search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவிளையாடல்"

    சிவபெருமான் உலக உயிர்களிடம் அன்பு கொண்டு, அருள் செய்த கருணையை கதைகளாக விவரிக்கிறது ‘திருவிளையாடல் புராணம்’ என்ற நூல். இதனை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர் ஆவார்.
    மதுரை மாநகரில் சிவபெருமான் நிகழ்த்திய லீலைகள் ‘திருவிளையாடல் புராணம்’ என்று அழைக்கப்படுகிறது. அந்த திருவிளையாடல் புராணம் 64 நிகழ்வுகளின் தொகுப்பாகும். சிவபெருமான் உலக உயிர்களிடம் அன்பு கொண்டு, அருள் செய்த கருணையை கதைகளாக விவரிக்கிறது ‘திருவிளையாடல் புராணம்’ என்ற நூல். இதனை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர் ஆவார்.

    தமிழ் மொழியில் மூன்று புராணங்கள், சிவபெருமானின் மூன்று கண்களாக போற்றப்படுகின்றன. அவை, சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம், பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணம், கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணம். இதில் திருவிளையாடல் புராணம், சிவபெருமானின் இடதுகண் என்று போற்றப்படுகிறது.

    பரஞ்சோதி முனிவர் வேதாரண்யம் என்றழைக்கப்படும் திருமறைக்காட்டில் தோன்றியவர். இவர் தென்மொழி, வடமொழி, திருமுறைகள், சித்தாந்த சாஸ்திரங்களை கற்றுணர்ந்தவர். தம் தந்தையான மீனாட்சி சுந்தரதேசிகரிடம் சிவதீட்சை பெற்றவர். சிவபெருமானிடமும், சிவனடியார்களிடமும் மிகுந்த பக்தி கொண்டவர்.

    பரஞ்சோதி முனிவர், சிவபெருமானின் பல திருத்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து கொண்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக மதுரையில் மீனாட்சி சோமசுந்தரரை தரிசித்து மதுரையம்பதியில் தங்கியிருந்தார். அப்போது மீனாட்சியம்மை அவருடைய கனவில் தோன்றி, இறைவனின் திருவிளையாடல்களைப் பாட கட்டளையிட்டார். அன்னையின் ஆணைக்கிணங்க ‘சத்தியாய்..’ எனத் தொடங்கும் திருவிளையாடல் புராணத்தை பரஞ்சோதி முனிவர் இயற்றினார். இவர் ‘திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா’, ‘மதுரை பதிற்றுப் பத்தந்தாதி’ என்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.

    திருவிளையாடல் புராணமானது, மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருஆலவாய்காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மதுரைக்காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருஆலவாய்காண்டத்தில் 16 படலங்களும் உள்ளன. இந்த நூலில் மொத்தம் 3,363 பாடல்கள் உள்ளன.

    இந்திரன் பழி தீர்த்த படலம் முதல், வருணன் அனுப்பிய கடல்நீரை சிவன் வற்றச் செய்த படலம் வரை மதுரைக்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன. நான் மாடக்கூடலான படலம் முதல் நாரைக்கு முக்தி அளித்த படலம் வரை கூடற்காண்டத்தில் உள்ளன. திருஆலவாயான படலம் முதல் வன்னியும், கிணறும், லிங்கமும் அழைத்த படலம் வரை திருஆலவாய்க்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன.
    இறைவன் சிவபெருமானின் திருவிளையாடல்களை சொல்லிக்கொண்டே இருக்கலாம். அந்த வகையில் திருவானைக்காவல் திருத்தலத்திலும் இறைவன் ஒரு திருவிளையாடலை நடத்தி உள்ளார்.
    தனது பக்தர்களின் உண்மையான மனநிலையை அறிய திருவிளையாடல் நடத்துவது சிவனுக்கு கைவந்த கலை. பாண்டிய மன்னனின் அரசவையில் நக்கீரனுடன் நடத்திய சொற்போர், இசையில் வல்ல ஹேமநாத பாகவதரின் ஆணவத்தை அடக்க விறகு வெட்டியாக அவதாரம் எடுத்தது, கண்ணில் ரத்தம் கசிய வைத்து வேடனுக்கு அருள்பாலித்து கண்ணப்ப நாயனாராக்கியது, பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி வாங்கியது என இறைவன் சிவபெருமானின் திருவிளையாடல்களை சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

    அந்த வகையில் திருவானைக்காவல் திருத்தலத்திலும் இறைவன் ஒரு திருவிளையாடலை நடத்தி உள்ளார். புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒருவர் யானையாகவும், இன்னொருவர் சிலந்தியாகவும் பிறந்தனர்.

    சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் தும்பிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை தேவையற்றதாக கருதி அதை தினமும் அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும்.

    தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் தும்பிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்தியை மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது.

    சோழ மன்னன் கட்டிய 70 சிவாலயங்களில் முதல் மாடக்கோவில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும். இக்கோவிலின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாகவும், பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது.

    ×