search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சிபுரம்"

    • குன்றத்தூர் வட்டத்தில் மணிமங்கலம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
    • நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (8-ந்தேதி) காலை 10 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் கோளிவாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் ராவத்தநல்லூர், வாலாஜாபாத் வட்டத்தில் பூசிவாக்கம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் சிறுமாங்காடு, குன்றத்தூர் வட்டத்தில் மணிமங்கலம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    கிராமங்களில் வசித்துவரும் பொது மக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு, மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • காஞ்சிபுரத்துக்கு சுற்றுலா வருபவர்கள் கோவில்களை பார்த்து விட்டு நெசவு பட்டுச்சேலைகள் வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டுவார்கள்.
    • போக்குவரத்து புதிய விதி மீறல்களால் ஏற்படும் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கோவில்கள் நிறைந்த ஆன்மிக சுற்றுலா தலமாகவும், பட்டுச்சேலைக்கு பிரபலமானதாகவும் திகழ்கிறது. இங்குள்ள காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், அத்திவரதர் உற்சவம் பிரசித்தி பெற்றது.

    இதனால் காஞ்சிபுரத்திற்கு சுற்றுலாவாக தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். அவர்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்து விட்டு பட்டுச்சேலைகள் வாங்கிச் செல்வது வழக்கம். இதன் காரணமாக காஞ்சிபுரம் நகரில் தினந்தோறும் லட்சக்கணக்கான வியாபாரம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சுற்றுலா வேன், பஸ்கள் நகருக்குள் வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பஸ், வேன்களில் வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை சுமார் 2 கி.மீட்டர் தூரத்திற்கு முன்பே நிறுத்தி விட்டு நடந்து வரும் நிலை உள்ளது.

    தற்போது வெயில் அதிகரித்து வரும் நிலையில் மதியம் நேரங்களில் கொளுத்தும் வெயிலில் சுற்றுலா பயணிகள் சிரமத்துடன் நடந்து செல்கிறார்கள்.

    இதில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் நிலைமை மோசமாக உள்ளது.

    மேலும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள ஒவ்வொரு கோவில்களுக்கும் நடந்து செல்லும் நிலை உள்ளதால் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் பட்டுச்சேலை வாங்கி செல்ல விரும்புவார்கள். தற்போது உள்ள போக்குவரத்து புதிய விதியால் பட்டுச்சேலை கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டு இருப்பதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது, இந்த புதிய போக்குவரத்து விதிமுறையால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    காஞ்சிபுரத்துக்கு சுற்றுலா வருபவர்கள் கோவில்களை பார்த்து விட்டு நெசவு பட்டுச்சேலைகள் வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது பட்டுச்சேலை கடைகளுக்கு சுற்றுலா பயணிகள் வருகை எண்ணிக்கை குறைந்து உள்ளது.

    அவர்கள் கார் அல்லது ஆட்டோவை கூடுதலாக வாடகைக்கு எடுத்து செல்லும் நிலை உள்ளது. இதனால் நகருக்குள் மேலும் போக்குவர்தது நெரிசல் அதிகம் ஆகும்.

    சுற்றுலா பயணிகள் காஞ்சிபுரத்தை தேர்வு செய்து வர இனி தயங்குவார்கள். போக்குவரத்து புதிய விதி மீறல்களால் ஏற்படும் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'காஞ்சிபுரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளது' என்றார்.

    சுற்றுலா பயணிகள் கூறும்போது, 'காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்றுலா பயணிகளை பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படியானால் தான் காஞ்சிபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும், வியாபாரமும் பாதிக்காது' என்றார்.

    • இதுவரை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் முகாம் நடைபெற்று வந்தது.
    • வரும் 27ம் தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம், ஒவ்வொரு மாதத்திலும் இரண்டாவது மற்றும் நான்காவது செவ்வாய்க்கிழமைகளில் அரசு மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள அஞ்சுகம் திருமண மண்டபத்தில் இதுவரை நடைபெற்று வந்தது.

    27-9-2022 அன்று அஞ்சுகம் திருமண மண்டபத்தில் வேறு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் அன்றைய முகாம் மட்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல், நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்-5 ஆகியவற்றுடன் முகாம் நடைபெறும் இடத்தில் குறித்த நேரத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றி முககவசம் அணிந்து கலந்துகொண்டு, தேசிய அடையாள அட்டை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • பொதுமக்களிடம் இருந்து 212 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்
    • முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு நவீன செயற்கை கால்கள் வழங்கப்பட்டன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 212 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கை, கால் இயக்க குறைபாடுள்ள 7 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு ரூ.11,24,000/- மதிப்புள்ள நவீன செயற்கை கால்கள் வழங்கப்பட்டது. மேலும் கேட்புதிறன் குறைபாடுள்ள 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13,900/- மதிப்புள்ள காதொலி கருவிகள் மற்றும் மக்கள் குறை தீா்க்கும் நாளில் மனு வழங்கிய காஞ்சிபுரம் வட்டம் நாியம்புதூர் கிராமத்தை சோ்ந்த மீனா என்கிற பழங்குடி இனத்தை சோ்ந்த பெண்ணுக்கு ரூ.5,000/- மதிப்பிலான இலவச தையல் இயந்திரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கு.பிரகாஷ் வேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பாலாற்று கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது
    • மருத்துவமனையில் கீழ் தளத்தில் ஏற்படும் வெள்ளத்திலிருந்து நோயாளிகளை மீட்டு முதல் தளத்திற்கு கொண்டு செல்லும் ஒத்திகை

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் கீழ்கண்ட 5 இடங்களில் வெள்ள மீட்பு ஒத்திகை பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி தொடங்கி வைத்தார்.

    மாவட்டத்தில் ஒத்திகை பயிற்சி நடைபெற்ற இடங்கள்

    1. குன்றத்தூர் வட்டம், வரதராஜபுரம், மகாலட்சுமி நகர் பகுதியில் முன்னெச்சரிக்கை செய்து அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் ஒத்திகை பயிற்சியினை உதவி ஆணையர் (கலால்) காஞ்சிபுரம் தலைமையில் நடைபெற்றது

    2. குன்றத்தூர் வட்டம், வரதராஜபுரம் - புவனேஸ்வரி நகர் பகுதியில் வெள்ளத்தால் நீர் சூழ்ந்த பகுதியில் மாட்டிக்கொண்ட மக்களை காப்பற்றி நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லுதல் அவர்களுக்கு போதிய மருத்துவ வசதிகளை மேற்கொள்ளுதல் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நபர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தல் போன்ற மீட்பு மற்றும் நிவாரண ஒத்திகையினை கோட்டாட்சியர் திருபெரும்புதூர் தலைமையில் நடைபெற்றது.


    3. வாலாஜாபாத் வட்டம், வில்லிவலம் கிராமம் பாலாற்று கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் மற்றும் பாலாற்றில் அடித்துச்செல்லும் நபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுதல் மற்றும் கால்நடைகளை பாலாற்று வெள்ளத்திலிருந்து காப்பாற்றி மருத்துவ உதவி செய்யும் ஒத்திகையானது கோட்டாட்சியர் காஞ்சிபுரம் தலைமையில் நடைபெற்றது

    4. காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் கீழ் தளத்தில் ஏற்படும் வெள்ளத்திலிருந்து நோயாளிகளை மீட்டு முதல் தளத்திற்கு கொண்டு செல்லும் ஒத்திகையினை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

    5. காஞ்சிபுரம் வட்டம் சிட்டியம்பாக்கம் குறுவட்டம் சிங்காடி வாக்கம் தி/ள் ஸ்டால் இந்தியா தொழிற்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தொழிற்சாலை ஆய்வாளர் அவர்கள் திருப்பெரும்புதூர் மூலம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

    • கலெக்டர் மா.ஆர்த்தி தேசியக்கொடி ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
    • கீழ்கதிர்பூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி பங்கேற்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கீழ்கதிர்பூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள அண்ணல் காந்தியடிகள் உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் நடைபெற்ற சமபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி கலந்துகொண்டு, பொதுமக்களுடன் உணவருந்தினார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

    • கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றி வரும் தகுதியுள்ள நிரந்தர பணியாளர்கள் சேரலாம்.
    • காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு நிறுவனம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர் உமாபதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு கூட்டுறவு பட்டயப் பயிற்சி முடிக்காத நிரந்தர பணியாளர்களுக்கு மட்டும் 22-வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி 2022-2023-ம் ஆண்டுக்கு தொடங்கப்பட உள்ளது.

    இப்பயிற்சிக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றி வரும் தகுதியுள்ள நிரந்தர பணியாளர்கள் சேரலாம்.

    பயிற்சி கட்டணம் ரூ.15,050 ஆகும். விண்ணப்பத்தினை காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் நேரிடையாக ரூ.100 ரொக்கமாக மட்டுமே செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும்.

    விண்ணப்பங்கள் 28.7.22 தேதி வரையில் (விடுமுறை நீங்கலாக) வழங்கப்படும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 1.8.22. இதர விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 044-27237699-ஐ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்திட முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் 800 இளைஞர்களை தேர்வு செய்து பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 01.07.2022 மற்றும் 02.07.2022 ஆகிய இரண்டு நாட்களுக்கு மாவட்ட அளவிலான இளைஞர் திறன் திருவிழா மாவட்ட ஆட்சியரகம் மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முதல் நாளில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், ஆகியோரால் இளைஞர் திறன் பயிற்சிக்கான www.kanchiskills.in என்ற இணையதளம் துவக்கி வைக்கப்பட்டது.

    மேலும் அனைத்து துறைகள் மூலமாக செயல்படுத்தப்படும் பயிற்சி தொடர்பான வேலைவாய்ப்பு விவரங்கள், சுயதொழில் முனைவோருக்கான வழிக்காட்டுதல்கள், திட்டங்கள் மற்றும் மானியத்துடன் கூடிய கடன் வசதிகள் குறித்த விவரங்கள் இளைஞர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக திறன் பயற்சியளிக்கும் அரசுத்துறைகளையும் தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து மாநில அளவில் 388 வட்டாரங்களில் இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்திட முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

    இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 வட்டாரங்களில் தலா 1 வீதம் 5 இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்தப்படவுள்ளது. தீன் தயாள் உபாத்யா கிராமின் கௌசல்யா யோஜானா (DDU-GKY) திட்டமானது 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட ஊரக ஏழை இளைஞர்களுக்கு மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்கள் மூலம் கல்வி தகுதிக்கேற்ப திறன் பயிற்சி அளித்து நிரந்தர வருமானத்திற்கு வேலைவாய்ப்பு பெற்றுதரப்படுகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது வரை DDU - GKY திட்டத்தின் கீழ் 942 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது.

    2022 - 2023 ஆம் நிதியாண்டிற்கு DDU - GKY திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 800 இளைஞர்களை, இளைஞர் திறன் திருவிழா மூலம் வட்டாரம் வாரியாக தேர்வு செய்து பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்பிவைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன் ஒருபகுதியாக மாவட்ட அளவில் இளைஞர் திறன் திருவிழா தற்போது நடத்தப்படுகிறது. முதல்வர் அவர்களின் கனவு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் படித்த / பயிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் (Sectors) குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதன் மூலம் இளைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது. திறன் பயிற்சி பெற்று வாழ்க்கையில் பயன் பெறும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 தொழிற் பிரிவுகளில் (Job Role) குறுகிய கால பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் இம்மாவட்டத்தில் பல்வேறு கல்வித் தகுதிகளில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயிற்சியில் சேர்ந்து வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளார்கள். இம்மாவட்டத்தில் 2021-2022 வரை குறுகிய கால பயிற்சித்திட்டத்தில் 367 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர். தற்போது குறுகிய கால பயிற்சித்திட்டத்தில் 509 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீண்ட கால தொழிற் பயிற்சியாக அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 5 தொழிற் பிரிவுகளில் (MMV, MRAC, Electronic mechanic, Technician Mechatronics, Welder) பயிற்சி அளிக்கப்பட்டு திறன்மிகு பயிற்சியாளர்களாக வேலைவாய்ப்பு பெறக்கூடிய அளவில் மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

    மேலும், இம்மாவட்டத்தில் 2021-2022 வரை நீண்ட கால பயிற்சி பெற்று தொழிற்பழகுநர் பயிற்சித் திட்டத்தில் 190 பயிற்சியாளர்கள் பல்வேறு நிறுவனங்களில் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர். தற்போது நீண்ட கால பயிற்சியில் 119 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

    மேற்கண்ட பயிற்சிகளால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மிகு பயிற்சிகள் அளிக்கப்படுவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், இம்மாவட்டத்தில் திறன் மிகு இளைஞர்கள் உருவாக்கப்பட்டு தொழிற் நிறுவனங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள். மேலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் www.kanchiskills.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி கேட்டுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ. சிவ ருத்ரய்யா, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுரு நாதன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அருணகிரி, காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    • தலைமை நீதிபதிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
    • அருள்மிகு வரதராஜ பெருமாள் மற்றும் தாயாரை தலைமை நீதிபதி வழிபட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அத்திவரதர் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்னை தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி திடீர் வருகை புரிந்தார். சென்னையில் இருந்து கார் மூலம் வந்த தலைமை நீதிபதி முனீஸ்வரன் நாத் பண்டாரி மற்றும் அவரது மனைவி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முனிரத்தினம் கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    அதைத்தொடர்ந்து அவர் அருள்மிகு வரதராஜ பெருமாள் மற்றும் தாயாரை  தலைமை நீதிபதி வணங்கி வழிபட்டார். அவருக்கு அர்ச்சகர்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் அவர் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் ஸ்தானிகர் சியாமா சாஸ்திரிகள் பிரசாதங்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் சென்னை புறப்பட்டு சென்றார்.

    ×