search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 213161"

    • காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் பவானி ஆறு செல்வதால் இப்பகுதியில் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • விவசாயத்தின் மீது கொண்டுள்ள ஆர்வத்தால் தான் செய்து வந்த பொறியியல் பணியை பாதியில் விட்டுவிட்டு தனக்கு சொந்தமான விளை நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டுள்ளார்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் பெரும்பாலும் விவசா யத்திற்கு முக்கியத்துவம் உள்ள பகுதியாக உள்ளது.

    மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் பவானி ஆறு செல்வதால் இப்பகுதியில் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன்படி வாழை, கத்தரிக்காய், முள்ளங்கி, சுரைக்காய், தக்காளி, வெங்காயம், புடலைங்காய், கொத்தவரங்காய், அவரை, வெண்டை உள்ளிட்ட பல்வேறு நாட்டு காய்கறிகள் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தற்போது வனவிலங்கு தொல்லையாலும், விவசாய இடுபொருட்களின் விலை உயர்வாலும் விவசாய தொழிலை பலர் விட்டு விட்டு மாற்று தொழிலை செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு தேவையான ஆட்கள் கிடைக்காமல் விவசாயம் பல இடங்களில் கேள்விக்குறியாக மாறி வருகிறது.

    இவ்வாறான சூழ்நிலையில் மேட்டுப்பாளையம் அருகே காரமடையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர் டிரோன் எந்திரம் மூலம் மருந்து தெளிக்கும் எந்திரத்தை பயன்படுத்தி வருகிறார்.

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஆசிரியர் காலனியை சேர்ந்த வாசுதேவன் மகன் தேவ்சந்த் (20). பொறியியல் பட்டதாரி. விவசாயத்தின் மீது கொண்டுள்ள ஆர்வத்தால் தான் செய்து வந்த பொறியியல் பணியை பாதியில் விட்டுவிட்டு தனக்கு சொந்தமான விளை நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டுள்ளார்.

    சிக்கரசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பாளப்பட்டி பகுதியில் இவருக்கு சொந்தமாக விளை நிலம் உள்ளது. அங்கு பல்வேறு பயிர்களை பயிரிட்டு பராமரித்து வருகிறார்.

    விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குறையாக இருந்ததால் நவீன முறையில் செயல்படுத்தப்பட்டு வந்த டிரோன் எந்திரம் மூலம் விளை நிலங்களுக்கு மருந்து தெளிக்கும் எந்திரத்தை பயன்படுத்தி வருகிறார். இவர் இவரது தோட்டத்தில் முதன்முறையாக இது போன்று மருந்து தெளித்து வருவதை பார்த்த மற்ற விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கும் இதனை பயன்படுத்தி தருமாறு இவரிடம் கேட்டுள்ளனர்.

    இதையடுத்து அவர் ஒரு ஏக்கருக்கு ரூ.700 வீதம் ஊதியம் தொகை பெற்றுக் கொண்டு விளைநிலங்களுக்கு மருந்து தெளித்து வருகிறார்.

    இதன் மூலம் பயிர்களுக்கு தெளிக்கப்படும் மருந்துகளின் நச்சுத்தன்மை குறைவாக இருக்கிறது. இது மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகளுடைய மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பொறியியல் பட்டதாரி தேவ் சந்த் கூறியதாவது:-

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை வட்டார பகுதியில் விவசாய பயிர்களுக்கு தேவையான பூச்சிக்கொல்லி மருந்து இலை வழி உரம் ட்ரோன் மூலம் தெளிக்கப்படுகிறது. ட்ரோன் எந்திரம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து உரம் ஆகியவை தெளிப்பதால் ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீர் போதுமானது. 50 சதவீதம் வரை உரம் மருந்து செலவில் சேமிப்பாகிறது. ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 நிமிடங்களுக்குள் மருந்து தெளிக்கலாம். ஆட்கள் கூலி சேமிப்பாகிறது . ஒரே சீரான தெளிப்பால் பயிர்கள் நன்றாக வளர்ந்து நல்ல மகசூல் கிடைக்கிறது. நவீன ட்ரோன் மூலம் மருந்துகள் தெளிக்க விவசாயிகள் என்னை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அச்சம் தவிர் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவ -மாணவிகளுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கிப் பேசினார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ரோட்டரி சங்கம் மற்றும் எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து சர்வதேச பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு அச்சம் தவிர் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் டாக்டர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். காரமடை ரோட்டரி சங்கத் தலைவர் மகேஷ், செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் சசிகலா வரவேற்றார்‌. நிகழ்ச்சியில் லெட்ஸ் தேங்க்ஸ் பவுண்டேஷன் விழிப்புணர்வு திட்ட ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அச்சம் தவிர் என்ற தலைப்பில் மாணவ -மாணவிகளுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கிப் பேசினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியைகள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாக அதிகாரி மற்றும் ரோட்டரி சங்க உதவி ஆளுநர் சிவசதீஷ்குமார் நன்றி கூறினார்.

    • 70 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்கள் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தான் கல்வி பயின்று வருகின்றனர்.
    • 30-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்று கல்வி பயில்கிறார்கள்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் இலுப்பநத்தம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் எஸ்.புங்கம்பாளையம் பகுதியில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றன.

    வெங்கட்ராமபுரம், அண்ணா நகர், அம்மன் புதூர், காரனூர், இலுப்பநத்தம், பழைய சாலை, இடுகம்பாளையம், பகத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள் சென்று கல்வி பயின்று வருகின்றனர். இலுப்பநத்தம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 6-வது வார்டுக்குட்பட்ட வெங்கட்ராமபுரம், அண்ணா நகர், பழைய சாலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 30-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்று கல்வி பயில்கிறார்கள்.

    இந்த கிராம பகுதியில் இருந்து கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்கள் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தான் கல்வி பயின்று வருகின்றனர். இப்பகுதி மாணவ, மாணவிகளின் வசதிக்காக பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள், ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு மனுவாக வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் இதுவரை இப்பள்ளி மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் மாணவர்கள் தினசரி 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலை உருவாகி உள்ளது. எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து கிராம பகுதிகளில் இருந்து எஸ்.புங்கம்பாளையம் அரசுப் பள்ளிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து 6-வது வார்டு உறுப்பினர் சத்தியமூர்த்தி கூறியதாவது:-

    எஸ்.புங்கம்பாளையம் பகுதியில் கடந்த 70 ஆண்டுகளாக பள்ளி செயல்பட்டு வருகிறது. எனது வார்டுக்குட்பட்ட வெங்கட்ராமபுரம், அண்ணா நகர், பழைய சாலை உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

    கடந்த 2002 -ம் ஆண்டு இப்பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்பு தொடங்கப்பட்டது.

    அதன் பின் 2012 -ம் ஆண்டு 11 மற்றும் 12-ம் வகுப்புகள் தொடங்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளில் மேல்நிலைப் பள்ளிகளுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இப்பள்ளியில் இப்பகுதி மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். ஆனால் பஸ் வசதி இல்லாததால் தினசரி 4 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர், போக்குவரத்து அலுவலகம், மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு சார்பில் இக்கிராமத்திற்கு பேருந்துகள் வழங்கப்படாமல் உள்ளது. எனவே காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வரும் வகையில் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிறுமுகை வழியாக தினசரி புளியம்பட்டி, அன்னூர் பகுதிகளுக்கு எஸ்.புங்கம்பாளையம் பகுதிக்கு 10 ஏ, 16, 24, 10சி, 10இ உள்ளிட்ட பஸ்கள் சென்று வருகின்றன. இதில் ஏதாவது ஒரு பஸ்சை காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் சென்று வரும் வகையில் மாற்றிவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள் தான் அதிகளவில் உள்ளனர். மழைக்காலங்களில் குழந்தைகள் மழையில் நனைந்தபடி 4 கிலோமீட்டர் சென்று வருவதால் அவர்களுக்கு நோய்கள் ஏற்பட்டு அவர்கள் விடுமுறை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகின்றன. எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் எங்கள் கிராமத்தின் வழியாக அரசு பஸ்களை இயக்கி மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • கர்நாடகாவை சேர்ந்தவர்கள்.
    • மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    கர்நாடக மாநிலம் ஒயிலாண்ட நல்லி பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா. இவரது மகன் அன்வர் பாஷா. இவர் சொந்தமாக மினி வேன் வைத்துள்ளார்.

    சம்பவத்தன்று இவரது மினிவேனில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 16 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். நீலகிரியில் பல்வேறு இடங்களைசுற்றி பார்த்த அவர்கள், நேற்று தங்களது ஊருக்கு புறப்பட்டனர்.

    வாகனத்தை அன்வர் பாஷா ஒட்டினார். மினிவேன் ஊட்டி சாலை 2-வது கொண்டை ஊசி வளைவில் வந்த போது பிரேக் பிடிக்காமல், சாலையில் இருந்த இடது பக்க சுவற்றில் மோதி மினிவேன் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த ஜெகதீஷ் படிகர்(30), மல்லன்ன கவுடா(29), பிரகாஷ்(29), சிவப்பா(41), நாகன்கவுடா(29) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகி ருஷ்ணன், சப்-இன்ஸ்பெ க்டர் முருகநாதன் மற்றும் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைச்சாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் படுகாயம் அடைந்த ஜெகதீஷ்படிகர்(30) மற்றும் மல்லன்ன கவுடா(29) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 3 பேர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.

    இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆண்டு தோறும் வன உயிரின வார விழா, அக்டோபர் முதல் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • சாலை மார்க்கத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையத்தில் குன்னூர் மலைப்பாதையில் கல்லார் பகுதியில் வனத்துறை மற்றும் வன உயிர் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை, குமரன் கலை அறிவியல் கல்லூரி ஆகியவை சார்பில் வன உயிரின வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆண்டு தோறும் வன உயிரின வார விழா, அக்டோபர் முதல் வாரம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இரு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருந்தது.

    தற்போது நீண்ட இடைவெளிக்குப்பின் பொதுமக்களுக்கு வனம், வன விலங்குகள் குறித்தும், இயற்கை காப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் ஆகியோர் இணைந்து மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

    வனங்களில் வாழும் அனைத்து விலங்குகள் மற்றும் உயிரினங்களும் பாதுகாக்கப்பட வேண்டும், காடுகளில் வறட்சி, உணவுகள் பற்றாக்குறை போன்றவற்றால் வன உயிரினங்கள் குறைந்து வரும் நிலையில் இது இயற்கையின் சமநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தும். எனவே காடுகள் மற்றும் வன உயிரினங்களை காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என மனித சங்கிலி நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

    கையில் பதாகைகளுடன் நீண்ட தொலைவிற்கு நின்று சாலை மார்க்கத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. இதில் மாவட்ட வன அலுவலர், வனச்சரக அலுவலர்கள் ஜோசப் பிராங்கிளின், செந்தில்குமார் மற்றும் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

    • தினமும் பல்வேறு பூஜைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றன.
    • தேர்த்திருவிழாவில் 1000த்திற்கும் ேமற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மேட்டுப்பாளையம் :

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் அருகே தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி மலையப்ப சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    அதனை தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றன. பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார். இதனை தொடர்ந்து கருட சேவையும் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியானது நேற்று காலை நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி திருத்தேரில் கோவில் நடையை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் 1000த்திற்கும் ேமற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்து, கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்கினர். மலையப்ப சுவாமி பக்தர்கள் புடைசூழ கோவிலை வலம் வந்தார்.

    இதில் கே.ஜி தொழில் நிறுவனங்களின் தலைவர் கே.ஜி.பாலகிருஷ்ணன், ஸ்ரீ கண்ணபிரான் நிறுவன தலைவர் ஸ்ரீஹரிபாலகிருஷ்ணா, கே.ஜி.டெனிம் நிறுவன தலைவர் ஸ்ரீராம்பாலகிருஷ்ணா, சீனிவாசா கார்மென்ட்க்ஸ் நிறுவன தலைவர் பிரனவ், மேட்டுப்பாளையம் ஏ.கே‌.செல்வராஜ் எம்.எல்.ஏ, பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 17 ஊராட்சிகளில் காந்திஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.
    • வாகனங்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    கோவை:

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளில் காந்திஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. இதையொட்டி மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோழி கழிவுகளை குடியிருப்பு, சாலையோரத்தில் கொட்டப்படும் வாகனங்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    தூய்மை பணியாளர்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகளை தரம்பிரித்து வாங்க வேண்டும். இதில் பிளாஸ்டிக் கழிவுகள் கிலோ ரூ.8-க்கு விலை கொடுத்து ஊராட்சி நிர்வாகம் வாங்கப்படும். அந்த தொகை தூய்மை பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும். வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள் மலட்டு தன்மையாக உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால் அதற்கு மாற்று வழி சொல்ல தெரியாமல் களத்திற்கு வரும் வேளாண்மை அதிகாரிகள் தவிக்கின்றனர்.

    ரேசன் கடைகளில் பணியாளர்கள் பொதுமக்களுக்கு தரமான பொருட்களை வழங்க வேண்டும். இதோடு பொதுமக்கள் யாரும் ரேசன் அரிசை விற்பனை செய்ய கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    இதேபோல் சிக்காரம்பாளையம் ஊராட்சியில் தலைவர் ஞானசேகரன், இலுப்பநத்தத்தில் ரங்கசாமி, பெள்ளாதியில் சிவக்குமார் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

    • அன்சூர் குளம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
    • குளத்தின் மூலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்களுக்கு நிலத்தடி நீர் வெகுவாக கிடைக்கிறது.

    மேட்டுப்பாளையம் 

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளியங்காடு ஊராட்சியில் அன்சூர் குளம் உள்ளது. இந்தக் குளம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு பில்லூர் அணை மற்றும் வெள்ளியங்காடு- மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து வரும் மழை நீர் வருகிறது. குளத்தின் மூலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்களுக்கு நிலத்தடி நீர் வெகுவாக கிடைக்கிறது.

    இதில் 50 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டுப்பாளையம் மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீன் குஞ்சுகளை விட்டு அதனை வளர்த்து விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர். இதன் மூலம் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அரசு சார்பில் இக்குளத்தை பராமரித்து இங்கே டீசல் படகு விடுவதாக தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு டீசல் படகு குளத்தில் விட்டால் இதிலுள்ள மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து பராமரித்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

    மேலும் டீசல் படகினால் மீன் குஞ்சுகள் இறக்கும் சூழ்நிலை உருவாகும். இதனால் இதனை நம்பியுள்ள 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக உரிய ஆய்வு நடத்தி குளத்தில் உள்ள மீன் குஞ்சுகள் இறக்காமல் டீசல் படகுகளை இக்குளத்தில் பயன்படுத்தாமல் துடுப்பு மூலம் பயன்படுத்தும் படகை உபயோகிக்க வேண்டும். மேலும் இதன் மூலம் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேட்டுப்பாளையம் மீனவர் சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனர் மீன் நடராஜ் கூறியதாவது:-

    இக்குளத்தில் 3 தலைமுறைகளுக்கு மேலாக மீனவர்கள் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து அதனை பிடித்து விற்பனை செய்து வருகிறோம் இக்குளத்தை சுற்றுலாத்தலமாக மாற்றுவது வரவேற்கத்தக்கது. ‌ ஆனால் இக்குளத்தை நம்பி 200-க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் உள்ளன. அவர்களின் வாழ்வாதாரம் தடைபடாமல் தொடர்ந்து குளத்தில் மீன்பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குளத்தில் டீசல் படகுக்கு மாற்றாக துடுப்புப் படகை பயன்படுத்த அரசு ஆலோசனை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • தூரிப்பாலம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
    • கூந்தல் பனை இப்போது அதிகளவில் விற்பனை நோக்கில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் கல்லார் மற்றும் தூரிப்பாலம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் வனத்தில் இருந்து காட்டு யானை, காட்டுப்பன்றி, மான், காட்டெருமை, சிறுத்தை, குரங்கு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்கு கள் இங்குள்ள விளைநிலங்க ளுக்குள் நுழைந்து பொதும க்களையும், விவசாயி களையும் அவ்வப்போது அச்சுறுத்தி வருகின்றன.

    கல்லாறு பகுதியில் வாழை, பாக்கு, பலாப்பழங்கள் அதிக அளவில் உள்ளதால் காட்டு யானைகள் இதனை ருசிக்க தொடர்ந்து வனத்தில் இருந்து வெளியேறி வருகின்றன.

    இதுமட்டுமல்லாமல் திருமண மண்டபங்களில் அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் கூந்தல் பனை இப்போது அதிகளவில் விற்பனை நோக்கில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனை யானைகள் விரும்பி சாப்பிடுவதால் யானைகள் இதே பகுதியில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக நடமாடி வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம் கல்லாறு பகுதியில் உள்ள தோட்டத்தில் நின்றிருந்த 100 தென்னை மரங்கள், 60 பாக்கு மரங்கள் மற்றும் ஏராளமான கூந்தல் பனை மரங்களை சேதப்படுத்தி அட்டகா–சத்தில் ஈடுபட்டுள்ளன.

    இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துள்ளனர்.

    • வனவியல் மற்றும் பட்டுப்புழுவியல் மாணவர்களுக்கு தொழில்முனைவு கருத்தரங்கம் நடைபெற்றது.
    • வணிக மேம்பாட்டு மையத்தை இதர சேவைகள் பெறுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் வேளாண்காடுகள் வணிக மேம்பாட்டு மையம் சார்பில் வனவியல் மற்றும் பட்டுப்புழுவியல் மாணவர்களுக்கு தொழில்முனைவு கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதனை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் முனைவர் சோமசுந்தரம் தலைமையேற்று துவக்கி வைத்தார்.

    சென்னை சார்ந்த தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை கூடுதல் இயக்குனர் முத்துராமன் நிகழ்த்தினார்.

    விழாவில் அங்கமாக ஈரோடு மாவட்ட நிர்வாகத்துடன் மேட்டுப்பாளையம் வேளாண் காடுகள் வணிக மேம்பாட்டு மையம் திறன் மேம்பாடு, தொழில் மேம்பாடு மற்றும் வணிக மேம்பாட்டு மையத்தை இதர சேவைகள் பெறுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அதிகாரி தாமோதரன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாற்றம் செய்து கொண்டார். இதில் வணிக மேம்பாட்டு மையத்தின் உறுப்பினரான பிருந்தாபாரதியின் புத்தாக்க படைப்பான நாற்றங்காலுக்கு தேவையான கரிம வளர்ச்சி ஊக்கி சந்தை படுத்தப்பட்டது. மேலும் மாணவர்களான கபினேஷ் மற்றும் கவுசல்யாவின் புத்தாக்க தொழில் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

    மேலும் புத்தாக்க பற்று சீட்டு திட்டத்தின் வாயிலாக ஆதார நிதி காயத்ரி, சங்கீதா, அபிகுமார், பிருந்தா பாரதி ஆகியோருக்கு காசோலைகளாக வழங்கப்பட்டது. மேலும் பாரத ஸ்டேட் வங்கி வாயிலாக வணிக மேம்பாட்டு மையத்தின் உறுப்பினரான தட்சணாமூர்த்திக்கு வங்கி மேலாளர் வனிதா நடராஜன் காசோலை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் பார்த்திபன் வேளாண்காடுகள் வணிக மேம்பாட்டு மையத்தின் செயல்பாடுகளையும் வளர்ச்சியும் பற்றி விவரித்தார். மேலும் மாணவர்களுக்கு வணிக மேம்பாட்டு மையத்தின் சார்பாக கிடைக்கப்பெரும் சேவைகளையும் திறன் மேம்பாட்டு பயிற்சிளையும் குறித்து பேசினார். முன்னதாக முனைவர் ஜூடு சுதாகர் வனவியல் துணைப் பேராசிரியர் வரவேற்றார் . வேளாண் காடுகள் வணிக மேம்பாட்டு மையத்தின் தொழில் மேலாளர் சி. காயத்ரி சதீஷ்குமார் நன்றி கூறினார்.

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
    • அங்கன்வாடி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இலுப்பநத்தம் ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன.

    இந்த ஊராட்சியில் 7-வது வார்டுக்கு உட்பட்ட இலுப்ப நத்தம் கிராமத்தில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி இங்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளியில் இலுப்பநத்தம், திம்மனூர், வடக்கு தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 14 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இவர்களுக்கு ஒரு தலைமை ஆசிரியரும், உதவி ஆசிரியரும் கல்வி கற்று கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக சமையல் கூடம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்துள்ளது.

    இதனிடையே கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த சமையல் கூடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் இதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இந்த சமையல் கூடம் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும், இதுவரை புதிய சத்துணவு கூடம் அமைக்க அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு சமைத்துக் கொடுக்க இடம் இல்லாததால் வகுப்பறையின் திண்ணையில் வைத்து சமையல் செய்து வருகின்றனர்.

    சமையலுக்கு உண்டான மளிகை பொருட்கள் கூட வைக்க இடம் இல்லாமல் அருகில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப் பள்ளிக்கு தேவையான சமையல் கூடத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர நவராத்திரி பிரமோற்சவ விழா கொடி ஏற்றம் நடைபெற்றது.
    • பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர நவராத்திரி பிரமோற்சவ விழா கொடி ஏற்றம் நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று மாலை 6.15 மணிக்கு அங்குரார்ப்பணம் நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை மாலை 5. 30 மணிக்கு கொடி ஏற்றமும், இரவு 8 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தொடர்ந்து புதன்கிழமை சின்ன சேஷ வாகனம், ஸ்நபன திருமஞ்சனம், அன்னபக்‌ஷி வாகனம், 29-ந் தேதி சிம்ம வாகனம், முத்துப்பந்தல் வாகனம், 30-ந் தேதி கற்ப விருட்ச வாகனம், சர்வ பூபாள வாகனம்,

    அக்டோபர் 1-ந் தேதி ஸ்ரீ வாரிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை சமர்ப்பித்து, மலையப்ப சுவாமி மோகினி திருக்கோலத்தில் கருட சேவை நடக்கும்.

    தொடர்ந்து 2-ந் தேதி அனுமந்த வாகனமும், வஸந்தோற்சவம், தங்க ரதம், கஜ வாகனம், 4-ந் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.  

    ×