search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவலர்"

    புதுவையில் காவலர்கள் ஊழல் இன்றி பணியாற்ற சபதம் ஏற்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவுரை கூறியுள்ளார். #Puducherry #Narayanasamy #ChiefMinister
    புதுச்சேரி:

    புதுச்சேரி காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி முதல் 134 காவலர்கள் பயிற்சி பெற்றனர். அவர்கள் பயிற்சியின் நிறைவு மற்றும் அணிவகுப்பு நேற்று காலை கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்தது. விழாவிற்கு போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா தலைமை தாங்கினார்.

    விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் பயிற்சியில் முதலிடம் பிடித்த காவலர்களுக்கும், பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பிடித்தவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் நம் மாநிலத்தில் காவல்துறைக்கு என்று தனித்திறமை உண்டு. இரவு பகல் பார்க்காமல் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு கொடுப்பது, குற்றங்களை உடனே கண்டுபிடிப்பது, குற்றவாளிகளை வெளியில் நடமாட விடாமல் பார்த்து கொள்வது. அதுமட்டுமின்றி தொடர் குற்ற செயல்கள் செய்பவர்களை கண்டறிந்து அவர்களை ஒடுக்குவது, போக்குவரத்து சரி செய்வது, சமூக பணிகள் செய்வது போன்றவைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

    காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி 2½ ஆண்டுகளுக்கு முன் ஆட்சிக்கு வந்த போது புதுவையில் மக்கள் நிம்மதியாகவும், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியோடு வந்து செல்ல வேண்டும் என்பதற்காகவும் காவல்துறையில் நிர்வாக சீர்திருத்தம் செய்து, அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை முழுமையாக கிடைக்க வேண்டும் என்று உறுதி ஏற்றோம்.

    புதுச்சேரி காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். மக்களுக்காக நாம், நமக்காக மக்கள் இல்லை என்ற உணர்வு இருக்க வேண்டும். அனைத்து துறை அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் சம்பளம் வாங்குகின்றோம் என்ற எண்ணம் இருக்க வேண்டும். பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மக்களுக்கு முழு உரிமை தர வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கான உதவியை காவல்துறை மிக சிறப்பாக செய்து வருகிறது. போலீசாரின் ஒத்துழைப்பு இல்லாமல் அமைதியை காண முடியாது. புதுச்சேரியில் நிம்மதியாக இருக்கலாம், தொல்லை இருக்காது, குற்றம் செய்பவர்கள் நம்மை நெருங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தான் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    சட்டம்-ஒழுங்கை பாதுகாத்து வரும் போலீசாருக்கு அதிக சலுகைகள் வழங்க வேண்டும். பதவி உயர்வு, காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும். காவல்துறையை நவீனப்படுத்துவதற்கு மத்திய அரசிடம் நிதியை பெற வேண்டியுள்ளது. போலீசார் குற்றங்களை தடுப்பதுடன், குற்றம் நடைபெறுவதற்கு முன் எப்படி தடுப்பது என்ற தகவல்களை சேகரித்து அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். குற்றம் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். போலி ஏ.டி.எம். கார்டு மோசடியில் பிற மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் பணத்தை இழந்துள்ளனர்.

    இந்த வழக்கை சி.ஐ.டி. மற்றும் சைபர் கிரைம் போலீசார் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்துள்ளனர். தற்போது மற்றொரு போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் 2 பேரை கைது செய்துள்ளனர். தற்போது பாரம்பரிய குற்றங்கள் மட்டுமின்றி, விஞ்ஞான ரீதியான குற்றங்களும் நடைபெற்று வருகிறது. இவைகளை எதிர்கொள்ள பயிற்சி பெற வேண்டும். ஊழல் இன்றி பணியாற்ற சபதம் ஏற்க வேண்டும். புகார் கொடுக்க வருபவர்களிடம் கடுமையாக பேசக்கூடாது. உரிய நேரத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். கடமையில் எப்போதும் முனைப்பாக இருக்க வேண்டும். திறமையை காட்டினால் பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    சென்னை டி.ஜி.பி.அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச்சின்னத்தில் பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு டி.ஜி.பி. ராஜேந்திரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். #NationalPoliceDay

    சென்னை:

    காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் 1959-ம் ஆண்டு 21-ந்தேதி ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந்தேதி ‘காவலர் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.

    அதன்படி இன்று சென்னை டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச்சின்னத்தில் இந்தியா முழுவதும் பணியின் போது வீரமரணம் அடைந்த 414 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டி.ஜி.பி. ராஜேந்திரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் உயர் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.

    வீரமரணம் அடைந்த காவலர்கள் ஸ்ரீராமலு, நடராஜன், கோபால், காவலர் கிருஷ்ணன், எட்வர்டு, தனசேகரன், இன்ஸ்பெக்டர்கள் பெரிய பாண்டியன் உள்ளிட்டோரின் குடும்பத்தினரும் முதல் முறையாக அஞ்சலி செலுத்தினார்கள்.

    ஆவடி வசந்தம் நகரில் உள்ள இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் வீட்டுக்கு சென்ற கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார். #NationalPoliceDay

    காதலித்து திருமணம் செய்த காவலருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தனது உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயசாந்தி (வயது 21). அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் லோகநாதன் (28). இவர் சிறிது காலம் முசிறி போலீஸ் நிலையத்தில் காவலராக வேலைபார்த்துவிட்டு, தற்போது கடலூர் மாவட்டத்தில் பணிபுரிகிறார். பெரம்பலூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் லோகநாதன் காவலராக பணிபுரிந்த போது, விஜயசாந்திக்கும் லோகநாதனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன் திருப்பூர் மாவட்டம், அவினாசி பகுதியில் உள்ள விஜயசாந்தியின் தோழி வீட்டில் தங்கி, இருவரும் திருமணம் செய்து கொண்டதாக விஜயசாந்தி தரப்பில் கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து, திருச்சி மாவட்டம், துறையூரில் விஜயசாந்தி தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே விஜயசாந்தி 6 மாத கர்ப்பமாக இருந்தாராம். இதையறிந்த, லோகநாதன் மற்றும் அவரது பெற்றோர் கருவை கலைத்தால் மட்டுமே, குடும்பத்துடன் ஏற்றுகொள்வதாக தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, துறையூர் பாலக்கரையில் உள்ள சித்த மருத்துவரிடம் கருவை கலைத்துள்ளார். இதையடுத்து, வீட்டுக்கு அழைத்து செல்ல வற்புறுத்தியதற்கு, லோகநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்து விட்டனர்.

    இதுகுறித்து விஜயசாந்தி துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். இதுதொடர்பாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதைதொடர்ந்து பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்ற போது, முசிறி காவல் நிலையத்துக்கு செல்லுமாறு அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் விரக்தி அடைந்த விஜயசாந்தி, தனது கணவருடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க கோரியும், தன்னை ஏற்க மறுத்த அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனது உறவினர்களுடன் வந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உட்கார்ந்து சிறிது நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மகளிர் போலீசார், பேச்சுவார்த்தை மேற்கொண்டதை தொடர்ந்து விஜயசாந்தி மற்றும் அவரது உறவினர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். அதன் பின்பு மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமியிடம் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
    ×