search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்பல்லோ"

    அப்பல்லோவில் சிகிச்சை பெறும் திமுக பொது செயலாளர் அன்பழகனின் உடல் நலம் குறித்து மு.க. ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார். #MKStalin #KAnbazhagan

    சென்னை:

    தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 29-ந்தேதி சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    சளித்தொல்லை காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதற்காக அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    சில தினங்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. என்றாலும் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று அன்பழகனை சந்தித்தார். அப்போது அவரது உடல் நிலை குறித்து கேட்டு அறிந்தார்.

    அன்பழகனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் நலம் பெற்று வருகிறார். விரைவில் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். #MKStalin #KAnbazhagan

    ஜெயலலிதா சிகிச்சையில் தவறு எதுவும் நடக்கவில்லை என்று அப்பல்லோ விளக்கம் அளித்துள்ளது. #Jayalalithaa #Jayalalithaadeath #ApolloHospital


    ஆணையத்தின் வக்கீல் முகமது ஜபருல்லாகான் அளித்துள்ள மனு தொடர்பாக அப்பல்லோ ஆஸ்பத்திரியின் சட்ட விவகார மேலாளர் மோகன் குமார் கூறியதாவது:-

    அப்பல்லோ நிர்வாகம் மீது ஆணைய வக்கீல் கூறி இருக்கும் குற்றச்சாட்டுகளை வன்மையாக எதிர்க்கிறோம்.

    ஆணையத்தில் உள்ள ஒரு வக்கீலே எதிர்தரப்பினர் தொடர்பாக மனு தாக்கல் செய்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இது, வழக்கமானது அல்ல.

    ஜெயலலிதாவுக்கு பல்வேறு மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனை பெற்றுதான் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், டெல்லி எய்ம்ஸ் நிபுணர்கள், ஐ.சி.யூ. சிறப்பு வல்லுனர்கள் என பலரும் இடம்பெற்று இருந்தனர்.

    நிதிஷ்நாயக் தலைமையிலான எய்ம்ஸ் டாக்டர்கள் 3.12.2016 அன்று ஆஸ்பத்திரிக்கு நேரடியாக வந்து பரிசோதனை மேற் கொண்டனர்.

    அவர்களும் ஜெயலலிதாவுக்கு இதயம் தொடர்பான எந்த ஆய்வும் செய்ய தேவையில்லை என்று கூறி இருக்கிறார்கள். 3 சீனியர் டாக்டர்கள் ஜெயலலிதாவுக்கு இதய ஆஞ்சியோ பரிசோதனை செய்ய பரிந்துரை செய்ததாகவும் ஆணைய வக்கீல் கூறி இருக்கிறார். அது தவறான தகவல்.

    ஒரே ஒரு வெளி டாக்டர் மட்டும்தான் அந்த பரிந்துரையை செய்தார். அதுவும் அவர் முழுமையாக ஆய்வு செய்யாமல் அப்படி கூறி விட்டார்.

    அவரிடம் மற்ற சிகிச்சைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவரும் ஆஞ்சியோ சிகிச்சை தேவை இல்லை என்பதை உணர்ந்து கொண்டார்.

    லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவும் ஆஞ்சியோ சிகிச்சைக்கு பரிந்துரை செய்யவில்லை.

    இதயத்தை பிளந்து செய்யப்படும் ஸ்டெர்னோடாமி சிகிச்சை 15 நிமிடங்களாக செய்யப்படவில்லை என்று டாக்டர் மதன் குமார் கூறியதாக சொல்லப்பட்டுள்ளது.

    ஆனால், அந்த டாக்டர் 15 வினாடி என்பதை 15 நிமிடம் என்று தவறாக சொல்லி விட்டார். பின்னர் அவர் அளித்த சாட்சியத்தில் 15 வினாடி என்பதை திருத்தி கொண்டுள்ளார்.

    அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, அளிக்கப்பட்ட சிகிச்சைகளும், எக்மோ கருவி பொருத்தப்பட்டதிலும் சர்வதேச தர நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. முறையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எந்த தவறும் நடக்கவில்லை.

    அது சம்பந்தமான அனைத்து விவரங்களும் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது, விசாரணையின் கீழ் இருக்கக் கூடிய ஒரு வி‌ஷயமாக இருக்கின்ற நிலையில், ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது ஆதாரம் இல்லாமல் தவறான குற்றச்சாட்டு கூறி இருப்பது சரியல்ல.

    மேலும் சிகிச்சை தொடர்பாக அளிக்கப்பட்ட சாட்சியத்தில் தமிழ் மொழி பெயர்ப்பு சரியாக இல்லை. இதனால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு மோகன்குமார் கூறியுள்ளார்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவின் உணவுக்கு ரூ.1.17 கோடி செலவு செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Apollo
    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் எழுந்த சந்தேகங்கள் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவின் உதவியாளர்கள், பாதுகாவலர்கள், டிரைவர்கள், அப்பல்லோ டாக்டர்கள், அரசு டாக்டர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

    விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார். இன்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது முதல்-அமைச்சர் பொறுப்பில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் நாளை மறுநாள் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இதற்கிடையே, ஜெயலலிதாவுக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அறிக்கையை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் உள்ள விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.



    அதில், 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு மருத்துவ செலவு ரூ.6,85,69,584  என்றும், ஜெயலலிதாவின் உணவுக்கு மட்டும் ரூ. 1.17 கோடி செலவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவ செலவுக்கான பணம், 2016 அக்டோபர் 13-ல் காசோலையாக ரூ.41,13,304 அப்பல்லோவிற்கு வழங்கப்பட்டது என்றும், ஜெயலலிதா இறப்பிற்கு பின், 2017 ஜூன் 15 ம் தேதி அதிமுக சார்பாக காசோலையாக ரூ.6 கோடி வழங்கப்பட்டது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Apollo
    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றிய வெளிவராத பல்வேறு தகவல்கள் தந்தி டிவி நிகழ்ச்சியின் மூலம் வெளியாகி வருகின்றன. #Jayalalithaa #ThanthiTV
    சென்னை:

    ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ என்ற பெயரில் தந்தி டி.வி.யில் நேற்று முதல் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

    இதில் ஜெயலலிதா பற்றி இதுவரையில் யாரும் அறிந்திராத அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது. தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் வருகிற வெள்ளிக்கிழமை வரை தந்தி டி.வி.யில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.

    முதல் நாளான நேற்றே ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ நிகழ்ச்சியில் ஜெயலலிதா பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியானது. இதுவரையில் யாரும் சொல்லாத தகவல்களாக அது இருந்தது.

    ஜெயலலிதாவின் சித்தி அமீதா மகள் தெரிவித்த தகவல்கள் உருக்கமாக இருந்தன. ஜெயலலிதாவின் மாமா மகளும் நிகழ்ச்சி வாயிலாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். ஜெயலலிதா அனாதை போல கிடந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். போயஸ் கார்டனில் பணியாற்றிய ராஜம்மா, இனி எனக்கு யார் இருக்கா? என்று கூறியது கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது.

    ராஜம்மா

    2014-ம் ஆண்டு ஜெயலலிதா கைது செய்யப்பட்டது தொடர்பாகவும், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளி வந்துள்ளன. 2016-ம் ஆண்டு செப். 22-ந்தேதி ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஆம்புலன்சில் நடந்தது என்ன? என்பது பற்றி அவரது குடும்ப டாக்டர் சிவக்குமார் விவரித்துள்ள பல்வேறு வி‌ஷயங்களும் உருக்கமாக உள்ளன.

    கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதாவுக்கு பிடித்தமான இடங்களுள் ஒன்றாகும். அங்கு சென்று ஓய்வு எடுப்பதை அவர் வழக்கமாகவே வைத்திருந்தார். அந்த எஸ்டேட் தொடர்பாக சுவாரஸ்யமான தகவல்களும் நேற்றைய நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்தன.

    2-வது நாளாக இன்று இரவு 9 மணிக்கு ஜெ.ஜெயலலிதா எனும் நான் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஜெயலலிதாவின் தினசரி வாழ்வில் என்னென்ன சம்பவங்கள் நடந்தன என்பது ருசிகர தகவல்களாக தொகுக்கப்பட்டுள்ளது. போயஸ் தோட்டம் இல்லத்தில், பல்வேறு அரசியல் முடிவுகளை எடுத்து வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. இது மட்டுமே பலருக்கு தெரியும்.

    ஆனால் ஜெயலலிதா தனது இல்லத்தில் பண்டிகைகளையும் மகிழ்ச்சி பொங்க கொண்டாடி உள்ளார். நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகளை அவர் சந்தோ‌ஷத்தோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

    ஜெயலலிதாவின் மகிழ்ச்சியான அந்த தருணங்களை கண்முன்னே நிறுத்தும் வகையில், இன்றைய நிகழ்ச்சியில் இனிமையான நிகழ்வுகள் நினைவு அலைகளாக விரிகின்றன.

    ஜெயலலிதாவை பொறுத்தவரையில் மிகவும் தைரியமான பெண் ஒன்று பெயரெடுத்தவர். எதற்கும் பயப்படமாட்டார் என்பதை உணர்த்தும் வகையில் போயஸ் தோட்டத்து இல்லத்தில் சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.

    ஒருமுறை ஜெயலலிதாவின் வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதனை பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் கூட பயந்து நடுங்கி உள்ளனர். ஆனால் ஜெயலலிதாவோ அந்த பாம்பை கண்டு கொஞ்சமும் பயப்படாமல் இருந்துள்ளார். அந்த சம்பவமும் இன்றைய நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டுள்ளது.

    செல்லப்பிராணிகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர் ஜெயலலிதா. குரங்குகள், நாய்க்குட்டிகள் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்துள்ளார்.

    வீட்டில் செல்லமாக வளர்த்த நாய்க்குட்டி திடீரென இறந்து போனதால் தனது டெல்லி நிகழ்ச்சியையே ரத்து செய்துள்ளார் ஜெயலலிதா. இதுபற்றிய தகவல்களும் நிகழ்ச்சியில் பாசமழையாக பொழிய உள்ளது.

    அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதா முதன்முதலில் பேசிய வார்த்தை என்ன? என்பது அனைவரது மனதிலும் இப்போது வரையில் மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது. இதற்கும் இன்றைய நிகழ்ச்சி விடை தருகிறது.

    கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவரான ஜெயலலிதா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்படி தரிசனம் செய்த போது ஒரு முறை சன்னதியில் கதறி அழுதுள்ளார்.

    சந்தோ‌ஷமான தருணம் ஒன்றில் கருணாநிதி குரலிலும் ஜெயலலிதா மிமிக்ரி செய்து பேசிக் காட்டியுள்ளார். இதன் மூலம் அவரது மிமிக்ரி ஆற்றலும் வெளிப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியுடன் நட்பு பாராட்டியவர் ஜெயலலிதா. மோடிக்கு அவர் அளித்த விருந்தின் போது சுவாரஸ்யமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

    இனிப்பு வகைகள் மீது ஜெயலலிதாவுக்கு எப்போதுமே ஈர்ப்பு அதிகம். இரவில் குறிப்பிட்ட இனிப்பு ஒன்றை அவர் விரும்பி கேட்டு சாப்பிடுவதை வழக்கமாகவே வைத்திருந்துள்ளார். அது என்ன இனிப்பு? ஜெயலலிதாவின் விருப்ப உணவுகள் என்ன? என்பது போன்ற தகவல்களும் இன்றைய நிகழ்ச்சியில் ஆச்சரியமூட்டும் வகையில் இடம் பெற்றுள்ளது.

    தந்தி டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி மூலம் ஜெயலலிதாவின் வாழ்வில் யாரும் அறிந்திராத இன்னொரு பக்கத்தை பார்க்க முடிகிறது என்றால் அது மிகையல்ல.

    இதே போல நாளை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியிலும், அதன் பின்னர் 6, 7-ந்தேதிகளில் வர இருக்கும் நிகழ்ச்சிகளிலும் ஜெயலலிதா தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாக உள்ளன.

    இந்த நிகழ்ச்சியின் மறுஒளிபரப்பு மறுநாள் மாலை 5 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது. #Jayalalithaa
    எம்ஜிஆருக்கு 1984ம் ஆண்டு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை வழங்கும்படி அப்பல்லோ நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #JayaDeathProbe #JusticeArumugasamyCommission #Apollo #MGR
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மீது பல்வேறு கேள்விக் கணைகளை தொடுத்த ஆணையம், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறது.

    ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானதையடுத்து அமெரிக்காவிற்கு அவரை கொண்டு சென்று சிகிச்சை அளித்திருக்கலாம் என பலர் கருத்து தெரிவித்தனர். எம்ஜிஆருக்கு அளித்ததுபோன்று ஜெயலலிதாவுக்கு ஏன் அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கவில்லை? என்ற கேள்வியும் எழுந்தது. இந்த விவகாரம் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

    1984-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் இதே அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கான நடைமுறைகள் மற்றும் சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் இப்போது விளக்கம் கேட்டுள்ளது.



    1984ல் எம்ஜிஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை வரும் 23-ம் தேதிக்குள் வழங்கும்படி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    எம்ஜிஆரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது? அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அமெரிக்காவிற்கு அவரை அழைத்துச் செல்வது தொடர்பாக அமைச்சரவையில் எடுத்த முடிவு யார் மூலம் மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டது? என்ற விவரங்களையும் ஆணையம் கேட்டுள்ளது.

    எம்ஜிஆரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றதுபோல், ஜெயலலிதாவை அழைத்துச் செல்ல முடியாமல் போனதற்கான காரணத்தை கண்டறியும் முயற்சியாக இந்த ஆவணங்களை ஆறுமுகசாமி ஆணையம் கேட்டுள்ளது. எம்ஜிஆரின் சிகிச்சை விவரங்களை 34 ஆண்டுகளுக்கு பிறகு ஆணையம் கேட்டிருப்பது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. #JayaDeathProbe #JusticeArumugasamyCommission #Apollo #MGR
    சிகிச்சையில் இருந்த போது ஜெயலலிதாவுக்கு பாதாம் அல்வா கொடுக்கப்பட்டதா? என்று ஆணையம் எழுப்பிய கேள்விக்கு அப்பல்லோ மருத்துவமனை தலைமை நர்ஸ் பதில் அளித்துள்ளார்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றிய புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் அர்ச்சனா (இவர், தற்போது திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்) நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜரானார். அதேபோன்று அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை நர்ஸ் ரேணுகாவும் ஆஜரானார்.

    அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் சிகிச்சை பெற்று வந்த வார்டில் அர்ச்சனா பல நாட்கள் பணியில் இருந்துள்ளார். இதனால், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அர்ச்சனாவுக்கு தெரிந்து இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில் அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு கேள்விகளை கேட்டார். அதேபோன்று ஆணையத்தின் வக்கீல்கள் மதுரை எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் குறுக்கு விசாரணை செய்தனர். நீதிபதி மற்றும் ஆணையத்தின் வக்கீல்கள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு மருத்துவர் அர்ச்சனா தெரியாது என்றே பதில் அளித்துள்ளார்.

    ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வார்டில் பணியில் இருந்தபோது ஜெயலலிதா தன்னிடம் பலமுறை பேசி உள்ளதாக அவர் கூறி உள்ளார். தமிழக கவர்னராக இருந்த வித்யாசாகர்ராவ் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க சென்றபோது அர்ச்சனா தான் பணியில் இருந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து வித்யாசாகர்ராவை பார்த்து ஜெயலலிதா கை அசைத்தாரா? என்பது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு அர்ச்சனா, ‘கண்ணாடிக்கு வெளியே நின்று கவர்னர் பார்த்ததையும், அவர் கை அசைத்ததையும் பார்த்தேன். ஆனால், கவர்னரை பார்த்து ஜெயலலிதா கை அசைத்தாரா? என்பதை பார்க்கவில்லை’ என்று கூறி உள்ளார்.

    4.10.2016 அன்று ஜெயலலிதாவுக்கு இடது வென்ட்ரிக்கலில் மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் அர்ச்சனா தான் பணியில் இருந்துள்ளார். இதுகுறித்து ஆணையம் எழுப்பிய கேள்விக்கு அர்ச்சனா சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு நர்சுகளை, தலைமை நர்சான ரேணுகா தான் நியமித்துள்ளார். ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரை அடிப்படையில் அப்பல்லோ மருத்துவமனையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மட்டுமே நர்சுகள் மூலம் ஒவ்வொரு முறையும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது என்று ரேணுகா வாக்குமூலம் அளித்துள்ளார்.

    27.11.2016 அன்று வீட்டில் இருந்து தயாரிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட பாதாம் அல்வா ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே என்று ஆணையம் கேள்வி எழுப்பிய போது, வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவுப்பொருட்கள் எதுவும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்படவில்லை என்பதை ஆணித்தரமாக கூற முடியும் என்று பதில் அளித்துள்ளார்.

    சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு 21.11.2016 அன்று லட்டு, குலோப்ஜாமூன், ரசகுல்லா போன்றவை வழங்கப்பட்டது என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது அவருக்கு பாதாம் அல்வாவும் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஜெயலலிதா மருத்துவமனையில் 22.9.2016 அன்று அனுமதிக்கப்பட்ட நிலையில், 25.11.2016 அன்று முதல் தான் அவருக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது குறித்த விவரம் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆணையம் எழுப்பிய கேள்விக்கு, அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ரேணுகா பதில் அளித்துள்ளார்.

    அப்படியென்றால் 22.9.2016 முதல் 24.11.2016 வரை மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுரைப்படி தான் ஜெயலலிதாவுக்கு உணவு வழங்கப்பட்டதா? என்ற கேள்வி ஆணையத்துக்கு எழுந்து உள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தவும் ஆணையம் முடிவு செய்துள்ளது. 
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் ஓ.பன்னீர் செல்வத்தை விசாரிக்க முடிவு செய்துள்ளது- #JayaDeath #Jayalalithaa #OPanneerSelvam
    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பினார்கள்.

    இதையடுத்து அதுபற்றி விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

    ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது உடன் இருந்தவர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரை அந்த ஆணையம் சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரித்து வருகிறது. சசிகலா குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


    இதற்கிடையே சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன், ஆணையத்தில் ஆஜராகி வாதிட்டு வருகிறார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் தெரிவித்தவர்களிடம் அவர் குறுக்கு விசாரணையும் நடத்தினார்.

    இந்த நிலையில், இந்த விசாரணைக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தையும் அழைக்க வேண்டும் என்று வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் கோரிக்கை விடுத்தார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து ஓ.பி.எஸ். நிறைய குற்றச்சாட்டுக்களையும், சந்தேகங்களையும் வலியுறுத்தி கூறி இருப்பதால் அவரை அழைத்து விசாரிக்க வேண்டியது அவசியமாகும் என்று சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.

    அவரது கோரிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி ஏற்றுக் கொண்டார். எனவே துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு விரைவில் விசாரணை ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் அளிக்கும் வாக்குமூலம் இந்த விசாரணையில் முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சரி, ஆஜராகி தகவல்கள் தெரிவிக்க தயார் என்று தெரிவித்தனர். #JayaDeath #Jayalalithaa #OPanneerSelvam
    ×