search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போன்"

    இளம்பெண்கள் பலரும் இந்த புகைப்படம் மோகம் என்னும் மாயவலையில் சிக்கியுள்ளனர். புற அழகு மட்டுமே முக்கியம் என்ற மனப்போக்கு இன்றைய பெண்களிடம் காணப்படுகிறது.
    புகைப்படம் என்பது நமது ஞாபகங்களை உறைய வைக்கும் ஒரு அற்புதமான அதிசயம். பழைய புகைப்படங்களை பார்க்கும் போது நம்மையும் அறியாமல் அதில் மூழ்கி கடந்த காலத்திற்கு சென்று விடுவதுண்டு. அந்த காலத்தில் வீட்டின் வரவேற்பறையில் வரிசையாக தொங்க விடப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளை படங்கள் பல கதைகளைச் சொல்லும்.

    பின்னாட்களில், போட்டோ ஸ்டுடியோவிற்கு குடும்ப சகிதமாக சென்று விறைப்பாக நின்று போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனேகமாக எல்லோருடைய வீட்டிலும் ஞாபக சின்னங்களாய் வீற்றிருக்கும். அதன் பின்னர் கேமராக்கள் மூலம் நாமே புகைப்படம் எடுத்து பிரிண்டு போட்டு ஆல்பங்களாக சேகரித்து வைக்கும் பழக்கமும் வெகு காலமாக இருந்து வருகிறது. வீட்டிற்கு விருந்தினர் என்று யார் வந்தாலும் அந்த ஆல்பங்களை காட்டி பரவசப்பட்டு கொள்வதும் நம்மிடையே பொதுவாக காணப்படும் குணமாகும்.

    இன்றைக்கு செல்போனிலேயே புகைப்படம் எடுத்து கொள்ளும் வசதி வந்தாலும் வந்தது. நிற்பது, நடப்பது, சாப்பிடுவது, கொட்டாவி விடுவது என்று நம்முடைய ஒவ்வொரு அசைவையும் புகைப்படம் எடுக்க தொடங்கிவிட்டோம். போட்டோ எடுப்பதால் ஆயுசு குறையும் என்ற அந்த கால நம்பிக்கை மறைந்து பிறவி எடுத்ததே புகைப்படம் எடுப்பதற்குத் தான் என்றாகிவிட்டது இந்த காலத்தில்.

    இளசுகள், பெரியவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருமே இந்த புகைப்பட மோகத்தில் சிக்கி சீரழிந்து வருகின்றனர்.

    வித்தியாசமாக செல்பி எடுத்து நண்பர்களிடையே பாராட்டு பெறவேண்டும் என்று மலை உச்சியில் தலைகீழாய் தொங்குவது, உயரமான நீர்வீழ்ச்சியின் மேலே ஒற்றைக்காலில் நிற்பது, ஓடுகிற மோட்டார் சைக்கிள் நின்று கொண்டு சவாரி செய்து போஸ் கொடுப்பது, மிக உயரமான கட்டிடங்களின் மேல்தளத்தின் விளிம்பில் அமர்ந்து போட்டோ எடுப்பது என்று ஆபத்தை உணராமல் விபரீத சாகசம் செய்ய ஆரம்பித்து விட்டனர் இன்றைய இளம் தலைமுறையினர்.

    இதனால் பல்வேறு உயிர் இழப்புகளும், விபத்துகளும் நிகழ்ந்த போதும் இம்மாதிரி செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இளம்பெண்கள் பலரும் இந்த புகைப்படம் மோகம் என்னும் மாயவலையில் சிக்கியுள்ளனர். புற அழகு மட்டுமே முக்கியம் என்ற மனப்போக்கு இன்றைய பெண்களிடம் காணப்படுகிறது. தங்களை விதவிதமாக அலங்கரித்துக் கொண்டு போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதற்கு எத்தனை லைக்குகள் வந்திருக்கின்றன, என்னென்ன கமெண்டுகள் வந்திருக்கின்றன என்று பார்ப்பதிலேயே பொழுதை கழித்து வருகின்றனர்.



    இளைஞர்களின் இந்த மோகத்திற்கு தீனி போடுவதற்காகவே புகைப்படம் பதிவிடுவதற்கெனவே சில சமூக வலைத்தளங்களும் இயங்குகின்றன. இதில் காலவரையறை இன்றி நாளும் பொழுதும் போக்குவதால் படிப்பில் கவனம் சிதறுகிறது. மேலும் ஓவியம் வரைவது, பாடுவது, நடனம் ஆடுவது, பேச்சுப் போட்டி போன்ற அவர்களுக்கு உரித்தான தனித்திறமைகளையும் மறந்து தங்கள் சுயத்தையும் இழந்து மந்த நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

    நல்ல அதிகமான பிக்சல் கொண்ட கேமராக்கள் உள்ள செல்போன்களை வாங்குவதும் அதிகரித்து வருகிறது. இவ்விதமான போன்களை கொண்டோ அல்லது நமது முகத்தை மாசு மருவின்றி காட்டக்கூடிய மொபைல் செயலிகள் கொண்டோ போட்டோ எடுத்து தனக்கென ஒரு போலியான பிம்பத்தை தோற்றுவித்துக் கொள்கின்றனர்.

    கருப்பான முகத்தை வெண்மையாக்கி, சிறிய கண்களை பெரிதாக்கி, பருக்கள் மற்றும் தழும்புகளை நீக்கி, முகத்தையும் உடலையும் மெலியச் செய்து காட்டுவது என தங்கள் அடையாளத்தையே முழுவதுமாக மாற்றி வழுவழுப்பான முகத்துடன் பேரழகாக காட்டிக் கொண்டு போலியான உலகத்தில் வாழுகிறார்கள்.

    திருமணத்திற்கு வரன் தேடும் வலைத்தளங்களில் இது போன்ற புகைப்படங்களை பதிவிடுகின்றனர். இதனால் நேரில் பார்ப்பதற்கும் நிழற்படத்துக்கும் நிறைய வேறுபாடு இருப்பதால் பெண்ணையோ, ஆணையோ நிராகரிப்பதும் நடந்து வருகிறது. அந்த நேரத்தில் ஏற்படும் மனஉளைச்சலும் வேதனையும் மிக அதிகம். பெண்கள் தங்கள் புகைப்படங்களை எல்லோரும் பார்க்கும்படி பகிருவதால் ஏற்படும் ஆபத்துகளை பற்றி எண்ணிப் பார்க்கவேண்டும். அந்த புகைப்படங்களை யார் வேண்டுமானாலும் தங்களுடைய போனில் தரவிறக்கம் செய்யலாம். அதை எப்படி வேண்டுமானாலும் ‘மார்ப்பிங்’ மூலம் மாற்றம் செய்து தவறான நோக்கத்திற்கு பயன்படுத்த முடியும். இதனால் அவர்களுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.

    இது போன்ற பல விஷயங்களை செய்திகளில் கேள்விப்பட்டாலும் அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கும் அலட்சியப் போக்கே காணப்படுகிறது. ஆபத்து வருமுன் தற்காத்து கொள்வதே புத்திசாலித்தனம். இது மட்டுமின்றி, பள்ளிக் குழந்தைகளை சீருடையுடன் புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிடுவது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும். குழந்தை என்ன வகுப்பு படிக்கிறது, என்ன பெயர் என்று எல்லா தகவல்களையும் நாமே வலிய வந்து கொடுக்கிறோம். இதனால் குழந்தைக் கடத்தல் போன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி தவிர்க்க முடியாதது அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் தவறில்லை.

    புகைப்படம் எடுப்பது, ரசிப்பது என்பதெல்லாம் நம் வாழ்வோடு ஒன்றி விட்ட விஷயங்கள். தேவையான அளவு எடுத்துக் கொள்வதில் தவறில்லை. நமது புகைப்படங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர விரும்பினால் அதை நம் நம்பகமான நண்பர்களிடம் மட்டுமே பகிரக் கூடிய பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமது பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் என்று தெரிந்த எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருப்பதே நல்லது.

    சுற்றி இருக்கும் நிஜ உலகத்தை மறந்து இந்த நிழல்திரைக்குள் சிக்கிக் கொண்டால் நமது பொன்னான நேரமும் வீணாகி, விபரீதமும் விளைகிறது. அழகியல் சார்ந்த உணர்வுகள் இருப்பது அவசியம் தான். வாழ்க்கையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்வதும் ரசனைகளே. ஆயினும் எதிலும் எல்லை மீறாமல் எச்சரிக்கையாக இருப்பது நன்மை பயக்கும். அது புகைப்பட போதைக்கும் பொருந்தும்.

    விஷ்வசாந்தி சரவணகுமார், எழுத்தாளர்.
    பல்வேறு வசதிகளை வாரி வழங்கும் ஸ்மார்ட்போன்களால் ஆபத்துகளும் அதிகம். அதிலும் பெண்களே ஸ்மார்ட்போன்களால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
    ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி நமது நாட்டில் 53 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    பல்வேறு வசதிகளை வாரி வழங்கும் ஸ்மார்ட்போன்களால் ஆபத்துகளும் அதிகம். அதிலும் பெண்களே ஸ்மார்ட்போன்களால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

    ஸ்மார்ட்போன் என்பது அதனை பயன்படுத்துபவருக்கு சிறந்த நண்பனாக விளங்குகிறது என்றால், அவர்களை ரகசியமாக உளவுபார்க்கும் உளவாளியும் அதுவே என்றால் அது மிகையாகாது.

    தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் ஸ்மார்ட்போனில் உள்ள ஒரு செயலி மூலம் 80 பெண்களை ரகசியமாக கண்காணித்து அவர்களின் அந்தரங்கத்தை திருடி வெளிநாட்டு இணையதளங்களுக்கு விற்பனை செய்தார் என்கிற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெண்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தான் இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும். இதுபோன்ற குற்றங்களுக்கு முழுமுதற்காரணம் பெண்கள் அவர்களின் ஸ்மார்ட்போனை பிறரின் கையில் கொடுப்பது. இதுவே பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    ஒருவர் உங்களை ரகசியமாக கண்காணிக்க நினைத்தால் ஒரு செயலி (ஆப்) மூலம் நீங்கள் செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

    பெண்களை கண்காணிப்பதற்கான பல செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் கொட்டிக்கிடக்கின்றன. அதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனின் கேமரா, போன் கால்கள், குறுஞ்செய்திகள், இருப்பிடம் மற்றும் அனைத்து நடவடிக்கையும் கண்காணிக்க முடியும்.

    இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அந்த கண்காணிக்கும் செயலி, உங்கள் ஸ்மார்ட்போனின் கேமராவை ஆன் செய்து விடும் என்பது தான். அதிலும் கேமரா ஆன் ஆகி இருக்கிறது என்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது. இதுபோன்ற செயலிகளை உங்கள் ஸ்மார்ட்போனில் மறைத்து வைக்கவும் முடியும்.

    இதனால் உங்கள் ஸ்மார்ட்போனில் கண்காணிக்கும் செயலிகள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். இது பெண்களுக்கு மிகவும் ஆபத்தான ஒன்று.



    பெண்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் ஏதேனும் செயலிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் என்றால் கூகுள் ப்ளே ஸ்டாரில் உள்ள “பிரி ஸ்பைவேர் ஆன்டு மால்வேர் ரீமுவர்” என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்த செயலி மூலம் ஸ்மார்ட்போனை முழுவதும் ஸ்கேன் செய்தால் ஏதேனும் கண்காணிக்கும் செயலி இருந்தால் காட்டிவிடும்.

    நம் ஸ்மார்ட்போனை யாரிடமும் கொடுக்கவில்லை என்றால் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. நாம் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யும் போது அது கேட்கும் அனுமதி அனைத்திற்கும் படித்து பார்க்காமல் ‘ஐ அக்ரி’ என்பதை கிளிக் செய்துவிடுகிறோம். இது நம்மை அறியாமல் நாமே நமது தகவல்கள் திருட வழி ஏற்படுத்தி விடும். இது மிக பெரிய தவறு.

    ஒரு செயலி நமது ஸ்மார்ட்போனில் எதனையெல்லாம் அனுமதி கேட்கின்றது என்று கவனிக்காமல் ஐ அக்ரி என்பதை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்வதால் அந்த செயலியை உருவாக்கியவர் உங்களை கண்காணிக்க முடியும் மற்றும் உங்களை பற்றிய தகவல்களை உங்கள் அனுமதியுடன் திருடுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது.

    ஒரு செயலி கேட்கும் அனுமதிகளை படித்து பார்த்தாலே அது எவ்வளவு ஆபத்தான செயலி என்பதை உணர முடியும். மேலும் அந்த செயலியை உருவாக்கியவர் முதலிலே அவர்கள் என்ன தகவல்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து எடுக்கிறார்கள் மற்றும் அதனை எந்தெந்த வழிகளில் பயன்படுத்துகிறார்கள் என்பதை தெளிவாக அவர்களின் பிரைவசி பாலிசியில் கூறிவிடுவார்கள். ஆனால் அதையும் நாம் கவனிக்காமல் இன்ஸ்டால் செய்கிறோம். இது நமக்கும், நம் ஸ்மார்ட்போனுக்கும் பாதுகாப்பு இல்லை.

    கூகுள் ப்ளே ஸ்டோரில் பல போலியான மற்றும் ஆபத்தான செயலிகளும் கொட்டிக்கிடக்கின்றன. முதலில் ஒரு செயலி பதிவிறக்க செய்யும் முன் அந்த செயலியின் ரேட்டிங் மற்றும் ரிவ்யூவை பார்க்க வேண்டும். ஏனென்றால் அதனுடைய ரேட்டிங் வைத்து அதனை எத்தனை நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதையும், அதன் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள முடியும்.

    ரிவ்யூ மூலம் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தியவரின் கருத்துகளை தெரிந்து கொள்ளலாம். அடுத்ததாக நீங்கள் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் டெவலப்பர்ஸ் பெயரை கவனியுங்கள். டெவலப்பர்ஸ் பெயர் இல்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்த்துவிடுங்கள்.

    பெண்கள் தங்களின் ஸ்மார்ட்போனை பழுது நீக்க கொடுக்கும் போது சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏனெனில் நீங்கள் உங்களின் தனிப்பட்ட படங்கள், வீடியோக்களை ஸ்மார்ட்போனில் பதிவு செய்து, பின்னர் அவற்றை நீக்கி இருப்பீர்கள். ஆனால் மென்பொருள் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து நீக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை மீட்டு எடுத்துவிட முடியும்.

    எனவே ஸ்மார்ட்போனை பழுது நீக்குபவர்கள் அது பெண்ணின் ஸ்மார்ட்போனாக இருந்தால் அதில் நீக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து ஆபாச இணையதளங்களுக்கு விற்க வாய்ப்பு இருக்கிறது.

    பெண்களுக்கு இத்தனை இன்னல்களை தரும் ஸ்மார்ட்போனால் அவர்களுக்கு ஒரு சில பயன்களும் இருக்கிறது. இன்றைய சூழலில் பெண்கள் பயன்படுத்தும் பல இடங்களில் ரகசிய கேமராக்களை வைத்து அவர்களின் அந்தரங்கங்களை வீடியோ எடுக்கிறார்கள் சில விஷக்கிருமிகள். கண்களுக்கே தெரியாத சிறிய ரகசிய கேமராவெல்லாம் வந்துவிட்டது.

    பெண்கள் ஓர் இடத்துக்கு சென்றால் அங்கே ஏதேனும் கேமரா இருக்கிறது என்ற சந்தேகம் எழுந்தால் தனது ஸ்மார்ட்போனை பயன்படுத்தி அதனை கண்டுபிடித்து விடலாம். கூகுள் ப்ளே ஸ்டாரில் “ஹிட்டன் கேமரா டிடெக்டர்” என்று செயலி கிடைக்கிறது. ரகசிய கேமரா இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கும் அந்த இடத்தில் இந்த செயலியை பயன்படுத்தி ஸ்கேன் செய்தால், ஏதேனும் சிறிய ரகசிய கேமரா இருந்தால் கூட பிப் சத்தத்தை எழுப்பும். அதை வைத்து எளிதாக அந்த இடத்தில் கேமரா இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும்.

    இந்த செயலியை ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெண்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டியது அவசியம். இன்றைக்கு பெண்கள் அவர்களுடைய ஸ்மார்ட்போனில் ஏராளமான செயலிகளை வைத்திருப்பார்கள். மிக முக்கியமாக வைத்திருக்க வேண்டிய செயலி “பீ சேப்” என்ற செயலி. இது பெண்கள் ஆபத்தான சூழ்நிலைகளில் உள்ள போது உதவும்.

    எந்த ஒரு தொழில்நுட்பத்திலும் உள்ள ஆபத்தினால் அதனை கைவிடுவது அறியாமை ஆகும். அதனை விழிப்புணர்வுடனும், பாதுகாப்பாகவும் பயன்படுத்துவது நமது கைகளில் தான் இருக்கிறது. இன்றைக்கு தொழில் நுட்பம் பாதுகாப்பாக தான் இருக்கிறது. அதனை பயன்படுத்தும் நாம் தான் பாதுகாப்பற்ற மற்றும் விழிப்புணர்வற்ற நிலையில் இருக்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.

    ப.பொன்விக்னேஷ்,
    கல்லூரி மாணவர்
    அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பிரத்யேக விமானத்தில் இருந்து காமெடி நடிகருக்கு போன் செய்து குடியேறிகள் விவகாரம், சுப்ரீம் கோர்ட் நீதிபதி நியமிப்பது என பல விஷயங்களை அப்பாவியாக விவாதித்துள்ளார். #Trump #JohnMelendez
    வாஷிங்டன்:

    அமெரிக்க தொலைக்காட்சி பிரபலம் ஜான் மெலெண்டெஸ். காமெடி நடிகர், ரேடியோ ஜாக்கி என பன்முகத்தண்மை கொண்டவர். அடிக்கடி பிரபலங்களுக்கு போன் செய்து கலாய்ப்பது இவரது வேடிக்கையான பணி. இந்நிலையில், கடந்த வாரம் வெள்ளை மாளிகைக்கு ஜான் போன் செய்துள்ளார். அப்போது, எதிர்முனையில் அதிபர் டிரம்ப் மருமகன் ஜரேட் குஷ்னர் பேசியுள்ளார்.

    அவரிடம், தன்னை ஜனநாயக கட்சியை சேர்ந்த நியூ ஜெர்சி மாகாண செனட்டர் பாப் மெலெண்டெஸ் பேசுவதாக தன்னை ஜான் அறிமுகப்படுத்தியுள்ளார். டிரம்பிடம் பேச வேண்டும் என தனது கோரிக்கையும் ஜான் முன் வைத்துள்ளார். இதனை அடுத்து, உங்களது விருப்பத்தை டிரம்பிடம் தெரிவிப்பதாக குஷ்னர் கூறியுள்ளார்.

    சில மணி நேரம் கழித்து, அமெரிக்க அதிபருக்கான பிரத்யேக விமானத்தில் இருந்து டிரம்ப், ஜானுக்கு போன் செய்துள்ளார். செனட்டர் பாப் மெலெண்டெஸிடம் பேசுவதாக நினைத்து ஜான் மெலெண்டெஸிடம் பல்வேறு விவகாரங்கள் குறித்து டிரம்ப் மிக தீவிரமாக பேசியுள்ளார். இந்த ஆடியோ பதிவை ஜான் மெலெண்டெஸ் தனது இணையதளத்தில் வெளியிட அது வைரலாக பரவி வருகிறது.

    பாப் மெலெண்டெஸ் சமீபத்தில் பரிசுப்பொருள் பெற்ற வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதற்கு, தனது வாழ்த்துக்களை டிரம்ப் தெரிவித்தார். குடியேறிகள் விவகாரம், சுப்ரீம் கோர்ட்டில் புதிய நீதிபதியை நியமிப்பது என பல விவகாரங்கள் தொடர்பாக டிரம்ப் ஜானிடம் விவாதித்துள்ளார். 

    இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, சில நேரங்களில் அதிபரின் தொடர்பு எல்லைக்குள் இது போன்ற பிரச்சனைகள் வந்து விடுகின்றன என கூறியுள்ளது. அதிபரை ஏமாற்றியதற்காக ஜான் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் பரவிய நிலையில் ‘நான் இன்னும் கைது செய்யப்படவில்லை’ என ஜான் மெலெண்டெஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
    ×