search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நம்பெருமாள்"

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் நேற்று தீர்த்தவாரி கண்டருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ராப்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி காலையில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பரமபதவாசல் வழியாக சந்திரபுஷ்கரணி குளத்திற்கு சயனப்பெருமாளுடன் வந்தார். அங்கு நம்பெருமாளுக்கு பதிலாக சயனப்பெருமாள் குளத்தில் புனித நீராடினார்். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சயனபெருமாள் தீர்த்தவாரியை (நீராடுவதை) கண்டருளினார்.

    இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் சந்திரபுஷ்கரணியில் உள்ள நீர் தீர்த்தமாக அனைத்து பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. தீர்த்தவாரிக்கு பின் சயனப்பெருமாள் பரமபதவாசல் வழியாக மூலஸ்தானம் சென்றடைந்தார். நம்பெருமாள் அங்கிருந்து ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்திற்கு மதியம் சென்றடைந்தார். அங்கு மாலை வரை பொதுஜன சேவை நடைபெற்றது.

    பின்னர் இரவு வரை பொது ஜனசேவையுடன் நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுளினார். இதையடுத்து இரவு 11 மணி முதல் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணி வரை அரையர் சேவையுடன் திருப்பாவாடை கோஷ்டி நடைபெற்றது. இன்று அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை பொதுஜன சேவையும், காலை 6 மணி முதல் 7 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் 9 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன், பொதுஜன சேவை நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணி முதல் நாளை(சனிக்கிழமை) அதிகாலை 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது. அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை சாற்றுமறையும் நடைபெறுகிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது. 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல் பத்து உற்சவத்தின் 2-வது நாளில் நம்பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளினார்.
    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவானது பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளன்று நம்பெருமாள் நீள் முடி கிரீடம் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

    நேற்று பகல் பத்து திருமொழி உற்சவத்தின் 2-வது நாள் ஆகும். இதனையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். நம்பெருமாளுடன் ஆச்சாரியார், ஆழ்வார்களும் எழுந்தருளினார்கள். காலை 7.45 மணி முதல் மதியம் 1 மணி வரை அரையர்கள் நாலாயிரம் திவ்ய பிரபந்த பாடல்களில் 240 பாசுரங்களை அபிநயம் வியாக்யானத்துடன் பாடினார்கள். அப்போது அங்கு திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் நம்பெருமாளையும் ஆழ்வார்களையும் தரிசனம் செய்தனர்.

    மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அலங்காரம், அமுது செய்ய திரையிடப்பட்டது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை உபயகாரர்கள் மரியாதையுடன் மீண்டும் பக்தர்கள் பொதுஜன சேவைக்கு அனுமதிக்கப்பட்டனர். பகல் பத்து உற்சவத்தின் 2-வது நாளான நேற்று நம்பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் கஸ்தூரி திலகம், நவரத்தின காதுக்காப்புகள், வைர அபயஹஸ்தம், புஜ கீர்த்தி மார்பு கவசம், மகாலட்சுமி பதக்கம், தங்க காசுகள், முத்து, பவளமணி மாலைகள் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இரவு 7 மணிக்கு நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.

    வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வருகிற 18-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு நடக்கிறது. அப்போது நம்பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள்வார். நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து சென்றால் சொர்க்கத்தை அடையலாம் என்பது ஐதீகமாகும். எனவே, இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    வருகிற 24-ந்தேதி திருக்கைத்தல சேவையும், 25-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 27-ந்தேதி தீர்த்தவாரியும், 28-ந்தேதி நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் செய்து உள்ளனர். 
    ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவிலில் நம்பெருமாள் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    மங்கையர் போற்றும் நவராத்திரி விரதம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முப்பெரும் தேவியர்களான துர்கா, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோரை போற்றி வணங்குவதே இந்த நாளில் சிறப்பாகும். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் அம்பிகை வீற்றிருக்கிறாள் என்பதை உணர்த்துவதற்காகவே கொலு வைக்கப்படுகிறது. கொலுவிற்கு வரும் பக்தர்களுக்கு மங்கள பொருட்களான மஞ்சள், குங்குமம் கொடுத்து உபசரிப்பர்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரிவிழா ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 10-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. நவராத்திரி விழாவையொட்டி கடந்த 16-ந் தேதி ரெங்கநாச்சியார் திருவடிசேவை நடைபெற்றது. விஜயதசமியையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காட்டழகிய சிங்கர் கோவில் ஆஸ்தான மண்டபத்திற்கு காலை 10.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.

    பின்னர் மாலை 6.30 மணியளவில் அங்கிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு கோவிலில் உள்ள வன்னிமரத்தில் அம்பு போட்டார். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அங்கிருந்து புறப்பட்டு சாத்தாரவீதி வழியாக வலம் வந்து இரவு 9.30 மணியளவில் சந்தனுமண்டபம் சேர்ந்தார். பின்னர் 10 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அமுதுபாறையில் திருமஞ்சனம் கண்டருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 10-ந் தேதி நவராத்திரி விழா தொடங்கியது. அன்று முதல் அம்மன் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். நேற்று முன்தினம் அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளினார். விஜயதசமியான நேற்று இரவு 7.30 மணிக்கு உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடாகி மேளதாளம் முழங்க வன்னி மரம் சென்றடைந்தார். அங்கு, அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இதேபோல இனாம் சமயபுரத்தில் உள்ள அய்யாளம்மன் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் எழுந்தருளிய அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வன்னி மரம் சென்றடைந்தார். அங்கு கோவில் பூசாரி சுரேஷ்குமார் தலைமையில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளரை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் விஜயதசமியையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் கோவிலின் கிழக்கு வாசல் அருகே எழுந்தருளினார். அங்கு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விஜயதசமியையொட்டி ஸ்ரீரங்கம் கோவில் நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி காட்டழகிய சிங்கர் கோவிலில் உள்ள வன்னி மரத்தின் மீது அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

    மணப்பாறையை அடுத்த வீரப்பூரில் புகழ்பெற்ற பெரியகாண்டியம்மன், சப்தகன்னிமார், பொன்னர்-சங்கர், தங்காள், மந்திரம் காத்த மகாமுனி, மாசி கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்கள் அடங்கிய கன்னிமாரம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் மாசிப் பெருந்திருவிழா நடைபெறும். பொன்னர், குதிரை வாகனத்தில் சென்று அம்பு போடும் வேடபரி திருவிழா முக்கிய திருவிழாவாக கருதப்படும்.

    இதற்கு அடுத்தபடியாக மகாநோன்பு திருவிழா நடைபெறும். இந்த திருவிழா நேற்று முன்தினம் மாலை ஆயுதபூஜை அன்று தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து நேற்று மாலை கோவில் வழக்கப்படி வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவில் முன்பிருந்து முரசு கொட்டும் சாம்புவன் காளை முன்னே செல்ல அதைத்தொடர்ந்து ஜமீன்தார்கள், பட்டியூர் கிராமங்களின் ஊர் முக்கியஸ்தர்கள் செல்ல, குதிரை வாகனத்தில் குதிரை பூசாரி மாரியப்பன் பொன்னர் தெய்வத்துடன் நின்று வர, அதைத் தொடர்ந்து யானை வாகனத்தில் பெரிய பூசாரி முத்து மகன் செல்வம் பெரியகாண்டியம்மன் அருகில் கரகப்பூசாரி மணி என்ற வீரமலை தங்காள் கரகம் சுமந்து செல்ல வேடபரி புறப்பட்டு பெரியகாண்டியம்மன் கோவில் எதிர் திசையில் உள்ள தேவரடிக்காடு என்ற இடம் சென்றது.

    அங்கு யானை வாகனத்தில் இருந்து பெரியகாண்டியம்மன் வாழை மரத்தில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வாழை மரத்தில் அம்பு எய்ததும் தரையில் தண்ணீர் விழுந்த மண்ணை பக்தர்கள் எடுத்துச் சென்று வீடுகளில் வைத்து வழிபட்டனர். திருவிழாவில் வீ.பூசாரிபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் இருந்து சுவாமியும், அம்பாளும் புறப்பட்டு நாகநாதர் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி நம்பெருமாள் நேற்று தீர்த்தவாரி கண்டருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் கடந்த 22-ந் தேதி தொடங்கி நேற்று (30-ந்தேதி) வரை நடைபெற்றது.

    இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்தின் மேல்புறம் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பவித்ர உற்சவத்தின் 7-ம் நாளான கடந்த 28-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவில் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின் தாயார் சன்னதியில் திருவந்திகாப்பு கண்டருளி இரவு 9 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு சயனப்பெருமாளுடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    பின்னர் சந்திரபுஷ்கரணியில் காலை 9.30 மணியளவில் நம்பெருமாளுக்கு பதிலாக சயனப்பெருமாளை புனித நீராட வைத்தனர். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சயனபெருமாள் நீராடுவதை கண்டருளினார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு பவித்ர உற்சவ மண்டபத்திற்கு காலை 10 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு பகல் 1 மணி முதல் 3 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் மதியம் 3.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை பொதுஜனசேவை நடைபெற்றது. பவித்ர உற்சவ மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணைஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள், அர்ச்சக பட்டர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர். 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி- புரட்டாசி மாதத்தில் பவித்ரோத்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பவித்ரோத்சவம் கடந்த 22-ந் தேதி தொடங்கி நாளை(வியாழக்கிழமை) வரை நடைபெறுகிறது.

    இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்தின் மேல்புறம் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பவித்ரோத்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசல் அருகே உள்ள நாலுகால் மண்டபத்திற்கு இரவு 7.30 மணியளவில் வந்தடைந்தார்.

    அங்கிருந்தவாறு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். பின்னர் தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளினார். இதையடுத்து அங்கிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு இரவு 9 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் நிறைவு நாளான நாளை காலை 9.30 மணியளவில் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

    மறுநாள் பெரிய பெருமாள் ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைல காப்பிடப்படுகிறது. பவித்ரோத்சவ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுதலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள், அர்ச்சக பட்டர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் நம்பெருமாள் எழுந்தருளி, காவிரித்தாய்க்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்.
    ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நம்பெருமாள் அம்மா மண்டபம் படித்துறையில் எழுந்தருளி, காவிரித்தாய்க்கு சீர்வரிசை பொருட்கள் வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நம்பெருமாள் கோவிலில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு தங்க பல்லக்கில் புறப்பட்டார். வழிநடை உபயங்கள் கண்டருளினார். அம்மா மண்டபத்திற்கு மதியம் 1 மணி அளவில் வந்தடைந்தார்.

    படித்துறை வரை நம்பெருமாள் சென்றார். அங்கு பாய்ந்தோடும் காவிரியில் பட்டர்கள் வேத மந்திரங்கள் சிறிது நேரம் ஓதினர். அதன்பின் நம்பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    மாலை 4.45 மணி அளவில் காவிரித்தாய்க்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சந்தனம், சேலை, மாலை உள்பட மங்கல பொருட்களை யானை மீது தாம்பூல தட்டில் வைத்து பட்டர்கள் எடுத்து வந்தனர். அம்மா மண்டபம் படித்துறையில் யானை மீது இருந்து சீர்வரிசை பொருட்களை காவிரி ஆற்றில் தூக்கி வீசினர். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

    சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்ட பின் நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 8.30 மணிக்கு நம்பெருமாள் அம்மா மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மேல அடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். 
    ஸ்ரீரங்கம் கோவிலில் வசந்த உற்சவம் நிறைவு நாளில் தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வசந்த உற்சவம் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கோவிலில் வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்தடைந்து எழுந்தருளினார்.

    இந்த நிலையில் வசந்த உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் தீர்த்தவாரி, திருமஞ்சனம் கண்டருளினார். மாலையில் நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வந்தார். தொடர்ந்து இரவில் வசந்த உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நம்பெருமாள் இரவில் மூலஸ்தானம் சென்றடைந்தார். நம்பெருமாளுக்கு வசந்த உற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது.

    இதே போல் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உள்ள ரெங்கநாச்சியார் (தாயார்) சன்னதியில் கோடை திருநாள் மற்றும் வசந்த உற்வசம் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இன்று முதல் ஜூன் 3-ந்தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 7 மணிக்கு வெளிக்கோடை மண்டபம் வந்தடைகிறார். புஷ்பம் சாத்துப்படி கண்டருளிய பின்னர் இரவு 8.30 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைகிறார். மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை தாயார் மூலஸ்தான சேவை கிடையாது. இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.

    உள்கோடை உற்சவத்தையொட்டி ஜூன் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வெளிக்கோடை மண்டபத்தை அடைகிறார். புஷ்பம் சாத்துப்படி கண்டருளிய பின்னர் இரவு 7.30 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 7.45 மணிக்கு உள்கோடை ஆஸ்தான மண்டபத்தை சென்றடைகிறார். இரவு 8.45 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி வீணை வாத்தியத்துடன் 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை தாயார் மூலஸ்தான சேவை கிடையாது. இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.

    ஜூன் 9-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை ரெங்கநாச்சியார் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த உற்சவத்தின்போது தினமும் ரெங்கநாச்சியார் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 6.30 மணிக்கு வசந்த மண்டபம் சேருகிறார். அலங்காரம் வகையறா கண்டருளிய பின்னர் இரவு 8.30 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். மாலை 4 மணி முதல் 6 மணி வரை தாயார் மூலஸ்தான சேவை கிடையாது. இந்த தகவலை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்து உள்ளார். 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வசந்த உற்சவ விழாவையொட்டி நம்பெருமாள் நெல் அளவு கண்டருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவிலில் வசந்த உற்சவ விழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது. தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கோவிலில் வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்தடைந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    கோவிலில் நேற்று முன் தினம் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு வந்தபோது தீப்பந்தத்தில் இருந்து வெட்டிவேர் தோரணத்தில் தீப்பொறி பட்டு தீப்பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த தீ உடனடியாக அணைக்கப்பட்டதுடன் அதற்கான புண்ணியாசன பூஜையும் நடந்தது. தொடந்து நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இந்த நிலையில் விழாவின் 7-ம் நாளான நேற்று மாலை நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல் அளவு கண்டருளும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மூலஸ்தானத்தில் இருந்து உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் புறப்பட்டு கோவில் கொட்டாரத்தில் நெல் அளவு கண்டருளினார். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் நம்பெருமாள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வசந்த உற்சவ விழா நிறைவு நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து சந்திரபுஷ்கரணி கரையில் தீர்த்தவாரி, திருமஞ்சனம் கண்டருளி வசந்த மண்டபம் வந்தடைவார். இரவில் புறப்பட்டு மூலஸ்தானத்திற்கு சென்றடைவார். 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் தொடங்கியது. பலத்த மழை பெய்ததால் நம்பெருமாள் வசந்த மண்டபம் செல்வதற்கு பதிலாக கருடமண்டபத்தில் எழுந்தருளினார்.
    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த உற்சவத்தின்போது நம்பெருமாள் கோவிலின் நான்காம் பிரகாரமான ஆலிநாடான் திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி வடபுறம் அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார்.

    உற்சவத்தையொட்டி தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு சென்றடைவார். அங்கு மண்டபத்தில் நடுவில் நம்பெருமாள் ஒய்யாரமாக வீற்றிருப்பார். வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும்.

    இந்த ஆண்டு நம்பெருமாள் வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் வசந்த மண்டபம் செல்ல இருந்த நிலையில், பலத்த மழை பெய்ததால் நம்பெருமாள் வசந்த மண்டபம் செல்வதற்கு பதிலாக கருடமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் இன்று தொடங்குகிறது.
    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த உற்சவத்தின்போது, நம்பெருமாள் கோவிலின் நான்காம் பிரகாரமான ஆழிநாடான் திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி வடபுறம் அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார். இதையொட்டி அந்த மண்டபத்தின் நான்கு புறமும் அகழிபோல் உள்ள பள்ளத்தில் நீர் நிரப்பப்பட்டிருக்கும்.

    இந்த ஆண்டு நம்பெருமாள் வசந்த உற்சவம் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு சென்றடைவார். அங்கு மண்டபத்தின் நடுவில் நம்பெருமாள் ஒய்யாரமாக வீற்றிருப்பார்.

    விழாவின் 7-ம் நாளன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறார். 9-ம் திருநாள் அன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி, தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுவது சிறப்பம்சமாகும். வசந்த உற்சவத்தின்போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும்.

    வசந்த உற்சவத்தின் போது 28-ந் தேதி அன்று விஸ்வரூபசேவை கிடையாது. மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை விஸ்வரூப சேவையும், காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 3.30 மணி வரையும் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8.45 மணி வரையும் மூலவர் சேவைக்கு அனுமதி உண்டு. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    முன்னதாக நம்பெருமாள் வசந்த உற்சவத்தையொட்டி மண்டபத்தின் நான்கு புறமும் அகழிபோல் உள்ள பள்ளத்தில் நேற்று நீர் நிரப்பப்பட்டது. மேலும் அந்த மண்டபம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 
    ×