search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடிப்பெருக்கு"

    • திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
    • தினம் அரங்கேறும் கொலை சம்பவங்களால் எப்படி மக்கள் பாதுகாப்பாக உணர முடியும்?

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றுப்பெருக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விராலிமலையைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணன் என்ற மாணவரை போதைக்கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    ஆடிப்பெருக்கன்று காவிரி ஆற்றங்கரையில் கொலை நடப்பது என்பது, இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு அத்தாட்சி.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், கோவை, சிவகங்கை, கன்னியாகுமரி என தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக கொலை தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளது மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது.

    விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

    வாரந்தோறும் ராசிப் பலன்கள் போடுவது போல கொலைப் பட்டியல்களை நாளிதழ்கள் பிரசுரிக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை அடியோடு சீர்குலைத்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    தினம் அரங்கேறும் கொலை சம்பவங்களால் எப்படி மக்கள் பாதுகாப்பாக உணர முடியும்? எப்படி தினந்தோறும் அச்சமின்றி வேலைக்கு செல்ல முடியும்? எப்படி நம் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள்? எப்படி புதிய தொழில் முதலீடுகள் வரும்?

    "தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது நீங்கள் உங்களுக்காக செய்துகொள்ளும் செய்திதாள் அல்லது தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமாக வராது; சீரான சட்டம் ஒழுங்கு தான் அதற்கு அடிப்படை" என்பதை உணர்ந்து, அஇஅதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதில் மட்டும் செலுத்தும் கவனத்தை சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளில் இனியாவது செலுத்துமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.

    • குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.
    • தமிழகத்தின் முக்கிய சனிபகவான் பரிகாரத்தலமாக விளங்குகிறது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோவில் தமிழகத்தின் முக்கிய சனிபகவான் பரிகாரத்தலமாக விளங்குகிறது. இந்தக் கோவில் இந்து அறநிலையத் துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

    சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவிலில் தமிழகம் மட்டுமன்றி தென் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தங்கள் குடும்பத்தில் உள்ள சனி தோஷம் நீங்கவும், திருமணத் தடைகள் காரியத் தடைகள் விலகவும் இங்கு வந்து பரிகாரம் செய்து சனீஸ்வரனை வழிபட்டு செல்கின்றனர்.

     

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வருகின்ற 5 சனிக்கிழமைகளில் குச்சனூர் சனீஸ்வரர் பெருமான் கோவிலில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இன்று ஆடி 3-வது சனிக்கிழமை மற்றும் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு அதிகாலையிலேயே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    தங்கள் தோஷம் விலக அருகில் உள்ள சுரபி நதிக்கரையில் நீராடி காகத்திற்கு எள் சாதம் வைத்து நல்லெண்ணெய் மற்றும் எள் தீபங்கள் ஏற்றி காக வாகனம் வாங்கி தலையை சுற்றி வைத்து பரிகாரங்கள் செய்தனர்.

    • 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.
    • 3 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் ஒன்றாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    அமணலிங்கேஸ்வரர் கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. அருவியில் குளித்து மகிழவும் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

    அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம், மகாசிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தை மற்றும் ஆடி மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமானது என்பதால் அன்றைய தினங்களில் பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள்.

    அத்துடன் அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் குதிரை மற்றும் மாட்டு வண்டிகளில் வருவதை பாரம்பரிய வழக்கமாக கொண்டு உள்ளார்கள்.

    அதுமட்டுமின்றி அமாவாசைக்கு முன்தினம் திருமூர்த்தி மலைக்கு மாட்டு வண்டிகளில் வருகின்ற பக்தர்கள் இரவு முழுவதும் கோவில் மற்றும் அணைப்பகுதியில் தங்கி கொள்கின்றனர். பின்னர் காலையில் எழுந்து அருவிக்கு சென்று குளித்துவிட்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னர் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்து விட்டு திரும்பிச் செல்வார்கள்.

    அந்த வகையில் இன்று திருமூர்த்தி மலையில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு வழிபாடு மற்றும் நாளை நடைபெற உள்ள ஆடி அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முதல் பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து குவிந்தனர். களைப்படைந்த மாடுகளுக்கு பெருமாள் கோவில் அருகில் வண்டிகளுடன் ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் திருமூர்த்தி மலை பகுதியில் மாட்டு வண்டிகள் அதிக அளவில் காணப்படுகிறது.

    ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்று மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்கள் அதிக அளவில் திருமூர்த்திமலைக்கு வருகை தருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால் திருமூர்த்திமலை பகுதியில் 3 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பணியில் உடுமலை சப்-டிவிஷனுக்கு உட்பட்ட போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அதிகாலையிலேயே திரண்ட பொதுமக்கள் பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி புனித நீராடினர்.
    • காவிரி கரையோர பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சேலம்:

    ஆடிப்பெருக்கு நாளில் நெல் விதைத்தால் தைப்பொங்கலுக்கு அறுவடை செய்யலாம் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் விவசாயத்திற்கு ஆதாரமான ஆறு, குளம் உள்பட நீர் நிலைகளைபோற்றும் விதமாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி ஆடி மாதம் 18-ம் நாளான ஆடிப்பெருக்கில் காவிரி கரையோரங்களில் மக்கள் திரண்டு வழிபாடு நடத்துகிறார்கள். இதில் ஆண்களும், பெண்களும் அதிகாலையிலே பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கள பொருட்களோடு மேட்டூர் காவிரி கரையில் திரண்டனர். மேட்டூர் காவிரியில் 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    இதனால் மேட்டூர் பகுதியில் கொளத்தூர் செட்டிப்பட்டி, கோடையூர், பண்ணவாடி, மூலக்காடு சென்றாய பெருமாள் கோவில், காவிரி பாலம் முதல் முனியப்பன் கோவில் வரை, எம்.ஜி.ஆர்.பாலம், திப்பம்பட்டி, கீரைக்காரனூர், கூணான்டியூர் ஆகிய 9 இடங்களில் மட்டும் பாதுகாப்பு நிபந்தனைகளுடன் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த பகுதிகளில் அதிகாலையிலேயே திரண்ட பொதுமக்கள் பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி புனித நீராடினர். புதுமண தம்பதியினர் காவிரியில் புனித நீராடி புதிய தாலியை அணிந்து கொண்டனர். மேலும் புதுமண தம்பதிகள் அருகம்புல் வைத்து ஆற்றில் புனித நீராடி வருகிறார்கள்.

    தொடர்ந்து காவிரி ஆற்றில் புனித நீராடி காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள அணைக்கட்டு முனியப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். மேலும் குடும்பத்துடன் அங்கு அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும் பக்தர்கள் கோவிலில் உள்ள சாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக குடும்பத்தினருடன் வந்து காவிரி ஆற்றில் சுத்தம் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனால் காவிரி கரையோர பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    மேலும் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் காவிரி கரையோரங்களில் பாதுகாப்பற்ற முறையில் நின்று வேடிக்கை பார்க்கவும், பிற இடங்களில் ஆற்றில் இறங்கி குளிப்பது, கரையில் நின்று புகைப்படம் எடுத்தல், செல்பி எடுத்தல், ஆற்றில் இறங்கி நீச்சல் அடித்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    மேட்டூரில் இருந்து பூலாம்பட்டி வரை காவிரி கரையோர பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மேற்பார்வையில் 550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேரி கார்டு வைத்தும், சி.சி.டி.வி. கேமராக்கள் வைத்தும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பேரிடர் மீட்புக்குழுவும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

    • ஆடிப்பெருக்கை முன்னிட்டு தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
    • தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு புறப்படும்.

    சென்னை:

    ஆடிப்பெருக்கு நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மார்க்கமாக செல்லும் ரெயில்களில் இடங்கள் நிரம்பி வழிவதால் தெற்கு ரெயில்வே முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலை அறிவித்துள்ளது.

    தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில் விழுப்புரம், பண்ருட்டி, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம் வழியாக சென்று திருச்சிக்கு நாளை காலை 6.40 மணிக்கு சென்றடைகிறது.

    இதேபோல திருச்சியில் இருந்து நாளை (3-ந் தேதி) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு மறுநாள் காலை 5.50 மணிக்கு வந்து சேரும்.

    • பொது மக்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள்.
    • பொதுமக்கள் கூட்டமாக தண்ணீரில் இறங்கி குளிப்பதைத் தவிா்க்க வேண்டும்.

    சென்னை:

    மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி வழியாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆலோசித்தாா். அப்போது அவர் மாவட்ட கலெக்டர்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால், நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மழைக் காலத்தில் மலை பகுதியில் உள்ள இடங்களுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என்று பொது மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஊடகங்கள் வாயிலாக அறிவுரைகள் வழங்க வேண்டும்.

    பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளைக் கண்டறிந்து, மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக பல்துறை மண்டலக் குழுக்களை முன்கூட்டியே நிலைநிறுத்த வேண்டும். நிலச்சரிவால் பாதிக்கப்படக்கூடிய சாலைப் பகுதிகளை நெடுஞ்சாலைத் துறையினா் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், பொது மக்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்ப வேண்டும்.

    நிலச்சரிவு மற்றும் மழை காரணமாக விழும் மரங்களை அகற்றுவதற்குத் தேவையான உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்க வேண்டும். தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சேவையினையும் பயன்படுத்தி மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப் படுத்த வேண்டும்.

    தேவைப்படும் சூழலில் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து நீலகிரி மற்றும் கோயம்புத்தூா் மாவட்டங்களுக்கு தீயணைப்பு படை வீரா்களை அனுப்பி வைக்க வேண்டும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூா் மாவட்டங்களுக்கு தேசிய பேரிடா் மீட்புப் படையின் 2 குழுக்களை உடனடியாக அனுப்பி வைக்கவும், சாலை சீரமைப்பு பணிகளை கண்காணிக்க, நீலகிரி மாவட்டத்துக்கு நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளா்களை அனுப்பி வைக்க வேண்டும்.

    மேட்டூா் நீா்த்தேக்கத்தில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் திறந்து விடப்படுகிறது. ஆறுகள், கால்வாய்களில் அதிக வெள்ளம் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் நீரில் இறங்குவதைத் தவிா்க்க வேண்டும் என அறிவுரை வழங்க வேண்டும்.

    தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    ஆடிப் பெருக்கு மற்றும் ஆடி அமாவாசையின்போது, பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நீராட அனுமதிக்க வேண்டும். அத்தகைய இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக தண்ணீரில் இறங்கி குளிப்பதைத் தவிா்க்க போதுமான தடுப்புகள் ஏற்படுத்தி, காவலா்களை பணியமா்த்த வேண்டும். மேலும், மீட்புப் பணிகள் மேற்கொள்ளவும், அசம்பாவிதங்களைத் தவிா்க்கவும் நீச்சல் வீரா்கள் மற்றும் மீனவா்களை நிலைநிறுத்த வேண்டும்.

    ஆபத்தான மற்றும் அபாயகரமான இடங்களில் ஆறுகள், கால்வாய்களில் மக்கள் செல்வதைக் கட்டுப் படுத்த மாவட்ட நிா்வாகம் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். வெள்ளம் செல்லும் தாழ்வான பாலங் கள் மற்றும் தரைப்பாலங்களில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு வரும் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • தொடர்ந்து 5-வது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியை ஆண்டுதோறும் ஆடி 18-ந்தேதி மட்டும் பொதுமக்கள் பார்வையிட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நாளில் பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் சென்று பொதுமக்கள் பார்வையிட்டு உற்சாகமாக பொழுதை கழிப்பார்கள்.

    ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வந்து பவானிசாகர் அணை மீது சென்று அணை நீர்த்தேக்க பகுதியை பார்வையிடுவார்கள். மற்ற நாட்களில் பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை.

    இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பவானிசாகர் அணை மேல் பகுதிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக பொதுமக்கள் அணையின் மேல் பகுதிக்கு செல்லவில்லை.

    இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு வரும் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நிச்சயமாக பவானிசாகர் அணை மேல் பகுதிக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த ஆண்டும் பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அதே சமயம் ஆடிப்பெருக்கு நாளில் பவானிசாகர் பூங்கா வழக்கம் போல் திறந்திருக்கும் என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 5-வது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இது குறித்து பவானிசாகர் அணை உதவி பொறியாளர் தமிழ் பாரத் கூறும்போது, பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 91 அடிக்கும் மேல் உள்ளது. இதனால் அணை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டி உள்ளது. இதன் காரணமாகவே இந்த ஆண்டும் பவானிசாகர் அணையின் நீர் தேக்கப்பகுதியை பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

    தற்போது பவானிசாகர் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    • ஆடிப் பதினெட்டு காவேரி பூப்பெய்திய நாள் என்பது ஐதீகம்.
    • காவிரியின் கதையைப் படிப்பது சிறப்பு.

    ஆடிப் பதினெட்டு காவேரி பூப்பெய்திய நாள் என்று ஐதீகம் இருப்பதால் வளையல், காதோலை, கருகமணி, தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் தடவிய நூல் ஆகியவற்றை நதிக்கரையில் பூஜை செய்து பின் காவிரியில் விடுவதை தமிழர்கள் காலம், காலமாக கடைபிடித்து வருகிறார்கள்.

    புதிதாக திருமணம் செய்தவர்கள் 'தாலிப் பிரித்து போடுதல்' என்று தங்கள் தாலியை வேறு கயிற்றில் அல்லது சங்கிலியில் மாற்றிக் கொள்வர். ஆடிப்பெருக்கென்று நீர் பெருகி வருவது போன்று தங்கள் இல்லற வாழ்வும் பெருக வேண்டும் என வேண்டிக் கொள்வார்கள்.

    அன்று மாலை பலவித சித்ரான்னங்கள் படைத்து உண்பதும் சிறுவர்கள் சப்ரம் (சிறிய தேர்) கட்டி இழுப்பதம் கிராமப்புற ஆறுகள் பக்கம் இன்றும் நடைபெறுகிறது.

    கும்பகோணத்தில் நவ கன்னியர்களில் ஒருவராக இருக்கும் காவிரியை வழிபட ஆடிப்பெருக்கு விழாவுக்கு 10 நாட்கள் முன்னதாகவே ஒரு தட்டில் நவதானியங்களைத் தூவி முளைப்பாலிகளை முளைக்கச் செய்வர்.

    அவற்றை கும்மிப் பாடல்கள், குரவைப் பாடல்களால் போற்றியபடி காவிரிக்கு எடுத்துச் செல்வர். முதலில் பிள்ளையார் பிடித்து வைத்துக் கொண்டு வாழை இலையில் மண்ணிலிருந்து ஒன்பது உண்டைகள் பிடித்து வைத்து பூஜிப்பார்கள்.

    கும்பகோணம் - திருவாரூர் சாலையில் உள்ள திருச்சேறை சாரநாதர் ஆலயத்தில் உள்ள புஷ்கரணியின் தென் மேற்குக் கரையில், காவிரி அன்னைக்கு ஒரு கோவில் உள்ளது. ஆண்டு தோறும் இங்கு ஆடிப்பெருக்கன்று விசேஷ ஆராதனைகள் நடைபெறும்.

    தஞ்சை -திருவையாறு சாலையில் உள்ள திருவையாற்றில் ஐயாரப்பன் புஷ்ப மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் ஆடி பதினெட்டில் நடைபெற்று வருகிறது.

    கொடுமுடி - மகுடேசுவரர் வீர நாராயணப் பெருமாள் கோவிலில் ஆடிப் பதினெட்டு தினத்தன்று மும்மூர்த்திகள் காவிரிக் கரைக்கு எழுந்தருளுவர். அன்றைய தினம் பச்சை மண்ணில் பானை செய்து அதில் மாவிளக்கு, கருகமணி, காதோலை, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு முதலியவற்றை வைத்து நடு ஆற்றில் மிதக்க விட்டு விட்டு வருவர். அம்மனுக்கும் மகாலட்சுமிக்கும் சந்தனக் காப்பு ஆராதனை நடைபெறும்.

    ஈரோடு பவானி - கூடுதுறையில் அதிகாலையில் நீராடி விட்டு அம்மனுக்குத் தேங்காய், பழம், கருகமணி, காதோலை முதலியவற்றைப் படைத்து ஆராதனை செய்வர்.

    ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருக்கன்று காவிரியில் சித்தப் புருஷர்களும், யோகிக்களும் நீராடி தங்கள் தவ வலிமையை மக்களுக்குப் பகிர்ந்தளித்துச் செல்வதாக கருதப்படுகிறது. எனவே அன்று நீராடிவிட்டு தாமரை இலையில் விளக்கேற்றி நீரில் மிதக்க விட்டு அன்னையைப் பூஜித்து தான தர்மங்களைச் செய்தால் பதினெட்டு சித்தர்களின் ஆசியையும் பெறலாம்.

    நீர் நிலைகள் தங்கள் வீட்டிற்கு அருகில் இல்லையென்றால் முறைப்படி வீட்டில் வைத்தே காவிரித் தாயைப் பூஜித்து சமர்ப்பணப் பொருட்களை அருகில் உள்ள கிணறுகளில் போடலாம்.

    ஆடிப் பதினெட்டாம் நாளன்று காவிரியின் கதையைப் படிப்பது சிறப்பு தரும்.

    • ஆடி மாதம் என்பது கடக மாதம்.
    • ஆடி 18-ம் பெருக்கிற்கு தனி சக்தி உண்டு.

    சங்க நூல்களில் பெண்கள் ஆற்றிற்கு விழா எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு விசேஷமானது.

    ஆடிப்பெருக்கு அன்று பெருக்கெடுத்து ஓடி வரும் அந்த புது வெள்ளம், புது நீர் வரும் போது தாலியை மாற்றிக் கொள்ளுதல், கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வது. நல்ல வரன் வரவேண்டும் என்று வேண்டிக் கொள்வது, சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.

    ஆடி 18-ம் பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. இந்த ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டு விட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார்.

    அந்த சனி நட்சத்திரத்தை விட்டு விட்டு புதன் நட்சத்திரத்திற்கு சூரியன் வரும் போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும்.

    பூக்கள் நிரப்பும் விழா

    சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி. இங்குள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கு அன்று அம்பாள் சன்னதி முழுவதும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா நடத்தப்படுகிறது.

    இங்கு தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரியஒளி விழுவது மிகவும் விசேஷமாகத் கருதப்படுகிறது.

    • ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ம் நாள்.
    • வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள்.

    ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ம் நாள். தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கி வரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர்.

    இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும்.

    அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள்.

    இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் விளைந்தது. இந்த சிறப்பான தினம் வருகிற சனிக்கிழமை (3-ந்தேதி) வருகிறது. மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கை கண்டுகளிப்பர். கோவில்களுக்கு சென்று வழிபடவும் செய்வர்.

    ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர்வளம் பெருகியதுபோல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள்.

    அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பலவிதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர்சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கரையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.

    காவிரியாற்றின் கரையில் திருச்சியில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது. ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும்.

    ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

    நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தினர் நாமக்கல், சேலம் மற்றும் ராசிபுரத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்குவது வழக்கம்.

     நதிக்கரையில் உள்ள கன்னி தெய்வங்களை கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். கன்னி தெய்வங்களை சுமங்கலிப் பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிந்து வழிபாட்டால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். அன்று சப்த கன்னிகளை வழிபட்டால் திருமணத் தடை அகலும்.

    நீர் நிலைகளுக்கு செல்ல முடியாதவர்கள் ஆடிப்பெருக்கு பூஜையை நதிக்கரை மட்டுமில்லாமல் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். நிறை குடத்தில் இருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சிறிதளவு சேர்த்தால் போதும். வழிபாட்டுக்குரிய தீர்த்தம் தயாராகி விடும். திருவிளக்கேற்றி அந்த தீர்த்தத்தை விளக்கின் முன் வைக்க வேண்டும்.

    ஒரு அம்மன் படத்துக்கு உதிரிப் பூக்கள் தூவி தெரிந்த மந்திரங்களைச் சொல்லி வணங்க வேண்டும். கற்பூர ஆரத்தி செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட புண்ணிய நதிகள், அகத்தியர் ஆகியோரை மனதார நினைத்து வணங்க வேண்டும். சர்க்கரை பொங்கல் படைத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    செம்பில் உள்ள நீரை கால் மிதி படாத இடத்திலோ அல்லது செடி, கொடியிலோ ஊற்றி விட வேண்டும். இந்த பூஜையால் வீட்டில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.

    ஜனன கால ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ளவர்கள், சந்திர தசை புக்தி நடப்பவர்கள், சந்திரனுக்கு சனி, ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்கள் ஆடிப்பெருக்கில் புனித நீராடினால் சந்திர தோஷம் நீங்கும். தாய், தந்தை மற்றும் முன்னோர்களின் நல்லாசி கிடைக்கும். வீடு வாகன யோகம் சித்திக்கும்.

    • சிலை வடிக்கும் பணியில் சிற்ப கலைஞர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • கையில், ராட்சத அரிவாளுடன் கருப்பணசாமி நிற்கும் கோலத்தில் சிலை வடிக்கப்படுகிறது.

    பழனி:

    பழனி கிரிவீதி பகுதியில், தனியார் சிற்பக்கூடம் உள்ளது. இங்கு பல்வேறு சாமி சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த சிற்பக் கூடத்தில் 24 அடி உயரத்தில் ஒரே கல்லால் ஆன கருப்பண சாமி சிலை செய்யப்பட்டு வருகிறது. சிலை வடிக்கும் பணியில் சிற்ப கலைஞர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது, மதுரையில் உள்ள ஒரு கோவிலுக்கு கருப்பணசாமி சிலை கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக கரூரில் இருந்து சுமார் 70 டன் எடையில் ராட்சத கருங்கல் கொண்டு வரப்பட்டு 8 மாதங்களாக சிலை செய்யும் பணி நடக்கிறது. சுமார் 30 டன் கற்கள் பெயர்த்தது போக, மீதமுள்ள 40 டன் எடையில் பிரமாண்டமாக சிலை உருவாகிறது. கையில், ராட்சத அரிவாளுடன் கருப்பணசாமி நிற்கும் கோலத்தில் சிலை வடிக்கப்படுகிறது.

    ஆடிப்பெருக்கு அன்று கோவில் நிர்வாகத்திடம் சிலை ஒப்படைக்கப்பட உள்ளது என்றனர்.

    • ஆடி வளர்பிறை துவாதசி அன்று விஷ்ணு வழிபாடு நடத்தப்படுகிறது. '
    • இதனால் வாழ்வில் செல்வவளம் சிறக்கும் என்று கருதப்படுகிறது.

    ஆடிப்பெருக்கு என்பது விவசாயிகள் நதி அன்னையிடம் வேளாண்மை சிறக்க துணை செய்யுமாறு மேற்கொள்ளப்படும் வழிபாடாகும்.

    இவ்விழா காவிரி நதிக்கரையோர மக்களால் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

    மேலும் ஆடிப் பெருக்கன்றே விதைகள் விதைக்கப் படுகின்றன.

    ஆடி மாதப் பருவநிலை விவசாயத்திற்கு உகந்தது. எனவே தான் ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது.

    ஆடிப் பெருக்கன்று எந்த வித செயலைத் தொடங்கினாலும் அது சிறப்பாக வளரும் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது.

    காவிரிக்கரையில் பெண்கள் அதிகாலையில் குளித்து கரையோரத்தில் வாழை இலை விரித்து கருகமணி, பழங்கள், வெற்றிலை, பாக்கு சித்ரான்னங்கள், காப்பரிசி, மஞ்சள் தடவிய நூல் ஆகியவற்றை படைத்து அகல் விளக்கேற்றி காவிரியை வணங்குகின்றனர்.

    பின்னர் மஞ்சள் நூலை கழுத்தில்கட்டிக் கொள்கின்றனர்.

    ஸ்ரீரங்கநாதரும் ஆடிப்பெருக்கன்று காவிரியில் எழுந்தருளி காவிரிக்கு சீர்பொருட்களை வழங்குவார்.

    ஆடிப்பெருக்கு ஒவ்வோர் ஆண்டில் ஆடி-18ல் கொண்டாடப்படுகிறது.

    ஆடி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி நாகசதுர்த்தி என்றும் வளர்பிறை பஞ்சமி கருட பஞ்சமி என்றும் கொண்டாடப்படுகின்றன.

    வளர்பிறை தசமி அன்று திக்வேதா விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. திசை தெய்வங்களுக்கு அன்று வழிபாடு நடத்தப்படுகிறது.

    ஆடி வளர்பிறை ஏகாதசி அன்று அன்னதானம் செய்தல், பசுவிற்கு அகத்திக்கீரை அளித்தல் போன்றவற்றால் தீவினைகள் நீங்குவதாகக் கருதப்படுகிறது.

    ஆடி வளர்பிறை துவாதசி அன்று விஷ்ணு வழிபாடு நடத்தப்படுகிறது. '

    இதனால் வாழ்வில் செல்வவளம் சிறக்கும் என்று கருதப்படுகிறது.

    கிராமங்களில் கிராம எல்லையில் உள்ள காவல் தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.

    கருடாழ்வார், சுந்தரநாயனார், கலிய நாயனார், புகழ்சோழ மூர்த்தி நாயனார், ஆளவந்தார், புண்டரிகாவுர், கந்தாடை, தோழப்பர், பத்ரிநாராயண ஆழ்வார் போன்றோர் ஆடியிலே அவதரித்தவர்கள் ஆவார்.

    ×