search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிவாரண நிதி"

    • 24 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும் என்று எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.
    • மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீண்டும், மீண்டும் வேதனைக்கு உள்ளாக்கக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கும் திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் துயரங்களைப் போக்குவதற்கு பதிலாக வேதனையையும், மன உளைச்சலையும் அதிகரித்திருக்கிறது. நிவாரண உதவி வழங்குவதில் நிகழும் குளறுபடிகள் தான் அனைத்துக்கும் காரணம் ஆகும். இந்த தவறான அணுகுமுறை கண்டிக்கத்தக்கது ஆகும்.

    சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குடிசைகளில் வாழும் ஏழை மக்களுக்குக் கூட நிவாரண உதவி மறுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் அனைத்து வசதிகளுடன் வாழும் பணக்காரர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. எந்த அடிப்படையில் நிதி உதவி பெறுவதற்கான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது தெரியவில்லை. நிவாரண உதவி கண்டிப்பாக தேவைப்படும் நிலையில் உள்ள ஏழை மக்களை புறக்கணிப்பது அவர்களின் துயரங்களை மேலும் அதிகரிக்கும்.

    தமிழக அரசின் நிவாரண உதவி பெறுவதற்கான ஒரே தகுதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தான். அதன்படி பார்த்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 40 லட்சத்திற்கும் கூடுதலான குடும்பங்கள் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மழை - வெள்ளத்தை பார்வையிட வந்த மத்தியக் குழுவிடம் அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளில் இதை தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. அதன்படி, 40 லட்சம் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், 24 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும் என்று எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.

    நிவாரண உதவி மறுக்கப்பட்டவர்கள் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான முறை நடைமுறைக்கு சிறிதும் ஒத்துவராததாக உள்ளது. அதற்காக கோரப்படும் ஆவணங்களையும், சான்றுகளையும் சேகரித்து வழங்குவது பாமர மக்களால் இயலாத ஒன்றாகும். மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீண்டும், மீண்டும் வேதனைக்கு உள்ளாக்கக் கூடாது. மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும், மற்றவர்களுக்கும் எந்த நிபந்தனையும் இல்லாமல் ரூ.6000 இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டதில் பெரும் பகுதி அரசுக்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.
    • குடும்பங்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் ரூ.6,000 நிதியுதவி, நாளை முதல் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட இருக்கிறது. குடும்பங்களின் துயரத்தை துடைப்பதற்காக வழங்கப்படும் நிதி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் துயரத்தை ஏற்படுத்தி விடாமல் இருப்பதை அரசு தடுக்க வேண்டும்.

    வழக்கமாக அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும் போது, அந்தத் தொகையின் பெரும் பகுதி குடும்பத்திற்கு செல்வதில்லை என்றும், குடும்பத் தலைவர்களின் வழியாக மதுக்கடைகள் மூலம் மீண்டும் அரசுக்கே செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றனர்.

    தீபாவளி திருநாளுக்கு சில நாட்கள் முன்பாக கடந்த நவம்பர் 10-ந் தேதி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு மக்களுக்கு ரூ.1138 கோடி வழங்கப்பட்டது. ஆனால், அதற்கு அடுத்தநாளில் தொடங்கி 5 நாட்களில், தீப ஒளி திருநாளையொட்டி வரலாறு காணாத வகையில், ரூ.1000 கோடிக்கும் கூடுதலான மது விற்பனையானது. அதன் மூலம் மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டதில் பெரும் பகுதி அரசுக்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.


    மழை-வெள்ளப் பாதிப்புக்காக வழங்கப்படும் ரூ.6,000 நிதியும் அதேபோல் மக்களுக்கு பயன்படாமல், மதுக்கடைகளுக்கு சென்று விடக் கூடாது. மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது ரூ.25 ஆயிரத்தில் தொடங்கி சில லட்சங்கள் வரை வாழ்வாதார இழப்பும், பொருள் இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசால் வழங்கப்படும் நிதியைக் கொண்டு தான் இந்த இழப்பின் ஒரு பகுதியையாவது சரி செய்ய முடியும். மாறாக, வழக்கம் போல, நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் தொகை மீண்டும் மதுக்கடைகளுக்கு சென்றால், எந்த ஒரு குடும்பத்திலும் மழை-வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய முடியாது. அது அந்த குடும்பங்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கும்.

    தமிழக அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படுவதற்கும், மது வணிகத்திற்கும் தொடர்பு இல்லை என்று கூற முடியாது. கடந்த காலங்களில் பொங்கல் பரிசு, மகளிர் உரிமைத் தொகை, வெள்ள நிவாரணம் என நிதியுதவி வழங்கப்பட்ட காலங்களில் எல்லாம் வணிகரீதியாக பயனடைந்தது மதுக்கடைகள் மட்டும் தான். தமிழ்நாட்டின் மது வணிகம் குறித்த புள்ளி விவரங்கள் இதை உறுதி செய்யும். அதனால், கடந்த காலங்களில் நடந்த அதே தவறு இப்போதும் மீண்டும் நடப்பதற்கு தமிழக அரசு வாய்ப்பளித்து விடக் கூடாது.

    எனவே, மழை நிவாரண உதவி வழங்கப்படவிருக்கும் நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, புத்தாண்டு நாளான ஜன 1-ந் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மட்டுமின்றி, அவற்றையொட்டிய பிற வட மாவட்டங்களிலும் மதுக்கடைகளை மூட தமிழக அரசு ஆணையிட வேண்டும். அதன் மூலம் தமிழக அரசால் வழங்கப்படும் ரூ.6000 நிதி குடிக்கு செல்லாமல், குடும்பச் செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்தப் படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் 1000 முதல் 1,500 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
    • பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் உதவி தொகை பெற விரிவான ஏற்பாடுகளை உணவு வழங்கல்துறை செய்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் வெள்ளத்தால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டனர். வீட்டில் உள்ள பொருட்கள், உடமைகள், கடுமையாக சேதம் அடைந்தன.

    பெரும்பாலான பகுதிகளில் அதிகளவில் பாதிப்பு இருந்தாலும் ஒரு சில இடங்களில் குறைவாக இருந்தன. இருந்தாலும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படுகிறது.

    தமிழக அரசின் சார்பில் ரூ.6000 நிவாரண உதவி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சென்னையில் 15 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன.

    வெள்ள நிவாரண நிதி நாளை (17-ந்தேதி) முதல் வழங்கப்படுகிறது. அதற்கு முன்னதாக குடும்ப அட்டைதாரர்களுக்கு நேற்று முதல் டோக்கன் வினியோகிக்கப்படுகிறது. அவரவர் பொருட்கள் வாங்கக் கூடிய ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்படுவதால் அந்த பகுதிகளில் நீண்ட வரிசை காணப்படுகிறது.

    சென்னையில் 1000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடைகள் முன்பும் பொதுமக்கள் வரிசையில் காத்து நின்றனர். இன்று 2-வது நாளாக டோக்கன் வழங்கப்படுகிறது.

    ஒரு சில ரேஷன் கடைகளில் இன்றுதான் டோக்கன் வினியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் 1000 முதல் 1,500 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். நாளை முதல் நிவாரண நிதி வழங்கப்படுவதால் இன்று கூட்டம் அலைமோதியது.

    வடசென்னை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் அதிகாலை 5 மணிக்கே வரிசையில் நிற்க தொடங்கினர். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெரியவர்கள் வரிசையில் உட்கார்ந்து இருந்தனர்.

    நேரம் செல்ல செல்ல வரிசை நீண்டு கொண்டே போனது. ஒரு தெருவில் இருந்து அடுத்த தெருவரை மக்கள் காத்து நின்றனர். காலை 8 மணிக்கே ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    டோக்கனில் கடையின் பெயர், குடும்ப அட்டைதாரர் பெயர், குடும்ப அட்டை எண், நிவாரண தொகை வழங்கப்படும் நாள், நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்திற்கு ரேஷன் கடைக்கு சென்று நிவாரணத் தொகை பெற வேண்டும்.

    நிவாரணத் தொகை ஒவ்வொரு கடைகளிலும் தினமும் 100 பேர் முதல் 300 பேர் வரை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி தொடர்ந்து நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் உதவி தொகை பெற விரிவான ஏற்பாடுகளை உணவு வழங்கல்துறை செய்துள்ளது.

    ஒருசில ரேஷன் கடைகள் முன்பு கூட்டம் அதிகமாக இருப்பதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு வரிசையை ஒழுங்குப்படுத்தினர்.

    சென்னை நகரில் எங்கு பார்த்தாலும் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதால் மக்கள் கூட்டம் கூட்டமாக உதவிகளை பெற சென்று வருகிறார்கள். ஒவ்வொரு தெருக்களிலும் மக்கள் வரிசையில் நிற்பதை காண முடிகிறது.

    சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் போட்டி போட்டுக் கொண்டு நிவாரண பொருட்களை ஒருபுறம் வழங்கி வருகின்றனர்.

    • ஆதார் எண், வங்கி எண், வீட்டின் விபரங்கள் உள்ளிட்டவை விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளது.
    • விண்ணப்பங்கள் ரேசன் கடைகள் மூலமாக தான் வழங்கப்படும்.

    சென்னை:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 ரேசன் கடைகள் மூலமாக வருகிற 17-ந்தேதி முதல் அரசு வழங்க உள்ளது. இதற்கான டோக்கன் நேற்று பிற்பகல் முதல் ரேசன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படுமா? இல்லையா? என்ற எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * குடும்ப அட்டை இல்லாமல் இருந்தாலும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் நிவாரணம் பெறலாம்.

    * பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் வருமானவரி செலுத்துவோர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

    * ஆதார் எண், வங்கி எண், வீட்டின் விபரங்கள் உள்ளிட்டவை விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளது.

    * விண்ணப்பங்கள் ரேசன் கடைகள் மூலமாக தான் வழங்கப்படும்.

    * விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள 11 கேள்விகளை பூர்த்தி செய்து வழங்கும்போது ஒப்புதல் சீட்டு வழங்கப்படும்.

    * விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினால் தேர்விற்கு பிறகு நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கும் பணியை சென்னையில் 17-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டதோடு மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளும் சேதம் அடைந்தன.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    இதற்கான டோக்கன் வருகிற 16-ந் தேதி முதல் வினியோகிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே இன்று பிற்பகல் முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், ஸ்ரீ பெரும்புதூர் (3கிராமங்கள் மட்டுமே) செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், திருப்போரூர், (3கிராமங்கள் மட்டுமே), திருவள்ளூரில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய வட்டங்களில் உள்ள வீடுகளுக்கு டோக்கன்கள் வழங்கும் பணி இன்று தொடங்கியது.

    டோக்கன் பெற்றவர்களுக்கு வருகிற 17-ந்தேதி முதல் (ஞாயிற்றுக்கிழமை) ரேஷன் கடைகளில் ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கும் பணியை சென்னையில் 17-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

    • 4 மாவட்டங்களிலும் ஏற்பட்டிருந்த வெள்ள சேதம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக எடுத்துக் கூறினார்.
    • மத்திய குழுவினர், கண்டிப்பாக தமிழகத்திற்கு தேவையான உதவிகளை பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர்.

    சென்னை:

    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிச்சாங் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் கடந்த 2 நாட்களாக பார்வையிட்டனர்.

    இந்த குழுவில் இடம் பெற்றிருந்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (என்.டி.எம்.ஏ.) ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் சார்பில் திமான் சிங், வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் துறை இணை இயக்குனர் ஏ.கே.சிவ்ஹரே, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விஜயகுமார், நிதித்துறை சார்பில் ரங்கநாத் ஆடம், மின்சாரத்துறை சார்பில் இயக்குனர் பவ்யா பாண்டே ஆகிய 6 பேர் இடம் பெற்றிருந்தனர்.

    இவர்கள் கடந்த 11-ந்தேதி தலைமைச் செயலாளர் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகளை சந்தித்து விட்டு அதன் பிறகு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு வந்தனர். அவர்களுடன் சென்னை மாநகராட்சி அதிகாரி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் சில இடங்களுக்கு உடன் சென்று பாதித்த விவரங்களை எடுத்துக் கூறினார்கள்.

    இதே போல் மற்ற மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கலெக்டர்கள் உடன் சென்று சேத விவரங்களை எடுத்து கூறினார்கள்.

    அதன் அடிப்படையில் மத்திய குழுவினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்பட்டுள்ள சேத விவரங்களை கணக்கெடுத்துள்ளனர். 4 மாவட்டங்களிலும் வெள்ளச் சேதத்தை பார்வையிட்டு மத்திய குழுவினர் இன்று தலைமைச் செயலகத்திற்கு சென்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மத்திய குழுவினர் சென்று சந்தித்தனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யாத்ரி தலைமையில் குழுவில் உள்ள அனைவரும் முதலமைச்சரை சந்தித்தனர். அவர்களுடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பொதுத்துறை செயலாளர் முருகானந்தம் ஆகியோரும் உடன் இருந்தனர்.


    அப்போது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் ஏற்பட்டிருந்த வெள்ள சேதம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக எடுத்துக் கூறினார்.

    அப்போது இடைக்கால நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.5060 கோடி கேட்டிருந்ததைவிட இப்போது சேத மதிப்பு அதிகமாக உள்ளதால் கூடுதலாக நிவாரண உதவி தேவைப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    புயல் பாதிப்பு தொடர்பாகவும் நிதி ஒதுக்கீட்டிற்கான கோரிக்கை மனுவினையும் மத்திய குழுவின் தலைவரான குணால் சத்யாத்ரியிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய சேதத்தை சரி செய்து மீண்டு உருவாக்கவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு அதனை மீண்டும் உருவாக்கி வழங்கிடவும் தமிழ்நாடு அரசின் நிதி ஆதாரம் மட்டும் போதுமானதல்ல. மத்திய அரசு பங்களிப்பும் பெருமளவு தேவைப்படுகிறது.

    எனவே மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்களை மீட்க தேவையான உதவிகளை வழங்கவும் பல்வேறு வகையான சமூக கட்டமைப்புகளை மீட்டுருவாக்கம் செய்யவும், மத்திய அரசுக்கு நீங்கள் உரிய பரிந்துரை செய்து தமிழ்நாடு அரசு கோரி உள்ள தொகையை பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதற்கு மத்திய குழுவினர், கண்டிப்பாக தமிழகத்திற்கு தேவையான உதவிகளை பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர்.

    • நிவாரண நிதியாக ரூ.6000 வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
    • இன்று முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 850 ரேஷன் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    திருவள்ளூர்:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்த தொகை அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இன்று முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 850 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 62 ஆயிரத்து 893 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    • ரூ.6000 வெள்ள நிவாரணத் தொகையை பயோமெட்ரிக் முறையில் மட்டுமே வழங்க வேண்டும்.
    • நிவாரண தொகை வழங்கப்பட்டதும் பயனாளர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டதோடு மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளும் சேதம் அடைந்தன.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    இதற்கான டோக்கன் வருகிற 16-ந்தேதி முதல் வினியோகிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே இன்று பிற்பகல் முதல் டோக்கன் வழங்கப்படுகிறது.

    நிவாரண நிதி வழங்குவது தொடர்பான நெறிமுறைகளை ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * நிவாரணத் தொகை விநியோகத்திற்கு ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் நான்கு பணியாளர்கள் பணியமர்த்த வேண்டும்.

    * வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் நிவாரண தொகை வழங்க அறிவுறுத்தல்.

    * ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 7 நாட்களுக்குள் நிவாரண தொகையை வழங்க வேண்டும்.

    * டோக்கன்களை ரேஷன் ஊழியர்கள் தான் நேரில் சென்று வழங்க வேண்டும். மூன்றாம் நபரை பணியில் ஈடுபடுத்தக்கூடாது.

    * டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாளில் வருலும் குடும்ப அட்டைதாரர்களை எக்காரணம் கொண்டும் ரொக்கத் தொகை இல்லையென திருப்பி அனுப்பக்கூடாது.

    * ரூ.6000 வெள்ள நிவாரணத் தொகையை பயோமெட்ரிக் முறையில் மட்டுமே வழங்க வேண்டும்.

    * நிவாரண தொகை வழங்கப்பட்டதும் பயனாளர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

    * தினமும் காலை 9 மணி முதல் 1 மணி வரையும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரையும் நிவாரண தொகை வழங்கப்படும்.

    • கொரோனா காலத்தில் தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது, மக்களை தேடி தேடி போய் உதவியது.
    • தகுதியுள்ள அத்தனை பேருக்கும் ரூ.6000 நிவாரண தொகை வழங்கப்படும்.

    சென்னை:

    எழும்பூரில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி பி.கே.மூர்த்தி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    * மழை வரும் என்று எச்சரித்தார்கள். ஆனால் இவ்வளவு பெரிய மழை இருக்கும் என்று எச்சரிக்கை செய்யவில்லை. இதை அனைத்தையும் மீறி 45 வருடங்கள் இல்லாத மழையை நாம் பார்த்துள்ளோம்.

    * தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு செயலாற்றும் கட்சி.

    * ஆட்சியில் இருக்கும் போது உள்ள வசதி, அதிகாரம் அதை பயன்படுத்தி நாம் சுலபமாக பணியாற்றி விடுவோம். ஆனால் ஆட்சியில் இல்லாத போதும் நாம் பணியாற்றி வருகிறோம்.

    * கொரோனா காலத்தில் தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது, மக்களை தேடி தேடி போய் உதவியது தி.மு.க.

    * 2015-ம் ஆண்டு முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    * ஏரியை திறக்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அனுமதி கேட்க அதிகாரிகள் பயந்தனர்.

    * 2015-ல் கொஞ்சம் கொஞ்சமாமக ஏரியை திறந்திருந்தால் பலர் உயிரிழக்காமல் இருந்திருப்பார்கள்.

    * 2015-ஐ விட மோசமான மழை பெய்தும் செம்பரம்பாக்கம் ஏரியை நிரம்ப விடாமல் கொஞ்சம் கொஞ்சமாக திறந்து சென்னைக்கும் வந்த பெரும் பாதிப்பை தவிர்த்து உள்ளோம்.

    * இந்த மழை வெள்ளத்தில் மக்களை சந்தித்து உதவிய ஒரே கட்சி திமுக தான். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று அனைவரும் மக்களை சந்தித்து உதவிகரமாக நீட்டினார்கள்.

    * மூன்று நாட்களாக ஆய்வு செய்யும் மத்திய அரசின் அதிகாரிகள் கூட மழை வெள்ளத்தை தமிழக அரசு சிறப்பாக கையாண்டு உள்ளது என்று கூறி உள்ளனர். மத்திய அரசில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் மனதார பாராட்டி உள்ளனர்.

    * தகுதியுள்ள அத்தனை பேருக்கும் ரூ.6000 நிவாரண தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ரேஷன் கடைகளுக்கு அரசு ஒரு பட்டியல் அனுப்பி உள்ளது.
    • வருமான வரி செலுத்தக் கூடியவர்கள், அரசு பணியில் அதிகாரியாக இருப்பவர்களின் பெயர் பட்டியலில் இல்லை.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டதோடு மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளும் சேதம் அடைந்தன.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    இதற்கான டோக்கன் வருகிற 16-ந்தேதி முதல் வினியோகிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே இன்று பிற்பகல் முதல் டோக்கன் வழங்கப்படுகிறது.

    சென்னையில் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், ஸ்ரீ பெரும்புதூர் (3கிராமங்கள் மட்டுமே) செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், திருப்போரூர், (3கிராமங்கள் மட்டுமே), திருவள்ளூரில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய வட்டங்களில் உள்ள வீடுகளுக்கு டோக்கன்கள் வழங்கும் பணி இன்று பிற்பகல் முதல் தொடங்குகிறது.

    ரேஷன் கடைகளுக்கு அரசு ஒரு பட்டியல் அனுப்பி உள்ளது. அந்த பட்டியலில் உள்ள நபர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. எந்த தேதியில் எந்த நாள் பணம் வாங்க வரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வருமான வரி செலுத்தக் கூடியவர்கள், அரசு பணியில் அதிகாரியாக இருப்பவர்களின் பெயர் அந்த பட்டியலில் இல்லை.

    பட்டியலில் பெயர் இடம் பெறாத நபர்கள் ரேஷன் கடையில் கொடுக்கப்படும் படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து அரசிடம் உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை கொடுத்து மேல்முறையீடு செய்து நிவாரணம் கோரலாம் என்று தெரிவித்து உள்ளனர்.

    டோக்கன் பெற்றவர்களுக்கு வருகிற 16-ந்தேதி முதல் (சனிக்கிழமை) ரேஷன் கடைகளில் ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது தொடர்பாக இன்று ரேஷன் கடை அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை மூலம் பயிற்சியும் வழங்கப்பட்டது.

    • மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.6000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார்.
    • ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கு வழங்கப்படும்.

    சென்னை:

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.6000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார். இதுதொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இன்று அரசாணை வெளியிடப்பட்டது.

    அதன் விவரம் வருமாறு:-

    * சென்னையில் உள்ள அனைத்து வட்டங்களுக்கு நிவாரணத் தொகை ரூ.6000 வழங்கப்படும்.

    * செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் முழுமையாக, திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கு வழங்கப்படும்.

    * காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டத்தில் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும் வழங்கப்படும்.

    * திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய வட்டங்களுக்கு ரூ.6000 வழங்கப்படும்.

    * புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, 2 நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து பொருட்களை இழந்தவர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் டோக்கன் வழங்கி நிதி வழங்கப்படும்.

    * அரசு, பொதுத்துறை உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டிருந்தால் வங்கிக் கணக்கு விவரத்துடன் விண்ணப்பிக்கலாம்.

    * விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் உரிய நிவாரணம் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

    * தேவையான அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளில் விநியோகிக்கப்படும்.

    * கூட்டுறவு சங்கப் பதிவாளர், நுகர் பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் நியாய விலைக்கடைகளில் விண்ணப்பங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    * நியாய விலைக்கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க காவல்துறையுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர், நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    * நிவாரணத் தொகை ரூ.6000 வழங்குவதற்கான டோக்கன்கள் நாளை முதல் வழங்கப்பட உள்ளது.

    * டோக்கனில் கடையின் பெயர், குடும்ப அட்டைதாரர் பெயர், குடும்ப அட்டை எண், நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பெரியாரின் கருத்துகள் மதிக்கக்கூடியவை.
    • கவர்னர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

    கோவை:

    தெலுங்கானா, புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்த சம்பவம் மன வருத்தம் அளிக்கிறது. அங்கு ரத்தம் சிந்தி இருக்கிறது. வைகுண்ட ஏகாதசி நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது இந்து மதத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.

    ரத்தம் சிந்தும் அளவிற்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து இருப்பது, பாதுகாப்பு சீர்கேடுகளை காட்டுகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. உண்டியலை எடுக்க குறியாக இருப்பதில் காட்டும் அக்கறை பாதுகாப்பிலும் இருக்க வேண்டும். வேறு மாநிலத்தவர்கள் நம் கோவிலுக்கு வரும்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டியது நம் கடமை.

    பெரியாரை, தேசிய விரோத கருத்துகளை பகிர்வதற்கு கேடயமாக தி.மு.க.வினர் பயன்படுத்துகின்றனர். பெரியாரின் கருத்துகள் மதிக்கக்கூடியவை. பெரியாரின் கருத்துகளை அழுத்தமாக பதிவு செய்வோம் என முதலமைச்சர் தெரிவிக்கின்றார். பெண்களுக்கு உரிமை கொடுக்கும் ஆட்சிதான் மத்தியில் இப்போது நடக்கின்றது. தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளும் தாரை வார்த்ததை மத்திய அரசு மீட்டு எடுத்து கொண்டு வருகின்றது. காஷ்மீர், கவர்னர், கட்சத்தீவு என மத்தியில் ஆட்சியில் இருந்த பொழுது செய்யாத விஷயங்களை இப்போது தி.மு.க. பேசிக்கொண்டு இருக்கிறது.

    கவர்னர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டும். கேரள கவர்னர் மீது தாக்குதல் முயற்சி வன்மையாக கண்டிக்கதக்கது.


    மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு உதயநிதி வார்த்தைகளை அடக்கி பேச வேண்டும். அடக்கவில்லை என்றால் அவர் எதிர்மறை தலைவராக இந்தியா கூட்டணியிலும், மற்ற இடங்களிலும் வருவார்.

    கலைஞரின் பேரனா நீங்க? அவர் இப்படியா பேசினார்? திட்டுவதாக இருந்தாலும் அழகு தமிழில் திட்டுவார். தி.மு.க. யாரோட அப்பன் வீட்டு சொத்து. தி.மு.க. தொண்டர்கள் முதலில் இதை உதயநிதியிடம் கேள்வி கேட்க வேண்டும். அதற்கு அவரே வழி செய்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×