என் மலர்
நீங்கள் தேடியது "பெட்ரோல் குண்டுவீச்சு"
- நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் மர்ம நபர்கள் சங்கரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.
- தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை திருக்கோவிலூர் ரோட்டில் உள்ள சாரோன் பகுதியை சேர்ந்தவர் சங்கர். மாவட்ட தி.மு.க. தொண்டரணி துணை அமைப்பாளராக உள்ளார். ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
இவரது வீட்டு மாடியில் நேற்று சங்கர் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது தாயார் கீழே உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் மர்ம நபர்கள் சங்கரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இதில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் தீ பிடித்து எரிந்தது.
சத்தம் கேட்டு சங்கர் மற்றும் குடும்பத்தினர் வெளியே வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். காரின் இருக்கைகள், கதவு பகுதிகள் எரிந்து கருகியது.
இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசில் சங்கர் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வீட்டின் கதவில் பெட்ரோல் வெடிகுண்டு வெடித்து திரைச்சீலை எரிந்து சேதமானது.
- போலீசார் சுந்தரபாண்டி, ஆனந்தன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் திருவாதவூரை சேர்ந்தவர் ராஜா முகமது. இறைச்சி கடை நடத்தி வரும் இவரது வீட்டில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி சென்றனர். இதில் வீட்டின் கதவில் பெட்ரோல் வெடிகுண்டு வெடித்து திரைச்சீலை எரிந்து சேதமானது.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத், டி.எஸ்.பி. ஆர்லிஸ் ரெபோனி மற்றும் மேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வீட்டில் வீசப்பட்ட வெடிகுண்டு மாதிரிகளை சேகரித்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்.
சம்பவம் நடப்பதற்கு முன்தினம் மாலை ராஜா முகமது தனது மனைவியுடன் பள்ளிவாசலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த திருவாதவூரை சேர்ந்த சுந்தரபாண்டி (25), ஆனந்தன் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் ராஜா முகமது மீது மோதியுள்ளனர். இதில் அவர்களுக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் சமரசம் செய்ததின்பேரில் 3 பேரும் சென்றனர்.
ஆனால் ஆத்திரம் அடங்காத சுந்தரபாண்டி, ஆனந்தன் உள்பட 3 பேர் ராஜா முகமதுவை பழி தீர்க்க முயன்றதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்று பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.
மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் சுந்தரபாண்டி, ஆனந்தன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
- தியேட்டர் வளாகத்தில் பெட்ரோல் குண்டாக பயன்படுத்தப்பட்ட பாட்டில்களின் கண்ணாடி துண்டுகள் சிதறி கிடந்தன.
- மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை:
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள 'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.
ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த சென்னை தாம்பரத்தை சேர்ந்த விமானப்படை அதிகாரி முகுந்த் வரதராஜனின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் சிவகார்த்திகேயன் காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அமரன் திரைப்படத்தில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பாக அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு கடந்த வாரம் போராட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து அமரன் படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் 'அமரன்' திரைப்படம் திரையிடப்பட்டுள்ள அலங்கார் தியேட்டரில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
மேலப்பாளையம் சந்தை முக்கு ரவுண்டானாவில் உள்ள அலங்கார் தியேட்டருக்கு நேற்று நள்ளிரவு 2.30 மணி அளவில் மர்ம நபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் தியேட்டருக்கு வெளியில் நின்றபடியே தியேட்டர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். அடுத்தடுத்து வீசப்பட்ட 3 பெட்ரோல் குண்டுகளும் தியேட்டர் வளாகத்தில் விழுந்து 'டமார்' என்கிற பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் தியேட்டர் வளாகத்தில் தீப்பிளம்பு எழுந்தது. பெட்ரோல் குண்டுகள் விழுந்த இடம் தீப்பற்றி எரிந்தது.
இதையடுத்து தியேட்டரில் இருந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடிச் சென்று பார்த்தனர். வளாகத்தில் தீ பற்றிய இடத்தை அவர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். நள்ளிரவு நேரம் என்பதால் தியேட்டரில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் மேலப்பாளையம் போலீசார் தியேட்டருக்கு விரைந்து சென்றனர். நெல்லை போலீஸ் துணை கமிஷனர் விஜயகுமார், உதவி கமிஷனர் சரவணன், மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் விஜி ஆகியோரும் விரைந்து சென்று தியேட்டர் ஊழியர்களிடம் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பற்றி கேட்டறிந்தனர்.
தியேட்டர் வளாகத்தில் பெட்ரோல் குண்டாக பயன்படுத்தப்பட்ட பாட்டில்களின் கண்ணாடி துண்டுகள் சிதறி கிடந்தன. அவைகளை போலீசார் தடயங்களாக சேகரித்தனர்.
பின்னர் பெட்ரோல் குண்டுகளை வீசிய நபர்கள் யார் என்பதை கண்டு பிடிப்பதற்காக அதிரடி விசாரணையில் இறங்கினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து ஆய்வு செய்தனர். தியேட்டருக்கு வெளியில் இருந்த ஒரு சி.சி.டி.வி. கேமராவில் 2 பேர் பெட்ரோல் குண்டுகளுடன் வந்து அதில் தீ வைத்து கொளுத்தி தியேட்டர் மீது வீசும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதனை கைப்பற்றிய போலீசார் அவர்கள் யார்? என்பது பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
பெட்ரோல் குண்டு வீச்சில் இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
அவர்கள் பீர் பாட்டில்களை பெட்ரோல் குண்டுகளாக மாற்றி வீசி இருப்பது தெரிய வந்துள்ளது. 2 குண்டுகள் தியேட்டர் வளாகத்திற்குள் வீசப்பட்ட நிலையில் 3-வது குண்டு தவறி கீழே விழுந்து தீ பிடித்த காட்சிகளும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கிறது.
மர்ம நபர்கள் இருவரும் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தலைமறைவாகி இருக்கிறார்கள். அவர்களை கைது செய்து இருவரின் பின்னணி பற்றியும் முழுமையாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த தியேட்டரில் அமரன் படம் வெளியிடப்பட்ட போதே பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடந்த வாரம் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதையடுத்து இயல்பு நிலை திரும்பி இருந்தது. அதை பயன்படுத்தி மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி சென்று உள்ளனர்.
இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் மேலப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அமரன் திரைப்படத்தில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி எதிர்ப்பு.
- நெல்லையில் அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள 'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அமரன் திரைப்படத்தில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பாக அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு கடந்த வாரம் போராட்டம் நடத்தப்பட்டது.
இதைதொடர்ந்து, நெல்லை மேலப்பாளையத்தில் 'அமரன்' திரைப்படம் திரையிடப்பட்டுள்ள அலங்கார் தியேட்டரில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இது நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நெல்லையில் அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிப்படையும், உதவி ஆய்வாளர் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தியேட்டர் வளாகத்திற்குள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றனர்.
- மேலப்பாளையம் பகுதியில் உள்ள தெருக்கள் வழியாக தப்பி சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் தியேட்டரில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் இரவு காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது. இந்த தியேட்டரில் நேற்று முன்தினம் இரவு காட்சி முடிந்த பின்னர் ரசிகர்கள் வெளியேறிவிட்டனர். தியேட்டர் ஊழியர்கள் அங்கு பணியில் இருந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் 2 பேர் தியேட்டர் வளாகத்திற்குள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து மேலப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சி.சி.டி.வி. காட்சி மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சியில் 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிய காட்சிகள் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. நேற்று தியேட்டர் அருகே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை தவிர சந்தை முக்கு ரவுண்டானா, குறிச்சி முக்கு செல்லும் மெயின் ரோட்டில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களையும் தனிப்படையினர் ஆய்வு செய்தனர். ஆனால் அதில் அந்த நபர்கள் சென்ற காட்சிகள் இல்லை. அதேநேரம் பெட்ரோல் குண்டு வீச்சில் மேலும் ஒரு வாலிபருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த நிலையில், ஒருவர் மோட்டார் சைக்கிளை தயார் நிலையில் வைத்துக் கொண்டு நின்றுள்ளார். மற்ற 2 பேரும் பெட்ரோல் குண்டுகளை தியேட்டரில் வீசிவிட்டு அந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. அந்த கும்பல் மெயின்ரோட்டின் வழியாக தப்பித்து சென்றால் சி.சி.டி.வி. கேமராக்களில் சிக்கி கொள்வோம் என்பதை அறிந்தே மேலப்பாளையம் பகுதியில் உள்ள தெருக்கள் வழியாக தப்பி சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நேற்று இரவு வரை சுமார் 25-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து முடித்துள்ளனர். மெயின் சாலைகளில் அந்த கும்பல் வரவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இதனால் இன்று அந்த பகுதியில் உள்ள தெருக்களில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர். ஏற்கனவே அமரன் திரைப்படம் வெளியானபோது அலங்கார் தியேட்டரிலும் பல்வேறு அமைப்பினர் திரண்டு வந்து போராட்டம் நடத்தியதால் தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் நேற்று நெல்லை வந்து முகாமிட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று சம்பவம் நடந்த இடத்தில் உள்ள தடயங்களை சேகரித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து அந்த பிரிவின் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் இன்று 2-வது நாளாக தீவிரவாத அமைப்புகள் ஏதேனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
- போலீசாரின் புலன் விசாரணை வளையத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.
- 2 பேரும் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் அமரன் திரைப்படம் இரவு காட்சிகளாக வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 16-ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் மர்மநபர்கள் 2 பேர் அந்த தியேட்டர் வளாகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.
இதுகுறித்து மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவான 2 நபர்களின் உருவங்களை வைத்து விசாரணை நடத்தி தேடி வந்தனர்.
மேலும் தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் அதன் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் குமார் தலைமையில் விசாரணையை தொடங்கினர்.
மேலப்பாளையம் போலீசார் மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரின் புலன் விசாரணை வளையத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட வர்களில் ஒருவரை போலீசார் நேற்று முன்தினம் கண்டு பிடித்தனர். அவர் மேலப்பாளையம் பஷீரப்பா தெருவை சேர்ந்த முகமது யூசுப் ரசின் என்பது தெரியவந்து. அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவருடன் சேர்ந்து பெட்ரோல் குண்டுகளை வீசியது மேலப்பா ளையம் ஆசிரான் மேலத் தெருவை சேர்ந்த செய்யது முகமது புகாரி(29) என்பது தெரியவந்தது. அவரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பின்னர் 2 பேரும் நேற்று நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு இரவோடு இரவாக சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, அவர்களிடம் பெட்ரோல் குண்டுகளை வீசியது குறித்து விசாரித்தபோது அமரன் திரைப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக காட்சிகள் இருப்பதால் அதற்கு ஏதாவது ஒன்று செய்யவேண்டும் என்பதற்காக இவ்வாறு ஈடுபட்டதாக தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் இருந்த வாலிபர் இவர்கள் 2 பேரின் கூட்டாளி என்பதும், அவரும் மேலப்பாளையத்தில் தான் பதுங்கி இருக்கிறார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வாலிபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
- 7 பேர் கும்பல் வழிமறித்து தாக்குதல்.
- தோள்பட்டை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பள்ளக்கால் பொதுக்குடி கிராமம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் செய்யது மசூது (வயது 55). இவர் அப்பகுதியில் பிள்ளையார்கோவில் தெருவில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
வழக்கம்போல் நேற்று இரவு 11.25 மணி அளவில் அவர் ஓட்டலில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் அம்பை-ஆலங்குளம் சாலையில் சென்றபோது எதிரே 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 பேர் கும்பல் அவரை வழிமறித்தது. இதனால் பயந்துபோன மசூது அருகில் உள்ள தெருவுக்குள் ஓட்டம் பிடித்தார்.

உடனே மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய 4 பேர் கும்பல் மசூதுவை ஓட ஓட விரட்டிச்சென்று கை, தோள்பட்டை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பாப்பாக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்த மசூதுவை மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அப்போது அந்த பகுதியில் பள்ளிவாசல் தெருவில் உள்ள ஒருவீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அங்கு போலீசார் விரைந்து சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் வசிக்கும் பாய் வியாபாரியான மைதீன்(52) என்பவரது வீட்டின் கதவு மற்றும் ஜன்னலை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு பெட்ரோல் குண்டை மர்ம கும்பல் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.
அதன்பின்னரே அந்த சம்பவத்தில் தொடர்புடைய அதே கும்பல் ஓட்டல் தொழிலாளியான மசூதுவை வெட்டிவிட்டு சென்றுள்ளது. அந்த கும்பல் பாப்பாக்குடி மற்றும் நந்தன்தட்டை பகுதிகளில் உள்ள 6 வீடுகளின் கதவுகளை அரிவாளால் வெட்டியதோடு, முக்கிய பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களையும் உடைத்து விட்டு தப்பிச்சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக பாப்பாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரமேஷ் கண்ணா வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் மசூதுவை வெட்ட அரிவாளுடன் மர்ம கும்பல் ஓடும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நள்ளிரவில் கும்பல் பெட்ரோல் குண்டு வீசி அரிவாளால் வாலிபரை வெட்டிய சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில் பாப்பாக்குடி, பள்ளக்கால் பொதுக்குடி உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இடைகால் உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் பேரிகார்டுகள் போடப்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பள்ளக்கால் பொதுக்கு டியில் உள்ள அரசு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பாப்பாக்குடியை சேர்ந்த செல்வசூர்யா என்ற மாணவன் கடந்த 2022-ம் ஆண்டு பள்ளியில் நடந்த தகராறில் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பள்ளக்கால் பொதுக்குடி, பாப்பாக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் செல்வசூர்யாவின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக அவருக்கு நெருக்கமானவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த முன்விரோதத்தில் அவரது கொலையில் தொடர்புடையவர்களின் உறவினர்கள் வீடுகளை குறி வைத்து அரிவாளால் கதவுகளை வெட்டியும், பெட்ரோல் குண்டு வீசியும் அட்டகாசம் செய்துள்ளனர்.
மேலும் சமீபத்தில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஊருக்குள் வேகமாக சென்றதை தட்டிக் கேட்டவர் வீடு, தங்களுக்கு வழக்கமாக கடையில் பொருட்களை கடனாக வழங்கிய நிலையில் தற்போது பொருட்கள் வழங்க மறுத்த கடைக்காரர் வீடு என அனைத்து தரப்பினரின் வீடுகளையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
- ராமகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது.
- மணி மகன் விஜயன், ஆவரைகுளம் சென்று ராமகிருஷ்ணனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பழவூரை அடுத்த ஆவரைகுளம் அருகே உள்ள சவுந்தரலிங்கபுரத்தை சேர்ந்தவர் மணி. இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் விஜயன் (வயது 37). நிலத்தரகர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் 2 பேர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த பகுதிகளில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஆவரைக்குளத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகன் சாமிதுரை(21) என்பவர், தனது நண்பரான ஹரிகரன்(21) என்பவருடன் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடினர். ஆனால் எந்த சம்பவமும் நடக்காதது போலவே 2 பேரும் தங்களது வீடுகளில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சாமிதுரையின் தந்தை ராமகிருஷ்ணன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது நண்பர் ஒருவருடன் மணி வைத்துள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ராமகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. இதனை மணி சமரசம் செய்ய முயன்றபோது அவர் தாக்கப்பட்டார்.
இதனால் மணி மகன் விஜயன், ஆவரைகுளம் சென்று ராமகிருஷ்ணனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பதிலுக்கு ஆத்திரத்தில் விஜயன் வீட்டில் சாமிதுரை மற்றும் அவரது நண்பர் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- ஊர்வலம் ஜமா மசூதி பகுதியை அடைந்தவுடன், அவர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷங்களை எழுப்பி பட்டாசுகளை வெடித்தனர்.
- 3 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன, 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன.
நேற்று நியூசிலாந்து உடனான சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனை நாடு முழுவதும் பலர் வீதிகளில் திரண்டு கொண்டாடினர்.
இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மோவ் பகுதியில் நேற்று இரவு சாம்பியன்ஸ் டிராபி வெற்றியின் கொண்டாட்டம் வன்முறையாக மாறியது.
இந்தூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகர்- மோவ் நகரில் இரு குழுக்களிடையே வகுப்புவாத மோதல் வெடித்துள்ளது. நேற்று இரவு 10 மணி அளவில் 100 ரசிகர்கள் மோட்டார் சைக்கிள்களில் வெற்றி ஊர்வலம் நடத்தினர்.
ஊர்வலம் ஜமா மசூதி பகுதியை அடைந்தவுடன், அவர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷங்களை எழுப்பினர் என்று கூறப்படுகிறது. ஜாமா மசூதி அருகே அவர்கள் பட்டாசுகளை வெடித்தனர். அங்கு மக்கள் இரவு நேர பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
எனவே இரு குழுக்களுக்கும் இடையிலான ஏற்பட்ட வாக்குவாதம் விரைவில் வன்முறையாக மாறியது. இரு தரப்பிலிருந்தும் கல்வீச்சுக்கு சம்பவங்கள் அரங்கேறின.
பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. சுமார் 3 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன, 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. இந்த மோதலில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களைக் கலைத்தனர். கடைகள் மற்றும் வாகனங்களில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினர் அணைத்தனர். நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மோவ் கூடுதல் எஸ்பி ரூபேஷ் திவேதி தெரிவித்தார்.
- பா.ஜக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 22-ந் தேதி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.
- இன்று கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
கோவை:
கோவையில் பா.ஜ.க, இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகள் மற்றும் கடைகள் சித்தாபுதூரில் உள்ள பா.ஜக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 22-ந் தேதி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.
தொடர்ந்து குனியமுத்தூர் மற்றும் டவுன்ஹால் பகுதியில் அரசு பஸ் கண்ணாடி கல் வீசி உடைக்கப்பட்டது. அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவங்கள் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியதோடு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் அரசு பஸ் கண்ணாடி உடைத்த வழக்கில் கோவை குனியமுத்தூர், ரத்தினபுரி மற்றும் வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் எஸ்டிபிஐ மற்றும் பி எப் ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டது. கைதானவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். எனவே இன்று கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் பட்சத்தில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் மேலும் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது தெரியவரும்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு ரெயில் நிலையத்திற்கு துப்பாக்கி இந்தியா போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது.
ஈரோடு:
கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு மற்றும் நிர்வாகிகள் வீடுகள், கார் போன்றவை தீ வைத்து வருகின்றன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் பா.ஜ.க. அலுவலகம், பா.ஜ.க. நிர்வாகி வீடு, இந்து முன்னணி அலுவலகம், இந்து முன்னணி நிர்வாகி வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள தலைவர்கள் சிலை வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் அதிக கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று 3-வது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு ரெயில் நிலையத்திற்கு துப்பாக்கி இந்தியா போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு ரெயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள், தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து வரும் மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலைய நுழைவு வாயிலில் ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் ஈரோடு ரெயில்வே போலீசார் ஒவ்வொரு நடைமேடையாக சென்று கண்காணித்து வருகின்றனர். ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வரும் அனைத்து ரெயில்களிலும் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை செய்து வருகின்றனர். மேலும் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் உடைமைகளையும் சோதனை செய்து வருகின்றனர்.
ரெயிலில் இருக்கும் பெட்டிகள், பைகளை தொட வேண்டாம் என்றும், இது குறித்து ரெயில்வே போலீசருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சந்தேகப்படும் நபர்கள் யாராவது இருந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- கோவை மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இன்று காலையும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவை:
கோவையில் பா.ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதனை தொடர்ந்து 10 இடங்களில் பா.ஜனதா மற்றும் இந்து முன்னணி பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்கள், கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. தொடர் குண்டு வீச்சு சம்பவங்களால் கோவை மக்கள் அச்சம் அடைந்தனர்.
நகரில் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் கடந்த 2 தினங்களாக கோவையில் முகாமிட்டு உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
நேற்று மேற்கு மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.தாமரை கண்ணன் தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோரும், கோவை மாவட்ட கலெக்டர், ஐ.ஜி., கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.
கோவை மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக சேலம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், தஞ்சாவூர், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து போலீசார், தமிழ்நாடு கமாண்டே படை போலீசார், 4 அதிவிரைவுப்படை கம்பெனிகள், சிறப்பு காவல்படை, ஊர்காவல் படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசர் ரெயில் நிலையம், மார்க்கெட்டுகள், சினிமா தியேட்டர்கள், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
நேற்று 2-வது நாளாக கோவை மாவட்டம் முழுவதும் விடிய விடிய வாகன சோதனை நடந்தது. மாநகர் புறநகரில் ஏற்கனவே உள்ள சோதனை சாவடிகளுடன் தற்காலிகமாக 56 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் தீவிர வாகன சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது.
இன்று காலையும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து கோவை போலீசார் கூறியதாவது:-
கோவையில் நடந்த பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது. ஒவ்வொரு சம்பவத்தையும் விசாரிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக இதுவரை 400-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பலரிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.