என் மலர்
நீங்கள் தேடியது "ஜி20 மாநாடு"
- காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் டிஜிட்டல் தீர்வுகள் உதவியாக இருக்கும்.
- ஜி-20க்கு தலைமை ஏற்கும் இந்தியாவின் கருப்பொருளாக ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்று இருக்கும்.
இந்தோனேசியாவில் நடந்து வரும் ஜி-20 மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று பிரதமர் மோடி பேசியதாவது:-
டிஜிட்டல் மாற்றம் என்பது நமது சகாப்தத்தின் குறிப்பிடத்தக்க மாற்றமாக இருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பங்களை முறையாக பயன்படுத்துவது வறுமைக்கு எதிரான பல சகாப்தகால உலகளாவிய போராட்டத்தின் சக்தியை பெருக்கும்.
காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் டிஜிட்டல் தீர்வுகள் உதவியாக இருக்கும். இந்தியாவில் டிஜிட்டல் அணுக்கலை பொதுவெளியில் உருவாக்கி இருக்கிறோம். ஆனால் சர்வதேச அளவில் இன்னும் பெரிய டிஜிட்டல் பிளவு உள்ளது.
டிஜிட்டல் கட்டமைப்பை உள்ளடக்கியதாக உருவாக்கினால் அது சமூக, பொருளாதார மாற்றங்களை கொண்டு வரமுடியும் என்பது இந்தியாவின் கடந்த சில ஆண்டுகால அனுபவம் காட்டுகிறது.
இந்தியா டிஜிட்டல் பொது பொருட்களை உருவாக்கி உள்ளது. அதன் அடிப்படை கட்டமைப்பு ஜனநாயக கொள்கைகளை கொண்டுள்ளது.
ஜி-20க்கு தலைமை ஏற்கும் இந்தியாவின் கருப்பொருளாக ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்று இருக்கும். டிஜிட்டல் மாற்றத்தின் பலன்கள் மனித இனத்தின் சிறிய பகுதிக்கு மட்டும் செல்லக்கூடாது என்பது ஜி-20 தலைவர்களின் பொறுப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு மோடி பேசினார்.
- மாநாட்டின் 2வது மற்றும் கடைசி நாளான இன்றும் பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களுடன் சந்தித்து பேசினார்.
- அடுத்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது.
இந்தியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின், ஐரோப்பிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்துள்ள ஜி-20 நாடுகளும் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலி தீவில் நேற்று தொடங்கியது.
இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜின்பிங், இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்றார்கள்.
நேற்றைய மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன்- ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தினார். மேலும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினார். பின்னர் அமெரிக்கா அதிபர் ஜோபைடனுடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவை வலுப்படுத்த ஆலோசனை நடத்தினார்.
மேலும் செனகல் அதிபர் மேக்சி சால், நெதர்லாந்து அதிபர் மார்க்ரூட் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆகியோரை சந்துத்து நலம் விசாரித்தார்.
பிரதமர் மோடி இன்று பாலி தீவில் உள்ள அலையாத்தி காடுகளை பார்வையிட்டார். கடல் அரிப்பை தடுப்பது, கரியமில வாயுக்களை கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் அலையாத்தி காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் காரணமாக அந்த காடுகளை உலக நாடுகள் பராமரித்து அழிவில் இருந்து தடுக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் அலையாத்தி காடுகளை உலக நாடுகளின் தலைவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் அலையாத்தி காடுகளை பார்வையிட்டனர்.
தமிழ்நாட்டில் சுனாமி ஏற்பட்டபோது அரணாக இருந்து பாதிப்பை தடுத்ததில் அலையாத்தி காடுகள் முக்கிய பங்கு வகித்தன.
மாநாட்டின் 2வது மற்றும் கடைசி நாளான இன்றும் பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களுடன் சந்தித்து பேசினார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசின் லூக், ஜெர்மனி அதிபர் ஒலப் ஸ்கோல்ஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அடுத்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. ஜி-20க்கு இந்தியா தலைமை தாங்குவதையடுத்து அதற்கான செயல்முறைகளை பிரதமர் மோடியிடம் இந்தோனேசியா அதிபர் விடோடோ முறைப்படி வழங்கினார்.
உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் இந்தோனேசியா ஜனாதிபதி விடோடோ ஜி20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தார்.
இதன்மூலம், டிசம்பர் 1ம் தேதி ஜி-20 தலைமை பதவியை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்மூலம், பிரதமர் மோடி உலக தலைவர்களின் தலைவரானார்.
- சதுப்பு நிலக்காட்டை பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பார்வையிட்டனர்.
- மோடி தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
19 நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பும் சேர்ந்த ஜி20 மாநாடு இந்தோனேசியாவின் பாலித்தீவில் 2 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. நிறைவு நாளான நேற்று அங்குள்ள சதுப்பு நிலக்காட்டை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பார்வையிட்டனர். அப்போது மோடி தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோடிக்கு 'சல்யூட்' அடித்தார். உடனே மோடியும், இருக்கையில் அமர்ந்தவாறு தனது கையை தூக்கியவாறு 'ஹாய்' என்று கூறினார்.
இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பரம் வணக்கம் கூறிக்கொண்ட இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் 'வைரல்' ஆகி வருகிறது.
- இந்தோனேசியாவில் ‘ஜி-20’ உச்சி மாநாடு நடந்தது.
- உலகத்தலைவர்களுக்கு பிரதமர் மோடி நினைவுப்பரிசுகளை வழங்கினார்.
இந்தோனேசியாவில் 'ஜி-20' உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலகத்தலைவர்களுக்கு இந்தியாவின் சார்பில் நாட்டின் கலாசார செழுமையை, பாராம்பரியத்தை பறைசாற்றும் கலை படைப்புகளை, பொருட்களை பிரதமர் மோடி நினைவுப்பரிசுகளாக வழங்கினார். இதுபற்றிய சுவாரசிய தகவல்கள் வருமாறு:-
* அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு 'சிருங்கர் ராசா'வை சித்தரிக்கும் காங்க்ரா மினியேச்சர் ஓவியங்களை பிரதமர் மோடி வழங்கினார்.
* இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு வழங்கிய நினைவுப்பரிசு, குஜராத்தில் பெண் தெய்வ கோவில்களுக்கு காணிக்கையாக வழங்குகிற கைத்தறி ஆடை ஆகும்.
* ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசுக்கு அவர் தந்தது, குஜராத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைப்பொருளான பித்தோரா.
* இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசு, 'படன் படோலா' துப்பட்டா ஆகும்.
* பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் ஆகியோருக்கு நினைவுப்பரிசாக தந்தது, குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய கைவினைப் பொருளான 'அகேட்' கிண்ணங்கள் ஆகும்.
* 'ஜி-20' உச்சி மாநாட்டை நடத்திய இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுக்கு குஜராத்தின் சூரத் நகரின் திறமையான தொழிலாளிகளால் செய்யப்பட்ட தனித்துவமான, நேர்த்தியான வேலைப்பாடு கொண்ட வெள்ளிக் கிண்ணம், இமயமலைப்பகுதியில் சிறப்பு வாய்ந்த கின்னவுர் சால்வை ஆகியவற்றை பிரதமர் மோடி வழங்கினார்.
- சீனாவுக்கும், கனடாவுக்கும் ஏற்கனவே பிரச்சினைகள் உண்டு.
- இது தொடர்பான வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலி :
இந்தோனேசியாவின் பாலித்தீவில் 'ஜி-20' நாடுகளின் உச்சி மாநாடு கடந்த 15, 16-ந் தேதிகளில் நடந்தது.
இந்த மாநாட்டின்போது, மூடிய அறையில் நடந்த விவாதத்தில் தங்கள் நாட்டின் தேர்தல்களில் சீனா தலையிட்டதாகவும், உளவு பார்த்ததாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டிப்பேசினார். இது தொடர்பாக அவரும் சீன அதிபர் ஜின்பிங்கும் பேசிக்கொண்டவை, அங்குள்ள நாளேடுகளில் செய்திகள் ஆகின. அவற்றை கண்டு சீன அதிபர் ஜின்பிங் அதிர்ந்து போனார். இந்தத் தகவல்களை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோதான் ஊடகங்களில் கசிய விட்டுள்ளார் என அவர் முடிவுக்கு வந்தார்.
இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் சீன அதிபர் ஜின்பிங் நேருக்கு நேர் மோதினார். குறிப்பாக அவர், " ஜி-20 உச்சி மாநாட்டில் பேசப்பட்ட இந்த தகவல்கள் வெளியே கசிந்தது சரியல்ல, இந்த நடத்தை பொருத்தமற்றது" என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் மாண்டரின் என்னும் சீனப்பேச்சு வழக்கு மொழியில் கூறினார். அதை அவரது மொழி பெயர்ப்பாளர் மொழிபெயர்த்தும் சொன்னார்.
ஒரு நாட்டின் அதிபர், இன்னொரு நாட்டின் பிரதமரை நோக்கி நேருக்கு நேர் கூறிய இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனாலும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சிரித்தவாறு தலையாட்டிக்கொண்டு, " கனடாவில் நாங்கள், சுதந்திரமான, வெளிப்படையான, மனம் திறந்த பேச்சில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அதை நாங்கள் தொடர்ந்தும் செய்வோம்," என பதிலடி கொடுத்தார்.
மேலும், "நாம் ஆக்கப்பூர்வமான வகையில் பணியாற்றுவது பற்றி தொடர்வது குறித்து ஆராய்வோம். ஆனால், நாங்கள் உடன்படாத விஷயங்களும் அவற்றில் இருக்கும்" என குறிப்பிட்டார்.
ஆனால் அவர் இதைச் சொல்லி முடிக்கும் முன்பாக சீன அதிபர் ஜின்பிங் குறுக்கிட்டு, "முதலில் அதற்கான சூழலை நீங்கள் உருவாக்குங்கள்" என்று கூறி விட்டு ஜஸ்டின் ட்ரூடோவுடன் கைகுலுக்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சீனாவுக்கும், கனடாவுக்கும் ஏற்கனவே பிரச்சினைகள் உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.
- வரும் நாட்களில் ஜி-20 தொடர்புடைய பல நிகழ்ச்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்படும்.
- ராக்கெட் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவதைபோல் டிரோன் தொழில்நுட்பமும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் 'மான் கி பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இன்று காலை 95-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மான் கி பாத் நிகழ்ச்சி 100-வது பதிப்பை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. டிசம்பர் 1ம் தேதி இந்தியா, சக்திவாய்ந்த குழுவான ஜி20-யின் தலைவர் பதவியை ஏற்கும்.
இது இந்தியாவுக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெரிய பண்டிகையாக மாறியுள்ளது. இந்த பொறுப்பு இந்தியாவுக்கு வந்திருப்பது சிறப்பு வாய்ந்தது. ஜி-20க்கு தலைமை தாங்குவது இந்தியாவுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
உலகளாவிய நன்மை மற்றும் நலனில் கவனம் செலுத்த ஜி-20 தலைமையின் வாய்ப்பை இந்தியா பயன்படுத்த வேண்டும். அமைதியாக இருந்தாலும் சரி, ஒற்றுமையாக இருந்தாலும் சரி, சுற்றுச்சூழலை பற்றிய உணர்திறன் அல்லது நிலையான வளர்ச்சியாக இருந்தாலும் அனைத்து விஷயங்களுக்கும் இந்தியாவிடம் தீர்வு உள்ளது.
வரும் நாட்களில் ஜி-20 தொடர்புடைய பல நிகழ்ச்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்படும். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஜி-20 தொடர்பான விவாதம், கலந்துரையாடல் மற்றும் போட்டி நிகழ்ச்சிகளை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஆளில்லா விமானத்துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. ராக்கெட் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைவதைபோல் டிரோன் தொழில்நுட்பமும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
கடந்த 18ம் தேதி இந்தியா, தனது முதல் தனியார் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. இது குறைந்த செலவில் உலகத்தரம் வாய்ந்தது. இந்தியாவில் தனியார் விண்வெளித்துறைக்கு ஒரு புதிய சகாப்தத்தின் விடியலை குறிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- நாடு முழுவதும் 50 நகரங்களில் 200 கூட்டங்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
- இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டை எதிர்நோக்கி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, இந்தியா உள்பட 15 நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளடக்கிய அமைப்பாக ஜி-20 உள்ளது. உலகின் சக்திவாய்ந்த அமைப்பான ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு கடந்த மாதம் இந்தோனேசியாவில் நடந்தது.
இதில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஜி-20 அமைப்பின் விதிமுறைகளின்படி அடுத்தாண்டு ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது.
மாநாட்டில் முறைப்படி ஜி-20 மாநாட்டின் கவுரவ பொறுப்பான சுத்தியலை பிரதமர் மோடியிடம், இந்தோனேசிய அதிபர் ஜோஜோ விடோடோ வழங்கினார். அடுத்த ஆண்டு ஜி-20 நாடுகளின் மாநாடு இந்தியா தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறது. இதையடுத்து நாடு முழுவதும் 50 நகரங்களில் 200 கூட்டங்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
2023-ம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி-20 மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற அடிப்படையில் இந்தியா பணியாற்றும். இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பருவநிலை நிதி, பேரிடர் அபாய குறைப்பு மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஆகியவற்றை நிகழ்ச்சி நிரலில் முன்னிலையில் வைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதிய யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் கடன் நிலைத்தன்மை மற்றும் பலதரப்பு அமைப்புகளின் சீர்திருத்தம் தொடர்பான பிரச்சினைகளில் ஒருமித்த கருத்தை உருவாக்க இந்தியா முயற்சிக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தநிலையில் இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டை எதிர்நோக்கி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறும்போது, "தற்போதைய உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வது உள்பட ஒரு நெகிழ்வான உலகளாவிய பொருளாதாரத்தை உருவாக்க அடுத்த ஆண்டு இந்தியாவின் ஜி-20 தலைவர் பதவிக்கு ஆதரவளிக்க நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம்" என்றார்.
- 7-ந்தேதி வரை விளக்கொளியில் ஜொலிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- சின்னங்களின் உச்சியில், ஜி20 அடையாள சின்னமும் வைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி :
ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா நேற்று ஏற்றதையொட்டி, இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 100 பாரம்பரிய சின்னங்கள் நேற்று விளக்கொளியில் ஜொலித்தன. 7-ந்தேதி வரை அவற்றை விளக்கொளியில் ஜொலிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த சின்னங்களின் உச்சியில், ஜி20 அடையாள சின்னமும் வைக்கப்பட்டுள்ளது. ஹூமாயூன் கல்லறை, கொனார்க் சூரீய கோவில், ஷெர் ஷா சூரி கல்லறை உள்ளிட்டவை அந்த பாரம்பரிய சின்னங்களில் அடங்கும்.
இதுபோல், 'யுனெஸ்கோ'வின் உலக பாரம்பரிய சின்ன அந்தஸ்து பெற்ற 40 கலாசார, இயற்கை தலங்களும் விளக்கொளியில் ஜொலித்ததுடன், ஜி20 அடையாள சின்னம் வைக்கப்பட்டன.
தாஜ்மகால், குதுப்பினார், ஆக்ரா கோட்டை, பதேபூர் சிக்ரி மற்றும் திப்பு சுல்தான் அரண்மனை, கோல் கம்பாஸ், சாஞ்சி புத்தமத சின்னங்கள், குவாலியர் கோட்டை ஆகியவையும் அவற்றில் அடங்கும்.
மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், மணலில் ஜி20 அடையாள சின்னத்தை உருவாக்கி இருந்தார்.
- உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் இருந்து விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
- புராதன சின்னங்கள் ஜி20 லேசர் ஒளி வெளிச்சத்தில் மிளிரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை :
இந்தியாவில் விரைவில் ஜி20 மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் இருந்து விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
அவர்கள் நம் நாட்டின் கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் நாடு முழுவதும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உலக பாரம்பரிய புராதன சின்னங்கள் மூலம் இந்த மாநாட்டை விளம்பரப்படுத்தும் வகையில் அந்தந்த நகரங்களில் உள்ள புராதன சின்னங்கள் ஜி20 லேசர் ஒளி வெளிச்சத்தில் மிளிரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டை கல் புராதன சின்னத்தில் ஜி20 லேசர் ஒளி வெள்ளம் ஒளிரூட்டப்பட்டதில் மிளிர்கிறது.
இந்த காட்சியை அந்த வழியாக சென்ற பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் தங்கள் செல்போனில் படம் பிடித்து தங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.
- ஜி20 அமைப்பின் தலைமை பதவி என்பது சுழற்சி முறையில் கிடைக்கக்கூடியது.
- இந்தியா தலைவர் ஆவது தவிர்க்க இயலாதது.
புதுடெல்லி :
ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதையொட்டி, ஓராண்டுக்கு பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
ஜி20 அமைப்பின் தலைமை பதவி என்பது சுழற்சி முறையில் கிடைக்கக்கூடியது. இந்தியா தலைவர் ஆவது தவிர்க்க இயலாதது. இதற்கு முன்பு, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகள் தலைமை பொறுப்பை வகித்துள்ளன. ஆனால், எந்த நாடும் இப்போது மோடி அரசு செய்வதைப் போல் தம்பட்டம் அடித்தது இ்ல்லை.
கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந் தேதி அத்வானி கூறியதுதான் நினைவுக்கு வருகிறது. 'மோடி ஒரு புத்திசாலித்தனமான நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்' என்று அவர் கூறினார். ஜி20 தலைமை விஷயத்தில் அதுதான் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.
- கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி20 மாநாட்டை தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறபோகும் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக தயார்படுத்துவது தொடர்பாக நாடு முழுவதும் அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதில் கலந்து கொள்ளும்படி தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் நாளை காலை டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
இந்தநிலையில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கூட்டத்தில் பங்கேற்கவரும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமரின் அழைப்பை ஏற்று அவரும் டெல்லி செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
- ஜி20 அமைப்பில் உள்ள இருபது நாடுகளில் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
- டெல்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 10-ந்தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
வளர்ந்த நாடுகளுக்கும், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளை கொண்ட ஜி20 அமைப்பு உள்ளது.
இந்த ஜி20 அமைப்பில் உள்ள இருபது நாடுகளில் சுழற்சி முறையில் ஆண்டு தோறும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு (2023) ஜி20 மாநாட்டை நடத்தும் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.
டெல்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 10-ந்தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக நாடுமுழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னேற்பாடு கூட்டங்களை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று மாலை டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற இருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம் மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கிறார்கள்.
40 கட்சிகளின் தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்தில் ஜி20 மாநாடு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. அப்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் ஜி20 மாநாட்டுக்கான திட்டங்கள் பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்படும்.