search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ள பாதிப்பு"

    • கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் வீடு வீடாக செல்லுதல், ஆலய அலங்கரிப்பு போன்றவை வெகு விமரிசையாக நடைபெறும்.
    • கிறிஸ்தவ ஆலயங்கள் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.

    தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கடந்த வாரம் பெய்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வீடுகள், உடமைகளை இழந்து மக்கள் தவித்து வருகிறார்கள். வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் இன்னும் அந்த பாதிப்பில் இருந்து மீளவில்லை.

    ஒரு சில பகுதிகளில் மட்டுமே வெள்ளம் வடிந்து உள்ளது. சில இடங்களில் வெள்ளம் மக்களை கடுமையாக பாதித்து உள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக இருந்தாலும் மக்கள் இயல்பு நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றனர்.

    தென் மாவட்டங்களில் சில பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். தூத்துக்குடி, பாளையங்கோட்டை, சமாதானபுரம், உடன்குடி, மெய்ஞானபுரம், நாசரேத், சாத்தான்குளம், உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ளனர்.

    தென் மாவட்டங்களில் எப்போதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெறும். கத்தோலிக்க, சி.எஸ்.ஐ. திருச்சபைகளை சேர்ந்த ஆலயங்கள் இந்த நாட்களில் பரபரப்பாக காணப்படும்.

    கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் வீடு வீடாக செல்லுதல், ஆலய அலங்கரிப்பு போன்றவை வெகு விமரிசையாக நடைபெறும்.

    ஆனால் தற்போது வெள்ளம் பாதித்து மக்கள் கஷ்டப்படுகிற நிலையில் கொண்டாட்டத்தை தவிர்க்கிறார்கள். எளிமையான முறையில் ஆராதனை நடத்தவும், பட்டாசு, வாணவேடிக்கை போன்றவற்றை தவிர்க்கவும் முடிவு செய்துள்ளனர்.

    மாறாக ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். மளிகை பொருட்கள், உணவு, குடிநீர், பிஸ்கட், போர்வை போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.

    வீடுகளை இழந்து நிற்கதியாக இருக்கும் மக்கள் ஒருபுறம் இருக்க பண்டிகை ஆடம்பரத்தை கிறிஸ்தவர்கள் தவிர்த்துள்ளனர். தங்களால் முடிந்த உதவியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

    மேலும் தென் மாவட்டங்களை சேர்ந்த சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்வதையும் தவிர்த்து விட்டனர். வழக்கமாக குடும்பம் குடும்பமாக சென்று சொந்த ஊர்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவார்கள்.

    இந்த முறை பஸ், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு தற்போதுதான் சீராகி உள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு இன்னும் போக்குவரத்து சீரடையாத நிலை இருப்பதால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    • முத்தம்மாள் காலனி பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதாக கூறப்படுகிறது.
    • தற்போது 24 பேரின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16,17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தற்போதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    அதிகனமழையால் கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் புதியம்புத்தூர் அருகே உள்ள குளங்களும் உடைந்ததால் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    குறிப்பாக முத்தம்மாள் காலனி , பாத்திமா நகர், ராஜகோபால் நகர், புஷ்பா நகர், கதிர்வேல் நகர், பாரதி நகர், கே.டி.சி. நகர், ஸ்டேட் பாங்க் காலனி, நேதாஜி நகர், சின்னக்கண்ணு புரம், ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 அடிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இதனால் கடந்த 6 நாட்களாக அப்பகுதி பொது மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மூலமாகவும், தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், தன்னார் வலர்கள் ஆகியோர் மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

    எனினும் தூத்துக்குடி மாநகர் பகுதியிலும், மாவட்டத்தின் சில பகுதிகளிலும் சாலை துண்டிப்பு, பாலங்கள் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது தற்போதும் சிக்கல் நிலவி வருகிறது. அரசு, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங் களில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகள் தொடர்ந்து இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

    ஆனாலும் வெள்ளம் வடியாததால் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வீடுகளில் தவிப்போரை மீட்பதில் சிரமம் இருந்து வருகிறது. அவர்களுக்கு மீட்பு குழுவினர் உணவு, தண்ணீர் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். எனினும் சில இடங்களில் அதிக அளவு தண்ணீர் மற்றும் மீட்பு குழுவினர் செல்ல முடியாத நிலை தொடர்வதால் குறிப்பிட்ட இடங்களில் உணவு வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாகி உள்ளது. இதே போல் வீடுகள், தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழிகள் என ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரிலும் ஏராளமான கால்நடைகள் இறந்து மிதக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் இதுவரை 25 பேர் இறந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே முத்தம்மாள் காலனி பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதாக கூறப்படுகிறது.

    இதே போல் மாவட்டம் முழுவதும் சூழ்ந்துள்ள வெள்ளத்தில் சுமார் 150 பேர் இறந்திருக்கலாம் எனவும் தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

    இதுகுறித்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 18 பேரும், சுவர் இடிந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் என இதுவரை மாவட்டத்தில் மழைக்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கு சிகிச்சை அளிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கிடையே நெல்லை அரசு மருத்துவமனையில் நேற்றும், இன்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 41 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் 17 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தற்போது 24 பேரின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    எனவே தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 70-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.

    எனினும் மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றிய பின்னரே வேறு ஏதேனும் உடல்கள் அங்கு இருக்கிறதா என கண்டறிந்து அதன் பின்னரே பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.

    இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது:-

    3-ம் மைல் முதல் திரேஸ்புரம் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்கிள் ஓடை செல்லும் சாலையின் இருபுறமும் மண் சாலைகளாகவும், தாழ்வாகவும் காணப்பட்டது. இதனால் கனமழை பெய்யும் போது பெருக்கெடுத்து வரும் தண்ணீர் பக்கிள் ஓடைக்கு நேரடியாக செல்லும். ஆனால் தற்போது சாலையின் இருபுறமும் உயரமான அளவில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் வெள்ள நீர் அருகில் உள்ள மாநகர குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று வீடுகளை சுற்றி வெள்ளமாக தேங்கி நிற்கிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் அங்குள்ள பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டாலும் தொடர்ந்து அவர்கள் அங்கேயே இருப்பதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் வெள்ளத்தில் சிக்கி ஏராளமான வீடுகளில் இருந்த பொருட்கள் நாசமாகி உள்ளது.

    எனவே பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பல இடங்களிலும் இன்னும் சீரான குடிநீர் வழங்கவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மழை நீர் தேங்கிய பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் மேலும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இவ்வாறு அவர்கள் கூறினர்.


    இதற்கிடையே சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள பகுதிகள் மற்றும் மாநகரில் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையினர் முதன்மை செயலாளரும், தென்மாவட்டகளுக்கான கண்காணிப்பு அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் காய்ச்சல் பாதித்த 37 பேருக்கும், தொற்று நோய் பாதித்த 104 பேருக்கும், தோல் நோய் பாதிப்படைந்த 49 பேருக்கும், காயம் ஏற்பட்ட 12 பேர், மற்ற நோய்களால் பாதிக்கப்பட்ட 16 பேர் என மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 221 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • உயர் அதிகாரிகள் உடனடியாக பணிக்கு அழைத்ததும் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள துணை மின் நிலையத்துக்கு பணிக்கு சென்றார்.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் 95 சதவீதம் மின் சப்ளை கொடுக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகள் இன்னும் தண்ணீரில் தத்தளிக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி கிடக்கின்றன. தூத்துக்குடியில் மின்சார துறையில் உதவி என்ஜினீயராக பணியாற்றுபவர் சுதா ராஜ்குமார். இவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளன. கணவரும் வெளியூரில் இருக்கிறார். கடந்த 17-ந்தேதி பெரும்வெள்ளத்தில் சுதாவின் வீடும் தப்பவில்லை. அவரது வீட்டுக்குள் சுமார் 5 அடி உயரத்துக்கு வெள்ளம் புகுந்தது. இதனால் தனது குழந்தைகளை உறவினர் வீட்டில் கொண்டு விட்டுள்ளார்.

    இதற்கிடையில் உயர் அதிகாரிகள் உடனடியாக பணிக்கு அழைத்ததும் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள துணை மின் நிலையத்துக்கு பணிக்கு சென்றார். அன்று முதல் தொடர்ந்து அங்கேயே பணியில் ஈடுபட்டுள்ளார்.

    ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முகாமிட்டுள்ள மின்வாரிய சேர்மன் ராஜேஷ் லக்கானி சுதாவின் பணியை பாராட்டி உள்ளார்.

    தற்போதைய நிலவரம் குறித்து ராஜேஷ் லக்கானி கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் 95 சதவீதம் மின் சப்ளை கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் சுற்றுப்பகுதியில் இன்னும் சில கிராமங்களில் செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் நிற்கிறது. தண்ணீர் வடிய வடிய இணைப்பு கொடுக்கப்படுகிறது.

    ஸ்ரீவைகுண்டம் நகர பகுதியில் இன்று மாலைக்குள் நிலைமை சீராகி விடும் என்று எதிர்பார்க்கிறோம். 2,500-க்கும் மேற்பட்ட பணியார்கள் அர்ப்பணிப்புடன் களத்தில் நின்று பணியாற்றுகிறார்கள். ஒவ்வொருவரின் பணியும் பாராட்டுக்குரியது என்றார்.

    உதவி பொறியாளர் சுதா ராஜ்குமார் கூறியதாவது:-

    அண்ணாநகர் 7-வது தெருவில் பக்கிள் ஓடை அருகில் குடியிருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை இரவு 2 மணி அளவில் வீட்டுக்குள் வெள்ளம் வரத்தொடங்கியது. காலை 7 மணி அளவில் அதிக அளவில் வெள்ளம் சூழ்ந்ததால் உறவினர் வீட்டில் குழந்தைகளை கொண்டு விட்டேன். எல்லா இடங்களிலும் நிலைமை மோசமானதால் பணிக்கு அழைத்தார்கள். வீட்டில் இருந்து நடந்தே மின் நிலையத்துக்கு சென்றேன்.

    உயர் அதிகாரிகள் அனைவருமே களத்தில் இருந்து பணியாற்றுகிறார்கள் என்றார்.

    • கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் குறைகளை முகநூல் பக்கத்திலும், எக்ஸ் இணையதள பக்கத்திலும் பதிவிடலாம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாட்ஸ்-அப் எண். 73730 03588 அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் Collector Thoothukudi என்ற முகநூல் பக்கத்திலும், @Collector Tuty என்ற எக்ஸ் இணையதள பக்கத்திலும் பதிவிடலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

    • 2 நாட்களுக்கு பிறகு கனமழை ஓய்ந்ததால் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்தன.
    • மெஞ்ஞானபுரம், திருப்பணி, ஊழிக்குடியிருப்பு சுற்று வட்டார பகுதிகளில் இன்றும் வீடுகளை சுற்றி 7 அடி தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    தூத்துக்குடி:

    வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி கன மழை பெய்ய தொடங்கியது.

    17, 18-ந்தேதிகளில் வரலாறு காணாத அளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.

    நெல்லை மாவட்டத்தில் பெய்த அதி கனமழை காரணமாக அணைகள் நிரம்பியதால் அணைகளில் இருந்தும், கனமழை காரணமாகவும் தாமிரபரணி ஆற்றில் சுமார் 1½ லட்சம் கன அடி தண்ணீர் சென்றது.

    இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதிகளான ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு கிராமங்களில் மழை நீர் சூழ்ந்தது.

    மேலும் தூத்துக்குடியில் உள்ள கோரம்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் உடைந்ததால் பொதுமக்கள் வெள்ள நீரில் சிக்கி வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

    பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. தூத்துக்குடி மாநகர், திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட நகர பகுதிகள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனி தீவுகளாக காட்சி அளித்தன.

    இந்நிலையில், 2 நாட்களுக்கு பிறகு கனமழை ஓய்ந்ததால் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்தன.

    எனினும் சாலைகள் துண்டிப்பு, மின் இணைப்பு, தொலை தொடர்பு வசதிகள் இல்லாததால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை.

    மாவட்டம் முழுவதும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார், தீயணைப்பு மீட்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் என பல துறையினரும் மீட்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    எனினும் 5 நாட்களாகியும் பல இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. தூத்துக்குடி மாநகர பகுதிகளான ஸ்டேட் பாங்க் காலனி, தபால் தந்தி காலனி, ராஜகோபால் நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், அம்பேத்கர் நகர், கே.டி.சி. நகர், ராஜீவ் நகர், ஆதி பராசக்தி நகர், தனசேகர் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இன்னும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இப்பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் மீட்கப்பட்டு முகாம்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

    இதே போல ஏரல், ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5-வது நாளாக வெள்ளம் வடியாத நிலையே உள்ளது.

    இந்த கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை சேர்ந்த பொதுமக்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து செல்ல முடியாத இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கயிறு கட்டி சென்று அவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

    மெஞ்ஞானபுரம், திருப்பணி, ஊழிக்குடியிருப்பு சுற்று வட்டார பகுதிகளில் இன்றும் வீடுகளை சுற்றி 7 அடி தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்கு தவித்த பொதுமக்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பணி பகுதியில் 3 வீடுகள் முற்றிலும் இடிந்தது. கல்விளை உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் வெள்ளத்தில் சிக்கி இறந்துள்ளது. சாலோம் நகரில் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்குள்ளவர்கள் மீட்கப்பட்ட நிலையில் வீட்டின் மாடியில் தவித்த முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை மீட்பு படையினர் நேற்று பத்திரமாக மீட்டனர்.

    தூத்துக்குடியில் ஏராளமான உப்பளங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் உப்பு உற்பத்தியை தொடங்க இருந்த நிலையில் அது முடியாததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக உப்பள தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 அடிக்கு தண்ணீர் உள்ளதால் அது செயல்பட முடியாமல் அங்குள்ள பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேலும் மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையமும் 5 அடி தண்ணீரில் மிதந்து வருகிறது.

    மெஞ்ஞானபுரம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    தூத்துக்குடி மாநகர் பகுதி மட்டுமின்றி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் வெள்ளத்தில் சிக்கி உள்ள வீடுகளில் வசிப்போர் குடிக்க தண்ணீர் இன்றி தவித்து வருகிறார்கள்.

    அங்கு ரூ.25-க்கு விற்கப்பட்ட ஒரு கேன் தண்ணீர் தற்போது ரூ.100-க்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    எனவே தங்களுக்கு உணவு, குடிநீர் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    தென்திருப்பேரை, மேலகடம்பா, குட்டக்கரை, கேமலாபாத், ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகள் தனித்தீவுகளாக காட்சி அளிக்கிறது. இதே போல் ஏரல் ஆற்று பாலத்தின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டதால் ஏரல் மற்றும் ஆத்தூர் உள்ளிட்ட சில இங்களும் தனித்தீவுகளாக காட்சி அளிக்கிறது.

    இதே போல் மணக்கரை, நடுவக்குறிச்சி, புன்னக்காயல், முக்காணி, உமரிக்காடு, ஆழிக்குடி, ஆழ்வார்தோப்பு, மாவடிப் பண்ணை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தற்போதும் வெள்ளம் வடியாமல் உள்ளது.

    தூத்துக்குடியில் தவிக்கும் பொதுமக்களுக்கு அரசு சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மதுரை, திருச்சி, சென்னை, கோவை, தஞ்சாவூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிஸ்கட், தண்ணீர், பாய், போர்வை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு முகாம்களில் உள்ளவர்களுக்கும், வீடுகளின் மாடியில் வெள்ளத்தில் தவிப்போருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    • பால்பின் ராஜ் என்ன ஆனார் என்று அவரது குடும்பத்தினர் தவித்து வந்தனர்.
    • மேலும் சிலர் செல்போன் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அடுத்த அடைக்கலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்பின்ராஜ் (வயது 26).

    இவர் சாகுபுரம் தனியார் நிறுவனத்தில் பணியாளராக இருந்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார்.

    வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பும் போது ஏற்கனவே பெய்த பலத்த மழை காரணமாக சாலையில் பெருவெள்ளம் ஏற்பட்டு தடைபட்டிருந்தது.

    ஆனால் இதையும் கடந்து எப்படியாவது வீடுகளுக்கு சென்று விட வேண்டும் என்ற முனைப்பில் பெரும்பாலான தொழிலாளர்கள் இருந்துள்ளனர்.

    இதற்கு ஏற்ப அவர்களில் பலர் தொழிற்சாலையின் பின்பக்கத்தில் வழியாக அபாயகரமாக பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரை ஒருவர் பின் ஒருவராக கைகோர்த்து சென்றுள்ளனர்.

    இதன்படி 15 பேரை கொண்ட குழுவினரோடு பால்பின் ராஜும் அவ்வழியே சென்றுள்ளார். அந்த வரிசையில் இவர் கடைசி ஆளாகவும் இருந்துள்ளார்.

    இந்நிலையில் தட்டு தடுமாறி போராடியபடி அக்குழுவினர் வெள்ள நீரோட்டத்தை கடந்து மறுகரையை அடைந்துள்ளனர். ஆனால் அப்போது பால்பின் ராஜை மட்டும் காணவில்லை. இதனால் மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் பரவி ஆறுமுகநேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பால்பின் ராஜ் என்ன ஆனார் என்று அவரது குடும்பத்தினர் தவித்து வந்தனர். இதனிடையே மீட்பு படையினர் படகு மூலம் அவரை முழுவீச்சில் தேடி வந்தனர். இந்த நிலையில் பால்பின் ராஜ் வெள்ள நீரில் வெகு தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சிக்கி பிணமாக கிடந்தது தெரியவந்தது. 3 நாட்களுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.

    இதே போல் மேலும் சிலர் செல்போன் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை கருதி மீட்பு படையினர் தேடி வருகின்றனர். 

    • வெள்ளத்தில் சேதம் அடைந்த வீடுகளை ஆய்வு செய்த பின்னர் அங்குள்ள தேவாலயத்தில் தங்கி இருந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளத்தில் இருந்து வரும் மொழிகளை அரசியலாக்குவது என சொல்லக்கூடாது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நெல்லை வந்தார்.

    அவருக்கு நெல்லை மாநகர் மாவட்ட ஓ.பி.எஸ் அணி செயலாளர் வி.கே.பி. சங்கர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மனோஜ் பாண்டியன் எம்.எல். ஏ., ஓ.பி.எஸ். அணி நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பாளை மனக்கவலம்பிள்ளை நகருக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டனர். வெள்ளத்தில் சேதம் அடைந்த வீடுகளை ஆய்வு செய்த பின்னர் அங்குள்ள தேவாலயத்தில் தங்கி இருந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்பு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை வைத்து, முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அரசு மெத்தனமாக செயல்பட்டுள்ளது.

    ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் மாநகர் பகுதிக்குள் புகுந்து அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களும் மிகுந்த சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    வீடுகள் தோறும் கணக்கெடுத்து ரூ.25 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை புதிதாக மீண்டும் அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்திய வானிலை ஆய்வு மையம் எங்கு எங்கு மழை பெய்யும் எவ்வளவு மழை பெய்யும் என முன்னெச்சரிக்கையை முறையாக வழங்கி உள்ளது. அரசுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். எடுக்க தவறி விட்டு வானிலை ஆய்வு மையம் மீது குற்றம் சுமத்துவது தவறு. பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளத்தில் இருந்து வரும் மொழிகளை அரசியலாக்குவது என சொல்லக்கூடாது.

    வியாபார நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்பட்டுள்ளது. அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை கட்டுவதை ஒரு மாதம் அல்லது 2 மாதம் தள்ளி வைக்க வேண்டும்.

    சென்னையை விட தென் மாவட்டங்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடும்பத்திற்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.

    வாஷிங் மெஷின், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் மிகுந்த சேதமடைந்துள்ளது. அதனையும் கணக்கெடுத்து பொருட்களையும் உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி புரியும் வேலையில் மத்திய அரசு நிதி வழங்கும் முன்பே மக்களுக்கு எந்த மாதிரியான நிதி வழங்க வேண்டும் என்பதை திட்டமிட்டு மக்களுக்கு வழங்கினார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியை முன்னுதாரணமாக எடுத்து அரசு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இடங்களையும், கொக்கிர குளத்தில் தாமிரபரணி ஆற்றின் நீரோட்டத்தையும் பார்வையிட்டனர்.
    • அம்பை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டு சென்றனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் கடுமையான பாதிப்படைந்துள்ளது.

    இதனால் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து கணக்கீடு செய்வதற்காக மத்திய குழு நேற்று தூத்துக்குடிக்கு வந்து ஆய்வு செய்தது. இந்நிலையில் அந்த குழுவினர் இன்று காலை கோவில்பட்டியில் இருந்து நெல்லை வந்தடைந்தது. தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்த்திகேயனுடன் அந்த குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் மாவட்டத்தில் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்தியக்குழு ஆய்வு செய்ய தொடங்கியது. அப்போது சேதங்களையும், அதன் மதிப்பீடையும் கணக்கீடு செய்தனர்.

    இந்த குழுவில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை விஜயகுமார், ஜல்சக்தி அமைச்சகம் தங்கமணி, நிதித்துறை துணை இயக்குனர் ரெங்கநாத் ஆடம், ஐதரபாத்தில் உள்ள மத்திய வேளாண் இயக்குனர் முனைவர் பொன்னுசாமி, மின்சாரத்துறை துணை இயக்குனர் ராஜேஸ் திவாரி, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் பாலாஜி ஆகியோர் அடங்கிய குழுவினர் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    முதல் கட்டமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இடங்களையும், கொக்கிர குளத்தில் தாமிரபரணி ஆற்றின் நீரோட்டத்தையும் பார்வையிட்டனர்.

    தொடர்ந்து ஆற்றங்கரை ஓரம் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தால் சேதம் அடைந்திருப்பது குறித்து ஆய்வு செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து சந்திப்பு மற்றும் டவுன் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் அங்கிருந்து அம்பை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டு சென்றனர். அங்கு ஊர்க்காடு, சாட்டுபத்து, கோடாரன்குளம் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

    அதன் பின்னர் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் பகுதியில் ராஜபதி, பாலாமடை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்கின்றனர். இந்த இடங்கள் அனைத்தையும் மத்திய குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதில் ஒரு குழு களக்காட்டில் வாழைகள் சேதம் அடைந்துள்ளதை பார்வையிட்ட பின்னர் நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இன்று ஆய்வு செய்கிறது.

    • அதிகாரிகள் மக்களுக்கு தேவையான உதவிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார்கள்.
    • டிராக்டர்களில் சென்று உணவு உள்ளிட்ட பொருட்களை போலீசாரும் மீட்பு படையினரும் வழங்கி வருகிறார்கள்.

    நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் 4 மாவட்ட மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட மக்களை வெள்ள பாதிப்பு பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்ரீ வைகுண்டம் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களை சூழ்ந்து உள்ள வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாத நிலையில் அங்கு வசிக்கும் பொதுமக்கள் 5-வது நாளாக தவித்து வருகிறார்கள்.

    இப்படி வெள்ள பாதிப்பில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பதற்கும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் போலீஸ் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் 3500-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தென் மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் தலைமையில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 4 போலீஸ் சூப்பிரண்டு மற்றும் உயர் அதிகாரிகள் மக்களுக்கு தேவையான உதவிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்ட போலீசாருடன் பக்கத்து மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி உள்ள பல கிராமங்களில் வெள்ளம் முழுமையாக வடியாத நிலையில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நேரத்தில் மக்களை சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    அதுபோன்ற கிராமங்களுக்கு டிராக்டர்களில் சென்று உணவு உள்ளிட்ட பொருட்களை போலீசாரும் மீட்பு படையினரும் வழங்கி வருகிறார்கள்.

    • வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மட்டுமே மீன் பிடிக்கச் சென்று ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் கரை திரும்புவார்கள்.
    • கடந்த 7 நாட்களாக பெய்த அடைமழை காரணமாக இப்பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நகர் லாஞ்சியடி, சோழியக்குடி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மட்டுமே மீன் பிடிக்கச் சென்று ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் கரை திரும்புவார்கள்.

    அப்போது விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் பிடித்து வரும் இறால், நண்டு, கனவாய் போன்ற கடல் உணவுப்பொருட்களை தூத்துக்குடி பகுதியிலிருந்து வந்து கடல் உணவுப்பொருட்களை பதப்படுத்தி வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனங்கள் வாங்கிச்செல்வது வழக்கம்.

    நெல்லை, தூத்துக்குடி பகுதியில் வெள்ளத்தினால் அப்பகுதியில் சாலை, மின்சாரம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதால் போக்குவரத்து தடைபட்டதோடு, மின்சாரம் இல்லாததால் கடல் உணவுப்பொருட்களை குளிர்படுத்தும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன் ஏற்றுமதி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 7 நாட்களாக பெய்த அடைமழை காரணமாக இப்பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இந்தநிலையில், தற்போது பெரிய நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் நிலையும் இல்லாததால், மழை விட்டும் இப்பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    தொண்டி வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் 4.4 மில்லி மீட்டர் என்ற அளவில் குறைந்த அளவு மழை பொழிவு பதிவானது குறிப்பிடத்தக்கது.

    • தொடர்ந்து வெள்ள நீர் உயர்ந்து கொண்டே இருந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.
    • தங்களுக்கு உரிய நிவாரணம் வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    உடன்குடி:

    உடன்குடியில் இருந்து மெஞ்ஞானபுரம் செல்லும் மெயின்ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட பரப்பளவில் சடையனேரி குளம் உள்ளது.

    இந்த குளம் சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை வெள்ளத்தினால் குளம் உடைந்து விவசாய தோட்டங்கள் மற்றும் அடப்பநல்லூர், செட்டியா பத்து, கூழையன் குண்டு, அருணாச்சலபுரம், தண்டு பத்து, அரசூர்பேட்டை, வெள்ளாளன்விளை, வட்டன்விளை, செட்டி விளை, பரமன்குறிச்சி ஆகிய பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    இதனால் இந்த வீடுகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று தொடர்ந்து வெள்ள நீர் உயர்ந்து கொண்டே இருந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

    இந்நிலையில் கிராம அதிகாரி கணேச பெருமாள் நேரில் பார்வையிட சென்ற போது வெள்ளாளன்விளை பொது மக்கள் சிறை பிடித்தனர். தங்களுக்கு உரிய நிவாரணம் வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பின்னர் திருச்செந்தூர் தாசில்தார் வாமனன் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து விரைவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதால் கலைந்து சென்றனர்.

    தொடர்ந்து உடைந்த சடையனேரி குளத்தில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருவதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அதிக அளவு பாதிக்கப்படும் நிலை உள்ளது இன்று காலை வரை தண்ணீர் வடியாமல் ஏராளமான கிராமங்களில் மக்கள் பரிதவிக்கின்றனர். 

    • தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளநீர் புகுந்தது.
    • கனிமொழி எம்.பி. கர்ப்பிணி பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளநீர் புகுந்தது. இந்நிலையில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் உதவி எண்ணிற்கு கர்ப்பிணி பெண் ஒருவரை வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று அழைப்பு வந்தது.

    அதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி. புஷ்பா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று கர்ப்பிணி பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்.

    கர்ப்பிணி பெண்ணை வாகனத்தில் ஏற்ற உதவி செய்த கனிமொழி எம்.பி.யும், அதே வாகனத்தில் மருத்துவமனை வரை உடன் சென்றார். கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோர் கனிமொழி எம்.பி.க்கு நன்றி தெரிவித்தனர்.

    ×