search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமண மோசடி"

    • சத்யாவின் நடத்தையில் அவரது கணவருக்கு சந்தேகம் எழுந்தது.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாராபுரம்:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் சத்யா (வயது 30). இவருக்கும், திருமணத்திற்கு பெண் பார்த்து வந்த திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் ஒருவருக்கும் இடையே செல்போன் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சென்று அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இந்த தம்பதிகள் தாராபுரம் வந்து குடும்பம் நடத்தினர்.

    அப்போது சத்யாவின் நடத்தையில் அவரது கணவருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் சத்யா மீது தாராபுரம் போலீசில் அவரது புதுக்கணவர் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சத்யாவை அழைத்து விசாரித்தபோது அவர் சிறிது நேரத்தில் வருகிறேன் என்று கூறிவிட்டு தலைமறைவானார். அதன்பின்னர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சத்யாவை பிடித்து வந்து விசாரித்தனர். விசாரணையில், சத்யா சென்னையை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதும், அடுத்து கரூரைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டரை கரம் பிடித்ததும், பின்னர் மாட்டு வியாபாரி ஒருவரை ஏமாற்றி பணம் பெற்றதும், அடுத்து மற்றொரு வாலிபரை பதிவு திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி குழந்தை பெற்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து போலீசார் சத்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் சத்யாவின் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பெண் புரோக்கரான கரூர் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வி (32) என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தமிழ்செல்வியை தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அள்ளி ராணி தலைமையிலான போலீசார் கரூர் அருகே வைத்து கைது செய்தனர். பின்னர் அவரை தாராபுரம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை அவர், போலீசாரிடம் கூறியுள்ளார். தமிழ்செல்வி திருமணமாகி முதல் கணவரை பிரிந்து தற்போது வேறு ஒருவருடன் வசித்து வருகிறார். சத்யாவுக்கும் தமிழ்ச்செல்விக்கும் இடையே கடந்த 2021-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. அப்போதுதான் பேஸ்புக் மற்றும் ஆன்லைன் வழியாக பெண் பார்ப்பவர்களை நோட்டமிட்டு பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி பெண் பார்ப்பவர்களை புரோக்கர் என அறிமுகமாகி சத்யாவின் படத்தை அனுப்பி திருமணத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்செல்வி செய்துள்ளார்.

    குறிப்பாக வசதி படைத்தவர்களை மட்டும் தேர்வு செய்து திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்காக புரோக்கர் கமிஷனாக ஒரு தொகையை வாங்கிக் கொண்டு சத்யாவுக்கு தாய், தந்தை, உறவினர் என ஒரு சிலரை ஏற்பாடு செய்து எளிமையான முறையில் திருமணம் நடத்தி வைத்துள்ளார். மேலும் சத்யா எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர், அவருக்கு நீங்கள் தான் நகை போட்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் நிர்பந்தம் செய்துள்ளனர். அவர்கள் பெண் கிடைத்தால் போதும் என்று சத்யாவுக்கு 10 முதல் 20 பவுன் நகை வரை கொடுத்து திருமணம் செய்து கொள்வார்கள். இரண்டு நாட்கள் முதல் ஒரு வாரம் வரை திருமணமானவர்களுடன் குடும்பம் நடத்தி விட்டு பின்னர் நகை, பணத்துடன் அங்கிருந்து சத்யா, கரூர் சென்று விடுவார்.

    இதேபோல் 20-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்- மனைவியாக வாழ்வதற்கும் தமிழ்செல்வி சத்யாவை பயன்படுத்தியுள்ளார். 30-க்கும் மேற்பட்டோர் உடன் தனிமையில் இருப்பதை வீடியோ மற்றும் போட்டோக்களை எடுத்துக் கொண்டு அவர்களை மிரட்டி ரூ.10 முதல் 20 லட்சம் வரை பணம் பறித்துள்ளனர். இவ்வாறு 53 பேரிடம் ஏமாற்றி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். மேலும் சத்யாவின் பெயரில் கொடுமுடி அருகே ரூ.4 கோடி மதிப்பிலான இடம் வாங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. திருமணத்திற்காக போடப்பட்ட நகைகள் அனைத்தையும் புரோக்கர் தமிழ்ச்செல்வி பெயரில் வங்கி லாக்கரில் பதுக்கி வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டாக்டரை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் இர்ஷானா போலீசாரிடம் சிக்கினார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்து வாழ்ந்து வந்தார். அதேநேரத்தில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்தது அந்த டாக்டர் கர்நாடகா மாநிலத்துக்கு சென்றுவிட்டார். அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்தார்.

    அப்போது ஒரு கும்பல் அவரிடம் காசர்கோடு நீலேஸ்வரம் பகுதியை சேர்ந்த இர்ஷானா(வயது34) என்ற இளம்பெண்ணை அறிமுகம் செய்து வைத்தது. இர்ஷானாவை திருமணம் செய்து கொள்ளும் வகையில் அந்த கும்பல் டாக்டரிடம் பேசியிருக்கிறது. இளம்பெண் என்பதால் அதற்கு டாக்டரும் சம்மதித்திருக்கிறார்.

    இதையடுத்து இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இர்ஷானாவின் சகோதரர் என்று அறிமுகமாக ஒரு நபர் உள்ளிட்டோர் கோழிக்கோட்டில் வைத்து இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். திருமணம் முடிந்ததும் இருவரையும் குடியமர்த்த வீடு பார்க்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

    அதன்பேரில் டாக்டர் ரூ.5 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்டதும் டாக்டரை ஒரு மசூதி முன்பு விட்டு விட்டு இர்ஷானா உள்ளிட்ட அனைவரும் மாயமாகினர். அவர்கள் டாக்டரின் செல்போன், டேப் உள்ளிட்டவற்றையும் எடுத்துக்கொண்டு மாயமாகிவிட்டனர். அதன்பிறகே இர்ஷானா உள்ளிட்ட நபர்கள் திருமண மோசடியில் ஈடுபட்டதை டாக்டர் அறிந்தார்.

    தன்னிடம் திருமண மோசடியில் ஈடுபட்ட கும்பல் பற்றி கோழிக்கோடு போலீசில் டாக்டர் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுபிரசாத் தலைமையிலான போலீசார் மோசடி கும்பலை தேடிவந்தனர். இந்நிலையில் டாக்டரை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் இர்ஷானா போலீசாரிடம் சிக்கினார்.

    அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் திருமண மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இர்ஷானா, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடி சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த கும்பல் இதுபோன்று வேறு யாரையும் ஏமாற்றி பணம் பறித்தார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • விவாகரத்து பெற்றவர்களை மேட்ரிமோனி மூலம் தொடர்பு கொண்டு இவர் ஏமாற்றியுள்ளார்.
    • பல பெண்களிடம் கட்டாயப்படுத்தி பணம் பறித்துள்ளார்.

    தன்னை போலீஸ் அதிகாரி என கூறி 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய 34 வயது நபரை புவனேஸ்வரில் போலீசார் கைது செய்தனர்.

    திருமணம் செய்து ஏமாற்றியதாக 2 பெண்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பெண் போலீஸ் அதிகாரியை அவரிடம் பேச வைத்து பொறிவைத்து அவரை போலீசார் பிடித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட சத்யஜித் சமாலிடம் இருந்து ரூ.2.10 லட்சம் ரொக்க பணம், கார், மோட்டார் சைக்கிள், துப்பாக்கி, வெடிமருந்துகளை போலீசார் கைப்பற்றினர். அவரின் 3 வங்கிக்கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்.

    அவரது 5 மனைவிகளில் 2 பேர் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என்பது ஒருவர் கொல்கத்தா மற்றும் இன்னொருவர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஐந்தாவது பெண்ணின் விவரங்கள் காவல்துறைக்கு இன்னும் கிடைக்கவில்லை.

    இளம் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களை மேட்ரிமோனி மூலம் தொடர்பு கொண்டு இவர் ஏமாற்றியுள்ளார்.

    திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பல பெண்களிடம் கட்டாயப்படுத்தி பணம் பறித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்த பின்னர் பணத்தை திரும்ப கேட்டால் துப்பாக்கியை காட்டி அவர் மிரட்டி உள்ளார்.

    போலீசாரின் விசாரணையில் அவர் மேட்ரிமோனியில் ஒரே நேரத்தில் 49 பெண்களுடன் திருமணம் தொடர்பாக பேசி வந்தது தெரிய வந்துள்ளது.

    அவரால் ஏமாற்றப்பட்ட பல பெண்கள் இதன் பிறகு புகார் கொடுக்க வருவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • 34 வயது நபருக்கு கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது.
    • திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகியும் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை.

    32 வயது என நினைத்து திருமணம் செய்த தனது மனைவியின் வயது 40 என தெரிய வந்ததும் 34 வயதான அவரது கணவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

    குஜராத் மாநிலம் சர்கேஜ் பகுதியைச் சேர்ந்த 34 வயது நபருக்கு கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. அப்போது அவரது மனைவியின் வயது 32 என பெண் வீட்டார் கூறியுள்ளனர். அந்த பெண் 1991 ஆம் ஆண்டு மே மாதம் பிறந்ததாக அவரது பாஸ்போர்ட்டை பெண் வீட்டார் காட்டியுள்ளனர்.

    இந்நிலையில் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றுள்ளனர்.

    அப்போது இயற்கையான முறையில் அப்பெண்ணால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் அப்பெண்ணிற்கு குறைந்தது 40 - 42 வயது இருக்கும் என்றும் மருத்துவ அறிக்கைகள் வெளியானது.

    இதனை பார்த்ததும் அதிர்ச்சியான கணவர் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலியான ஆவணம் கொடுத்து மோசடி செய்து திருமணம் செய்ததாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    இதனையடுத்து அவரது மனைவி, மாமனார் மற்றும் உறவினர்கள் என 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • விவாகரத்தான மற்றும் கணவரை இழந்த பெண்களை குறிவைத்து திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்.
    • பணம், லேப்டாப் போன்ற பொருட்களை திருடிச் செல்வதை அவர் வாடிக்கையாக வைத்துள்ளார்.

    நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி அவர்களிடம் இருந்து விலைமதிப்புள்ள பெருட்களை கெள்ளையடித்த 43 வயது நபர் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்ட பிரோஸ் நியாஸ் ஷேக் என்பவர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி மற்றும் குஜராத் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2015 முதல் 20 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார்.

    இது தொடர்பாக கடந்தாண்டு பெண் ஒருவர் அளித்த புகாரில் பிரோஸ் நியாஸ் ஷேக்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    அவர் மேட்ரிமோனி இணையதளத்தில் புகார் கொடுத்த பெண்ணிடம் பேசி பழகி திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் அந்த பெண்ணிடம் இருந்துரோ.6.5 லட்சம் மதிப்புள்ள ரொக்க பணம், மடிக்கணினி உள்ளிட்ட மதிப்புமிக்க சில பொருட்களை அவர் சென்றுள்ளார்.

    கைது செய்யப்பட்டவரிடம் இருந்து மடிக்கணினி, மொபைல் போன்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் நகைகளை போலீசார் மீட்டனர்.

    2015 முதல் விவாகரத்தான மற்றும் கணவரை இழந்த பெண்களை குறிவைத்து மேட்ரிமோனியில் பேசி பழகி திருமணம் செய்து அவர்களின் பணம், லேப்டாப் போன்ற பொருட்களை திருடிச் செல்வதை அவர் வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • சந்தோஷ் குமாருக்கும் இளம்பெண்ணுக்கும் நாளை திருமணம் நடத்த தேதி நிச்சயம் செய்து தடபுடலாக ஏற்பாடுகளை செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கில்லாடி மாப்பிள்ளையை தேடி வருகின்றனர்.

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் நமண்டி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 33).

    இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். பல ஆண்டுகளாக இவருக்கு திருமணத்திற்காக பெண் தேடும் படலம் நடந்தது. ஆனால் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதால் இவருக்கு பெண் கொடுக்க மறுத்துள்ளனர்.

    வயது 33 ஆகிவிட்டதால் விரைவில் திருமணம் செய்ய வேண்டும் என சந்தோஷ் குமார் முடிவு செய்தார். தனக்கு போலீசில் டி.எஸ்.பி. வேலை கிடைத்துள்ளதாக அந்த பகுதி பொதுமக்களிடம் கூறினார்.

    தற்போது சென்னையில் பயிற்சி டி.எஸ்.பி.யாக வேலை பார்த்து வருவதாக கூறி பெண் பார்க்க தொடங்கினார். இந்த நிலையில் செய்யார் பகுதியை சேர்ந்த பெண்ணை அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    மாப்பிள்ளை சென்னையில் டி.எஸ்.பி. அரசு அதிகாரியாக வேலை பார்க்கிறார். கை நிறைய சம்பளம் வாங்குகிறார் என கூறி வரதட்சணையும் பேசியதாக கூறப்படுகிறது.

    சந்தோஷ் குமாருக்கும் இளம்பெண்ணுக்கும் நாளை திருமணம் நடத்த தேதி நிச்சயம் செய்து தடபுடலாக ஏற்பாடுகளை செய்தனர்.

    திருமண பத்திரிகையில் சந்தோஷ் குமார் காவல்துறை டி.எஸ்.பி (சென்னை) என கம்பீரமாக அச்சடித்தார். அந்த பத்திரிகைகள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பெண் வீட்டிற்கும் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் அப்பாதுரை என்பவருக்கு சந்தோஷ் குமார் டி.எஸ்.பி. இல்லை. அவர் மோசடி செய்து இளம்பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்கிறார் என தகவல் கிடைத்தது.

    அப்பாதுரை இது குறித்து தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் திருமண பத்திரிகையில் சென்னை காவல்துறை டி.எஸ்.பி என அச்சிடப்பட்டிருந்ததை வைத்து விசாரித்தனர்.

    இதில் அவர் சென்னை காவல்துறையில் பணிபுரியவில்லை என்பது உறுதியானது. போலீசார் சந்தோஷ் குமாரின் குடும்பத்தினரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்பொழுதுதான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சந்தோஷ் குமார் போலீஸ் டி.எஸ்.பி. என மோசடி செய்து திருமணம் செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. போலீசார் விசாரிப்பது குறித்து தகவல் அறிந்த சந்தோஷ்குமார் தலைமறைவானார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கில்லாடி மாப்பிள்ளையை தேடி வருகின்றனர். நாளை திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் மாப்பிள்ளை மோசடி செய்தது தெரிய வந்ததால் பெண் வீட்டார் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

    • திருமணம் செய்து வைப்பதாக கூறி ஏமாற்றி ரூ.3.50 லட்சம் பணத்தை பெற்ற பெண் புரோக்கர் தனலட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகார் மனு.
    • புகாரின் பேரில் போலீசார் பெண் புரோக்கர் தனலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூரை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 43). பிட்டர். இவர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் தனியார் நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு ஒரு அண்ணன் மற்றும் தம்பி ஆகியோர் உள்ளனர். எனக்கு 43 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் எனக்கு தங்கை முறையான திருப்பூரை சேர்ந்த உமா மகேஸ்வரி என்பவர் மூலம் மதுரையை சேர்ந்த திருமண புரோக்கர் தனலட்சுமி என்பவர் அறிமுகமானார்.

    அவரிடம் எனக்கு திருமணம் செய்வதற்கு பெண் பார்க்கும்படி கூறினேன். அதற்கு அவர் பெண் ஒருவர் இருப்பதாகவும், புரோக்கர் கமிஷனாக ரூ.3.50 லட்சம் பணம் தர வேண்டும் என்றார். இதனை உண்மை என நம்பிய நான் ரூ.3.50 லட்சம் பணத்தை புரோக்கர் தனலட்சுமியிடம் கொடுத்தேன்.

    கடந்த 21-ந்தேதி எனக்கும், 30 வயது பெண் ஒருவருக்கும் திருப்பூர் அவினாசி நகர் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. பின்னர் நான் மணப்பெண்ணுடன் வீட்டிற்கு சென்றேன். நேற்று மதியம் கோவிலுக்கு செல்வதற்காக புறப்பட்டு கொண்டு இருந்தேன். அப்போது நான் திருமணம் செய்த பெண், என்னிடம் வந்து அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாக தெரிவித்தார்.

    மேலும் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த போது அங்கு வந்த புரோக்கர் தனலட்சுமி ரூ.20 ஆயிரம் பணம் தருவதாக கூறி திருமணம் செய்து வைத்ததாக கூறினார். இதனை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.

    எனவே எனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி ஏமாற்றி ரூ.3.50 லட்சம் பணத்தை பெற்ற பெண் புரோக்கர் தனலட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் பெண் புரோக்கர் தனலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக நீடித்த சம்பவத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
    • மயக்கமடைந்த நிலையில் இருந்த இளம்பெண்ணை சிகிச்சைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் மேட்ரிமோனி மூலம் திருமணம் செய்துகொள்வதாக கூறி திருமண நிச்சயதார்த்தம் செய்த பிறகு ஏமாற்றுவதாக சென்னையை சேர்ந்த இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கிருஷ்ணகிரி - பெங்களூரு பழைய சாலையில் பைனான்ஸ் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் குணசேகரன் (வயது 30). இவர் திருமணத்திற்காக பெண் தேடி வந்த நிலையில் மேட்ரிமோனி மூலமாக கூடுவாஞ்சேரியை சேர்ந்த 26 வயதான இளம்பெண்ணை பார்த்து பேசி பழகி வந்துள்ளார்.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குணசேகரன் மற்றும் இளம்பெண் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது.

    இந்நிலையில், கிருஷ்ணகிரி- பெங்களூரு பழைய சாலையில் குணசேகரன் நடத்திவரும் அலுவலகத்தின் முதல் தளத்தின் பாதுகாப்பு சுவர் மீது அமர்ந்து இளம்பெண் தற்கொலை செய்துகொள்வதாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தன்னை திருமணம் செய்துகொள்வதாக நிச்சயதார்த்தம் செய்துவிட்டு தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றுவதாகவும், பலமுறை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியும் மறுப்பு தெரிவிக்கிறார். என்னிடம் பேசுவதில்லை, என்னுடைய செல்போன் எண்ணை எடுக்கவில்லை. அதனால் குணசேகரன் இங்கு வரவேண்டும். இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என இளம்பெண் தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக நீடித்த சம்பவத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில், இளம்பெண் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தெரிவித்த கட்டிடத்தின் அருகே உள்ள மற்றொரு கட்டிடத்தில் இருந்த சுகுமார் என்ற வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளம்பெண்ணை பின்புறமாக பிடித்து இழுத்து அமர வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    இதையடுத்து மயக்கமடைந்த நிலையில் இருந்த இளம்பெண்ணை சிகிச்சைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • புதுச்சேரி முத்தியால்பேட்டை கோவை நகரை சேர்ந்த முகமது ஷாபான், ரகமதுல்லா என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளார்.
    • ஆன்லைன் மூலமாக அப்பாவி பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து நகைகளை பறிக்கும் செயலை நீண்ட நாட்களாகவே முகமது ஷாபான் செய்து வந்துள்ளார்.

    சென்னை:

    கணவரை பிரிந்து வாழும் பெண்கள், விவாகரத்தான பெண்கள் ஆகியோரை குறிவைத்து ஆன்லைனில் அவர்களோடு பழகி ஏமாற்றி காதல் மன்னனாக வலம் வந்த முகமது ஷாபான் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னையை சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். 2-வது திருமணத்துக்காக வரன் தேடிக் கொண்டிருக்கும் அவருடன் முகமது ஷாபான் என்ற வாலிபர் ஆன்லைன் மூலமாக அறிமுகமானார். புதுச்சேரியை சேர்ந்த இவர் தன்னை மிகப்பெரிய பணக்காரர் போல காட்டிக்கொண்டு பழகியுள்ளார்.

    முகமது ஷாபானுக்கு 36 வயது என்பதை அறிந்ததும் அந்த பெண் தன்னைவிட வயதில் சிறியவரை திருமணம் செய்வதா? என்று நினைத்து விலக முயற்சித்துள்ளார். இருப்பினும் கணவரை பிரிந்த பெண்களையோ அல்லது விவாகரத்தான பெண்களையோ தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது எனது லட்சியமாகும் என்று கூறி ஏமாற்றிய முகமது ஷாபான் கொஞ்சம் கொஞ்சமாக 415 பவுன் நகைகளை சுருட்டியுள்ளார்.

    அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள நம்பிக்கை ஆவணங்கள் மோசடி பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத் ள்ளனர்.

    முகமது ஷாபான் 20-க்கும் மேற்பட்ட பெண்களை இதுபோன்று மோசடியாக ஏமாற்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஷாபான் பெண்களை ஏமாற்றுவதை தனி கலைபோல கற்று வைத்திருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட பரபரப்பான தகவல்கள் வருமாறு:-

    புதுச்சேரி முத்தியால்பேட்டை கோவை நகரை சேர்ந்த முகமது ஷாபான், ரகமதுல்லா என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளார். அவர் ஆன்லைன் மூலமாக அப்பாவி பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து நகைகளை பறிக்கும் செயலை நீண்ட நாட்களாகவே செய்து வந்துள்ளார்.

    இதற்காக ஒரு கம்ப்யூட்டர், லேப்டாப், 3 செல்போன்கள் ஆகியவற்றை முகமது ஷாபான் பயன்படுத்தியுள்ளார். 5 சிம்கார்டுகளை போட்டு செல்போனில் பேசுவது, சாட்டிங் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு இளம்பெண்களை குறிவைத்து ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

    ஆன்லைன் மூலமாக பழகிய சென்னை பெண் வைத்துள்ள நகைகள் மீது செய்வினை வைக்கப்பட்டுள்ளது. அப்படியே அதனை வீட்டில் வைத்திருந்தால் ஆபத்து என்று அச்சுறுத்தியுள்ளார். இந்த நகைகளை மசூதியில் வைத்து பூஜை செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

    இதை நம்பி சென்னை பெண் தனது நகைகளை எடுத்து வந்து கொடுத்துள்ளார். இப்படியே 415 பவுன் நகைகளை சுருட்டிய முகமது ஷாபான் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதால் போலீசில் சிக்கியுள்ளார். இதுபோன்ற மேலும் பல பெண்களை முகமது ஷாபான் ஏமாற்றி இருப்பதால் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இது தவிர நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

    போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் நிஷா, உதவி கமிஷனர் ஜான் விக்டர் மற்றும் இன்ஸ்பெக்டர் மேனகா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரன் ஆகியோர் இந்த வழக்கில் துப்பு துலக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • துமகூருவில் கிளினிக் இருப்பதாகவும் ஒரு போலியான தகவலை பதிவிட்டு, ஒரு செவிலியரையும் நியமித்துள்ளார்.
    • மைசூரைச் சேர்ந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நபர், 15 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெங்களூரு பனசங்கரி பகுதியைச் சேர்ந்த மகேஷ் கே.பி.நாயக் (வயது 35) என்ற நபர், திருமண தகவல் இணையதளங்களில் போலியான சுய விவரத்தை உருவாக்கி வரன் தேடி உள்ளார். பெண்களை கவருவதற்காக பெரும்பாலான சமயங்களில் டாக்டர், என்ஜினீயர் என பதிவிட்டுள்ளார். துமகூருவில் கிளினிக் இருப்பதாக ஒரு போலியான தகவலை பதிவிட்டு, ஒரு செவிலியரையும் நியமித்துள்ளார்.

    இதை நம்பி பல பெண்கள் இவரிடம் ஏமாந்துள்ளனர். 2014ம் ஆண்டில் இருந்து இதுவரை 15 பெண்களை திருமணம் செய்து சில காலம் குடும்பம் நடத்திவிட்டு அவர்களின் பணம், நகைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார் மகேஷ். அத்துடன், இந்த பெண்களுடன் குடும்பம் நடத்தி 4 குழந்தைகளையும் பெற்றுள்ளார்.

    இந்நிலையில், சமீபத்தில் இவரை திருமணம் செய்து கொண்ட மைசூரைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் அளித்த புகாரைத் தொடர்ந்து மகேஷ் வசமாக சிக்கி உள்ளார். போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து, நேற்று துமகூருவில் வைத்து அவரை கைது செய்தனர். இதேபோல் அவரிடம் ஏமாந்த மற்றொரு பெண்ணும் புகார் அளித்துள்ளார்.

    • எனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தி வருவது தற்போது தெரியவந்தது.
    • எனக்கும் என் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை ஏற்படுத்திய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன்.

    நாகர்கோவில்:

    மயக்கும் பேச்சு, ஆடம்பர வாழ்க்கை போன்றவற்றால் இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஏமாறும் பெண்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றனர். அந்த வகையில் டாக்டர் என ஆசைவார்த்தை கூறியவரை நம்பி, 2 குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார் நர்சு ஒருவர். கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவர தற்போது தனது வாழ்க்கைக்கு வழி கேட்டு போலீசில் புகார் கொடுத்து கண்ணீருடன் நிற்கிறார் அவர். இது பற்றிய விவரம் வருமாறு:-

    கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே உள்ள அருமநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், திட்டுவிளை பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். அப்போது அங்கு மதம் மாறி விட்டதால், சுன்னத் செய்ய வேண்டும் என ஒரு வாலிபர் வந்துள்ளார். அவர் தான், நர்சை தன் வலையில் வீழ்த்தி தற்போது 2 குழந்தைகளுக்கு தாயாக்கி விட்டு, கைவிட்டுள்ளார். இது பற்றி பாதிக்கப்பட்ட நர்சு போலீசில் கூறியதாவது:-

    சுன்னத் செய்வதற்காக வந்த வாலிபர், தான் ஒரு டாக்டர் என என்னிடம் அறிமுகமானார். சேலம் மாவட்டத்தில் கிளினீக் மற்றும் லேப் வைத்துள்ளதாக கூறிய அவர், இணையதளத்தில் அதன் விவரங்களை என்னிடம் காண்பித்தார். அதில் கிளினீக் படம் மற்றும் டாக்டர் என அவரது பெயர் போன்றவை இருந்தன.

    தொடர்ந்து ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர், எனது கிளினீக் மற்றும் லேப்பில் பணியாற்ற ஒரு நர்சு தேவை என்றும் நல்ல சம்பளம் தருகிறேன் என்றும் கூறினார். மேலும் தான் ஒரு அனாதை எனவும் மருத்துவராகி பணமும் மரியாதையும் கிடைத்தாலும் அன்பு காட்டுவதற்கு யாரும் இல்லை எனவும் நைசாக பேசினார்.

    அவரது மோசடி வார்த்தைகளை நம்பிய என்னை காதல் வலையில் வீழ்த்தினார். பின்னர் ஒரு மாதத்தில் சேலம் அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்தோம்.

    ஆனால் சில நாட்களில் கணவர், மருத்துவர் இல்லை என்பதும் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருபவர் என்பதும் தெரிய வர நான் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் அவர் 10-ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை என்பதும் தெரியவந்தது.

    இதுபற்றி கேட்டபோது, குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து தாக்கினார். இந்த நிலையில் எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தன. இதனால் வேறு வழியின்றி அவருடன் தொடர்ந்து குடும்பம் நடத்தினேன்.

    இதற்கிடையில் அவருக்கு வேறு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி கேட்டபோது எங்களுக்குள் தகராறு அதிகமானது. 2 குழந்தைகளையும் என்னையும் அருமநல்லூர் அழைத்து வந்த கணவர், வெளிநாட்டு வேலைக்கு செல்வதாக தெரிவித்தார். அவர் திருந்தினால் சரி என்றேன்.

    வெளிநாட்டு வேலைக்குச் செல்ல பணம் வேண்டும் என்று கேட்டார். இதனால் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கடன் வாங்கி கொடுத்தேன். தொடர்ந்து வெளிநாடு சென்ற அவர் அங்கும் சரியாக வேலை பார்க்காமல் ஊர் திரும்பி விட்டார்.

    இந்த நிலையில் எனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தி வருவது தற்போது தெரியவந்தது. இதனால் நான் அதிர்ச்சிக்குள்ளானேன்.

    எனக்கும் என் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை ஏற்படுத்திய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபற்றி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு என பலருக்கும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பூதப்பாண்டி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு வழிகாட்டுதல் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ராம் பாலாஜி, திருமணம் செய்ய போகும் பெண்தானே என நினைத்து வித்யா ஸ்ரீ கேட்கும் போதெல்லாம் பணத்தை வாரி இறைத்துள்ளார்.
    • வித்யா ஸ்ரீ -அஜித்குமார் இருவரையும் வாடிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    சென்னை:

    சென்னை போரூர் முகலிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ராம் பாலாஜி. தொழில் அதிபரான இவர், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.

    மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் ராம் பாலாஜி மதுரையில் திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். அப்போது வித்யா ஸ்ரீ என்ற 31 வயது இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. வித்யா ஸ்ரீ தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு இனிக்க இனிக்க பேசினார்.

    இதையடுத்து ராம் பாலாஜியின் செல்போன் எண்ணையும் அவர் வாங்கிக் கொண்டார். திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ராம்பாலாஜி சென்னை திரும்பிய பின்னர் செல்போனில் தொடர்பு கொண்டு வித்யா ஸ்ரீ பேசி வந்தார். அப்போது உங்களை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி காதலில் வீழ்த்தினார்.

    நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வித்யா ஸ்ரீ கூறினார். இதற்கு ராம் பாலாஜியும் சம்மதித்தார்.

    ராம் பாலாஜியிடம் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட வித்யா ஸ்ரீ கொஞ்சம் கொஞ்சமாக பணம் பறித்துள்ளார். தனது செலவுகளை கூறி வங்கி கணக்கையும் வித்யா ஸ்ரீ அனுப்பி வைத்துள்ளார்.

    இதையடுத்து ராம் பாலாஜி, திருமணம் செய்ய போகும் பெண்தானே என நினைத்து வித்யா ஸ்ரீ கேட்கும் போதெல்லாம் பணத்தை வாரி இறைத்துள்ளார். இப்படி ராம் பாலாஜியிடம் இருந்து வித்யா ஸ்ரீ ரூ.50 லட்சம் பணத்தை சுருட்டினார்.

    ராம் பாலாஜி திருமணம் பற்றி பேசும்போதெல்லாம் வித்யா ஸ்ரீ சாக்கு போக்கு சொல்லி காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வித்யா ஸ்ரீயை ராம் பாலாஜியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராம் பாலாஜி இதுபற்றி விசாரித்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மதுரை அலங்காநல்லூரை அடுத்த சிக்கந்த சாவடி பகுதியில் வசித்து வந்த வித்யா ஸ்ரீ வீட்டை காலி செய்துவிட்டு ஓட்டம் பிடித்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ராம் பாலாஜி தான் ஏமாற்றப்பட்டது குறித்து அலங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து வித்யா ஸ்ரீயை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். அவரது நண்பரான அஜித்குமாரும் பிடிபட்டார். ராம்பாலாஜி இடமிருந்து ரூ.50 லட்சம் பணத்தை சுருட்டியதற்கு அஜித்குமார் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    வித்யா ஸ்ரீ -அஜித்குமார் இருவரையும் வாடிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். வித்யா ஸ்ரீ இதுபோன்று வேறு யாரையும் ஏமாற்றி உள்ளாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×