search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிகம்"

    • எந்தவித பிடிமானமும் இன்றி கத்தி பானை மீது அந்தரத்தில் நின்றது.
    • அம்மனின் கத்தி கருவறைக்குள் சென்று வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி நகரின் மையப்பகுதியில் நுற்றாண்டுகள் பழமையான ராமலிங்க சவுடேஷ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இதற்காக கொட்டக்குடி ஆற்றில் இருந்து அம்மன் பாதத்தில் வைக்கப்பட்டிருந்த கத்தியை அலங்கரிக்கப்பட்ட வெள்ளைக்குதிரை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஆடிப்பாடி கோவிலுக்கு கொண்டு வந்தனர். வரும் வழியில் பக்தர்கள் தங்கள் உடலின் மீது கத்தி போட்டு சென்றனர்.

    அதன்பின் அம்மனின் கத்தி கருவறைக்குள் சென்று வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் உடலில் கத்தி போட்டு ஆடி வந்த பக்தர்கள் ஆமணக்கு முத்துக்குவியல் வைக்கப்பட்டிருந்த பானை மீது புனித நீர்த்தங்களை ஊற்றி நிற்க வைத்தனர். அப்போது எந்தவித பிடிமானமும் இன்றி கத்தி பானை மீது அந்தரத்தில் நின்றது. இதனை பக்தர்கள் மெர்சிலிர்க்க கண்டு ரசித்தனர்.

    இந்த திருவிழாவை காண சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.

    • அரோகரா கோஷங்கள் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்கள் கூட்டத்தால் கோவில் வளாகமே நிரம்பி வழிகிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா, வசந்த திருவிழாவாக கடந்த 13-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 10-ம் நாளான இன்று விசாகத் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது.

    வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மற்றும் தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனையாகி சுவாமி வசந்த மண்டபத்தை 11 முறை சுற்றி வருகிறார். அங்கு முக்கிய நிகழ்ச்சியான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடக்கிறது.

    தொடர்ந்து மகா தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    வைகாசி விசாகத் திருவிழாவில் கலந்து கொள்ள கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும்,காவடி எடுத்து வந்து கடலில் புனித நீராடி அரோகரா கோஷம் முழங்கி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் விண்ணதிர அரோகரா கோஷங்கள் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் கூட்டத்தால் கோவில் வளாகமே நிரம்பி வழிகிறது.

    • நேற்று இரவே திருப்பரங்குன்றத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
    • முருகப்பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முத லாம் படை வீடாக போற் றப்படும் திருப்பரங்குன்றம் கோவிலில் கொண்டாடப் படும் விழாக்களில் வைகாசி விசாகப் பெருவிழா முக்கி யத்துவம் வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்காண விசா கத்திருவிழா, கடந்த 13-ந் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு தினமும் இரவு 7 மணிக்கு புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகன்-தெய்வானையுடன் உற்சவர் சன்னதியில் இருந்து புறப்பட்டு கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு நீர் நிரப்பப்பட்ட தொட்டியின் மீது அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித் தார். 9-ம் நாளான நேற்று வசந்த உற்சவத்தின் நிறைவு விழா நடைபெற்றது.

    10-ம் நாளான இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். வெளியூர்களில் இருந்தும் நேற்று இரவே திருப்பரங்குன்றத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். காலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், பாலாபிஷேகமும் நடை பெற்றது. 6 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விசாக கொறடு மண்டபத் தில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி னர்.

    அங்கு காலை முதல் மாலை வரை, பக்தர்கள் நேர்த்திக்கடனாக தலையில் வைத்து சுமந்து வந்த பாலில் முருகப்பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடைபெற்றது. அவ்வாறு அபிஷேகம் செய்த பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    வைகாசி விசாகத்தை யொட்டி மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாக வந்திருந்த பக்தர்கள் திருப் பரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து அரோகரா கோஷம் எழுப்பினர். பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்தி ருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். நகரில் பல்வேறு பகுதிகளில் இருந் தும் பக்தர்கள் சாரை சாரையாக கோவிலை நோக்கி படையெடுத்தனர்.

    குறிப்பாக கோரிப்பாளை யம், சிம்மக்கல், நேதாஜி ரோடு, மாசி வீதிகள், ஆண்டாள்புரம், வசந்தநகர், பழங்காநத்தம், பைக்காரா, பசுமலை, மூலக்கரை, திரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையே தெரியாத அள வுக்கு பக்தர்கள் பால் குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். அதிலும் குழந்தை கள் பால்குடங்களை தலை யில் சுமந்து வந்ததை வழி நெடுகிலும் நின்று பார்த்த பக்தர்கள் பரவசத்துடன் வரவேற்றனர்.

    கடந்த வாரம் அக்னி நட்சத்திர வெயில் கொளுத் திய நிலையில் சில நாட்க ளாக பெய்து வரும் கோடை மழையால் வெயிலின் தாக்கமின்றி சாலைகளில் பக்தர்கள் பாதயாத்திரை யாக கோவிலை நோக்கி சென்றனர். அதேபோல் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்குள் பால்குடம் எடுத்து வரும் பக்தர்களுக்கு தனி வரிசை, சுவாமி தரிச னம் செய்ய வருபவர்களுக்கு தனி வரிசை என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.

    மேலும் கோவிலுக்குள் கூடுதலாக மின்விசிறி மற்றும் ஏர்கூலர் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. அதி காலை 6 மணி முதல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவி லுக்கு செல்லும் வழிநெடுகி லும் சாலையின் இருபுறமும் பக்தர்களுக்கு சுடச்சுட அன்னதானம், நீர்மோர், பானகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. ஆங் காங்கே மருத்துவம் உள் ளிட்ட அடிப்படை வசதிக ளும் செய்யப்பட்டிருந்தது.

    விழாவையொட்டி, மதுரை மற்றும் பல்வேறு பகுதியிலிருந்தும் வருகை தந்திருந்த பக்தர்கள் திருப்ப ரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து விண்ணதிர அரோ கரா கோஷம் எழுப்பினர். விழாவிற்கான ஏற்பாடு களை அறங்காவலர் குழு தலைவர் சத்தியபிரியா அறங்காவலர்கள் சண்முக சுந்தரம், பொம்ம தேவன், மணி செல்வம், ராமையா, கோவில் துணை ஆணையர் சுரேஷ், மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந் தனர்.

    இதேபோல் முருகப்பெரு மானின் 6-வது படை வீடான அழகர்மலையில் அமைந்துள்ள பழமுதிர்ச் சோலை முருகன் கோவிலி லும் வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் வெள் ளத்தில் சிறப்பாக நடை பெற்றது. மலையடிவாரத் தில் இருந்து நூற்றுக்க ணக்கான பக்தர்கள் பால் குடம், பல்வேறு காவடிகள் எடுத்து மலைமேல் உள்ள நூபுர கங்கை புனித தீர்த்தத் தில் நீராடி பின்னர் பழ முதிர்ச்சோலை முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

    • பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச் சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 14-ந் தேதி கொடியேற்று விழாவுடன் தொடங்கியது. பின்னர் பல்லக்கில் சாமி, மாட வீதியில் வீதி உலா நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனத்தில் சாமி வீதி உலா மற்றும் கருடசேவை விழா நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான தேரோட்டம் இன்று (22-ந் தேதி) நடை பெற்றது. இதனையொட்டி அதிகாலை 4.30 மணி லட்சுமி நரசிம்மர் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து லட்சுமி நரசிம்ம பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில், ஊர்வலமாக கம்பீரமாக பூக்களால் அலங்கரிக்கப் பட்ட தேரில் எழுந்தருளி னார். பின்னர் அங்குத் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    முக்கிய மாடவீதியில் தேரோட்டம் நடைபெற்று பின்னர் நிலையை அடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று நரசிம்மர் அவதாரம் தினமான நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    நாளை (23-ந் தேதி) காலை மட்டையடி உற்சவம், இரவில் இந்திர விமானத்தில் சாமி வீதி உலாவும், 24-ந் தேதி புஷ்ப யாகம், 25-ந் தேதி இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அண்ட சராசரங்களையும் தனது கர்ஜனையால் நடுநடுங்க வைத்தவர் நரசிம்மர்.
    • ஆதிசங்கரரின் சீடர்களுள் முக்கியமானவர் பத்மபாதர்.

    அண்ட சராசரங்களையும் தனது கர்ஜனையால் நடுநடுங்க வைத்த நரசிம்மர், ஒரு வேடனிடம் கட்டுண்டார் என்றால் நம்ப முடிகிறதா? இந்த சம்பவம் ஆதிசங்கரரின் வாழ்க்கை குறிப்புகள் பற்றிய தகவலில் உள்ளது.

    ஆதிசங்கரரின் சீடர்களுள் முக்கியமானவர் பத்மபாதர். இவர் கங்கை ஆற்றின் ஒரு கரையில் நின்று கொண்டிருந்த போது, மறுகரையில் இருந்த ஆதிசங்கரர் உடனடியாக வரும் படி அழைத்தார். குருவின் மீது கொண்ட பக்தியால் எதை பற்றியும் யோசிக்காமல் கரைபுரண்டு ஓடும் கங்கை நீரில் இறங்கி நடக்க துவங்கி விட்டார்.

    பிறகு தான் தெரிந்தது அவர் நீரின் மீது நடப்பதும், அதுவும் தாமரை மலர்கள் மீது கால் வைத்து நடந்து வந்ததும். குருவின் மீது இவர் கொண்ட பக்தியை பார்த்து நெகிழ்ந்து கங்கை தாயே தாமரை மலர்களை நீட்டி, அவரை தாங்கி பிடித்துள்ளார். இதன் காரணமாகவே அவருக்கு பத்மபாதமர் என்ற பெயர் ஏற்பட்டது.

    ஆதிசங்கரரின் சீடனான பத்மபாதன், நரசிம்ம சுவாமியின் தீவிர பக்தன். அவருக்கு நரசிம்மரை நேரில் காண வேண்டும் என வெகு நாட்களாக ஆசை. இந்த ஆசை சில நாட்களில் வைராக்கியமாக மாறியது. இதனால் நரசிம்மரை நோக்கி கடும் தவம் புரிவதற்காக காட்டிற்கு சென்றார்.

    அடர்ந்த காட்டில் வெகு நாட்களாக கண்களை மூடி, நரசிம்மரை வேண்டி தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேடன் ஒருவன், " யாரு சாமி நீ? பல நாட்களாக நான் உன்னை இங்கு பார்க்கிறேன். எதற்காக இங்கு வந்து கண்ணை மூடி உட்கார்ந்திருக்கிறாய்?" என கேட்டான்.

    அவனுக்கு பதிலளித்த பத்மபாதன், "நான் நரசிம்மரை காண்பதற்காக தவம் செய்கிறேன். என்னை தொந்தரவு செய்யாதே" என சொன்னார். " நரசிம்மமா? அப்படின்னா என்ன சாமி?" என அறியாமையுடன் கேட்டான் வேடன். "நரசிம்மம் என்றால் மனிதன் பாதி, மிருகம் பாதியான . அதை பற்றி சொன்னால் உனக்கு புரியாது" என சொல்லி விட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார் பத்மபாதன்.

    ஆனால் வேடனோ, நீ சொல்வது போன்ற ஒரு மிருகத்தை இதுவரை நான் இந்த காட்டில் பார்த்தது கிடையாது. என்னவோ உன்னை பார்த்தால் எனக்கு பாவமாக உள்ளது. உனக்காக இன்று பொழுது சாய்வதற்குள் அந்த மிருகம் எங்கிருந்தாலும் பிடித்து, கட்டி இழுத்து வருகிறேன்" என சொல்லி விட்டு காட்டிற்குள் சென்றான் வேடன். மான், முயல் என எத்தனையோ கண்ணில் பட்டும் அவற்றை பொருட்படுத்தாமல், நரசிம்மத்தின் மீது அவனது சிந்தனை இருந்தது.

    பசி, தாகம் அத்தனையும் மறந்து காடு முழுவதும் தேடினான் கிடைக்கவில்லை. அந்தி சாயும் நேரமானது. தான் கொடுத்த வாக்குப்படி நரசிம்மத்தை கண்டுபிடிக்க முடியவில்லையே என மனம் வருந்திய வேடன், இனியும் தான் உயிர் வாழ்வதில் அர்த்தம் கிடையாது என நினைத்தான்.

    கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் வாழ்வதை விட சாவது மேல் என நினைத்த வேடன், ஒரு பெரிய பாறையின் மீது ஏறி உயிரை விட தயாரானான். அவனது அர்ப்பணிப்பு, கடமை உணர்வு கண்டு உருகிப் போன ஸ்ரீமன் நாராயணன், நரசிம்மமாக வேடனுக்கு காட்சி கொடுத்தார்.

    தான் நாள் முழுவதும் தேடி அலைந்த நரசிம்மம் தன் முன் தோன்றியதை உண்டு உற்சாகமடைந்த வேடன், " மாட்டிக்கிட்டியா? உன்னை விடுவேனா பார்" என்று சொல்லி செடி, கொடிகளை வைத்து நரசிம்மரை கட்டி, பத்மபாதன் முன் அழைத்து வந்தான். பெரிய பெரிய வேதாந்திகளுக்கும், ரிஷிகளுக்கும் கட்டுப்படாத அந்த பரம்பொருள், ஒரு வேடனின் அன்பிற்கு கட்டுப்பட்டு நின்றார்.

    "சாமி, இதோ நீ கேட்ட நரசிம்மம்" என காட்டினான். பத்மபாதனின் கண்களுக்கு நரசிம்மம் தெரியவில்லை. அந்தரத்தில் நின்ற செடி, கொடிகள் மட்டுமே சுற்றிக் கொண்டு நிற்பது தெரிந்தது.

    இதனால், கோபமடைந்த பத்மபாதன், "அடேய் பைத்தியமே... என்னுடைய அரிய தவத்திற்கே வர மறுக்கிறான். உன்னிடமா சிக்குவான்? வெறும் செடி, கொடிகளை காட்டி நரசிம்மம் என்கிறாயே" என ஏளனமாக சிரித்தார். ஆனால் கட்டில் இருப்பது நரசிம்மம் என வேடன் என பலமுறை சொல்லியும் பத்மபாதன் கண்ணிற்கு தெரியவே இல்லை.

    அப்போது ஒரு அசரீரி கேட்டது. "பத்மபாதா! வேடன் என்னை அடைந்தே தீர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தேடி அலைந்தான். என்னை காணாததால் உயிரை விடுவதற்கும் தயாரானான். ஆனால் நீயோ, அலைபாயும் மனதுடன், நான் வருவோனோ, மாட்டேனோ என்ற சந்தேகத்துடன் தவம் செய்தாய். உன்னிடம் ஆணவமும் உள்ளது. அப்படி இருக்கும் போது உன் கண்ணிற்கு நான் எப்படி தெரிவேன்?" என கூறி மறைந்து விட்டார் நரசிம்மர்.

    ஒரு வேடனின் பக்திக்கு கட்டுப்பட்ட நரசிம்மன் தனக்கு காட்சி அளிக்காமல் போனதற்கும், வேடனைப் போல் தனக்கு உறுதியான நம்பிக்கை இல்லாமல் போனதற்கும் வெட்கி தலைகுனிந்தார். வேடனின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டு, நம்பிக்கையும், முழு அர்ப்பணிப்புமே உண்மையான பக்தி என்பதை புரிந்து கொண்டார் பத்மபாதர்.

    • அவதாரங்களில் அற்புதமானது, அழகானதும் நரசிம்மர் அவதாரம் தான்.
    • பக்தர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அடுத்த கணமே காப்பாற்ற வருபவர்.

    நரசிம்மர் என்றாலே உக்கிர வடிவம், நினைத்ததும் பயம் கொள்ள வைக்கும் தோற்றம் தான் நினைவிற்கு வரும். ஆனால் நரசிம்ம ரூபங்களில் அனைவரையும் பார்த்த மாத்திரத்தில் மகிழ்ச்சி கொள்ள செய்யும் தோற்றமான லட்சுமி நரசிம்ம ரூபத்தில் மட்டும், லட்சுமி தேவி, நரசிம்மரின் அருகில் கூட இல்லாமல் மடியில் அமர்ந்த நிலையில் மட்டுமே காட்சி தருவார். இதற்கு முக்கியமான ஒரு காரணம் உள்ளது.

    மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் அற்புதமானது மட்டுமல்ல அழகானதும் நரசிம்மர் அவதாரம் தான் என சொல்வார்கள். மற்ற பெருமாள் ரூபங்களில் இல்லாத மற்றொரு தனிச்சிறப்பு நரசிம்மருக்கு உண்டு. நரசிம்ம ரூபம் உக்கிரமானது என்றாலும், பக்தர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அடுத்த கணமே காப்பாற்ற வருபவர்.

    நாளை என்ற சொல்லே அறியாத நரசிம்மர் என்பார்கள். தாயின் கருவில் உதித்து வந்தால் கூட தாமதமாகி விடும். தனது பக்தன் அதுவரை துன்பத்தை பொறுக்க வேண்டி இருக்குமே என நினைத்து, "தூணிலும் இருக்கிறாரா உனது ஸ்ரீஹரி?" என கேட்டு, அதை உடைக்க இரண்யன் தனது கதையை ஓங்கும் முன்பாக, அவன் வேண்டிய வரத்தின் படியே ஒரு அவதாரம் எடுத்து, தூணில் இருந்து வெளிபட்டு வந்து, தனது பக்தன் பிரகலாதனை காத்தவர் நரசிம்ம மூர்த்தி.

    அதே போல் தனது தந்தைக்கு சொர்க்கத்தில் இடம் தர வேண்டும் என கேட்ட பிரகலாதனுக்கு, உன்னை போன்ற ஒரு அற்புதமான தெய்வ பக்தி உள்ள குழந்தையை அளித்ததற்காக உனது தந்தைக்கு மட்டுமல்ல உனக்கு முந்தைய தலைமுறைக்கும், உனக்கு பின்னால் வரும் தலைமுறைக்கும் சொர்க்கத்தில் இடம் அளித்து விட்டேன் என கேட்டதை விட பல மடங்கு அதிகமான வரத்தை கொடுத்து அருளியவர் நரசிம்மர்.

    பொதுவாக அனைத்து பெருமாள் ரூபங்களிலும் மகாலட்சுமி, திருமாலின் திருமார்பிலேயே இடம்பிடித்திருப்பார். ஆனால் நரசிம்மர் கோலத்தில் மட்டும் மகாலட்சுமி, திருமாலின் திருமார்பில் இடம் பெறாமல் மடியில் அமர்ந்திருப்பார். பெருமாள் அவளை ஆளிங்கனம் செய்த நிலையில், லேசான புன்னகையுடன், சாந்த சொரூபமாக காட்சி தருவார். இதனாலேயே நரசிம்ம ரூபங்களில், லட்சுமி நரசிம்மரை பலரும் விரும்பி வணங்குவர்.

    நரசிம்மர், இரண்யனை வதம் செய்த பிறகு உக்ரம் அடங்காமல் இருந்தார். தேவர்கள் உள்ளிட்ட அனைவரும் அவரை சமாதானம் செய்ய முயற்சித்தும் முடியாமல் போனது. இதனால் நரசிம்ம ரூபத்தை கண்டு அனைவரும் பயப்பட தொடங்கினர். இறுதியாக சிவபெருமானிடம் போய் அனைவரும் முறையிட்டனர். அவர் சர்வேஸ்வர ரூபம் கொண்டு, நரசிம்மரை சாந்தப்படுத்தினார்.

    ஆனால் அனைவரும் அஞ்சும் படியான ரூபத்தில் இருந்த நரசிம்மரின் மடியில் சென்று லட்சுமி தேவி அமர்ந்தாள். உடனடியாக நரசிம்மரின் உக்ர ரூபம் மாறி, அழகிய ரூபம் வந்தது. இத்தகைய அழகுடன் விளங்குவதால் நரசிம்மருக்கு ஸ்ரீமான் என்ற திருநாமம் ஏற்பட்டது. ஸ்ரீமான் என்றால் அழகானவன் என்று பொருள்.

    நரசிம்மரின் மடியில் மட்டும் லட்சுமி அமர்ந்த நிலையில் காட்சி அளிப்பதற்கு காரணம் உண்டு. ஸ்ரீமானான நரசிம்மரின் அழகிய திருமுகத்தை பார்த்து, ஆனந்தபட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என மகாலட்சுமிக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. திருமார்பில் இருந்தால் அவரின் முகத்தை பார்க்க முடியாது என்பதால் தான் மடியில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள் என்று சொல்கிறார்கள். 

    • பிரச்சினைகள் கதிரவனை கண்ட பனி போல விலகிவிடும்.
    • நரசிம்ம காயத்திரி மந்திரத்தை 12 முறை சொல்லலாம்.

    வைகாசி மாதம், வளர்பிறை சதுர்த்தசி, சுவாதி நட்சத்திரம் பிரதோஷ வேளையில்தான் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் சொல்கின்றன. பிரதோஷ வேளை என்பது சிவனுக்கு மட்டுமே உரியது என்று பலர் கருதுகிறார்கள். ஆனால் இந்த வேளையில் சுவாமியின் அவதாரம் நிகழ்ந்ததால், அது நரசிம்மருக்கும் சிறப்பான நேரமாக கருதப்படுகிறது.

    ஈசனுக்கு எப்படி சனிப்பிரதோஷம் மகிமை வாய்ந்ததோ, அதேபோல நரசிம்மருக்கும் செவ்வாய்க்கிழமை, சுவாதி நட்சத்திரத்தில் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை. இந்த நேரத்தில் நரசிம்மரை வணங்கி விரதமிருந்தால் நினைத்த காரியம் கைகூடும், எதிரிபயம் தீரும், தீவினைகள் விலகும், கடன்கள் தீரும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்று ஐதீகம்.

    வழிபாடும் விரதமும்

    மேலும் நரசிம்மரின் அவதார திருநாளான நரசிம்மஜெயந்தி அன்று விரதம் இருந்து வழிபட்டால் பகைவர்களால் தீராத தொல்லை, பில்லி சூனியம், கடன் தொல்லை, குடும்பத்தில் சச்சரவு, பணத்தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் கதிரவனை கண்ட பனி போல விலகிவிடும்.

    அதிலும் குறிப்பாக நரசிம்ம ஜெயந்தி அன்று அதிகாலை எழுந்து நீராடி நாமம் தரித்துக் கொண்டு லட்சுமி நரசிம்மர் படத்தை செவ்வரளி மலர்கள், துளசியால் அலங்கரித்து பானகம் அல்லது சர்க்கரைப்பொங்கல் படைத்துவிட்டு, நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை நரசிம்மரே குரு, நரசிம்மரே இறைவன் அவரே எனக்கு எல்லாமுமாக இருக்கிறார் அப்படிப்பட்ட லட்சுமி நரசிம்மரை நான் சரணடைகிறேன்-என்று 12 முறை சொல்லிவிட்டு சுவாமி முன்பாக விழுந்து வணங்கவேண்டும்.

    பின்னர் தெரிந்தவர்கள் நரசிம்ம காயத்திரியை 12 முறை சொல்லலாம். தொடர்ந்து தீபதூபங்கள் காட்டி விட்டு சுவாமிக்கு படைத்த பிரசாதத்தை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டு சாப்பிடலாம்.

    மேலும் விரதம் இருப்பவர்கள் பிரசாதம் உண்ணுவதற்கு முன்பாக சுவாமியின் உருவப்படத்தின் முன்பாக வந்து, இன்ன காரியத்துக்காக தொடர்ந்து குறிப்பிட்ட மாதம் சுவாதி நட்சத்திர நாளில், எல்லா நலன்களும் அருள்வாய் லட்சுமி நரசிம்மா என்று மனமார வேண்டிக் கொள்ள வேண்டும்.

    அதுவும் குறிப்பாக இந்த பூஜையை பிரதோஷ நேரத்தில்தான் செய்து வரவேண்டும். மேலும் விரதம் இருப்பவர்கள் நாள்முழுவதும் திரவ உணவு மட்டுமே உட்கொள்வது நல்லது.

    சுவாமிக்கு 21 அல்லது 45 நாட்கள் விரதம் இருப்போர் அத்தனை நாட்களும் உபவாசம் இருக்கவேண்டுமென அவசியம் இல்லை. பிரதோஷ வேளையில் நரசிம்மரை 12 முறை வணங்கி எழுந்தபிறகு பானகம் நிவேதிக்கலாம். அசைவ உணவு, பழைய உணவு, கடை உணவுகள் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது, அவ்வளவுதான்.

    விரதம் முடியும் நாளன்று நரசிம்மர் சன்னதி இருக்கும் கோவிலுக்கு புறப்பட்டு சென்று அங்கு சுவாமிக்கு துளசி மாலை சாத்தி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். பின்னர் வீட்டில் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து இறைவனிடம் பிரார்த்தனை நிறைவேற மனமுருகி வேண்ட வேண்டும். மேலும் ஏழை-எளியோர்க்கு இயன்ற உணவும், நீரும் தானம் அளித்தல் சிறப்பு.

    மேற்கூறிய முறையில் நரசிம்ம ஜெயந்தி அன்று தொடங்கி 21-45 நாட்கள் அல்லது மாதாமாதம் சுவாதி நட்சத்திர நாளில் விரதம் இருந்து வந்தால் தீராத துன்பங்கள், கடன் தொல்லை, தீவினைகள், தோஷங்கள் அனைத்தும் ஓடியே போய்விடும்.

    பிரகலாதன், ஆதிசங்கரருக்காக அருள்புரிந்த நரசிம்ம பெருமாள் நமக்காகவும் நம் துன்பங்களை துடைக்கவும் அருள்புரிவார். ஆகவே நரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்மரை வழிபாடு செய்து செல்வம், ஆரோக்கியம், நீண்ட புகழ் ஆகியவற்றுடன் நீண்ட காலம் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைப்போம்.

    • இன்று வைகாசி விசாகம்.
    • ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-9 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தசி இரவு 7.13 மணி வரை பிறகு பவுர்ணமி

    நட்சத்திரம்: சுவாதி காலை 8.17 மணி வரை பிறகு விசாகம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று வைகாசி விசாகம். ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி. அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் வெண்ணைத்தாழி சேவை. காங்கேயம் முருகப்பெருமான் லட்ச தீபக்காட்சி. திருப்பத் தூர் ஸ்ரீ சிவபெருமான் மின் விளக்கு அலங்காரத்துடன் தெப்பம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பாலபிஷேகம். திருமோகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள், நாட்டரசன்கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி, பழனி ஸ்ரீ ஆண்டவர் கோவில்க ளில் தேரோட்டம். ஸ்ரீ நம்மாழ்வார் திருநட்சத்திர வைபவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபி ஷேகம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன அலங்கார சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுபம்

    ரிஷபம்-தாமதம்

    மிதுனம்-உழைப்பு

    கடகம்-பக்தி

    சிம்மம்-ஓய்வு

    கன்னி-ஆசை

    துலாம்- நிம்மதி

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- நலம்

    மகரம்-ஆர்வம்

    கும்பம்-நன்மை

    மீனம்-பொறுமை

    • இன்று முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும்,அலகு குத்தியும் சாமி தரிசனம்.

    திருச்செந்தூர்:

    முகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்று. இந்தாண்டு திருவிழா நாளை (புதன்கிழமை) வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

    முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக தினமான நாளை நடைபெறும் விசாக திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் ஒரு வருடம் அதாவது 12 மாதம், மாத கடைசியில் வரும் மாதாந்திர வெள்ளிக்கிழமை தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அந்த வகையில் நாளை நடைபெறும் விசாகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்தவாறு உள்ளனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும்,அலகு குத்தியும் வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,காலை 10.30மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது.

    மாலை 4மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7.15மணிக்கு இராக் கால அபிஷேகமும் நடக்கிறது.

    விசாக திருவிழாவான நாளை (புதன்கிழமை)அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,காலை 10.30மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    தொடர்ந்து சுவாமி ஜெயந்தி நாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அங்கு முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு இராக் கால அபிஷேகம் நடக்கிறது.

    நாளை மறுநாள் (வியாழக் கிழமை) வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30 விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    • சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான ஆலயம்.
    • ஜெயந்தனை நண்டாக மாறும்படி சாபம் கொடுத்தார்.

    கோவில் தோற்றம்

    திருவள்ளூர் மாவட்டம், மணவூர் கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வயல்வெளிகளின் அழகிய சூழலில் அமைந்துள்ளது ஆதி காமாட்சி அம்மன் சமேத கற்கடேஸ்வரர் கோவில். இந்தக் கோவில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான ஆலயம் என்கிறார்கள்.

    தல வரலாறு

    தேவலோக தலைவனான இந்திரனின் மகன் ஜெயந்தன். இந்திரனின் மகன் என்பதால் இவன் ஆணவத்தில் நடந்து கொண்டான். இதனால் பிறரிடம் வம்பிழுத்து சாபம் பெற்றுக்கொள்வான். அப்படி ஒரு முறை ஜெயந்தன் சென்று கொண்டிருந்த வழியில், அவனுக்கு எதிர் திசையில் அத்ரி முனிவர் வந்துகொண்டிருந்தார்.

    அப்போது அத்ரி முனிவருக்கு, ஜெயந்தன் முறையாக வணக்கம் தெரிவிக்காதது மட்டுமின்றி, அவரது நடையைப் பார்த்து 'நண்டு ஊர்ந்து செல்வதுபோல உள்ளது' என்று கிண்டல் செய்தான். இதனால் கோபம் கொண்ட அத்ரி முனிவர், ஜெயந்தனை நண்டாக மாறும்படி சாபம் கொடுத்தார்.

    இதனால் பதறிப்போன ஜெயந்தன், 'தன் பிழையை பொறுத்தருள வேண்டும்' என்று அத்ரி முனிவரின் காலில் விழுந்து வேண்டினான். இரக்கம் கொண்ட அத்ரி முனிவர், "மணவூர் என்ற இடத்தில் உள்ள திருநந்தீஸ்வரர் ஆலயத்தில் அருளும் இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வா. உன்னுடைய சாபம் நீங்கும்" என்று கூறி அங்கிருந்து அகன்றார்.

    மறுநொடியே ஜெயந்தன் நண்டாக மாறிவிட்டான். பின்னர் அவன், மணவூர் வந்து திருநந்தீஸ்வரரை வழிபட்டு, ஊரின் எல்லையில் சிவபெருமானை நினைத்து தியானம் செய்தான். அப்போது சிவபெருமான், பூமியை பிளந்து கொண்டு பிரகாசமான லிங்கத் திருமேனியுடன் அவனுக்கு காட்சியளித்தார்.

    சுயம்புவாக தோன்றிய இந்த இறைவனை அங்கேயே பிரதிஷ்டை செய்த ஜெயந்தன், அந்த சிவலிங்கத்தை அபிஷேகம் செய்வதற்காக அங்கே ஒரு திருக்குளத்தையும் உருவாக்கினான்.

    பின்னர் நண்டு வடிவில் நாள்தோறும் அந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் அலங்காரம் செய்து பூஜித்து வந்தான். தொடர் வழிபாட்டின் காரணமாக, சிவபெருமானின் அருளால் ஜெயந்தன் மீண்டும் தன்னுடைய சுய உருவைப் பெற்றான்.

    நண்டு வடிவில் ஜெயந்தன் இறைவனை வழிபட்டதால், இங்கு உள்ள மூலவர் 'கற்கடேஸ்வரர்' என்று திருப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார். கற்கடேஸ்வரருக்கு வலது புறம் பிள்ளையாரும், இடது புறம் முருகப்பெருமானும் அருள்பாலித்து வருகின்றனர்.

    கற்கடேஸ்வரருக்கு இடது புறம் ஆதி காமாட்சி அம்மன் சன்னிதி உள்ளது. இந்த காமாட்சி அம்மன், காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மனுக்கு முன்னரே தோன்றியவர் என்பதால் காஞ்சி மகா பெரியவர் இங்குள்ள காமாட்சி அம்மனுக்கு 'ஆதி காமாட்சி' என்று பெயர் சூட்டியதாக கூறப்படுகிறது.

    இத்தலம் கடக ராசிக்காரர்களுக்கு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. மேலும் புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும் தெய்வமாகவும் இத்தல இறைவன் கற்கடேஸ்வரர் திகழ்கிறார்.

    சோமவாரம் என்று அழைக்கப்படும் திங்கட்கிழமைகளில், தொடர்ச்சியாக 9 வாரங்கள் இத்தலம் வந்து, இத்தல இறைவனுக்கு வெல்லம் வைத்து வழிபாடு செய்தால், புற்றுநோய் தாக்கம் குறையும் என்பது பக்தர் களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. இது தவிர இவ்வாலயம் ராகு - கேது பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.

    ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறும் இந்த ஆலயத்தில், துவார கணபதி, பாலசுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நந்தி, பைரவர், பலிபீடம் ஆகியவை உண்ளன. இக்கோவிலில் பிரதோஷ வழிபாடு, அன்னாபிஷேகம், சிவராத்திரி, தை மாதத்தில் 108 சங்காபிஷேகம் போன்ற நிகழ்வுகள் விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும். கும்பகோணம் அருகே திருந்து தேவன்குடியில் பிரசித்தி பெற்ற கற்கடேஸ்வரர் கோவில் உள்ளது. அதே போல் நண்டு வழிபட்ட கற்கடேஸ்வரர் ஆலயம் மணவூரில் உள்ள இந்த ஆலயம் மட்டுமே என்கிறார்கள்.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், திருத்தணி ரெயில் மார்க்கமாக செல்கையில் மணவூர் ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து சற்று தொலைவில் இயற்கை சூழலுடன் வயல் அருகே வீற்றிருக்கும் இந்த கற்கடேஸ்வரரை தரிசனம் செய்யலாம்.

    • சிவலிங்கத்தை மீட்டு கேதாரீஸ்வரர் என்ற கோவிலை அமைத்தார்.
    • 44 நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் என்ற ஊரில் வேளாளர் குடியில் சுமார் 400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள், சண்முக சிகாமணி - சிவகாமசுந்தரி தம்பதியர். இவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. அவர்கள் தொடர்ந்து முருகப்பெருமானை பூஜித்து வந்தனர்.

    இதையடுத்து முருகன் அருளால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அகமகிழ்ந்த அந்த தம்பதியர், தங்களின் பிள்ளைக்கு 'குமர குருபரன்' என்று பெயர் சூட்டினர்.

    அந்த தம்பதியின் மகிழ்ச்சி வெகு நாட்கள் நீடிக்கவில்லை. குழந்தைக்கு பேச்சுவரவில்லை என்ற கவலை அவர்களை வாட்டியது. இதனால் அவர்கள் மீண்டும் முருகனின் பாதத்தையே தஞ்சமடைந்தனர்.

    திருச்செந்தூர் திருத்தலம் சென்று விரதம் இருந்தனர். 44 நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருந்தனர். 44-வது நாளில் முருகப்பெருமானே, அர்ச்சகர் வடிவில் வந்து குழந்தையின் நாக்கில் சடாட்ஷரம் (சரவணபவ) எழுதி, "நாளை காலை விஸ்வரூப தரிசனத்தில் என்னை வந்து தரிசனம் செய்" என உத்தரவிட்டார்.

    சிறு பிள்ளையான குமரகுருபரன், மறுநாள் காலை தன் தாய் தந்தையரை எழுப்பி "விஸ்வரூப தரிசனத்திற்கு செல்லலாம்.. அப்பா, அம்மா வாருங்கள், வாருங்கள்" என்றான். தங்கள் பிள்ளை பேசுவதைக் கண்டு, தாயும் தந்தையும் அகமகிழ்ந்து போயினர்.

    குமரகுருபரர், முருகன் அருளால் பல அற்புதங்களை செய்து, பின் காசி யாத்திரை சென்றார். அங்கு விஸ்வநாதரை தரிசித்தார். 'காசியில் ஒரு மடம் கட்ட வேண்டும்' என எண்ணினார். அதற்கான இடத்தை முகலாய மன்னர்களிடம் இருந்து பெற வேண்டி டெல்லி சென்றார்.

    இந்துஸ்தானிய மொழி தெரியாததால் அவர்களிடம் எப்படி பேசுவது, எப்படி அனுமதி வாங்குவது என்று யோசித்தார். பின்னர் சரஸ்வதி தேவியை நோக்கி 'சகலகலாவல்லி மாலை' என்னும் பாடலை பாடி துதி செய்தார். இதனால் இந்துஸ்தானிய மொழி பேசும் ஆற்றலையும் பெற்றார். டெல்லி பாதுஷாவிடம் நேரம் ஒதுக்க இந்துஸ்தானி மொழியில் அனுமதியும் கேட்டார். பாதுஷாவும் அவருக்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்தார்.

    ஆனால் குமரகுருபரர் அரண்மனைக்கு வந்துசேர பல்லக்கோ, வாகனமோ அனுப்பவில்லை. குமரகுருபரர் மீண்டும் முருகனை தியானிக்க, சிங்கம் ஒன்று கம்பீரத்துடன் வந்து சேர்ந்தது. அதையே வாகனம் ஆக்கி அதன் மேல் அமர்ந்து பாதுஷாவின் அரண்மனை நோக்கிச்சென்றார்.

    குமரகுருபரரின் மகிமை அறிந்த சுல்தான், 'தங்களுக்கு என்ன வேண்டும்' என்று கேட்க, 'காசியில் கேதாரி காட் பகுதியில் ஒரு இடம் வேண்டும்' என்று கேட்டார், குமரகுருபரர். அதன்படியே சுல்தான் வழங்கிய இடத்தில் ஒரு மடத்தை நிறுவினார்.

    அதன் அருகில் புதைந்து கிடந்த ஒரு பழமையான சிவலிங்கத்தை மீட்டு கேதாரீஸ்வரர் என்ற கோவிலை அமைத்தார். இவர் 'கந்தர் கலிவெண்பா', 'மீனாட்சி பிள்ளைத்தமிழ்', 'மதுரை கலம் பகம்', 'நீதி நெறி விளக்கம்' போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வைகாசி விசாகத்தன்று விரதம் இருப்பதால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெறும்.
    • விசாகத்துடன் கூடிய பவுர்ணமி அன்று முருகப்பெருமான் அவதாரம் செய்தார்.

    வைகாசி மாதம் விசாகத்துடன் கூடிய பவுர்ணமி அன்று முருகப்பெருமான் அவதாரம் செய்தார். 'முருகன்' என்றாலே 'அழகன்' என்று பொருள். ஒரு சமயம் உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருந்த சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை அழிப்பதற்காக, அற்புதமான ஆற்றல் மிக்க மிகப்பெரிய அவதாரம் தேவைப்பட்டது.

    தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணை திறக்க, அதில் இருந்து ஆறு நெருப்புப் பொறிகள் வெளிப்பட்டது. அது மூன்று உலகத்தையும் தகித்தது. அதை ஒருவராலும் நெருங்க முடியவில்லை.

    அந்த நேரத்தில் அக்னி பகவான் அந்த ஆறு நெருப்புப் பொறிகளையும் தன் கையில் ஏந்தினார். அக்னி பகவானின் கையைக் கூட அந்த நெருப்புப் பொறிகள் தகிக்க ஆரம்பித்தது. தாங்க முடியாத வெப்பமாய் இருந்த அந்த நெருப்புப் பொறிகளை அக்னி பகவான் சரவணப் பொய்கையில் கொண்டு வந்து சேர்த்து குளிர்வித்தார்.

    அந்த ஆறு நெருப்புப் பொறிகளும், ஆறு குழந்தைகளாக மாறின. ஆறு குழந்தைகளையும் வளர்க்க வேண்டும் அல்லவா? அதற்காக ஆறு கார்த்திகை பெண்கள், சரவணன் பொய்கையில் தோன்றிய அந்த குழந்தைகளை கையில் எடுத்தனர். ஆறு குழந்தைகளும் ஒரு குழந்தையாக மாறியது.

    ஆறுமுகம், 12 கைகள், இரண்டு கால் என்று அற்புதமான ஒளி பொருந்திய தோற்றத்துடன் முருகப்பெருமான் காட்சி அளித்தார்.

    முருகப்பெருமான் பிறந்த அந்த வைகாசி விசாகத் திருநாளை உலகமே கொண்டாடியது. ஆறு முகத்துடன் காட்சி அளித்ததால் அவருக்கு 'ஆறுமுகன்' என்று திருப்பெயர் உண்டானது. வைகாசி விசாகம் அன்று பிறந்ததால் 'விசாகன்' என்ற திருநாமமும் ஏற்பட்டது.

    முருகப்பெருமான் அவதரித்த இந்த வைகாசி விசாகத் திருநாளில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரங்கள் கிடைக்கும். குழந்தை பேறு உண்டாகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர். சகல தோஷமும் விலகும்.

    வைகாசி விசாக தினத்தில் விரதம் இருப்பது மிகுந்த புண்ணிய பலன்களை தரும். அன்றைய தினம் அதிகாலையில் குளித்துவிட்டு, இஷ்ட தெய்வம் மற்றும் குல தெய்வத்தோடு குரு பகவானையும் மனதில் நினைத்து தியானித்து விரதத்தைத் தொடங்கலாம்.

    வீட்டின் பூஜை அறையில் உள்ள முருகப்பெருமான் படத்தை அலங்கரித்து, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் ஆகியவற்றை நைவேத்தியம் செய்யலாம். வீட்டின் பூஜை அறையில் அமர்ந்து வேல் விருத்தம், சண்முக கவசம், கந்தகுரு கவசம், கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை சொல்லி முருகனை வணங்க வேண்டும்.

    வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள், அருகில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்து வரலாம். அன்றைய தினம் முழுமையான உணவருந்தாமல் இருப்பது நல்ல பலனைத் தரும்.

    முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள், வேகவைத்த உணவுகளை ஒரு வேளை மட்டும் சாப்பிடலாம். திணை மாவு, தேன், பழங்கள் போன்வற்றையும் சாப்பிடலாம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருப்பதால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெறும்.

    ×