search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருணாசலேஸ்வரர்"

    அருணாசலேஸ்வரர் கோவிலில் பராசக்தி அம்மனுக்கு சிவகங்கை தீர்த்தகுளத்தில் தீர்த்தவாரி நடந்தது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். ஆன்மிக தலங்களில் திருவண்ணாமலை கோவில் முக்கிய இடத்தில் உள்ளதால் வெளிநாட்டு பக்தர்களும் அதிக அளவில் இங்கு வந்து தரிசனம் செய்கிறார்கள்.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டு கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடிமரத்தில் நடந்த இந்த கொடிஏற்றத்தை தொடர்ந்து தினமும் காலை, மாலை என இருவேளைகளில் விநாயகர், பராசக்தி அம்மன் மாடவீதி யில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    இந்த நிலையில் ஆடிப்பூர பிரம்மோற்சவத்தின் நிறைவையொட்டி நேற்று கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் பராசக்தி அம்மனுக்கு தீர்த்தவாரி நடந்தது. அங்கு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலையில் வளைகாப்பு மண்டபத்தில் அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெற்றது.

    இரவு பராசக்தி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவு 12.30 மணிஅளவில் உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் தீ மிதி விழாவுக்கான ஏற்பாடுகள் காலை முதல் நடந்தது. அதில் குண்டத்தில் இறங்குவதற்காக பக்தர்கள் அங்கு வந்த வண்ணம் இருந்தனர். 
    பஞ்சப் பூதத் தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் அம்மணி அம்மாள் வாழ்ந்தார் என்று சொல்வதை விட அற்புதங்களை நிகழ்த்தி அருளாளராகத் திகழ்ந்தார் என்றே சொல்லலாம்.
    ஒரு பெண் தன்னந்தனி ஆளாக நின்று, 171 அடி உயரத்துக்கு பிரமாண்டமான ஒரு ஆலய கோபுரத்தைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல.
    அதுவும் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்தபோது இந்த சாதனையை அந்த பெண் நிகழ்த்தியது பிரம்மிக்கத்தக்கது.

    அந்தப் பெண் சாதாரணப் பெண் அல்ல. அவர் ஒரு சித்தப் புருஷர். சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு உயர் சித்த நிலைப் பெற்றவர். பொதுவாக ஒவ்வொரு சித்தருக்கும் குரு என்று யாராவது இருப்பார்கள். ஆனால் இந்தப் பெண்ணுக்கு சிவபெருமானே குருவாக இருந்தார். குரு என்று வேறு யாரையும் தேடாமல் பிறவியிலேயே சிவன் மீது சித்தம் வைத்த அந்தப் பெண் நடத்திய அற்புதங்கள் ஏராளம்.

    அந்தப் பெண்ணின் பெயர் அம்மணி அம்மாள். பஞ்சப் பூதத் தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் அவர் வாழ்ந்தார் என்று சொல்வதை விட அற்புதங்களை நிகழ்த்தி அருளாளராகத் திகழ்ந்தார் என்றே சொல்லலாம். அந்த ஆலயத்தில் வடக்குப் பகுதி கோபுரம் மட்டும் கட்டப்படாமல் இருந்தது.
    அதாவது கோபுரம் கட்ட அடித்தளம் போடப்பட்டு, பிறகு ஏனோ கட்டப்பட முடியாமல் அப்படியே மொட்டையாக நின்று போனது. எத்தனையோ பேர் முயன்றும் அந்த கோபுரத்தைக் கட்ட இயலவில்லை.

    ஈசனுக்குத் தெரியும், எந்த வேலையை, யாரிடம் கொடுத்து, எப்படி முடிக்க வேண்டும் என்று. அதன்படி திருவண்ணாமலை ஆலய வடக்குக் கோபுரத்தைக் கட்ட அம்மணி அம்மாளை ஈசன் தேர்வு செய்து அருள் புரிந்தார்.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள சென்னசமுத்திரத்தில் கோபால் பிள்ளை- ஆயி தம்பதிக்கு 1735-ம் ஆண்டு மார்கழி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் அம்மணி அம்மாள் பிறந்தார். அவரது உண்மையான பெயர் அருள்மொழி.

    சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு சிறு வயதிலேயே திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீது அளவு கடந்த பக்தி ஏற்பட்டது.
    தங்கள் மகள் எப்போதும் அருணாசலேஸ்வரர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்து பயந்து போன அவர் பெற்றோர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். சொந்த மாமன் மகனை மணமகனாகப் பேசி முடித்தனர்.

    இதை அறிந்த அம்மணி அம்மாள், “நான் இதற்காக பிறவி எடுக்கவில்லை” என்று கூறி, வேதனைத் தாங்காமல் சுமார் 1 மைல் தொலைவில் உள்ள கோமுட்டி குளத்துக்குள் குதித்து விட்டார். ஊரே திரண்டு வந்து குளத்துக்குள் இறங்கித் தேடினார்கள். அம்மணி அம்மாளை காண முடியவில்லை. மூன்றாவது நாள் குளத்தில் இருந்து அம்மணி அம்மாள் வெளியில் வந்தார். ஊரே திரண்டு ஆச்சரியப்பட்டது.

    குளக்கரை மண்ணை எடுத்து அவர் கொடுக்க, அது அவல் பொரியாக மாறியது. அம்மணி அம்மாள் சித்தப்புருஷராக மாறி இருப்பது அப்போதுதான் அவர் பெற்றோருக்கும், ஊருக்கும் தெரிய வந்தது. தினமும் அண்ணாமலையாருக்கு தொண்டு செய்வதும், கிரிவலம் செல்வதுமாக இருந்த அவருக்கு ஒருநாள், “வடக்குக் கோபுரத்தை கட்டும் பணியைத் தொடங்கு” என்று ஈசன் உத்தரவிட்டார். அம்மணி அம்மாள் சித்தர் சக்தி பெற்றிருந்தாலும் முதலில் அவருக்கு பிரமிப்பாகத்தான் இருந்தது.

    அம்மணி அம்மாளின் ஆற்றலை அறிந்து வியந்த வணிகர்களும், பொதுமக்களும் தங்களால் இயன்றதைக் கொடுத்தனர். இப்படி சேர்ந்த பணத்தைக் கொண்டு கோபுரம் கட்டும் வேலையை அவர் மேற்கொண்டார். கோபுரம் ஒவ்வொரு நிலையாக கட்டி முடிக்கப்பட்டது. ஒன்று முதல் ஐந்து நிலைகள் வரை கட்டி முடிக்கப்பட்டபோது, அம்மணி அம்மாளுக்கு மீண்டும் பணம் தேவைப்பட்டது.

    பொது மக்களிடமும், வணிகர்களிடமும் திரும்ப, திரும்ப எத்தனைத் தடவைதான் பண உதவியும், பொருள் உதவியும் கேட்க முடியும்? எனவே மைசூர் மகாராஜாவிடம் போய் பொன் பொருள் உதவிகள் கேட்க அவர் தீர்மானித்தார். மறுநாளே மைசூருக்கு பயணமானார். அரண்மனையை அடைந்தபோது வாசலில் நின்ற வாயிற்காப்பாளன் அவரை உள்ளே விட மறுத்தான்.

    அம்மணி அம்மாளின் எளிமையானக் கோலத்தைப் பார்த்து சந்தேகம் அடைந்த வாயிற்காப்பாளன் அவரை ஒரு ஓரமாக உட்கார வைத்தான். காலையில் வந்தவர் மதியம் வரை அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை உள்ளே தர்பார் மண்டபத்தில் ஒரு சுவாரசியம் நடந்து கொண்டிருந்தது. லகிமா ஆற்றலால் உலகின் எந்தப் பகுதிக்கும் சென்று வந்து விடும் சக்தியைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார். பொதுவாக சித்தர்களுக்கு ஒரே நேரத்தில் 2 அல்லது 3 இடங்களில் தோன்றும் ஆற்றல் உண்டு.

    இந்த ஆற்றலைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை வாசலில் வாயில் காப்பாளனால் தடுக்கப்பட்ட இடத்திலும் அம்மணி அம்மாள் இருந்தார். உரிய அனுமதியின்றி ஒரு பெண் தன் அருகே வந்து நிற்பதைக் கண்டதும் மகாராஜா மிகவும் ஆச்சரியமடைந்தார். “நீ யார்? எப்படி உள்ளே வந்தாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.



    அம்மணி அம்மாள் தன்னைப் பற்றியும், திருவண்ணாமலை ஆலயத்தில் கோபுரம் கட்டி வரும் தகவலையும் சொல்லி, அந்த கோபுரப் பணியை நிறைவு செய்ய பொன்னும், பொருளும் கேட்க வந்திருப்பதாக கூறினார். மேலும் வாயிற்காப்பாளன் தன்னை உள்ளே விட மறுத்ததால், ஒரே நேரத்தில் 2 இடங்களில் தோன்றும் சித்தாடல் மூலம் உள்ளே வந்ததாக தெரிவித்தார். இதைக் கேட்டதும் மைசூர் மகாராஜா நம்ப முடியாமல் பார்த்தார்.

    பிறகு வாயிற்காவலனை வரச் சொல்லி உத்தரவிட்டார். மகாராஜா இருக்கும் அவைக்குள் வந்த வாயிற் காவலன், சற்று அதிர்ச்சியுடன் அம்மணி அம்மாளைப் பார்த்து, “உங்களை நான் உள்ளே விடவில்லையே. வெளியில்தானே அமர்ந்திருந்தீர்கள். உள்ளே எப்படி வந்தீர்கள்?” என்றான். உடனே மகாராஜா, நீண்ட நேரமாக அந்த அம்மாளுடன் தான் பேசிக் கொண்டிருப்பதாக கூறி விட்டு, வாயிற் காவலனுடன் விறுவிறுவென வாசல் பகுதிக்கு வந்தார்.

    அங்கும் ஒரு ஓரமாக அம்மணி அம்மாள் அமர்ந்திருந்தார். அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, சபைக்குள்இருந்த அம்மணி அம்மாள் மாயமாய் மறைந்திருந்தார். உடனே வந்திருப்பவர் சாதாரண பெண் அல்ல என்பதை மகாராஜா புரிந்து கொண்டார். அம்மணி அம்மாள் வடிவில் அண்ணாமலையாரே வந்து விட்டதாக கருதினார். நன்கு உபசரித்தார். பட்டுச்சேலை ஒன்று பரிசளித்தார். பிறகு தனது பட்டத்து யானை மற்றும் குதிரைகள், ஓட்டகங்களில் நிறைய பொன்னும், பொருளும் ஏற்றி கோபுரத்தைக் கட்டி முடிக்குமாறு அம்மணி அம்மாளை மகாராஜா அனுப்பி வைத்தார்.

    மைசூர் மகாராஜா கொடுத்த பொன், பொருட்களைக் கொண்டு கோபுரத்தின் 6-வது மற்றும் 7-வது நிலைகளை எளிதாகக் கட்டி முடித்தார். இன்னும் 4 நிலைகள் கட்ட வேண்டும். பணத்துக்கு என்ன செய்வது என்று தவித்தார். அண்ணாமலையாரே வழி காட்டுங்கள் என்று ஆழ்ந்த தவத்தில் அமர்ந்து விட்டார். அப்போது அண்ணாமலையார், அவர் கனவில் தோன்றி, “கோபுர வேலையைத் தொடங்கு. தினமும் வேலை முடிந்ததும் பணியாளர்களுக்கு விபூதியை அள்ளிக் கொடு. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

    அதன்படியே கோபுர வேலை நடந்தது. தினமும் மாலை பணியாட்களுக்கு சம்பளத்துக்கு பதில், அம்மணி அம்மாள் திருநீறை அள்ளிக் கொடுக்க, அது அவரவர் செய்த வேலைக்கு ஏற்ற கூலியாக மாறியது. இப்படி கோபுரத்தின் 11 நிலைகளும் கட்டி முடிக்கப்பட்டன. இதன் மூலம் மனதில் துணிச்சலும், இறை அருளும் இருந்தால் எதையும் செய்து முடிக்க முடியும் என்பதை அம்மணி அம்மாள் தெளிவுபடுத்தினார். அவரது விடாமுயற்சியைக் கண்டு ஆங்கிலேயர்களும் வியந்து நின்றனர்.

    171 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட அந்த கோபுரம், கிழக்கில் உள்ள ராஜகோபுரத்துக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அம்மணி அம்மன் கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே மாதிரி தலா 13 கலசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தெற்கில் உள்ள திருமஞ்சன கோபுரமும் (157 அடி) மேற்கில் உள்ள பே கோபுரமும் (144 அடி) வடக்கு கோபுரத்தை விட உயரம் குறைந்ததாகும்.

    திருவண்ணாமலை ஆலயத்தில் ராஜகோபுரத்துக்கு அடுத்தப்படியாக பெரிய கோபுரத்தைக் கட்டி சாதனை படைத்ததால் அந்த கோபுரத்தை எல்லோரும் “அம்மணி அம்மன் கோபுரம்” என்று அழைக்க நாளடைவில் அது நிலைத்துப் போனது. இந்தக் கோபுரம் கட்டி முடித்ததும், கோபுரத்துக்கும், ஆலயத்துக்கும் அம்மணி அம்மாள் தாமே முன்நின்று கும்பாபிஷேகத்தை நடத்தினார்.

    பிறகு துறவி போல வாழ்ந்த அவர் பல்லாயிரக்கணக்கான வர்களுக்கு திருநீறு கொடுத்து நோய் தீர்த்தார்.  திருநீறு மூலம் அற்புதங்கள் செய்து புகழ் பெற்ற அம்மணி அம்மாள் தன் 50-வது வயதில் 1875-ம் ஆண்டு தைப்பூசம் தினத்தன்று பரிபூரணம் அடைந்தார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 8-வது லிங்கமான ஈசான்ய லிங்கம் எதிரில் அவருக்கு ஜீவசமாதி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வழங்கப்படும் விபூதிப் பிரசாதம் மிகவும் புகழ் பெற்றது. மனக் கவலைகளை விரட்டும் மகத்துவம் அந்த ஜீவ சமாதி திருநீறுக்கு உண்டு.

    அம்மணி அம்மாள் ஈசனோடு கலந்து சுமார் 150 ஆண்டுகள் ஆகி விட்ட போதிலும் தன்னை நம்பும் பக்தர்களுக்கு அருவமாக வந்து தேவையான உதவிகளை செய்து கொடுக்கிறார். குறிப்பாக கிரிவலம் வரும் பக்தர் களிடம் அவர் பேசுவதாக, அறிவுரைகள் சொல்வதாக நம்பப்படுகிறது. அவர் ஜீவ சமாதியில் சிறிது நேரம் தியானம் செய்தாலே மனம் லேசாவதை உணரலாம்.

    அம்மணி அம்மாள் பற்றிய கூடுதல் தகவல்களை 90421 40747 என்ற எண்ணில் ரமேஷ் என்பவரிடம் பெறலாம். 
    இடைக்காடர் எனும் மகாசித்தர் திருவண்ணாமலை தலத்தில் அடங்கி இருக்கிறார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்குள் அவரது ஜீவ சமாதி இருப்பதாக கூறப்படுகிறது.
    தமிழ்நாட்டில் எண்ண முடியாத அளவுக்கு எத்தனையோ சித்தர்கள் உள்ளனர். சென்னையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட சித்தர்களின் ஜீவ சமாதி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இந்த சித்தர்கள் உறைந்து அருள்பாலிக்கும் இடங்கள்தான் நாளடைவில் மிகப்பெரும் புகழ்பெற்ற வழிபாட்டு தலங்களாக மாறி இருக்கின்றன.

    ஒவ்வொரு பழமையான ஆலயத்திலும் ஏதாவது ஒரு சித்தர் அடங்கி இருப்பார். அந்த வகையில் பதினெண் சித்தர்களாக கருதப்படும் 18 சித்தர்கள் உறைந்துள்ள 18 ஆலயங்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. அதில் இடைக்காடர் எனும் மகாசித்தர் திருவண்ணாமலை தலத்தில் அடங்கி இருக்கிறார்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்குள் அவரது ஜீவ சமாதி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஆலயத்துக்குள் எந்த பகுதியில் அவரது ஜீவ சமாதி அமைந்துள்ளது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. சிலர் இடைக்காடர் சமாதி திருவண்ணாமலை மலை உச்சியில் இருப்பதாக சொல்கிறார்கள்.
    பொதுவாக சித்தர்கள் பல்வேறு வகையான சமாதி நிலைகளை எட்டுவது உண்டு.

    மறுபிறவியற்ற நிர்விகற்ப சமாதி, நன்மை, தீமை இரு நிலையுடன் கூடிய விகற்ப சமாதி, உடலுக்கும், மனதுக்கும் சஞ்சீவி தன்மை அளிக்கும் சஞ்சீவனி சமாதி, உடலை மட்டும் பாதுகாப்பாக வைத்துவிட்டு உயிரைப் பிரிக்கும் காயகல்ப சமாதி, நீண்ட யோகா பயிற்சி மூலம் உடலை ஒளி உடலாக மாற்றிக் கொள்ளும் ஒளி சமாதி மற்றும் மகா சமாதி, விசார சமாதி, விதர்க்க சமாதி, அசம்பிரக்ஞாத சமாதி, சபீஜ சமாதி என்று பலவகைகள் உண்டு.

    இதில் இடைக்காடர் ஒளி சமாதி ஆகி இருப்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக அவரது ஒளி சமாதியாக கருதப்படும் இடமும் திருவண்ணாமலை ஆலயத்துக்குள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாகத் தான் மக்கள் அந்த ஒளி சமாதியை தெரிந்து கொண்டு வழிபட தொடங்கி உள்ளனர்.

    இதுபற்றி விரிவாக பார்ப்பதற்கு முன்பு, இடைக்காடர் சித்தர் யார்? அவர் எப்படி திருவண்ணாமலைக்கு வந்தார்? திருவண்ணாமலை தலத்தில் என்னென்ன அற்புதங்களை செய்தார் என்பதை பார்க்கலாம். சிவகங்கை மாவட்டத்தில் இடைக்காட்டூர் என்று ஒரு ஊர் உள்ளது. அந்த ஊரில்தான் இடைக்காடர் சித்தர் அவதரித்தார். கோனார் என்று அழைக்கப்படும் இடையர் சமுதாயத்தில் பிறந்ததால் அவருக்கு இந்த பெயர் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    இடைக்காடர் எப்போதும் சிவசிந்தனையிலேயே ஆழ்ந்து இருப்பார். பிறந்தது முதல் அவருக்கு இந்த சித்தி வாய்த் திருந்தது. ஆடுகளை மேய்ச்சலில் விடுவதற்காக காட்டுக்குள் அழைத்து செல்லும்போது அவர் ஏதாவது மரத்தடியில் அமர்ந்து சிவசிந்தனையில் ஏகாந்த நிலைக்கு சென்று விடுவார்.

    ஆடு மேய்ப்பது, பால் கறப்பது, புல்லாங்குழல் ஊதுவது, சிவசிந்தனையில் ஆழ்ந்து விடுவது.... இதுதான் இடைக்காடரின் தினசரி வாழ்வியல் வழக்கமாகும். தினமும் அவர் ஆடுகளை காட்டுக்கு அழைத்து சென்று மேய வைத்துவிட்டு வருவார். ஒருநாள் அப்படி அவர் காட்டுக்குள் சென்றபோது ஒரு மரத்தடியில் சிவசிந்தனையில் ஆழ்ந்தார்.

    அப்போது வான்மார்க்கத்தில் போகர் சித்தர் சென்று கொண்டிருந்தார். அவர் சிவசிந்தனையில் ஆழ்ந்துள்ள இடைக்காடரை பார்த்ததும் வான் மண்டலத்தில் இருந்து இறங்கி வந்து பார்த்தார். அவர் தனக்கு தாகமாக இருப்பதால் பால் தருமாறு கூறினார். உடனே இடைக்காடர் ஆட்டு பால் கொடுத்து போகரை உபசரித்தார்.



    இதனால் மகிழ்ச்சி அடைந்த போகர் வைத்திய, வாத, யோக, ஞானங்களை இடைக்காடருக்கு கற்றுக் கொடுத்தார். அதுமட்டுமின்றி ஜோதிடத்தில் உள்ள அனைத்து கலைகளையும் கற்று கொடுத்தார். இதனால் இடைக்காடர் சாதாரண நிலையில் இருந்து சித்த புருஷராக மாறினார்.

    போகரை குருவாக ஏற்று அவர் செயல்பட்டார். கருவூராரும் அவருக்கு குருவாக இருந்ததாக சொல்வார்கள். இடைக்காடர் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார் என்பது கணிக்க முடியாதபடி உள்ளது. சித்தர்களின் கால தொடக்கம் நான்காம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது. எனவே அப்போது இடைக்காடர் வாழ்ந்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    சித்தராக உயர்ந்த இடைக்காடர் நிறைய நூல்கள் எழுதினார். வைத்தியம் தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள குறிப்புகள் உயர்வானவை. அதுபோல முக்தி பெற அவர் பாடி உள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் நமது மனதை பண்படுத்தக்கூடியவை.

    ஜோதிடத்தில் அவர் எழுதிய கணிப்புகள் இன்று ஜோதிட உலகுக்கு வழிகாட்டும் வகையில் உள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு பிறகும் என்ன நடக்கும் என்பதை ஏற்கனவே இடைக்காடர் எழுதி வைத்துள்ளார். அந்த குறிப்புகளை வைத்துதான் இப்போது ஆண்டு தோறும் பஞ்சாங்கம் தயாரித்து வெளியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்தகைய ஆற்றல் கொண்ட இடைக்காடர் திருவண்ணாமலை தலம் உருவாகவும், புகழ் பெறவும் அடித்தளம் அமைத்து கொடுத்தார். அதற்கான சான்றுகள் திருவண்ணாமலை தலம் முழுக்க உள்ளன. ஆனால் அண்ணாமலையாரை வழிபட செல்பவர்களுக்கு அந்த நுணுக்கங்கள் தெரியாமல் இருப்பது துரதிருஷ்டமே.
    இவர் திருமாலின் அவதாரமாக கருதப்படுகிறார். ஆனால் போகர்தான் இவரை திருவண்ணாமலை தலத்துக்கு அனுப்பியதாக வரலாறு உள்ளது.

    திருவண்ணாமலையில் வாழ்ந்த காலத்தில் அவருக்கு இந்த உலகில் விரைவில் மிகப்பெரிய பஞ்சம் வரப்போவதையும் பஞ்சம் சுமார் 12 ஆண்டுகள் நீடிக்கும் என்பதையும் தனது ஜோதிட திறமையால் உணர்ந்தார். தனது தெய்வத் தன்மையை பயன்படுத்தி அந்த பஞ்சத்தை எதிர்கொள்ள முடிவு செய்தார். அதன்படி தனது ஆடுகளுக்கு எருக்கம் இலையை உணவாக கொடுத்து பழக்கப்படுத்தினார். பொதுவாக எருக்கம் செடிகள் எந்த கொடிய வறட்சியிலும் தாக்குப்பிடித்து நிற்கும் தன்மை கொண்டது. எனவேதான் அவர் அதை தனது ஆடுகளுக்கு உணவாக கொடுத்து பழக்கப்படுத்தினார்.

    பிறகு 12 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும் வரகு எனும் தானியத்தை மண்ணோடு சேர்த்து சுவர்கள் எழுப்பி குடிசை கட்டினார். அவர் எதிர்ப்பார்த்தபடியே பஞ்சம் வந்தது. எல்லா உயிரினங்களும் பஞ்சத்தில் சிக்கி அழிந்தன. ஆனால் இடைக்காடருக்கும், அவர் வளர்த்த ஆடுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவரது ஆடுகள் எருக்கம் இலையை தின்று உயிர் வாழ்ந்தன. இடைக்காடர் குடிசை வீட்டு சுவரில் பதிய வைத்திருந்த வரகு தானியத்தை தட்டி எடுத்து ஆட்டு பாலில் காய்ச்சி குடித்து உயிர் வாழ்ந்தார்.

    இதைப் பார்த்த நவக்கிரகங்களுக்கு மிகவும் ஆச்சரியமாகி விட்டது. நாம் திட்டமிட்டு கிரக நிலைகள் மூலம் வறட்சியை ஏற்படுத்தினாலும் இடைக்காடர் மட்டும் எப்படி உயிர் தப்பினார் என்று யோசித்தனர். இதற்கு விடை காண்பதற்காக இடைக்காடர் வாழும் குடிசைக்கு நவக்கிரகங்கள் வந்தனர். நவக்கிரகங்களை வரவேற்ற இடைக்காடர் அவர்களுக்கு வரகு உணவு தானியத்தையும், ஆட்டு பாலையும் கொடுத்து உபசரித்தார். ஆட்டு பாலில் சமைத்த உணவை சாப்பிட்டதால் நவக்கிரகங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வந்தது. அவர்கள் அப்படியே தூங்கிப் போனார்கள்.



    கிரகங்கள் மாற்றத்தால் தான் மழை பெய்யவில்லை என்பதை ஏற்கனவே அறிந்து இருந்த இடைக்காடர் மழை பெய்ய வைக்கும் வகையில் நவக்கிரகங்களின் நிலைகளை மாற்றிப் படுக்க வைத்தார். அடுத்த கணமே வானம் இருண்டது. நல்ல மழை பொழிந்தது. உலகம் முழுக்க உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தன. தொடர் மழை காரணமாக உலகமே குளிர்ந்தது.

    தங்களை சுற்றி திடீரென குளிர்ச்சி தன்மை உருவாகி இருப்பதை உணர்ந்த நவக்கிரகங்கள் விழித்து எழுந்தனர். உலகில் பஞ்சம் நீங்கி எங்கு பார்த்தாலும் தண்ணீர் வளம் அதிகமாகி குளிர்ச்சி பெற்று இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டனர். இடைக்காடர் மூலம்தான் இந்த மாற்றம் நிகழ்ந்து இருக்க வேண்டும் என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

    இடைக்காடரை இதற்காக பாராட்டினார்கள். அவரை வாழ்த்தி ஆசீர்வதித்து விட்டு சென்றனர். திருவண்ணாமலை தலத்தில் நடந்த இந்த அதிசயம் உலகம் முழுக்க பரவியது. இதற்கு என்ன சான்று இருக்கிறது என்று பலரும் கேட்கலாம். திருவண்ணாமலை தலத்தில் ஒரு விஷயத்தை நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் இதற்கு விடை கிடைக்கும்.

    திருவண்ணாமலைக்குள் நுழைவதற்கு 9 வழிகள் உள்ளன. திருவண்ணாமலையில் சிவபெருமானே மலையாக வீற்று இருப்பதால் அவரை சுற்றி கிரிவலம் வருவது நடைமுறையில் உள்ளது. இந்த கிரிவல பாதை மொத்த தூரம் 9 மைல்கள் ஆகும். திருவண்ணாமலையில் ஈசனின் பாதம் 9 இடங்களில் உள்ளது. கிரிவல பாதையில் 9 லிங்கங்கள் உள்ளன. 9 நந்திகள் உள்ளன. திருவண்ணாமலை கோவிலுக்குள் 9 கோபுரங்கள் அமைந்துள்ளன. இப்படி நவக்கிரகங்களான 9 என்ற அமைப்புக்கும், திருவண்ணாமலையில் உள்ள முக்கிய விஷயங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

    திருவண்ணாமலையில் நவக்கிரகங்கள் மாற்றப்பட்டதற்கு இவைதான் உதாரணமாகும். திருவண்ணாமலைக்கு கிரிவலம் வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு நேரம் சரியில்லை. அதற்கு பரிகாரம் காண வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கிரிவலம் மேற்கொள்ள வருகிறார்கள். நவக்கிரகங்களை மாற்றி எப்படி இந்த உலகுக்கு இடைக்காடர் நன்மையை உருவாக்கினாரோ அதுபோல கிரிவலம் வரும் ஒவ்வொருவரின் கிரக தோஷங்களையும் இடைக்காடர் நீக்கி, நல்ல பலன்களை அருள்வதாக ஐதீகமாகும்.

    கிரிவலம் வந்தால் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து முக்தி பெற முடியும் என்பதற்கு அடித்தளம் அமைத்ததே இடைக்காடர்தான் என்று சொல்வார்கள். அப்படிப்பட்டவர் இன்னமும் திருவண்ணாமலை தலத்துக்கள் ஒளி சமாதியாக இருந்து அருள்பாலிக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமல்ல.
    இடைக்காடரின் அருளை யார் ஒருவர் பரிபூரணமாகப் பெறுகிறார்களோ அவர்களுக்கு திருவண்ணாமலை தலத்துக்கு சென்ற உண்மையான பலன்கள் கிடைக்கும். 
    ×