search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனவிலங்குகள்"

    • வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு வருகிறது.
    • வாகனஓட்டிகள் கரடியை வீடியோ பதிவு செய்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையடிவாரங்களில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கமாகி விட்டது.

    இந்நிலையில் சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களில் கைகாட்டி-மஞ்சூர் சாலை வழியாக ஊட்டிக்கு புறப்பட்டு வந்தனர். அப்போது பெங்கால் மட்டம்-கேரிகண்டி சாலையில் ஒரு கரடி சாலையோரம் நடந்துசென்றது.

    தொடர்ந்து அவ்வழியே சென்ற வாகனஓட்டிகள் அந்த கரடியை செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தனர்.

    இதனை பார்த்த கரடி "நான் சும்மா தானே போய்கிட்டு இருக்கேன், என்னை ஏன்டா தொந்தரவு பண்றீங்க" என்பதுபோல் கையெடுத்து கும்பிட்ட காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    குன்னூர் கிளண்டல் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர் வாசு என்பவரின் வீட்டுக்குள் நள்ளிரவு நேரத்தில் 2 கரடிகள் புகுந்தன. பின்னர் அவை சமையல் அறையில் இருந்த சமையல் எண்ணெயை ஆசை தீர குடித்து தீர்த்தன.

    அப்போது வாசு தற்செயலாக சமையல் அறைக்கு வந்தார். அங்கு 2 கரடிகள் நிற்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தொடர்ந்து அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீப்பந்தங்களை காட்டி வீட்டுக்குள் நின்ற கரடிகளை விரட்டினார். இருப்பினும் அந்த கரடிகள் சமையல் அறையில் இருந்த எண்ணை கேனையும் எடுத்துச் சென்றன.

    • தற்போது பகல் நேரத்திலும் விலங்குகள் உலா வரத் தொடங்கி உள்ளன.
    • விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். இரவு நேரத்தில் மட்டும் ஊருக்குள் உலா வந்த வனவிலங்குகள் தற்போது பகல் நேரத்திலும் உலா வரத் தொடங்கி உள்ளன.

    இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

    குன்னூர் அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கரடிகள் சுற்றி வருகின்றன. இந்த பகுதியின் அருகே தேயிலை தோட்டம் உள்ளது. சம்பவத்தன்று அந்த தோட்டத்திற்குள் கரடி ஒன்று புகுந்தது.

    மக்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்து கொண்ட கரடி அங்கு மிங்கும் ஓடியது. பின்னர் அங்குள்ள மரத்தின் அருகே சென்று மரத்தை சுற்றியது. மரத்தில் உள்ள கிளைகளை இழுத்தும், தலையை மரத்தின் இடுக்கில் கொடுத்தும் விளையாடி கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக மரத்தின் இடுக்கில் கரடியின் தலை சிக்கிக்கொண்டது. இதனால் கரடி அலறியது. சத்தம் கேட்டு தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்தனர். கரடியின் தலை மரத்தின் இடுக்கில் சிக்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    கரடி தலையை மீட்பதற்காக போராடியது. அரைமணிநேர போராட்டத்திற்கு பிறகு மரத்தின் இடுக்கில் சிக்கிய தலையை மீட்டது. பின்னர் அங்கிருந்து வனத்திற்குள் ஓடிவிட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழத்தோட்ட பகுதியில் தொடர்ந்து கரடிகள் நடமாடி வருவதால் அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வனவிலங்குகள் தண்ணீரை குடித்துவிட்டு சென்று விடுகிறது.
    • வனவிலங்குகளை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, காட்டுப்பன்றி, கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

    கோடை காலத்தில் வனப்பகுதி வறட்சியின் பிடியில் சிக்குவதால் ஆறுகள் வறண்டு போகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு கோடை காலத்தில் உணவு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து தாகத்தோடு தண்ணீரை தேடி மலை அடிவாரப்பகுதியை நோக்கி வந்து விடுகிறது.

    கடந்த சில வாரமாக வனப்பகுதியில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மரங்கள், செடிகள், புற்கள் உள்ளிட்டவை காய்ந்து விட்டது. இதனால் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. அவை மலை அடிவாரப் பகுதியை நோக்கி படையெடுத்த வந்த வண்ணம் உள்ளன.

    எனவே வன விலங்குகளின் தாகம் தீர்க்க ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் உடுமலை வனத்துறை சார்பில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வனவிலங்குகள் தண்ணீரை குடித்துவிட்டு சென்று விடுகிறது.

    அத்துடன் உடுமலை- மூணாறு சாலையை வனவிலங்குகள கடந்து அணைப்பகுதிக்கு செல்வதும் சற்று குறைந்து உள்ளது. வனவிலங்குகளுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதால் தாகத்தை தீர்ப்பதற்காக விளை நிலங்களை தேடி செல்ல வேண்டிய நிலையும் வனவிலங்களுக்கு குறைந்துள்ளது. வனவிலங்குகள் சாலையை கடக்கும் சூழல் ஏற்பட்டால் வாகனங்களை பொறுமை காத்து இயக்குமாறும், வனவிலங்குகளை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    • கணக்கெடுப்பு பணியில் செல்போன் செயலி பயன்படுத்தப்படுகிறது.
    • வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து தெரிய வரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்தில் இந்தாண்டுக்கான பருவ மழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணிகள் இன்று (21-ந்தேதி) தொடங்கியது. இதையொட்டி கணக்கெடுப்பு குழுவினருக்கு தலையணையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் மாரிமுத்து செல்போன் மற்றும் உபகரணங்களை கணக்கெடுப்பு குழுவினருக்கு வழங்கினார். அதன் பின் வனத்துறை ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் 21 குழுக்களாக பிரிக்கப்பட்டு, களக்காடு வனசரகத்திற்கு 8 குழுவினரும், திருக்குறுங்குடி வனசரகத்திற்கு 8 குழுவினரும், கோதையாறு வனசரகத்திற்கு 5 குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இவர்கள் வருகிற 26-ந்தேதி வரை வனப்பகுதியில் தங்கியிருந்து வனவிலங்குகளை நேரில் காண்பது, அவைகளின் எச்சங்கள், கால்தடங்களை சேகரித்தல் போன்ற முறைகளில் கணக்கெடுப்பு நடத்துகின்றனர்.

    மேலும் கணக்கெடுப்பு பணியில் செல்போன் செயலி பயன்படுத்தப்படுகிறது. கணக்கெடுப்பு குழுவினர் தாங்கள் சேகரிக்கும் புள்ளி விபரங்களை செல்போன் செயலியில் பதிவு செய்து வருகின்றனர்.

    கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்படும் வன விலங்குகளின் கால்தடங்கள், எச்சங்கள் தேசிய புலிகள் ஆணையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதன் பிறகு வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து தெரிய வரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • அடிவார பகுதியில் வனவிலங்குகள் தங்கும் பகுதி தூய்மைப் படுத்தப்பட்டுள்ளது.
    • விவசாயிகளின் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தூய்மை பணி கைவிடப்பட்டது.

    உடுமலை:

    உடுமலை மாவட்ட வன அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி வனப் பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேஷ்ராம் தலைமை வகித்தார்.அதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் கூறியதாவது;- வளையபாளையம் பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. அவை தென்னை மரங்களில் இளநீர் பதத்தில் உள்ள காய்களை பறித்து சேதப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இதுவரையில் ஏராளமான

    தேங்காய்கள் வீணாகி உள்ளது. அதற்கு கூண்டு வைத்து பிடிக்கப்படும் என்று அதிகாரி தெரித்தார். மேலும் காண்டூர் கால்வாய் அருகே வீட்டு மனை இடங்கள் கொடுப்பதற்காக மணல் பாங்கான மலைக் குன்று ஒன்றில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகளின் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அந்த பணி கைவிடப்பட்டது.

    அடிவார பகுதியில் வனவிலங்குகள் தங்கும் பகுதி தூய்மைப் படுத்தப்பட்டதால் மான் காட்டுப்பன்றி உள்ளிட்டவை விளைநிலங்களுக்கு புகுந்து வருகிறது. அதை தடுப்பதற்கும் தூய்மைப்படுத்திய நபர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

    மேலும் காண்டூர் கால்வாயின் குறுக்காக கட்டப்பட்டுள்ள உபயோகம் இல்லாத பாலத்தின் வழியாக மான்,காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வருகிறது. இதனால் அந்தப் பாலத்தை அடைத்துக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.இது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி வனப்பாதுகாவலர் தெரிவித்தார்.

    • கைது செய்யப்பட்ட சதீஷ், ராகுல் ஆகியோர் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • களக்காடு, திருக்குறுங்குடி, பணகுடி பகுதிகளை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களை வனத்துறை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில், திருக்குறுங்குடி வனசரகர் யோகேஷ்வரன் தலைமையில் வனத்துறை தனிப்படையினர் பரிவரிசூரியன் பீட், கரும்பாறை சரகம் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த சதீஷ்(வயது 42), ராகுல்(23) ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். உடனே அவர்கள் 2 பேரிடமும் வனத்துறையினர் விசாரித்தனர். அதில் அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை பழத்தில் மறைத்து வீசியது தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 3 நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷ், ராகுல் ஆகியோர் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக களக்காடு, திருக்குறுங்குடி, பணகுடி பகுதிகளை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களை வனத்துறை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே அந்த கும்பலுக்கு நாட்டு வெடிகுண்டுகள் எப்படி கிடைத்தது? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து வனசரகர் யோகேஷ்வரன் கூறுகையில், 'வன உயிரினங்களை வேட்டையாடுவது, கறிகளை விற்பனை செய்வது, அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைவது, வனத்தில் தீ வைப்பது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது வன பாதுகாப்பு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய கும்பல் குறித்து தகவல் கிடைத்தால் பொதுமக்கள் களக்காடு துணை இயக்குனர் அலுவலகத்திலோ, திருக்குறுங்குடி வனசரகர் அலுவலகத்திலோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும்' என்றார்.

    • யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
    • அடிவாரப் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நீர்வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

    உடுமலை,ஆக.2-

    உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவற்றுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் கொடுத்து அடைக்கலம் அளித்து வருகிறது. ஆனாலும் வறட்சி காலத்தில் ஏற்படுகின்ற தண்ணீர் பற்றாக்குறையால் உணவு மற்றும் குடிநீரை தேடிக்கொண்டு வனவிலங்கு அடிவாரப் பகுதிக்கு வந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.

    அப்போது வாகன போக்குவரத்து காரணமாக உடுமலை மூணார் சாலையை கடந்து அமராவதிஅணைக்கு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வன விலங்குகள் மனிதன் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து மலை அடிவாரப் பகுதியில் வனத்துறை சார்பில் தடுப்பணைகள், தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டது. கோடை காலத்தில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதுடன் தடுப்பணையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் வனவிலங்குகள் சாலையை கடப்பதற்கான அவசியம் எழவில்லை. அவற்றில் தேங்கி உள்ள தண்ணீரை குடித்து விட்டு வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் சென்று விடுவது வாடிக்கையாக இருந்தது.

    இந்த சூழலில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடை யவில்லை. இதனால் அடிவாரப் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நீர்வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கிறது.இதன் காரணமாக தண்ணீரைத் தேடிக் கொண்டு வரும் வனவிலங்குகள் உடுமலை மூணாறு சாலையை கடந்து அணைப் பகுதிக்குள் சென்று விடுவது வாடிக்கையாக உள்ளது.

    • கடந்த 22 ஆண்டுகளாக சிறுத்தை குட்டிகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
    • சாவித்ரம்மா உள்ளே நுழைந்ததும் சிறுத்தை குட்டிகள் அவரை நோக்கி துள்ளி குதித்து ஓடி வருகின்றன.

    கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா மிருககாட்சி சாலையில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த மிருகக்காட்சி சாலையில் தாயை இழந்த மற்றும் பிரிந்த காட்டு விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.

    சிங்கம், சிறுத்தை, புலி குட்டிகள் பராமரிப்பில் உள்ளன. இந்த பணியில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சாவித்ரம்மா என்ற பெண் ஈடுபட்டுள்ளார். கடந்த 22 ஆண்டுகளாக இவர் சிறுத்தை குட்டிகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    ஒரே கடியால் மக்களை கொல்லும் காட்டு விலங்குகள் சாவித்ரம்மாவின் அன்பு பிடியில் குழந்தை போல நடந்து கொள்கின்றன.

    சாவித்ரம்மா உள்ளே நுழைந்ததும் சிறுத்தை குட்டிகள் அவரை நோக்கி துள்ளி குதித்து ஓடி வருகின்றன. அவற்றை அப்படியே வாரி எடுத்து பால் குடிச்சிட்டியா பசிக்கிறதா என கேட்டு அன்பை பொழிகிறார். கடந்த 22 ஆண்டுகளில் இவர் 100க்கும் மேற்பட்ட சிங்கம் சிறுத்தை புலிக் குட்டிகளை வளர்த்துள்ளார்.

    குட்டிகள் பெரிதாக வளர்ந்ததும் பூங்காக்கள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளில் விடப்படுகின்றன.

    நானும் எனது கணவரும் மிருகக்காட்சி சாலையில் பாதுகாவலராக பணியாற்றி வந்தோம். 2000-ம் ஆண்டில் எனது கணவர் இறந்துவிட்டார்.

    2 குழந்தைகளுடன் நான் தவித்து வந்தேன். அப்போதுதான் மிருகக்காட்சி சாலையில் குட்டி விலங்குகளை வளர்க்கும் பொறுப்பு எனக்கு கிடைத்தது. தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட காட்டு விலங்கு குட்டிகள் சில நாட்கள் சாப்பிடாமல் இருக்கும் .

    அவற்றை அரவணைத்து பால் கொடுப்பேன். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை குட்டிகளுக்கு பால் கொடுக்க வேண்டும். குட்டிகளை சிறியதாக இருக்கும் போது பாதுகாப்பாக கவனிக்க வேண்டும்.

    நான் வெளியூர் செல்லும் நாட்களில் இந்த குட்டிகள் சரியாக பால் குடிப்பதில்லை. அப்போது போன் மூலம் ஸ்பீக்கரில் என்னை பேச சொல்வார்கள். என்னுடைய சத்தத்தை கேட்ட பிறகு தான் பால் குடிக்கும்.

    குட்டிகள் வளர்ந்த பிறகு கூண்டில் அடைக்கப்பட்டு சரணாலயம் மற்றும் காடுகளுக்கு கொண்டு செல்வார்கள். அப்போது குழந்தைகளை பிரிவது போன்ற ஏக்கம் எனக்குள் ஏற்படும்.

    அந்த விலங்குகளிடமும் அதே உணர்வை காண முடியும். அதிக அளவில் சிறுத்தை குட்டிகள் தான் வளர்த்துள்ளேன்.

    என்னை நம்பி விடுகிறார்கள் நான் அவற்றை வளர்த்து தைரியமாக வெளியே அனுப்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பயணிகள் சிலர், மலைப்பாதையில் நடந்து சென்ற கரடியை தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர்.
    • மலைப்பாதையில் கரடி உலா வந்த சம்பவம் தாண்டிக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சமீப காலமாக யானை, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வாடிக்கையாகி விட்டது. இதேபோல் மலைப்பாதையில் வனவிலங்குகள் உலா வருவதையும் அங்கு அடிக்கடி பார்க்கலாம்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை திண்டுக்கல்லில் இருந்து தாண்டிக்குடி நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் சித்தரேவு, பெரும்பாறையை கடந்து தாண்டிக்குடி அருகே பண்ணைக்காடு மலைப்பாதையில் உள்ள எதிரொலிக்கும்பாறை பகுதியில் சென்றது. அப்போது பஸ்சுக்கு முன்னால் சாலையில் கரடி ஒன்று சாவகாசமாக நடந்து சென்றது. இதனை பார்த்த பஸ் டிரைவர் மற்றும் பயணிகள் அதிர்ச்சி அடைத்தனர். மேலும் கரடிக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்க டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கினார். அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் சிலர், மலைப்பாதையில் நடந்து சென்ற கரடியை தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர்.

    சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு மலைப்பாதையில் நடந்து சென்ற அந்த கரடி, அருகில் இருந்த தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன்பிறகு அந்த தனியார் பஸ் வழக்கமான வேகத்தில் சென்றது.

    மலைப்பாதையில் கரடி உலா வந்த சம்பவம் தாண்டிக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பீதியில் உள்ளனர்.

    இதற்கிடையே மலைப்பாதையில் கரடி உலா வந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை சிலர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • போதிய உணவு கிடைக்காமல் விலங்குகள் நீர் நிலைகள் தேடி செல்வது வழக்கம்.
    • மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வனங்களில் பசுமை திரும்பியுள்ளதால், விலங்குகள் நாடமாட்டம் அதிகரித்துள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். இச்சமயங்களில் மழை பெய்யாமல், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இரவில் பனி கொட்டிவிடும். இதனால், அனைத்து செடி, கொடிகள் மற்றும் மரங்கள் காய்ந்து போய்விடும். மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கடும் வெயில் நிலவும்.

    இந்த சமயங்களில் பெரும்பாலான வனப்பகுதிகள் காய்ந்து போய்விடும்.

    அதேபோல், நீரோடைகளில் முற்றிலும் தண்ணீர் குறைந்து வறண்டு போய் காட்சியளிக்கும். இதனால், போதிய உணவு கிடைக்காமல் விலங்குகள் நீர் நிலைகள் தேடி செல்வது வழக்கம். குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி, பந்திப்பூர் போன்ற பகுதிகளில் உள்ள விலங்குகள் தண்ணீர் உள்ள பகுதிகளை நோக்கி இடம் பெயர்ந்துவிடும்.

    தற்போது நீலகிரியில் மழை பெய்து வருகிறது. இதனால், அனைத்து வனங்களிலும் பசுமை திரும்பியுள்ளது. குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு, கார்குடி, மசினகுடி போன்ற பகுதிகளில் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. அதேபோல், நீரோடைகள் மற்றும் ஆறுகளிலும் தண்ணீர் ஓடுகிறது. இதனால், விலங்குகள் மீண்டும் திரும்ப தொடங்கியுள்ளன.

    இதனால், ஊட்டியில் இருந்து முதுமலை செல்லும் சாலையோரங்களில் காட்டு யானைகள், காட்டு மாடுகள், மான்கள், நீலகிரி லங்கூர் குரங்குகள், மயில் உள்ளிட்ட சில பறவைகள் சாலையோரத்திலேயே சுற்றித் திரிகின்றன.

    சர்வ சாதாரணமாக சாலையோரங்களில் வலம் வரும் விலங்குகளை வாகனங்களில் இருந்தபடியே சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர். குறிப்பாக, குழந்தைகள் இந்த வன விலங்குகளை கண்டு உற்சாகமடைகின்றன.

    மேலும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வனங்களில் பசுமை திரும்பியுள்ளதால், விலங்குகள் நாடமாட்டம் அதிகரித்துள்ளது.

    • உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.
    • வனவிலங்குகள் குறித்த இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றது.

    இந்த வனச்சரகங்களில் ஆண்டு தோறும் கோடைகாலம் மற்றும் குளிர்காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

    அந்த வகையில் கடந்த 23-ந்தேதி உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் கோடைகால கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இந்த பணி நேற்று நிறைவடைந்தது. மொத்தம் 6 நாட்கள் நடைபெற்றது.உடுமலை அமராவதி வனச்சரகங்கள் மற்றும் வெளிமண்டல பகுதியான கொழுமம், வந்தரவு வன சகரங்களில் உள்ள 34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது.

    இதற்காக வனப்பகுதியில் 53 நேர்கோட்டு பாதை அமைக்கப்பட்டது. வனப் பணியாளர்கள் செல்போன் செயலி மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

    முதல் 3 நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் வீதம் 15 கிலோமீட்டர் தூரம் சென்று சுற்றுகளில் காணப்படுகின்ற புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டது.

    அடுத்த 3 நாட்களில் நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் வனவிலங்குகளின் காலடிகுளம்பினங்கள், பறவைகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் ஆகியவை குறித்து பதிவு செய்யப்பட்டது.மேலும் யானைலத்தி, காட்டெருமைசாணம், புள்ளிமான், கடமான், காட்டுப்பன்றி, அனுமன்மந்தி, நீலகிரி மந்தி, சிங்கவால்குரங்கு ஆகியவற்றின் புழுக்கை மற்றும் சாணங்கள் குறித்தும் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

    அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரிலும் உள்ள தாவர வகைகளும் கணக்கீடு செய்யப்பட்டது. இறுதி நாளான இன்று கணக்கெடுக்கப்பட்ட வனவிலங்குகள் குறித்த இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இந்த கணக்கெடுப்பு பணியில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் கணேஷ்ராம் மேற்பார்வையில் வனச்சரகர்கள் சிவக்குமார் (உடுமலை), சுரேஷ் (அமராவதி), மகேஸ் (கொழுமம்), முருகேசன் (வந்தரவு) தலைமையிலான வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்புகாவலர்கள் ஈடுபட்டனர்.

    • மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் விவசாயத்தை நம்பியே உள்ளனர்.
    • சூரியஒளி மின் சக்தியால் இயங்கக்கூடிய மின்வேலிகள் அமைப்பதன் மூலமாக வனவிலங்குகள் கிராமங்களுக்குள் வருவதை தடுக்க முடியும்.

    மதுரை:

    நெல்லை மாவட்டம் கருத்தபிள்ளையூரைச் சேர்ந்த வின்சென்ட், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் உற்பத்தியாளர் குழுத்தலைவராக உள்ளேன். கடையம், குற்றாலம் மற்றும் கடையநல்லூர் ஆகிய பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளன. இந்த மலை, செழிப்பான பல்லுயிர் மற்றும் பன்முக சொர்க்கமாக கருதப்படுகிறது. அங்கு பல்வேறு வகையான தாவரங்களும், விலங்கினங்களும் உள்ளன.

    இந்த மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் விவசாயத்தை நம்பியே உள்ளனர். விவசாயத்துக்கு நீர்ப்பாசனமாக கடனா அணை, ராமநதி அணை, அனுமன் ஆறு, கருப்பா நதி ஆகியவற்றில் இருந்து தண்ணீர் பெறப்படுகிறது.

    வனப்பகுதியும், நிலப்பகுதியும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதால், அடிக்கடி மனிதர்கள், வனவிலங்கு மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. சமீபத்தில் கரடி தாக்கி 3 பேர் படுகாயம் அடைந்தனர். அதேபோல தொடர்ந்து விவசாய பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. குறிப்பாக காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் அளவில்லாதது.

    எனவே வனவிலங்குகளால் பாதிக்கப்படும் கிராமவாசிகளுக்கு அதிநவீன மருத்துவ உதவி, உரிய நிவாரணம் மற்றும் வனவிலங்குகளால் அழிக்கப்பட்ட மரங்கள், விவசாய பயிர்களுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட வேண்டும். கிராமப்பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் வன எல்லைப்பகுதியில் சூரியஒளியில் இயங்கக்கூடிய மின்வேலிகளை அமைக்க வேண்டும். இதன்மூலம் வனவிலங்குகளால் பாதிக்கப்படுவது தடுக்கப்படும் என்று அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கடையம், குற்றாலம், கடையநல்லூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி வன எல்லைப்பகுதிகளில் சூரியஒளியில் இயங்கும் மின்வேலிகளை அமைக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சமீபத்தில் கூட மின்வேலிகளில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்துள்ளன என்றனர்.

    அதற்கு மனுதாரர் வக்கீல் ஆனந்த் ராஜேஷ் ஆஜராகி, சூரியஒளி மின் சக்தியால் இயங்கக்கூடிய மின்வேலிகள் அமைப்பதன் மூலமாக வனவிலங்குகள் கிராமங்களுக்குள் வருவதை தடுக்க முடியும். சூரியஒளி மின்வேலியினால் விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படாது என தெரிவித்தார்.

    விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழக அரசின் வனத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் மாதம் 10-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    ×