search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி கொலை"

    • மூதாட்டி தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தனது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.
    • மூதாட்டி முகத்தில் ரத்த காயங்கள் இருந்ததால் அவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை அருகே உள்ள சேதராப்பட்டு காமராஜர் வீதியை சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி உண்ணாமலை, (வயது75). இவருக்கு ஆதிகேசவன், நாராயணமூர்த்தி ஆகிய மகன்களும் கவுரி, ராணி, கண்ணகி ஆகிய மகள்களும் உள்ளனர்.

    அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். கணவரை இழந்த உண்ணாமலை தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    அருகில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தனது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். மேலும், பசு மாடுகள் வளர்த்து கூட்டுறவு சொசைட்டியில் பால் ஊற்றி வந்தார். பால் மூலமாக கிடைக்கும் வருவாய், வீட்டு வாடகை வருமானத்தால் எப்போதும் பண புழக்கத்துடன் மூதாட்டி இருந்துள்ளார். தங்கச் செயின், மூக்குத்தி, கம்மல் உள்ளிட்ட 10 சவரன் தங்க நகைகளை அணிந்திருப்பதும் வழக்கம்.

    இந்நிலையில், நேற்று பால் சொசைட்டிக்கு உண்ணாமலை செல்லவில்லை. மேலும், வீட்டு வாசலிலும் தண்ணீர் தெளிக்கப்படாமல் கதவு மூடி கிடந்தது. இதனால் அருகே வசித்துவரும் உறவினர்கள் நேற்று மாலை 4 மணியளவில் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, மூதாட்டி உண்ணாமலை ரத்தக்காயங்களுடன் குப்புற கவிழ்ந்தபடி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மகன்களுக்கும் மற்றும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த சேதராப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார், தடயங்களை சேகரித்து உண்ணாமலை உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் இறந்து கிடந்த மூதாட்டி அணிந்திருந்த தங்க செயின், கம்மல், வளையல் உள்ளிட்ட தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது உறுதியானது.

    மூதாட்டி முகத்தில் ரத்த காயங்கள் இருந்ததால் அவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். மூதாட்டி வடமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டிருந்ததால் மூதாட்டியை வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×