search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்லாம்"

    • நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள்.
    • அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கின்றான்

    எந்த மனிதனும் தன்னந்தனியாக வாழ்ந்துவிட முடியாது. ஒருவரோடு ஒருவர் சேர்ந்து, இணைந்து, இசைந்து தான் வாழ வேண்டும். அப்படி வாழுகிறபோது மதம், இனம், மொழி, நிறம், கலை, கலாசாரம், சமயம், பண்பாடு போன்றவற்றை அவன் எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது.

    இஸ்லாமின் முழு மூல வேதமான திருக்குர்ஆனிலும் சகோதர சமயங்களுடன் நல்லிணக்கம் பேணிய செய்திகள் பல உண்டு.

    "மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து தான் உற்பத்தி செய்தான். பின்பு அவ்விருவரிலிருந்தும் ஆண்கள், பெண்கள் என பலரையும் இப்பூமியில் பரப்பினான். ஆகவே, அத்தகைய அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக் கேட்டுக்கொள்கின்றீர்கள். இன்னும் ரத்தக் கலப்பான தொப்புள் கொடி உறவினர்களிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கின்றான்". (திருக்குர்ஆன் 4:1)

    "மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; ஆகவே,உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்கள் தான் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், யாவற்றையும் சூழ்ந்து தெரிந்தவன்". (திருக்குர்ஆன் 49:13)

    இந்த இரண்டு வசனங்களும் மனிதன் எங்கிருந்து வந்தவன், அவன் எப்படிப்பட்டவன், அவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அவனைச் சுற்றியிருப்பவர்களும் அவனைப்போன்ற மனிதர்கள் தான் என்பதை வெகுஅழகாக எடுத்துக்கூறுகிறது. இறுதியாக நீங்கள் யாராக இருந்தாலும் நீங்களும் மனிதர் தான் என்பதை மட்டும் மறந்து விடாதீர் என்பதை சற்று அழுத்தமாகவே உணர்த்திக் காட்டுகிறது.

    தீய சக்திகளுக்கும், தீய சிந்தனைகளுக்கும் எப்போதுமே நாம் உடன்பட்டு விடக் கூடாது. நபிகள் நாயகமும் அவரது அருமைத் தோழர்களும் அவ்வாறு தான் வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கிறார்கள்.

    "அண்டை வீட்டான் பசித்திருக்க தான் மட்டும் புசிப்பவனாக இருப்பவன் உண்மையான இறைவிசுவாசியல்ல...!" என்று நபிகள் நாயகம் சொன்னது அனைத்து வகையான அண்டை வீட்டார்களுக்கும் பொருந்தும். இறைவன் புறத்தோற்றங்களையும், புறஉருவங்களையும் பார்ப்பதில்லை. மனிதன் தான் அநேக நேரங்களில் புறத்தோற்றங்களையும் புற உருவங்களையும் பார்க்கத் தொடங்கி விடுகின்றான்.

    "எவர் ஒரு ஆத்மாவை வாழவைக்கிறாரோ, அவர் அனைத்து ஆத்மாக்களையும் வாழ வைத்தவரைப் போன்றவர் ஆவார்" (திருக்குர்ஆன் 5:32) என்ற இறைவசனம் பொதுமைத் தன்மையுடன் தான் நம்மிடம் உரையாடுகிறது, இங்கு ஜாதி, மத பேதங்கள் அறவே கூறப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

    இன்னும் ஒருபடி மேலே போய் "உங்களிடமிருந்து மற்றவர்கள் பெறும் நிம்மதியில் தான் உங்களது முழு நிம்மதியும் நிறைந்திருக்கிறது" என்கிறார்கள் நபிகள் நாயகம்.

    'இஸ்லாம்', 'முஸ்லிம்' என்ற அரபுச்சொல்லிற்கு கூட முறையே 'நிம்மதியைத் தருதல்' என்றும், 'நிம்மதியைத் தருபவர்' என்றும் தான் பொருள். எனவே நாம் நமது மார்க்கத்தின் நற்பெயருக்கு ஏற்ப நன்மக்களாக நடந்து கொள்வதில் தான் நமக்கான எதிர்காலம் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது என்பதையும் மனதில் நன்கு நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.

    வாருங்கள்... சமூக நல்லிணக்கத்தை உலகெங்கும் விதைத்திடுவோம்...!

    மவுலவி எஸ்.என். ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.

    • அல்லாஹ் உறுதியாக கூறுகின்றான்.
    • மனிதனுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

    ஏக இறைவனான அல்லாஹ்வின் படைப்புகளில் சிறந்த படைப்பு மனித இனம். 'தன்னை மட்டும் வணங்க வேண்டும்' என்று மனிதனுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். மனித இனத்தை நேர்வழிப்படுத்த இறைவன் தூதர்களையும் அடையாளம் காட்டி இருக்கின்றான்.

    அந்த தூதர்கள், மனிதன் தற்போது வாழும் இம்மை வாழ்வை விட இறைவனின் அரியாசனத்தின் கீழ் வாழும் மறுமை வாழ்வின் சிறப்புகளை எடுத்துக்கூறியுள்ளனர். சிறப்பு மிகுந்த அந்த மறுமை வாழ்வுக்கு நம்மை எப்படி தயார் செய்துகொள்ள வேண்டும் என்பதையும் அல்லாஹ்வின் திருத்தூதர்கள் விளக்கி கூறியுள்ளனர்.

    மனிதன் இம்மையில் எப்படி வாழ வேண்டும் என்று இறைவன் கூறியதில் முக்கியமானது, உண்மையுடன் நடந்து கொள்வது. முதலில் தன்னை படைத்த இறைவனுக்கு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். இறைவன் எப்படி எல்லாம் தன்னை வணங்க வேண்டும், எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கின்றானோ அதற்கு ஏற்ப மனிதன் உண்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    ஆனால் சபலங்களுக்கும், ஆசைகளுக்கும் அடிமையான மனித மனம் உண்மையில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறது. இந்த உலக வாழ்க்கை குறித்து திருமறையில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

    "இன்னும் மனிதர்களில் "நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்" என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்". (திருக்குர்ஆன் 2:8).

    "இவ்வாறு கூறி அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை. (திருக்குர்ஆன் 2:9).

    "மனிதர்களே! நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இந்த உலக வாழ்க்கை எல்லாம் வீண் விளையாட்டும், வேடிக்கையும், வெறும் அலங்காரமும் தான். தவிர, உங்களுக்கிடையில் ஏற்படும் வீண்பெருமையும், பொருளிலும், சந்ததியிலும் அதிகரிக்க வேண்டும் என்ற வீண் எண்ணமும் தான். இதன் உதாரணமாவது: ஒரு மழையின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அந்த மழையினால் முளைத்த பயிர்கள் நன்கு வளர்ந்து விவசாயிக்குக் களிப்பை உண்டுபண்ணிக் கொண்டிருந்தன. பின்னர், அவை மஞ்சனித்துக் காய்ந்து, சருகுகளாகி விடுவதைக் காண்கின்றான். இந்த உலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கின்றது. மறுமையிலோ அவர்களில் பலருக்குக் கொடிய வேதனையும், பலருக்கு அல்லாஹ்வின் மன்னிப்பும், அவனது திருப்பொருத்தமும் கிடைக்கின்றன. ஆகவே, இந்த உலக வாழ்க்கை மனிதனை மயக்கும் சொற்ப இன்பமேயன்றி வேறில்லை". (திருக்குர்ஆன் 57:20).

    ஏக இறைவனான அல்லாஹ்வை உண்மையுடன் வணங்கி, அவன் காட்டிய வழியில் வாழ்ந்து வருபவர்களுக்கு மறுமையில் சொர்க்கத்தில் இடம் உண்டு என்று அல்லாஹ் உறுதியாக கூறுகின்றான்.

    "எவர் ஈமான் (இறையச்சம்) கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களை நாம் (அல்லாஹ்) சுவனபதிகளில் நுழைய வைப்போம்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள் - அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; இன்னும் வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் யார்? (திருக்குர்ஆன் 4:122).

    இறைவன் காட்டிய வழியில் உண்மையுடன் நடந்து, அதற்கு பரிசாக இறைவன் தரும் சொர்க்க வாழ்வை நாம் அனைவரும் பெற உறுதிகொள்வோம். ஆமின்.

    பேராசிரியர் அ முகம்மது அப்துல் காதர், சென்னை.

    • தங்கள் மனைவிகளில் யாரையும் புறக்கணிக்கவில்லை.
    • தன்னால் இயன்ற அளவிற்கு மனைவிக்கு உதவிபுரிபவர்களாக இருந்தார்கள்.

    எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் அளப்பரிய சக்தி மிகுந்தவன். அவன் நினைத்தால் எந்த ஒரு உயிரினத்தையும் படைக்கும் வல்லமை உள்ளவன். அவன் 'ஆகுக' என்று சொன்னால் போதும், அவன் நினைத்த உயிரினம் படைக்கப்பட்டு விடும். அத்தனை வல்லமை மிக்க அல்லாஹ் படைத்தவற்றில் மிகவும் சிறப்பு மிக்க படைப்பு மனிதன்.

    இது குறித்து திருக்குர்ஆனில் (4:1) இறைவன் கூறுவதை பாருங்கள்:

    "மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் வெளிப்படுத்தி உலகில் பரவச்செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் தமக்குரிய உரிமைகளைக் கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் உங்கள் ரத்தக் கலப்புடைய உறவினர்களையும் ஆதரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்".

    மனிதனுக்கு வாழ்க்கை துணையாக படைக்கப்பட்ட அவனது மனைவி குறித்து அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்:

    "நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன". (திருக்குர்ஆன் 30:21).

    "உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளைநிலங்களுக்குச் செல்லுங்கள்; உங்கள் ஆத்மாக்களுக்காக முன்கூட்டியே நற்கருமங்களின் பலனை அனுப்புங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மறுமையில் அவனை சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:223).

    இறைவன் கூறிய இந்த வழியிலேயே இறைவனின் திருத்தூதராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மண வாழ்க்கையும் அமைந்திருந்தது. நபி (ஸல்) அவர்கள் பல திருமணங்களை செய்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம். எந்த நிலையிலும் அவர்கள் தங்கள் மனைவிகளில் யாரையும் புறக்கணிக்கவில்லை. அவர்கள் அனைவரையும் சமமாக நடத்தினார்கள். அவர்களுக்குரிய மரியாதையை அளித்தார்கள்.

    இதுகுறித்த நபிமொழி வருமாறு:

    அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: "தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?" என்று நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், "தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி (ஸல்) அவர்கள் செய்துவந்தார்கள். தொழுகை நேரம் வந்து விட்டால் தொழுகைக்காக எழுந்து சென்று விடுவார்கள்" என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

    இதுதான் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையாக இருந்தது. தன்னுடைய மனைவியிடம் அன்போடும், அவர்களுடைய வேலையில் தானும் பங்கெடுத்துக் கொண்டார்கள். தன்னால் இயன்ற அளவிற்கு மனைவிக்கு உதவிபுரிபவர்களாக இருந்தார்கள். மனைவிக்கு எந்த சிரமத்தையும் கொடுக்கமாட்டார்கள். மனைவியோடு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். எந்த நிலையிலும் எந்த விதத் தவறான பேச்சையும் பேசமாட்டார்கள்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனைவியிடம் தான் ஒரு நபி என்ற மமதையோடு நடந்து கொள்ளமாட்டார்கள். நான் உங்களில் ஒரு மனிதர் என்ற எண்ணத்தில் தான் நடந்து கொள்வார்கள். தன்னுடைய மனைவிமார்களோடு விளையாட்டாக சில நேரங்களில் நடந்து கொள்வார்கள். மனைவிமார்களை சிரிக்க வைப்பார்கள். அன்போடும் பாசத்தோடும் நடந்து கொள்வார்கள். மனைவிமார்களை சந்தோசமாக வைத்துக் கொள்வார்கள். மனைவியின் ஆசையை நிறைவேற்றி வைப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் தன்னைச் சுற்றி இருப்பவர்களையும், அதிலும் குறிப்பாக மனைவிமார்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள். நபி (ஸல்) அவர்களின் குடும்ப வாழ்க்கையில் மனைவியருடன் அன்பும் இரக்கமும் ஏராளமாக இருந்தது.

    இது குறித்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன்னுடைய கோபத்தையும், உன்னுடைய திருப்தியையும் நான் நன்றாக அறிவேன்" என்று கூறினார்கள். அதற்கு நான், "அதை எவ்வாறு தாங்கள் அறிந்துகொள்வீர்கள்? அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நீ திருப்தியுடன் இருக்கும்போது பேசினால், 'ஆம்; முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக' என்று கூறுவாய். நீ கோபமாய் இருக்கும் போது பேசினால், 'இல்லை; இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அதிபதி மீது சத்தியமாக' என்று கூறுவாய்" என்று சொன்னார்கள். நான், "ஆம் உண்மை தான். நான் தங்களது பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன் தங்கள் மீதன்று" என்று கூறினேன். (நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவியான ஆயிஷா (ரலி) அவர்களின் ஒவ்வொரு அசைவையும் பேச்சையும் கூர்ந்து கவனித்து எப்படி புரிந்து வைத்துள்ளார்கள் என்பதை இதன் மூலம் அறியலாம்.

    நாமும் திருக்குர்ஆன் கூறிய வழியிலும், நபிகள் வாழ்ந்து காட்டிய பாதையிலும் நமது திருமண வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மனைவியையும், குடும்பத்தையும் நேசித்து வாழ்வோம்.

    ஹிஜாஸ் யாஸ்மின், தென்காசி.

    • உலக வாழ்வு ஏற்றத்தாழ்வு நிறைந்தது.
    • கெட்ட செயல்கள் செய்பவன் உயர்ந்தவனாக கருதப்படுவான்.

    இஸ்லாத்தின் முக்கிய அடிப்படைகளில் ஒன்றாக மறுமை நாள், மறு உலக வாழ்வு விளங்குகிறது. தற்போது நாம் வாழும் இந்த உலக வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது. இந்த உலக வாழ்வில் நாம் செய்யும் நற்செயல்கள், நன்மை-தீமைகளுக்கு ஏற்ப நமது மறுமை வாழ்வு அமையும் என்பதை திருக்குர்ஆனும், நபிமொழிகளும் விளக்குகின்றன. இந்த உலக வாழ்வில் அவன் சம்பாதித்த செல்வம், அவன் சுற்றம், மனைவி-மக்கள் என எதுவும் மறுமைநாளில் பயன்படாது. அவன் செய்த நற்செயல்கள் மட்டுமே அவனுக்கு அப்போது துணை நிற்கும் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

    இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

    "அல்லாஹ்வே நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதியும் ஆவான்". (திருக்குர்ஆன் 1:4).

    "ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன் முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்; அல்லாஹ் தன்னைப்பற்றி நினைவு கூருமாறு உங்களை எச்சரிக்கின்றான்; இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான்". (திருக்குர்ஆன் 3:30).

    "புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; தன் பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், அடிமைகள், கடனாளிகள் போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல், இவையே புண்ணியமாகும்; இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; வறுமை, இழப்பு போன்ற துன்பத்திலும், நோய் நொடிகள் போன்றவற்றின் கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் பயபக்தியுடையவர்கள்". (திருக்குர்ஆன் 2:177)

    "யார் என்னுடைய (அல்லாஹ்வின்) உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும். (திருக்குர்ஆன் 20:124).

    அந்த அல்லாஹ் அளிக்கும் தீர்ப்பில் இருந்து யாரும் தப்பிக்கவே முடியாது. எனவே தான் மறு உலகம் இருக்கிறது என்பதிலும், அந்த மறுமை நாளில் நமது செயல்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்படும் என்பதிலும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

    இந்த நம்பிக்கை வந்தால் உலக வாழ்வில் எந்த தவறு செய்யவும் மனிதன் பயப்படுவான், இறைவன் வகுத்த வழியில் தனது வாழ்வை நடத்த முயற்சி செய்வான்.

    மறு உலக வாழ்வு பற்றிய நம்பிக்கை தான் இஸ்லாத்தின் ஆணிவேராகவும், அஸ்திவாரமாகவும் அமைந்துள்ளது. அந்த நம்பிக்கை எவ்வளவு ஆழமாக மனித உள்ளத்தில் பதிந்திருக்கின்றதோ, அதற்கேற்ப ஒருவனது செயல்களில் மாற்றங்கள் நிகழும். இதனால் தான், தன் திருக்குர்ஆன் நெடுகிலும் அந்த நாளைக் குறிப்பிடுகின்றான். அதைப் பற்றி திருக்குர்ஆனில் இவ்வாறு எச்சரிக்கின்றான்.

    "நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த இறுதித்தீர்ப்பு நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து நல்வழிகளில் செலவு செய்யுங்கள்". (திருக்குர்ஆன் 2:254)

    "ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்கள் செய்கைகளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல அற்ப இன்பப்பொருளேயன்றி வேறில்லை". (திருக்குர்ஆன் 3:185)

    உலக வாழ்வு ஏற்றத்தாழ்வு நிறைந்தது. கடினமாக, உண்மையாக உழைப்பவன் குறைந்த ஊதியம்பெற்று கஷ்டப்படுவான். அடாவடித்தனம் செய்து வாழ்பவன் போற்றப்படுபவனாக இருப்பான். நல்ல நடத்தை உள்ளவன் தூற்றப்படுபவனாக, கெட்ட செயல்கள் செய்பவன் உயர்ந்தவனாக கருதப்படுவான்.

    தகுதியுள்ளவன் தரக்குறைவாகவும், தகுதியற்றவன் உயர்ந்தவனாகவும் வாழ்வான். கல்வி அறிவு இல்லாதவன் கண்ணியப்படுத்தப்படுபவன் ஆகவும், கல்வி அறிவில் சிறந்தவன் ஒதுக்கப்படுபவன் ஆகவும் இருப்பான். சுருக்கமாக சொல்வது என்றால் 'நல்லதுக்கு காலம் இல்லை' என்று நினைக்கும் அளவுக்கு உலக வாழ்க்கை காணப்படும்.

    இதற்கெல்லாம் நீதி கிடைக்க வேண்டும் என்றால் மறு உலகம் இருக்க வேண்டும். அதை ஒரு அதிபதி ஆட்சி செய்ய வேண்டும். அவன் நேர்மையானவனாக இருக்க வேண்டும். எது நீதியோ அதை நிலைநாட்டுபவனாக இருக்க வேண்டும்.

    அத்தகைய நீதிபதியாகத்தான் ஏக இறைவன் அல்லாஹ் இருக்கின்றான். தீர்ப்பு நாளின் அதிபதியாக இருக்கும் அவன் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவன். மனம் திருந்தி பாவ மன்னிப்பு கேட்டு, மீண்டும் பாவங்களை செய்யாமல் வாழ்ந்து, நற்செயல்களை அதிகம் செய்தால் தீர்ப்பு நாளில் இறைவனின் தண்டனையில் இருந்து நாம் தப்பிக்க முடியும். நரக நெருப்பில் இருந்து விடுதலை பெற இயலும்.

    புனிதமான சொர்க்கத்திற்கு சொந்தக்காரர்களாக வாழக்கூடிய நல்ல பாக்கியத்தை நமக்கும், உலக மக்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக, ஆமின்.

    வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.

    • காயிதே மில்லத் திடலில் நடைபெற்ற தொழுகையில் திராளனோர் கலந்து கொண்டனர்.
    • ஆடு, மாடுகள் பலியிடப்பட்டு அதன் இறைச்சிகள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் பக்ரீத் பண்டிகையையொட்டி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது

    காயிதே மில்லத் திடலில் நடைபெற்ற தொழுகையில் திராளனோர் கலந்து கொண்டனர். தொழுகையை முன்னிட்டு இன்று அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்-சிறுமிகளும் தொழுகைக்காக அங்கு வரத் தொடங்கினர். 6.30 மணியளவில் மாநில செயலாளர் செங்கை பைசல் தலைமை தாங்கி சிறப்பு தொழுகையை நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொழுகைக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுன் கிளைத் தலைவர் அப்துல் ஜப்பார் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர் அணியினர் செய்து இருந்தனர்.

    இதேபோல் பெரியதெரு, புதுத்தெரு, மணிக்கூண்டு, பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடலில் தாஹா, ரஹ்மானியாபுரம் மர்யம் பள்ளி திடலில் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி , மக்காநகர் தவ்ஹீத் திடலில் முகைதீன் அல்தாபி, தவ்ஹீத் நகர் முஜாஹித் பாத்திமா நகர் பள்ளி திடலில் அபூதல்ஹா இக்பால் நகர் ரய்யான் திடலில் ரய்யான்மைதீன் , மஹ்மூதாநகர் ரபீக் ராஜா மதினா நகர் பள்ளி திடல், அப்துல் அஜீஸ் என நகரில் 9 இடங்களில் தொழுகை நடை பெற்றது .

    முன்னதாக தொழுகை பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் தாசில்தார் கங்கா மேற்பார்வையில் புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அசோக் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி ஆகியோர் செய்து இருந்தனர்.

    தொழுகைக்கு பின்னர் கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகள் பலியிடப்பட்டு அதன் இறைச்சிகள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் 3 இடங்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசல் முன்பு பஜார் திடலில் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் மவ்லவி ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி தலைமையிலும், கலந்தர் மஸ்தான் தெருவில் உள்ள பாத்திமா நகர் மஸ்ஜித் தக்வா திடலில் பஷிர் அஹ்மத் உமரியும், பேட்டை மஸ்ஜித் அக்ஸா திடலில் முஹிப்புல்லாஹ் உமரி தொழுகை நடத்தியும் குத்பா பிரசங்கம் செய்தனர். இந்த தொழுகையில் மஸ்ஜித் முபாரக் கமிட்டி தலைவர் சேக் உதுமான் , செயலர் முஹம்மது காசீம் என்ற சின்ஸா, பொருளாளர் அப்துல் மஜீத், ஜபருல்லாஹ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இதேபோல் தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர், வடகரை, வீராணம், சங்கரன்கோவில், புளியங்குடி, வாசு தேவநல்லூர், திரிகூடபுரம் உட்பட 30-க்கும் மேற்பட்ட பகுதிகளில் தொழுகை நடைபெற்றது.

    • பக்ரீத் பெருநாளில் ஏழைகளுக்கு உதவி செய்வதும் வழக்கம்.
    • பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களையும் பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.

    தமிழகம் முழுவதும் திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மைதானங்களில் நடந்த தொழுகையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைத்து மக்களும் அமைதியோடு வாழ வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர்.

    பக்ரீத் பெருநாளில் ஏழைகளுக்கு உதவி செய்வதும் வழக்கம். அதன்படி இஸ்லாமியர்கள் இன்று பல இடங்களில் ஏழைகளுக்கு உதவி வழங்கினார்கள்.

    மேலும் பல இடங்களில் இறைச்சிகளையும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ந்த னர்.

    சென்னையிலும் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாக மாக கொண்டாடப்பட்டது. காலையிலேயே இஸ்லாமியர் கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். இதல் சிறுவர்களும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை பிராட்வேயில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் இன்று காலையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாகிருல்லா எம்.எல்.ஏ. மற்றும் 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தொழுகை முடிந்த பிறகு அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் இன்று காலையில் பக்ரீத் பண்டிகையை யொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.

    சென்னை மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் உள்ள மைதானத்தில் பக்ரீத் தொழுகை நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர். இதன்பின் ஆடு, மாடு குர்பானி கொடுத்தனர். மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    திருவொற்றியூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திருவொற்றியூர் தேரடியில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதே போன்று தாங்கல் ஜும்மா பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடு மாடுகளை குர்பானி கொடுத்தனர்.

    திருவொற்றியூர் எஸ். ஆர். கார்டன் பகுதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகையில் ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    கொளத்தூர் திரு.வி.நகர், குமரன் நகரில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் பக்ரீத் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த் துக்களை தெரிவித்தனர்.

    இதேபோல் சென்னை பெரம்பூர், ஓட்டேரி, ராயபுரம், புரசைவாக்கம், அண்ணாநகர், ஐஸ் அவுஸ், வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை, கொடுங்கையூர் உள்ளிட்ட சென்னை முழுவதும் உள்ள மசூதிகளில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    • மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.
    • இறைவனுக்கு மிகவும் விருப்பமானது கால்நடைகளை குர்பானி கொடுப்பதாகும்.

    அரபி மாதங்களில் 12-வது நிறைவு மாதமாக இடம் பெறுவது துல்ஹஜ் மாதம் ஆகும். இந்த மாதத்தின் பத்தாம் நாளன்று உலக முஸ்லிம்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படக்கூடியது 'பக்ரீத் பண்டிகை' ஆகும். 'பக்ரா' மற்றும் 'ஈத்' எனும் இரண்டு உருது வார்த்தைகளின் இணைப்புதான் 'பக்ரீத்' ஆகும். இதன் பொருள்- 'ஆட்டைப் பலியிட்டு கொண்டாடப்படும் பெருநாள்' என்பதாகும். மேலும் இதற்கு 'குர்பானி பெருநாள்' என்றும் பெயருண்டு.

    'குர்பானி' என்றால் 'தியாகம் செய்தல்' என்பது அர்த்தமாகும். குர்பானி கொடுப்பது முஸ்லிம்கள் மீது ஹிஜ்ரி 2-ம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. இதற்கு காரணமாக ஒரு சரித்திர நிகழ்வும் உண்டு. நபி இப்ராகீம் (அலை) அவர்கள் தமது 86-ம் வயதில் குழந்தை வரம் கேட்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்தபோது அவர்களுக்கு இஸ்மாயீல் எனும் ஆண் குழந்தையை இறைவன் வழங்கினான். சில ஆண்டுகள் கழித்து அந்தக்குழந்தையை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவதாக கனவு கண்டார்.

    இந்த இறை உத்தரவை செயல்படுத்திட குழந்தையை அறுத்துப் பலியிட துணிந்தார். அவரின் தியாகத்தை ஏற்றுக்கொண்ட இறைவன் குழந்தைக்கு பதிலாக பிராணி ஒன்றை பலியிட வழிகாட்டினார். இதுகுறித்து திருக்குர்ஆன் கூறுவதாவது: "ஆகவே அவ்விருவரும் இறைவனின் விருப்பத்திற்கு முற்றிலும் வழிபட்டு இப்ராகீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட முகங்குப்புறக் கிடத்தினார். அச்சமயம் நாம் 'இப்ராகீமே என அழைத்து உண்மையாகவே நீங்கள் உங்களுடைய கனவை மெய்யாக்கி வைத்து விட்டீர்கள் என்றும் நன்மை செய்பவருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்' என்றும் கூறி 'நிச்சயமாக இது மகத்தானதொரு பெரும் சோதனையாகும்' என்றும் கூறினோம்.

    ஆகவே மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம். அவருடைய கீர்த்தியைப் பிற்காலத்திலும் நிலைக்க வைத்தோம்". (திருக்குர்ஆன் 37:103-108) 'நபியே நீர் உம் இறைவனை தொழுது குர்பானியும் கொடுப்பீராக' (திருக்குர்ஆன் 108:3) இந்த தியாகத்திருநாள் குறித்த நபிமொழிகள் வருமாறு: 'துல்ஹஜ் 10-ம் நாளன்று ஆதமின் மகன் செய்யும் செயல்களில் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது கால்நடைகளை குர்பானி கொடுப்பதாகும்.

    அவைகள் மறுமைநாளில் தமது கொம்புகளுடனும் ரோமங்களுடனும் கால்குளம்புகளுடனும் அவர்களை வந்தடையும். அறுக்கப்படும் பிராணிகளின் ரத்தங்கள் பூமியில் விழும் முன்பாகவே இறைவனிடம் அவை சென்றடைகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: திர்மிதி) 'குர்பானி கொடுப்பதினால் எங்களுக்கு என்ன கிடைக்கும்?' என நபித்தோழர்கள் வினவிய போது 'அதன் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு நன்மை உண்டு' என நபி (ஸல்) பதில் தெரிவித்தார்கள். (அறிவிப்பாளர்: ஜைத் பின் அர்க்கம் (ரலி) நூல்: அஹ்மது) இறைவன் நமக்கு வழங்கிய வாழ்க்கை மற்றும் செல்வங்கள் கால்நடைகள் ஆகிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்திட தியாகப்பெருநாள் கொண்டாடப்படுகிறது.

    இதன்மூலம் இறை நெருக்கத்தையும் பெறமுடிகிறது. இறைவனுக்கு அடிபணிதலையும் காட்டமுடிகிறது. குர்பானி என்பது தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் அனைத்து சமுதாய ஏழை எளியோருக்கும் உணவு மற்றும் மாமிசங்களை வழங்கி உணவு வழங்குவதை விரிவுபடுத்தி பசியில்லாத சமுதாயத்தை உருவாக்குவதும் உறவுகளை ஆதரிப்பதும் விருந்தினர்களை உபசரிப்பதும் அண்டை அயலாரை அன்புடன் நடத்துவதும் நலிந்தோருக்கு தர்மம் செய்வதும் ஆகும்.

    குர்பானி என்பது நபி இப்ராகீம் (அலை) அவர்களின் தியாக வழிமுறையை நினைவு கூர்வதும் அதை கடைப்பிடிப்பதும் ஆகும். குர்பானி என்பது இறைவனின் கூற்றை உண்மைப்படுத்துவதும் இறைவிசுவாசத்தின் மீது உறுதியாக இருப்பதின் சாட்சியமும் ஆகும். இறைவன் பிரியப்படும் விதமாகவும் அவன் பொருந்திக் கொள்ளும் விதமாகவும் அவனது உத்தரவை வெகுவிரைவாக செயல்படுத்துவதும் தான் குர்பானியாகும்.


    பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.



    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்புநெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள். ஏழை-எளியோரின் பசிதீர்த்து கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது. இந்த நாளில், "ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகள்; பிறகு நண்பர்கள்; அடுத்துதான் தங்களுக்கு" என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து, பயன்படுத்திக்கொள்ளும் பண்பையும், மனிதநேயத்தையும் இஸ்லாமிய பெருமக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.



    இத்தகைய உயரிய நெறியினை கடைப்பிடித்து வரும் இஸ்லாமிய சமூகத்தினர் அனைவரும் பக்ரீத் திருநாளை கொண்டாடி அன்பை பரிமாறிக்கொள்ளவும், நபிகளார் காட்டிய வழியில் அனைவரிடத்தில் அன்பு செலுத்தி கருணை காட்டிடவும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.



    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:- உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவி; விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனிதநேயமும் தழைத்தோங்க வேண்டும்; அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்று மனதார வாழ்த்துவதோடு எனது உளங்கனிந்த பக்ரீத்திருநாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


    • இந்த பண்டிகை ஹஜ் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது.
    • கேரளாவிலும் இன்று ஒரு பிரிவினர் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    முஸ்லீம்களின் முக்கிய விழாக்களில் பக்ரீத் பண்டி கையும் ஒன்று. இந்த பண்டிகை ஹஜ் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. இது முஸ்லீம்களின் இறை தூதர் இப்ராகிம் நபிகளின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்ப டுகிறது.

    இந்தியாவில் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் ஒரு பிரிவினர் இன்று பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

    நாகர்கோவில் இளங்கடை புதுதெரு அஷ்ரப் பள்ளிவாசலில் இன்று காலை நடந்த பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    இதுபோல தக்கலையை அடுத்த திருவிதாங்கோட்டிலும் ஒரு பிரிவினர் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர். இதிலும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

    நாகர்கோவிலில் மற்றொரு தரப்பினர் நாளை பக்ரீத் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகிறார்கள். இதே போல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகை ஒட்டி நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கேரளாவிலும் இன்று ஒரு பிரிவினர் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர். கேரளாவில் பக்ரீத் பண்டிகைக்காக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை இன்னொரு பிரிவினர் இப்பண்டிகையினை கொண்டாடுகிறார்கள். இதற்காக கேரளாவில் நாளையும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    • ஹஜ் காரியங்களை மக்காவில் நிறைவேற்றிய பிறகு மதினாவுக்கும் செல்கின்றனர்.
    • நபிகள் நாயகம் அவர்களுக்கு சலாம் சொல்வார்கள்.

    'ஈதுல் அள்ஹா' என்று சொல்லப்படும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது.உலகம் முழுவதும் பரவி வாழும் முஸ்லிம்களின் முக்கியமான இரண்டு பண்டிகைகளில் ஒன்று இந்த தியாகத்திருநாள்.

    4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறைத்தூதர் இப்ராகிம் (அலை) அவர்களின் வாழ்வு முழுக்க முழுக்க தியாகத்தை அடிப்படையாகக் கொண்டது. அவர் மட்டுமின்றி அவரது குடும்பம் முழுவதுமே தியாகத்தின் திரு உருவங்களாக திகழ்ந்தனர் என்பது வரலாறு. தனது இளமைக் காலத்தில் தந்தையின் வழியில் கிடைக்கும் செல்வாக்கு மற்றும் வசதியான வாழ்க்கையை தியாகம் செய்தார். தந்தையையும் சமுதாய மக்களையும் சிந்திக்கத் தூண்டியதன் விளைவாக நாடு துறக்க நேர்ந்தது.

    தமது மனைவியையும் குழந்தையையும் பாலைவனத்தில் விட்டு வரும்படி இறைக்கட்டளை வந்தபோது அதை அப்படியே நிறைவேற்றினார். தம்மிடம் இருந்த உணவும், நீரும் தீர்ந்து போன நிலையில் குழந்தை பசியால் அழுதபோது, அன்னை ஹாஜரா அவர்கள் சபா மற்றும் மர்வா மலைக்குன்றுகளின் மீது ஏறி பயணக்கூட்டம் ஏதாவது வருகிறதா என்று தேடினார். அன்னை ஹாஜரா அவர்கள் மலைக்குன்றுகளில் தேடி களைத்து எதையும் காணாத நிலையில் திரும்பி வந்து தனது குழந்தையை பார்த்தபோது அதன் காலடியில் ஒரு ஊற்று ஏற்பட்டு தண்ணீர் பொங்கி பரவுவதை கண்டார். அந்த இடத்தைச் சுற்றி ஒரு பாத்தி கட்டி 'ஜம்ஜம்' என்று கூறினார்.

    வறண்ட பாலைவனத்தில் இறைவனின் அத்தாட்சியாக இன்றும் அந்த ஊற்று சுரந்து கொண்டிருக்கிறது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தினசரி லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை தந்து கொண்டிருக்கும் ஜம் ஜம் ஊற்று இறைவனின் ஆற்றலை, வல்லமையை உலகுக்கு உணர்த்தக்கூடிய ஒரு சான்றாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

    தனது முதிய வயதில் கிடைத்த மகனை, அவர் வளர்ந்து வரும் வேளையில், அறுத்து பலியிடுமாறு இறைவன் கனவின் மூலம் காட்டிய ஏவலை ஏற்று அதற்கும் தயாரானார். 'இறைவன் நரபலியை விரும்புவதில்லை என்று கூறி அங்கு ஓர் ஆட்டை இறக்கி வைத்து அதை அறுத்து பலியிடுமாறு' இறைவன் கூறினான். இன்றுவரை மட்டுமல்ல இனி உலக முடிவு நாள் வரை அந்த தியாகம் நினைவு கூரப்பட்டு கொண்டே இருக்கும். இப்ராகிம் (அலை) மற்றும் அவரது குடும்பத்தாரின் வாழ்வு முழுக்க தியாகச் சுடராய் பிரகாசிக்கிறது.

    இறைவனின் கட்டளைப்படி மக்காவில் உள்ள காபா ஆலயத்தை இப்ராகிம் (அலை) அவர்களும் அவர்களின் மகன் இஸ்மாயில் (அலை) அவர்களும் மறு நிர்மாணம் செய்தனர். ஹஜ்ஜுக்கு வருமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கும்படி இறைவன் கூறினான். அன்று விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இன்று வரையும் இன்னும் உலக முடிவு நாள் வரையும் உலகின் பல பாகங்களில் இருந்தும் முஸ்லிம்கள் அந்த இறைஇல்லத்தை நோக்கி சென்று ஹஜ் மற்றும் உம்ராவை நிறைவேற்ற கூடியவர்களாய் இருக்கின்றனர்.

    ஹஜ் உடைய காரியங்களில் பெரும்பாலானவை இப்ராகிம் (அலை) மற்றும் அவரது குடும்பத்தாரை நினைவுபடுத்தக் கூடியவையாய் உள்ளன. உலகின் பல பகுதிகளில் இருந்து வந்து ஹஜ் செய்யக்கூடிய மக்கள் இனம், நிறம், மொழி என அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒரே இடத்தில் ஒரே முழக்கத்தோடு ஒன்று கூடுகின்றனர்.

    அங்கு செல்லக் கூடியவர்கள் இறைவனின் இறுதி தூதரான முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி ஹஜ் மற்றும் உம்ராவை நிறைவேற்றி, உலகம் முழுவதையும் படைத்த இறைவன் ஒருவனே என்ற ஓரிறைக் கொள்கையை ஏந்தியவர்களாக உலகம் முழுவதற்கும் கொண்டு செல்லக்கூடிய சமாதான தூதர்களாக விளங்குகின்றனர்.

    ஹஜ்ஜுக்கு செல்லக் கூடியவர்கள் ஹஜ் காரியங்களை மக்காவில் நிறைவேற்றிய பிறகு மதினாவுக்கும் செல்கின்றனர். மதினாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் உள்ளது. அந்த இடத்திற்கு செல்லக்கூடியவர்கள் நபிகள் நாயகம் அவர்களுக்கு சலாம் சொல்வார்கள். அவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்கள். "என்னுடைய அடக்கத்தலத்தை வணக்கத் தலமாக மாற்றி விடாதீர்கள்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி இருப்பதால் இன்று வரை அவ்வாறே பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    ஹஜ், உம்ரா சமயத்தில் ஆண்கள் அணியக்கூடிய தையலற்ற கீழாடை மற்றும் மேல்துண்டு ஆகிய இரண்டு துணிகள் இறைநம்பிக்கையாளரின் மரணத்திற்குப் பிறகு அணிவிக்கப்படக்கூடிய 'கபன்' என்ற உடையை நினைவுபடுத்தக் கூடியதாக உள்ளது. மேலும் அரபா மைதானத்தில் ஹாஜிகள் அனைவரும் ஒன்று கூடி இருக்கக்கூடிய காட்சி மறுமை நாளில் இறைவனின் முன் ஒன்று கூட்டப்படும் காட்சியை நினைவுபடுத்தக்கூடியதாகவும் இருக்கிறது.

    பி. செய்யது இப்ராகீம், சென்னை.

    • இறைவன் மனிதர்களுக்கு தனது அருட்கொடைகளை வழங்கினான்.
    • இறைவன் வகுத்த வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

    இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் அள்ளிக்கொடுப்பதே கொடைத்தன்மை ஆகும். உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே கொடுக்கும் தன்மை மனிதனுக்கு வளர்ந்து வருகிறது. இதற்கு ஆரம்பம் ஏக இறைவன் தான். இறைவன் மனிதர்களுக்கு தனது அருட்கொடைகளை வழங்கினான். இதன் மூலம் மனிதனின் வாழ்வு செழித்தது.

    மனித வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியமான தேவைகளாக உணவு, உடை, ஆரோக்கியம், வாழ்க்கைக்கு தேவையான வசதிகள், போதும் என்ற மனம் ஆகியவை கருதப்படுகிறது. மிக குறைவான வசதி வாய்ப்புகளிலேயே மனிதன் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியும். ஆனால் ஆசையால் தூண்டப்பட்ட மனிதன் பணத்தை தேடியும், உடல் சுகத்தை தேடியும், பதவி, புகழைத்தேடியும் அலைகின்றான். இந்த தேடலில் இறைவனை மறந்து, அவன் வகுத்த வழியில் இருந்து தவறி நடக்கத்தொடங்குகின்றான். இதனால் நிம்மதி இழந்து விடுகின்றான்.

    இறைவன் நமக்கு அளித்த அருட்கொடைகளே போதும் என்ற மனதுடன் வாழ்ந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். இறைவன் வகுத்த வழியிலும், அவனது திருத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய வழியிலும் நடந்து வந்தால் போதும், எத்தனை சோதனைகள், வேதனைகள் வந்தாலும் அதை தாங்கி நிற்கும் வலிமையையும், நிம்மதியையும் இறைவன் நமக்குத்தருவான்.

    இறைவன் நமக்கு வழங்கியுள்ள அருட்கொடைகள் குறித்து திருக்குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் ஏராளம் உள்ளன. இறைவன் தரும் அருட்கொடைகளை நாம் பரிபூரணமாக பெற என்ன செய்ய வேண்டும் என்பதும் திருக்குர்ஆனில் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    "ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்". (திருக்குர்ஆன் 8:29).

    முதல்கட்டமாக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்தால் நமக்கு கிடைக்கும் முக்கியமான அருட்கொடை- நன்மை, தீமைகளை பிரித்தறிந்து கொள்ளும் ஞானம், அதன் மூலம் கிடைக்கும் நேர்வழி ஆகும். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொண்டால் தான் மனிதனின் செயல்கள் நன்மையை நோக்கி அமையும். அப்போது தான் இறைவனின் அருட்கொடையான பாவ மன்னிப்பும் சொர்க்கமும் அவனுக்கு கிடைக்கும்.

    இதையே இந்த திருக்குர்ஆன் வசனங்கள் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    "உண்மையில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு (அதாவது, இவ்வேதத்தில் எடுத்துரைக்கப்பட்ட சத்தியங்களை ஏற்றுக்கொண்டு) நற் செயல்கள் புரிந்து கொண்டிருந்தார்களோ அவர்களை, அவர்களின் (ஈமான்) நம்பிக்கையின் காரணத்தால் அவர்களுடைய இறைவன் நேர்வழியில் செலுத்துவான். அருட்கொடைகள் நிறைந்த சுவனங்களில், அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். (திருக்குர்ஆன் 10:9).

    "மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அறிவுரை உங்களிடம் திண்ணமாக வந்திருக்கிறது. இது இதயங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்தக்கூடியதாகவும், தன்னை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களுக்கு வழி காட்டக்கூடியதாகவும், ஓர் அருட்கொடையாகவும் திகழ்கின்றது".

    "(நபியே) நீர் கூறும்: "அல்லாஹ் தன்னுடைய கருணையைக் கொண்டும் அருளைக் கொண்டும் இதனை இறக்கியுள்ளான். இதனைக் குறித்து மக்கள் மகிழ்ச்சி அடையட்டும். அவர்கள் சேகரித்துக் கொண்டிருக்கும் எல்லாவற்றையும்விட இது சிறந்ததாகும்" (திருக்குர்ஆன் 10:57-58).

    இன்று வாழ்வில் நாம் அனுபவித்து மகிழும் அனைத்து சுகங்களும், வசதிகளும், கருவிகளும், வாகனங்களும் இறைவன் நமக்கு அளித்த அருட்கொடைகள் தான். அந்த அருட்கொடைகள் எண்ணில் அடங்காதவை. இதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். இறைவனின் கட்டளைகளை ஏற்று இறைவன் வகுத்த வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். நம்மை படைத்து பரிபாலிக்கும் ஏக இறைவன் கருணை மிகுந்தவன், நமது பாவங்களையும், தவறுகளையும் மன்னிக்கும் பொறுமை மிக்கவன்.

    இதையே இந்த திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் இறைவன் நமக்கு விளக்குகின்றான்:

    `அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணிட முயன்றால் அவற்றை உங்களால் எண்ணவே முடியாது. திண்ணமாக அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும், கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்'. (திருக்குர்ஆன் 16:18).

    "நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு அளித்தவைகளில் ஆகுமான நல்லவைகளையே புசியுங்கள். நீங்கள் அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருந்தால், அவனுடைய அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றி செலுத்தி வாருங்கள்". (திருக்குர்ஆன் 16:114).

    இறைவனின் அருட்கொடையான நேர் வழியில் நடந்து, நிம்மதியான வாழ்வைப் பெற வேண்டும் என்றால், முதலில் நாம் இறைவன் மீது முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். மனித வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்று இறைவன் காட்டியுள்ள வழியில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் நாம் நிம்மதியான வாழ்க்கையை இம்மையிலும், மறுமையில் சொர்க்கத்தையும் பெற முடியும்.

    பேராசிரியர் அ. முகம்மது அப்துல் காதர், சென்னை.

    • தவறுகளில் இருந்தும், பாவங்களில் இருந்தும் நம்மை விலக்கிக் கொள்வோம்.
    • இறைவனுக்கும், இறை கட்டளைக்கும் மாறு செய்கின்றான்.

    இந்த உலக வாழ்க்கை இன்பங்களால் நிரம்பியது. ஆனால் அந்த இன்பங்களின் மூலம் இறைவன் நம்மை சோதிக்கிறான் என்பதை மனிதர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    மனிதனை இறைவன் படைத்தது ஏன், எதற்காக?

    மனிதன் தன்னை வணங்க வேண்டும், தான் காட்டிய வழியில் வாழ்ந்து இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டும் என்பதே அல்லாஹ்வின் கட்டளை, நோக்கம்.

    பூமியில் பிறந்த மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை தனது தூதர்கள் மூலமும், மனிதகுலத்திற்கு வழிகாட்டியான திருக்குர்ஆன் மூலமும் அல்லாஹ் விளக்கி இருக்கின்றான்.

    ஆனால், மனிதர்களாகிய நாம் என்ன செய்கிறோம், நமது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்கிறோம் என்பது சிந்திக்கத்தக்கது.

    இருப்பினும், நாம் எத்தனை தவறுகள் செய்தாலும், பாவங்கள் செய்தாலும் நம்மை மன்னிக்கும் குணமும், கருணையும் கொண்டவனாக அல்லாஹ் இருக்கின்றான். சர்வ வல்லமை உள்ள அல்லாஹ் கருணை மிக்கவன் என்பதை பல்வேறு திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் நாம் அறியலாம். அல்லாஹ்வின் கருணைகளில் மிகவும் முக்கியமானது இந்த உலகத்தை படைத்து, அது எப்படி இயங்க வேண்டும் என்று செயல்படுத்தி வருவது ஆகும். இதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    "நிச்சயமாக வானங்களையும் பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறிக் கொண்டிருப்பதிலும், மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்தில் இருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி வைத்து அதன்மூலம் பூமியை அது (வறண்டு) இறந்தபின் உயிராக்கி வைப்பதிலும், அதில் ஒவ்வொரு விதமான (ஊர்ந்து திரியும்) பிராணியை பரவ விட்டிருப்பதிலும், காற்று களைப் பலவாறாகித் திருப்பிவிட்டுக் கொண்டிருப்பதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் மேகத் திலும் சிந்திக்கும் சமூகத்தவர்க்கு சான்றுகள் இருக்கின்றன". (திருக்குர்ஆன் 2:164)

    அல்லாஹ் மீது நம்பிக்கையும், இறையச்சமும் கொண்டவர்களின் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று அறிந்த போதிலும் பெரும்பாலான மனிதர்கள் அதை பின்பற்ற ஆர்வம் காட்டுவதில்லை. உலக வாழ்க்கையில் நிரம்பி கிடக்கும் இன்பங்களின் மீதே மனிதனின் மனம் லயித்துக்கிடக்கிறது.

    பணம், சொத்துக்கள், பதவி, அழகு, ஆசை, பொறாமை... என்று பல்வேறு வகையில் மனித மனம் அலைபாய்கிறது. இதன் காரணமாக அவன் பாவச்செயல்களில் ஈடுபடுகின்றான். இறைவனுக்கும், இறை கட்டளைக்கும் மாறு செய்கின்றான். இதனால் இறைவனின் கோபத்திற்கும், சாபத்திற்கும் அவன் ஆளாகிறான்.

    அதுபோன்ற சூழ்நிலையில் பலர் மனந்திருந்தி, தான் செய்த தவறுகளுக்கு இறைவனிடம் அழுது மன்றாடி மன்னிப்பு கேட்பதுண்டு. அவ்வாறு தன்னிடம் மன்னிப்பு கேட்பவர்களை மன்னிக்கும் பெருங்கருணை மிக்கவன் அல்லாஹ். இதை திருக்குர்ஆனில் இவ்வாறு இறைவன் சுட்டிக்காட்டியுள்ளான்:

    "ஒருவர் தீய செயல்புரிந்து, அல்லது தனக்குத்தானே அநீதி இழைத்துக் கொண்டு பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை யாளனாகவும் இருப்பதை அவர் காண்பார்". (திருக்குர்ஆன் 4:110).

    தவறுகளில் இருந்தும், பாவங்களில் இருந்தும் நம்மை விலக்கிக் கொள்வோம். இறைவன் காட்டிய வழியில் வாழ்ந்து, இறைவனின் திருப்பொருத்தத்தை நாம் அடைய முயற்சி செய்வோம், ஆமீன்.

    பேராசிரியர் அ. முகமது அப்துல்காதர், சென்னை.

    • அனுமதிக்கப்படாதவற்றை அறவே ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது.
    • நமது வீடாக இருந்தாலும் நமது மனைவி மட்டும் இருந்தால் பரவாயில்லை.

    இஸ்லாத்தில் எந்த செயலையும் வரம்பு மீறி செய்வதற்கு இடமில்லை. எதைச் செய்தாலும் ஒரு வரம்புக்குள் கட்டுப்பட்டுதான் செய்ய வேண்டும். மேலும், இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது மற்றும் அனுமதிக்கப்படாதது ஆகிய இரண்டு விதமான வழிமுறைகள் உண்டு.

    அனுமதிக்கப்படாதவற்றை அறவே ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது. அனுமதிக்கப்பட்டதையும் கூட பிறரின் அனுமதியின்றி அனுபவிக்கக்கூடாது.

    இஸ்லாத்தில் 'அனுமதி பெறுவது' எனும் செயலுக்கு ஒரு சிறந்த முக்கியத்துவம் உண்டு. எதையும் அனுமதி பெற்றுதான் செய்ய வேண்டுமே தவிர, அனுமதியின்றி நடக்கக்கூடாது. தமது வீடாக இருந்தாலும், பிறரின் வீடாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்றுதான் நுழைய வேண்டுமே தவிர, அனுமதியின்றி நுழையக்கூடாது.

    நமது வீடாக இருந்தாலும் நமது மனைவி மட்டும் இருந்தால் பரவாயில்லை. அவளிடம் அனுமதி பெறுவது அழகிய பண்பு. அனுமதி பெறாதது பரவாயில்லை. நமது வீட்டில் நமது தாய், உடன்பிறந்த சகோதரிகள், நமக்கு பிறந்த பெண் குழந்தைகள் வசிப்பார்கள். அனுமதியின்றி வீட்டில் நுழையும் போது அவர்கள் எந்த நிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அனுமதி பெற்றால், அவர்கள் தங்களை சீர்படுத்திக் கொள்வார்கள். இந்த வாய்ப்பு அனுமதியில் கிடைக்கிறது. அனுமதியின்றி நுழைவதால் இந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பிறர் வீடாக இருந்தால் கண்டிப்பாக அனுமதி பெற்றுதான் செல்லவேண்டுமென திருக்குர்ஆன் உத்தரவு பிறப்பிக்கிறது.

    "இறை நம்பிக்கையாளர்களே, உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில் அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதிபெற்று, அவர்களுக்கு ஸலாம் எனும் முகமன் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள். (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும். நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது கூறப்படுகிறது). அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள். அன்றியும், 'திரும்பிப் போய் விடுங்கள்' என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள். இதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும். மேலும், இறைவன் நீங்கள் செய்வதை நன்கறிபவன். (எவரும்) வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அவற்றில் நீங்கள் பிரவேசிப்பது குற்றமாகாது". (திருக்குர்ஆன் 24:27,28,29)

    பிறர் வீட்டில் நுழைவதற்கு முன்பு ஏன் அனுமதி பெறவேண்டும்? இது ஏன் சட்டமாக்கப்பட்டதெனில் ஒருவரின் பார்வை அடுத்தவரின் வீட்டில் உள்ளவர்களின் மீது சென்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

    அனுமதி பெறுவது என்பது மூன்று முறை 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று கூறுவதாகும். அல்லது வட்டார வழக்கில் அனுமதி கோருவதாகும். அல்லது கதவை தட்டுவது ஆகும்.

    ஒரு வீட்டில் தீ விபத்தோ, இயற்கை இடர்பாடுகளோ, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஏதேனும் அசம்பாவிதங்களோ, பெரும் விபத்தோ சம்பவிக்கும்பட்சத்தில் அந்த வீட்டில் உள்ளவர்களை காப்பாற்றும் நோக்கத்தில் அனுமதியின்றி நுழைவது குற்றமில்லை. மற்றபடி அனுமதி பெற்றுதான் நுழையவேண்டும். இது சட்டம். சட்டத்தை மீறினால் குற்றம்.

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    ×