search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்ச்சை"

    அமித்ஷாவை இயக்குனராக கொண்ட கூட்டுறவு வங்கி, பணமதிப்பு நீக்கம் அமலில் இருந்தபோது, ரூ.745 கோடி செல்லாத நோட்டுகளை பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. #AmitShah #BannedNotes
    மும்பை:

    கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அந்த நோட்டுகளை நவம்பர் 10-ந் தேதி முதல், டிசம்பர் 30-ந் தேதிவரை வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று கூறினார்.

    முதலில், மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் இந்த நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கருப்பு பணம் போடப்படும் என்ற சந்தேகத்தால், 5 நாட்களில், அதாவது நவம்பர் 14-ந் தேதியுடன் இந்த அனுமதி நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே, பணமதிப்பு நீக்க காலத்தின்போது, பொதுத்துறை வங்கி, மாநில கூட்டுறவு வங்கி, மாவட்ட கூட்டுறவு வங்கி என ஒவ்வொரு வங்கியிலும் எவ்வளவு செல்லாத நோட்டுகள் பெறப்பட்டன என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மும்பையைச் சேர்ந்த மனோரஞ்சன் ராய் என்பவர் கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு ‘நபார்டு’ வங்கியின் தலைமை பொது மேலாளரும், மேல்முறையீட்டு ஆணையருமான எஸ்.சரவணவேல் பதில் அளித்துள்ளார்.

    மொத்தம் உள்ள 21 பொதுத்துறை வங்கிகளில், 7 வங்கிகள் மட்டுமே இந்த விவரங்களை அளித்துள்ளன. 14 வங்கிகள் அவற்றை அளிக்க மறுத்து விட்டன. ஆனால், அனைத்து மாநில கூட்டுறவு வங்கிகளும், அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் விவரங்களை அளித்துள்ளன.

    அதன்படி, மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் அதிக அளவாக ரூ.745 கோடியே 59 லட்சம் செல்லாத நோட்டுகள் பெறப்பட்டுள்ளன. ஐந்தே நாட்களில் இந்த நோட்டுகள் வந்துள்ளன. இதன் இயக்குனராக இருப்பவர், பா.ஜனதா தலைவர் அமித்ஷா என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக அவர் அப்பொறுப்பில் இருந்து வருகிறார். 2000-ம் ஆண்டு, அவ்வங்கியின் தலைவராகவும் இருந்தார்.

    அந்த வங்கிக்கு பிறகு, அதிகமான செல்லாத நோட்டுகளை பெற்றது, ராஜ்கோட் மாவட்ட கூட்டுறவு வங்கி ஆகும். அது, ரூ.693 கோடியே 19 லட்சம் பெற்றுள்ளது. அதன் தலைவராக இருப்பவர், குஜராத் மாநில மந்திரி ஜெயேஷ்பாய் வித்தல்பாய் ராடாடியா.

    குஜராத் மாநில கூட்டுறவு வங்கியே வெறும் ரூ.1 கோடியே 11 லட்சம் செல்லாத நோட்டுகளை பெற்றிருக்கும்போது, மேற்கண்ட 2 மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் அதை விட பலமடங்கு அதிகமாக பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    தகவல் உரிமை சட்டத்தில் இந்த விவரங்களை பெற்ற மனோரஞ்சன் ராய் இதுகுறித்து கூறியதாவது:-

    மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட செல்லாத நோட்டுகளின் மதிப்பை பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது.

    7 பொதுத்துறை வங்கிகளில் ரூ.7 லட்சத்து 57 ஆயிரம் கோடியும், 32 மாநில கூட்டுறவு வங்கிகளில் ரூ.6 ஆயிரத்து 407 கோடியும் 370 மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ரூ.22 ஆயிரத்து 271 கோடியும், 39 தபால் நிலையங்களில் ரூ.4 ஆயிரத்து 408 கோடியும் செல்லாத நோட்டுகள் பெறப்பட்டுள்ளன.

    மேற்கண்ட வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மட்டும் மொத்தம் ரூ.7 லட்சத்து 91 ஆயிரம் கோடி செல்லாத நோட்டுகள் பெறப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்ட மொத்த செல்லாத நோட்டுகளே ரூ.15 லட்சத்து 28 ஆயிரம் கோடிதான். ஆனால், மேற்கண்ட வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மட்டும் 52 சதவீத செல்லாத நோட்டுகள் பெறப்பட்டுள்ளன.

    இதன்மூலம், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்கள் அளிக்காத 14 பொதுத்துறை வங்கிகள், ஊரக, நகர்ப்புற வங்கிகள், தனியார் வங்கிகள், உள்ளூர் கூட்டுறவு வங்கிகள், ஜனகல்யாண் வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கி உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஆகியவற்றில் எவ்வளவு செல்லாத நோட்டுகள் பெறப்பட்டு இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதில் இல்லாததால், பலத்த சந்தேகம் எழும்புகிறது.

    மேலும், கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், மாநில கூட்டுறவு வங்கிகளும், மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் தங்களிடம் உள்ள செல்லாத நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் செலுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இவ்வங்கிகளில் பெரும்பாலானவை, அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளவை.

    மாநில கூட்டுறவு வங்கிகளில் மராட்டிய மாநில கூட்டுறவு வங்கி அதிக அளவாக ரூ.1,128 கோடி செல்லாத நோட்டுகளை செலுத்தியது. வெறும் 4 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட அந்தமானில் உள்ள மாநில கூட்டுறவு வங்கி ரூ.85 கோடியே 76 லட்சம் செல்லாத நோட்டுகளை செலுத்தியது சந்தேகத்துக்குரியதாக உள்ளது.

    இவ்வாறு மனோரஞ்சன் ராய் கூறினார். 
    சர்வதேச கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர் பேட்டில் இருந்த தகாத வார்த்தை குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனம் செய்துள்ளனர். #JosButtler
    லண்டன்:

    இங்கிலாந்தில் உள்ள லீட்சில் சில தினங்களுக்கு முன்பு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் முதல் இன்னிங்சில் ஆட்டம் இழக்காமல் 80 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவியதுடன், ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

    இந்த போட்டியின் போது ஜோஸ்பட்லர் பேட்டிங் செய்ததை டெலிவிஷனில் பார்த்த ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சி காத்து இருந்தது. அவரது பேட்டின் கைப்பிடி பகுதியில் ஆங்கிலத்தில் எழுதி இருந்த ஒரு வார்த்தை அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய சர்வதேச கிரிக்கெட் வீரர் ஒருவரின் பேட்டில் இருந்த இந்த தகாத வார்த்தை குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனம் செய்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் ஜோஸ் பட்லரின் பேட்டில் இடம் பெற்று இருந்த வார்த்தை குறித்து அதிக கண்டனங்கள் எழுந்தன.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) அனுமதி பெறாமல் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் யாரும் தங்களது சீருடை மற்றும் பேட் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களில் எத்தகைய வாசகத்தையும் எழுதக்கூடாது என்பது வீரர்களின் நடத்தை விதிமுறையாகும். ஆனால் அந்த விதிமுறையை மீறி செயல்பட்டு இருப்பதால் ஜோஸ் பட்லர் பலத்த சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவர் மீது ஐ.சி.சி. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்த சர்ச்சை குறித்து ஜோஸ் பட்லரிடம் கருத்து கேட்ட போது, ‘விளையாடும் போது எனக்கு தானே உத்வேகம் அளிக்கவே இது மாதிரி எழுதினேன். மற்றபடி யாரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை’ என்றார்.  #JosButtler
    தூத்துக்குடி கலவரம் தொடர்பாக ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Rajinikanth #ThoothukudiFiring
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு பற்றி நேற்று தெரிவித்த கருத்துக்கள் மிகப்பெரிய அளவில் சலசலப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரையும், காயம் அடைந்தவர்களையும் சந்தித்து ஆறு தல் கூறி, நிதி உதவியையும் அளித்த பிறகு தூத்துக்குடியிலும், சென்னையிலும் நிருபர்களுக்கு பேட்டியளித்த ரஜினி ஆவேசமாக காணப்பட்டார்.

    ரஜினி கூறுகையில், “தூத்துக்குடியில் நடந்த போராட்டத்துக்கு வி‌ஷக் கிருமிகள், சமூக விரோதிகள் ஊடுருவலே காரணம். போலீசார் மீது கை வைத்தவர்களை சும்மா விடக்கூடாது.

    போலீசை தாக்கியவர்கள், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் சமூக விரோதிகள்தான். இப்படி தொடர்ந்து போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாக மாறி விடும்” என்றார்.

    ரஜினியின் இந்த கருத்துக்கு பரவலாக கடும் எதிர்ப்பும் அதிருப்தியும் தோன்றியுள்ளது. நச்சுக் காற்றால் பாதிக்கப்பட்டு, நோய் தாக்குதலுக்கு உள்ளாகி, வாழ்வாதாரத்தையே இழந்து விடுவோமோ என்ற பரிதவிப்பில் இருக்கும் தூத்துக்குடி மற்றும் சுற்றுப் பகுதி மக்களுக்கு ரஜினி தெரிவித்துள்ள கருத்துக்கள் கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. “ஆறுதல் சொல்ல வந்தவர் ஏன் இப்படி எங்களுக்கு எதிராகப் பேசுகிறார்?” என்ற குரல்கள் கேட்கத் தொடங்கி உள்ளன.

    ரஜினி ரசிகர்களும், ரஜினி மன்றத்தினரும் கூட “சமூக விரோதிகள்” என்ற பேச்சில் உடன்பாடு இல்லாமல் தவிக்கிறார்கள். ரஜினியின் கருத்துக்கு பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும், சமூக அமைப்புகளும் பலத்த கண்டனத்தை தெரிவித்துள்ளன.

    குறிப்பாக தமிழ்நாடு சுடுகாடாக மாறி விடும் என்ற ரஜினியின் ஆவேசவார்த்தை ஏற்கனவே மனவேதனையில் இருக்கும் சாமானிய மக்கள் மனதில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல மாறி உள்ளது. மக்களின் இத்தகைய மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் இன்று பல்வேறு கட்சித் தலைவர்களும் ரஜினிக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

    இதன் காரணமாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரஜினி தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ரஜினியை கைது செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்பு குரல்கள் எழத்தொடங்கி உள்ளன.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக கூறுகையில், “போராட்டம் இல்லாத வாழ்க்கையே இல்லை. ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி பெற, போராட்டம் மூலம் தானே தீர்வு காணப்பட்டது. இது ரஜினிக்கு தெரியாதா? அவர் போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்கிறார். அந்த சமூக விரோதிகளை அடையாளம் காட்ட ரஜினி தயாரா?” என்றார்.



    சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறுகையில், “வாழ்க்கையே போராட்டம் தானே. போராட வேண்டிய சூழ்நிலை உருவானால் போராடி தானே ஆக வேண்டும். ரஜினியே போராட வேண்டும் என்றுதானே புத்தாண்டு வாழ்த்தில் சொன்னார். இப்போது சமூக விரோதிகள் என்கிறார். அந்த சமூக விரோதிகளை அடையாளம் காட்டாவிட்டால் ரஜினியை தேசத் துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்” என்றார்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், “எங்கள் போராட்டத்தை தடுக்க நினைத்தால் எரிமலை வெடிக்கும். போராட்டம் பற்றிய எந்த அரிச்சுவடியும் ரஜினிக்கு தெரியாது. தமிழகம் சுடுகாடாக மாறாமல் இருக்கவே போராட்டம் நடத்தி வருகிறோம். புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் ரஜினி இது தெரியாமல் பேசி, கோடிக்கணக்கான மக்களின் மனதை காயப்படுத்தி உள்ளார்” என்றார்.

    மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்று ரஜினி சொல்வது வி‌ஷம கருத்து. தன்னெழுச்சியாக நடந்த மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி உள்ளார். இதன் மூலம் ரஜினி பா.ஜ.க. வின் குரலை எதிரொலித்துள்ளார். பாசிச சக்திகளின் ஏஜெண்டு போல செயல்படும் நடிகர் ரஜினி காந்தை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என்றார்.


    விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறுகையில், “ரஜினியின் குரல் கார்ப்பரேட் நிறுவனங்களின் குரலாக உள்ளது. சில மதவாத சக்திகளும் இதில் ரஜினிக்கு யோசனை கூறி இருக்கலாம். மக்கள் போராட்டம் நடத்தியபோது களத்துக்கு போகாத ரஜினி, இப்போது அங்கு சென்று சமூக விரோதிகள் என்கிறார். பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசும் ரஜினி நிதானம் இழந்துள்ளார்.

    இமயமலைக்கு சென்று தியானம் இருக்கும் பாவாவின் சீடரான அவர் ஒரு சாதாரண கேள்விக்கு உணர்ச்சிவசப்படுவது ஆச்சரியம் அளிக்கிறது. சமூக விரோதிகள் என்று சொன்னதன் மூலம் அவர் தூத்துக்குடி மக்களை கொச்சைப்படுத்தி உள்ளார். அவருக்கு இருந்த நன்மதிப்பு போய் விட்டது” என்று கூறி உள்ளார்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் நடந்தது மண்ணுக்கான போராட்டம். சிறுவர் - சிறுமிகள் கூட போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் சமூக விரோதிகள் என்றால் குடும்பத்தோடா களத்துக்கு வருவார்கள்? மக்கள் இப்படி போராடினால் வளர்ச்சி இருக்காது என்பது பைத்தியக்காரன் சொல்லும் வாதம்.

    ஸ்டெர்லைட் போராட்டம் பொழுதுபோக்குக்காக நடக்கவில்லை. கற்பி, புரட்சி செய், ஒன்று சேர் என்று மாமேதை அம்பேத்காரே கூறியுள்ளார். ஆனால் ரஜினியோ, போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்கிறார். மக்களுக்கு ஆதரவாக இருப்பதற்கு அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற போலீசுக்கு ரஜினி ஆதரவு கொடுப்பது ஏன்? போராடுபவர்களுக்கு ஆதரவு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. கொச்சைப்படுத்தாதீர்கள். அவரது இந்த அதிகார குரல் வெட்கக்கேடான குரல்” என்று கூறியுள்ளார்.

    அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி திரை உலகப் பிரமுகர்களும் ரஜினியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இயக்குனர் அமீர் கூறுகையில், “ரஜினி ஆவேசப்பட வேண்டியதில்லை. தன்னை பா.ஜ.க. என்று சொல்லி விட்டால் பிரச்சனை தீர்ந்து விடும்” என்று கூறியுள்ளார்.

    நடிகர் மயில்சாமி கூறுகையில், “தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டம் சுதந்திர போராட்டம் மாதிரிதான். அதை வரவேற்காமல் ரஜினி கொச்சைப்படுத்தி விட்டார்” என்றார்.

    ரஜினிக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்ப்பு வந்து கொண்டே இருக்கிறது. வெளிநாடு வாழ் தமிழர்களும் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான மக்கள் ரஜினிக்கு எதிரான தங்களது மன குமுறலை வெளிப்படுத்தியபடி உள்ளனர்.


    இதையடுத்து ரஜினிக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்க சென்னை போலீசார் முடிவு செய்தனர். நேற்றிரவே ரஜினிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    கதீட்ரல் சாலையில் இருந்து ரஜினி வீடு இருக்கும் போயஸ் கார்டனுக்கு திரும்பும் வழியில் சுமார் 50 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதே போல ரஜினி வீட்டுக்கு திரும்பும் மற்றொரு வழியிலும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாலைகளில் தடுப்புகளை அமைத்துள்ளனர்.  ரஜினியின் வீட்டு முன்பும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    ஏதேனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ரஜினி வீட்டின் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை கருத்தில் கொண்டே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Rajinikanth #ThoothukudiFiring 
    கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள போப்பையா ஏற்கனவே 2009ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை சபாநாயகராக பணியாற்றியிருக்கிறார். #KGBopaiah #karnatakaassembly
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் நிலவும் அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் நாளை சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஆட்சியமைக்க 112 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், 104 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட பா.ஜ.க.வை ஆட்சிப்பொறுப்பில் அமர்த்தியதை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. அதேசமயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசை வீழ்த்த ஆயத்தமாகி வருகிறது.

    இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்காக தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போப்பையாவை ஆளுநர் நியமித்துள்ளார். பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான இவர் ஏற்கனவே 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை சபாநாயகராக பொறுப்பில் இருந்துள்ளார். மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

    2011ம் ஆண்டு எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்தார் போப்பையா. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

    தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தகுதி நீக்கத்தை உறுதி செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. எடியூரப்பா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற ஏதுவாக, எதிர்ப்பு எம்.எல்.ஏ.க்கள் 16 பேரை விரைவாக தகுதிநீக்கம் செய்ததாக சபாநாயகர் போப்பையாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #KGBopaiah #karnatakaassembly
    ×