search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிகுண்டு"

    • டிஜிபி அலுவலகத்திற்கு மர்ம நபரிடம் இருந்து மின்னஞ்சல்.
    • மோப்ப நாய்களுடன் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு விரைந்த போலீசார்.

    சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்துள்ளது.

    சென்னையில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்பட 30 இடங்களில் குண்டு வெடிக்கும் என டிஜிபி அலுவலகத்திற்கு மர்ம நபரிடம் இருந்து மின்னஞ்சல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, போலீசார் மோப்ப நாய்களுடன் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு விரைந்துள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கடையை நோக்கி வீசியுள்ளனர்.
    • வெடிக்காமல் உள்ள நாட்டு வெடிகுண்டை, வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்தவர் வானமாமலை (வயது 50). இவர் நாங்குநேரி நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். மேலும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக உள்ளார்.

    இன்று காலையில் வழக்கம் போல் வானுமாமலை மற்றும் அவரது மனைவி 9 மணியளவில் கடையை திறந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கடையை நோக்கி வீசியுள்ளனர்.

    அந்த வெடிகுண்டு வெடிக்கவில்லை. தொடர்ந்து இரண்டாவது குண்டை எடுத்து வீசும் போது கடையில் முன்பு விழுந்து வெடித்தது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது குண்டை கீழே போட்டுவிட்டு அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நாங்குநேரி போலீஸ் டி.எஸ்.பி. அசோக் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிக்காமல் உள்ள நாட்டு வெடிகுண்டை, வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    • பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
    • மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

    கோவை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மக்கள் கூடும் கடை வீதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்துக்கு தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்றுமுன்தினம் இரவில் ஒரு மிரட்டல் இ-மெயில் சென்றது. அதில் கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. மத்திய அரசுக்கு எதிராகவும், கண்டன வாசகங்களும் இடம் பெற்றிருந்தன. கோவை உள்பட மேலும் சில மாவட்டங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு மிரட்டல் அனுப்பப்பட்டு இருந்தது.

    இந்த தகவல் கோவை மாநகர போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அனைத்து போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். இரவு விடிய, விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது. பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் சந்தேக நபர்கள் யாரும் சிக்கவில்லை.

    இதற்கிடையே மிரட்டல் மெயில் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் இறங்கினர். அந்த இ-மெயில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த இசக்கி என்பவரின் பெயரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக அவரை பிடித்து விசாரித்தனர். ஆனால் அவர் தனக்கும், மிரட்டலுக்கும் சம்பந்தமில்லை என தெரிவித்தார்.


    இசக்கியின் இ-மெயில் ஐ.டி.யை மர்ம நபர்கள் அவருக்கு தெரியாமல் பயன்படுத்தி மிரட்டல் விடுத்து இருந்தது தெரியவந்தது. அவ்வாறு மிரட்டல் விடுத்த நபர் யார், எதற்காக இவ்வாறு மிரட்டல் விடுத்தனர் என்பது பற்றி விசாரித்து அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    கோவையில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என வந்த இ-மெயில் வெறும் வதந்தி. பண்டிகை காலங்களில் பதட்டத்தை ஏற்படுத்தும் நோக்கில் யாராவது இப்படி மிரட்டல் இ-மெயிலை அனுப்பி இருக்கலாம். இதனால் பொதுமக்கள் யாரும் அச்சம் அடைய தேவையில்லை. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவையில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் குண்டு வெடித்தது. கோவையில் நாசவேலையை அரங்கேற்ற திட்டமிட்டு காரில் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த முபின் என்ற வாலிபர் குண்டுவெடிப்பில் சிக்கி பலியானார்.

    இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. இதுவரை இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    தொடர்ந்து விசாரணை சென்று கொண்டிருக்கும் நிலையில் அதேபோல தீபாவளிக்கு முந்தைய நாள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். கோவையில் பா.ஜ.க. அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    • பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பத்திரமாக வைத்துகொள்ளவும் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • ரெயில்வே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவை:

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

    இதனையொட்டி மக்கள் தற்போது தீபாவளிக்கு தேவையான புத்தாடைகள் மற்றும் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.

    கோவையில் உள்ள ஒப்பணக்கார வீதி, பெரிய கடைவீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    கடந்த 2 வாரங்களாகவே அங்குள்ள ஜவுளிக்கடைகள், எலக்ட்ரிக்கல் கடைகள், நகை கடைகள், செல்போன் கடைகள் உள்பட அனைத்து கடைகளிலும் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது.

    பொதுமக்களை கவரும் வகையில் கடைகளும் தீபாவளி தள்ளுபடியை அறிவித்துள்ளதால், மக்கள் கடைகளுக்கு சென்று தீபாவளிக்கு அணிய புத்தாடைகள் மற்றும் அணிகலன்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வாங்கி செல்கின்றனர்.

    இன்று கோவை மாநகரில் உள்ள டவுன்ஹால், கிராஸ்கட் ரோடு, ஒப்பணக்கார வீதியில் காலை முதலே மக்கள் குடும்பத்துடன் வந்து, புத்தாடைகளை எடுத்து சென்றனர். இதனால் கடைவீதிகளில் கூட்டம் காணப்பட்டது.

    கடைவீதிகளில் கூட்டம் கூடுவதால் அங்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அடிக்கடி வாகனங்களில் ரோந்து சென்றும் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பத்திரமாக வைத்துகொள்ளவும் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக வெடிகுண்டு நிபுணர்களும், மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளான கடைவீதிகள் மற்றும் பஸ் நிலையங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

    10 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் 2 குழுவாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவினர் கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும், மற்றொரு குழுவினர் டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைவீதிகளிலும் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

    நேற்று முதல் இந்த சோதனையானது நடந்து வருகிறது. இன்று காலை, வெடிகுண்டு நிபுணர் குழுவினர், மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளை கொண்டு, கோவை டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, பெரிய கடைவீதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த பொருட்களை மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டும், மோப்பநாய் உதவியுடனும் சோதனை நடத்தினர். தொடர்ந்து உக்கடம் பஸ் நிலையம், காந்திபுரம் பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், கோனியம்மன் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சோதனை நடந்தது.

    இதேபோல் அனைத்து வழிபாட்டு தலங்கள் முன்பும் சோதனை நடைபெற்றது. ரெயில் நிலைய பகுதியிலும் ரெயில்வே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ரெயில் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது. அவர்களது உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    யாராவது ரெயிலில் வெடிபொருட்களை எடுத்து செல்கின்றனரா என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையானது தீபாவளி பண்டிகை வரை தினமும் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிரச்சனையால் சுற்றுலா பயணி ஒருவர் போலீசில் சிக்கினார்.
    • இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    லிஸ்பன்:

    அஜர்பைஜானைச் சேர்ந்த 36 வயதான ரஷிய பேச்சாளர் ஒருவர் லிஸ்பனில் உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்றார். அங்கு மாதுளம் பழச்சாறு ஆர்டர் செய்ய முயன்றார்.

    மாதுளை என்ற வார்த்தையை போர்ச்சுக்கீசிய மொழியில் கூறுவதற்காக அவர் மொழி பயன்பாட்டை பயன்படுத்தினார். ஆனால் அது அவருக்கு தவறான மொழிபெயர்ப்பை வழங்கி உள்ளது. அதாவது மாதுளம் பழச்சாறு என்பதற்கு பதிலாக, கையெறி குண்டு என வந்துள்ளது.

    இதை அறியாத அவர் ஆர்டர் செய்ததும் உணவக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபர் கையெறி குண்டுகளைக் காட்டி மிரட்டுவதாக கருதிய உணவக ஊழியர்கள் போலீசில் புகார் செய்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட சுற்றுலா பயணியை பிடித்து கைது செய்தனர். அதன்பின், அவரை அருகில் உள்ள காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை என உறுதி செய்தபின், அவர் தங்கி இருந்த அறையில் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் சந்தேகத்திற்கிடமான எந்த பொருட்களும் இல்லை என உறுதி செய்தனர்.

    விசாரணையில், மொழிபெயர்ப்பில் நடந்த பிரச்சனையால் இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

    • விமானத்தில் இருந்து பயணிகள் அவசர அவசரமாக இறக்கிவிடப்பட்டனர்.
    • 3 மணி நேர தாமதத்துக்கு பிறகு அந்த விமானம் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு தனியார் நிறுவன விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் 138 பயணிகள் இருந்தனர். மேலும் ஒரு கைக்குழந்தையும் இருந்தது. இந்நிலையில் அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து விமானத்தில் இருந்து பயணிகள் அவசர அவசரமாக இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் விமான நிலையத்தில் தங்க வைப்பட்டனர்.

    இதையடுத்து அந்த விமானத்தில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனை செய்தனர். ஆனால் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 மணி நேர தாமதத்துக்கு பிறகு அந்த விமானம் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது. விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கல்லூரியில் இருந்த மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • கல்லூரிக்குள் நாட்டுவெடிகுண்டுகளை வீசி மாணவர்கள் மோதிக்கொண்டதாக முதலில் தகவல் வெளியானது.

    வேளச்சேரி:

    வேளச்சேரியில் தனியார் கல்லூரி உள்ளது. நேற்று காலை கல்லூரி வளாகத்துக்குள் மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் எதிர்தரப்பினர் மீது 2 பட்டாசுகளை வீசினர். இதில் அந்த பட்டாசுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கல்லூரியில் இருந்த மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதையடுத்து கல்லூரிக்குள் நாட்டுவெடிகுண்டுகளை வீசி மாணவர்கள் மோதிக்கொண்டதாக முதலில் தகவல் வெளியானது. தகவல் அறிந்ததும் கிண்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்கு வெடித்து சிதறி கிடந்த பாகங்களை ஆய்வு செய்தனர். இதில் மாணவர்கள் வீசியது திருவிழாகாலத்தில் பயன்படுத்தப்படும் பூண்டு பட்டாசு என்பது தெரிந்தது.

    கல்லூரியில் பொருளாதாரம் 3-ம் ஆண்டு படித்து வரும் தனுஷ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை கானாபாட்டு பாடல் பாடிய தாவரவியல் படிக்கும் மாணவர்களை கிண்டல் செய்ததாக தெரிகிறது. இந்த தகராறில் தாவரவியல் படிக்கும் மாணவர்கள் சேர்ந்து தாக்கி உள்ளனர். இந்த மோதலின் தொடர்ச்சியாக நேற்று காலை கல்லூரிக்கு வந்த தனுஷ் மற்றும் உடன் படிக்கும் நண்பர்கள் எதிர்தரப்பு மாணவர்கள் மீது பூண்டு பட்டாசை கொளுத்தி போட்டு இருப்பது தெரிந்தது.

    இந்த மோதல் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் 18 மாணவர்களை நேற்று அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. இதில் 3-ம் ஆண்டு மாணவர்கள் 9 பேர், 2-ம் ஆண்டு மாணவர்கள் 9 பேர் ஆகும். இதற்கிடையே மோதலில் ஈடுபட்டதாக 10 மாணவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கல்லூரிக்குள் கோஷ்டிகளாக மோதலில் ஈடுபட்ட மற்ற மாணவர்கள் யார்?யார்? என்ற விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
    • கல்லூரிக்குள் நாட்டு வெகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேளச்சேரி:

    வேளச்சேரியில் தனியார் கல்லூரி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இங்கு படிக்கும் மாணவர்களிடையே கோஷ்டி தகராறு ஏற்பட்டு வந்தது. அடிக்கடி அவர்கள் மோதிக் கொண்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் மாணவர்கள் கல்லூரிக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

    அப்போது மர்ம கும்பல் திடீரென கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்து 2 நாட்டு வெடிகுண்டை வீசி தப்பி சென்று விட்டனர். இதில் அந்த நாட்டு வெடிகுண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு நின்று கொண்டு இருந்த மாணவ-மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த வெடிகுண்டு வீச்சு தொடர்பாக 3 மாணவர்களை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கல்லூரிக்குள் நாட்டு வெகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாதுகாப்பு சோதனைகள் காரணமாக யுகே971 விமானம் தாமதமானது.
    • வெடி குண்டு மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 8.30 மணியளவில் புனேவிற்கு புறப்பட இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர், விமான எண். யுகே971, கேட் எண். 42ல் உள்ள விமானத்தில் மூன்று வெடி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்றும், அவை ஒரு மணி நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறிவிட்டு அழைப்பை உடனடியாக துண்டித்துள்ளார்.

    வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, விமானத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர், விமானத்தை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். பின்னர், விமானத்தில் சந்தேகத்திற்கு இடமாக மர்ம பொருள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விமானத்தில், கட்டாய பாதுகாப்பு சோதனைகள் காரணமாக யுகே971 விமானம் தாமதமானது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தொழில் போட்டியில் கூலிப்படையை ஏவி ஆல்பர்ட்ட கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
    • கூலிப்படை தலைவனாக செயல்பட்ட மேலும் 2பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார்சத்திரம் அருகே உள்ள எச்சூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் குமுதா டோம்னிக். இவரது மகன் ஆல்பர்ட். தி.மு.க.வில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளராக இருந்தார். மேலும் ஏ.டி.கே எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் எச்சூர் ஊராட்சியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் கழிவு பொருட்களை மொத்தமாக எடுக்கும் தொழிலும், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்வது, தொழிற்சாலை கட்டுமான பணிகளுக்கு தேவையான மண், சிமெண்ட், கம்பி உள்ளிட்ட உபகரணங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி மாலை ஆல்பர்ட், சுங்குவார்சத்திரம் அருகே தொழிற்சாலை சிப்காட் சாலையோரத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 2மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் அரிவாளால் வெட்டியும் ஆர்பர்ட்டை கொடூரமாக கொலை செய்து தப்பி சென்று விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். குற்றவாளிகளை விரைந்து பிடிக்க 4தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக கடந்த 7-ந்தேதி குரோம்பேட்டையை சேர்ந்த பிரணவ், தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தை சேர்ந்த ஆறுமுகம் ,மேற்கு தாம்பரத்தை சேர்ந்த தினேஷ் குமார்,ஆகிய 3 பேர் தாம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக எச்சூரை சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட பா.ம.ப. நிர்வாகி சுரேஷ், சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியை சேர்ந்த கட்டுமான நிறுவன தொழிலதிபர் செந்தில்குமார் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.இதில் தொழில் போட்டியில் கூலிப்படையை ஏவி ஆல்பர்ட்ட கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள புதிய நிறுவனங்கள் அமைக்கும் கட்டுமான பணியை செந்தில்குமார் மேற்கொண்டு வந்தார். இங்கு மண் கொட்டி நிரப்பும் பணியினை ஆல்பர்ட் செய்து வந்ததாக தெரிகிறது. கடந்த ஜூன் மாதம் ஆல்பர்ட்டிற்கு முறையாக கணக்கு சொல்லாமல் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆல்பர்ட் தனக்கு சேர வேண்டிய பணத்தை கேட்டு உள்ளார். இதனால் அதே மண் நிரப்பும் பணியினை எச்சூரை சேர்ந்த பா.ம.க. நிர்வாகி சுரேஷுக்கு கொடுக்கபட்டதாக தெரிகிறது.

    இதனால் ஆல்பர்டிற்கும் சுரேஷூக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த மோதலில் சுரேசும், செந்தில்குமாரும் தாம்பரத்தில் உள்ள கூலிப்படையினைரை ஏவி ஆல்பர்ட்டை கொலை செய்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    இதையடுத்து பா.ம.க. பிரமுகர் சுரேஷ், செந்தில்குமார், மதுரையை சேர்ந்த சுந்தர்,ஆனந்த வினோத், எச்சூர் பகுதியை சேர்ந்த வேலாயுதம் தினேஷ் ,சந்துரு, தாம்பரம் பகுதியை சேர்ந்த மாதவன், சபரிசன் வயது, அரவிந்த்க், அஸ்வின் மற்றும் 17 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் என மொத்தம் 14 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஏற்கனவே இந்த கொலை தொடர்பாக 3 பேர் கோர்ட்டில் சரண் அடைந்து உள்ள நிலையில் மேலும் 14 பேர் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கூலிப்படை தலைவனாக செயல்பட்ட மேலும் 2பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தொழில் போட்டியில் கூலிப்படை ஏவி தி.மு.க.பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜெர்மனியின் பெரும்பாலான கட்டிடங்கள் போர் முடியும் தறுவாயில் தரைமட்டமானது
    • வெளியெறிய மக்களில் ஒரு சிலர் தங்கள் வளர்ப்பு பிராணிகளையும் கொண்டு சென்றனர்

    19-ம் நூற்றாண்டின் மத்தியில் 1939-லிருந்து 1945 வரை உலகின் பெரும்பாலான நாடுகள், ஆக்ஸிஸ் (Axis) மற்றும் அல்லீஸ் (Allies) என இரு அணிகளாக பிரிந்து நின்று போரிட்டன. இந்த பெரும் போர், இரண்டாம் உலக போர் என அழைக்கப்படுகிறது.

    இப்போரில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து 2.7 மில்லியன் டன் வெடிகுண்டுகளை ஜெர்மனி கூட்டணி நாடுகள் மீது வீசின. அதில் பெரும்பகுதி ஜெர்மனி மீது வீசப்பட்டது. இவற்றில் பல வெடித்தாலும் ஒரு சில வெடிக்காமல் பூமியில் புதைந்தன.

    போர் முடியும் நேரத்தில் ஜெர்மனியின் பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டது. அந்நாட்டில் இதனால் பல வெடிகுண்டுகள் பூமிக்கு அடியில் வெடிக்காமல் புதையுண்டு போனது. பல தசாப்தங்கள் ஆன பிறகும் ஆங்காங்கே அவற்றில் சில கண்டெடுக்கப்பட்டதாக அவ்வப்போது தகவல்கள் வருவதுண்டு.

    ஜெர்மனியின் மேற்கு பகுதி நகரமான டஸ்ஸல்டார்ஃப் (Dusseldorf) பகுதியில் உள்ள ஒரு மிருககாட்சி சாலையில் இம்மாதம் முதல் வாரத்தில் 1 டன் எடையுள்ள ஒரு வெடிகுண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து காவல்துறையும், வெடிகுண்டு நிபுணர்களும் இணைந்து அதனை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை திட்டமிட்டனர்.

    இதன் ஒரு பகுதியாக, அந்த குண்டு கிடப்பதாக சொல்லப்படும் இடத்திற்கருகே சுமார் 1640 சதுர அடி சுற்றளவில் (500 meter radius) உள்ள இடங்களில் உள்ள அனைத்து மக்களையும் வெளியேறும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இதனால் சுமார் 13 ஆயிரம் பேர் தற்காலிகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினர். வெளியெறியவர்களில் ஒரு சிலர் தங்கள் வளர்ப்பு பிராணிகளையும் கொண்டு சென்றனர். இந்த நடவடிக்கையின்போது அந்த இடத்தை இணைக்கும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டது.

    தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை எப்போது முடிவடையும் என்பதும் தற்காலிக தடை நீக்கப்பட்டதா? என்பது குறித்தும் தற்போது வரை தகவல்கள் இல்லை.

    • ஸ்கிராப் எடுக்கும் தொழிலில் நிறைய பணம் கிடைப்பதால் அதில் கடும் போட்டி நிலவி வந்தது.
    • ஸ்கிராப் தொழில் போட்டியில் தொடர் கொலைகள் நடைபெறுகின்றன.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட எச்சூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் குமுதா டோம்னிக். இவரது கணவர் டோமினிக் தி.மு.க.வில் மாவட்ட பொறுப்பில் உள்ளார்.இவரது மகன் ஆல்பர்ட் (வயது 30).

    இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி பொறுப்பில் உள்ளார். ஆல்பர்ட் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் கட்டுமான பணி மற்றும் ஸ்கிராப் எனப்படும் தொழிற்சாலை கழிவு பொருட்கள் எடுப்பது போன்ற தொழில் செய்து வருகிறார்.

    ஸ்கிராப் எடுக்கும் தொழிலில் நிறைய பணம் கிடைப்பதால் அதில் கடும் போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆல்பர்ட் தொழிற் சாலை மேலாளரை மிரட்டிய வழக்கில் முன் ஜாமீன் பெற்ற நிலையில் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

    நேற்று மாலை சுங்குவார்சத்திரம் அருகே சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் அருகே சாலை ஓரத்தில் நின்று ஆல்பர்ட் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் வந்த 8 மர்ம நபர்கள் திடீர் என ஆல்பர்ட் மீது நாட்டு வெடி குண்டு வீசி உள்ளனர்.

    இதில் சுதாரித்து கொண்ட ஆல்பர்ட் தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை விரட்டி சென்ற மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் ஆல்பர்ட் கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆல்பர்டை மீட்டு மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் ஆல்பர்ட்டை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் ஆல்பர்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆல்பர்ட்டை யார் கொலை செய்தது? தொழில் போட்டியா? அல்லது வேறு எதும் காரணங்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆல்பர்டுக்கு திருமணம் ஆகி இந்துமதி என்கிற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது.

    சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரதாஸ் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர். கொலையாளிகளை விரைந்து பிடிக்க 4 தனிபடை அமைக்கபட்டு உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஸ்கிராப் தொழில் போட்டியில் தொடர் கொலைகள் நடைபெறுகின்றன. சில நாட்களுக்கு முன் பா.ஜனதா பிரமுகர் பி.பி.ஜி.டி. சங்கர் நாட்டு வெடி குண்டு வீசி கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். நாட்டு வெடி குண்டு வீசி கொலை செய்யும் கலாச்சாரம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பரவி வருகிறது. இது அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

    ×