என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 149445
நீங்கள் தேடியது "கவுரி"
ஞானிகள் 108 வகை கவுரி தேவி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட வகை செய்துள்ளனர். அதிலும் மிக முக்கியமானது 16 வகையான கவுரி வழிபாடு. இந்த வழிபாட்டால் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.
ஆதியில் பரசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளி போல் வெண்மையாகத் தோன்றி, அண்ட சராசரங்களையும் உயிர்களையும் படைத்து, அவற்றுக்கெல்லாம் அருள, மலைகளின் மேல் வந்து தங்கினாள் தேவி. வெண்மையான நிறத்துடன் இருந்தாலும் மலைகளில் தங்கியதாலும் ‘கவுரி’ என அழைக்கப்பட்டாள். அருணகிரிநாதர் கவுரிதேவியை, ‘உலகு தரு கவுரி’ எனப் போற்றுகிறார்.
கவுரிதேவியை வழிபடுவது, அனைத்து தேவ-தேவியரையும் வழிபடுவதற்குச் சமம். கவுரி வழிபாடு இல்லறத்தைச் செழிக்கச் செய்யும் சிறந்த வழிபாடு என்கின்றன ஞானநூல்கள். ஞானிகள் 108 வகை கவுரி தேவி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட வகை செய்துள்ளனர். அதிலும் மிக முக்கியமானது 16 வகையான கவுரி வழிபாடு. இந்த வழிபாட்டால் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.
ஞான கவுரி
ஒரு முறை சக்திதேவி, ‘உலக உயிர்கள் செயல்படுவது எனது சக்தியால்தான், ஆகையால் எனது சக்தியே உயர்ந்தது’ என்று வாதிட்டாள். சிவனாரோ, ஒருகணம் உலக உயிர்களின் அறிவை நீக்கினார். இதனால் பெரும் குழப்பம் நேர்ந்தது. அதைக் கண்ட தேவி திகைத்தாள். உயிர்களுக்கு சக்தி மட்டுமே போதாது என்று உணர்ந்தவள், சிவபெருமானை பணிந்தாள். சிவம், உலக உயிர்களுக்கு மீண்டும் ஞானம் அளித்தது. கவுரி தேவி தன் தவறுக்கு வன்னி மரத்தடியில் அமர்ந்து தவம் செய்தாள். ஈசன் அன்னைக்கு ஆசி வழங்கி அவளை, அறிவின் அரசியாக்கினார். இதனால் அம்பிகை ‘ஞான கவுரி’ என போற்றப்பட்டாள்.
பிரம்மன் அவளை ஞானஸ்வர கவுரியாக, கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமியில் வன்னி மரத்தின் அடியில் இருத்தி வழிப்பட்டான். அந்நாள் ‘ஞான பஞ்சமி’, ‘கவுரி பஞ்சமி’ என்று அழைக்கப்படுகிறது. இவளுடன் ஞான விநாயகர் வீற்றிருப்பார். இந்த தேவி, மக்களுக்கு உயர்ந்த ஞானத்தையும் கல்வியையும் அருள்கின்றாள்.
சுயம் கவுரி
சிவபெருமானை தன் மணமகனாக மனதில் எண்ணியவாறு, நடந்து செல்லும் கோலத்தில் அருள்பவள், ‘சுயம் கவுரி’. திருமணத் தடையால் வருந்தும் பெண்கள், சுயம்வர கவுரியை வழிபட்டால் நல்ல கணவர் அமைவார். ருக்மணி, சீதை, சாவித்ரி முதலானோரின் வரலாறுகள், கவுரி பூஜையின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. நல்ல இல்லறத்தை நல்கும் இந்த அம்பிகையை ‘சாவித்ரி கவுரி’ என்றும் அழைக்கின்றனர். இந்த தேவியுடன் கல்யாண கணபதி வீற்றிருக்கிறார்.
கஜ கவுரி
பிள்ளையாரை மடியில் அமர்த்தியபடி அருள்புரியும் தேவி இவள். ஆடி மாத பவுர்ணமி திதியில் இந்த தேவியை வழிபட, சந்தான பாக்கியம் கிடைக்கும்; வம்சம் விருத்தியாகும். காசி அன்னபூரணி ஆலயத்தில் சங்கர கவுரி, கணபதியோடு இருக்கும் பெரிய திருவுருவம் உள்ளது. இலங்கையில், பல இடங்களில் தேர்ச் சிற்பங்களாகவும், தூண் சிற்பங்களாகவும் கஜ கவுரி காட்சியளிக்கிறாள்.
அமிர்த கவுரி
உயிர்களுக்குக் குறையாத ஆயுளைத் தருவது அமிர்தம். மிருத்யுஞ்ஜயரான சிவபெருமானின் தேவி என்பதால், அன்னைக்கு ‘அமிர்த கவுரி’ என்று பெயர். இவளுக்குரிய நாள் ஆடி மாத பவுர்ணமி, ஜல ராசியான கடக மாதத்தில் இவளை வழிபடுவதால் ஆயுள் விருத்தியாகும்; வம்சம் செழிக்கும். இவளுடன் அமிர்த விநாயகர் வீற்றிருப்பார். திருகடவூர் அபிராமி, அமிர்த கவுரியானவள். அங்குள்ள கள்ளவாரணப் பிள்ளையார், அமுத விநாயகர் ஆவார்.
கீர்த்தி கவுரி(எ) விஜய கவுரி
நற்பயனால் ஒருவன் பெரிய புகழை அடைந்திருந்த போதிலும், அதன் பயனை முழுமையாக அனுபவிக்கச் செய்யும் தேவியாக ‘விஜய கவுரி’ விளங்குகிறாள். அவளுடைய அருள் இருக்கும் வரையில், ஒருவரது நற்குணங்களும் செயல்களும் மேன்மைபெறும். கெட்ட நண்பர்களும், பகைவர்களும் விலகுவர்.
சத்யவீர கவுரி
நல்ல மனம் படைத்தவர்களே கொடுத்த வாக்கை நிறைவேற்றுவர். அத்தகைய மனப்பாங்கை அருள்பவள் ‘சத்யவீர கவுரி’. இந்த தேவியுடன் வீர கணபதி அருள்பாலிப்பார். இந்த கவுரிக்குரிய நாள், ஆடி மாத வளர்பிறை திரயோதசி ஆகும். இந்த வழிபாட்டை ஜெயபார்வதி விரதம், ஜெய கவுரி விரதம் என்று அழைக்கின்றனர்.
சுமித்ரா கவுரி
உயிர்களுக்கு இறைவன் தலைசிறந்த நண்பனாக இருக்கிறார். சுந்தரரின் தோழனாக ஈசன் அருள் பாலித்த கதைகள், நமக்கு தெரியும். அவரைப் போன்றே உயிர்களின் உற்ற தோழியாகத் திகழும் அம்பிகையை, ‘அன்பாயி சினேகவல்லி’ என போற்றுகின்றன புராணங்கள். திருஆடானையில் அருளும் அம்பிகைக்கு ‘சினேகவல்லி’ என்று பெயர். இவளையே வடமொழியில் ‘சுமித்ரா கவுரி’ என்று அழைக்கிறார்கள். இவளை வழிபட, நல்ல சுற்றமும் நட்பும் வாய்க்கும்.
வரதான கவுரி
கொடை வள்ளல்கள் கரத்தில் ‘வரதான கவுரி’ குடி யிருப்பாள். அன்பர்கள் விரும்பும் வரங்களைத் தானமாக அளிப்பதால் இவள் ‘வரதான கவுரி’ என்று போற்றப் படுகிறாள். திருவையாறில் விளங்கும் அம்பிகை, அறம் வளர்த்த நாயகி; வடமொழியில் தர்மசம்வர்த்தினி. அவளுடைய கணவன் அறம்வளர்த்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். காஞ்சியிலும் அறம்வளர்த்தீஸ்வரர் ஆலயத்தைத் தரிசிக்கலாம். புரட்டாசி வளர்பிறை திருதியை நாளில், வரதான கவுரியை வழிபடுவது சிறப்பு.
சம்பத் கவுரி
வாழ்வுக்கு அவசியமான உணவு, உடை, உறைவிடத்தை ‘சம்பத்துகள்’ என்பர். அந்தக் காலத்தில் பசுக்களும் (கால்நடைகள்) உயர்ந்த செல்வமாகப் போற்றப்பட்டன. அத்தகைய உயர்ந்த சம்பத்துகள் பெருக அருள்பவள் ‘சம்பத் கவுரி’. சம்பத்துகளை உணர்த்தும் வகையில் பசுவுடன் காட்சி அளிப்பாள் இந்த தேவி. கவுரிதேவியே பசுவாக உருவெடுத்து வந்து, சிவபூஜை செய்த தலங்களும் உண்டு. இதனால் அவளுக்கு கோமதி, ஆவுடைநாயகி ஆகிய திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன. திருச்சிக்கு அருகிலுள்ள துறையூரில் இறைவன், சம்பத் கவுரி சமேத நந்தீசுவராகக் கோவில் கொண்டுள்ளார். காசி அன்னபூரணியையும் ‘மகாமங்கள கவுரி’, ‘சம்பத் கவுரி’ என்பார்கள். இவளுடன் ஐஸ்வர்ய மகாகணபதி வீற்றிருக்கிறார். பங்குனி-வளர்பிறை திருதியையில் விரதம் இருந்து சம்பத் கவுரியை வழிபட வீட்டில் தானியம், குழந்தை குட்டிகளுடன் கூடிய வம்சம், செல்வம் எல்லாம் விருத்தியாகின்றன.
சுவர்ண கவுரி
ஒரு பிரளய முடிவில் அலைகடலின் நடுவில் சொர்ண லிங்கம் தோன்றியது. தேவர்கள் யாவரும் அந்த லிங்கத்தைப் பூஜித்தனர். அப்போது, அதிலிருந்து பொன்மயமாக ஈசனும், பொற்கொடியாக பராசக்தியும் தோன்றினர். அந்த தேவியை, ‘சுவர்ணவல்லி’ என்று தேவர்கள் போற்றினர். சொர்ண கவுரியை வழிபடுவதால் தோஷங்கள், வறுமை ஆகியன நீங்கும். குலதெய்வங்களின் திருவருள் கிடைக்கும். சுவர்ணகவுரி விரதத்தை, ஆவணி வளர்பிறை திருதியை நாளில் கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றன. புராணங்கள். கடலரசியான அவளை மாசி மாதத்தில் வழிபடுவதால் பூரண பலனை அடையலாம் என்று சொல்பவர்களும் உண்டு.
யோக கவுரி
யோக வித்தையின் தலைவியாக மகா கவுரி திகழ் கிறாள். இவளையே ‘யோக கவுரி’ என்கிறோம். மகா சித்தனாக விளங்கும் சிவபெருமானுடன், அந்த அம்பிகை யோகேஸ்வரியாக வீற்றிருக்கிறாள். காசியில் அவர்கள் இருவரும் வீற்றிருக்கும் பீடம் ‘சித்த யோகேஸ்வரி பீடம்’ என்று அழைக்கப்படுகிறது. சித்தர்கள் யோகங்களை அருளும் அம்பிகையை ‘யோகாம்பிகை’, ‘யோக கவுரி’ என்று சொல்கிறார்கள். யோக கவுரியுடன் வீற்றிருக்கும் விநாயகரை ‘யோக விநாயகர்’ என்பர். திருவாரூரில் தியாகராஜர் மண்டபத்தில் வீற்றிருக்கும் (மூலாதார) விநாயகரை, யோக கணபதி என்று அழைப்பர். திருவாரூரிலுள்ள கமலாம்பிகை ‘யோக கவுரி’ ஆவாள்.
த்ரைலோக்ய மோஹன கவுரி
ஆசைக் கடலில் சிக்கி அவதிப்படாமல் இருக்க வழி செய்வதால், இந்த கவுரிக்கு ‘த்ரைலோக்ய மோஹன கவுரி’ என்று பெயர். மனதுக்கு உற்சாகத்தையும் உடலுக்குத் தெய்வீக சக்திகளையும் அளிக்கிறாள் இவள். இவளுடன் த்ரைலோக்ய மோஹன கணபதி வீற்றிருக்கிறார். காசியில் நளகூபரேஸ்வரருக்கு மேற்குப் பக்கத்தில், குப்ஜாம்பரேஸ்வரர் என்னும் சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இந்த கவுரி தேவியை வழிபடலாம்.
வஜ்ர ச்ருங்கல கவுரி
உறுதியான உடலை ‘வஜ்ர தேகம்’ என்பர். அத்தகைய உடலை உயிர் களுக்குத் தரும் கவுரிதேவி ‘வஜ்ர ச்ருங்கல’ எனப் போற்றப்படுகிறாள். கருட வாகனத்தில் பவனி வரும் இவள், அமுத கலசம், சக்கரம், கத்தி ஆகியவற்றுடன் நீண்ட சங்கிலியை ஏந்திக் காட்சியளிக்கிறாள். ‘ச்ருங்கலம்’ என்பதற்கு, ‘சங்கிலி’ என்பது பொருள். வைரமயமான சங்கிலியைத் தாங்கி இருப்பதால், ‘வஜ்ர ச்ருங்கல கவுரி’ எனப்படுகிறாள். உயிர்களுக்கு வஜ்ர தேகத்தை அளித்து, நோய் நொடிகள் அணுகாமல் காத்து அருள்புரிவதுடன் இறுதியில் மோட்சத்தையும் தருகிறாள். இவளுடன் இருப்பது சித்தி விநாயகர்.
விஸ்வபுஜா மகாகவுரி
தீவினைப் பயன்களை விலக்கி, நல்வினைப் பயனை மிகுதியாக்கி, உயிர்களுக்கு இன்பங்களை அளிக்கும் தேவி இவள். காசிக்கண்டம் இவளுடைய பெருமைகளை விவரிக்கிறது. தூய எண்ணங்களை மனதில் வளரச் செய்து, ஆசைகளைப் பூர்த்தி செய்பவளும் இவளே! எனவே, ‘மனதார பூர்த்தி கவுரி’ என்றும் அழைக்கப்படுகிறாள். சித்திரை மாத வளர்பிறை திருதியையில் இவளை வழிபடுவது விசேஷம். இவளுடன் ஆசா விநாயகர் வீற்றிருக்கிறார்.
அசோக கவுரி
துன்பமற்ற இடமே ‘அசோகசாலம்’ எனும் தேவியின் பட்டணமாகும். இங்கு தேவி, ‘அசோக கவுரி’ என்னும் பெயரில் வீற்றிருக்கிறாள். சித்திரை வளர்பிறை அஷ்டமியில் (அசோகஷ்டமி) அசோக கவுரியை வழிபட, பேரின்ப வாழ்வை அடையலாம். இந்த கவுரியுடன் சங்கடஹர விநாயகர் வீற்றிருக்கிறார்.
சாம்ராஜ்ய மகா கவுரி
அன்பும் வீரமும் ஒருங்கே விளங்கும் தலைமைப் பண்பை தரும் தேவி இவள். இந்த அம்பிகையை ராஜராஜேஸ்வரியாகவும் வணங்குவார்கள். இந்த தேவியுடன் ராஜ கணபதி அருள்புரிவார். இவளை மனதார வழிபட, ராஜ யோகம் கிடைக்கும்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X