search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவணித்திருவிழா"

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணித்திருவிழா வருகிற 14-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை தெப்பத்திருவிழாவும், மார்கழி பெருந்திருவிழாவும், மாசி திருக்கல்யாண திருவிழாவும் தாணுமாலயசாமிக்கு நடைபெறும்.

    ஆவணி மாதத்திருவிழா மூலவராகிய தாணுமாலயனை அடுத்துள்ள திருவேங்கிட விண்ணவப்பெருமாளுக்கு நடக்கிறது. இந்த கோவிலில் இரண்டு கொடிமரங்கள் உள்ளன. சித்திரை மற்றும் மார்கழித் திருவிழாவின்போது தாணுமாலயசாமி சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படும். ஆவணித்திருவிழாவின்போது திருவேங்கிட விண்ணவப்பெருமாள் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும்.

    அதுபோல் இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 23-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், காலை 9.15 மணிக்கு மேல் திருவேங்கிட விண்ணவப்பெருமாள் சன்னதியில் இருந்து மேளதாளத்துடன் கொடிப்பட்டத்தை எடுத்து வந்து பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்படும். கொடியை மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ ஏற்றுகிறார். அதனைத்தொடர்ந்து கொடிபீடத்துக்கு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. தினமும் காலை 8 மணிக்கும் இரவு 7 மணிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரண்டு அம்பாளும் பெருமாளும் எழுந்தருளி விதவிதமான வாகனங்களில் பவனி வருவர்.

    9-ஆம் திருவிழாவான வருகிற 22-ந் தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஸ்ரீதேவி, பூதேவி இரண்டு அம்பாளையும், பெருமாளையும் அலங்கரிக்கப்பட்ட இந்திரன் தேராகிய சப்பரத்தேரில் எழுந்தருளச் செய்து நான்கு ரதவீதிகள் வழியே மேளதாளங்கள் முளங்க பக்தர்கள் இழுத்து வருவர்.

    திருவிழா இறுதி நாளான 23-ந் தேதி பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதையொட்டி விஷ்ணுபகவானுக்கு எண்ணெய்காப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் திருக்கோவில் பணியாளர்களும் பக்தர் சங்கத்தினரும் இணைந்து செய்து வருகின்றனர். 
    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு நேற்று மாலையில் கொடிப்பட்ட வீதி உலா நடந்தது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாக்கள் மிகவும் சிறப்பு பெற்றதாகும்.

    இந்த ஆண்டு ஆவணித் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலையில் 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை 12-ம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டமானது 1-ம் படி, செப்பு ஸ்தலத்தார் கோபி அய்யர் யானை மீது கையில் ஏந்தியவாறு வீதி உலா வந்து கோவிலில் சேர்ந்தது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு கோவில் செப்புக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது, மாலையில் அப்பர் சுவாமிகள் கோவிலிலிருந்து தங்க சப்பரத்தில் புறப்பட்டு வீதிகளில் உழவாரப்பணி செய்து கோவில் வந்து சேர்கிறார். இரவில் ஸ்ரீபெலிநாயகர் அஸ்திரத் தேவருடன் தந்தப் பல்லக்கில் 9 சந்திகளில் வீதிஉலா வந்து கோவிலில் சேர்கிறார்.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி, அலுவலக கண்காணிப்பாளர் யக்ஞ நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    நெல்லை குறுக்குத்துறை ஆவணி தேர் திருவிழாவை முன்னிட்டு டவுனில் சுப்பிரமணிய சுவாமிக்கு வைர கிரீடம் அணிவித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.
    நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி தேர் திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நேற்று காலை 6 மணிக்கு ஆறுமுக பெருமானின் உருகு சட்ட சேவை நடைபெற்றது. நேற்று இரவு சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தி எழுந்தருளி டவுனுக்கு சென்றார். டவுன் திருப்பணி முக்கில் சுவாமிக்கு வைர கிரீடம், வைர வேல் அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று டவுனில் சுவாமி வெள்ளை சாத்தியும், பச்சை சாத்தியும் காட்சி அளிக்கிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 25-ந்தேதி(சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 26-ந்தேதி காலை 11 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. 27-ந்தேதி இரவு 7 மணிக்கு நெல்லையப்பர் கோவில் வெளி தெப்பத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன நிர்வாகிகள் செய்து உள்ளனர்.
    ×