search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்தியபிரதேசம்"

    மத்தியபிரதேசத்தில் டிரைவரை கொலை செய்து, உடலை ஆசிட்டில் கரைத்து, கொடூரமாக கொன்ற டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.#Madhyapradesh #Doctorarrested
    ஹோஷங்காபாத்:

    மத்தியபிரதேச மாநிலத்தின் ஹோஷங்காபாத்தில் உள்ள  ஆனந்த நகர் பகுதியைச் சேர்ந்த எலும்பியல் மருத்துவர்  சுனீல் மந்த்ரி (56). இவர் அரசு சிவில் மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக பணிபுரிகிறார். மந்த்ரியின் மனைவி வீட்டில் துணிக்கடை நடத்தி வந்தார். அவரது மறைவிற்கு பின் டிரைவர் வீரேந்திர பச்சோரி(30)யின் மனைவி கடையை நடத்தி வந்துள்ளார். இதையடுத்து டிரைவரின் மனைவிக்கும் டாக்டருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.

    தன் மனைவியுடன் டாக்டருக்கு தகாத உறவு இருப்பதாக டிரைவர் சந்தேகித்துள்ளார். தன் மனைவியிடம் இருந்து விலகி விடுமாறு பலமுறை  கூறியுள்ளார். இதனை கேட்காத டாக்டர், டிரைவரை சமாதானம் செய்யும் பொருட்டு அவருக்கு சம்பளத்தை உயர்த்தி, ரூ.16000 சம்பளம் வழங்கியுள்ளார். இருப்பினும் டிரைவர் சமாதானமாகவில்லை. இதன்காரணமாக அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கடந்த திங்கட்கிழமை மாலை டிரைவர், பல்லில் வலி இருப்பதாக டாக்டர் மந்த்ரியிடம் கூறியுள்ளார். சிகிச்சை அளிப்பதாகக் கூறி இரவு 9 மணியளவில் அறுவை சிகிச்சை செய்யும் கத்தியினைக் கொண்டு பல முறை கழுத்தில் கீறியுள்ளார். பின்னர் வீட்டின் பாத்ரூமில் வைத்து பல நூறு துண்டுகளாக நள்ளிரவு 1 மணிவரை  நறுக்கியுள்ளார்.

    மந்த்ரியின் வீட்டில் சந்தேகத்திற்கிடமான செயல்கள் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது டாக்டர் பதற்றத்துடன் காணப்பட்டார். வீட்டின் படிகளில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனால் போலீசாரின் சந்தேகம் உறுதி செய்யப்பட்டது.

    இது தொடர்பாக நடந்த விசாரணையில், அவர் பல நாட்களாக திட்டமிட்டு டிரைவரைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.  தடயங்களை அழிப்பதற்காக, டிரைவரின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி அவற்றில் சில துண்டுகளை ஆசிட்டில் கரைத்தாகவும், உடைகளை சாலையில் வீசியதாகவும் கூறியுள்ளார். மேலும் பாத்ரூமில் இருந்து  பல பெரிய உடல் பாகங்கள் மற்றும் சிறிய துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Madhyapradesh #Doctorarrested
    உத்தரபிரதேச மாநிலத்தில் மனைவி 10 நிமிடம் காலதாமதமாக வீட்டிற்கு வந்ததால் மூன்று முறை தலாக் சொல்லி கணவர் விவாகரத்து செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. #UPtripletalaq
    எட்டா:

    முஸ்லிம் சமுதாயத்தில், மூன்று முறை ‘தலாக்’ என்று கூறி, ஆண்கள் தங்கள் மனைவியை விவகாரத்து செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்த முத்தலாக் நடைமுறை, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, மக்களவையில் கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி நிறைவேறியது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள எட்டா மாவட்டத்தில், செல்போன் மூலம் மூன்று முறை தலாக் கூறி கணவர் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். இதற்கான காரணம் குறித்து அந்தப் பெண் கூறியதாவது:

    நான் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண். எனது அம்மாவின் வீட்டிற்கு, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பாட்டியை காண சென்றேன். எனது கணவர் அரை மணி நேரத்திற்குள் பார்த்துவிட்டு திரும்பிவிட வேண்டும் என கூறினார். அங்கிருந்து வர 10 நிமிடம் காலதாமதம் ஆனது. இதனால் எனது அண்ணனுக்கு போன் செய்து என்னிடம் மூன்று முறை தலாக் என கூறினார். இதை கேட்டவுடன் மனமுடைந்தேன்.



    மேலும் திருமணத்தின்போது வரதட்சணை கேட்டு என்னை துன்புறுத்தியுள்ளார். ஏழ்மையின் காரணமாக கணவர் வீட்டார் கேட்ட எதையும் தர இயலவில்லை. இதனிடையே கரு கலைப்பும் செய்துள்ளேன். அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனக்கான நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அலிகஞ்ச் பகுதி அதிகாரி அஜய் பாதுரியா உறுதி அளித்தார்.  #UPtripletalaq
    மத்தியபிரதேசத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். #MPAccident
    உஜ்ஜைன்:

    மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மாவட்டம், ராம்கார் கிராமத்தின் அருகே நேற்று நள்ளிரவு இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், அந்த கார்களில் பயணம் செய்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    விபத்திற்கான காரணம் தெரியாத நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்துயரச் சம்பவத்தில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #MPAccident
    மத்திய பிரதேசத்தில் போலீசாருக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து நேற்று 400 போலீசார் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். #Madhyapradesh #Policemen #Holiday
    போபால்:

    மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து முதல்-மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றுக்கொண்டார். அவர் தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.



    பதவி ஏற்றதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தற்போது மத்திய பிரதேசத்தில் போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது போலீசாருக்கு வார விடுமுறை அளிக்கப்படும் என்பதை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் பிரசாரம் செய்தது.

    இதை அப்போதே போலீசாரின் குடும்பத்தினர் வரவேற்று இருந்தனர். இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலத்தில் பணியாற்றும் போலீசாருக்கு புத்தாண்டு பரிசாக வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி நேற்று 400 போலீசார் வார விடுமுறை எடுத்து மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். மாநிலத்தில் மொத்தம் 1 லட்சம் போலீசார் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    போலீசார் ஏற்கனவே ஈட்டிய விடுப்பு உள்பட மற்ற விடுமுறைகளை எடுத்து வந்தாலும் வார விடுமுறை மட்டும் அனுபவிக்காமல் இருந்தனர். அவர்களுக்கு தற்போது வார விடுமுறை அளிக்கப்பட்டதால் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்தனர்.

    போபால் சப்-இன்ஸ்பெக்டர் மிஸ்ரா கூறுகையில், நான் 1981-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தேன். இதுவரை வார விடுமுறை எடுக்காமல் பணியாற்றினேன். இப்போது 38 ஆண்டுக்குப்பின் வார விடுமுறை கிடைத்துள்ளது. எனது குடும்பத்துடன் பொழுதை கழித்தேன். சொந்த பணிகளையும் கவனிக்க முடிந்தது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராகேஷ் சர்மா கூறுகையில், ‘‘நான் முதல்முறையாக வார விடுமுறை எடுத்ததும் எனது குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். மாலையில் திரும்ப அழைத்து வந்தேன். மற்ற நேரங்களில் குடும்பத்துடன் சந்தோ‌ஷமாக இருந்தேன். முதல் முறையாக 24 மணிநேரமும் குடும்பத்தினருடன் பொழுதை கழித்தேன்’’ என்றார். #Madhyapradesh #Policemen #Holiday

    மத்தியபிரதேசத்தில் தொழிலாளி கண்டெடுத்த 42.59 காரட் எடையுள்ள வைரம் 2.55 கோடிக்கு விலை போனது. #MadhyaPradesh #Diamond #Auction
    பன்னா:

    மத்தியபிரதேசம் மாநிலம் பன்னாவில் அமைந்துள்ள உதாலி சுரங்கத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, மோதிலால் பிராஜபதி என்ற தொழிலாளி, வைரம் ஒன்றை கண்டெடுத்தார். அந்த வைரம் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று ஏலம் விடப்பட்டது.

    பல்வேறு வகையான வைரங்கள் ஏலம் விடப்பட்ட அந்த ஏலச்சந்தையில், கண்டெடுக்கப்பட்ட 42.59 காரட் எடையுள்ள இந்த வைரம் 2.55 கோடிக்கு விலை போனது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராகுல் அகர்வால் என்ற தொழிலதிபர் வைரத்தை ஏலத்துக்கு எடுத்தார்.

    பின்னர் கிடைத்த ஏலத்தொகையில் 12 சதவீதம் வரித்தொகைபோக மீதமுள்ள தொகை அந்த தொழிலாளியிடமே வழங்கப்படுகிறது.   #MadhyaPradesh #Diamond #Auction
    5 மாநில சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. மத்தியபிரதேசத்தில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது. #AssemblyElectionResults2018 #MadhyaPradesh #Chhattisgarh
    புதுடெல்லி:

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    சத்தீஷ்கார் சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டங்களாகவும், மத்தியபிரதேசம், மிசோரம் சட்டசபைகளுக்கு நவம்பர் 28-ந்தேதியும், ராஜஸ்தான், தெலுங்கானா சட்டசபைகளுக்கு கடந்த 7-ந்தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.



    இதில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வந்தது. வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.

    தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) ஆட்சி நடத்தி வந்தது. அங்கு முதல்-மந்திரியாக இருந்த சந்திரசேகர ராவ், தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயார் ஆனார்.

    5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

    இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த 5 மாநில தேர்தல் ஒரு ‘மினி பொதுத்தேர்தலாகவே’ கருதப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ், தெலுங்குதேசம், தி.மு.க., இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியாக திரண்டு வரும் நிலையில், இந்த 5 மாநிலங்களின் தேர்தல் முடிவு நாடு முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் மோடி-காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு இந்த தேர்தல் அக்னி பரீட்சையாகவும் அமைந்தது.

    ஏற்கனவே வாக்குப்பதிவுக்கு பின்னர் நடைபெற்ற பல்வேறு கருத்து கணிப்புகளின் மூலம் ராஜஸ்தானில் காங்கிரசும், தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதியும் ஆட்சியை பிடிக்கும் என்றும், மத்தியபிரதேசம், சத்தீஷ்காரில் இழுபறி நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்தது. 2 மாநிலங்களில் காங். ஆட்சியை பிடித்தது

    இந்த நிலையில் 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

    ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய 2 மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி காங்கிரஸ்- தெலுங்குதேசம் கூட்டணியை வீழ்த்தி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு உள்ளது.

    வடகிழக்கு மாநிலமான மிசோரமில் காங்கிரசிடம் இருந்து மிசோ தேசிய முன்னணி ஆட்சியை பறித்து உள்ளது. இதன்மூலம் அங்கு காங்கிரஸ் சகாப்தம் முடிவுக்கு வந்து உள்ளது.

    மத்திய பிரதேசத்தில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்த 5 மாநில தேர்தல் முடிவு எதிர்க்கட்சிகளுக்கு குறிப்பாக காங்கிரசுக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பதாகவும், பாரதீய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாகவும் அமைந்து உள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களில் மொத்தம் உள்ள 65 எம்.பி. தொகுதிகளில் 63 தொகுதிகளில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. ஆனால் இப்போது அந்த மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் பாரதீய ஜனதா பெரும் இழப்பை சந்தித்து இருப்பது, அக்கட்சி தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வந்த ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர்.

    இறுதியில் 199 தொகுதிகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாரதீய ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. பாரதீய ஜனதா வேட்பாளர்கள் 73 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

    இங்கு ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 100 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. சுயேச்சையாக வெற்றி பெற்றவர்களில் சிலர் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் என்பதால், அவர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.

    ஜல்ராபட்டன் தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    ஜெய்ப்பூர் நகரில் உள்ள மாநில காங்கிரஸ் அலுவலகத்தின் முன்பு அக்கட்சி தொண்டர்கள் வெற்றியை மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி கொண்டாடினார்கள்.

    230 இடங்களை கொண்ட மத்தியபிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 116 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

    எதிர்க்கட்சியான காங்கிரஸ் 115 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் பாரதீய ஜனதாவுக்கு 108 இடங்கள் கிடைத்தன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

    இதனால் யார் ஆட்சி அமைப்பது? என்பதில் இழுபறி ஏற்பட்டு உள்ளது. இன்னும் ஒரு உறுப்பினரின் ஆதரவு இருந்தால் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும். எனவே பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது.

    சத்தீஷ்கார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 68 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஆளும் பாரதீய ஜனதா வேட்பாளர்கள் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்தன. சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகளுக்கு 4 இடங்கள் கிடைத்தன. முன்னாள் முதல்-மந்திரி அஜித் ஜோகியின் கட்சி காங்கிரசின் வெற்றி வாய்ப்பை பாதிக்கக்கூடும் என்று கருதப்பட்டது. ஆனால் அந்த கட்சியால் காங்கிரசுக்கு பாதிப்பு இல்லை.

    சத்தீஷ்கார் மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை பிடித்து இருக்கிறது.



    ஆந்திராவை இரண்டாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதன் முதலாக முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது. இப்போது அங்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.

    இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். பாரதீய ஜனதாவுக்கு ஒரு இடம் கிடைத்தது. பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

    காஜ்வெல் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் ரெட்டியை 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    மிசோரம் மாநிலத்தில் முதல்-மந்திரி லால்தன் ஹாவ்லா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. இங்கு மொத்தம் உள்ள 40 இடங்களில் எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி 26 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரசிடம் இருந்து ஆட்சியை பறித்தது. இதன்மூலம் இங்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்து உள்ளது.

    இந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரசுக்கு 5 இடங்களே கிடைத்தன. ஒரு தொகுதியில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. மிசோ மக்கள் இயக்கம் 8 இடங்களில் வெற்றி பெற்றது.

    முதல்-மந்திரி லால்தன் ஹாவ்லா செர்சிப் மற்றும் சாம்பாய் தெற்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் அவர் தோல்வி அடைந்தார்.

    இந்த மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி ஏற்கனவே 1998-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை ஆட்சி நடத்தி உள்ளது.
    சட்டசபை தேர்தல் நடைபெற்ற தெலுங்கானா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது. #AssemblyElections #ElectionResults2018
    தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    5 மாநிலங்களில் சேர்த்து மொத்தமாக 679 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு லட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஓட்டுப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

    இந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.  இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? என்பது இன்று பிற்பகலில் தெரிந்துவிடும்.



    மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

    இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. #AssemblyElections #ElectionResults2018

    சட்டசபை தேர்தல் நடைபெற்ற தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. #AssemblyElections
    ஐதராபாத்:

    சட்டசபை தேர்தல் நடைபெற்ற தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று பிற்பகலில் தெரிந்துவிடும்.

    90 இடங்களை கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டங்களாகவும், 230 இடங்களை கொண்ட மத்தியபிரதேச சட்டசபைக்கும், 40 இடங்களை கொண்ட மிசோரம் சட்டசபைக்கும் நவம்பர் 28-ந் தேதியும் தேர்தல் நடைபெற்றது.



    119 இடங்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கும், 200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கும் கடந்த 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ராஜஸ்தானில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் 199 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

    இந்த 5 மாநிலங்களிலும் மொத்தம் 679 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 8,500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒரு லட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஓட்டுப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

    5 மாநிலங்களிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது இன்று பிற்பகலில் தெரிந்து விடும்.

    தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை, அங்கு முதல்-மந்திரியாக இருந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா ஆகிய 3 அணிகள் போட்டியிட்டன. இங்கு மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 1,821 வேட்பாளர் போட்டியிட்டனர். இங்கு 43 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

    மிசோரம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி ஆகியவை மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பாரதீய ஜனதா 39 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. அங்கு 13 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் யாருக்கு வெற்றி? என்பதில் இழுபறி ஏற்படலாம் என்றும், தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் என்றும் தெரியவந்து இருக்கிறது.

    இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் மொத்தம் உள்ள 65 தொகுதிகளில் 63 தொகுதிகளை பாரதீய ஜனதா கைப்பற்றியது. இந்த மாநிலங்களில் தற்போது பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

    எனவே இந்த 3 மாநிலங்களின் தேர்தல் முடிவு பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #AssemblyElections
    மத்தியபிரதேசத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்துக்கு 2 பேர் கொண்டு செல்வது போன்ற வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. #MadhyaPradesh #VotingMachine
    சத்னா:

    230 உறுப்பினர்களை கொண்ட மத்தியபிரதேச மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 28-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. வருகிற 11-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருப்பதால், வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் சத்னா என்ற இடத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு சில பெட்டிகளை 2 பேர் கொண்டு செல்வது போன்ற வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. பகுஜன் சமாஜ் வேட்பாளர் புஷ்கர் சிங் தோமர் உடனே கட்சி நிர்வாகிகளுடன் அங்கு சென்றார். காங்கிரஸ் கட்சியினரும் அங்கு திரண்டனர். ஆளும் பாரதீய ஜனதா கட்சியினர் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து, மின்னணு எந்திரங்கள் எதுவும் மாற்றப்படவில்லை என்றும், வாக்குப்பதிவுக்கு பின் உபரியாக இருந்த எந்திரங்கள் அங்கு கொண்டு வரப்பட்டதாகவும் விளக்கம் அளித்தனர். இதைத்தொடர்ந்து அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.  #MadhyaPradesh #VotingMachine
    மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகின என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். #MadhyaPradeshAssemblyElections
    போபால்:

    பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆர்வமாக வாக்களித்தனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து உற்சாகமாக ஓட்டு போட்டனர்.

    வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், புத்னியில் உள்ள நர்மதா நதிக்கரைக்கு குடும்பத்தினருடன் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். இதையடுத்து வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டார்.

    அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என 100 சதவீதம் உறுதியாக நம்புகிறேன். 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு வைத்துள்ளோம். இதற்கென லட்சக்கணக்கான தொண்டர்கள் பணியாற்றினர் என தெரிவித்தார்.



    இந்நிலையில், மாலை 6 மணியுடன் அங்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.  இன்றைய தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இன்று பதிவான வாக்குகள் டிசம்பர் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #MadhyaPradeshAssemblyElections
    மத்தியபிரதேச மாநிலத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மகனுக்கு தந்தை தடபுடல் விருந்து அளித்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. #SSLCResult
    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் டிலி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்திரகுமார் வியாஸ். கட்டிட காண்டிராக்டர். இவரது மகன் அன்சு.

    இவர், 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். இதன் முடிவு நேற்று வெளியானது. அதில், அன்சு தோல்வி அடைந்தார்.

    இதையறிந்த அன்சு மனவேதனை அடைந்தார். தனது தந்தை என்ன சொல்வாரோ? என்ற கவலையுடன் தந்தையை சந்திக்க சென்றார்.

    அப்போது தந்தை சுரேந்திரகுமார் எந்த உணர்வையும் காட்டிக்கொள்ளவில்லை. மகனை கட்டித்தழுவி அவருக்கு இனிப்பு ஊட்டினார். தந்தையின் செயல்பாடு அன்சுவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    சுரேந்திரகுமார் இதோடு விடவில்லை. மகனின் பரீட்சை தோல்வியை கொண்டாட முடிவு செய்தார். இதற்காக அன்சுவுடன் படித்த மாணவர்கள், பக்கத்து வீட்டினர், உறவினர்கள் என பலரையும் தனது வீட்டுக்கு அழைத்தார். அங்கு இசை நிகழ்ச்சியுடன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி தடபுடல் விருந்தும் அளித்தார்.

    சுரேந்திர குமாரின் இந்த செயல்பாட்டை பார்த்து அனைவரும் வியந்தனர்.

    பரீட்சைக்காக எனது மகன் கடுமையாக உழைத்தான். சிறப்பாக எழுதினான். ஆனாலும், தோல்வி அடைந்து இருக்கிறான். அவனது தோல்வியை நான் பெரிய வி‌ஷயமாக எடுத்து கொள்ளவில்லை.

    அதே நேரத்தில் அவனை இன்னும் உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன்.

    பரீட்சையில் தோல்வி அடையும் அனைத்து மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் நான் ஒரு வி‌ஷயத்தை சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

    பள்ளியில் நடைபெறும் அரசு பரீட்சை என்பது மாணவரின் கடைசி பரீட்சை அல்ல. வாழ்க்கையில் தொடர்ந்து எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்து கொண்டே இருக்கும். அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவர் அன்சு கூறும் போது, எனது தந்தையின் விருந்து கொண்டாட்டம் என்னை அடுத்த ஆண்டு தேர்வுக்கு மிகவும் ஊக்கப்படுத்தி இருக்கிறது என்றார். #SSLCResult
    ×