search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரலாறு"

    • நன்றி காணிக்கையாக மாதாவிற்க்கு சிற்றாலயம் ஒன்று எழுப்பினார்கள்.
    • செப்டம்பர் 8-ந்தேதி கன்னி மரியின் பிறந்தநாள்.

    உலகளவில் புகழ்பெற்ற அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல எல்லா மதங்களையும் சார்ந்த லட்சகணக்கான மக்கள் திரண்டு வந்து அன்னையின் அன்பை பெற்று செல்கிறார்கள்.

    ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன்பு நாகபட்டினத்தில் இருந்த ஒரு செல்வந்தருக்கு வேளாங்கண்ணியில் வாழ்ந்த ஒரு இடையர் குல சிறுவன் ஒருவன், ஒவ்வொரு நாளும் பால் கொண்டு போய் கொடுப்பது வழக்கம். ஒரு நாள் அதேபோல் பால் கொண்டு போகும்போது, வழியில் உடல் சோர்வுற்றதால் அந்த சிறுவன் சற்று ஓய்வெடுக்க ஒரு ஆல மரத்தின் நிழலில் குளத்துக்கு அருகே அமர்ந்தான்.

    அப்போது சூரியனை விட அதிக ஒளி ஒன்று அவன் முகத்தில் பட்டது. உடனே கண் விழித்தான் அந்த சிறுவன். விண்ணக அழகு நிறைந்த அன்னை தெய்வீக குழந்தையை கையில் ஏந்திய காட்சியை கண்டான். அந்த அன்னை புன்னகை தவழ தனது குழந்தைக்கு கொஞ்சம் பால் தருமாறு அந்த சிறுவனிடம் கேட்டார். சிறுவனும் பால் கொடுத்தான். அந்த குழந்தையும் பருகியது.

    சில வினாடிகளில் அந்த தேவ அன்னையும், குழந்தையும் அந்த இடத்தில் இருந்து மறைந்தனர். செல்வந்தரின் வீட்டுக்கு நேரம் தவறி வந்த சிறுவனிடம் ஏன் பாலின் அளவு குறைந்திருக்கிறது என்று விசாரித்தார் முதலாளி. சிறுதுநேரத்தில் சிறுவன் சுமந்து வந்த பால் குடம் நிறைந்து வழிந்தோடியது.

    இதை பார்த்த செல்வந்தர் என்ன இது அதிசயம் என்று மலைத்துபோய் நிற்க அந்த சிறுவன் நடந்ததை கூற ஆரம்பித்தான். அச்சிறுவனும் தான் வரும் வழியில் ஒருதாய் கையில் குழந்தையுடன் தோன்றி தன் குழந்தைக்கு பால் கொடுக்குமாறு வேண்டினாள். நானும் அக்குழந்தைக்கு பால் கொடுத்தேன் என்று சொல்லி முடித்தும் அவன் கையில் உள்ள பால் பாத்திரம் நிரம்பி வழிவது நிற்கவில்லை.

    சிறுவன் கூறிய இடத்திற்கு விரைந்து சென்று அன்னை காட்சி தந்த இடத்தை கண்டார் முதலாளி. அந்த இடத்தில் இருந்த ஆலமரமும், அந்த குளமும் சற்று வித்தியாசமாக அவருக்கு தெரிந்தது. உடனே அவர் அப்புனித தலத்தில் தாழ் பணிந்து வணங்கினார். சிறிது காலத்திற்கு பிறகு தெய்வீக தாய் காட்சி அளித்த அத்திருவிடத்தில் சிற்றாலயம் எழுப்பப்பட்டது. அது தான் இன்று நம் முன் சாட்சியாய் நிமிர்ந்து நிற்கும் பழைய வேளாங்கண்ணி-மாதா குளம்.

    மோர் கார சிறுவனுக்கு காட்சி கொடுத்தது

    சில ஆண்டுகளுக்கு பிறகு வேளாங்கண்ணி மாதாவின் இரண்டாவது காட்சி வேளாங்கண்ணி சிற்றுரிலேயே அமைந்துள்ள "நடுத்திட்டு" என்ற இடத்தில் நடைபெற்றது. அங்கே கால் ஊனமுற்ற ஒரு சிறுவன், மோர் வியாபாரம் செய்து வந்தான். அப்போது ஒரு நாள் வேளாங்கண்ணி மாதா தனது குழந்தை இயேசுவுடன் காட்சி தந்து தனது குழந்தைக்கு சிறிதளவு மோர் தருமாறு கேட்டாள். சிறுவனும் குழந்தைக்கு மோர் வழங்கினான்.

    மகனே உடனே நாகபட்டினம் சென்று அங்கே வாழும் கிறிஸ்தவர் ஒருவரிடம் நீ கண்ட இந்த காட்சியினை கூறி இந்த இடத்தில் மக்கள் ஒன்று சேர்ந்து கடவுளை வழிபட ஒரு ஆலயம் கட்ட சொல்வாயாக "என்றார்.

    அதற்கு அந்த சிறுவன் நானோ கால் ஊனமுற்றவன். என்னால் எப்படி அம்மா போக முடியும் என்று கூற, "மகனே எழுந்து நட' என்று அந்த தேவத்தாயின் மறுமொழி கூற சிறுவன் எழுந்து நிற்க ஆரம்பித்தான். தன்னால் நிற்க முடிகிறது, நடக்க முடிகிறது என்று உணர்ந்த சிறுவனுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த சிறுவனின் ஓட்டம் நாகபட்டினத்தில் வாழ்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர் வீடு வரை தொடர்ந்தது.

    அங்கு வீட்டிற்க்கு சென்று நடந்ததை விளக்கினான். அவனின் வார்த்தைகளை கேட்டு ஆச்சரியம் அடைந்த கிறிஸ்தவருக்கு நேற்று இரவு வேளாங்கன்னி மாதா ஒரு ஆலயம் கட்ட சொல்லிய கனவும் நினைவுக்கு வந்தது. அந்த சிறுவனோடு அந்த இடத்திற்கு சென்று ஆலயம் கட்ட ஆரம்பித்தார்கள். அதுவே இன்று நாம் காணும் வேளாங்கண்ணி மாதா வீற்றிருக்கும் பேராலயம்.

    கி.பி 17-ம் நூற்றாண்டிலே வேளாங்கண்ணி மாதாவின் மூன்றாவது புதுமை நிகழ்ந்தது. அப்போது சீனாவில் உள்ள மாக்கொவில் இருந்து போர்ச்சுக்கீசிய வியாபார பாய்மர கப்பல் ஒன்று கொழும்பு நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தது. வழியில் கடுமையான புயலால் அந்த கப்பல் தாக்கப்பட்டது.

    அந்த கப்பலில் இருந்த மாலுமிகள் என்ன செய்வது என்றே தெரியாமல் கடலில் மூழ்கப்போகிறோமே என்று பயந்து அஞ்சி நடுங்கினார்கள். புயலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க கப்பல் மூழ்கும் நிலை நெருங்கியது. அந்த நிலையில் மாலுமிகள் அனைவரும் கன்னி மரியாவிடம் கரம் குவித்து கண்ணீரோடு ஜெபித்தார்கள்.

    அம்மா மரியே எங்களை இந்த கடும் புயலில் இருந்து காப்பாற்றும். நாங்கள் நலமுடன் கரை சேரும் இடத்தில் கன்னி மரியே உனக்கொரு ஆலயம் எழுப்புகிறோம் என நினைத்துக் கொண்டார்கள். சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக புயலின் ஆக்ரோசம் குறையத் தொடங்கியது. அவர்கள் புயலில் சிக்கிய கப்பலும் ஓரிடத்தில் கரை சேர்ந்தது.

    அன்றைய தேதி செப்டம்பர் 8. அன்று கன்னி மரியின் பிறந்தநாள். கப்பல் கரை சேர்ந்த இடம் வேளாங்கண்ணி கடற்கரை. மாலுமிகள் தாங்கள் நலமுடன் வந்து சேர்ந்ததற்காக இறைவனுக்கும், கன்னி மரியாவிற்க்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி செலுத்தி, நன்றி காணிக்கையாக மாதாவிற்க்கு சிற்றாலயம் ஒன்று எழுப்பினார்கள். போர்ச்சுக்கீசிய மாலுமிகள் எப்போதெல்லாம் வேளாங்கண்ணி கடற்கரை வழியாக செல்கிறார்களோ அப்போதெல்லாம் மீண்டும் மீண்டும் தாங்கள் கட்டிய சிற்றாலயம் வந்து வணங்கி செல்வது வழக்கம்.

    • ராஜகோபுரத்துக்கு முன்னதாக தல தீர்த்தமான சூலகங்கை உள்ளது.
    • தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளுள் ஒன்று காமன் பண்டிகை.

    தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளுள் ஒன்று காமன் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் தொடங்கி வளர்பிறையில் கொண்டாடப்படும் இப்பண்டிகை சுமார் 15 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும். காமனை சிவன் எரிப்பதும், பின்னர் ரதிதேவியின் வேண்டுகோளுக்கிணங்கி அவனை உயிர்ப்பிப்பதுமான புராண வரலாறே காமன் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. காமனை எரித்ததும், சிவனின் நெற்றிக்கண் நெருப்பை வாயு பகவான் சுமந்து சென்று, சரவணப்பொய்கையில் விட்டு முருகப்பெருமான் பிறப்புக்கு வித்திட்டதுமான புராண வரலாறு நிகழ்ந்த திருத்தலமே, திருக்குறுக்கை திருத்தலம்.

    தல வரலாறு

    தீர்க்கவாகு என்ற முனிவா், சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கு கங்கை நீரை ஆகாயத்தின் வழியே பெற்று அபிஷேகம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒவ்வொரு ஆலயத்தின் முன்னே நின்று நீண்ட தன் இரு கரங்களை உயரே தூக்குவார். குடத்தில் கங்கை நீர் வரும். அதைக் கொண்டு அபிஷேகம் செய்வார்.

    அதன் அடிப்படையில் இவ்வாலயத்திற்கு வந்த அவர், ஆலயத்தின் முன்புறமுள்ள திரிசூல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டார். சூலதீர்த்தம் கங்கையை விட புனிதமானது என்பதை அறியாது வழக்கம்போல, கங்கைநீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய முடிவுசெய்து தன் இரு கரங்களையும் ஆகாயத்தை நோக்கி தூக்கினார்.

    கங்கை நீர் வருவதற்கு பதிலாக அவரது நீண்ட கைகள் குறுகிப்போயின. இதை எதிர்பாராத முனிவர் இறைவனை சரணடைந்தார். முதலில் விநாயகரை வழிபட விநாயகரும் தன் கையை குறுக்கிக் கொண்டு காட்சியருளி அவர் கவலையைப் போக்கினார். இதனால் இத்தலத்தின் பெயர் 'குறுங்கைத்தலம்' என்றானது. குறுங்கை விநாயகர், ஆலய பிரகாரத்தில் தனிச் சன்னிதியில் ஆவுடையார் மீது இருப்பதும், அவருக்கு அருகில் குறுங்கை முனிவரின் உருவம் இருப்பதும் இந்த ஆலயத்தின் சிறப்பாகும்.

    புராண வரலாறு

    பிரம்மனின் பேத்தியும், தட்சனின் மகளுமான தாட்சாயிணியை சிவபெருமான் மணந்தார். அது பிடிக்காத தட்சன், சிவபெருமானை அழைக்காமல் யாகம் நடத்தினான். இதனால் கோபமடைந்த தாட்சாயிணி, தட்சனின் வேள்வித்தீயில் விழுந்து உயிர் துறந்ததுடன், வேள்விக்கான பலன் கிடைக்காதபடி செய்தாள். தாட்சாயிணியின் முடிவு கேட்டு கோபம் கொண்டு சிவபெருமான், வீரபத்திரரை அனுப்பி தட்சனின் வேள்விச் சாலையையும், தட்சனையும் அழித்தார். பின்னர் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார் ஈசன்.

    இந்த நிலையில் சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்ற சூரபதுமன் மற்றும் தாரகாசுரன் ஆகியோர், தேவர்களை துன்புறுத்தி வந்தனர். அசுரா்களால் பாதிக்கப்பட்ட தேவர்கள், அவர்களை அழிக்க ஒரு குமாரனைத் தோன்றச் செய்யுமாறு சிவபெருமானிடம் வேண்டுகோள் வைப்பதென முடிவு செய்தனர். ஆனால் அவர் யோக நிலையில் இருந்ததால், பல முயற்சிகளை செய்தும், தவத்தை கலைக்க இயலவில்லை. இறுதியாக காமக் கடவுளான மன்மதன் மூலம், சிவன் மீது அம்பு விடச் செய்து அவரது தவத்தை கலைத்தனர்.

    இதனால் கோபமுற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணைத் திறந்து காமனைப் பார்க்க அவன் எரிந்து சாம்பலானான். இதுவே 'காம தகனம்' எனப்படுகிறது. மன்மதனின் மனைவியான ரதிதேவி, தன் கணவனை உயிர்ப்பித்து தரும்படி சிவபெருமானிடம் வேண்டினாள். சிவபெருமான் அவளிடம், "நான் பூலோகத்தில் பார்வதியை மணம் புரியும்போது, மன்மதனுக்கு சாப விமோசனம் கிடைக்கும். அதுவரை அவன் உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான்" என்று அருளினார்.

    காமன் தகனத்தின் போது சிவனின் கண்களிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியை வாயு பகவான் சுமந்துச் சென்று சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளில் விழச்செய்தார். இது ஆறு குழந்தைகளாக உருப்பெற, கார்த்திகைப் பெண்கள் அறுவர், அந்தக் குழந்தைகளை வளர்த்தனர். பார்வதிதேவி ஆறு குழந்தைகளையும் தனது இரு கரத்தால் ஒன்றாக அணைக்க, அந்த ஆறுபேரும் ஒருவராக மாறினர். இப்படி காமனை தகனம் செய்து ஆறுமுகனை உருவாக்கி, அசுரனை அழிக்க சிவன் அருள் புரிந்த திருத்தலமே திருக்குறுக்கை திருத்தலம்.

    ஆலய அமைப்பு

    ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் மேற்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ளது. ராஜகோபுரத்துக்கு முன்னதாக தல தீர்த்தமான சூலகங்கை உள்ளது. வாசலில் உள்புறமாகத் துவார கணபதியும், சுப்பிரமணியரும் இருக்கின்றனர். வெளிச்சுற்றில் தோட்டம் மட்டுமே உள்ளது. சன்னிதிகள் எதுவும் கிடையாது. இவ்வாலயத்தில் கொடிமரம் இல்லை. நந்தி, பலிபீடம் மட்டும் உள்ளது. பஞ்சமூர்த்தி மண்டபத்தின் இடதுபக்கம் உள்ள சன்னிதியில், ஞானாம்பிகை அம்மன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார். அம்மன் சன்னிதிக்கு எதிரில், நந்தி, பலிபீடம், இருபுறமும் துவாரபாலகியர் உள்ளனர். அம்பாள் சன்னிதியின் வலதுபுறம் சுக்ர வார அம்மனைக் காணலாம்.

    உள் கோபுரம் தாண்டி உள்ளே செல்ல நடராஜர் மண்டபம் உள்ளது. இதன் வடக்குப்புறத்தில் முருகப்பெருமான், கஜலட்சுமி சன்னிதிகளும், தெற்கில் சோஹரேசுவரர், சோமாஸ்கந்தர், நிருதிகணபதி சன்னிதிகளும் உள்ளன. அடுத்துள்ள சம்ஹார மண்டபத்தில் சிவபெருமான், யோகமூர்த்தியாக வீற்றிருக்கிறார். சிவபெருமானைச் சுற்றி சனகாதி முனிவர்கள் உள்ளனர். மகாமண்டபத்தில் பலிபீடமும் நந்தியம் பெருமானும் இடம்பெற்றிருக்க, கருவறையில் மூலவர் வீரட்டேசுவரர் சதுரமான ஆவுடையார் மீது லிங்கத் திருமேனியுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். லிங்கத்தை உற்றுப் பார்த்தால் சிவபெருமான் மீது மன்மதன் எய்த தாமரை மலர் பீடத்தின் முன்புறம் நடுவில் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். மூலவர் வீரட்டேசுவரரை வணங்குபவர்களுக்கு துயரம் நீங்கி மன அமைதி கிடைக்கும். சுவாமி சன்னிதிக்கு நேர் எதிரில் ரதிமன்மதன் சிற்பங்கள் இருக்கின்றன.

    திருச்சுற்றில் கிணறு, தலவிருட்சமான கடுக்காய் மரம், செவிசாய்த்த நந்தி, நவக்கிரகங்கள், சூரியர், பைரவர், மடப்பள்ளி குறுங்கை விநாயகர் சன்னிதி, அதற்கடுத்து ஞானசம்பந்தர், சேரமான், சந்திரசேகரர், பிரதோஷ நாயனார் ஆகியோர் உள்ளனர். கருவறை கோட்டத்தில் துர்க்கை, பிரம்மா, பைரவர், அண்ணாமலையார், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, மகாகணபதி வீற்றிருக்கின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு ௮ மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். அமைவிடம்

    இவ்வாலயம் அமைந்துள்ள திருக்குறுக்கை செல்வதற்கு மயிலாடுதுறையிலிருந்து நேரடி பேருந்து மற்றும் ஆட்டோ வசதி இருக்கிறது. மணல்மேடு மற்றும் குத்தாலத்தில் இருந்தும் ஆட்டோ வசதி உள்ளது. அருகாமையில் உள்ள ரெயில் நிலையம் மயிலாடுதுறை.

    • நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை.
    • 10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன.

    300 டன் எடையுடன் அசைந்தாடி வரும் ஆழித்தேர்

    'திருவாரூர்த் தேரழகு' என்றும் 'திருவாரூர்த் தேரசைவது போல் அசைகிறான்' என்ற பழமொழியும் நாட்டு மக்களிடம் திருவாரூர் தேர்ப்பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது என்பதை அறியலாம்.

    'ஆழித்தேர் வித்தகனே நான் கண்டது ஆரூரே' என்று திருநாவுக்கரசர் சொல்கிறார்.

    அவர் காலம் 7 ஆம் நூற்றாண்டு.

    இதன்மூலம் 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தேர்த்திருவிழா நடந்து வருவதை அறியலாம்.

    மற்ற ஊர்களில் உள்ள தேர்கள் அரைத்தேர், முக்கால் தேர்தான். திருவாரூர் தேரே முழுத் தேராகும்.

    தமிழகத் தேர்களில் திருவாரூர் தேரே பெரியதாகும்.

    இதனால் இதனை 'ஆழித்தேர்' என்று அழைக்கின்றனர்.

    'ஆழி' என்பது சக்கரமாகும்.

    மனுநீதிசோழன் தன் மகன் கன்றைக் கொன்றதால், மகனையே தன் தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதியைக் காத்ததால் இத்தேர் திருவிழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    1748இல் தேர்த் திருவிழா நடைபெற்றதற்கான குறிப்பு தஞ்சை அரண்மனை சரஸ்வதி மகால் நூலக மேயடி ஆவணம் கூறுகிறது.

    1765 ஆம் ஆண்டு தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா, திருவாரூர் தேர் விழாவுக்கு வருகை தந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

    1926 ஆம் ஆண்டு தேரோட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் திருவாரூர் தேர் முழுவதும் எரிந்தது. 2 நாட்கள் எரிந்ததாக கூறுவர்.

    பின்னர் 1928 ஆம் ஆண்டு புதுத்தேர் உருவாக ஆரம்பித்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 3ந் தேதி மீண்டும் ஓடியது.

    இது இன்று நாம் காணும் தேராகும். பின்னர் 1948 ஆம் ஆண்டோடு தேரோட்டம் நின்றுவிட்டது.

    1970 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி மற்றும் வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார் போன்றோரின் முன் முயற்சியால் மீண்டும் ஓடத் தொடங்கியது.

    அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடியாகும்.

    விமானம் வரை தேர்ச்சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி, விமானம் 12 அடி. தேர்க்கலசம் 6 அடி என அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடியாகும்.

    இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள் உள்பட அலங்கரிக்கப்படாத மரத்தேரின் எடை சுமார் 220 டன்களாகும்.

    இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகளும், 50 டன் எடையுள்ள மூங்கில்களும், சுமார் 10 டன் எடையுள்ள சவுக்கு மரங்களும் பயன்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன.

    திருச்சி பாரத மிகு மின் நிறுவனத்தார் இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள், மற்றும் ஹைட்ராலிக் பிரேக் போன்ற சாதனங்களைப் பொருத்தினர்.

    10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இரும்புக் கயிறு, ஹைட்ராலிக் பிரேக் போன்றவற்றின் எடையைக் கூட்டினால் தேரின் எடை சுமார் 300 டன்களாகும்.

    நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை.

    வடம் இழுக்கப் பயன்படும் கயிற்றின் சுற்றளவு 21 அங்குலமாகும்.

    இந்த மாற்றங்களால் சுமார் 10 ஆயிரம் பேர் சேர்ந்து இழுக்க வேண்டிய இத்தேரை மூவாயிரம் பேர் சேர்ந்து இழுத்தாலே நகர்ந்து விடுகிறது.

    • ‘திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்’ என்று சுந்தரர் தேவாரம் பாடுகிறது.
    • தஞ்சையை ஆண்ட மன்னன் சகாஜி திருவாரூர் தியாகராஜர் மீது தமிழில் கீர்த்தனைகள் பாடியுள்ளார்.

    64 சக்தி பீடங்களில் திருவாரூர் முக்கியமான ஊர்

    இக்கோவிலில் ஞானசக்தியாகவும் (கமலாம்பிகை), கிரியா சக்தியாகவும் (நீலோத்பலாம்பாள்), இச்சாசக்தியாகவும் (கொண்டி) வடிவு கொண்டு அருள் புரிகிறாள்.

    இக்கோவிலில் உள்ள சித்தீஸ்வரம், மேதா தட்சிணாமூர்த்தி சன்னதியில் தருமபுர ஆதீன நிறுவனர் உபதேசம் பெற்றதாக கருதப்படுகிறது.

    17 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மன்னன் சகாஜி திருவாரூர் தியாகராஜர் மீது தமிழில் பல நூறு கீர்த்தனைகள் பாடியுள்ளார்.

    இவரும் இவருக்குப் பின்னர் முதல் சரபோஜியும் ஆண்டபோது திருவாரூரில் மன்னரின் பிரதிநிதியாக சாமந்தனார் ஒருவர் பணிபுரிந்தார்.

    அவருடைய மந்திரியாய் பணிபுரிந்தவர் சிங்காதனம்.

    இவர் சிறந்த ஓவியர். இவர் வரைந்த ஓவியங்களில் கோவிலின் மண்டபத்தில் இன்றும் உள்ளது.

    அதன் வாயிலாக 17 ஆம் நூற்றாண்டில் ஆரூர் திருக்கோவில் எப்படித் திகழ்ந்துள்ளது என்றும் ஆரூர் மக்களின் பண்பாடு, அவர்களின் இயல், இசை, கூத்துக்கள் பற்றி விளக்கமாக நாம் காண முடிகிறது.

    'திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்' என்று சுந்தரர் தேவாரம் பாடுகிறது. இதைவிட இவ்வூர்ச் சிறப்பு பற்றி வேறு சொல்ல வேண்டுமா?

    • மனுநீதிச் சோழன் கதை, அழகிய கல் சித்திரமாகக் காணப்படுகிறது.
    • இவ்வாலயம் கோவில்களின் கூடாரமாக விளங்குகிறது.

    திருவாரூர் கோவிலின் சிறப்புகள்

    இவ்வாலயம் கோவில்களின் கூடாரமாக விளங்குகிறது.

    9 ராஜகோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மண்டபங்கள், 15 தீர்த்தக் கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 100-க்கும் மேற்பட்ட சன்னதிகள் ஆகியவற்றுடன் இத்திருக்கோவில் பிரம்மாண்டமாகப் பரந்து விரிந்து சிறப்பாக அமைந்துள்ளது.

    கண்டீசர் இருக்குமிடத்தில் எமன் இருப்பதும் நின்ற நிலையில் நந்தி அமைந்திருப்பதும் இக்கோவிலின் பிற சிறப்புகளாகும்.

    இக்கோவிலிலுள்ள தியாகராசருடைய 'அசபா நடனம்' இவ்வூர்த் திருவிழாக்களில் சிறப்பாக நடைபெறுகிறது.

    மனுநீதிச் சோழன் கதை, அழகிய கல் சித்திரமாகக் கீழைக் கோபுர வாயிலருகே காணப்படுகிறது.

    சுந்தரரின் மனைவியரான பரவையார் பிறந்த ஊர் இதுவே.

    பரவை நாச்சியாருக்கென தியாகராசர் கோவில் தெற்குக் கோபுரத்தின் தென்புறத்தில் தனி ஆலயம் உள்ளது.

    தண்டபாணிக் கோவில், இராஜதுர்கை கோவில், மாணிக்க நாச்சியார் கோவில், திருவாரூர்ப் பரவையுண் மண்டலி முதலியன இவ்வூரில் காணத்தக்கவை.

    • 330 தேவாரப்பாடல்களும், திருவாசகப் பாடல்களும் உள்ளன.
    • 63 நாயன்மார்களில் இருபத்து மூவருக்குத் தொடர்புடைய தலமாகும்.

    திருவாரூர் கோவில்-புலவர்களால் பாடப்பெற்ற தலம்

    திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்றது திருவாரூர்.

    330 தேவாரப்பாடல்களும், திருவாசகப் பாடல்களும் உள்ளன.

    இது தவிர திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், பன்னிரு திருமுறைகளிலும் போற்றப்பட்டுள்ளது.

    அருணகிரிநாதர், தெலுங்கிசை மும்மூர்த்திகள், கயிலை ஞானப்பிரகாசர், குருஞானசம்பந்தர், இரட்டைப்புலவர்கள், அந்தகக்கண் வீரராகவ முதலியார்,

    மராட்டிய மன்னர் சகாஜி, வள்ளலார் முதலியோராலும், தமிழ், தெலுங்கு, மராட்டி, சமஸ்கிருத இலக்கியங்களிலும் இவ்வூரைப்பற்றி பாடப்பட்டுள்ளன.

    63 நாயன்மார்களில் இருபத்து மூவருக்குத் தொடர்புடைய தலமாகும்.

    இக்கோவிலிலுள்ள ஆயிரங்கால் மண்டபம், கல்தூண்களை மட்டுமே உடையது. விழாக்களின்போது அவற்றின் மீது பந்தல் அமைத்துக் கொள்வர்.

    இம்மண்டபத்தை சேக்கிழார் பாடியுள்ளார்.

    இக்கோவிலிலுள்ள தேவாசிரிய மண்டபத்தில்தான் சுந்தரருடைய திருத்தொண்டத் தொகையை இயற்றப்பட்டதாக கூறுவர்

    • ராஜகோபுரம் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    • சோழ மன்னர் நிலம் அளித்தனர் என்பதும் இங்குள்ள கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது.

    தியாகராஜர் கோவில்-ஆலய திருப்பணிகள்

    முதலாம் ஆதித்தன் (கி.பி. 871-907) காலக் கல்வெட்டு முதல் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மராத்திய மன்னர் சரபோஜி காலம் வரையிலான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

    முற்கால சோழர்கள் ஆட்சியில் இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்தே வலிவு பெற்றிருக்கிறது.

    அருட்திரு தியாகராஜசாமி கருவறை விமானத்துக்கு தங்கத்தகடு போர்த்திய முதலாம் இராஜேந்திரன் குடமுழுக்கும் செய்வித்ததாக இக்கோவிலின் கல்வெட்டு கூறுகிறது.

    இக்கோவிலின் ராஜகோபுரம் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டதென்று திருபுவனம் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

    இரண்டாம் இராஜாதிராஜன் பெரிய கோபுரத்தையும் சபாபதி மண்டபத்தையும் கட்டினான்.

    இரண்டாம் இராஜேந்திரன் வீதிவிடங்கர் எழுந்தருளியுள்ள கர்ப்ப கிரகத்தையும், வன்மீகநாதர் கருவறையையும் பொன் வேய்ந்தான் என்பதும்,

    திருமுறை ஆசிரியர்களின் திருநாட்களைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பதும்,

    திருவிளக்குப் பணிக்காகவும் பூசை முதலியவற்றுக்காகவும் சோழ மன்னர் நிலம் அளித்தனர் என்பதும் இங்குள்ள கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது.

    • திருவாரூரையும் தியாகராசர் கோவிலும் பிரித்து வரலாறே எழுத முடியாது.
    • சோழ அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து ஊர்களுள் இதுவும் ஒன்று.

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-மூலாதாரத்தலம்

    பண்டைய தமிழ்நாட்டின் பகுதியாகிய சோழ மண்டலத்தின் ஒரு பகுதியே திருவாரூர் வட்டமாகும்.

    கரிகாலன் கி.பி. 50 முதல் 95 வரை ஆண்டதாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

    கரிகாலனுக்கும் முற்பட்ட புராண காலச் சோழர்களான முசுகுந்தன், புறாவுக்காக தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி, கன்றுக்காக மகனைக் கொன்ற மனுநீதிகண்ட சோழன் மூவரும் வாழ்ந்த இடமாக கூறப்படும் இடம் திருவாரூர் ஆகும்.

    திருவாரூரையும் தியாகராசர் கோவிலும் பிரித்து வரலாறே எழுத முடியாது.

    காவிரி ஆற்றின் வளமான வண்டல்பகுதியை உள்ளடக்கியது திருவாரூர் வட்டம்.

    சோழ அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து ஊர்களுள் இதுவும் ஒன்று. (மற்ற ஊர்கள்- காவிரிப்பூம்பட்டினம், உறையூர், செய்ஞலுர், கருவூர்).

    ஆறு சிவத்தலை விராட புருடனின் ஆறு ஆதாரங்கள் என்று போற்றுவது சைவமரபு. அம்முறையில் திருவாரூர் மூலாதாரத்தலம்.

    • புரட்டாசி மகர நவமியில் பால் அன்னம் நிவேதிப்பவர்கள் முக்தியடைவர்.
    • நினைத்த காரியம் நிறைவேற தியாகராஜருக்கு விஷ்ணு பகவான் செய்த “முகுந்தார்ச்சனை” செய்யலாம்.

    தியாகராஜர் கோவில்-நேர்த்திக்கடன்கள்

    வீதிவிடங்க விநாயகருக்கு பின் உள்ள பிரம்ம நந்தியை மழை வேண்டி பிரார்த்தித்து, இவர் மீது நீர் நிரப்பினால் மழை கொட்டும்.

    பசுக்கள் கறவாது இருந்தால் இவருக்கு அருகு சாற்றி, அதனை பசுவுக்குக் கொடுத்தால் நன்றாகப் பால் கறக்கும்.

    கமலாம்பாளை வணங்கினால் ஞானம் கிட்டும்.

    ஊமைகள் கூட வியாழனுக்கு குருவாவார்கள்.

    புரட்டாசி மகர நவமியில் பால் அன்னம் நிவேதிப்பவர்கள் முக்தியடைவர்.

    ஜூரம் நீங்க, ஆயுள் அதிகரிக்க இங்குள்ள ஜூர தேவரை மிளகுரசம் படைத்து வழிபடுகிறார்கள்.

    தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.

    நினைத்த காரியம் நிறைவேற தியாகராஜருக்கு விஷ்ணு பகவான் செய்த "முகுந்தார்ச்சனை" செய்யலாம்.

    முசுகுந்த சக்கரவர்த்தி தியாகராஜருக்கு செய்த "முசுகுந்தார்ச்சனை" செய்யலாம்.

    • இத்தலத்து சண்முகரை வழிபட்டால் பகை விலகும்.
    • நீலோத்பலாம்பாளை வழிபட்டு பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவதும் நிகழ்கிறது.

    செல்வ செழிப்பை உண்டாக்கும் திருவாரூர் ஆலயம்!

    இத்தலத்தில் உள்ள பக்தர்கள் இராகு கால துர்க்கையை வழிபட்டு பதவி உயர்வு பணிமாற்றம் உள்ளிட்ட பல காரியங்கள் வெற்றியடையப் பெறுகிறார்கள்.

    கடன் தொல்லை, உடற்பிணிகள் உள்ளவர்கள், இங்குள்ள ருண விமோசன ஈஸ்வரனை வழிபடுவது சிறப்பு.

    இத்தலத்து சண்முகரை வழிபட்டால் பகை விலகும்.

    நீலோத்பலாம்பாளை வழிபட்டு, அர்த்தஜாமத்தில் நைவேத்தியம் செய்து பால் சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கிறது.

    பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவதும் நிகழ்கிறது.

    மேலும் பிரதான மூர்த்தியான தியாகேசரை வணங்கினால் திருமண வரம், குழந்தை வரம், கல்வி மேன்மை, வேலை வாய்பபு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவை நிறைவேறுகிறது.

    மூலவர் வன்மீகி நாதரை வழிபட்டால் எண்ணற்ற வரங்களும், செல்வ செழிப்பும் கிடைக்கும், பாவங்கள் நீங்கும், ஆணவம் மறையும்.

    அம்மன் சன்னதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும்.

    • இதனையடுத்து கொடியேற்ற விழா வெகு விமர்சையாக நடைபெறும்.
    • இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கு பெற்று கமலாம்பாள் தரிசனம் செய்வர்.

    தியாகராஜர் கோவில்-ஆடிப்பூரம் 10 நாட்கள் திருவிழா

    தியாகராஜர் கோவில் உலக பிரசித்தி பெற்றது. ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, கமலாம்பாள் சன்னதியில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

    கமலாம்பாள் சன்னதியில் வேத பண்டிதர்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை நடைபெறும்.

    இதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்படும்.

    இதனையடுத்து கொடியேற்ற விழா வெகு விமர்சையாக நடைபெறும்.

    பின்னர் கமலாம்பாள் சுவாமி வீதி உலா வருவார்.

    இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கு பெற்று கமலாம்பாள் தரிசனம் செய்வர்.

    மாசி மக நாள் சுந்தரருக்கு பூதகணம் நெல் கட்டி செல்லும் விழா, சித்திரை விழா, ஆடிப்பூரம் விழா, தெப்பதிருவிழா, நிறைபணி விழா ஆகியவை இத்தலத்தின் சிறப்பான விழா நாட்கள் ஆகும் மாதாந்திர பிரதோஷம் இத்தலத்தில் மிகவும் விசேஷமானது.

    வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கிலப் புத்தாண்டு தினங்களின்போது கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.

    • அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த இலிங்கம் வைக்கப்படும்.
    • தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது.

    365 லிங்கங்கள் கொண்ட பிரமாண்ட ஆலயம்!

    திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் தமிழகத்தின் புகழ்பெற்ற தலம்.

    இந்தக் கோவிலை சுற்றிப் பார்க்க வேண்டுமானால், முழுமையாக ஒருநாள் ஆகும்.

    பெரும்பாலான கோவில்களின் சுற்றுப்பிரகாரத்தில் சிறிய சன்னதிகள்தான் இருக்கும்.

    ஆனால், திருவாரூர் கோவிலின் உள்ளே இருக்கும் சன்னதிகள், கிட்டத்தட்ட தெருவோர கோவில்களின் அளவுக்கு பெரிய அளவில் இருக்கிறது.

    வீதிவிடங்க விநாயகர், அசலேஸ்வரர் (இது தனியாக பாடல் பெற்றது), கமலாம்பாள், நீலோத்பலாம்பாள், ரௌவுத்ர துர்க்கை, ருண விமோசனர், தெட்சிணாமூர்த்தி, ஆனந்தீஸ்வரர், சித்தீஸ்வரர், ஹயக்கிரீஸ்வரர்,

    தட்சணேஸ்வரர், அண்ணாமலேஸ்வரர், வருணேஸ்வரர், ஓட்டு தியாகேசர், துளசிராஜா பூஜித்த கோவில், தெய்வேந்திரன் பூஜித்த இலிங்கம், சேரநாதர், பாண்டியநாதர்,

    ஆடகேஸ்வரர், புலஸ்திய ரட்சேஸ்வரர், புலஸ்திய பிரம்மேஸ்வரர், பக்தேஸ்வரர், வில்வாதீஸ்வரர் மற்றும் பாதாளேஸ்வரர் ஆகியோர் இந்த சன்னதிகளில் அருள் செய்கின்றனர்.

    கோவிலின் மேற்கு கோபுர நுழைவாயிலில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது.

    இவரை வழிபட்டால் தொலைந்த பொருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    அம்மன் சன்னதியின் உள்பிரகார விநாயகர் சன்னதியில், ஐயப்பனும் அருள்பாலிக்கிறார்.

    மாற்றுரைத்த விநாயகர் சந்நிதி மேலைக்கோபுரத்தின் எதிரில் குளக்கரையில் உள்ளது.

    "செங்கழுநீர் ஓடை" எனப்படும் ஓரோடை கோவிலுக்கு அப்பால் 1 கி.மீ., தொலைவில் உள்ளது.

    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    தியாகராஜர் என்றால் "கடவுள்களுக்கெல்லாம் ராஜா" என்று பொருள்.

    தியாகராஜர் கோவிலும் கோவில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது.

    9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள்,

    365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோவில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது.

    இக்கோவிலை பெரியகோவில் என்றும் சொல்வர்.

    கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

    தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது.

    இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க இலிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும்.

    அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த இலிங்கம் வைக்கப்படும்.

    அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும்.

    மற்ற நேரங்களில், பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும்.

    ×