என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கந்து வட்டி"

    • கடந்த 6 வருடங்களாக வட்டி செலுத்தி வரும் நிலையில் ஒரு மாதமாக மட்டுமே வட்டியை செலுத்தவில்லை.
    • தற்போது அவர்கள் பணத்தை முழுமையாக செலுத்துமாறு எனக்கு மிரட்டல் விடுகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் குறித்த மனுக்களை அளித்து சென்றனர்.

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையை சேர்ந்த வளன் என்பவரது மனைவி பியோனி தனது 4 மகன்களுடன் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் நின்று இருந்த போலீசார் அந்த பெண்ணின் கையில் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு கேனில் பெட்ரோல் இருந்தது. உடனே அதனை போலீசார் பறிமுதல் செய்து பியோனியிடம் விசாரித்தனர். அவர் பையில் இருந்த மனுவை எடுத்து பார்த்தபோது அதில் கூறியிருந்ததாவது:-

    வளன் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக முயற்சிகள் எடுத்துள்ளார். அங்கு ரூ.30 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் இடிந்தகரை பகுதியை சேர்ந்த சிலரிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கிக்கொண்டு அவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு ரூ.15 ஆயிரம் மட்டுமே மாத சம்பளம் கொடுத்துள்ளனர்.

    மேலும் அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு விட்டது. இதனால் தற்போது அவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வருகிறார். அதே நேரத்தில் வட்டிக்கு பணம் கொடுத்திருந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக பணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்தி வருகின்றனர். நான் 4 குழந்தைகளுடன் சிரமப்பட்டு வருகிறேன்.

    கடந்த 6 வருடங்களாக அவர்களுக்கு வட்டி செலுத்தி வரும் நிலையில் ஒரு மாதமாக மட்டுமே நான் வட்டியை செலுத்தவில்லை. ஆனால் தற்போது அவர்கள் பணத்தை முழுமையாக செலுத்துமாறு எனக்கு மிரட்டல் விடுகின்றனர். எனவே அவர்களது பணத்தை திருப்பிக் கொடுக்க எனது வீட்டை நான் விற்க வேண்டும். அதற்கு 6 மாதம் அவகாசம் அவர்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    • கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது கஞ்சா புழக்கம் குறைந்து உள்ளது.
    • சபரிமலை சீசன் தொடங்க உள்ள நிலையில் கன்னியாகுமரிக்கு அதிக அளவு பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் இன்று நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது கஞ்சா புழக்கம் குறைந்து உள்ளது. சிறிய அளவில் மட்டுமே கஞ்சா புழக்கம் இருந்து வருகிறது. அதை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    கன்னியாகுமரிக்கு நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். எனவே கன்னியாகுமரி நுழைவு வாயில் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். குமரி வரும் வாகனங்களின் பதிவு எண்ணை சேமித்து வைக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட உள்ளது.

    நாகர்கோவில் மாநகர பகுதிகளில் புதிதாக கட்டப்ப டும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளோம். ஏற்கனவே வணிக நிறு வனங்களில் கேமராக்கள் இருப்பதால் குற்றங்கள் தற்போது குறைந்து உள்ளது. நகை பறிப்பு சம்பவங்களும் குறைந்து உள்ளன.

    கோவிலில் உண்டியல் திருட்டு, வீடு புகுந்து திருட்டு ஆகிய சம்பவங்களை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். நேசமணிநகர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 30 வழக்குகளில் 150 பவுன் நகை மீட்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 573 பவுன் நகை மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உண்டியல் மற்றும் வீடு புகுந்து திருட்டுகள் தொடர்பான வழக்குகளில் 150 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே தனிப் படைகள் அமைத்து அந்த வழக்குகளை முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    சபரிமலை சீசன் தொடங்க உள்ள நிலையில் கன்னியாகுமரிக்கு அதிக அளவு பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்காக வெளியூரில் இருந்து ஒரு பட்டாலியன் போலீசை பாதுகாப்பு பணிக்காக கேட்டு உள்ளோம்.

    கந்துவட்டி தொடர்பான புகார்கள் இருந்தால் நாகர் கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுக்கலாம். கந்துவட்டி தொடர்பான புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    குமரி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் உள்ளன. அந்த பெட்ரோல் பங்க் உரிமை யாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க அறிவுறுத்தி உள்ளோம். அங்கு அமைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்கள் முழுவதையும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிக்கும் வகை யில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

    நித்திரவிளை அருகே மாணவி அபிதா பலியானது தொடர்பாக நடந்த பிரேத பரிசோதனையில் மாணவி விஷம் குடித்ததற்கான அறிகுறி இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

    களியக்காவிளையை அடுத்த பாறசாலையில் மாணவர் ஷாரோன் கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அவருடைய காதலி கிரீஷ்மா கைது செய்யப்பட்டு கேரளா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவரை குமரி மாவட்டத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கை குமரி மாவட்டத்திற்கு மாற்றுவது தொடர்பாக எந்த தகவலும் இது வரை வரவில்லை.

    சுசீந்திரம் அருகே மேல கிருஷ்ணன்புதூரில் ரோட்டோரத்தில் ராஜதுரை என்பவர் மர்மமான முறையில் கொலை செய்ய ப்பட்டு கிடந்தார். இந்த வழக்கில் முக்கிய தடயம் சிக்கி உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாவட்டத்தில் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி அபராத தொகை விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,851 ஹெல்மெட் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • நான் ரூ.13 லட்சத்து 75 ஆயிரம் வட்டியுடன் சேர்த்து ரூ.44 லட்சத்தை திருப்பி செலுத்தினேன்.
    • நிதி நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    பீளமேடு

    கோவை சின்னியம்பா ளையம் ஜி.கே.ஆர் நகரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 64).

    இவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் சொந்த தேவைக்காக கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த சிவகுமார் சந்திரன் (48), கே.கே.புதூரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (50), திருப்பூரை சேர்ந்த ஜெயசந்திரன் ஆகியோர் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.44 லட்சம் கடன் பெற்றேன்.

    அதனை நான் ரூ.13 லட்சத்து 75 ஆயிரம் வட்டியுடன் சேர்த்து ரூ.44 லட்சத்தை திருப்பி செலுத்தினேன். ஆனால் அவர்கள் நான் வாங்கிய கடனுக்கு ரூ.61 லட்சம் வட்டி செலுத்துமாறு கேட்டனர்

    அதற்கு நான் மறுத்தேன்.இதனால் அவர்கள் எனக்கு நோட்டீஸ் அனுப்பி விடுவதாக மிரட்டி வருகிறார்கள்.

    எனவே கந்து வட்டி கேட்டு மிரட்டி வரும் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து பீளமேடு போலீசார் சிவகுமார் சந்திரன், ஹரிகிருஷ்ணன், ஜெயசந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடனில் மூழ்கி போன விஜயகுமார் என்ன செய்வதென்று தெரியாமல், ஒவ்வொரு மினிபஸ்சாக விற்பனை செய்து கந்து வட்டி கும்பலுக்கு கடன் செலுத்தி வந்துள்ளார்.
    • பைனான்ஸ் நிறுவனம் வட்டிக்கு மேல் வட்டி போட்டு கந்து வட்டி வசூலித்துள்ளனர். இதனால் கந்து வட்டி கும்பல் மேல் நடவடிக்கை வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு மேல்புறம் மணலி விளையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 67) மினி பஸ் அதிபர்.

    இவர் படந்தாலுமூட்டில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்று உள்ளார்.. இதனால் கடனில் மூழ்கி போன விஜயகுமார் என்ன செய்வதென்று தெரியாமல், ஒவ்வொரு மினிபஸ்சாக விற்பனை செய்து கந்து வட்டி கும்பலுக்கு கடன் செலுத்தி வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டின் குளியல் அறைக்குள் சென்ற விஜயகுமார் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் விஷ மருந்தை அருந்தியுள்ளார்.இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மகன் வினோஷ், மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் பைனான்ஸ் நிறுவனம் வட்டிக்கு மேல் வட்டி போட்டு கந்து வட்டி வசூலித்துள்ளனர். இதனால் கந்து வட்டி கும்பல் மேல் நடவடிக்கை வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். கந்து வட்டி கும்பல் மிரட்டிய பரபரப்பு ஆடியோக்களை யும், கந்து வட்டி கும்பல் டார்ச்சர் குறித்த ஐந்து பக்க புகாரையும் அவர் கொடுத்துள்ளார். கந்து வட்டி கும்பலின் கொடுமையால் மினி பஸ் அதிபர் தற்கொலை செய்து கொண்டது மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலத்தில் கந்து வட்டி கொடுமையால் கணவன்-மனைவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
    • வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 65). இவர் மணக்காடு பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி விஜயா (58).

    தங்கராஜ், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரிடம் 2 லட்சம் பணம் கந்து வட்டிக்கு கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தங்கராஜ், கொஞ்சம் கொஞ்சமாக வட்டி பணம் மட்டும் கொடுத்து வந்தார். இந்த நிலையில் நாளடைவில் லேத் பட்டறையில் போதுமான வருமானம் கிடைக்கவில்லை. இதனால் தங்கராஜினால் வட்டி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் வட்டிக்கு பணம் கொடுத்த ராஜா அடிக்கடி அவரிடம் அசல் மற்றும் வட்டி பணத்தை சேர்த்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு தங்கராஜ், தன்னிடம் இப்போது பணம் இல்லை, சில நாட்கள் கால அவகாசம் கொடுங்கள். அதற்குள் பணம் கட்டி விடுகிறேன் என கூறியதாக தெரிகிறது. இருப்பினும் வருமானம் இல்லாததால் பணம் கொடுக்க முடியாமல் தங்கராஜ் தவித்து வந்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, வட்டி மற்றும் அசல் பணம் கேட்டு அவருக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார். இதனால் மனமுடைந்த தங்கராஜ் விஷம் குடித்து மாமாங்கம் பகுதியில் மயங்கி கிடந்தார்.

    அக்கம் பக்கத்தினர் பார்த்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உறவினர்கள் அங்கு சென்று அவரை மீட்டு சேலம் காந்தி விளையாட்டு மைதானம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தங்கராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதனால் அவரது மனைவி விஜயா, கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இது பார்க்க பரிதாபமாக இருந்தது. கணவரின் இந்த சாவுக்கு கந்து வட்டி கொடுமையே என எண்ணி கதறி துடித்த விஜயா, இனிமேல் இங்கு வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்தார். தொடர்ந்து அழுதபடியே கணவர் இறந்த துக்கத்தில் விஜயா ஆஸ்பத்திரியில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அஸ்தம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் சரவணகுமார், இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தங்கராஜ்-விஜயா ஆகியோர் உடல்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில் வட்டிக்கு பணம் கொடுத்த ராஜா என்பவர், காவல்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து முறையாக அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

    பணம் கொடுக்காதவர்களை மிரட்டியும் வந்துள்ளார். அந்த வகையில் கந்து வட்டி கேட்டு தங்கராஜை அடிக்கடி மிரட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் போலீசார், ராஜாவை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலத்தில் கந்து வட்டி கொடுமையால் கணவன்-மனைவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • குமார் தண்ணீர் கேனில் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்
    • நான் வாங்கிய பணத்தை விட வட்டி அதிக அளவில் கட்டி வந்ததால் என்னால் சமாளிக்க முடியவில்லை

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஜேகே நகரை சேர்த்த திருஷ்டி பொம்மை வியாபாரி குமார்(36). தனது மனைவி மங்கம்மாள் மற்றும் தனது மகன், மகளுடன் வந்தார். அப்போது திடீரென குமார் கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு தண்ணீர் கேனில் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூரம்பட்டி போலீசார் ஓடி சென்று அவரிடமிருந்த பெட்ரோல் கேனை பறித்து உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.இது குறித்து குமார் கூறும் போது-

    நான் அரச்சலூர் ஜெ.ஜெ.நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். திருஷ்டி பொம்மை வியாபாரம் செய்து வருகிறேன். என் குடும்ப சூழ்நிலை காரணமாக அதே பகுதியை சேர்ந்த 4 பேரிடம் தனித்தனியாக கடன் வாங்கி இருந்தேன். வாங்கிய பணத்திற்காக மாதம் வட்டியும் கட்டி வந்தேன்.

    ஆனால் நான் வாங்கிய பணத்தை விட வட்டி அதிக அளவில் கட்டி வந்ததால் என்னால் சமாளிக்க முடியவில்லை. இதனையடுத்து எனது வீட்டையும் விற்று பணத்தை கொடுத்தேன். அப்போதும் அவர்கள் 4 பேரும் என்னிடம் மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்த னர். நாளுக்கு நாள் அவ ர்கள் தொந்தரவு அதிகரித்த தால் என்னால் வியாபா ரமும் செய்ய முடியவில்லை. இதனை அடுத்து கலெக்டர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்றேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை அடுத்து சூரம்பட்டி போலீசார் குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கந்து வட்டி கொடுமையால் வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • தினேஷ் குமாரை அவரது மனைவிக்கு போன் செய்ய சொல்லி அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
    • கந்து வட்டி கும்பல் திட்டியதால் வேதனை அடைந்த செல்வி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி ரோடு காமராஜர் நகரை சேர்ந்தவர் தினேஷ் குமார் (29). இவர் சி.சி.டி.வி. விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி செல்வி (25). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது. பெண் குழந்தை உள்ளது. தினேஷ் குமார் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த முருகனிடம் வட்டிக்கு பணம் வாங்குவது வழக்கம். ஏற்கனவே பணம் வாங்கி அதனை வட்டியுடன் கட்டி உள்ளார்.

    தற்போது தினேஷ் குமார், முருகனிடம் ரூ. ஒன்றரை லட்சம் பணம் கடனாக வாங்கி இருந்தார். அதற்கு வாரம் ரூ. 6 ஆயிரம் கட்ட வேண்டும் என முருகன் கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் தினேஷ்குமாரால் பணம் கட்ட தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த 5 பேர் கும்பல் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தினேஷ் குமாரை அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

    பின்னர் தினேஷ் குமாரை அவரது மனைவிக்கு போன் செய்ய சொல்லி அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

    பின்னர் தினேஷ் குமாரை விடுவித்தனர். கந்து வட்டி கும்பல் திட்டியதால் வேதனை அடைந்த செல்வி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கந்து வட்டி கும்பல் திட்டியதால் மனம் உடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாதிக்கப்பட்ட சிவன்மலையை சேர்ந்த நூல்மில் உரிமையாளர் செல்வராஜ் என்பவர் காங்கயம் போலீசில் புகார் செய்தார்.
    • தலைமறைவாக உள்ள கஜேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த சிவன்மலை குருகத்தி பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 55). நிதி நிறுவன உரிமையாளர். மேலும் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். அவர் கொடுக்கும் பணத்திற்கு வட்டிக்கு மேல் வட்டி போட்டு ராக்கெட் வட்டி விகிதத்தில் கடன் வசூலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    சிவன்மலையில் வசித்து வரும் பல குடும்பத்தினர் கஜேந்திரனிடம் பணம் பெற்றதாகவும், பணம் பெற்றவர்களிடம் வசூலிக்கும் பணத்தை அசலில் கழிக்காமல் வட்டியில் கழிப்பதாகவும், கடன் பெற்றவர்களை மிரட்டி பத்திரங்களை எழுதியும் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    இதில் பாதிக்கப்பட்ட சிவன்மலையை சேர்ந்த நூல்மில் உரிமையாளர் செல்வராஜ் என்பவர் காங்கயம் போலீசில் புகார் செய்தார்.

    இதனைதொடர்ந்து காங்கயம் போலீசார் கஜேந்திரன் மீது கந்து வட்டி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட கஜேந்திரன் என்பவரது வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் கஜேந்திரன் வீட்டில் இருந்து 73 நிலம், வீடு, தொழில் சார்ந்த பத்திரங்கள், பணம் குறிப்பிடாத வங்கி காசோலை-6, ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாக்கள்-2 மற்றும் வாகன உரிமம் புத்தகம் ஆகியவற்றை அதிரடியாக கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தலைமறைவாக உள்ள கஜேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    கந்து வட்டி வழக்கு தொடர்பாக சிக்கிய மல்லூர் தி.மு.க. பிரமுகர் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அப்போது அங்கு 700 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சேலம் :

    சேலம் நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 31), பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சவுந்தர்ராஜன் மல்லூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான பூபதியிடம் (42) ரூ.50 ஆயிரம் கடன் பெற்றார். அதற்காக வட்டி 30 ஆயிரம் சேர்த்து 80 ஆயிரம் திருப்பி கொடுத்தார்.

    மேலும் ரூ.10 ஆயிரம் கேட்டு சவுந்தர்ராஜன் தாக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. இதற்கிடையே வழக்கை வாபஸ் பெறவும், ரூ.10 ஆயிரம் வட்டி கேட்டும் மீண்டும் பூபதி தொந்தரவு செய்து வந்தார்.

    இது குறித்து மல்லூர் போலீஸ் நிலையத்தில் சவுந்தர்ராஜன் புகார் அளித்தார். அதன் பேரில் பூபதி மீது கந்து வட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ரூரல் டி.எஸ்.பி. தையல் நாயகி மற்றும் போலீசார் பூபதிக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த பூர்த்தி செய்யப்படாத வெற்று பத்திரங்கள், உறுதிமொழி பத்திரங்கள், காசோலை உள்பட 700 ஆவணங்கள் போலீசாரிடம் சிக்கியது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ரூ 20,000 கடனுக்கு ரூ.2.36 லட்சம் கேட்பதாக புகார்
    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள சேர்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 41)இவர் இன்று காலை வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறேன். எனது குடும்பத்தில் 5 பேர் உள்ளனர். எனது வருமானத்தை வைத்துதான் குடும்பம் நடத்த வேண்டி உள்ளது.

    இந்த நிலையில் ஒடுகத்தூரை சேர்ந்த சகோதரர்கள் 3 பேரிடம் நான் ரூ. 20,000 குடும்பச் செலவுக்காக கடன் வாங்கியிருந்தேன். இதற்காக இதுவரை என்னிடம் ரூ.96 ஆயிரம் வட்டி வசூலித்தனர். இன்னும் 1,40,000 தரவேண்டும் என கூறுகின்றனர். நேற்று முன்தினம் இது சம்பந்தமாக என்னை அடித்து உதைத்தனர்.

    இதனால் நான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். ரூ.20,000 கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு மிரட்டுவதில் இருந்து பாதுகாப்பு வேண்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்‌.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராவேந்திரனின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
    • பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே டி.பெருமாபாளையம் பகுதியை சேர்ந்த சிலர் கந்துவட்டி தொழில் செய்து வருகின்றனர். இவர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கியவர்கள், அதை திரும்ப செலுத்த காலதாமதம் ஆகும் போது, அவர்களை மிரட்டியும், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் தகாத வார்த்தையில் பேசியும், அடித்து துன்புறுத்தியும் வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கந்து வட்டி கும்பலை சேர்ந்த ஒருவரை, அப்பகுதியை சேர்ந்த ராவேந்திரன் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், இன்று ராவேந்திரன் ஆட்டோ ஓட்டிக்கொண்டு டி.பெருமாபாளையம் அருகே ஆத்துப்பாலம் பகுதியில் வரும்போது, ஆட்டோவை வழிமறித்த அந்த கும்பல் ராவேந்திரனை சரமாரியாக தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதில் பலத்த படுகாயம் அடைந்த ராவேந்திரன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தகவல் அறிந்த ராவேந்திரனின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ராவேந்திரனை தாக்கிய கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

    இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் தெரிவித்ததை அடுத்து மறியலை கைவிட்டனர். இதனால் மாவட்ட கலெக்டர் அலுவகம் அருகே சுமார் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    • பணத்தை கொடுக்காவிட்டால் மகள்களை கடத்தி விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
    • வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் ஜெயப்பிரகாஷ் வீதியை சேர்ந்த மாடசாமி மனைவி ஆனந்தி(வயது 34). இவர்களுக்கு 13, மற்றும் 14 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் ஆனந்தி பல்லடம் கடைவீதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பல்லடம் பச்சாபாளையத்தை சேர்ந்த தனது உறவினரான கோவிந்தராஜ்- நந்தினி தம்பதியினரிடம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

    வாங்கிய கடன் தொகையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை பல தவணைகளில் ஆனந்தி திருப்பி செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஆனந்தியை பணம் கடன் கொடுத்திருந்த உறவினர் சார்பில் பேசுவதாக கூறி வட்டிக்கு வட்டி போட்டு இன்னும் ரூ. 3 லட்சம் தர வேண்டும் என மிரட்டல் விடுத்து வருவதாகவும் பணத்தை கொடுக்காவிட்டால் ஆனந்தியின் மகள்களை கடத்தி விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தி பள்ளிக்குச் சென்றிருந்த தனது மகள்களை பாதியிலேயே வீட்டுக்கு அழைத்து வந்ததோடு தனக்கு நடந்த கந்துவட்டி கொடுமை குறித்தும் மிரட்டல் விடுக்கும் நபர்கள் குறித்தும் தனது செல்போனில் பேசி அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இது வைரலாகி பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், கந்துவட்டி கொடுமை குறித்தும், கந்துவட்டி கும்பலிடம் இருந்து தன்னையும், தனது மகள்களையும் காப்பாற்றுமாறு, பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கந்துவட்டி கொடுமையால் பெண் பூ வியாபாரி வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பல்லடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×