search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலை"

    ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்ல இருப்பதாக ஆலை நிர்வாகம் அறிவித்து உள்ளது. #SterliteProtest #BanSterlite

    சென்னை:

    தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது.

    இந்த ஆலையால் சுற்றுச் சூழல் மாசுப்படுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப் படுவதாகவும் கூறி இதை நிரந்தரமாக மூடக்கோரி கிராமமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

    100-வது நாள் போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். துப்பாக்கி சூடு நடத்தியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு மதுரை ஐகோர்ட்டு கிளை தடை விதித்து உத்தரவிட்டது.


    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பை துண்டிக்கவும், அந்த ஆலையை மூடவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.

    அந்த ஆலையில் அடுத்த கட்ட உற்பத்திக்கு தயாராக இருந்தது தெரிந்த பிறகே மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூடும் உத்தரவை பிறப்பித்தாக தகவல் வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்ல இருப்பதாக ஆலை நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    இது குறித்து வேதாந்தா - ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத் கூறியதாவது:-

    நாங்கள் சட்ட ரீதியிலான உதவியை நாட உள்ளோம். எங்களுக்கு இதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு எங்களுக்கு வியாழக்கிழமை கிடைத்தது. எனவே நாங்கள் எங்கள் குழுவினருடன் ஆலோசித்து வருகிறோம். மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SterliteProtest #BanSterlite

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது கண்டித்து நாகை மீனவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். #SterliteProtest #BanSterlite

    கீழ்வேளூர்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது. அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து நாகை மீனவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகை அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர், சமந்தான் பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் 10 ஆயிரம் பைபர் படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    மேலும் மீனவர்கள் நாகை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட பொது மக்களை விடுதலை செய்ய வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமான மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டை கைது செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். #SterliteProtest #BanSterlite

    திண்டுக்கல்லில் தி.மு.க. சார்பில் நடந்த மறியல் போராட்டத்தையடுத்து ஐ.பெரியசாமி உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh

    திண்டுக்கல்:

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை கண்டித்தும், தமிழக அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்திருந்தன.

    மேலும் பல்வேறு ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் பஸ்நிலையத்தில் தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. அவைத் தலைவர் பஷீர்அகமது, பட்டிமன்ற நடுவர் லியோனி, துணைச் செயலாளர்கள் நாகராஜன், தண்டபாணி, நகர செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

    மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்பட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தில் ம.திமு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh 

    எதிர்கட்சிகள் அறிவித்த போராட்டத்தால் திண்டுக்கல்லில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh

    திண்டுக்கல்:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என எதிர்கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. திண்டுக்கல்லில் இன்று காலை குறைந்த அளவு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின.

    நேரம் செல்ல செல்ல அடைக்கப்பட்டு இருந்த ஒரு சில கடைகளும் மீண்டும் திறக்க ஆரம்பித்தன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பஸ்நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பழனியில் இன்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன. பஸ்களும் வழக்கம் போல் இயங்கின.

    இன்று முகூர்த்த நாள் என்பதால் திருமண மண்டபங்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் மலைக் கோவிலிலும் திருமண குழுவினர் அதிக அளவில் காணப்பட்டனர். இதனால் முழு அடைப்பு போராட்டம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

    சுற்றுலா நகரமான கொடைக்கானலில் பெரும்பாலான கடைகள் மற்றும் ஓட்டல்கள் திறந்திருந்தன. சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகமாக இருந்ததால் பாதிப்பு இல்லை.

    ஒட்டன்சத்திரத்தில் காய்கறி மார்க்கெட் வழக்கம் போல் செயல்பட்டது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளும், கேரள வியாபாரிகளும் வந்திருந்தனர்.

    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 16 அரசு பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து தினசரி 922 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கம் போல் இந்த பஸ்கள் இன்றும் இயங்கியது. போராட்டம் காரணமாக அனைத்து போக்குவரத்து கழக பணிமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதே போல் ரெயில் நிலையம், முக்கிய சந்திப்புகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh

    ராமேசுவரம்:

    தூத்துக்குடி போலீசாரின் அத்துமீறல், தமிழக அரசை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இன்று மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தன.

    அதன்படி இன்று ராமேசுவரத்தில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் நிலையம், ரெயில் நிலையம், கோவில் பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் ராமேசுவரத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து சில அமைப்பினர் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஒரு சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய தமிழக அரசு உடனே பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். #SterliteProtest #BanSterlite

    திண்டுக்கல்:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திண்டுக்கல்லில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 100 நாட்களாக அந்த மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை.

    மேலும் அவர்கள் போராட்டத்தை கண்டுகொள்ளவே இல்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டும் முயற்சியிலேயே அரசு தொடர்ந்து ஈடுபட்டு வந்தது.

    கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி பின்னர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

    தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ள நிலையில் அதைப்பற்றி கவலைப்படாத அரசு நச்சுக்காற்றினால் மனித உயிர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஏன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    மக்களுக்காக ஆட்சி செய்வதை விட்டு விட்டு முதலாளிகளுக்காக அவர்கள் ஆட்சி செய்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்கள் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் இதுவாகும்.

    10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் உயிருக்கு போராடி வருகின்றனர். இதற்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #SterliteProtest #BanSterlite

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் தூத்துக்குடி நகரம் போர்க்களம் ஆனது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி ஆனார்கள். இதுபற்றி நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளது.#SterliteProtest #BanSterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த 1996-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

    இந்த ஆலையில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் பாஸ்பாரிக் அமிலம், கந்தக அமிலம் ஆகியவையும் தயாரிக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு இந்த ஆலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வந்தது.

    இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மேலும் விரிவாக்கம் செய்வதை கைவிட்டு, நிரந்தரமாக மூடவேண்டும் என்று வலியுறுத்தி அந்த பகுதியில் உள்ள அ.குமரெட்டியபுரம் மக்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டத்துக்கு மடத்தூர் உள்ளிட்ட 18 கிராம மக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.



    இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடை விதித்தது. இதனால் கடந்த 1½ மாதங்களாக ஸ்டெர்லைட் ஆலை இயங்கவில்லை. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் நேற்று 100-வது நாளாக நீடித்தது.

    நூறாவது நாளையொட்டி, ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

    இந்த போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, தூத்துக்குடியில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் இன்று (புதன்கிழமை) காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீ சார் குவிக்கப்பட்டனர்.



    இந்த நிலையில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்துக்கு ஆதரவாக தூத்துக்குடியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை.

    முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க வந்த கிராம மக்கள் மடத்தூரிலும், தூத்துக்குடி நகர்ப்புறம் மற்றும் திரேஸ்புரம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் அருகேயும் நேற்று காலை 9 மணி அளவில் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆலயம் அருகே திரண்ட போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

    ஆனால், ஆங்காங்கே போலீசார் அவர்களை வழிமறித்தனர். இருந்தபோதும், போலீசார் வைத்து இருந்த தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றனர். தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே அவர்கள் வந்தபோது, அந்த பகுதியில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் தலைமையில் போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி, 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டு இருப்பதால் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர்.



    இதனால் ஆவேசம் அடைந்த போராட்டக்காரர்கள் இரும்பு தடுப்புகளை தள்ளிக்கொண்டு முன்னேறிச் செல்ல முயன்றனர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினார்கள். இதில் சிலர் காயம் அடைந்தனர். இதனால் கலவரம் வெடித்தது.

    ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால், போலீசார் அங்கிருந்து பின்வாங்கி ஓடினார்கள். தொடர்ந்து போலீசாரை ஓட, ஓட விரட்டி கல்வீசினார்கள். மேலும், அங்கு நின்ற போலீஸ் வாகனம் ஒன்றை கவிழ்த்து போட்டு கல்வீசி தாக்கினார்கள். இதில் போலீஸ் வாகனத்தின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன. பின்னர் இரும்பு தடுப்புகளை உடைத்து விட்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி முன்னேறிச் சென்றனர். இந்த கல்வீச்சு சம்பவத்தில் போலீசாரும், ஏராளமான பொதுமக்களும் காயம் அடைந்தனர்.

    பேரணியாக வந்த போராட்டக்காரர்களை இந்திய உணவு கழக குடோன் அருகே போலீசார் மீண்டும் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து முன்னேற முயன்ற போராட்டக்காரர்களை நோக்கி, வஜ்ரா வாகனம் மூலம் 27 முறை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

    ஆனாலும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் போலீசாரை நோக்கி கற்களை வீசியபடி முன்னேறியதால், போலீசார், வஜ்ரா வாகனத்துடன் அங்கிருந்து பின்வாங்கினார்கள்.

    அதே நேரத்தில், மடத்தூரில் திரண்டு இருந்த மக்களும் அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலகம் முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடுத்தனர்.

    இருந்தாலும் ரெயில் தண்டவாளம் வழியாகவும், காட்டுப்பகுதி வழியாகவும் சாரை சாரையாக இந்திய உணவு கழக குடோன் பகுதியில் மக்கள் வந்து சேர்ந்தனர். இதனால் கூட்டம் அதிகமானதால் போலீசாரால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    பொதுமக்கள் கல்வீசி தாக்கியதால் போலீசார் பின்வாங்கி ஓடினார்கள். அப்போது சாலை ஒரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த போலீசாரின் இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் போராட்டம் பயங்கர கலவரமாக மாறியது. கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பாலத்தின் கீழ் நின்ற இருசக்கர வாகனங்களும் தீவைத்து எரிக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை கலெக்டர் அலுவலக வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் மீண்டும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

    அப்போது சிதறி ஓடிய போராட்டக்காரர்களில் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்தில் புகுந்தனர். அந்த வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை தீவைத்து எரித்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை கல்வீசி தாக்கி சூறையாடினார்கள். இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயன்றனர்.

    ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால், நிலைமை மிகவும் மோசம் அடைந்தது. இதைத்தொடர்ந்து கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.



    துப்பாக்கி சூட்டை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினார்கள். அப்போது போராட்டக்காரர்கள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

    துப்பாக்கி சூட்டில், ரஞ்சித்குமார் என்பவர் குண்டு பாய்ந்து பலி ஆனார். மேலும் 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை போராட்டக்காரர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி ஒரு மாணவி உள்பட 8 பேர் உயிர் இழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 9 ஆனது.

    பலியானவர்களின் பெயர் விவரம் வருமாறு:-

    1. ரஞ்சித்குமார் (வயது 22). தூத்துக்குடி.

    2. கிளாஸ்டன் (40), தூத்துக்குடி லூர்தம்மாள்புரம்.

    3. கந்தையா (55), சிலோன் காலனி.

    4. தமிழரசன் (45), ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலையைச் சேர்ந்தவர்.

    5. சண்முகம் (25), தூத்துக்குடி மாசிலாமணிபுரம்.

    6. எஸ்.எஸ்.எல்.சி. மாணவி வெனிஸ்டா (17), தூத்துக்குடி.

    7. அந்தோணி செல்வராஜ் (35), தூத்துக்குடி.

    8. மணிராஜ் (34), தூத்துக்குடி தாமோதர நகர்.

    9. கார்த்திக் (20), தூத்துக் குடி சிவந்தாகுளம் ரோடு.

    மேலும் இந்த சம்பவத்தில் 15 போலீசார் உள்பட 65-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    போராட்டக்காரர்கள் மதியம் 1 மணி அளவில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த போது, 3-வது மைல் பகுதியில் போலீசார் அவர்களை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சிலர் காயம் அடைந்தனர்.

    இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் நேற்று மாலை வடக்கு கடற்கரை ரோட்டில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டு இருந்த போது, திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் திடீரென்று அவரது காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

    கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். பதிலுக்கு பொதுமக்களும் போலீசாரை தாக்கினார்கள். நிலைமை மோசமானதால் போலீசார் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை கலைத்தனர்.

    இதனால் துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் நேற்று நடந்த கலவரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த அரசு வாகனங்கள் மற்றும் ஊழியர்களின் இருசக்கர வாகனங்கள், போலீஸ் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் காரணமாக தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், நகர் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த சம்பவம் பற்றி ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் மூலம் நீதி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

    மேலும் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்து இருக்கிறது. 
    ×