்குள் நுழைந்ததைப் பலரும் பார்த்துள்ளனர்.

    அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என்பது உறுதிபடத் தெரியவில்லை.

    அதே நேரத்தில் அவர் அந்த தூதரக கட்டிடத்துக்குள் வைத்து, சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொலை செய்யப்பட்டு விட்டதாக நம்பப்படுகிறது. இதற்கு சவுதி அரேபியாதான் காரணம் என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.

    ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சவுதி அரேபியா மறுத்து வருகிறது.

    அவர் அந்த தூதரக கட்டிடத்தின் பின்புற வாயில் வழியாக உயிருடன் வெளியேறி விட்டதாக சவுதி அரேபியா கூறுகிறது. ஆனால் அவர் அப்படி வெளியேறியதற்கு ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஏதும் இல்லை என்று துருக்கி சொல்கிறது.

    இந்த விவகாரத்தில் சவுதி அரேபியா மீது அமெரிக்கா கடும் கோபம் கொண்டுள்ளது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “ஜமால் கசோக்கி கொல்லப்பட்டிருந்து, அதற்கு சவுதி அரேபியாதான் காரணம் என்றால், அந்த நாட்டினை கடுமையாக தண்டிப்பேன்” என எச்சரித்துள்ளார்.

    இந்த நிலையில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் சீர்திருத்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக, இந்த மாநாடு நடப்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    அப்படிப்பட்ட இந்த மாநாட்டை சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி விவகாரத்தினால், ஆதரவாளர்கள் (ஸ்பான்சர்கள்) பலரும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். அத்துடன் ஊடகங்கள் பலவும் புறக்கணிக்க உள்ளன.

    இப்போது இங்கிலாந்தும், அமெரிக்காவும் கூட இந்த மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    அமெரிக்க கருவூல மந்திரி ஸ்டீவ் மனுசின், இங்கிலாந்து சர்வதேச வர்த்தக செயலாளர் லியாம் பாக்ஸ் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார்கள் என பி.பி.சி.க்கு தகவல்கள் கிடைத்துள்ளன.  #Boycott #SaudiConference #Journalist 
    பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சனை விடுதலை செய்யாவிட்டால், துருக்கி மீதான நடவடிக்கை தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார். #USTurkeyClash
    வாஷிங்டன்:

    அமெரிக்காவை சேர்ந்தவர் பாதிரியார், ஆண்ட்ரூ பரன்சன். இவர் துருக்கியில் வசித்துக்கொண்டு அங்கு ஒரு ஆலயத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், அவர் அங்கு உள்ள குர்து இன போராளிகள் குழுவுடன் தொடர்புகள் வைத்து இருக்கிறார், உளவு வேலைகளில் ஈடுபடுகிறார் என்று கூறி, துருக்கி அரசு கைது செய்து 2 ஆண்டுகளாக சிறைக்காவலில் வைத்து உள்ளது.

    ஆனால் அவரை விடுதலை செய்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற டிரம்ப் நிர்வாகத்தின் வேண்டுகோளை துருக்கி ஏற்க மறுத்து விட்டது.

    இதன் காரணமாக துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின்மீது 2 மடங்கு வரி விதித்து டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக துருக்கியின் நாணய மதிப்பு வெகுவாக சரிந்து உள்ளது. ஆனாலும் துருக்கி தளர்ந்துபோகாமல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்கிற பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பை அறிவித்து உள்ளது. இதனால் துருக்கியின் நாணய மதிப்பு சற்று உயர்ந்து உள்ளது.


    இந்த நிலையில், பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சனை விடுதலை செய்யாவிட்டால், துருக்கி மீதான நடவடிக்கை தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.

    இதுபற்றி டுவிட்டரில் அவர் வெளியிட்டு உள்ள பதிவில், “பல்லாண்டு காலம் அமெரிக்கா மூலம் துருக்கி பலன் அடைந்து உள்ளது. பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் தேசப்பற்றாளர். அந்த அப்பாவி மனிதரை விடுதலை செய்வதற்காக நாங்கள் எதுவும் தர மாட்டோம். ஆனால் நாங்கள் துருக்கி மீது மீண்டும் நடவடிக்கை எடுப்போம்” என கூறி உள்ளார். எனவே துருக்கியில் இருந்து இறக்குமதி செய்கிற மேலும் பல பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதிப்பை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.  #USTurkeyClash
    2 ஆண்டுகளுக்கு பின்னர் துருக்கியில் அதிபர் எர்டோகன் நேற்று முன்தினம் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டு வந்தார்.
    அங்காரா:

    துருக்கி நாட்டில் அதிபர் தாயீப் எர்டோகன் ஆட்சியை கவிழ்ப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவத்தில் ஒரு பிரிவினர் முயற்சி செய்தனர். ஆனால் இந்த முயற்சி, பொதுமக்களின் ஆதரவுடன் அதிபரால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து அங்கு உடனடியாக நெருக்கடி நிலையை அதிபர் எர்டோகன் கொண்டு வந்தார். இது அங்கு 2 ஆண்டுகளாக அமலில் இருந்து வந்தது.

    நெருக்கடி நிலையின்போது, ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தொடர்பு உடையவர்கள் என்று கருதி பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்; பணி நீக்கமும் செய்யப்பட்டனர்.

    சமீபத்தில் நடந்த தேர்தலில் அதிபர் எர்டோகன் அமோக வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து அவருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. மேலும், அந்த நாடு அதிபர் ஆட்சி முறைக்கும் மாறி உள்ளது.

    அதிபர் தேர்தலில் அங்கு எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்தபோது, தங்களது வேட்பாளர் வென்றால் நாட்டில் நெருக்கடி நிலை உடனே அகற்றப்படும் என வாக்குறுதி அளித்தன.

    இந்த நிலையில் அதிபர் எர்டோகன் நேற்று முன்தினம் அங்கு நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டு வந்தார். இருந்தபோதிலும், அங்கு கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 
    துருக்கி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற எர்டோகன் தனது மருமகன் பேரட் அல்பேராக்கை நாட்டின் நிதி மந்திரியாக நியமனம் செய்து உள்ளார். #Turkey #Erdogan
    அங்காரா:

    துருக்கி நாட்டில் 2016-ம் ஆண்டு ராணுவத்தின் ஒரு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை அதிபர் எர்டோகன் மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக முறியடித்தார்.

    அதன்பின்னர் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்ற பிறகு, நாட்டின் நிர்வாகத்தில் அதிபருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதன்மூலம் அந்த நாடு 95 ஆண்டு கால நாடாளுமன்ற ஜனநாயக முறையில் இருந்து அதிபர் ஆட்சி முறைக்கு மாறி உள்ளது. இதன் காரணமாக எர்டோகன் எதிர்ப்பாளர்கள், துருக்கியின் ஜனநாயகம் அழிவுப்பாதையில் சென்றுவிடும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.



    இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிபர் பதவியை மீண்டும் ஏற்றுக்கொண்ட எர்டோகனுக்கு மந்திரிகளை நியமிக்கும் அதிகாரம் வந்துவிட்டது.

    உடனே அவர் தனது மருமகன் பேரட் அல்பேராக்கை நாட்டின் நிதி மந்திரியாக நியமனம் செய்து உள்ளார். இதே போன்று ராணுவ தளபதியாக இருந்து வந்த ஜெனரல் ஹூலுசி அகாரை ராணுவ மந்திரியாக நியமித்தார். மெவ்லுட் கவுசொக்லு வெளியுறவு மந்திரியாக தொடர்கிறார்.  #Turkey #Erdogan  #Tamilnews
    துருக்கி நாட்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்ட விபத்தில் அதில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 73 பேர் காயமடைந்தனர். #Turkey #TtrainDerail
    இஸ்தான்புல்:

    பல்கேரியா நாட்டின் கபிகுல் பகுதியில் இருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லுக்கு பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டது அதில் 360-க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

    தெகிர்டாக் பகுதியில் வரும் போது பயணிகள் ரெயிலின் ஆறு பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 10 பயணிகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 73 பேர் காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு மீட்பு படையினர் விரைந்து சென்றனர். 100க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சென்று முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. துருக்கு ராணுவம் சார்பில் மீட்பு பணிகளில் ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு அதிபர் எர்டோகன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #Turkey #TtrainDerail
    துருக்கி அதிபராக தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள தாயிப் எர்டோகனுக்கு பிரிட்டன் பிரதமர் தெரசா மே வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். #TurkeyElection #Erdogan #VladimirPutin #TherasaMay
    லண்டன்:

    550 இடங்களை கொண்ட துருக்கி நாட்டு பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. அதில், 52.5 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று தாயிப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் துருக்கியின் அதிபராக தொடர்ந்து இரண்டாவது முறை பதவியேற்க உள்ளார் எர்டோகன். 

    இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற தாயிப் எர்டோகனுக்கு பிரிட்டன் பிரதமர் தெரசா மே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், துருக்கி அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள எர்டோகனுக்கு வாழ்த்துக்கள். பிரிட்டன் மற்றும் துருக்கி இடையிலான இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவதற்கு இணைந்து செயல்படுவோம். மேலும், பிராந்திய பகுதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சிரியாவில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு  தேவையான ஒத்துழைப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். #TurkeyElection #Erdogan #TherasaMay
    ×