search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிகே சிவக்குமார்"

    • சட்டசபை தேர்தல் வருகிறது.
    • அரசு பணி நியமனங்களிலும் ஊழல் நடந்துள்ளது.

    பெங்களூரு:

    பாகல்கோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு அந்த அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

    நான் நகர வளர்ச்சித்துறை மந்திரியாக இருந்தபோது பாகல்கோட்டையில் காங்கிரஸ் அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கி கொடுத்தேன். இன்று (நேற்று) இந்த அலுவலகத்தை திறந்து வைக்கிறேன். சட்டசபை தேர்தல் வருகிறது. இதற்கு நாம் தயாராக வேண்டும். மத்திய-மாநில பா.ஜனதா அரசுகளின் தோல்வியை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். கர்நாடகத்தில் கொரோனாவால் 4½ லட்சம் பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இந்த அரசு அவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை.

    இந்த பா.ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல்களை அம்பலப்படுத்தி இருக்கிறோம். கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ஊழல், அரசு திட்டங்களில் 40 சதவீத கமிஷன், பணி நியமனத்திற்கு லஞ்சம் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன.

    அரசு பணி நியமனங்களிலும் ஊழல் நடந்துள்ளது. இதை எல்லாம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளுக்கு ரூ.5 கோடி வரை லஞ்சம் வாங்குகிறார்கள்.

    மந்திரி பதவிக்கு ரூ.100 கோடி, முதல்-மந்திரி பதவிக்கு ரூ.2,500 கோடி வழங்க வேண்டும் என்று பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா யத்னால் எம்.எல்.ஏ.வே கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த இந்த அரசுக்கு தைரியம் உள்ளதா?. மக்களின் கஷ்டங்களை தீர்க்க காங்கிரஸ் தயாராக உள்ளது. நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும். வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

    • 2 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.
    • ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையின்போது நோட்டீசு அனுப்பினர்.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், தனக்கு சொந்தமான கல்வி நிலையங்களில் நடைபெற்ற சி.பி.ஐ. சோதனை குறித்து பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    சி.பி.ஐ. அதிகரிகள் பெங்களூருவில் உள்ள எங்களுக்கு சொந்தமான கல்வி நிலையங்களில் சோதனை செய்துள்ளனர். ஊழியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். எந்த தகவலை பெற்றனர் என்பது எனக்கு தெரியவில்லை. அவர்களுக்கு விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது. அந்த பணியை அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்களோ செய்யட்டும்.

    தேர்தல் நேரத்தில் மத்திய விசாரணை அமைப்புகள் அடிக்கடி எனக்கு நோட்டீசு அனுப்பி தொல்லை கொடுக்கிறார்கள். சட்டவிரோதமாக சொத்துகள் சேர்த்ததாக 2 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். நானே சி.பி.ஐ.க்கு கடிதம் எழுதி, இது தொடர்பாக ஏதாவது தகவல் வேண்டுமென்றால் நான் வழங்க தயாராக உள்ளேன் என்று கூறினேன். அப்போது அவர்கள் அமைதியாக இருந்துவிட்டனர். இப்போது தேர்தல் நெருங்குவதால் மீண்டும் தொல்லை கொடுக்கிறார்கள்.

    ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையின்போது நோட்டீசு அனுப்பினர். நேரில் ஆஜராக காலஅவகாசம் கேட்டேன். ஆஜராகியே தீர வேண்டும் என்று சொன்னதால் நான் டெல்லிக்கு சென்று நேரில் ஆஜரானேன். என்னை ஒரு முறை சிறைக்கு அனுப்பினர். இப்போது மீண்டும் ஒரு முறை சிறைக்கு அனுப்ப முயற்சி செய்கிறார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை. யாரையும் ஏமாற்றவில்லை.

    நான் மின்சாரத்துறை மந்திரியாக இருந்தபோது ஒரு தவறு கூட செய்யவில்லை. ஆனால் எனக்கு எதிராக சட்டவிரோதமாக சொத்துகளை சேர்த்ததாக வழக்கு போட்டுள்ளனர். எனது வக்கீலுக்கு கட்டணமாக ரூ.5 லட்சம் வழங்கினேன். அவருக்கும் நோட்டீசு அனுப்பியுள்ளனர்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • கர்நாடக காங்கிரஸ் சார்பில் சோனியா காந்திக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
    • நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்ததே காங்கிரஸ் தான்.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    காங்கிரசின் வரலாறே நமது நாட்டின் வரலாறு. நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்ததே காங்கிரஸ் தான். ஜனநாயகத்தை காப்பாற்ற காங்கிரஸ் போராடி வருகிறது. இதற்கு காங்கிரசின் உள்கட்சி தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டு இருப்பதே சாட்சி. நாங்கள் கட்சியிலும் ஜனநாயகத்தை காப்பாற்றி இருக்கிறோம். 24 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரசில் உட்கட்சி தேர்தல் வெற்றிகரமாக நடந்துள்ளது.

    இதற்காக கர்நாடக காங்கிரஸ் சார்பில் சோனியா காந்திக்கு நன்றி தெரிவிக்கிறோம். நாடாளுமன்ற தோ்தலில் கட்சி தோல்வி அடைந்ததால் ராகுல் காந்தி அதற்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சோனியா காந்தி அந்த பொறுப்பை ஏற்றி கட்சியை வழிநடத்தினார். நேரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தான் கட்சி தலைவராக வர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

    கர்நாடகத்தில் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை 78 லட்சமாக உயர்த்தியுள்ளோம். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் கர்நாடகத்தில் 500 நிர்வாகிகள் ஓட்டு போட்டனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவராக கர்நாடகத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். நிஜலிங்கப்பாவுக்கு பிறகு கா்நாடகத்தை சேர்ந்த ஒருவருக்கு மீண்டும் கட்சியின் தலைவர் பதவி கிடைத்திருப்பது பெருமை அளிப்பதாக உள்ளது.

    மல்லிகார்ஜூன கார்கே 50 ஆண்டுகளாக கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். எந்த கட்சியிலும் தலைவர் பதவிக்கு இவ்வாறு தேர்தல் நடந்தது இல்லை. அவர் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதன் மூலம் கட்சிக்கு மாநில மற்றும் தேசிய அளவில் பலம் கிடைத்துள்ளது. சோனியா காந்தியின் ரிமோட் கன்ட்ரோல் என்று மல்லிகார்ஜூனா கார்கேவை பா.ஜனதாவினர் விமர்சிக்கிறார்கள்.

    பிரியங்கா காந்தி

    அப்படி என்றால் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை என்னவென்று அழைப்பது?. சோனியா காந்தி 20 ஆண்டுகாலம் கட்சி தலைவராக இருந்துள்ளார். அவரது ஆலோசனையை பெறாமல் இருக்க முடியுமா?. கர்நாடகத்தில் மல்லிகார்ஜூன கார்கே 3-வது அதிகார மையமாக திழக மாட்டார். அவர் தேசிய அளவில் ஒரே அதிகார மையமாக இருப்பார்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பு மல்லிகார்ஜூன கார்கேவுக்கு உள்ளது. ராகுல் காந்தி இன்னும் 2 நாட்கள் கர்நாடகத்தில் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார். இதில் பிரியங்கா காந்தியும் கலந்து கொள்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    மேலும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சித்தராமையா உள்பட கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • எனக்கு எதிராக மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.
    • சட்டசபை தேர்தல் முடிவடையும் வரை எனக்கு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுள்ளேன்.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா கடந்த ஓராண்டில் என்னையோ அல்லது சித்தராமையாவையோ ஒரு முறை கூட சந்தித்தது கிடையாது. நேற்று தான்(நேற்று முன்தினம்) சித்தராமையாவை கெம்பண்ணா சந்தித்து பேசியுள்ளார். அதனால் கெம்பண்ணா காங்கிரசின் ஏஜெண்டு என்று பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை கெம்பண்ணா சந்தித்து பேசினார். அவர் காங்கிரசின் ஏஜெண்டு என்றால் முதல்-மந்திரியை சந்தித்தது ஏன்?.

    சாம்ராஜ்நகர் விவசாய சங்க நிர்வாகிகள், மந்திரி முனிரத்னாவுக்கு எதிராக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். பா.ஜனதாவினரின் ஊழல்களை அம்பலப்படுத்தும் மாநாடுகளை நாங்கள் நடத்த இருக்கிறோம். ஒப்பந்ததாரர்கள் ஊழல் குறித்து பேசும்போது, அதற்காக நாங்கள் குரல் கொடுக்கிறோம்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடுகளை தொடர்ந்து தற்போது கர்நாடக மின்சாரத்துறை நியமன தேர்வு முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன. கல்வித்துறையின் ஊழலும் வெளிவருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய மந்திரியை இந்த அரசு பாதுகாக்கிறது. தற்கொலை செய்து கொண்ட பெலகாவி ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீலின் மனைவி கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளாா். மந்திரியாக இருந்த ஈசுவரப்பாவுக்கு எதிரான விசாரணை குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பாலியல் வழக்கிலும் விசாரணை முடிவடையும் முன்னரே அதில் தொடர்புடைய முன்னாள் மந்திரிக்கு நற்சான்றிதழ் வழங்கினர். எங்கள் கட்சியின் நிர்வாகி விஜய் முலுகுந்துக்கு சி.பி.ஐ. நோட்டீசு அனுப்பியுள்ளது. அவர் என்னுடன் நெருக்கமாக இருப்பவர். அவருக்கு மட்டுமல்ல, என்னுடன் வியாபார ரீதியாக தொடர்பில் இருக்கும் 70 முதல் 80 பேருக்கும் நோட்டீசு அனுப்பியுள்ளனர். எனக்கு எதிராக மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.

    இதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளேன். சட்டசபை தேர்தல் முடிவடையும் வரை எனக்கு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுள்ளேன். பா.ஜனதா மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் சொத்துகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தட்டும். 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடிக்கு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா கடிதம் எழுதி ஓராண்டு ஆகிறது. இதுகுறித்து நீதி விசாரணை நடத்த பா.ஜனதா அரசு பயப்படுவது ஏன்?.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • பெங்களூருவில் 15-ந் தேதி ஒரு லட்சம் பேர் தேசிய கொடியை ஏந்தி ஊர்வலம் நடத்த முடிவு.
    • 75-வது சுதந்திர தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சி 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயணம்.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    75-வது சுதந்திர தினத்தையொட்டி கர்நாடக காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. நான் பெங்களூருவில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ. இல்லாத தொகுதிகளில் நிர்வாகிகளை சந்தித்து இந்த நடைபயணம் குறித்து கலந்துரையாடி வருகிறேன்.

    மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம். வார்டு மறுவரையறை தொடர்பாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்சபேனைகள் வந்தன. அந்த ஆட்சேபனைகளை அரசு கவனத்தில் எடுத்து கொள்ளவில்லை.

    பெங்களூருவில் வருகிற 15-ந் தேதி ஒரு லட்சம் பேர் தேசிய கொடியை கையில் ஏந்தி ஊர்வலம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ஜனநாயகம் இருந்திருக்காவிட்டால் குமாரசாமி, எடியூரப்பா போன்றோர் முதல்-மந்திரி பதவிக்கு வந்திருக்க முடியாது.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • ஆட்சியை பிடிக்க வாயை மூடிக்கொண்டு ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும்.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில் காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஒக்கலிக சமுதாய மக்கள் நான் முதல்-மந்திரியாக ஆதரவு அளிக்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் கூறி இருந்தாா். இதனால் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரசில் உள்ள அதிருப்தியாளர்கள் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக பேசி வருகின்றனர்.

    குறிப்பாக முன்னாள் மந்திரி ஜமீர் அகமதுகான், ஒக்கலிக சமுதாயத்தின் மூலம் டி.கே.சிவக்குமார் முதல்-மந்திரியாக விரும்பினால், அதை விட முஸ்லிம்கள் ஆதரவு காங்கிரசுக்கு அதிகம் இருப்பதால், நான் கூட முதல்-மந்திரி ஆகலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    வாயை மூடிக்கொண்டு...

    எனது தகுதிக்கு சமமானவர்கள் பேசுவது குறித்து மட்டுமே பேசுவேன். எனது தகுதிக்கு கீழ் இருப்பவர்கள் கூறும் கருத்துகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. தற்போது மாநிலத்தில் முதல்-மந்திரி பதவி காலியாக இல்லை. தனிப்பட்ட நபரின் துதி பாடுவதை கைவிட்டு, காங்கிரஸ் கட்சி பற்றி மட்டும் பேசும்படி தொடர்ந்து கூறி வருகிறேன். முதலில் காங்கிரஸ் கட்சியை கர்நாடகத்தில் ஆட்சியில் அமர்த்த வேண்டும். இதற்காக வாயை மூடிக் கொண்டு ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும். கட்சியில் உள்ள அனைவருக்கும் இது பொருந்தும்.

    கட்சியை வளர்க்க வேண்டும்

    காங்கிரஸ் மீது உண்மையானவர்களாக இருந்தால், முதலில் கட்சியை வளர்க்க முன்வர வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு அதிக மக்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டும். தங்களது சமுதாயத்தையும், சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து கட்சியை பலப்படுத்தி, காங்கிரசை ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும். 224 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுபவர்கள் முதல்-மந்திரி பதவியை எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. முஸ்லிம்களுக்கு எதிராக பிரமோத் முத்தாலிக் தொடர்ந்து பேசி வருகிறார்.

    இது அவருடைய கருத்து இல்லை. பா.ஜனதாவினர் கூறுவதை பிரமோத் முத்தாலிக் பேசி வருகிறார். அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைத்து தரப்பினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவது முதல்-மந்திரியின் கடமையாகும். பழைய மைசூரு பகுதிகளில் வன்முறையை தூண்டிவிடும் விதமாக பிரமோத் முத்தாலிக் மற்றும் பா.ஜனதாவினர் பேசி வருகிறாா்கள். சோனியா காந்தியை பாதுகாக்க மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தும்படி காங்கிரசாருக்கு அறிவுறுத்தி உள்ளேன். அதன்படி, எந்த பிரச்சினையும் இன்றி காங்கிரசார் போராட்டம் நடத்த வேண்டும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • மத்திய பா.ஜனதா அரசு உணவு பொருட்களுக்கு 5 சதவீத வரி விதித்துள்ளது.
    • பெரிய நிறுவனங்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சாமானிய மக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்கள் ஜி.எஸ்.டி. வரி வளையத்தில் இருந்து வெளியே இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய பா.ஜனதா அரசு அவற்றை மாற்றி உணவு பொருட்களுக்கும் 5 சதவீத வரி விதித்துள்ளது.

    இதனால் அரசுக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்காது. அதனால் உணவு பொருட்கள் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வாியை வாபஸ் பெற வேண்டும். இதற்கு பதிலாக மத்திய அரசு வரி கசிவு ஏற்படும் பகுதிகளில் கவனம் செலுத்தி அதை தடுக்க வேண்டும். பணக்காரர்களுக்கு வரி விதிப்பதை விட்டுவிட்டு ஏழைகள் மீது வரியை விதிப்பது ஏற்புடையது அல்ல.

    பெரிய நிறுவனங்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. 5 சதவீத வரியை நுகர்வோரிடம் வசூலிக்க கூடாது என்று கூறி இருப்பதாக முதல்-மந்திரி சொல்கிறார். ஆனால் எந்த நிறுவனமும் இதை ஏற்றுக்கொள்ளாது. முதல்-மந்திரி சொல்வது பொய்யான தகவல். மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் அவர் அவவாறு கூறுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த ஆட்சி உண்மையான பா.ஜனதாவால் நடைபெறவில்லை.
    • உள்கட்சி பிரச்சினையில் பா.ஜனதாவில் பயம் ஏற்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் நடைபெறுவது பா.ஜனதா ஆட்சி அல்ல. அது பா.ஜனதா கூட்டணி ஆட்சி. இந்த ஆட்சியில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளில் இருந்து அக்கட்சிக்கு சென்ற எம்.எல்.ஏ.க்களின் பங்கு 64 சதவீதமாக உள்ளது.

    இதில் காங்கிரசின் பங்கு 30 சதவீதமும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் பங்கு 34 சதவீதமாகவும் உள்ளது. பசவராஜ் பொம்மை வேறு கட்சியில் இருந்து வந்தவர். இந்த ஆட்சி உண்மையான பா.ஜனதாவால் நடைபெறவில்லை.

    ஆளுங்கட்சியில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. பிற கட்சிகளில் இருந்து சென்றவர்களுக்கு பதவி வழங்கப்பட்டதால் நீண்ட காலமாக பா.ஜனதாவில் இருந்தவர்கள் தாங்கள் ஓரங்கட்டப்பட்டு இருப்பதாக நினைக்கிறார்கள்.

    உள்கட்சி பிரச்சினையில் பா.ஜனதாவில் பயம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் அக்கட்சியின் தேசிய தலைவர்கள் அடிக்கடி கர்நாடகம் வந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது.
    • நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது காங்கிரஸ்.

    பெங்களூரு:

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    நான் யாருடைய பிறந்த நாளையும் கொண்டாட விரும்பவில்லை. எனது ஆதரவாளர்கள் சிலர் டி.கே.சிவக்குமார் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று சொல்கிறார்கள். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். நான் எனது பிறந்த நாளை மிக எளிமையாக தான் கொண்டாடியுள்ளேன். சித்தராமையாவின் 75-வது பிறந்த நாளையொட்டி தாவணகெரேயில் சித்தராமோத்சவா விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். அதில் நான் கலந்து கொள்வேன். ஊடகங்கள் இந்த விஷயத்தில் எனக்கு கருத்து வேறுபாடு இருப்பதாக தேவை இல்லாமல் சர்ச்சையை கிளப்புகின்றன. இந்த விஷயத்தில் பா.ஜனதா தேவை இல்லாமல் மூக்கை நுழைக்கின்றன.

    நான் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற போதே தனிப்பட்ட முறையில் தலைவர்களை புகழ்ந்து பேச வேண்டாம், கட்சியை புகழ்ந்து பேசுங்கள் என்று கூறினேன். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது காங்கிரஸ். அதனால் நாங்கள் சுதந்திர தின பவள விழாவை கொண்டாடுகிறோம்.

    எடியூரப்பாவை எங்கள் கட்சியை சேர்ந்த லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து பேசியுள்ளார். தனிப்பட்ட முறையில் கட்சி தலைவர்களை சந்தித்து பேசுவது வழக்கம். இதற்கு வேறு அர்த்தமும் கற்பிக்க தேவை இல்லை. இன்னும் 15 ஆண்டுகள் பா.ஜனதா ஆட்சி தான் இருக்கும் என்று மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார். 15 ஆண்டுகள் எதற்கு, நீண்ட காலம் அவர்களே ஆட்சியில் இருக்கட்டும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • சோனியா காந்தி 23-ந்தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீசு அனுப்பியுள்ளது.
    • எல்லாவற்றையும் எதிர்கொள்ள ராகுல் காந்தி தயாராக உள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் அமலாக்கத்துறை மூலம் மத்திய அரசு விசாரணை நடத்துகிறது. எங்கள் கட்சி தலைவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்.

    கடினமான நேரத்தில் அவர்களுக்கு தைரியம் கூற வேண்டும் என்ற நோக்கத்தில் நான் டெல்லி வந்துள்ளேன். எங்கள் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்களை டெல்லி வரும்படி உத்தரவிட்டுள்ளோம். ராகுல் காந்தியிடம் 40 மணி நேரம் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் என்ன?. இதில் சதித்திட்டம் அடங்கியுள்ளது. எல்லாவற்றையும் எதிர்கொள்ள ராகுல் காந்தி தயாராக உள்ளார்.

    சோனியா காந்தி வருகிற 23-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை நோட்டீசு அனுப்பியுள்ளது. விசாரணையை கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • பிரதமர் மோடி பா.ஜனதா அரசின் 40 சதவீத கமிஷன் குறித்து பதிலளிக்க வேண்டும்.
    • அக்னிபாத் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.

    பெங்களூரு :

    கா்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    "மாணவர்கள் பயங்கரவாதிகளா? பாடத்திட்டங்களை திருத்தியதற்கு எதிராக மடாதிபதிகள் குரல் கொடுக்க வேண்டும். அரசு ஒன்றும் செய்ய முடியாது. புத்தர், பசவண்ணர், குவெம்பு அம்பேத்கர், நாராயணகுரு ஆகிய மகான்களுக்கு அநியாயம் ஏற்பட்டுள்ளது. மறைந்த சிவக்குமார சுவாமி, பாலகங்காதரநாத சுவாமி உள்ளிட்டோருக்கு அவமானம் ஏற்படும்போது, லிங்காயத், ஒக்கலிகர் சங்கங்கள் குரல் எழுப்ப வேண்டும். ஆனால் அந்த சங்கங்கள் மவுனமாக உள்ளன.

    பிரதமர் மோடி கர்நாடகம் வருகிறார். மைசூருவில் நடைபெறும் யோகா தின விழாவில் கலந்து கொள்கிறார். இதனால் அவர் செல்லும் பாதையில் உள்ள கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. கல்லூரி மாணவர்கள் பயங்கரவாதிகளா? கர்நாடக மாணவர்களிடம் வன்முறை கலாச்சாரம் கிடையாது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் 17 வயது இளம் இளைஞர்களை 4 ஆண்டுகளுக்கு வீரர்களாக பயன்படுத்தி கொண்டு பின்னர் வெளியே அனுப்புகிறார்கள்.

    அவர்கள் காவலாளிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டுமா? இது ராணுவத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அவமானம். இதை நியாயப்படுத்தும் மந்திரிகள் தங்களின் குழந்தைகளை ராணுவத்தில் சேர்ப்பார்களா? அவர்களின் குழந்தைகள் டாக்டர்கள், என்ஜினீயர்கள் ஆக வேண்டும். ஏழைகளின் குழந்தைகள் காவலாளிகள் உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டுமா? இந்த அக்னிபாத் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். இளைஞர்கள் நமது பலம். கர்நாடகம் வரும் பிரதமர் மோடி பா.ஜனதா அரசின் 40 சதவீத கமிஷன் குறித்து பதிலளிக்க வேண்டும்."

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    ×